Headlines News :
முகப்பு » , , , » யாழ் நூலக எரிப்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பங்குண்டா? - என்.சரவணன்

யாழ் நூலக எரிப்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பங்குண்டா? - என்.சரவணன்

யாழ் நூலக எரிப்புக்கு யூன் 1ஆம் திகதியுடன் 42 ஆண்டுகள் நிறைவடைக்கின்றன.

யாழ் நூலக எரிப்பில் ரணிலுக்கும் தொடர்புண்டு என தோழர் நந்தன வீரரத்ன இரு நாட்களுக்கு முன்னர் என்னுடனான தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டபோது அதிர்ந்தேன். யாழ் நூலக எரிப்பு பற்றி இது வரை வெளிவந்த கட்டுரைகள், நூல்கள் பல என்னுடைய சேகரிப்பில் உள்ளன. அவை எவற்றிலும் இப்படி ஒரு விபரத்தைக் கண்டதில்லை. 

யாழ் நூலக எரிப்பு பற்றி பாராளுமன்றத்தில் 1981 யூன் 09, 10 ஆகிய இரண்டு நாட்கள் விவாதங்கள் நடந்திருக்கின்றன. இதுவரை தமிழில் வெளிவந்த இதைப்பற்றிய நூல்களிலோ, கட்டுரைகளிலோ முழுமையான அந்த விவாதங்களை கவனித்து எழுதவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த ஹன்சாட் பிரதியை கொழும்பு மியூசியத்தில் இருந்து நேற்று எடுத்தேன். 09திகதி விவாதம் முக்கியமான விபரங்களைப் பதிவு செய்கின்றன. யாழ் நூலக எரிப்பின் சூத்திரதாரிகளாக இதுவரை காமினி திசாநாயக்க, சிறில் மேத்தியூ ஆகிய பெயர்களே அடிபட்டிருக்கின்றன.

அதே யூன் மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிகழ்ந்த மாலை அமர்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.டீ.பண்டாரநாயக்க ஓரிடத்தில் குறிப்பிடும் தகவல்கள் முக்கியமானது. காமினி திசாநாயக்க, சிறில் மேத்தியூ, பெஸ்டஸ் பெரேரா ஆகியோருடன் ரணில் விக்கிரமசிங்கவும் தங்கியிருந்தார்கள் என்கிற விபரத்தைக் குறிப்பிடுகிறார். இந்த தகவலை அவர்கள் எவரும் மறுக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அந்த ஹன்சார்டின் பக்கமும் இங்கே இணைக்கபட்டிருக்கிறது.

“நேற்று யாழ்ப்பாணம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கட்சித் தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அறிவுறுத்தலின்படியே அது நடந்தது. யாழ்ப்பாணம் நாக விஹாராதிபதி தேரர், பிஷப் மற்றும் பொதுமக்கள் பலரையும் அங்கு சந்தித்தேன். அமைச்சர்களான சிறில்மதிவ், காமினி திஸாநாயக்க, பெஸ்டஸ் பெரேரா மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மாவட்ட சபைகள் தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் இருந்ததாக மதத் தலைவர்களும் மக்களும் தெரிவித்தனர். தேர்தல் பயிற்சி பெற்ற நூற்றைம்பது ஊழியர்களையும் 4 ஆம் திகதி காலை யாழ்.மாவட்டத்தை விட்டு வெளியேற இந்த அமைச்சர்கள் உத்தரவிட்டதையும் அறிந்தோம்"


ரணில் விக்கிரமசிங்கவுக்கும் யாழ் நூலக எரிப்புக்கும் உண்மையில் நேரடி தொடர்பு இருந்ததா இல்லையா என்பது எவருக்கும் தெரியாது என்கிற போதும்; இந்த விடயத்தில் ரணிலின் அன்றைய கண்டனங்களையோ, விமர்சனங்களையோ கூட காணக் கிடைப்பதில்லை. ஒப்பீட்டு ரீதியில் சிறில் மெத்தியூ, காமினி திசாநாயக்க ஆகியோரைப் போல ரணில் இனவாதியாக பேர் பெற்றதில்லை என்பது உண்மையே. ஆனால் யாழ் எரிப்பின் போது சூத்திரதாரிகளுடனான ரணிலின் பிரசன்னம் மேலதிகத் தேடலுக்கு உரியது.

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் எந்த விலை கொடுத்தேனும் வெற்றிபெறுவது என்கிற திட்டத்துடன் அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர்.ஜெயவர்தனவால் நேரடியாக அனுப்பப்பட்டவர்கள் தான் இந்த நான்கு அமைச்சர்களும். காணி அபிவிருத்தி மற்றும் மகாவலி அமைச்சர் காமினி திஸாநாயக்க, கல்வி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, மீன்பிடி அமைச்சர் பெஸ்டஸ் பெரேரா, கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அமைச்சர் சிரில் மெத்யூ ஆகியோரே அவர்கள்.


யாழ்ப்பாணத்தில் உள்ள கிங்ஸ் ரிசார்ட்டில் அவர்கள் தங்கியிருந்தனர். யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றிய பேயாட்டத்திற்காக குருநாகலில் இருந்து குண்டர்களை யாழ்ப்பாணத்திற்கு பஸ்களில் அழைத்துச் சென்றனர். 39 பஸ்கள் நிரப்பப்பட்டு, அவற்றை போலீசாரின் பந்தோபஸ்துடன் கொண்டுபோய் சேர்த்தனர். மே 31, 1981 கொடுமைகளானது 1983 யூலை படுகொலைகளுக்கான முன்னோட்டமான ஒத்திகை தான்.

அன்று யாழ்ப்பாணத்தில் நூலகமும், யாழ்ப்பாண எம்.பிக்களின் வீடுகளும், கடைகளும், பத்திரிகை அலுவலகங்களும் எரித்து சாம்பலாக்கப்பட்டன. இந்த நிகழ்வுகள் நடந்து 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 2022இல் தென்னிலங்கை அமைச்சர்களின் வீடுகளும் எரிக்கப்பட்டன என்பது தான் வரலாற்றின் அதிசயம். அதுமட்டுமன்றி ரணில் விக்கிரமசிங்கவின் வீடும் அவரின் பெறுமதிமிக்க நூலகமும் எரிக்கப்பட்டது. இன்று அந்த நால்வரில் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே உயிருடன் இருக்கிறார். பிரதான சூத்திரதாரி காமினி திசாநாயக்க 1994ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த தற்கொலைத்தாக்குதலில் சிதறிப்போனார்.

"ஒட்டுமொத்த தமிழர்களையும் இந்த நாட்டிலிருந்து விரட்டிவிடுவதற்கு வழியுண்டெனில் அதை விரும்புகிறேன். ஆனால் அதை செய்வது எப்படி"
இந்த கொடுமைகளைப் புரிந்து ஆறு ஆண்டுகளின் பின்னர் அதாவது இந்திய இலங்கை ஒப்பந்தக் காலப்பகுதியில் காமினி திசாநாயக்க அரச ஊடகத்துக்கு வழங்கிய ஒரு நேர்காணலில் இப்படித் தான் குறிப்பிட்டார். கீழ்வரும் நேர்காணலில் 5.30 நிமிடத்தில் அந்த வார்த்தைகளைக் கவனியுங்கள்.


தகவல் தந்துதவிய கொழும்பு மியூசியம் நூலகர் சந்தரெசிக்கு நன்றிகள்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates