Headlines News :
முகப்பு » , , , , » யாழ் நூலகத்திற்கு தீ வைத்தவரின் வாக்குமூலம்

யாழ் நூலகத்திற்கு தீ வைத்தவரின் வாக்குமூலம்


ருவன் எம் ஜயதுங்க என்கிற மருத்துவர் எழுதிய கட்டுரையொன்று யாழ் நூலக எரிப்பு பற்றிய மிகவும் முக்கியமான விபரங்களைக் கொண்டு வந்துள்ளது. ருவன் ஜயதுங்க ஒரு உளவியலாளர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். அவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட. உளவியல் சார்ந்த அவரின் சமீபத்திய சில நூல்கள் தற்போது பெரிதாக பேசப்பட்டு வருகின்றன.

இலங்கையின் அரசியல் தலைவர்கள், கலை, இலக்கியம், சமூகம் அனைத்தையும் உளவியல் நோக்கில் விசாரணை செய்பவர். “ரோஹன விஜேவீர பற்றிய உளவியல் பகுப்பாய்வு” என்கிற விரிவான கட்டுரையைப் போலவே அவர் 2002 ஆம் ஆண்டு “பிரபாகரன் பற்றிய உளவியல் பகுப்பாய்வு” (ප්‍රභාකරන් සාධකය පිලිබඳ මනෝවිද්‍යාත්මක විශ්ලේෂණයක්) என்கிற தலைப்பிலும் ஒரு தனி நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலில் யாழ் நூலக எரிப்பு பற்றிய இந்த வாக்குமூலத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

அவர் எழுதிய விபரங்களை அப்படியே தருகிறேன்.

-என்.சரவணன்

யாழ் நூலகத்தை எரிப்பு சம்பவம் பற்றி பல வருடங்களுக்குப் பிறகு அந்த கும்பலில் இருந்த ஒருவரின் மூலம் எனக்கு தெரியவந்த கதையை இங்கே எழுதுகிறேன். 

1994 ஆம் ஆண்டு நான் மாத்தளை வைத்தியசாலையில் பணிபுரிந்த போது இந்த நபரை சந்தித்தேன். அவர் என்னுடைய பராமரிப்பில் இருந்த நோயாளி. ஆனால் உடல் உபாதைகளுக்கு சில மருத்துவ ஆலோசனைகளும், மாற்று மருந்தும் கொடுத்ததால் அவர் என்னுடன் நட்பாக பழகினார். இவர் என்னிடம் சொன்ன கதையை சொல்கிறேன். அதன் உண்மை – பொய் பற்றிய நம்பகத்தன்மையை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன். (ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எட்வர்ட் குணவர்தன சமர்ப்பித்த 'உளவுத்துறை அறிக்கை'யின்படி, யாழ் நூலகம் எரிக்கப்பட்டமை புலிகள் அமைப்பின் செயல் என்றும். அந்நூலகத்தை சிங்களவர்களே எரித்தார்கள் என்று காட்டுவதன் மூலம் சர்வதேசத்தின் அனுதாபத்தைப் பெறுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது என்கிறார் அவர்.)

அவரின் தொழில் நிலையைப் பற்றி நான் இங்கே குறிப்பிடப் போவதில்லை. அது சில சர்ச்சைகளுக்கு வழி வகுக்கும் என்பதாலும் இந்த உண்மையை ஈழத்தமிழர்கள் தங்களின் பிரச்சார யுக்திகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாலும் தவிர்க்கிறேன். எவ்வாறாயினும் இச்சம்பவம் இடம்பெற்ற போது இந்த நபர் வடக்கில் இருந்தார்.

ஆசியாவிலேயே ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட மிகப் பெரிய நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண நூலகம் 1981 மே 31 அன்று தீக்கிரையாக்கப்பட்டது. யாழ்.அபிவிருத்திச் சபைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் கொழும்பில் இருந்து சென்ற குண்டர்கள் யாழ்ப்பாணத்தில் இந்த அட்டூழியங்களை ஏற்படுத்தினர். இந்த சம்பவம் இன நெருக்கடியில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

யாழ்ப்பாணத் தமிழர்களின் பெருமையைக் குலைக்கவே யாழ்ப்பாண நூலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இச்சம்பவத்துக்கு சில அரசியல்வாதிகளும் அனுசரணை வழங்கினர். இச்சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையில் ‘புலிப் பயங்கரவாதிகள் தமது தாக்குதல் திட்டங்களை வகுக்க இந்த நூலகத்தைத் தான் பயன்படுத்தி வருவதாகவும்; அதனால் அவர்கள் சந்திக்கும் இடத்தை அழிக்க வேண்டும் என்றும்’ கூறப்பட்டது. அத்தோடு, தமிழர் கூட்டணியின் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்ற இடத்தில், பணியில் இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயங்கரவாதக் குழுவொன்றினால் கொல்லப்பட்டமையினால், அமைதி சீர்குலைந்திருந்தது.

எரிக்கப்பட்ட பின்னர் யாழ் நூலகத்தின் தோற்றம்

இந்த நபர் தெரிவிக்கையில், அவருடன் இருந்த ஒரு குழுவினர் முதலில் பெற்றோல் மற்றும் மணல் நிரப்பப்பட்ட சாராய போத்தலில் திரியை அழுத்தி, அதில் தீ வைத்து எரித்து நூலகத்திற்குள் வீசியுள்ளனர். பாட்டிலில் சதுரமாக வெட்டப்பட்ட ரப்பர் செருப்பின் பகுதிகளையும் இணைக்கப்பட்டதன் மூலம் தீ தீவிரமாக எரிந்தது. இதற்கிடையில், ஒருவர் தீ... தீ... தீ... என்று சத்தம் போட்டார். அதே சமயம், முன் கூட்டியே தயாரான ஒரு குழுவினர், தீயை அணைக்கத் தண்ணீர் ஊற்றுவது போல்; பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் வாளிகளை தீயில் வீசினர். இதனால், தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

நூலகத்தில் இருந்த புத்தகங்கள் தீப்பிடித்து எரிந்ததுடன் சிறிது நேரத்தில் யாழ் நூலகம் எரிந்து நாசமானது. இருண்ட வானம்; சிவப்பு நிறமாக மாறியது. தீ அதிக வெப்பத்தை உருவாக்கியதால், தீ வைத்தவர்கள் சிறிது தூரம் சென்று இந்தக் காட்சியைப் பார்த்து ஆரவாரம் செய்தனர். இதற்கிடையில், யாழ்ப்பாண தமிழ் மக்கள் எரிந்துகொண்டிருக்கும் நூலகத்திற்கு அருகில் வந்து தங்கள் புலமை மரபின் ஆன்மா எரிந்துகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதனைக் கண்ட குற்றவாளிகள் மேலும் குதூகலமடைந்தனர். தீவைத்தவர்களில் சிலர் மதுப் போத்தல்களை எடுத்துச் சென்று குடித்தபடி இனவாதத்தைக் கக்குகின்ற வசைகளை வீசிக்கொண்டிருந்தனர். புலிகளுக்கு சவால்விட்டபடி கோசமெழுப்பிக்கொண்டிருந்தார்கள். பின்னர் போலீசார் வந்து மிகவும் மெதுவாக அவர்களைக் கலைத்தனர்.

மிகவும் அரிய கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டிருந்த யாழ் நூலகத்தை அழித்தது; கலாச்சார இனப்படுகொலை என்று பேராசிரியர் தயா சோமசுந்தரம் கூறினார். யாழ்ப்பாண நூலகத்தை அழிக்க இராணுவத்தினரின் ஆதரவு இருந்ததாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால், ஜெனரல் வஜிர விஜேரத்ன, கேணல் வைத்திய ரஞ்சன செனவிரத்ன போன்ற இராணுவ அதிகாரிகளும் யாழ் நூலகத்தின் வாசகர்களாக இருந்ததால் அவர்களும் அங்கே நிகழ்ந்ததை விசாரணை செய்தனர். இந்த குற்றத்திற்கு குண்டர்களை வழிநடத்திய அரசியல்வாதிகளே பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால், யாழ் நூலகத்துக்குத் தீ வைத்தவர்கள் குழுவில் இருந்த இந்த நபர், பின்னர் அதைப் பற்றிக் கவலைப்படத் தொடங்கினார். பதினாறு வயதிற்கு முன்பே அவருடைய ஒரே குழந்தையும் இறந்து விட்டது. இதனால் வாழ்க்கையின் மீது பற்று ஏற்பட்டு மதுவுக்கு அடிமையானார். நான் அவரை கடைசியாக 1995 ஏப்ரலில் சந்தித்தேன். அவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்று தெரியவில்லை.


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates