Headlines News :
முகப்பு » » அமைச்சரின் உணவுக்கும் நிதி ஒதுக்கப்படுகிறதா? - ச.பிரசன்னா

அமைச்சரின் உணவுக்கும் நிதி ஒதுக்கப்படுகிறதா? - ச.பிரசன்னா


மலையக பெருந்தோட்ட மக்களின் மிக நீண்ட கனவுகளில் தனிவீட்டுத் திட்டமும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது. அதன் அடிப்படையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் முதற்கட்டமாக 4000 தனி வீடுகள் நிர்மாணம் ஆரம்பிக்கப்பட்டு முடிவடையும் தறுவாயில் இருக்கின்ற நிலையில் இரண்டாம் கட்டமாக 10000 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஜுலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மேற்படி அமைச்சின் மூலம் இந்திய வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் அவற்றினை பெருவாரியாக பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியமே நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அவ்வாறு முன்னெடுக்கப்படும் தனிவீட்டுத் திட்டங்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக பல முறை சுட்டிக் காட்டிய போதும், இதுவரையும் அவற்றை திருத்துவதற்கோ அல்லது அவை தொடர்பாக ஆராய்வதற்கோ எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 25 வீட்டுத் தொகுதிகளைக் கொண்ட பசும்பொன் வீடமைப்புத்திட்டம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதில் குறிப்பாக வீதி அபிவிருத்தி மற்றும் மின்சாரம் என்பவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை விடவும் மேலதிகமாக பல ஆயிரங்களை இங்கு வசிப்பவர்கள் சொந்தமாக செலவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மலையக பெருந்தோட்டங்களில் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது. மேலதிகமாக கட்டணங்கள் பயனாளிகளிடம் அறவிடப்படுவதில்லை.

பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் கட்டப்பட்ட 25 வீடுகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கோரப்பட்ட நிலையில் மின்சார விநியோகத்துக்காக 704, 086.20 ரூபா ஒதுக்கப்பட்டு செலவு செய்யப்பட்டிருந்த போதும் பயனாளிகளுக்கு ஒரு வருடம் கடந்தும் மின்சாரம் வழங்கப்படாமல் வீட்டுத்திட்ட பயனாளிகள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் 18,915.16 ரூபாவினை மின்சார சபைக்கு செலுத்தி (25து18,915.16 = 472,879.00) மின்சாரத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர். அதே போலவே பாதை அமைப்புக்காக ஒதுக்கப்பட்ட 604, 316.98 ரூபாவும் செலவளிக்கப்பட்டுள்ள நிலையில் பாதியளவிலேயே பாதைக்கும் கொங்றீட் இடப்பட்டிருக்கிறது.

இவ்வாறு வீட்டுத் திட்டத்தில் முறையற்ற வகையிலான செலவீனங்கள் காணப்படுவதைப் போல ஒரு வீட்டினை கட்டுவதற்கான செலவில், விளம்பரம், ஹெலிகொப்டர் பயணம், அமைச்சருக்கான உணவு செலவு, நொறுக்குத் தீனி என்பவற்றுக்கான செலவு செய்யப்படுவது ஆச்சரியத்தைத் தருவதாக அமைந்திருக்கின்றது. மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்குகின்ற பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரிய போது, MHNV/2/8/3/2/RTI (2019) கடிதத் தலைப்பின் மூலம் நிதியத்தினால் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம் (2014 - 2019) தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தது.

இதில் முக்கியமாக 2014 ஆம் ஆண்டு கணக்கு அறிக்கையில், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பான கூட்டத்துக்கு (நீர்+ பகல் உணவு+ நொறுக்குத் தீனி+ அமைச்சரின் பகல் உணவு+ 600+ 20845+ 19575) என 164,733.94 ரூபாவும் ஏனைய செலவுகளாக (ப்ளக்ஸ்) 208, 000 ரூபாவும் வெளிக்கள பயணத்துக்கான பெற்றோல் செலவாக 32,635 ரூபாவும் ஹெலிகொப்டர் பயணத்துக்காக 759,126 ரூபாவும் என மொத்தமாக 1,164,494.94 ரூபா செலவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தொகையானது பசும்பொன் வீடமைப்புத் திட்டத்தில் ஒரு வீட்டுக்காக ஒதுக்கப்படும் தொகையில் இரு மடங்காகக் காணப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் வீணான நிதி விரயோகத்தையே வெளிப்படுத்துகின்றன.

பெருந்தோட்டங்களில் தற்போது பல இடங்களில் தனிவீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படுவதை மறுக்க முடியாது. அதேவேளை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் அவர்கள் பயன் பெறுகின்றார்களா என்பது சந்தேகத்துக்கிடமானதாகவே காணப்படுகின்றது. 2015/05/10 ஆம் திகதி அக்கரப்பத்தனை பிறேமோர் தோட்டத்தின் 7 ஆம் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் முற்றாக சேதமடைந்த 8 வீடுகளின் உரிமையாளர்களுக்கு இன்றுவரையும் மாற்று வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களிலேயே இன்றும் வசித்து வருகின்றனர். 29/12/2018 ஆம் திகதி போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று வரையும் வீடுகள் அமைக்க நடவடிக்கையெடுக்கப்படவில்லை.

ஆரம்பத்தில் மலையகப் பெருந்தோட்டங்களில் வீட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் போது அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களை முதன்மைப்படுத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும், தற்போது ஆதரவாளர்களுக்கும், கட்சிக்கு செல்வாக்குள்ள பகுதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டே வீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அமைச்சுக் கூட்டங்களுக்கு மொத்த பரிவாரங்களும் கொழும்புக்கு வந்து விடுகின்றன. ஒரு வீட்டுத்திட்டம் தொடர்பான கூட்டத்துக்கு செலவாகும் தொகையில் இரு வீடுகளை கட்டமுடியும் என்ற நிலை இருக்கும் போது எதற்கு இந்த ஆரவாரம்.

தற்போதைய நிலையில் நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, காலி, கேகாலை, மொனராகலை, மாத்தளை, களுத்துறை, மாத்தறை மாவட்டங்களில் 943,390 பெருந்தோட்ட மக்கள் வசித்து வருவதுடன் இவர்களுக்கு மொத்தமாக 186,298 வீடுகள் தேவைப்படுவதாக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் செயலாற்று அறிக்கை - 2018 இல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே பெருந்தோட்ட மக்களின் தேவையைக் கருத்திற் கொண்டு, நிதி துஷ்பிரயோகம் இடம்பெறாத வகையில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதே அனைவரினதும் கோரிக்கை.

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates