Headlines News :
முகப்பு » » மலையகக் கவிதை இலக்கிய செல்நெறி 04 - மல்லியப்புசந்தி திலகர்

மலையகக் கவிதை இலக்கிய செல்நெறி 04 - மல்லியப்புசந்தி திலகர்


நடே­சய்யர் தம்­ப­திகள் தொடங்­கி­வைத்த துண்­டுப்­பி­ர­சுர இலக்­கிய இயக்கம் பின்னர் பெரும்­பா­லான மலை­ய­கக்­க­வி­ஞர்­களால் தொட­ரப்­பட்டு வந்­துள்­ளது. நாவ­லப்­பிட்­டியைச் சேர்ந்த பிறவிக் கவிஞர் பெரி­யாம்­பிள்ளை, எட்­டி­யாந்­தோட்டை எஸ்.கோவிந்­த­சாமி தேவர், பி.ஆர் பெரி­ய­சாமி. கா.சி.ரெங்­க­நாதன், சீனி­வா­சகம், ‘தொண்டன்’ ஆசி­ரியர் எஸ்.எஸ்.நாதன், ஜில் ஜில் சுல்தான், சிட்­டுக்­கு­ரு­வியார், பதுளை ஞானப்­பண்­டிதன், பாவலர் வேல்­சாமி தாசன் முத­லானோர் இவ்­வாறு துண்­டுப்­பி­ர­சு­ர­மாக அச்­சிட்டு தோட்டம் தோட்­ட­மாக பாடி விற்­றுள்­ளனர் என அந்­த­னி­ஜீவா தனது ‘மலை­யகம் வளர்த்த கவிதை’ (மலை­யக கலை இலக்­கிய ஒன்­றியம் வெளி­யீடு 2002) நூலில் ஒரு பட்­டி­யலைத் தரு­கின்றார்.

பாவலர் வேல்­சா­மி­தாசன் எழுதி தனது கணீ­ரென்ற குரலில் பாடும் வல்­ல­மை­யையும் பெற்­றி­ருந்தார் என சொல்­லப்­ப­டு­கின்­றது. அவ­ரது பாடல் ஒன்று பின்­வ­ரு­மாறு அமை­கி­றது.

‘காலை­மணி ஐந்­துக்­கெல்லாம் 
தப்­ப­டிப்­பாங்கோ
கணக்கு புள்ளை ஆறுக்­கெல்லாம் 
பெரட்­டெ­டுப்­பாங்கோ
வேலை­யிலே ஏழுக்­கெல்லாம் 
இல்­லா­விட்­டாங்கோ
வேலை இல்லை என்று 
சொல்லி விரட்­டி­டு­வாங்கோ’

இதில் வரும் சொல்­லாட்­சியும் சந்­தமும் மக்­களை கவர்­வ­ன­வாக உள்­ள­துடன் மக்­களின் வாழ்­வி­ய­லையும் காட்டி நிற்­கின்­றன.

திரு­மதி மீனாட்­சியம்மாள் ‘இந்­தியத் தொழி­லாளர் துய­ரச்­சிந்து’-1931 சகோ­தரி அச்­சகம் ஹட்டன்). என்று பாடி­யதன் தாக்கம் பின்­னாளில் வேல்­சா­மி­தாசன் அவர்­களை ‘இலங்கை தொழி­லாளர் இம்­சைக்­குரல்’ என்ற பாடற் தொகுப்பை எழுதத் தூண்­டி­யுள்­ளது.

1930களில் கண்­டியில் வாழ்ந்து பின்னர் தமி­ழகம் சென்­று­விட்ட கவிஞர் சிதம்­ப­ர­நாத பாவ­லரை மலை­யகக் கவிதை ஆளு­மை­களில் முக்­கி­ய­மா­ன­வ­ராக பேரா­சி­ரியர் கா.சிவத்­தம்பி அடை­யாளம் காட்­டு­கிறார். ‘மலை­ய­கத்­திலே இன்றும் வாய்­மொழிப் பாடல்­க­ளுக்கு இட­முண்டு. இந்த பாரம்­ப­ரி­யத்­தி­லேயே இது­வரை வந்த பல மலை­ய­கத்து கவி­ஞர்­களை இனம்­கண்டு சொல்­ல­வேண்டும் போல தெரி­கி­றது. சக்தீ பால ஐயா, குறிஞ்­சித்­தென்­னவன், சிதம்­ப­ர­நாத பாவலர்  போன்­றோரின் ஊடே ஒரு வாய்­மொ­ழிப்­பா­ரம்­ப­ரியம் உணர்த்­தப்­ப­டு­கின்­றது என்றே கூற­வேண்டும்’ (தில­கரின் ‘மல்­லி­யப்பு சந்தி’ பின்­னுரை பேரா­சி­ரியர் கா.சிவத்­தம்பி (பக்­xxiv)– பாக்யா வெளி­யீடு 2007).

மலை­யகக் காந்தி என போற்­றப்­படும் மறைந்த தொழிற்­சங்­க­வா­தியும் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் ஸ்தாப­கத்­த­லை­வ­ரு­மான ஆர் ராஜ­லிங்கம் பற்றி பாவலர் சிதம்­ப­ர­நாதன் எழு­தி­யி­ருக்கும் கவி­தையின் ஒரு பகுதி இவ்­வாறு அமை­கி­றது.

மலை­யாத உள்­ளத்திற் கெடுத்துக் காட்டாம்
மனி­தர்­களின் பண்­பாட்டிற் கவனே சான்று
நிலை­யான கொள்­கை­யிலே வழுவல் இன்றி
நிற்­ப­திலே இமயம் என்றால் மிகையே அல்ல
பல­நாடும் சென்­றா­யந்தான் மக்கள் வாழ்வும் 
பரி­ண­மிக்க சேவை செய்யும் 
விரதம் பூண்டான்
விலை­ய­டங்கா நல­முத்தாம் ராஜ­லிங்க
வித்­த­கனின் திரு நாமம்  என்றும் வாழும்
 (‘மாவலி’ - தொழி­லாளர் தேசிய சங்க வெளி­யீடு- 1973 ஆகஸ்ட்)

மலை­யக மக்­களை நாடற்­ற­வ­ராக்­கிய இலங்கை சட்­ட­வாக்க ஏற்­பா­டுகள் பற்றி தனது கவி­தையில் குறிப்­பிடும் பாவலர் சிதம்­ப­ர­நாதன் அதனை இவ்­வாறு எழு­து­கின்றார்.

பிறந்­ததும் இங்கே  /வளர்ந்­ததும் இங்கே போவது மெங்கே வெளி­யேறி/ இறந்­தவர் போலே நடை­பி­ண­மாகி /இழிவு செய்­வதம் முறை­தானோ
புத்­த­கச்சட்டம் எதைப்­ப­கர்ந்­தாலும் / 
பிறந்த பொன்­னாடே தாய்­நாடு
எத்­தனை ஆட்சி இயற்­றிய போதும்/எழும்­ப­தற்­கில்லை குடி­நீங்கி… (சங்கு 1962 ஜீன்) 
என இலங்கை நாட்டை விட்டு மலை­யக மக்கள் வெளி­யேற வேண்­டிய அவ­சி­ய­மில்லை என பாடி­வைத்­துள்ளார்.

நாட்டார் பாடல் வடி­வத்தில் இருந்து தமக்­கே­யு­ரிய சுய­பா­டல்­களை எழுதத் தொடங்­கிய மலை­யக கவிதை இலக்­கிய வர­லாற்றில் அவை கவி­தை­களா? பாடல்­களா? என்ற கருத்து மயக்கம் இருந்தே வந்­துள்­ளது. பாடல் மரபில் இருந்து ஊற்­றெ­டுத்த மலை­யகக் கவிதை இலக்­கிய பாரம்­ப­ரியம் அந்த பாடல் மரபில் இருந்து முழு­மை­யான கவிதை வடி­வத்­துக்குள் வரு­வ­தற்கு மூன்று தலை­மு­றை­களை கடக்­க­வேண்­டி­யி­ருந்­தது உண்­மையே.

அந்த வகையில் பாடல்­க­ளாக தமது படைப்­பு­களை எழுதி அச்­சிட்டு விநி­யோகம் செய்த எட்­டி­யாந்­தொட்டை கோவிந்­த­சாமி தேவர், கா.சி.ரெங்­க­நாதன். ஜில்.ஜில், கே.கே.ஜபார், முத­லா­னோரின் பாடல் படைப்­புகள் மிகுந்த முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன. இதே போல 1954 ஆம் ஆண்டு ‘இசைத்தேன்’ எனும் கவிதைத் தொகு­தியை கி.மு.நல்­ல­தம்பி பாவலர் வெளி­யிட்­டுள்ளார். கம்­பளைப் பிர­தே­சத்தைச் சேர்ந்த இவ­ரது ‘இசைத்தேன்’ 200 ஆம் ஆண்டு அவ­ரது மகன் ஹைதர் அலி யினால் மறு­பி­ர­சுரம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அந்­த­னி­ஜீவாவின் மலை­யகம் வளர்த்த கவிதை (பக்.20) குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அ.செ.வெள்­ள­சாமியினால் எழு­தப்­பட்ட பல­வர்ண ஒப்­பா­ரியும் பாரத நாட்டுப் பய­ணச்­சிந்தும், மற்றும் பாட்­டா­ளியின் பாடலும், ராசுவின் கணவன் பழ­னியின் மரண தண்­ட­னையும் போன்ற படைப்­பு­களும் இந்த வகை­யினைச் சார்ந்­தன.

பதுளை யூரி பகு­தியைச் சேர்ந்த பெண் தொழி­லா­ளி­யான (1960களில்) எம்.எஸ்.கிருஸ்­ணம்மாள் மலை­ய­க­மெங்கும் தொழி­லாளர் உரிமை மற்றும் பெண்­வி­டு­த­லையை வலி­யு­றுத்தும் பாடல்­களை எழுதி பாடி­யுள்ளார். இவர் ஜன­நா­யக தொழி­லாளர் காங்­கிரஸ் தொழிற்­சங்க தலை­வி­யா­கவும் இருந்­துள்ளார். இவ­ரது பாடல் ஒன்று இவ்­வாறு அமை­கி­றது. 
நாம் வசிக்கும் இலங்­கை­யிலே

நாடு போகும் வேகத்­திலே
நாலு பேர்க்கும் நடு­வி­னிலே
நசிங்­கி­டுறோம் ஈழத்­திலே
கரு­ணை­யற்ற முத­லா­ளிமார் காட்­டு­கிறார் குரோத­மதை
கங்­கா­ணி­மா­ருக்கு அடங்கி….கணக்­குப்­பிள்­ளைக்கு நடுங்கி.. கண்­டிப்­பாக வேலை­செய்தும் கரு­ணை­யில்லை முத­லா­ளிக்கு… (அவ­ரது சிந்­தையை கவரும் சீர்­தி­ருத்த பாடல் தொகுப்­பி­லி­ருந்து – 

(மூலம்: ‘சபதம்’ (சன-மார்ச் 2013) உழைக்கும் பெண்­களின் முன்­ன­ணியின் செய்தி ஏடு) இந்­தப்­பாடல் மூலம் ஒரு தொழி­லாளி தனக்­கெ­தி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் அனைத்­து­வித அடக்­கு­மு­றை­க­ளையும் வெளிக்­காட்­டு­கின்றார்.

இன்றும் வட்­ட­கொடை பிர­தே­சத்தில் வாழ்ந்­த­வரும் கபாலி செல்லன்  என்­ப­வரும் தோட்­டப்­புற பாடல்­களில் அதிக நாட்டம் கொண்­டவர். மலை­யகத் தோட்­டங்­க­ளுக்கு திரு­விழா காலங்­களில் பிர­தம பாட­க­ராக அழைத்­து­வ­ரப்­படும் அவர் அந்த தோட்­டத்தின் இயல்­பு­களை வைத்து பாடல்­களை உட­ன­டி­யாக இயற்­றிப்­பாடும் வல்­லமை பெற்­றவர் (கட்­டு­ரை­யாளர் இவ­ரது பாடல்­களை நேர­டி­யாக கேட்­டி­ருக்­கிறார்). மட்­டக்­க­ளப்பில் இருந்து திரு.மைக்கல் கொலினை ஆசி­ரி­ய­ராகக் கொண்டு வெளி­வரும்  மகுடம் சிற்­றி­தழின் மலை­யகச் சிறப்­பி­தழில்  (2012 ஒக்-­டிசம்) பேரா­சி­ரியர்.செ.யோக­ராசா கவிஞர் கபாலி செல்லன் கவி­தைகள் - சில குறிப்­புகள் எனும் பதி­வினைச் செய்­துள்­ளமை இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. கவிஞர்.கபாலி செல்­ல­னது நம்ப படும் பாடு…­சொல்­லவே வெக்கக் கேடு எனும் பாடல் 1980 களில் தோட்­டத்­தி­ரு­வி­ழாக்­களில் கொடி­கட்­டிப்­ப­றந்த பாடல்.
எந்த நாடு நம்ப நாடு
நம்பி வாழ சொந்த நாடு
அந்­த­ரத்­திலே வாழச்­சொல்லி 
அனுப்­பி­யி­ருக்கான் சிட்­டிசன் காடு … 

எனும் பாடல் இன்றும் கூட மலை
யக தேசியம் குறித்து முன்வைக்கப்படும் ‘வாக்குரிமை’ –‘பிரஜாவுரிமை’ வேறுபாட்டை நான்கே வரிகளில் சொல்லி காட்டிய வலிமை கொண்டது. ‘ஓட்டுரிமை ஒன்று மட்டும் கிடைச்சிருக்கு… ஓட்டு போட்ட மறு கிழமை பம்பர மாட்டம்…நம்ம கதி பம்பரமாட்டம்’……. சட்டம் போட்டு நசுக்கிறாங்க திட்டம் போட்டு வதைக்கிறாங்க… என ஆளும் வர்க்கத்தினர் மலையக மக்களுக்கு தமது நலனுக்காக வாக்குரிமையை மாத்திரம் வழங்கியிருப்பதையும் மக்கள் நலனுக்கான பிரஜாவுரிமை வழங்கப்படாததையும் எளிய பாடல் மூலம் பாடி வைத்தவர் கபாலி செல்லன். இவரது பாடல்கள் முழுமையாக நூலுருப் பெறவெண்டியதன் தேவை யை பேராசிரியர்.செ.யோகராசா தனது குறிப்பிலே வலியுறுத்தியுள்ளார்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates