வாழ்க்கையில் இதுவரை வாங்கிய நூல்களிலேயே அதிக விலையை கொடுத்து வாங்கியது “Grote Atlas van de Verenigde Oost-Indische Compagnie” என்கிற நூலைத்தான். தபால் செலவுக்கும் சேர்த்து மொத்தம் 530 டொலர்கள் செலவாகும் என்கிற அறிவிப்பை இணையத்தளங்களில் கண்ட போது இது சாத்தியமில்லை என கைவிட்டு இருந்தேன். ஆனால் நெதர்லாந்தில் இருந்து ஒருவர் தன்னிடம் பயன்படுத்திய பிரதி இருக்கிறது என்றும் அதனை 175 டொலர்களுக்கு அனுப்பலாம் என்றும் அறிவித்திருந்தார். இறுதியில் அது என் கைகளுக்கு வந்து சேரும் போது 216 டொலர்களாக ஆகியிருந்தது. இலங்கைப் பெறுமானத்தில் அது சுமார் 65,000 ஆயிரம் ரூபா எனலாம். நான் மேற்கொண்டு வரும் சில நூல்களுக்கு தேவையான முக்கிய தகவல்களும் அவற்றுக்குப் பயன்படுத்தவேண்டிய வரைபடங்களும் இதில் நிறையவே இருக்கின்றன.
தமிழில் இதனை “டச்சு ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனியின் விரிவான வரைபடம்” என்றழைக்கலாம். ஒல்லாந்தர் (டச்சு) Dutch East India Company (VOC) ஆட்சி காலத்து வரைபடவியல் என இந்த நூலைப் பற்றி சாராம்சமாக குறிப்பிடலாம்.
புவியியலாளரும், வரலாற்றாசிரியருமான மார்டின் ஸ்ட்ரோம்ஸ் (Martijn Storms) இலங்கையில் டச்சு கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சி செய்த காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு தொகை வரைபடங்கள் இந்தத்தொகுப்புகளில் உள்ளன. மொத்தம் ஏழு தொகுப்புகள். டச்சுக் கட்டுப்பாட்டின் கீழ் அப்போது இருந்த இந்தியா, ஆபிரிக்க நாடுகள், இந்தோனேசியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகள், அவுஸ்திரேலியா, ஜப்பான், சீனா, தைவான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைப் பற்றி தனித்தனியான தொகுப்புகள் இவை. இதில் நான்காவது தொகுப்பு இலங்கையைப் பற்றியது.
400 பக்கங்களுக்கும் மேற்பட்ட இந்த நூலில் இதுவரை வெளிவராத இலங்கையின் பல வரைபடங்களும், மூன்று - நான்கு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கோட்டைகளினதும், கட்டிடங்களினதும், குடியிருப்புகள் என்பவற்றின் வரைபடங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. அவ்வரைபடங்கள் ஆய்வுக்குட்படுத்தி பல விபரங்களும் அதில் தரப்பட்டுள்ளன. இலங்கையின் ஆரம்பகால வரைபடங்களின் தொகுப்பாக இதை விட சிறந்த ஒரு தொகுப்பு இதுவரை வெளிவந்ததில்லை என உறுதியாக சொல்ல முடியும்.
டச்சு மொழியிலும், ஆங்கில மொழியிலுமாக இரு மொழி விளக்க நூலாக அமைந்திருப்பதை காண முடிகிறது. அவ்வாறு டச்சு மொழியிலும் இருப்பதால் மூல ஆவணம் பற்றிய விபரங்கள் அதே தலைப்புகளில் கிடைக்கின்றன. எனவே மேலதிகமாக தேட விரும்புபவர்கள் அவற்றைக் கொண்டு மேலும் தனியாக விரித்துச் செல்ல முடியும்.
உதாரணத்துக்கு இந்த நூலுக்குத் துணையாக இருந்த ஆவணங்களில் முக்கிய ஒன்றாக இருந்திருப்பது Beschrijving en Caarten van den Eijlande Ceijlon என்கிற தலைப்பில் டச்சு சுவடிகூடத்தில் கண்டெடுக்கப்பட்ட தொகுப்புகளாகும். அதில் 1628 போர்த்துக்கேய ஆட்சிக் காலத்தில் இருந்து வரையப்பட்ட வரைபடங்கள் அதில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் தேடி இதனை பெற முடியாது என்பதை அறிவீர்கள். இதில் உள்ள வரைபடங்கலானது அன்றைய போத்துக்கேய அரசர் மூன்றாம் பிலிப்பின் ஆணையின் பேரில் போர்த்துக்கேய ஜெனரல் கொன்ஸ்டன்டினோ (captain-general Constantino de Sa de Noronha) என்பவரால் 1623 – 1630 காலப்பகுதியில் அவர் கடமையில் இருந்த பொது முதற் தடவை தயாரிக்கப்பட்டிருக்கிறது. கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணப் பட்டினம், திருகோணமலை, அலுத்கம, மெனிக்கடவல, வெலிகம, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், மன்னார், மாத்தறை, களுத்துறை, மல்வான உள்ளிட்ட பல பகுதிகள் பற்றிய குடியிருப்பு வரைபடங்களும், கோட்டைகள், கட்டிடங்கள் என்பவற்றின் தள வரைபட அமைப்புகளும் உள்ளன.
இவை சிதைவடைந்த நிலையில் பின்னர் அதை டச்சு அரசாங்க சுவடிகள் காப்பகம் மூலப் பிரதியைப் போலவே மீளவும் தயாரித்து வைத்திருக்கிறது.
இலங்கையின் வரைபடவியல் (cartography) வரலாற்று மரபை எடுத்துக்கொண்டால் 1477இல் தொலமியால் வரையப்பட்ட தப்ரபோன் என்று அழைக்கப்பட்ட பழமையான வரைபடமே பழமையானதாகக் கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் 1580 களின் பின்னர் தான் இலங்கையின் வரைபடங்கள் சற்று உண்மைக்கு நெருக்கமான வரைபடங்களாக வெளிவரத் தொடங்கின.
அதன் தொடர்ச்சியாக ஸ்பானிய வரைபடவியலாளரான கிப்ரியானோ (Cypriano Sanchez) என்பவர் 1590 இல் வரைந்த வரைபடம் இலங்கையின் மிகச்சரியான உருவ அமைப்பை காட்டாத போதும், முக்கிய குறிப்பான இடங்களை காட்டுகின்ற வரைபடமாக அமைந்தது. அதில் கண்டி, மகாவலி கங்கை, சிவனொளிபாதமலை (Adam’s Peak) உள்ளிட்ட இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கையின் வரைபடவியலில் உத்தியோகபூர்வமாக காத்திரமான பாத்திரத்தை ஆரம்பத்தில் ஆற்றியவர் டென்மார்க் இராணுவப் பொறியியலாளரான யான் கிறிஸ்டியான்ஸ் (Jan Christiaensz Toorzee). அவர் 1684-1708 காலப்பகுதியில் இலங்கையில் மிக முக்கியமான நில அளவையாளராக தீவிரமாக பணியாற்றிய ஒருவர். கான்ஸ்டபிள்-மேஜர் என்ற மிக உயர்ந்த பதவியை வகித்து வந்தவர். அவர் கொழும்பில் ஒரு நில அளவையாளராக பணியாற்ற வருமுன்னர் 1672இல் டென்மார்க்கின் கடற்படை, பீரங்கிப் படைகளில் உயர் பதவி வகித்தவர். 1750க்குப் பின்னர் அவர் வரைந்த இலங்கை, மதுரை கடற்கரையின் வரைபடம் இலங்கையின் வரைபடவியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். அவர் நில அளவைக் கடமைகளுக்கு அப்பால், கொழும்பின் திசாவ போன்ற பிற உயர் பதவிகளையும் வகித்தத்துடன் இலங்கைக்கான டச்சு அரசியல் கவுன்சிலின் உறுப்பினராகவும் இருந்தார். அவருக்கு இணையான ஒரு சிறந்த நிபுணத்துவம் கொண்ட ஒரு வரைபடவியலாளர் இல்லை என அன்றைய ஆளுநர் ரிஜ்க்லோஃப் வான் கோயன்ஸ் (Rijklof van Goen) தெரிவித்திருக்கிறார்.
இந்த நூலில் மாத்திரம் இலங்கையை Ceijlon, Celon, Seijlon, Eylant van Celon, Eijland Ceijlon, Eyland Ceylon, Grot Eijland Seijlon, Taprobane, Lankaun, Lankadiep Sri Lanka போன்ற பெயர்களில் குறிப்படப்படுகிற வரைபடங்களைக் கவனிக்கலாம்.
இந்த வரலாற்றுப் பெறுமதிமிக்க இந்த ஆவணங்கள் ஒல்லாந்திலிருந்தும், இன்னும் வேறு நாடுகளிலிருந்தும் கவனத்துக்குள்ளாக்கப்படாமல் விரவிக் கிடந்தவற்றில் இருந்து தேடி எடுத்து ஆய்வுக்குட்படுத்தி தொகுக்கப்பட்டதே இந்த நூல்.
![]() |
Map by Joris van Spilbergen 1602 |
இந்த வரைபடங்களுக்கு ஊடாக இலங்கையின் வரலாற்று வரைவியலின் நுட்பமான விபரங்களையும் திரட்டுவதற்கு இந்த நூல் வழிதிறக்கிறது எனலாம். மிகச் சின்ன எழுத்துக்களில் ஏராளமான வரலாற்றுத் தகவல்களையும் சேர்த்தே பல விடயங்களையும் பேசுகிறது இந்த நூல்.
இந்த பழைய வரைபடங்களில் இராணுவப பாதுகாப்பு, அரசியல் எல்லைகள், இடங்களின் பண்டைய பெயர்கள், மலைகள், காடுகள், நதிகள், குடியிருப்புகள், நீர்ப்பாசன அமைப்புகள், விவசாயம், கறுவா, தென்னை, நெல் தோட்டங்கள் என்பனவெல்லாம் இவற்றில் காணப்படுகின்றன.
சில வரைபடங்கள் யாரால் தயாரிக்கப்பட்டன என்கிற விபரங்களை கண்டெடுக்க முடியாத போதும் அவற்றின் முக்கியத்துவம் கருதி அவையும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றின் காலப்பகுதியையும் அண்ணளவாக கணித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கொழும்பு துறைமுகம், கொழும்பு நகர அமைப்பு, அங்கிருந்த ஆரம்பகால காலனித்துவ கட்டிடங்கள் என்பவற்றின் படங்கள் மிகவும் சுவாரசியமானவை. அன்றைய காலத்துக்கே நம்மை அழைத்துச் சென்று பண்டைய கொழும்பை கண் முன் நிறுத்துபவை.
இப்படி இந்த நூலின் சிறப்பை அதிகம் கூறிக்கொண்டு செல்லலாம். பல புதிய ஆய்வுகளுக்கு ஆதாரமாக அமையக்கூடிய ஒரு சிறந்த நூல் இது எனலாம்.
ஊழலுக்காக இலங்கை டச்சு ஆளுநருக்கு 1734இல் வழங்கப்பட்ட தண்டனை!
டச்சு ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனியின் விரிவான வரைபடம்” (Grote Atlas van de Verenigde Oost-Indische Compagnie) என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரைபடவியல் நூலில் 108 ஆம் பக்கத்தில் ஸ்டீபனஸ் வெர்ஸ்லூயிஸின் (Stephanus Versluys - 1694-1736) உருவப்படம் ஒன்று உள்ளது.
இந்த ஓவியம் 1947 ஆம் ஆண்டு வெர்ஸ்லூயிஸின் இன்றைய சந்ததியைச் சேர்ந்த ஜோஹன் வான் ரெய்கர்ஸ்பெர்க் வெர்ஸ்லூயிஸின் (Johan van Reigersberg Versluys) என்பவரின் தோட்டத்திலிருந்து டச்சு ராஜரீக விஞ்ஞானிகள் கழகத்துக்கு (KZGW) அன்பளிப்பாக க்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது. அப்படத்தின் பின்புறத்தில்
"ஸ்டீபனஸ் வெர்ஸ்லூய்ஸ், வயது 35, ஆண்டு 1729. ஆளுநரின் கைப்பிடி இலங்கையின் வரைபடத்தில் ஊன்றி வைத்திருப்பது காட்டப்பட்டுள்ளது. அவரின் பின்னணியில் ஆளுநர் மாளிகை காணப்படுகிறது” என்று குறிக்கப்பட்டிருக்கிறது.
ஸ்டீபனஸ் 1713 இல் டச்சு கிழக்கிந்திய கம்பனியில் இணைந்திருக்கிறார். வ.உ.சி.யில் சேர்ந்தார். வணிகராக ஒரு வாழ்க்கைக்குப் பிறகு, அவர் 1724 இல் அம்போன் என்று அன்று அழைக்கப்பட்ட இந்தோனேசியாவின் ஒரு பகுதிக்கு ஆளுநராக கடமையாற்றிவிட்டு பின்னர் 1729 இல் இலங்கையின் ஆளுநராக இலங்கைக்கு வந்து சேர்ந்தார். அதே வேளை டச்சு கிழக்கிந்திய கம்பனியின் தலைமையகமான பத்தாவியாவின் (ஜகார்த்தா) நிறைவேற்றுக் கவுன்சிலின் உறுப்பினராகவும் உயர் பதவி வகித்தார். ஆனால் அவர் ஐந்து வருடங்கள் கூட இலங்கையில் ஆளுநராக தாக்கு பிடிக்க முடியாமல் போனமைக்கு அவர் இலங்கையில் செய்த ஊழல்களே காரணம். லஞ்சமாக பரிசுகளைப் பெற்று அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என்பதே அவரின் மீது நிரூபிக்கப்பட்ட குற்றங்களாகும்.
1734 ஆம் ஆண்டில், அவர் ஊழல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, பதவியில் இருந்தும் அகற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. தண்டனை முடிவடைவதற்குள்ளேயே அவர் 1736 பெப்ரவரி 27அன்று பத்தாவியாவில் இறந்தார்.
இந்த உருவப்படத்தின் நகல் கொழும்பில் உள்ள இன்றைய ஜனாதிபதி மாளிகையிலும் வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...