Headlines News :
முகப்பு » » இரத்தபுரியான இரத்தினபுரி!-2

இரத்தபுரியான இரத்தினபுரி!-2


வேவல்வத்தை பகுதியில்...
விஸ்வநாதன் (20 வயது) இளைஞன்முதலில் 8ஆம் திகதி இரவு ஒன்பது மணியளவில் கொலை நடந்ததாக கேள் விப்பட்டிருந்த போதிலும் எங்களுக்கு அடுத்த நாள் காலையில் தான் உறுதியாகத் தெரிந்தது. பந்துவின் சடலத்தை பார்த்து விட்டு இந்த வழியால் வரும் சிங்களவர்கள் பலர் எமது லயன்களைப் பார்த்து தூஷணங்களால் திட்டித் திட்டிச் சென்றார்கள். "தீ வைப்போம்", "இரவு பார்த்துக் கொள்கிறோம்", "இன்று ஒருவரும் மிஞ்ச மாட்டீர்கள்", "இன்று உதைபட தயாராயிருங்கள்" என கத்திக் கொண்டே சென்றார்கள். சிறிது நேரத்துக்குப் பின்னர் தான் அசித்தவும் கொல்லப்பட்டிருக்கிறான் என்ற சேதி வந்தது என்று கூறினார். இதன்பின் மேலும் நிலமை மோசமானது.அதனால் தான் மத்தியானம் 12 மணிக்கெல்லாம் நாம் தேயிலை ஸ்டோருக்குச் சென்று விட்டோம். அங்கு புஞ்சி மாத்தையாவிடம் (நாணயக்கார பத்மசிறி) நாங்கள் விடயத்தை எடுத்துக் கூறியதும் அவர் எல்லோரையும் அழைத்து வரும்படி கூறி ஏறத்தாழ 900க்கும் மேற்பட்டோரை ஸ்டோருக்கு அழைத்து அங்கு புகலிடம் அளித்தார். அவரை அடிக்க அன்று எவ்வளவோ முயற்சி செய்தார்கள். இன்னமும் அவர் மீது பலருக்கு கோபமுண்டு.

அன்று இரவு 7 மணியளவில் தாக்கத் தொடங்கிவிட்டார்கள். இங்கு இரவு நடந்தவை ஒன்றும் எங்களுக்குத் தெரியாது.இது எங்களுக்கு புதிய ஒரு 1996 ஒக்டோபர் 10 அன்றும் இதே போன்று தான் இந்த வேவல்வத்தை லயம் மீது ஏறத்தாழ 400க்கும் மேற்பட்டோர் வந்து தாக்கினர். தமிழ்க் கடைகள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தினர். பலரைத் தாக்கிவிட்டு, அவர்களது உடமைகளை சேதப்படுத்தி விட்டுச் சென்றனர். ஆனாலும் இந்த அளவு மோசமாக அப்போது நாம் பாதிக்கப்படவில்லை. அந்த முறையும் இப்படித் தான் அரசாங்கம் 2000 ரூபா நட்டஈடு கொடுத்து விட்டுப் போனது. ஆனால் நட்டஈட்டால் எங்களின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்த முடியவில்லை.

அது போல கடந்த இரு வருடங்களுக்கு முன்னரும் நெல்சன் எனும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த கசிப்பு வியாபாரி பணம் வசூலிக்கச் சென்ற இடத்தில் சண்டித்தனம் செய்த போது தோட்ட இளைஞர்கள் தாக்கியுள்ளனர். அதில் நெல்சன் கண்ணை இழந்தார். அதனைத் தொடர்ந்து 3 லயன்கள் எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன. அப்போதும் இவ்வளவு மோசமாக நாம் பாதிப்படையவில்லை.தற்போது கொல்லப்பட்டவரின் சகோதரர் இங்குள்ள ஒருவரைக் கொல்ல வந்த போது முந்திக்கொண்ட இங்குள்ள தமிழ் இளைஞர்கள் அவரைக் கொன்றுவிட்டார்கள். அதனைத் தொடர்ந்தே எல்லோரும் திரண்டு வந்து எங்கள் குடியிருப்பை நாசமாக்கினார்கள்.

எஸ்.உதயகுமார் (28வயது)
இரவு 7 மணியளவில் பஸ், லொறி, வான்கள், என்பவற்றில் வந்திறங்கிய நூற்றுக்கணக்கானோர் திமுதிமுவென வந்து வேகமாக இறங்கி எமது லயன்களை நொறுக்கித் தள்ளினர். கண்ணுக்கெட்டிய வரை வாகனங்கள் தான் தெரிந்தது. வெளியில் பார்த்தால் ஓவென சத்தங்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. எல்லோரது கைகளிலும் ஏதாவது ஆயுதங்கள் இருந்தன. இரும்புக் கம்பிகள், கத்திகள், கம்புகள், கோடறிகள், துவக்குகள் கூட இருந்தன. பெற்றோல் குண்டுகள் கொண்டு தான் பல வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. அது வெடிக்கும் சத்தத்தை தொடர்ந்தும் கேட்க முடிந்தது. ஒரு காம்பராவுக்குள் மாத்திரம் 25 பேரளவில் போயிருப்பார்கள். அந்தளவு கூட்டம் வந்திருந்தது. இங்குள்ள ஒரு வீடு மிச்சமில்லாமல் அழிக்கப்பட்டது.நாம் 83இல் கூட இந்தளவு பாதிக்கப்படவில்லை. கொள்ளையடிக்கப்பட்டோம், தான், தாக்கப்பட்டோம் ஆனால் எங்களைத் தவிர அனைத்தும் அழிக்கப்பட்டது இந்தத் தடவை தான்.பெக்டரியிலும் நாங்கள் தொடர்ந்து இருக்கவில்லை. அங்கும் மிரட்டிச் சென்றார்கள். எனவே அங்கிருப்பதும் ஆபத்தென்று பாங்கொடைக்கும் காடுகளை நோக்கியும் சென்றோம். எனது குடும்பத்தினர், மூன்று தினங்களுக்குப் பின்னர் தான் உண்ண ஆகாரமின்றி, பட்டியினியுடன் வந்து சேர்ந்தனர். இன்னமும் பலர் வந்து சேரவில்லை. எவரெவர் இருக்கின்றனர்- இல்லை என்பது கூட வந்து சேர்ந்ததன் பின் தான் தெரியும்.

சின்னத்துரை (56வயது)
எங்களைத் தொடர்ந்தும் இம்சித்து வருகின்றனர். பஸ்களில் போக முடிவதில்லை. தாக்கப்படுகிறோம். எங்கள் பெண் பிள்ளைகளை தொடர்ந்து இம்சிக்கின்றனர். இதனாலேயே பல சிறுமிகள் படிப்பை இடைநிறுத்தி விடுகின்றனர். பஸ்ஸில் உட்கார்ந்திருந்தால் இழுத்துவிட்டு மற்றவருக்கு இடம் கொடுக்கின்றனர். இடையிலேயே வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டுச் செல்கின்றனர். எங்களை கேலி செய்கின்றனர். பஸ்காரர்களும் இதனைத் தட்டிக் கேட்பதில்லை. அவர்களும் கூடச் சேர்ந்து சிரித்து மகிழ்வது வழக்கமான ஒன்று. இவ்வளவையும் பொறுத்துக்கொண்டு தான் வாழ்க்கை நடத்தி வருகிறோம். ஒரு போதும் இதனை எதிர்த்தது கிடையாது. எதிர்க்கவும் முடியாது. எதிர்த்து விட்டு நாங்கள் நிம்மதியாக இருந்து விடவும் முடியாது. அப்படிப்பட்ட எங்களுக்குத் தான் இன்று...

இனிமேலும் எங்களுக்கு இதே கதி தொடரத்தான் போகிறது. அரசாங்கம் பாதுகாப்புக் கொடுத்தாலும் அது எந்தளவு, எத்தனை தூரம் தாக்குப் பிடிக்கும் என்பது தெரியாது.நான்கு பெண்கள் இருந்த வீடொன்றில் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு புரிந்து கடும் வதைக்குள்ளாகினார். அவர் பின்னர் இரத்தினபுரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்து போனார்.முன்கூட்டியே பலர் தப்பிப் போய் விட்டதால் பல உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டன

கே.பாலகிருஷ்ணன்
(சிங்களப் பெண்ணை மணமுடித்திருக்கும்- தமிழில் பேசவராத ஒரு பெட்டிக் கடை வைத்திருக்கும் இளைஞர்) இவரது கடை முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது.அன்றாடம் ஒரு வேளை உணவுக்குக் கூட கஷ்டப்படும் ஒன்றுமறியாத அப்பாவித் தொழிலாளர்களின் சொத்துக்கள் தான் இப்படி அழிக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் அறிய வேண்டும்.இங்கிருந்து தப்பி அலுப்பொல போனால் அங்குள்ளவர்கள் அடித்து விரட்டுகின்றனர். அங்கிருந்து ராசகல்ல போனால் அங்கிருந்து அடித்து விரட்டுகின்றனர். இந்தப் பக்கத்தால் போக வழியேயில்லை. அமுனுதென்ன பக்கம் தான் போகமுடியும். அங்கு போனால் அங்கும் அடித்து விரட்டுகின்றனர். முழுக்க முழுக்க சுற்றி வளைத்து சிறைப்படுத்தப்பட்ட ஒரு மூடுண்ட பிரதேசமாக இருக்கிறது. ஒரு வகையில் இது ஒரு திறந்த வெளி சிறைக்கூடம் தான். சம்ப தினத்தன்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பிச் சென்று கொண்டிருந்த போது கையிலிருந்த குழந்தையைப் பறித்து ஆற்றில் போட்ட சம்பவமும் இங்க தானுங்க நடந்தது.

பின்னர் குழந்தையைக் காப்பாற்றி விட்டார்கள்.மூன்ற நாட்களாக வெளியில் வரவில்லை. தெருவுக்கு வந்தால் அடி விழும் என்ற பயத்தில் பட்டினியோடு இருந்தோம்.இத்தனை வெறித்தனத்தையும் செய்து விட்டுச் சென்றவர் கூட கைது செய்யப்படவில்லை.... இங்கு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தால் "வேவல்வத்தை புலி பிறந்து விட்டது" என்று தான் கூறுகின்றனர். வேவல்வத்தையைச் சேர்ந்தவர்களென்றாலே புலிகள் என்று தான் பார்க்கிறார்கள். பாதைகளில் எங்களை புலி... புலி என்று அழைக்கிறார்கள். இன்று பல புலிகளை தயாராக்கி விட்டுள்ளார்கள். இது தான் உண்மை. 
'அவுப்பே'வில்காட்டுக்குள் ஒளிந்திருந்த பொது குளிரினால் ஒரு வயது குழந்தையொன்று இறந்து போனது அதனைப் பார்க்க நானும் சென்றிருந்தேன். 11ஆம் திகதி பஸ்ஸில் தப்பிப் போன தமிழர்களை ஜட்டியுடன் இறக்கிவிட்டனர.

வள்ளியம்மா பெண் தொழிலாளி (ஒரு தாயார்)
சிங்களவர்களுக்கு பல வேலைகளையும் செய்து கொடுக்கப் போவது நாங்கள் தான். காலையில் வேலை வாங்கியவர்கள் மாலையில் எங்களைத் தாக்குகின்றனர். எங்களைத் தாக்கியவர்கள் வேறு யாரும் அல்ல எங்களை நன்றாக அறிந்தவர்களே!இனிமேல் நாங்கள் அவர்களின் வேலைக்குப் போகக் கூடாது என்று பேசிக் கொண்டுள்ளோம்.சம்பவம் நடக்கும் போது 12 பொலிஸார் இருந்தனர். அவர்கள் இதனைத் தடுத்து நிறுத்த ஒன்றும் செய்யவில்லை. இங்குள்ள 13 கடைகளை நெருப்பிலிட்டு விட்டார்கள். ஒன்று கூட மிச்சமில்லை. ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயமாக ஒரு லட்சத்துக்கும் மேல் பெறுமதியான சாமான்கள் இருந்தன. அவையனைத்தும் பல வருட கடும் உழைப்பால் சேர்க்கப்பட்டவை. ஆண்கள் இல்லாத வீட்டில் வந்து அதிக சேட்டைகள் புரிந்துள்ளனர். முடிந்தால் அவர்களின் உஷாரை "அங்க" (வடக்கிலே) காட்டனுங்க.

ஐயன் பெருமாள் வீரய்யா (38 வயது)
எங்களது சகல பொருட்களையும் ஒரு இடத்தில் வைத்து நொருக்கி அதிலேயே தீமூட்டிக் கொளுத்தியுள்ளனர். ஒன்றும் மிச்சமில்லை. பணம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு விட்டன... ஆனால் இனி இந்தத் தோட்டமே வேண்டாம். பேசாமல் இந்தியாவை நோக்கிப் போய்விடலாம். ஆனால் அதற்கு இந்த அரசியல்வாதிகள் விட மாட்டார்கள். நாங்கள் இல்லாவிட்டால் இவர்களுக்கு வேலை செய்ய எவருமில்லை என்ற பிரச்சினை, எங்களின் தலைவர்களுக்கோ எங்களைக் காட்டி அரசியல் செய்யவும், சந்தா எடுக்க முடியாத பிரச்சினை. எங்களின் தலைவர்களை பாதுகாக்க நாங்கள் உதைவாங்கிக் கொண்டு இருக்க வேண்டும். அவர்கள் எங்களைக் காட்டி பாதுகாப்பாக பஜிரோக்களில் திரியட்டும். இதனை எத்தனை நாள் தொடர்ந்து பொறுத்துக் கொண்டிருப்பது. பொலிஸார், பவித்ரா, பந்துல போன்ற அரசியல் தலைவர்களின் முன்னிலையில் தான் இவை நடந்தன. பின் யாரிடம் நாங்கள் போய் தீர்வு கேட்பது. எல்லா அரசியற் தலைவர்களும் வந்தார்கள் ஆனால் எவராலாவது இனி இது நடக்காது என்ற உத்தரவாதத்தைத் தர முடியுமா?எஸ்டேட்டில் வேலை இல்லாத சில நாட்களில், அவர்களின் தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து எடுத்து, புல் வெட்டி, அவர்கள் கூறும் அத்தனை வேலைகளையும் செய்ததன் பின்னர் அவர்களின் குண்டி கழுவாத ஒரு குறையாக நாங்கள் சகலதையும் அவர்களுக்கு செய்து விட்டு வருகிறோம். காலையில் இவ்வளவையும் செய்து விட்டு இரவு எங்களை தாக்குகிறான் என்றால் அவன் என்ன மனிதன் கூறுங்கள். அவர்கள் எங்களை என்ன செய்தாலும் நாங்கள் அதனைத் தாங்கிக் கொண்டிருக்கிறோம் என்கின்ற தைரியம் தானே.

இந்தியாவுக்குப் போய்விட்டால் நாங்கள் பசி பட்டினியுடன் இருக்க நேர்ந்தாலும் உயிருக்கும் உடமைகளுக்கும் இப்படியொரு ஆபத்து நேராதே...! எங்களை ஒரு நாய் போல அவர்கள் வைத்திருந்தாலும் பரவாயில்லை. "வெல்லவல"வில் போய் எனது மனைவி பிள்ளைகள் மறைந்திருந்தார்கள். அன்று இரவு அங்கு வந்து அடித்தார்கள் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். அங்கிருந்து கொழும்புகம (நிவித்திகலவில்) எனும் இடத்தில் இருக்கும் எங்களது சகோதரியின் வீட்டுக்கு கால்நடையாகவே போய் சேர்ந்த போது அங்குள்ள சிங்களவர்கள் வந்து வேவல்வத்தையைச் சேர்ந்தவர்கள் இங்கிருக்கிறார்களா எனக் கூறி, கூடி வந்து அடித்துள்ளனர். எனது மைத்துனர் போய் அப்புகஸ்தன்ன எனும் இடத்திலுள்ள தனது வீட்டுக்கு கூட்டிச் செல்ல முனைந்த போது அவரையும் அடித்து விரட்டியுள்ளனர். அங்கிருந்து மீண்டும் நிவித்திகலைக்கு வந்து சேர்ந்த போது சிறிது நிலமை தணிந்திருந்தது. ஆனாலும் உயிரைக் கையில் பிடித்தபடி மறைவாக இருந்து விட்டு இப்போது இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வீடு வந்து சேர்ந்தனர். நாங்கள் மிச்சம் பிடித்து சேகரிப்பவையும், எமது பிள்கைளின் கல்வி வளர்ச்சியையு; அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. நாங்கள் கொஞ்சம் நன்றாக உடுத்து திரிவதை சகித்துக்கொள்ள முடியவில்லை. இவர்களை எங்களை மீறிவிடுவார்களோ என்ற சந்தேகமும், பயமுமே எரிச்சலுமே எங்களின் மீது வெறித்தனமாக நடந்து கொள்ள வைத்திருக்கிறது. இவர்கள் என்றைக்குமே தங்களின் அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காகத் தான் 3 வருடத்துக்கும், 5 வருடத்துக்கும் ஒரு முறை நாங்கள் இப்படி தட்டிவிடப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பொலிஸாரில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இத்தனை அநியாயங்களையம் புரிந்தவர்களோடு தான் இரவு வேளைகளில் ஒன்றாக சேர்ந்து குடித்து கும்மாளமிடுகிறார்கள். பொலிஸாரின் அனுசரணையுடன் மேலும் எதுவும் நடக்கலாம்.

அலுப்பொல பகுதியில்,விஜயா இரு குழந்தைகளின் தாய்வேவல்வத்தையைச் செர்ந்த மூன்று பேரை நாங்கள் வைத்திருந்ததாகக் கூறியே இதனை வந்து தாக்கினர். அழித்து விட்டுச் சென்றுவிட்டனர். இவ்வளவு காலம் வீட்டோடு இருந்த நான் தற்போது வேலைக்கு போகத் தொடங்கியிருக்கிறேன். ஒன்றும் மிச்சம் வைக்கவில்லை.ஓரு மாணவியும்(இவர்கள் எதிர்த்து நின்றிருக்கிறார்கள்)அன்று இரவு 7.30 மணியிருக்கும் 200க்கும் மேற்பட்ட வர்கள் பல வாகனங் களில் வந்து சேர்ந்தார் கள். நானம் அப்பாவும் தான் இருந்தோம். வந்த வேகத்தில் தாக்கத் தொடங்கினர். அப்பா வும் தாக்கினார். என்னை எரிப்பதற்காக பெற்றோல் ஊற்றி எரிக்க முற்படுகையில் அப்பா அதனைத் தடுத்து நிறுத்தி சண்டையிட்டார். ... பஸ்ஸில் எல்லாம் சுதந்திரமாக போக முடிவதில்லை. போக முடிந்தால் நானும் பாடசாலை போய் தொடர்ந்து கற்றிருப்பேன்.மாணவியின் தகப்பனார்என்னங்க 1957இலிருந்து தொடர்ந்து அடி வாங்கிக்கொண்டிருக்கிறோம். இனி ஓட ஏலாது. எப்படிப் பொறுத்துக் கொள்வது.இரும்புக் கம்பிகள், பொல் லுகள், பெற்றோல், மண்ணெண்ணெய், எல்லாவற்றையும் கொண்டு வந்து தாக்கினர். அருகிலிருந்தவர்கள் எல்லோரும் ஓடி விட்டிருந்தனர். என்னை கம்பியால் தலையில் தாக்கினர். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். இத்தனை நாள் வேறெங்கும் போக முடியவில்லை. இன்று தான் பலாங்கொடைக்குப் போய் வந்தேன்.

வீரப்பன் (34)
முதலில் வந்து தீயிட்டுக் கொளுத்தி விட்டு போனதன் பின்னர் நாங்கள் அதனை அனைத்துக் கொண்டிருந்த போது மீண்டும் 8.30க்கு வந்து தியிட்டுக் கொளுத்தினர். அனைய, அனைய சூழ உள்ளவர்கள் வந்து திரும்பத் திரும்ப தீயிட்டனர்.

ஏக்கஸ்லேன் லேன்ராமையா குமரன் (30) (ஏக்கஸ்லேன்-மரத்தோட்டம்- 
இ.தொ.கா.வின் தோட்டத் தலைவரொருவர்)இங்கு அடித்தவர்களில் பலர் வேறு யாருமல்ல இவர்களைத் தெரிந்த சிங்களவர்கள் தான். சூழ உள்ளவர்கள் தான். ஊர் முழுக்க அடிபட்டுக் கொண்டிருந்த போது நாங்கள் உடனேயே அறிவிக்க வேண்டிய இடங்களுக்கு அறிவித்துவிட்டு சில சிங்களவர்களின் அதரவுடன் தோட்டத்துக்கு காவல் நின்று பாதுகாத்துக் கொண்டோம்.

வீரய்யா (ஏக்கஸ்லேன் லோவர் டிவிஷன் இ.தொ.கா. தலைவர்)
எங்கள் லயன்களும் வேவல்வத்தைக்காரர்களை பாதுகாத்திருக்கிறோம் என்று தான் 9ஆத் திகதி இரவு தாக்கப்பட்டோம். இங்கிருக்கும் 77 வீடுகளில் 57 வீடுகள் முற்றாக நாசமாக்கப்பட்டு விட்டன. வேவல்வத்தைக்காரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடாது என்று அன்று மத்தியானமே எங்களுக்கு துரையிடமிருந்து உதத்தரவு வந்துவிட்டது. அன்று நாங்கள் தோட்டத் தலைவர்மார் கூட்டமொன்றுக்குப் போய்விட்டு வரும் வழியில் இங்கு தாக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கேள்விபட்டோம். தூரத்திலேயே நெருப்பைக் கண்டோம். ஒரே கதறல் சத்தமும் ஓட்டமும், நெருப்புமாக ஒரே கலவரமாக இருந்தது. கண்ணில் கண்டவர்களை அடித்தனர். எல்லோரும் ஓடினர். பெண் பிள்ளைகளை உடனேயே ஒரு இடத்துக்கு அழைத்து காப்பாற்றினோம். ஆனால் கல்லால் எறிந்து காயப்படுத்தினார்கள். இங்குள்ள ஆண்கள் பலரை கத்தியால் வெட்டிக் காயப்படுத்தினார்கள்...பஸ்களில் எங்களால் பயணம் செய்ய முடிவதில்லை. எங்களை கேலி செய்து, இருக்கையிலிருந்து இழுத்துப்போட்டு "தெமலா" என திட்டிப் பேசுவது, தூஷனத்தால் எமது பெண் பிள்ளைகளை ஏசுவது என்பன இங்கு சகஜமான ஒன்று.ஒரு இளைஞரிடம்இதனை பொறுத்துக்கொண்டு எப்படி இருந்தீர்கள் என வினவியபோது. தொண்டமானும் கூட நீங்கள் ஏன் திருப்பித் தாக்கவில்லை என்று எங்கிளிடம் கேட்டார். திருப்பி எதையாவது செய்திருந்தால், அவர்கள் மிச்சம் வைத்துவிட்டுப் போனது எங்கள் உயிர் ஒன்றை தான், அதையும் இழக்க நேரிட்டிருக்கும்.

கே.சண்முகராஜா (38)
அந்த டிவிஷனிலேயே பெரிய கடை வைத்திருந்தவர் தற்போது இவருக்கு எஞ்சியிருப்பது இவர் ஓடும் போது அணிந்திருந்த உள் பனியனும், சரமும் தான்."பணத்தையோ எனது ஆவணங்களையோ, உடுதுணிகளையோ எத....னையும் எடுக்கவில்லை. உயிர் ஒன்றை காப்பாற்றுவது தான் ஒரே நோக்கமாக இருந்தது.... பேசாம நம்ம ஊரைப் பாத்து போறது தானுங்க சரி. இனிமேல் இங்க இருக்க முடியாதுங்க...."இந்தியாவை அவ்வளவு நம்புறீங்களா?"வேறென்னங்க இங்க தமிழருக்கு ஏதாச்சுன்னா, அவங்க அங்க மறியல் செய்யிறாங்கல்ல... அது அந்த அக்கறையினால தானுங்களே... அந்த துடிப்பினால தானுங்களே... நாங்க யாரை நம்புறதுங்க... உசுர மட்டுமாவது காப்பாத்திக்க வேணாமுங்களா...?"

தர்மதாச. இ.ரஞ்சித், தபிராஜா (படையிலிருந்து தப்பியவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்) ஆகிய இந்த டிவிசனைச் சேர்ந்த சிங்களவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பதை பலரிடமிருந்து அறியக்கிடைத்தது.
திக்குமுக்குலானஒரு இளைஞன்.9ஆம் திகதி இரவு 8.00 மணியிருக்கும், பல வாகனங்களில் இருந்து 400க்கும் மேற்பட்டவர்கள் வந்திறங்கி ஓடி வந்தனர். அவர்கள் சுற்றி வளைத்து வந்தனர். அவர்களைக் கண்டவுடன் ஓடினோம். இதில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இப்பிரதேசத்தைச் சூழ உள்ள சிங்களவர்களே. முதலில் பல வாகனங்களில் வந்தவர்கள் தாக்கி சின்னாபின்னப்டுத்திவிட்டுப் போனதன் பின்னர் அடுத்த அணி வந்து மிகுதியை கொள்ளையடித்துவிட்டு இருந்ததை நாசம் செய்து விட்டுப் போயுள்ளது. எல்லோரும் தப்பியோடி மலைக் காடுகளில் மறைந்திருந்திருந்து தங்களின் குடியிருப்புகள் நாசமாவதை பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றனர். இங்கு ஏறத்தாழ 40 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பழனியம்மாள்
வேவல்வத்தையில் கொலை செய்த நபரை என் தம்பி லாசர் தான் அழைத்து வந்ததாக ஒரு கதையைப் பரப்பி 8.30 அளவில் இங்கு வந்து பரையும் தாக்கி லாசரைத் தேடிர். லாசரிடமே வந்து யார் லாசர் என்று கேட்டனர். லாசரை முந்திக் கொண்டு நானும், லாசர் இந்த வழியால் போனார் என்றோம். வெளியில் வந்தவுடன் லாசர் தப்பிப் போனார். பின்னர் தான் இங்கு எல்லோரும் தான் தாக்கப்பட்டோம். உண்மையில் எனது தம்பியிடம் ஒரு வான் உள்ளது. ஆனால் அவர்கள் கூறும் எந்த நபரையும் என் தம்பி கூட்டிவரவில்லை. இங்குள்ள கணக்குப்பிள்ளை தான் இந்த பகுதியில் நடந்த தாக்குதலுக்கு வழிகாட்டியுள்ளார்.

தேவநேசம் (27)
வான் அன்று வெளியில் எடுக்கப்படவே இல்லை. பொலிஸார் வந்து இப்போது வானையும் கொண்டு போய்விட்டனர். கணக்குப்பிள்ளை ஜெயசேன தான் இங்கு தாக்கப்பட வெண்டிய வீடுகளை குறித்துக் கொடுத்துள்ளார். முதலில் வசதியான வீடுகள் தான் தாக்கப்பட்டன. பின்னர் தான் ஏனையவையும் தாக்கப்பட்டன.இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டவர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் பலரது விபரங்களடங்கிய பட்டியலொன்றையே சரிநிகருக்குக் கொடுத்தனர் தொழிலாளர்கள். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வந்த வாகனங்களில் சிலவற்றின் வாகன இலக்கங்களையும் எம்மிடம் கொடுத்தனர். (சுபேஸ் முதலாளியின் வாகனம் 58-6157)

இராசகல்ல யோகநாதன் (25)(தேசிய தொழிலாளர் காங்கிரசின் தோட்டத் தலைவர்)
200க்கும் மேற்பட்டவர்கள் அன்று இரவு 8.30 மணியளவில் வந்து எல்லோரையும் தாக்கினர். எல்லாமாக 39 காம்பராக்கள் அத்தனையும் நொறுக்கப்பட்டுள்ளன.சந்தனமேரி (38)துவக்குகள், வாள்கள் என்பவற்றைக் கொண்டு வந்தனர். என் கனவரைத் தாக்கினர், தலையில் வாளால், தாக்கியதில் இதோ பாருங்கள் தையல் போட்டிருக்கிறது. அன்று இரவு நாங்கள் எல்லோரும் காடுகளுக்குள் ஒடி ஒளிந்து பின்னர் இரண்டவது நாள் துரை எங்களை அழைத்து ஸ்டோரின் வைத்திருந்தார். நான்கு நாட்களின் பின்னர் தான் வெளியில் வந்தோம்.

சரிநிகர் - ஒக்டோபர் 1998 - இதழ் - 156
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates