Headlines News :
முகப்பு » , , , , » தரப்படுத்தலால் தட்டி பறிக்கப்பட்ட கல்வி - என்.சரவணன்

தரப்படுத்தலால் தட்டி பறிக்கப்பட்ட கல்வி - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 15

“ஒரு சமூகத்தின் சிந்தனைகள், அதன் புலமையாளர்களால் வெளிக்கொணரப்படுகின்றன.”
என்பார் பேராசிரியர் சிவத்தம்பி. இனத்துவ ஒடுக்குமுறைக்கு ஆளான மரபைக் கொண்ட தமிழ் சமூகத்தின் சொத்தாக “புலமை” (கல்வி) இருந்து வந்திருக்கிறது. தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் இந்த புலமையில் பாத்திரம் அளப்பரியது. அது தமிழர்களுக்கு காலனித்துவத்தாலோ, சிங்கள அரசாலோ வழங்கப்பட்ட சலுகையல்ல. தமது தன்முயற்சியால் அடைந்த நிலை.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் காலாகாலமாக ஏமாற்றங்களைச் செய்தும், இழுத்தடித்தும், குரூரமாக நசுக்கியும், ஒடுக்குமுறையைப் பிரயோகித்தும் இல்லாமல் செய்யலாம் என்று முயற்சித்தன இனவாத சிங்கள அரசாங்கங்கள். பொறுமையின் உச்சத்துக்குத் தள்ளித் தள்ளி சிறிமா அரசாங்கத்தின் போது தான் அது ஆயுதப் போராட்டமாக வெடிக்குமளவுக்கு தள்ளப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.

தமிழ் இளைஞர்களை சீற்றத்தின் உச்சத்துக்கு தள்ளிய பிரச்சினை கல்வித் தரப்படுத்தல் கொள்கை. ( The policy of standardization).

புள்ளி வரைமுறை
பல்கலைக்கழக அனுமதியில் சிறிமாவோ அரசாங்கம் முன்னெடுத்த 'தரப்படுத்தல்' கொள்கை, தமிழ் மக்களை, குறிப்பாக தமிழ் இளைஞர்களைக் கடுமையாகப் பாதித்தது. ஏற்கெனவே மொழியுரிமை பறிக்கப்பட்ட நிலையில், தமக்கான அரசாங்க வேலைவாய்ப்பு பாரபட்சத்துக்குள்ளான நிலையில், விரக்தியடைந்திருந்த தமிழ் இளைஞர்களுக்கு, இந்தத் 'தரப்படுத்தல்' நடவடிக்கையானது கடுஞ்சினத்தை ஏற்படுத்தியது.

புதிய தரப்படுத்தல் கொள்கையானது மாவட்ட அளவில் வெட்டுப்புள்ளி என்றதொரு புள்ளி வரைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அந்தந்த மாவட்டத்தின் கல்வி நிலையை அடிப்படையாகக் கொண்டும் அந்த ஆண்டில் நடத்தப்பட்ட பொதுத்தராதரப் பரீட்சையில் மணவர்கள் பெற்ற பெறுபேறின் அடிப்படையிலும் ஒவ்வொரு உயர்கல்வித்துறைக்கும் தனியாக புள்ளி வரன்முறை கொண்டுவரப்பட்டது. இதன்படி குறிப்பிட்ட புள்ளிக்கு அதிகமாக எடுத்தாலே பல்கலைக்கழகத்துக்கு குறிப்பிட்ட துறையில் உயர்கல்வியைத் தொடர அனுமதி கிடைக்கும்.

யாழ் மாவட்டத்துக்கான பல்கலை அனுமதி வெட்டுப் புள்ளியானது மிக உயர்வாக இருந்தது. அதேவேளை சிங்கள மக்களை அதிகமாகக் கொண்ட மாவட்டங்களின் வெட்டுப்புள்ளியானது குறைவாக இருந்தது. இதனடிப்படையில் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க விரும்பும் ஒரு யாழ்ப்பாண மாணவன் அதே பல்கலைக்கழகத்துக்கு மருத்துவம் படிக்க வரும் மாத்தறையைச் சேர்ந்த ஒரு மாணவனை விட மிக அதிகமாகப் புள்ளிகள் எடுக்கவேண்டி இருந்தது. வெட்டுப்புள்ளியை விட சில புள்ளிகள் குறைவாகப் பெற்ற தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் புகமுடியாமல் நிற்க அவர்களை விட மிகக் குறைந்த புள்ளிகளைப் பெற்ற சிங்கள மாணவர்கள் அந்த இடத்தை நிரப்பிக் கொண்டனர்.

'தமிழ் இளைஞர்கள், தமக்கெதிரான இந்த ஓரவஞ்சனை பற்றி கசப்படைந்திருந்தனர். இவர்களின் உந்துதலால் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (தமிழர் விடுதலைக் கூட்டணி) உருவானது. பலரும் தனித் தமிழீழம் அமைக்கப்படுவதற்காக வன்முறையைக் கையிலெடுக்க உந்தப்பட்டனர். பாரபட்சமான கொள்கை முன்னெடுப்புக்களும். சிறுபான்மையினரின் நலனைக் கருத்திற்கொள்ளாத நடவடிக்கைகளும் இனமுரண்பாட்டை எத்தனை தூரம் அதிகரிக்கும் என்பதற்கு இது மிகச்சிறந்த எடுத்துக்காட்டு' என்கிறார் வரலாற்றாய்வாளர் கே.எம்.டி.சில்வா.

தரப்படுத்தலின் மறுபக்கம்
தரப்படுத்தல் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் நிறையவே இருக்கின்றன. இதனால் யாழ்ப்பாண இளைஞர்கள் மட்டும் தான் பாதிக்கப்பட்டார்கள், ஆனால் ஏனைய பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த சமூகத்தினர் கணிசமான அளவு பயனடைந்திருக்கிறார்கள் என்கிற இன்னொரு அழுத்தமான வாதமும் முன்வைக்கப்படுவதுண்டு. குறிப்பாக இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டு முறைக்கு  நிகர் என்பார்கள் சிலர். 

அந்த கூற்றில் ஓரளவு உண்மை இருக்கிறது. சிக்கலும் இருக்கிறது. இந்தியாவில் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தலித் சமூகத்தினருக்கு நீதி வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடு அது. தலித் மக்களின் உரிமைகளை பறித்து வைத்திருந்த உரிமைகளை சரி செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பொறிமுறை.

இந்தியாவில் மண்டல் கமிசனுக்கு ஊடாக கொண்டுவரப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, பட்டியலிடப்பட்ட சமூகத்தினருக்கான ஒதுக்கீட்டுமுறை அது. காலங்காலமாக அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட ஒரு சமூகம், அந்த அடக்குமுறையிலிருந்து வெளிவருவதற்கு ஒதுக்கீட்டு முறை தேவை. அமெரிக்காவில் கூட பழங்குடி அமெரிக்கர் மற்றும் கறுப்பின மக்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. ஆனால் இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். இவர்கள் யாவரும் சிறுபான்மையினர். காலங்காலமாக அடக்கியொடுக்கப்பட்டவர்கள். ஆனால் இலங்கையில் நிகழ்ந்தது அதுவல்ல. அரச இயந்திரத்தால்  சலுகைபெற்ற பெரும்பான்மையினர்; சலுகை மட்டுமல்ல உரிமையும் மறுக்கப்பட்ட ஒரு இனத்திடம் இருந்து இருப்பதையும் பறித்தெடுக்கும் முயற்சியே நிகழ்ந்தது.

அதிகாரத்துக்கு வெளியில் தள்ளப்பட்ட தமிழ்ச் சமூகம் தம் மீதான இருப்பைப் பாதுகாக்க குறைந்தபட்ச தயார்படுத்தலே கல்வியை ஒரு சொத்தாக வளர்த்துக் கொண்டது என்பதை மறந்துவிடக்கூடாது. கல்விச் சமூகமாக வளர்வதில் ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருந்தது.

அதிலும் இதில் அதிகம் தயார்படுத்திக்கொண்ட சமூகமாக யாழ்ப்பாண தமிழ்ச் சமூகம் இருந்தது. கல்வியை மட்டும் நம்பியிருந்த சமூகமாக வளர்ந்து இருந்தது. மிஷனரிக் கல்வி, சைவத்தின் துணை மற்றும் அதன் விளைவாக காலனித்துவ காலத்தில் அதிகாரத்திலும் நிர்வாகத்திலும்  பெற்றுக்கொண்ட பங்கு என்பன இந்த பாரம்பரியத்துக்கு வித்திட்டது. அதேவேளை தமிழ் மக்களிலேயே யாழ் – சைவ – வேளாள உயர்வர்க்கத்தினரே இந்த கல்விப் பாரம்பரியத்தின் நலன்களை அனுபவிப்பதில் முன்னுரிமை வகித்தனர் என்பது நுண்ணரசியல் பார்வை.

ஆக கல்வித் தரப்படுத்தலால் முதலில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் இவர்களே. அதேவளை யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இருந்த சிங்களவர்கள் மாத்திரமல்லாது தமிழர்களும் சேர்ந்து இந்த கல்வித் தரப்படுத்தலால் நன்மை பெற்றிருக்கிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை. குறிப்பாக யாப்பாணம் தவிர்ந்த பின் தங்கிய மாவட்டங்களான வன்னி, கிளிநொச்சி, மட்டக்களப்பு, மன்னார் உட்பட மலையகப் பகுதிகளில் உள்ளவர்களும் இந்த கல்வித் தரப்படுத்தலால் நன்மை பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மை.

மேலும் இந்த கல்வித் தரப்படுத்தல் யாழ்ப்பாணத்தை மாத்திரம் பாதிக்கவில்லை. கொழும்பு, கம்பஹா போன்ற மாவட்டங்களும் அதிகமாக பல்கலைக்கழக வாய்ப்புகளைப் பெற்ற மாவட்டங்களாக இருந்து வந்தன. எனவே அதுவும் கட்டுப்படுத்தப்பட்டு அந்த வாய்ப்புகள் ஏனைய பின் தங்கிய மாவட்டங்களுக்கு பகிரப்பட்டன.

இவர்களின் நன்மைக்காகத் தான் இந்த தரப்படுத்தல் என்று பூசி மொழுகினார்கள் ஆட்சியாளர்கள். அதில் உள்ள கணிசமான உண்மை மறுப்பதற்கில்லை. ஆனால் அதை மட்டும் வைத்துகொண்டு “தரப்படுத்தலை” நியாயப் படுத்திவிட முடியாது.


தமிழர் கல்வி வீழ்ச்சி
இது சிங்களவர்களுக்கே சாதகமாக அமைந்தது. ஏலவே திறனடிப்படையில் முன்னிலையிலிருந்த சிறுபான்மையினரை பின்தள்ளுவதாக அமைந்தது. இதுதான் இந்த 'தரப்படுத்தலில்' இருந்த சிக்கல். தரப்படுத்தலின் பின் ஒட்டுமொத்தமாக தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறும் அளவு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

இதேவேளை  காலனித்துவ சட்டங்களால் பின்தள்ளப்பட்ட சிங்கள மாணவர்களுக்கு கூடிய வாய்ப்புக்கள் வழங்கி சிங்கள மக்களின் கல்வி நிலையில் ஒரு சீர் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்கிற இனவாதப் பார்வை வலுவடைந்திருந்தது. அதுபோல காலனித்துவ காலம் தொட்டு அரச நிர்வாகத் துறையிலும் தமிழர்கள் அதிகளவு இருப்பதையும் கண்டு இனவாத சக்திகள் வெறுப்புற்றிருந்தார்கள். அவர்கள் தமிழர்களாக இருப்பதால் அடைந்த பதவிகள் அல்ல அவை என்பதை அவர்களின் இனவாத பார்வை அறியாதிருந்தது. ஆனால் சிங்களவர்களாக இருப்பதால் தமக்கு உரியவை அவை என்கிற ஐதீகத்தை வளர்த்து வைத்திருந்தது இனவாத சக்திகள்.

தரப்படுத்தலுக்கு நியாயம் தேடல்
கலைப்பீடம் தவிர்ந்த ஏனைய துறைகளில் சிங்கள மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி போதவில்லை என்ற ஆதங்கம், சிங்கள இனவாத சக்திகள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளில் தமிழ் மாணவர்கள் அதிகளவு அனுமதி பெற்றமையானது, சிங்களவர்களின் வாய்ப்பினைத் தட்டிப்பறிப்பதாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அம்மாணவர்கள் திறன், தகுதி அடிப்படையில்தான் அனுமதி பெற்றார்கள் என்பதை அவர்கள் கருத்திற்கொள்ள மறந்துவிட்டார்கள்.

யாழ் குடாநாட்டுப் பாடசாலைகளில் சிறந்த ஆய்வு கூட வசதிகளைக் கொண்டிருப்பதே அதிகப்படியான அம்மாணவர்களின் பிரவேசத்துக்குக் காரணம் என்றார்கள்.  குறிப்பாக விஞ்ஞானப் பரிசோதனைகளைச் செய்து பழகும் வாய்ப்பு யாழ் மாணவர்களுக்கு அதிகம் என்றார்கள். எனவே கல்வி அமைச்சு தலையிட்டு பரிசோதனைப் பரீட்சைகளைக் கைவிட்டு எழுத்துப் பரீட்சை மூலம் மாணவர்களை அனுமதிக்க முடிவு செய்தது. ஆனால் அதன் பின்னரும் தமிழ் மாணவர்களின் தொகை குறையவில்லை. எனவே தமிழ் மாணவர்களின் வினாத் தாள்களைத்த்திருத்தும் ஆசிரியர்களை சந்தேகத்தித்தார்கள். அதற்கான சாத்தியங்கள் குறைவு என்று பரீட்சைத் திணைக்களமும், வினாப் பத்திரங்களைத் திருத்துவோரும் கூறியபோதும் இந்த குற்றச்சாட்டை சிங்கள அரசியல் தரப்பு தொடர்ந்தும் வாதமாக முன்வைத்தது. இறுதியில் இந்த மாணவர்களுக்கு கல்வி கற்கும் வசதிகள் அதிகமாக இருப்பதனால் தரப்படுத்தல் முறை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற கருத்துக்கு வந்தடைந்தனர். தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் உள்ள வாய்ப்புகளை இதன் மூலம் சமன் செய்ய வேண்டும் என்கிற வாதத்தை உறுதியாக முன்வைத்தனர். அரசாங்கத்தையும் அந்த முன்மொழிவு கவர்ந்தது. அதன் விளைவு தான் “போதனா மொழிவாரி தரப்படுத்தல்”

பல்கலைக்கழகம்
தமிழர்
சிங்களவர்
பொறியியல்
(பேராதனைபல்கலைக்கழகம்) 
250
227
பொறியியல்
(கட்டுப்பெத்தை வளாகம்)
232
212
மருத்துவம் (பல்மருத்துவம்)
250
229
பௌதிகவிஞ்ஞானம்  
204
183
கட்டிடக்கலை
194
180
உயிரியல்விஞ்ஞானம்   
184
175

அந்தளவு அவர்கள் இந்த விடயத்தில் இனத்துவ நலனைத் தான் அடையத் தான் முற்பட்டார்கள். பின்னர் பல மாற்றங்களுக்குள்ளாக்கப்பட்டு, கடைசியில் மாவட்ட ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தினார்கள்.

1973 இல் மொழிவாரி தரப்படுத்தல், 1974 இல் மாவட்ட அடிப்படையிலான தரப்படுத்தலும், 1975 இல் 100 சதவீத மாவட்ட ஒதுக்கீடும், 1976 இல் 70 சதவீதம் மாவட்ட ஒதுக்கீடும் 30 சதவீதம் போட்டி பரீட்சையிலான திறமை அடிப்படையிலான ஒதுக்கீடும், ஒட்டு மொத்த தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியில் இனவிகித எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

1971இல் தரப்படுத்தல் கொள்கையை விளக்கி கல்வி அமைச்சு வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையின் தமிழாக்கம் நமக்கு இதனை தெளிவுபடுத்தும்.
“சிங்கள மாணவர்களின் புள்ளிகளையும் தமிழ் மாணவர்களின் புள்ளிகளையும் கொண்ட இரண்டு வெவ்வேறு பட்டியல்கள் முதலில் தயாரிக்கப்படும். அவை ஒன்றோடொன்று தரப்படுத்தப்படும். இவ்வாறு தரப்படுத்தப்பட்ட புள்ளிகள் மீண்டும் ஒரே பட்டியல் ஆக்கப்படும். அந்தப் பட்டியல் பல்கலைக்கழக மாணவரைத் தெரிவு செய்யப் பயன்படும்.”
தரப்படுத்தல் பற்றி வரலாற்றாசிரியரான கே.எம்.டி சில்வா எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையொன்றில் இப்படி குறிப்பிடுகிறார்.
“மருத்துவப் பிரிவில் தமிழ் மாணவர்கள் அனுமதி பெறுவதற்கு குறைந்தபட்ச புள்ளி 400க்கு 250ஆகவும் சிங்கள மாணவருக்கு அது  229ஆகவும் இருந்தது. இரண்டு வெவ்வேறு போதனா மொழிகளில் கற்றாலும் ஒரே பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் வெவ்வேறு குறைந்த பட்ச புள்ளிகளைப் பெற வேண்டி இருந்தது.”
தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சி சிங்கள அதிகார வர்க்கத்தால் வழங்கப்பட்ட சலுகையல்ல. அது இனத்துவ பாரபட்சத் தடைகளையும் மீறி தமது சொந்த முயற்சியால் ஆக்கிக்கொண்ட கல்வித் தகுதி. அப்படியிருக்க அதிகாரத்தில் சலுகை பெற்ற இனமொன்று ஒடுக்கப்பட்ட இனத்திடம் இருந்த குறைந்தபட்ச இருப்பையும் பறித்தெடுப்பது என்பதை எவரால் பொறுக்க முடியும்.

அரசசேவை ஆணைக்குழுவை இல்லாமலாக்கி அமைச்சரவைக்கு அந்த அதிகாரங்களை வழங்கியதன் மூலம் அரச சேவைகளில் தகுதிக்கு இடமிருக்கவில்லை. இனப்பாரபட்சம் மிக்க அரச உத்தியோகத் தெரிவுக்கு முழு வாய்ப்பையும் திறந்து விட்டிருந்தது. அதனை எதிர்த்து அடிப்படை உரிமை வழக்கைத் தொடரும் வாய்ப்பையும் அன்றைய அவசர கால சட்டம் பறித்திருந்தது. சிங்கள-பௌத்தமயமாக்கல் பரிபூரணப்படுத்தப்பட்ட காலம் அது.

1970ஆம்ஆண்டில் பல்கலைக்கழக அனுமதியைப் பார்த்தால் 40.8 வீதத்தினை பொறியியல் துறையிலும்இ 35 வீதத்தினை விஞ்ஞானத்துறையிலும் 50 வீதத்தினை மருத்துவத் துறையிலும் இலங்கைத் தமிழர்கள் பெற்றிருந்தனர். அப்போது இலங்கைத் தமிழர்கள் சனத்தொகையில் 11 வீதமே. தரப்படுத்திலின் விளைவாக தமிழ் மாணவர்களின் பல்கலைக்ககழக பிரவேசம் 35% வீதத்திலிருந்து 17 வீதத்துக்கு விழுந்தது.

எல்லே குனவங்ச 
சமீபத்தில் பிரபல சிங்கள பௌத்த தேசியவாத பிக்குவான எல்லே குனவங்ச தேரோவின் பேட்டியொன்றை காண நேரிட்டது. அதில் ஒரு கேள்வி

"வடக்கில் பயங்கரவாதம் தலை தூக்கியது கல்வித் தரப்படுத்தலால் அல்லவா?
அது பிழை. அதனால் ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்களும் பயனடைந்தார்கள். 77இல் ஜே.ஆர் பதவிக்கு வந்ததும் அமிர்தலிங்கத்துடன் இரகசிய ஒப்பந்தத்தை செய்துகொண்டு தரப்படுத்தலை நீக்கிவிட்டார். நான் அதனால் மிகவும் கவலையடைந்தேன். ஜே.ஆருக்கு எதிராக நான் வீதியில் இறங்கினேன். மாணவர்களை அணிதிரட்டி போராட்டங்களையும் வகுப்பு பகிஷ்கரிப்புகளையும் செய்தோம். இதனால் தான் ஜே.ஆர். என்னுடன் ஆத்திரமுற்றார். எனது பன்சலையை சுற்றி வளைத்து என்னை வீட்டுக் காவலில் அடைத்தார்."
தமிழ் பல்கலைக்கழகம்
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் இந்த 'தரப்படுத்தல்' முறையை முற்றிலும் கண்டித்து அறிக்கையொன்றை விடுத்தார். இந்த அடக்குமுறை தமிழ் இளைஞர்களிடையே கோபக்கனலைத் தோற்றுவித்தது. அந்த கோபக்கனல் விடுதலையை வேண்டி, தமிழ் இளைஞர்களை நகரச் செய்தது. தமிழ் இளைஞர் பேரவைக் கூட்டமொன்றில் உரையாற்றிய சத்தியசீலன், 'தரப்படுத்தலானது தமிழினத்தின் இருண்டகாலத்தைச் சுட்டும் சமிஞ்ஞையாகும். அது, உயர்தரத்தில் சித்தியடைந்த பல தமிழ் இளைஞர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்பை இல்லாது செய்துள்ளது. தரப்படுத்தல் தமிழ் மக்களுக்கிருந்த கடைசி வாய்ப்பையும் தட்டிப்பறித்துவிட்டது' என்றார்.

தமிழரசுக் கட்சி கல்வி சார்ந்த 4 பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து அன்றைய கல்வி அமைச்சர் பதியுதீன் முகமதை சந்தித்து பேசியது. அதில் ஆசிரியர் பிரச்சினையில் சாதகமான நடவடிக்கை எடுப்பதாகவும் தரப்படுத்தல் விடயத்தில் ஒன்றும்  செய்ய முடியாது என்றும் அரசாங்க அது கொள்கை என்றும் நழுவினார். அப்போது தமிழ்ப் பல்கலைக்கழகம் பற்றிய விடயத்தை தந்தை செல்வா கிளப்பியபோது உங்கள் கோரிக்கைக்கு நான் இணங்கினார் பொன்னம்பலம் என்னைத் திட்டுவார் என்று பதிலளித்தார். திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழகத்தை நிறுவி அப்பிரதேசம் பறிபோகாதவகையில் பலப்படுத்தவேண்டும் என்பதே செல்வநாயகத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால் ஜீ.ஜீ. பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என்றிருந்தார். திருகோணமலையில் தமிழர் பலம் பெறுவதை விரும்பாத அரசாங்கம் இந்த இழுபறியை சாதகமாக்கிக்கொண்டது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பலம் தமிழ்த் தலைமைகளிடம் இல்லை என்று உணர்ந்தனர் தமிழ் இளைஞர்கள். அவற்றுக்கான போராட்டத்தை தமது கையிலெடுக்க வேண்டும் என்கிற எண்ணக்கரு அவர்களிடம் உறுதிபெற்றது. 

தணல் நெருப்பாகிறது
தமிழ் மாணவர்கள் சிங்கள ஆட்சியாளர்களால் தம் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்தனர். அதற்கெதிராகப் போராடத் தலைப்பட்டனர். இந்த அக்கிரமங்களை எதிர்த்துப் போராடும் இலக்கோடு உயர்கல்வி மாணவர்கள் ஒருங்கிணைந்த தமிழ் மாணவர் பேரவை தோற்றம் பெற்றது. அதன் அங்குரார்ப்பன கூட்டம் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் நிகழ்ந்தபோது “தலைமை உரையாற்றிய சத்தியசீலம் “தமிழரசு கட்சி அதன் தீவிரத்தை இழந்து விட்டது என்றார்.

1971ல் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்த சிவகுமாரன் அவர்கள் சில தோழர்களை ஒருங்கிணைத்து சிங்கள அரசுக்கும் அதற்கு ஆதரவு வழங்கும் தமிழ் சக்திகளுக்கும் எதிராக போராட்டங்களை முன்னெடுத்தனர்.

வெட்டுப்புள்ளிகளால் பல்கலைக்கழகக் கல்வியை இழந்த மாணவர்கள் மட்டுமன்றி கல்வி வாய்ப்பையிழந்த தமது நண்பர்களுக்காகவும் உறவுகளுக்காகவும் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் கைகோர்த்தனர்.

1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் திகதி தமிழர் பிரதேசங்களில் தமிழ் மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டித்து மாபெரும் ஊர்வலமொன்று நடத்தப்பட்டது. இவ் ஊர்வலத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் பொன்.சிவகுமாரன். 

கல்வித் தரப்படுத்தலை அமுல்படுத்திய சிறிமா அரசின் துணை அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறி பயணம் செய்த வாகனத்திற்கு குண்டு வைப்பதோடு ஆரம்பமானது சிவகுமாரனது ஆயுதப்போராட்ட வரலாறு (செப் 1970). இச்சம்பவத்திலிருந்து சிங்கள அமைச்சர் உயிர்தப்பிய போதும், அச்சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைதான சிவகுமாரன் சிறையில் மோசமான சித்திரை வதைகளுக்குட்படுத்தப்பட்டார்.

1973 இல் செல்வநாயகம் கூறிய ஒரு கருத்தைப் பற்றி டீ.டி.எஸ்.ஏ.திஸாநாயக்க தரப்படுத்தல் பற்றி எழுதிய கட்டுரையொன்றில் இப்படி குறிப்பிடுகிறார்.
'சமஷ்டிக்கான எனது போராட்டத்தில், நான் தோல்வியடைகிறேன். இதற்கு காரணம் பண்டாரநாயக்க, அவரது பாரியார் மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. நான் எப்போதும் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன், சமஷ்டிக்கான எனது போராட்டத்தில் நான் தோல்வியடைந்தால், அதன் பின் தமிழ் மக்கள் சமஷ்டியைக் கோர மாட்டார்கள். மாறாக தனிநாட்டைத்தான் கோருவார்கள். ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கிறீர்கள்தானே, நான் அஹிம்சையையும், சத்தியாக்கிரகத்தையும், ஹர்த்தாலையும் முன்வைத்தேன், அவர்கள் வன்முறையை முன்வைக்கிறார்கள்'

துரோகம் தொடரும்...



Share this post :

+ comments + 2 comments

9:38 PM

what sinhales did to Tamils in sri lanka , Tamils in TN(India) did the same to Tamil brahmins in the name of social justice. what an eerie parallel! though I agree the lower castes need reservation, what happened in TN was a slap in the face of social justice. dominant land-owning castes ,too, cried victim (though they were not the victims) and got reservation for them systematically kicking out brahmins from TN.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates