
ஹன்னா மூர் (Hannah More) இந்தப் பெயர் நமக்கு நினைவுக்கு வராமல் போகலாம். ஆனால் ஆங்கில இலக்கிய, அரசியல் உலகில் மிகப் பெரும் ஆளுமையாக கொண்டாடப்படுகிறார்.
இலங்கைக்கும் ஹன்னா மூருக்கும் உள்ள இலக்கிய அரசியல் தொடர்பு பற்றியதே இக்கட்டுரை.
இலங்கையின் முதலாவது நாவலாக கொண்டாடப்படுகிற காவலப்பன் கதை என்கிற நாவலின் மூல ஆசிரியர் இவர் தான். அது மட்டுமன்றி இக்கட்டுரையை எழுதத் தூண்டியது அவர் இலங்கையைப் பற்றி எழுதிய ஒரு கவிதையே.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் நிலவிய அடிமை முறைமையை எதிர்த்து அவர் எழுதிய “சுதந்திரத்தின் கொண்டாட்டம்” என்கிற கவிதை அப்போதே பெரும் பிரபலம் பெற்ற ஒரு படைப்பு. தற்செயலாகக் கண்ட அந்தக் கவிதை என்னை உலுக்கியது மட்டுமன்றி. அப்படியொரு கவிதை குறித்து இலங்கை இலக்கியங்களில் பேசப்பட்டதாக அறிந்ததுமில்லை.
இலங்கையில் அடிமைகள்
இலங்கையில் அடிமைமுறையை ஒழிக்கப் போராடியவர் அன்றைய தலைமை நீதிபதியாக இருந்த அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன். இலங்கையில் வாழ்ந்த காலத்தில் அவர் இலங்கையின் நலன்களில் அக்கறையெடுத்த ஆங்கிலேய முன்னோடி என்று கூறலாம்.
அடிமை முறையை இலங்கையில் ஒரே தடவையில் ஒழிக்க இயலவில்லை. சமூக அளவில் அந்தளவு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அடிமை முறை சாதியத்தோடு பிணைந்து இருந்தது. சாதியம் இலங்கையின் பண்பாட்டு வழக்கங்களோடு இணைந்திருந்தது.
யாழ்ப்பாண சமூகத்தில் கோவியர், நளவர், பள்ளர் ஆகிய சாதியினர் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தனர். இதைப் பற்றிய பல ஆய்வுகளும், அன்றைய காலனித்துவகால அறிக்கைகளும், சட்டங்களும் உள்ளன.
ஒருபுறம் யாழ்ப்பாண சமூகத்திலும், மறுபுறம் தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் குறிப்பாக கண்டிய ராஜ்ஜிய பகுதிகளிலும். மறுபுறம் டச்சு காலத்தில் விட்டுச் சென்ற கணிசமான நீக்ரோ அடிமைகளும் நாட்டில் இருந்தனர்.
அடிமை முறைக்கு எதிராக உள்நாட்டிலிருந்து குரல்கள் எழவில்லை. மாறாக இந்த அடிமைமுறையை நேரில் கண்ட தாராளவாத எண்ணம் கொண்ட அரச அதிகாரிகள் இதற்கு எதிராக குரல் கொடுத்தனர். அவர்களில் முக்கியமானவர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன். அதனைத் தொடர்ந்து இலங்கையில் 1816 ஆம் ஆண்டு அடிமைமுறை ஒழிப்பு பற்றிய ஆணை பிறப்பிக்கப்பட்டன. ஆனால் அது முழுமையான ஒழிப்பு அல்ல. இலங்கையில் அடிமைமுறை மூன்று கட்டங்களாக ஒழிக்கப்பட்டன. 1816 இல் வீடுகளில் அடிமைகளாக வேலை வாங்குவதைத் தடை செய்கிற சட்டமே கொண்டு வரப்பட்டது.
முக்கியமாக 1816 ஓகஸ்ட் 12 ஆம் திகதிக்குப் பின்னர் அடிமைப் பெண்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் அடிமை நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்தத் திகதி தெரிவு செய்யப்பதற்கு ஒரு காரணம் உண்டு. அன்றைய மூன்றாம் ஜோர்ஜ் மன்னரின் பிறந்த நாள் அது. ஆனால் அவரின் உண்மையான பிறந்த நாள் யூன் 4 ஆம் திகதியாகும். ஆனால் அரசவை அவரின் உத்தியோகபூர்வ பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஓகஸ்ட் 12 அன்றே மேற்கொள்ளும் வழக்கத்தைக் கையாண்டது. எனவே அவரின் அந்த பிறந்த நாளிலேயே அரசரின் பெயரால் இந்த அடிமைமீட்பு பிரகடனம் செய்யப்பட்டது.
பிரித்தானிய முடி அடிமைகளுக்கு சுதந்திரம் வழங்குவதன் குறியீடாக இந்த பிரகடனத்தைக் பிரபலப்படுத்திய போதும் முழுமையாக இந்த அடிமையொழிப்பு நடைமுறைக்கு வரவில்லை. அடிமைப் பெண்ணுக்குப் புதிதாகப் பிறக்கின்ற குழந்தைகள் தான் அடிமை முறையில் இருந்து தப்பினார்களே தவிர அதுவரை இருந்த அடிமைகள் அடிமைகளாகவே தொடரப்பட்டனர். அதுமட்டுமன்றி அக்குறிப்பிட்ட திகதிக்கு முதல் நாள்வரை பிறந்த குழந்தைகள் கூட அடிமைகள் தான்.
இந்த காலப்பகுதியில் பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் உலகம் முழுவதும் 60 க்கும் மேற்பட்ட நாடுகள் இருந்தன. இந்த நாடுகளில் அடிமைநிலை காலனி நாடுகளாக கரீபியன் தீவுகளான பார்படோஸ், ஜமைகா, அன்டிகுவா உள்ளிட்ட பல நாடுகள் இருந்தன. அவை நேரடியாக பிரித்தானியா அடிமை முறையை மோசமாக நடைமுறைப்படுத்தி வந்த நாடுகள் எனலாம். ஆனால் அந்த தரத்தில் இலங்கை போன்ற நாடுகள் கையாளப்படவில்லை. அதுமட்டுமன்றி ஒருவகை அரை அடிமைநிலையை இலங்கையில் பின்பற்றியவர்கள் சுதேசிய மக்களே. இன்னும் சொல்லபோனால் சுதேசிகளே சுதேசிகளை அடிமைகளாக வைத்திருந்தார்கள். சாதிய வர்ண நிலை மரபை சாதகமாக ஆக்கிக்கொண்டு அடிமைமுறையை நடாத்தி வந்த ஒரு சமூகம் இங்கே இருந்தது. அவர்களிடம் இருந்து அடிமைகளை விடுவிக்கும் தரப்பாக பிரித்தானிய தரப்பு இருந்தது தான் இங்கே வேடிக்கை.
சூரியன் மறையாத சாம்ராஜ்யம் என்று சொல்லும் அளவுக்கு உலகம் பூராவும் நாடுகளைக் கைப்பற்றி வைத்திருந்தது பிரித்தானியா. அந்நாடுகளை சுரண்டுவதற்கான இலவச ஊழியர்களாக ஆபிரிக்க அடிமைகளை பல நாடுகளுக்கும் கொண்டு போய் சேர்த்தார்கள். அடிமைகளை விற்பதும் வாங்குவதும் பெரும் வர்த்தகமாகவே குறிப்பாக 17, 18, ஆம் நூற்றாண்டுகளில் காணப்பட்டன. 1562 to 1807 காலப்பகுதிக்குள் மூன்று மில்லியன் அடிமைகளை ஆபிரிக்காவிலிருந்து கரிபியன் வழியாக கடத்திச் சென்றது பிரித்தானியா.
ஈற்றில் அடிமைமுறையின் கொடுமைகளை எதிர்த்து பிரித்தானியாவில் எழுந்த கிளர்ச்சிகளின் விளைவாக அடிமைமுறையை ஒழிக்கும் நிலைக்கு பிரித்தானியா தள்ளப்பட்டது. சகல நாடுகளிலும் அடிமைமுறையை வரிசையாக ஒழித்தபோதும் இறுதியாக அடிமைமுறை ஒழிக்கப்பட்ட நாடே இலங்கை என்பதை இங்கே முக்கியமாக சுட்டிக் காட்ட வேண்டும்.
இச்சட்டத்தின் விளைவாக வடக்கில் உள்ள தமிழர்கள் மத்தியில் அடிமைத்துவம் அவ்வளவு பெரிதாக தளரவில்லை. காரணாம் சாதியத்தொடு அவ்வடிமை முறை பிணைந்திருந்தது. எனவே அடிமை முறை மாற காலம் எடுத்தது. ஆனால் தெற்கில் குறிப்பாக அடிமைப்படுத்தல் வீடுகளில் நிலவிய கண்டி ராஜ்ஜிய பரப்பில் வடக்கை விட வேகமான மாற்றம் நிகழ்ந்ததை நீரா விக்ரமசிங்க தனது நூலில் விளக்குகிறார்.
அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன்
இலங்கையில் அடிமை முறையை ஒழிப்பதற்கான ஆரம்பக் குரல்கல்களின் முன்னோடியாக அலெக்சாண்டர் ஜோன்ஸ்டனை நாம் கொண்டாட வேண்டும். இலங்கையின் நீதித்துறைக்கு மட்டுமன்றி, சமூக விடுதலை, வரலாற்று மீள் கண்டுபிடிப்பு என்பவற்றுக்கும் கூட அவரின் தனித்துவமான பாத்திரம் விரிவாக பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று. மகாவம்சத்தை முதன் முதலில் மீட்டு எடுத்து அதனை வெளிக்கொணரக் காரணமாக இருந்தவரும் அவரே. இலங்கையின் சுதேச மொழிகளான சிங்களத்தையும், தமிழையும் கூட அவர் கற்றார்.
கிறிஸ்தவ நம்பிக்கையாளரான ஜோன்ஸ்டன் தமிழ் சிங்கள சமூகத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு ஊடாக விழிப்புனர்ச்சியையும் சமூக விடுதலைக் கருத்துக்களையும் பரப்பலாம் என நம்பினார். பைபிளை தமிழிலும், சிங்களத்திலும் மொழிபெயர்த்து வெளியிடுவதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டியிருந்தார். மேலும் “வெஸ்லியன் மிஷன்” என்கிற பிரபல மிஷனரி அமைப்பை நிறுவிய நிறுவனர்களில் ஒருவர் ஜோன்ஸ்டன்.
இலங்கையில் அப்போது யாழ்ப்பாண சமூகத்தில் நிலவிய அடிமை முறையைப் போலவே சிங்கள சமூகத்திலும் அடிமைமுறை இருந்தது. குறிப்பாக கண்டி ராஜ்ஜியத்தில் அடிமைமுறை எவ்வாறு இருந்தது என்பது பற்றிய பல பதிவுகள் உள்ளன.
அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் இதனை ஒழிப்பதற்காக கடுமையாக பாடுபட்டவர்களில் ஒருவர். அவர் இங்கிலாந்தில் உள்ள உயரதிகாரிகள் வரை இலங்கையில் அடிமைமுறையை ஒழிக்க வேண்டும் என்கிற முறைப்பாடுகளை செய்து கொண்டே இருந்தார்.
அதைப் பற்றிய பல கடிந்தங்கள், அறிக்கைகள், பத்திரிகை செய்திகள் என்பன பரவலாக வெளியாகின. 1800 களின் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் அடிமையொழிப்புக்கான இயக்கம் தீவிரமாக இயங்கத் தொடங்கின. பிரித்தானியாவில் மாத்திரமன்றி அதன் குடியேற்ற நாடுகளிலும் அடிமை முறையை ஒழித்தாகவேண்டும் என்கிற கோஷம் தீவிரமாக ஒலிக்கத் தொடங்கிய காலம் அது.
இங்கிலாந்தில் அடிமைமுறைக்கு எதிரான விவாதங்கள் வலுப்பெற்ற இந்தக் காலப்பகுதியில் அடிமைமுறைக்கு எதிராக இயங்கிய பெண் தான் ஹன்னா மூர் (Hannah More 2.2.1745 – 7.09.1833) அவர் ஒரு கல்வியியலாளர், கவிஞர். இறையியல் செயற்பாட்டாளர்.
அலெக்சாண்டர் ஜோன்ஸ்டனின் செயற்பாடுகளை அறிந்த ஹன்னா அவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.
ஹன்னா மூரின் வாழ்க்கைக் குறிப்புகளையும், அவரின் கடிதங்களையும் தொகுத்து 1835 ஆம் ஆண்டு வில்ல்லியம் ரொபர்ட்ஸ் இருண்டு தொகுதிகளைக் கொண்ட நூலொன்றை வெளியிட்டார். அதன் இரண்டாவது தொகுதியில் ஜோன்ஸ்டனுக்கும் ஹன்னா மூருக்கும் இடையில் நிகழ்ந்த கடிதப் பரிமாற்றங்களும் உள்ளன. இக்கடிதங்களின் ஆரம்பம் 1818 இல் ஆரம்பித்துள்ளதை கவனிக்க முடிகிறது. அக்கடிதங்களின் சாரத்தை இப்படிக் கூறலாம்.
ஹன்னா – ஜோன்ஸ்டன் கடிதத் தொடர்புகளின் சாரம்
பலராலும் நன்கு அறியப்பட்ட சுவிசேஷ எழுத்தாளரும் தார்மீக சீர்திருத்தவாதியுமான ஹன்னா மூர், இலங்கையின் தலைமை நீதிபதியான சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டனுடன் கல்வி, கிறிஸ்தவ விழுமியங்கள் மற்றும் அடிமைத்தனத்தை ஒழித்தல் ஆகியவை பற்றி பகிர்ந்து கொண்டதன் மூலம் குறிப்பிடத்தக்க தொடர்பை வளர்த்துக் கொண்டார். இலங்கையில் புதிய நிர்வாக சீர்திருத்தங்களில் அக்கறை கொண்டவராக அறியப்பட்ட ஜோன்ஸ்டன், சிங்கள மற்றும் தமிழ் சமூகங்கள் உட்பட இலங்கை மக்களின் அரசியல் - சமூக நிலைமைகளை மேம்படுத்த முயன்றார். 1816ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12க்குப் பின்னர் அடிமைகளுக்குப் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் சுதந்திரமாக இருப்பார்கள் என்ற தீர்மானத்தால் குறிக்கப்பட்ட வீட்டு அடிமைத்தனத்தை படிப்படியாக ஒழித்தது அவரது மிகவும் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாகும்.
இந்த வரலாற்று தருணத்தை நினைவுகூரும் வகையில், ஜோன்ஸ்டன் ஹன்னா மூரிடம் பகிரங்கமாக கொண்டாடப்படக்கூடியதும் அறிவூட்டுவதற்குமான பயன்படுத்தக்கூடிய ஒரு கவிதையை இயற்றுமாறு கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த மூரே, "ஓகஸ்ட் பன்னிரண்டாம் தேதி; அல்லது, சுதந்திரகே கொண்டாட்டம் " என்ற குறுநாடகக் கவிதையை எளிமையான, உரையாடல் அடிப்படையிலான பாணியில் எழுதினார். குறிப்பாக இலங்கை மக்களால் எங்கும் நிகழ்த்துகை செய்யக்கூடிய வகையில் இது இயற்றப்பட்டது. அதன் பின்னர் ஜோன்ஸ்டன் இங்கிலாந்துக்கு அழைத்து வந்த இரண்டு பௌத்த குருக்களால் இந்த படைப்பு சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்படுவதை உறுதி செய்தார். அவரது கவிதை மட்டுமல்ல, அவரது பல சுவிசேஷ நாடகங்களும் நீதிக் கட்டுரைகளும் இந்தியா, இலங்கை முழுவதும் பரவலாக விநியோகிக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டிலும் மொழிபெயர்க்கப்பட்டு வருவதாகவும் ஜோன்ஸ்டன் மூரேயிடம் தெரிவித்தார்.
ஜோன்ஸ்டன் மூரேயின் மொழிபெயர்க்கப்பட்ட நாடகங்களில் ஒன்றின் ஒரு பிரதியை வழங்கினார். அது பனை ஓலைகளில் சிங்கள மொழியில் பொறிக்கப்பட்டு, நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட மரப்பெட்டியில் மூடப்பட்டிருந்தது. இது இதயப்பூர்வமாகவும் ஆழமாகவும் அவரை நெகிழ வைத்தது. மூரே தனது கடிதங்களில் இதைக் குறிப்பிட்டுள்ளார், தனது எழுத்துக்கள் தொலைதூர நாடுகளில் ஆன்மீகக் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தத்தின் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று நன்றியையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தினார்.
கவிதைக்கு அப்பால், மூரேயின் கிறிஸ்தவ தார்மீக இலக்கியம் ஐரோப்பிய இலட்சியங்களுக்கும் இலங்கையின் உள்ளூர் மரபுகளுக்கும் இடையிலான ஒரு பாலமாக மாறும் என்று ஜோன்ஸ்டன் கருதினார். நாடகங்கள் மற்றும் உருவகங்கள் ஏற்கனவே இந்து மற்றும் பௌத்த சமூகங்களில் மரபாக கதைசொல்லலின் பிரபலமான வடிவங்களாக உள்ளன என்றும், மூரேவின் படைப்புகளை மொழிபெயர்ப்பதன் மூலம், அதே வடிவங்களை கிறிஸ்தவ விழுமியங்களையும் சுதந்திரத்தின் செய்தியையும் மேம்படுத்த மாற்றியமைக்க முடியும் என்றும் ஜோன்ஸ்டன் குறிப்பிட்டார். மூரேவின் எழுத்துக்கள் உற்சாகத்துடன் வரவேற்கப்படுவதாகவும், பள்ளிகள் மற்றும் மத மையங்களில் நிகழ்ச்சிளில் கற்பிப்பதற்காக தயாராகி வருகிற செய்தியையும் ஜோன்ஸ்டன் தனது கடிதங்களில் பகிர்ந்து கொண்டார்.
பின்னர், சுதந்திரத்தின் கொண்டாட்டம் என்ற கவிதை இசையமைப்பாளர் சார்லஸ் வெஸ்லி, எஸ்க். என்பவரால் இசையமைக்கப்பட்டது. அத்துடன் ஏழை ஐரிஷ் குழந்தைகளின் கல்விக்காக நிதி திரட்டுவதற்காக இசை பதிப்பின் பிரதிகள் விற்கப்பட்டன. எனவே இந்த முயற்சிகளை மூரே தொடர்ந்து ஆர்வத்துடன் ஆதரித்தார். சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தையும் அவரது இலக்கியப் படைப்புகளின் தாக்கம் உட்பட இலங்கையின் முன்னேற்றங்கள் குறித்து ஜோன்ஸ்டன் தொடர்ந்து ஹன்னா மூரேவுக்கு அறிவித்து வந்தார். மேலும் இதுபோன்ற படைப்புகள் வெளிவரவேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தனது வயது மற்றும் உடல்நிலை காரணமாக அவரால் தொடர்ந்து அவ்வாறு செய்ய முடியாவிட்டாலும், இலங்கை மக்களின் தார்மீக மற்றும் அரசியல் முன்னேற்றத்திற்கு தனது எழுத்து அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கியதையிட்டு அவர் பெருமிதத்தையும் நன்றியையும் தெரிவித்தார்.
ஜோன்ஸ்டனுக்கும் மூரேக்கும் இடையேயான இந்த இலக்கிய கூட்டு 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால கலாச்சார ஒத்துழைப்பின் ஒரு தனித்துவமான உதாரணத்தை எடுத்துக்காட்டியது. அங்கு சிங்களம், தமிழ் இரண்டிலும் மொழிபெயர்க்கப்பட்ட கிறிஸ்தவ சீர்திருத்த இலக்கியங்கள், பிரிட்டிஷ் காலனியில் உள்ளூர் விடுதலை, கல்வி போன்ற முயற்சிகளை ஆதரிப்பதில் கணிடமான பங்கை ஆற்றியிருந்தது. மூரேயின் குரல், இலங்கையில் ஒருபோதும் நேரடியாக இருந்ததில்லை என்றாலும், சிங்கள, தமிழ் சமூகங்களிடையே அவரது படைப்புகளின் மொழிபெயர்ப்புகள், நிகழ்ச்சிகள் மற்றும் கல்விப் பயன்பாடு ஆகியவற்றின் மூலம் அனுபவிக்கக் கூடியதாகவும், அவை செல்வாக்கு செலுத்தக்கூடியதாகவும் ஆக்கப்பட்டது. சுதந்திரத்தின் கொண்டாட்டம் என்ற கவிதை இலங்கையின் சுதேச மக்களின் சமத்துவத்துக்கான தொடக்கத்தின் அடையாள இலக்கிய நினைவுச்சின்னமாக இருந்தது எனலாம்.
ஹன்னா மூர் : வரலாற்று வகிபாகம்
ஹன்னா மூர் பிரபல ஆங்கில எழுத்தாளராக அறியப்பட்டவர், கல்வியாளர், ஒரு இறையியல் செயற்பாட்டளரும் கூட, 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தார்மீக சீர்திருத்த, அடிமை ஒழிப்பியக்கத்தில் செல்வாக்கு செலுத்தியவராகவும் அறியப்பட்டவர்.
பிப்ரவரி 2, 1745 அன்று இங்கிலாந்தின் குளூசெஸ்டர்ஷையரில் உள்ள ஸ்டேபிள்டனில் பிறந்த ஹன்னா மூர், கல்விப் பின்னணியையுடைய ஒரு குடும்பத்தில் ஐந்து மகள்களில் நான்காவது மகளாவார். பள்ளி ஆசிரியரான இவரது தந்தை ஜேக்கப் மூர், மகளையும் லத்தீன் மொழியிலும் இலக்கியத்திலும் வலுவான அடித்தளத்தை ஹன்னாவுக்கு வழங்கினார். 1758 ஆம் ஆண்டில், ஜேக்கப் பிரிஸ்டலில் ஒரு பெண்கள் விடுதிப் பள்ளியை நிறுவினார், அதை ஹன்னாவும் அவரது சகோதரிகளும் பின்னர் நிர்வகித்தனர். இந்த காலகட்டத்தில், ஹன்னா தனது 17 வது வயதிலேயே ‘த சேர்ச் ஆப்டர் ஹேப்பினஸ்’ (1762) உள்ளிட்ட நாடகங்களை எழுதத் தொடங்கினார், இது இளம் பெண் பார்வையாளர்களிடையே பிரபலமடைந்தது. இந்த நாடகப் பிரதி அபோதே 10,000 பிரதிகளை விற்றுத் தீர்த்து.
1770 களில், ஹன்னா லண்டனின் இலக்கிய வட்டங்களுடன் தொடர்பு கொண்டார், சாமுவேல் ஜோன்சன், ஜோசுவா ரெனால்ட்ஸ் மற்றும் எட்மண்ட் பேர்க் போன்ற பிரபல இலக்கியவாதிகளுடன் தொடர்புகளை உருவாக்கினார். அறிவார்ந்த பெண்களின் சமூகமான புளூஸ்டாக்கிங் குழுவின் முக்கிய உறுப்பினராகவும் அவர் இருந்தார். த இன்ஃப்ளெக்ஸிபிள் கேப்டிவ் (1775) மற்றும் பெர்சி (1777) போன்ற அவரது நாடகங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
1779 இல் ஹன்னாவின் வழிகாட்டியாகவும், அவரின் நாடகங்களை அரங்கேற்றுவதில் பெரும் பங்களிப்பை வழங்கிவந்த கேரிக்கின் மரணத்திற்குப் பிறகு, ஹன்னாவின் கவனம் மத மற்றும் சமூக தார்மீக பிரச்சினைகளை நோக்கி கவனம் மாறியது. வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் மற்றும் பெய்ல்பி போர்டியஸ் போன்ற கிறிஸ்தவ சுவிசேஷிகளால் ஈர்க்கப்பட்ட அவர் சமூக சீர்திருத்தத்திற்காக போராடுபவராக ஆனார். பொதுச் சமூகத்தின் உயர் நடத்தைகளின் முக்கியத்துவம் பற்றிய சிந்தனைகள் (1788), நாகரீக உலகில் மதத்தின் மதிப்பீடு (1790) போன்ற அவரின் அவரது நூல்கள், உயர் வகுப்பினரிடையே தார்மீக ஒருமைப்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தின.
1790 களில், ஹன்னாவும் அவரது சகோதரி மார்த்தாவும் கிராமப்புறங்களில் இருந்த வசந்தகால விடுதிகளில் ஞாயிறு பள்ளிகளை நிறுவினர். ஏழைகளுக்கு அடிப்படைக் கல்வியை வழங்கும் நோக்கில். அவர் மலிவான வெளியீட்டுப் பணிகளையும் ஆரம்பித்து (1795-1798) சிறு நூல்களை வெளியிட்டார். கிறிஸ்தவ விழுமியங்களை ஊக்குவிக்கிற வகையிலும் தவறான அரசியலை எதிர்க்கும் வகையிலும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய வகையில் சஞ்சிகைத் தொடரை வெளியிட்டார். தொடராகும். பிரெஞ்சு புரட்சி பற்றிய அரசியல் விவாதங்களை அதில் தொடர்ந்தார். இந்த துண்டுப்பிரதிகள் பரவலாக விநியோகிக்கப்பட்டன, மில்லியன் கணக்கான பிரதிகள் விற்கப்பட்டன, இது பொதுமக்களின் வெகுஜன மனநிலையில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியது.
ஹன்னாவின் “பெண் கல்வியின் நவீன அமைப்புமுறை (1799) பெண்களுக்கு வழங்கப்படும் மேலோட்டமான கல்வியை விமர்சித்து, தார்மீக மற்றும் மத போதனைகளை வலியுறுத்தும் ஒரு பாடத்திட்டத்தை வலியுறுத்துகிற நூலாக இருந்தது.
தனது இறுதிக் காலத்திலும் ஹன்னா தனது சமூகப் பணிகளைத் தொடர்ந்தபடி இறையியல் செயப்பாடுகளிலும் தீவிரமாக இயங்கினார். சர்வதேச அளவில் பிரித்தானியாவின் அடிமைத்துவ நடத்தைக்கு எதிராக இயங்கிய ஹன்னா மூர் செப்டம்பர் 7, 1833 அன்று பிரிஸ்டலின் கிளிப்டனில் காலமானார். 1833 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28 திகதி காலமானார். அதற்கடுத்த மாதம் 1833 செப்டம்பர் 7 ஆம் திகதி பிரித்தானிய பாராளுமன்றத்தில் அடிமையொழிப்பு சட்டம் நிறைவேற்றைப்பட்ட போது அதைக் காண அவர் உயிருடன் இருக்கவில்லை.
ஆங்கிலேய இலக்கியப் பங்களிப்பில் ஹன்னாவின் பங்கு முக்கியமானது. கல்வி, தார்மீக சீர்திருத்தம் மற்றும் அடிமை ஒழிப்பியக்கம் ஆகியவற்றில் அவரது பங்களிப்புகள் பிரிட்டிஷ் சமூகத்தில் நீடித்தத் தாக்கத்தை ஏற்படுத்தின. அவர் எழுதிய நாடகங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள், இறையியல் பிரச்சார வெளியீடுகள், நூல்கள், கவிதைகள் என்பன காலத்தால் அழியாதவை.
அடிமைத்துவம், காலனித்துவம், நிறவாதம், வர்க்க பேதம், வதையியல் என்பவற்றுக்கு எதிரான குரலை அவரின் படைப்புகளில் காணலாம்.
அவர் எழுதிய யம்பாவின் துயரங்கள்; - நீக்ரோ பெண்ணின் புலம்பல் (The Sorrows of Yamba; or, The Negro Woman’s Lament (1795)) என்கிற அவரின் நூல் ஆபிரிக்க அடிமைப் பெண்களின் துயரத்தை பதிவு செய்த ஆரம்ப முன்னோடி நூலாக கொள்ளப்படுகிறது.
ஹன்னாவின் நூல்கள் பல இன்றும் பல பதிப்புகளை கடக்கின்றன. அவரின் எழுத்துக்கள் இன்றும் பலரால் திறனாய்வுக்கு உட்படுத்தபடுகின்றன. அடிமையொழிப்பைப் பற்றி பேசுவோர் அவரை தவிர்த்து பேச முடிவதில்லை.
அந்த வரிசையில் அபிரிக்க அடிமைகளுக்கு அப்பால் அவர் அடிமைத்துவம் பற்றிய பேசிய இன்னொரு நாடென்றால் அது இலங்கை.
ஹன்னாவின் “சுதந்திரத்தின் கொண்டாட்டம்”
அவர் எழுதிய கவிதை நூல்களில் பிரபலமான நூலாக கொண்டாடப்படுகிற “அடிமைத்துவம்” பற்றிய கவிதைத் தொகுப்பு 1788 இலேயே வெளிவந்துவிட்டது. அதன் பின்னர் அவர் அடிமைத்துவத்தை எதிர்த்து எழுதிய கவிதைகளில் முக்கியமான கவிதை இலங்கையைப் பற்றிய கவிதை.
ஹன்னா மூரின் படைப்புகள் பல தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. ஆவற்றில் 1853 இல் வெளிவந்த பதினோராவது (XI) தொகுப்பு நூலில்தான் இலங்கையின் அடிமைத்துவம் பற்றிய கவிதை தொகுக்கப்பட்டிருக்கிறது.
இக்கவிதையை அவர் எழுத உந்திய நபர் தான் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன். ஹன்னா மூரின் நண்பரான ஜோன்ஸ்டன் 1816 ஆம் ஆண்டு அடிமைக் குழந்தைகள் விடுதலை பெற்றது தொடர்பாக எழுதும்படி விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து மிகுந்த ஆர்வத்துடன் அந்த நெடுங்கவிதையை ஒரு உரையாடல் பாணியில் ஹன்னா அழுத்தி முடித்தார்.இக்கவிதை முதன் முதலில் 1819இல் எழுதப்பட்டிருப்பதாக சில குறிப்புகளைக் காண முடிகிற போதும் முதன் முதலில் அது 1827 இல் வெளிவந்ததாக அவரின் XIவது தொகுப்பு நூலில் ஒரு குறிப்பு காணப்படுகிறது. அதன் பின்னர் அவரின் பல தொகுப்புகளிலும் அது இடம்பெற்றிருக்கிறது. அதே வேளை காரின் ஸ்வலோ (Karen Swallow Prior) ஹன்னா பற்றிய தனது நூலில் 1819 இலேயே “சுதந்திரத்தின் கொண்டாட்டம்” என்கிற இந்தக் கவிதையை எழுதியிருப்பதாக உறுதியாகக் கூறுகிறார். அது சரியாகவும் இருக்கலாம். ஜோன்ஸ்டனின் கோரிக்கை 1818 இல் விடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது 1819 சரியாக இருக்கலாம்.
அடிமை ஒழிப்பில் ஹன்னா கொண்டிருந்த ஈடுபாடு அடிமையொழிப்பில் தீவிரம் கொண்ட ஆதரவு வலைப்பின்னலை அவருக்கு ஏற்படுத்தியிருந்தது. ஓகஸ்ட் பன்னிரண்டாம்; அல்லது 1816 ஆகஸ்ட் 12 க்குப் பிறகு பிறந்த இலங்கையில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சுதேசிய அடிமைத்துவதிலிருந்து விலக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் “ஓகஸ்ட் பன்னிரண்டாம் நாள்” என்றே முதலில் அந்த கவிதைக்கு தலைபிட்டிருந்தார். ஆனால் அந்த நாளானது அரசரின் பிறந்த நாள் வைபவத்துக்குரிய நாளென்பதால் பிழையான வரைவிலக்கணத்தை கொடுத்து விடும் என்று அவர் கருதினார். இறுதியில் அக்கவிதைக்கு “சுதந்திரத்தின் கொண்டாட்டம்” என்று தலைப்பிட்டார். ஆனால் அவரின் வெளியீடுகளில் “சுதந்திரத்தின் கொண்டாட்டம்” அல்லது “ஓகஸ்ட் பன்னிரண்டாம் நாள்” (The Feast of Freedom ; or The Twelfth of August) என்று சேர்த்தே தலைப்பிட்டார்.
1827 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இக்கவிதை நூலில் வேறு பல கவிதைகள் உள்ளடங்கியிருந்தாலும் அந்தக் கவிதை நூலுக்கு தலைப்பாக இலங்கைப் பற்றிய கவிதையின் தலைப்பையே இட்டிருந்தார். “சுதந்திரத்தின் கொண்டாட்டம் அல்லது இலங்கையின் சுதேசிய அடிமையொழிப்பு” (The Feast Of Freedom ; Or, The Abolition Of Domestic Slavery In Ceylon) என்று அந்த நூலுக்கு தலைப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த உரையாடல் பாணியிலான கவிதையில் சபாத் என்கிற பாத்திரம் ஆரம்பத்தில் சிங்களப் பெயரான சில்வா என்றே பெயரிடப்பட்டிருந்திருக்கிறது.
ஜோன்ஸ்டனிடமிருந்து அவர் பெற்ற மிகவும் மதிப்புமிக்க பரிசாக இந்த சந்தர்ப்பத்தை ஹன்னா கருதினார்.
இந்தக் கவிதை சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பனை ஓலைகளில் எழுதப்பட்டு அலங்கார மரப்பெட்டியில் மூடிவைக்கப்பட்டதைப் பற்றி ஜோன்ஸ்டன் தன்னிடம் கூறியதாக ஹன்னா குறிப்பிடுகிறார். புச்சான் என்கிற தனது நண்பிக்கு எழுதிய கடிதமொன்றில் "எனது எல்லா நாடகங்களும் இப்போது மொழிபெயர்க்கப்படுகின்றன, அத்துடன் எனது பிற எழுத்துக்கள் சிங்களம் தமிழ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன, அவை இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட உள்ளன." என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இக்கவிதை குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமாக ஆனது. பிரபல இசையமைப்பாளர் சார்லஸ் வெஸ்லி (Charles Wesley) 1820 களில் “சுதந்திரத்தின் கொண்டாட்டம்” கவிதைக்கு இசையமைத்தார். அந்த இலங்கை அடிமைத்துவ விடுதலை பற்றிய கவிதைக்கான இசைக் குறியீடு (Music Notes) மேற்படி “சுதந்திரத்தின் கொண்டாட்டம்” என்கிற நூலில் நான்கு பக்கங்களில் வெளியாகியிருகிறது.
சார்ல்ஸ் ஓகில்வி (Reverend Charles Ogilvie) என்கிற பாதிரியார் இந்தப் இசையின் விநியோகப் பொறுப்பை வகித்திருக்கிறார். இந்த விற்பனையில் கிடைத்த பணம் ஏழை ஐரிஷ் மக்களுக்கு ஹன்னா மூருக்கு ஊடாக செலவிடப்பட்டிருக்கிறது.
சுதந்திரத்தின் கொண்டாட்டம் என்கிற அந்த நூலின் முன்னுரையில் இலங்கை பற்றிய குறிப்புகளை அவர் இவ்வாறு எழுதியிருக்கிறார்.
“இந்த குறு நாடகம் இந்து சமுத்திரத்தில் உள்ள இலங்கைத் தீவில் உள்நாட்டு அடிமைத்தனம் முடிவுக்கு வந்ததை நினைவுகூரும் வகையில் எழுதப்பட்டது . அந்த நேரத்தில், சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் இலங்கை மன்னர் சபையின் தலைவராக இருந்தார்.
இலங்கை மக்களின் அரசியல், தார்மீக மற்றும் அறிவுசார் வாழ்க்கையை மேம்படுத்த அவர் நேர்மையாகவும் அறிவுபூர்வமாகவும் பணியாற்றினார். அவரது முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று; பிரித்தானிய முடியரசிடமிருந்து உத்தியோகபூர்வ அனுமதியை (ஒரு சாசனம்) பெற்று, இலங்கையில் உள்ள அனைத்து உள்ளூர் மக்களும் நீதிமன்றத்தில் ஜூரி உறுப்பினர்களாக பணியாற்ற அனுமதித்தது - இந்த உரிமை மற்ற ஆசிய நாடுகளில் உள்ளவர்களுக்கு இல்லை.
அத்தோடு சேர் அலெக்சாண்டர் பல ஆண்டுகளாக உள்நாட்டு அடிமைத்தன முறையை மெதுவாகவும் அமைதியாகவும் முடிவுக்குக் கொண்டுவர உள்ளூர் மக்களை ஊக்குவித்தார். அவரது வேண்டுகோளின் காரணமாக அடிமைகளின் உரிமையாளர்கள் ஆகஸ்ட் 12, 1816 க்குப் பிறகு பிறந்த அனைத்து குழந்தைகளும் விடுதலை வழங்க ஒப்புக்கொண்டனர். இந்த முடிவு இலங்கையில் சுமார் 300 ஆண்டுகளாக நிலவி வந்த உள்நாட்டு அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
இந்தப் புதிய சுதந்திர காலத்தைத் தொடங்க ஓகஸ்ட் 12 ஐ சர் அலெக்சாண்டர் தேர்ந்தெடுத்தார். இந்த திகதி இளவரசரின் (பின்னர் மன்னர்) பிறந்த நாளாகும். மக்கள் தங்கள் சுதந்திரத்தை நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார், பிரிட்டிஷ் கிரீடத்தின் மீதான மரியாதை, அது சாத்தியமாக்க உதவியது.
இந்த நாடகம் ஏற்கனவே பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் அவர்களுடன் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்த பௌத்த மதகுருமார்களால் சிங்களத்தில் முதலாவதாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
தற்போது இந்த நாடகம் விசேடமாக வெளியாகிறது. பிரபல இசைக்கலைஞர் சார்லஸ் வெஸ்லி சமீபத்தில் அதை ஒரு இசைப் பாடலாக மாற்றினார். அந்த மகிழ்ச்சியில் கவிதையின் ஆசிரியர் ஹன்னா அதை மீண்டும் ஆங்கிலத்தில் வெளியிட முடிவு செய்தார். சில கூடுதல் சிறிய பகுதிகளைச் சேர்த்திருக்கிறார். இந்த சிறு நூலை விற்பதன் மூலம் கிடைக்கும் பணம் ஏழை ஐரிஷ் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடையாக வழங்கப்படும்.”
இதன் மூலம் அந்தக் கவிதை குறுநாடக வடிவில் மாற்றப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. அது மட்டுமன்றி இந்த கவிதை பல இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது என்கிற தகவலின் படி நிச்சயம் சிங்களத்திலும், தமிழிலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இதுவரை அதைப் பற்றி நாம் அறிந்ததில்லை. மேலும் இக்கவிதை நாடகத்தின் விற்பனையிந மூலம் பெறப்பட்ட பணம் பல ஐரிஷ் குழந்தைகளின் கல்விக்காக அன்று செலவிடப்பட்டிருக்கிறது என்கிற தகவலும் நமக்குப் பேருவகையைத் தருகிறது.”
இலங்கையின் முதலாவது தமிழ் நாவல் ஹன்னாவினுடையதா?
அலெக்சாண்டர் ஜோன்ஸ்டனின் குறிப்புகளின் படி ஹன்னாவின் பல படைப்புகள் இலங்கை இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இன்றும் இலங்கையில் வெளியான முதலாவது நாவல் என கூறப்படும் “காவலப்பன் கதை” நூலின் மூல ஆசிரியர் ஹன்னா மூர் என்றால் வியப்பாக இருக்கும்.
இலங்கையில் வெளியான முதலாவது நாவல் எது என்கிற கேள்வி பல இடங்களிலும் சர்சைக்குள்ளானதாகவே இருப்பதை அவதானிக்க முடிகிறது.
வேதநாயகம் பிள்ளையின் "பிரதாப முதலியார் சரித்திரம்" தான் தமிழ் மொழியில் முதலாவதாக வெளிவந்த நாவல் என்று குறிப்பிட முடியும். அது வெளிவந்த ஆண்டு 1879 ஆகும். அதுவரை செய்யுளையே பிரதான இலக்கிய வகையாகக் கொண்டிருந்த தமிழுக்கு உரைநடையிலிருந்த புனைகதை இலக்கிய வடிவம் இந்நூலுக்கூடாகவே அறிமுகமானது. ஆனால் இந்த நூல் தமிழகத்தில் வந்தது.
அப்படிப்பார்க்கும் போது சித்திலெவ்வை மரைக்கார்' இயற்றி 1885 இல் வெளிவந்த “அசன்பே சரித்திரம்” இலங்கை நாவல் இலக்கியத்தின் முதலாவது நாவல் என்று கூறலாம்.
ஈழத் தமிழ் நாவலிலக்கியப் பாரம்பரியத்தில் தி. த. சரவணமுத்துப்பிள்ளை எழுதி 1895 இல் வெளியான ‘மோகனாங்கி’ நாவலை இலங்கையின் முதலாவது சரித்திர நாவல் என்று குறிப்பிட முடியும். இதன் கதைக் களமும் வெளியிடப்பட்ட இடமும் தமிழகமாக இருந்தபோதும் இதை எழுதிய சரவணமுத்துப்பிள்ளை இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்தவர்.
நாவலிலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதியுள்ளவர்கள் சிலர் இந்த வரலாற்றுத் தகவல்களோடு “காவலப்பன் கதை”யைக் குழப்பியுள்ளதைக் காண முடிகிறது. "காவலப்பன் கதை" தான் ஈழத்தின் முதலாவது நாவல் என்று அடித்துச் சொல்பவர்கள் இன்றும் உள்ளார்கள்.
"காவலப்பன் கதை" முதலாவது மொழிபெயர்ப்பு நாவல் யாழ்ப்பாணத்தில் 1856ம் ஆண்டில் வெளியிடப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிற போதும் அப்படிப்பட்ட ஒரு நாவலை கண்ட எவரும் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.
இதைப்பற்றி மு.கணபதிப்பிள்ளை சில்லையூர் செல்வராசனின் நூலில் எழுதியிருக்கிறார். ஆனால் கணபதிப்பிள்ளையோ பின்வந்தவர்களோ அந்த நாவல் குறித்த விபரங்களை சரிவர நிறுவவில்லை. மேலும் இந்த நூல்களில் பிரதிகளும் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் “கைக்குக் கிடைக்காத நூல் ஒன்றினை நாவலா நாவலில்லையா என்று எப்படிக் கூறலாம்” என்று பேராசிரியர் அ. சண்முகதாஸ் எழுதிய ‘சித்திலெவ்வை மரைக்காரின் அஸன்பே சரித்திரம்” தனது கட்டுரையொன்றில் எழுதுகிறார்.
“காவலப்பன் கதை”யானது ஹன்னா மூர் 1796 இல் இயற்றிய "Parley the Porter" என்னும் நாவலின் மொழிபெயர்ப்பு என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதன் மூலப் பிரதியை இக்கட்டுரைக்காகத் தேடி எடுத்தபோது அந்த நூலானது அட்டையோடு சேர்த்து 12 பக்கங்களை மட்டுமே கொண்ட சிறு நூல் என்பதை காண முடிந்தது. 1856ஆம் ஆண்டு ஹன்னா மூர் எழுதிய படைப்புகள் அனைத்தும் மீண்டும் ஒரே நூலாக தொகுக்கப்பட்டபோது அந்த நூலில் இந்தக் கதை வெறும் நான்கே பக்கங்களுக்குள் அடங்கிவிட்டன. இன்னும் சொல்லப்போனால் மொத்தமே சுமார் 4500 சொற்களை மட்டுமே கொண்ட கதை. அதை ஒரு சிறு கதை என்று வேண்டுமென்றால் கூறலாமேயொழிய ஒரு நாவலாக எப்படி தமிழில் அடையாப்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. ஆங்கில உலகில் எங்குமே இக்கதையை ஒரு நாவலாக அடையாளப்படுத்தியதில்லை. குறைந்த பட்சம் ஒரு குறுநாவல் உள்ளடக்கத்தைக் கூட இது கொண்டதில்லை.
ஆகவே “காவலப்பன் கதை” என்கிற நூல் வெளிவந்திருந்தாலும் கூட அது நாவலாக இருக்க வாய்ப்பே இல்லை என்பது தெளிவாகிறது.
பார்னெட் (L.D.Barnett), போப் (G.U.Pope) ஆகியோர் தொகுத்த A Catalogue of the Tamil books of the British Museum என்கிற நூலில் "Parley the Porter" என்கிற நூலைப் பற்றிய குறிப்புகளைக் காண முடிகிறது. பிரிட்டிஷ் மியூசியம் 1909 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள இந்த நூல் பட்டியல்களை இன்றும் பலரும் ஒரு முக்கிய மூலாதார நூலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நூலில் 177 ஆம் பக்கத்தில் உள்ள குறிப்பு இது தான்.
MORE (HANNAH). “Parley the Porter” காவலப்பன் கதை. [Translated into Tamil] pp. 36. Jaffna, 1856. 16°. 14170. a. 33.(3.) No. 1 of the New Series of the Jaffna Religious Tract Society.
மேலும் இந்த நூலில் கிறிஸ்தவ மதம் சம்பந்தப்பட்ட நூல்களின் கீழ் 584 ஆம் பக்கம் “காவலப்பன் கதை” பட்டியலிடப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளதையும் காண்கிறோம். இது “யாழ்ப்பாண சன்மார்க்க புத்தக சங்கத்தால்” (J.R.T.S - Jaffna Religious Tract Society) வெளியிடப்பட்டிருக்கிறது.
நா. சுப்பிரமணியம் எழுதிய “ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்” (1978) என்கிற நூலில் இந்த நூலைப் பற்றி குறிப்பிடும் போது“இந்நூல் பார்லே என்ற சுமைதூக்கி (1869), பார்லே என்னும் சுமையாளியின் கதை (1876) ஆகிய தலைப்புக்களுடன் தமிழ் நாட்டில் வெளிவந்துள்ளது. இந் நூற் பிரதிகள் கிடைக்கவில்லை. இதனை 'நாவல்' என்று கொள்ளலாமா என்பது ஆய்வுக்குரியது.” என்றும் அவர் குறிப்பிடுகிறார். மேலும்
“பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட கதை நூல்கள் வெளிவந்துள்ளன. இதிகாச புராணக் கதைகள், நாடோடிக் கதைகள், பிறமொழிக் கதைகள், மேலைநாட்டுச் சமயக் கதைகள் முதலிய பல்வேறு வகைகளிலும் அமைந்த இக் கதைகளை நாவல் எனக் கொள்வதில்லை. காவலப்பன் கதை மேலை நாட்டுச் சமயக் கதைகளிலொன்றாகவிருக்கலாம்.” என்கிறார்.
அவரின் அந்த ஐயம் மிகவும் சரியானதே என்கிற கருத்தை அந்த கதையின் மூல ஆங்கிலப் பிரதியை நோக்கும்போது உறுதி செய்துகொள்ள முடிகிறது. கூகிள் தனது Google Books இல் இதை வகைப்படுத்தும்போது “சிறுவர்களுக்கான கதையாக” (Children's stories) வகைப்படுத்தியிருக்கிறது.
இந்த நூலை “Chapbook” என்றும் மேற்கில் வகைப்படுத்துகிறார்கள். மிகக் குறைந்த அளவிலான பக்கங்களைக் கொண்ட கதைகளுடன் பிரசுரிக்கப்படுகின்ற பிரசுரங்களையே “Chapbook” என்று அழைத்தார்கள். பல்லாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் தெரு இலக்கிய (street literature) கலாசாரத்தின் அங்கமாக இந்த வகை இலக்கிய வெளியீடுகள் காணப்பட்டன. மலிவு விலையில் எளிமையான நூல்கள் தெருக்களில் விற்கப்பட்ட கலாசாரம் அது. அச்சுப் பண்பாட்டின் தொடக்கக் காலப்பகுதியில் குறிப்பாக பதினைந்தாம் நூற்றாண்டு தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருந்த வாசிப்பு கலாசாரம் இது.
இந்தக் கதை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே மேற்கு நாடுகளில் சிறுவர்களுக்காக நடத்தப்படும் கிறிஸ்தவ ஞாயிறு பாடசாலைகளில் வாசிக்கப்பட்டிருக்கிறது.
மூல நூலை இங்கிலாந்தில் அன்றே வெவ்வேறு பதிப்பாளர்கள் பதிப்பிட்டிருக்கிற போதும் அமெரிக்க சமார்க்க புத்தக சங்கமும் (American Tract Society) 1825 ஆம் ஆண்டு ஆங்கிலப் பிரதியை வெளியிட்டிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். ஹன்னா மூரின் சுமார் 50 கதைகளை அச்சங்கம் பதிப்பித்துள்ளது.
பார்லி என்பவன் தான் பிரதான கதா பாத்திரம். Parley the Porter என்பதை நேரடியாக தமிழ்ப்படுத்தினால் “பார்லி என்கிற சுமைதூக்கி” என்று கூறலாம். ஆனால் “காவலப்பன்” என்று இலக்கிய சுவையுடன் அந்த தலைப்பை இட்டிருக்கிறார்கள்.
ஒரு காட்டிக்கொடுப்பாளனின் உதவியின்றி கொள்ளையர்கள் எப்படி ஒரு வீட்டிற்குள் நுழைய முடியாது என்பதை உணர்த்தும் கதை.
“காவலப்பன் கதை”யை நமது கதைசொல்லி இலக்கிய வரலாற்று மரபில் இருந்து நீக்கிவிட முடியாது என்பது உண்மை. அதே வேளை அதை நாவலிலக்கியத்தின் தொடக்கம் என்று பதிவு செய்ய முனைகின்ற முயற்சி வரலாற்றுத் திரிபாகிவிடும்.
இலங்கையின் இலக்கியத்தில் கணிசமான பாத்திரத்தை ஆற்றிய முன்னோடிகளில் ஒருவராக ஹன்னா இருந்தும் இதுவரை ஹன்னா பற்றி தமிழில் எதுவும் வெளிவராதது வியப்பளிக்கிறது. ஹன்னா இலங்கைக்கு ஆற்றியது வெறும் இலக்கிய வகிபாகம் மட்டுமல்ல. மாறாக சமூக விடுதலை சார்ந்த பணிகளுக்கு அவரின் இலக்கிய படைப்புகள் கணிசமான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது என்பதை நமது இலக்கிய பரப்பில் மறந்து விடக் கூடாது.
விடுதலையின் பண்டிகை (அல்லது) ஓகஸ்ட் 12
காட்சி: சிலோன்
சபாத். (Sabat), து(D)மால் (Dumal), சிங்களவர்கள் Etc.
முதல் மூன்று பல்லவிகளும் பாடப்படும்
துமால்
மகிழ்வோம் பாடுவோம், ஆடுவோம் !
இன்று விடுதலையின் விடுமுறை நாள்!
சபாத்
எமது மீட்பின் ஆனந்த நாளை ஆசீர்வதிப்பாராக!
விடுதலையின் விடியலே வாழ்க!
எம் பிள்ளைகளின் பிள்ளைகள் ஒன்றுகூடப் போகிறார்கள்
நீதியான விடுதலையின் பிறப்பைக் கொண்டாடும் நாள்!
துமால்
ஆசீர்வாதத்தை எங்கெங்கும் பரப்புங்கள்,
அக்கறையும் கண்காணிப்பும் ஒருபுறம் இருக்க
ஒன்றுகூடி புசித்துக் குடித்து எக்காளத்தொனி
பள்ளத்தாக்குகளில் முழங்க ஆடுவோம். பாடுவோம்
கோரஸ் (கூட்டுப் பாட்டு)
ஆடுவோம், பாடுவோம்
விடுதலையின் விடுமுறை இந்நாள்! (பாட்டு இங்கு முடிகின்றது)
சபாத்
ஆனால் எல்லா களியாட்டமும் தொடங்குமுன்
எம் சுதந்திர வேட்கையை எண்ணுவோம்.
பாட்டுப் பாடி களிக்க மட்டுமல்ல
குடித்து புசிப்பதற்குமான சுதந்திரம்
துமால்
ஓம். தென்னை மரத்தினை போற்றுவோம்!
அது தரும் அத்தனை மகிமையோடும்
சிரித்து மகிழுகின்ற சுதந்திரம்
எமது மனதில் நித்தம் உயிர் பெறுகிறது,
சபாத்
இந்தக் கொடைகளை வீணடிக்க வேண்டாம்
ஆதிகாரத்தை வீணில் வணங்கவேண்டாம்
குடிபோதை அல்ல எமது மீட்பு இன்று
அளவுக்கடந்த ஆசையும் அல்ல எமது விடிவு
கறுவாக் காடுகள் எமது பொக்கிஸம்
வேறு எத்தீவிலும் காண்பது அரிது.
அவற்றின் சுகந்தம் ஆகாயத்தின் விட்டத்தினை எட்டும்
அவற்றின் இனிமை எமது உழைப்பினை மெச்சும்.
ஆனாலும் எல்லாம் சிறந்த வல்ல மூலிகை
எமக்கு உன்னதமான ஆறுதல் தரும்
எமது ஆத்மாவினை வருடிச் செல்லும்
மேன்மை மிக்க இங்கிலாந்து
விடுதலை வேட்கையின் சிறந்த நண்பன்
புனிதக் கனியினை காட்டுகிறது
எல்லா விருட்சங்களுக்கும் மேலாக
ஒரு இறைமைமிக்க விருட்சம் ஒங்கி வளரும்
அது தோன்றும் எங்கும் ஆனந்தமும் அமைதியும் விளங்கும்.
உடைந்த மனதுகளை ஆற்றி மீட்கும் கொடையே அது.
அதன் கிளைகள் ஆழமாகப் படியும்
அதன் கிளைகள் பரந்து நிற்கும்
அறிவினைப் பரப்பும்
அதன் நிழலில் பாவிகள் ஒதுங்குவர், பதுங்குவர்
அதன் உச்சி ஆகாயத்தை தழுவும்.
அதன் இலைகளில் பின்னிய நூல்
மடிந்துகொண்டிருக்கும் தேசத்தை மீட்கக் கூடும்
அதனை விசுவாசத்துடன் விரும்பிப் பெறுபவன்
தனது சுய இரட்சிப்பை உறுதி செய்வான்
துமால்
அப்படியா? இந்த நட்பின் விருட்சத்தை
தந்திடுக எமக்கு - நீவிர்
அதன் பயனை எமக்கு காண்பித்தால்
உமது மகிமையை நாம் துதிப்போம்.
சபாத்
தென்னை மரத்தின் செறிந்த பானம்
எண்ணற்ற உயிர்களைத் தரும் பானம்.
எத்தனையோ உடைந்த மனங்களை ஆற்றி மீட்கும்
வல்லைமை பெற்றது இப் பானம்.
துமால்
குழப்புகிற புதிர்கள் இனி வேண்டாம்
உமது கருத்தினை எடுத்துரைக
அந்த விருட்சம் எது அந்த வேதமெது?
உமது அறிவுக்கு எட்டியிருக்குமென நம்புகிறேன்.
சபாத்
உமது மரத்தின் இனிய பானம்
அதிகம் உட்கொள்ளின்
குரோதமும், சண்டையும் உண்டாகும்.
ஆனால் நான் எடுத்துக் கூறும் விருட்சம்
எல்லாவற்றுக்கும் மேன்மையான ஒன்று
ஒரு உன்னத படைப்பு. அதுதான்
வாழ்க்கை அளிக்கும் கற்பகத் தரு
மூளையைக் குழப்பும் தேங்காய் பானம்
உம்மை அலைய வைக்கும், அதனை நாடி
ஆனால் இம்மாபெரும் மரத்தின்
பானத்தை அருந்துவோர்
தமது தாகத்தினை என்றென்றென்றுக்கும் தீர்ப்பர்.
(சபாத் பைபிளை நீட்டுவார் இத்தருணத்தில்)
இங்கிலாந்து அளிக்கும் கொடை இதுதான்
பாவத்தின் சங்கிலித் தொடரை அறுக்கும்
நறுமணம் கமழும் சோலைகளில் பரிமாறிக்கொள்ளும்
தேனினய பானம்.
சொர்க்கத்தின் தெய்வீக பண்ட பரிமாற்றம்.
இந்தப் பரிமாற்றம் உன்னதமானது.
மற்றைய பண்டமாற்றம் போலல்லாது
ஒரு சில வருட கவனிப்பும் கண்காணிப்பும் தான்
பின்னர், முடிவிலாத நிறைந்த ஆனந்தப் பிரவாகம்
உமக்கு உரித்தாகும்
இது எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற சுதந்திரத்தை நமக்கு காட்டுகிறது,
நம் அன்றாட உழைப்பை நேசிப்பதும்; _
அல்லது பக்கத்து வீட்டுக்காரனுடன் கலவரம் செய்யாமல்
சோம்பேறித்தனத்தில் நம் நேரத்தை இழக்க விடாமல் தடுப்போம்
விடுதலை பெற்ற சுதந்திர மனிதனே
தனது உழைப்பை செவ்வனே செய்வான்
எஜமானருக்கு இது தெரியட்டும்.
கண்ணும் கருத்துமாக ஆண்டவருக்கு சேவை செய்பவனே
எஜமானருக்கும் நல்வழியில் ஊழியம் செய்வான்.
உடலும் உள்ளமும் விடுதலையடைந்தால்
நாட்களும் மாதங்களும் சுருக்கென கழியும்.
புகலில் சூரியனின் எம்நல் உழைப்பின் மேல் கண்கள் பதிக்க
இரவில் நாம் பிரார்த்தனையில் மூழ்கி நிதானத்தில் அமைதியாவோம்.
கூட்டாக சிங்களவர்கள் கோரஸ்
சபாத்தின் அரிய விருட்சம் எமக்கு தந்திடுவீர்
ஏகோபித்த குரலில் கேட்டு நிற்போம்
எமது தேவனை நாம் வேண்டி நிற்பதால்
நாம் சுதந்திரம் அடைந்ததை நிரூபித்து காட்டுடிவோம்.
ஆனந்தம் நிறைந்த உள்ளங்களுடன்
அப் புனித நூலை வாசிப்போம்.
அப்போது நாம் எடுத்துக் காட்டுவோம்
எங்கு பார்த்தாலும் தோன்றும் காட்சி
தேவனின் கனிவில் சுதந்திரம் பெற்றவர்
சுயமாகவே திகழுகிறார்கள்.
சபாத்
ஒகஸ்ட் 12
அன்றைய நாளை மறக்க வேண்டாம்.
அன்றிலிருந்து எமக்கு விடுதலை.
சுதந்திரம். சுதந்திரம். சுதந்திரம் எமதே
என்றென்றும்!
கூட்டாக
எங்களை விடுவிக்கும் நாளை ஆசீர்வதிப்பாராக!
வாழ்க விடுதலை!
முடிவு
(இக்கவிதையை இக்கட்டுரைக்காக மொழிபெயர்த்துத் தந்த சுமதி சிவமோகன்அவர்களுக்கு நன்றிகள்)
இலங்கையில் அடிமையோழிப்பும் ஹன்னா மூரின் வகிபாகமும், என்.சரவணன் by SarawananNadarasa
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...