Headlines News :
முகப்பு » » காடுகளாக மாறியுள்ள களுத்துறை மாவட்டப் பெருந்தோட்டங்கள்

காடுகளாக மாறியுள்ள களுத்துறை மாவட்டப் பெருந்தோட்டங்கள்


களுத்துறை மாவட்டத்தின் பெரும்பாலான தேயிலை, இறப்பர் தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படாது காடுகளாக மாறி, கைவிடப்பட்ட நிலையில் உள்ளமை குறித்து தோட்ட மக்கள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த மாவட்டத்திலுள்ள பல பிரதான தோட்டங்களே இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் காடாக மாறிக் கிடப்பதைக் காணமுடிகிறது.

இந்தத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் குளவிக்கொட்டு, பாம்புக் கடி மற்றும் விஷக்கடிக்கு இலக்காகிய வண்ணமே வேலை செய்ய வேண்டியுள்ளனர்.

ஆங்கிலேயர் காலத்தில் புல், பூண்டுகளை வெட்டிச் சுத்தம் செய்து தேயிலை, இறப்பர் பயிர்ச்செய்கைகளுக்கு பசளையிட்டு தேவையான இரசாயனங்கள் பிரயோகிக்கப்பட்டதைப் போன்று அல்லாமல் தேயிலைக் கொழுந்தையும் இறப்பர் பாலையும் பெற்றுக் கொள்வதில் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தற்போதைய தோட்ட நிர்வாகங்கள் செயற்பட்டு வருகின்றன.

சில தோட்டங்களில் இறப்பர் மரங்களுக்கு ஒரு வகை இரசாயன திரவத்தைச் செலுத்தி பாலை உறிஞ்சி எடுக்கும் முறை கையாளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தோட்டங்கள் காடுகளாக மாறியுள்ள போதிலும் தோட்டங்களின் பெயர்களைச் சுட்டிக் காட்டும் முகமாக ஆங்கில மொழியில் கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகைகள் தோட்ட பிரதான நுழைவாயிலுக்கருகே காட்சிப்படுத்தப்பட்டும் தேயிலை, இறப்பர் பயிர்ச்செய்கை அழகாகவும் ரம்மியமாகவும் தெரியும் வகையில் இருப்பதையும் காண முடிகிறது.

ஆனால், தோட்டத்துக்குள்ளே நுழைந்து சற்றுதூரம் சென்று பார்த்தால் தேயிலை, இறப்பர் பயிர்ச்செய்கை முறையாகப் பராமரிக்கப்படாது காடு மண்டிய நிலையில் கிடப்பதையே காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாறிருக்க, இன்று பெரும்பாலான தோட்டக்காணிகள் வெளியாரினால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளதுடன், சில தோட்டங்களில் தொழிலாளர்கள் வசித்து வரும் குடியிருப்புக்களின் வீட்டு முற்றம், வீட்டுத் தோட்டங்களையும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் குடியிருப்பாளர்கள் தமது வீடுகளில் சேரும் கழிவுகள் மற்றும் குப்பைக் கூளங்களைக் கொட்ட இடவசதியின்றியும் கழிவு நீர் வழிந்தோடக்கூடிய வடிகால் வசதியில்லாத நிலையிலும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இது போன்ற ஆக்கிரமிப்பு, ஊடுருவல் குறித்து தோட்ட நிர்வாகங்கள் தெரிந்திருந்த போதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்க முன்வராது, கண்டும் காணாதது போல் இருந்து விடுகின்றன. இதனால் இன்று தோட்டக் காணிகள் சிறுகச்சிறுக பகுதியாக பறிபோய்க் கொண்டிருக்கும் நிலையே இருந்து வருகின்றது.

இதேவேளையில் காலம் காலமாக தோட்டத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் தாம் குடியிருந்து வரும் குடியிருப்புகளுக்கு முன்னால் நாலடி நகர்த்தி ஓரளவு இடவசதியைச் செய்து கொள்ள முயலும் பட்சத்தில் தோட்ட நிர்வாகங்கள் அதற்கு இடமளிக்காது தடுத்து விடுகின்றன.

ஒருவாறு அமைத்துக் கொண்டாலும் தோட்ட நிர்வாகம் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை உடைத்து தகர்த்தி விடுவது மட்டுமல்லாது, தொழிலாளரை வேலையிலிருந்து இடைநிறுத்தி, பொலிஸ் நிலையத்தில் புகார் செய்து நீதிமன்றம் வரையில் கொண்டு போய் நிறுத்தி விடுகின்றன. போதாக்குறைக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென்றும் தோட்டக் காணிகள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், தோட்டத் தொழிலாளர்கள் காலை நீட்டி நிம்மதியாக படுத்துறங்கி, எழும்பக் கூட சுதந்திரமற்றவர்களாக, புறக்கணிக்கப்பட்டவர்களாக, இடிந்து விழும் நிலையிலுள்ள அந்த பழைமை வாய்ந்த லயன் குடியிருப்புக்களிலேயே தமது வாழ்க்கையை கடத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates