Headlines News :
முகப்பு » , , » முகநூலை ஆட்டுவிக்கும் ராஜபக்சவாதிகள் - என்.சரவணன்

முகநூலை ஆட்டுவிக்கும் ராஜபக்சவாதிகள் - என்.சரவணன்


உலகில் அதிகளவு பயன்பாட்டு சமூக ஊடகமாக முகநூல் வளர்ந்து கோலோச்சுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். சமீபத்தேய எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 2.7 பில்லியன் பாவனையார்களை கொண்டிருக்கிறது. உலகின் மொத்த சனத்தொகையே 7.7 பில்லியன் தான்.

தனிநபர்கள் மட்டுமல்ல வர்த்தக நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மட்டுமன்றி அரசாங்க நிறுவனங்கள் கூட முக நூல் பக்கங்களை வைத்திருக்கும் கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கின்றன. முகநூல் என்பது ஒரு அடையாளமாகவும், தகவல் பரப்பும்/பகிரும் தளமாகவும், பிரச்சார ஊடகமாகாவும், விளம்பர உத்திக்காகவும் இன்று அதிகம் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

நோமோபோபியாவுக்கு (நோ மொபைல் போன் போபியா - Nomophobia -"no-mobile-phone phobia”) உளப் பீதி நோய்க்கு பெருமளவு ஆளாகியிருப்பவர்கள் முகநூல் பாவனையாளர்களே என்கிற எச்சரிக்கையையும் உலகம் முழுவதும் விடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதை இன்னொரு விதமாக கூறினால் “முகநூல்” இன்று உலகை ஆண்டு கொண்டிருக்கிறது. உலகைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துகொண்டிருகிறது. கருத்தாதிக்கத்தை தன்னகத்தே கொண்டு இயங்கிக்கொண்டிருக்கிறது. முகநூலின் தயவின்றி அரசியல் பணிகளையோ, வர்த்தகப் பணிகளையோ முன்னெடுக்க முடியாது என்கிற நிலை வளர்ந்துவிட்டிருகிறது. முகநூலின் பலமின்றி எதிர்த் தரப்பை எதிர்கொள்ள முடியாது என்கிற நிலை நிறுவப்பட்டிருக்கிறது. மரபு ஊடகங்களை விட இன்றைய அரசியல் சக்திகள் தமது பிரச்சாரத்துக்கும், எதிரிகளை எதிர்கொள்வதற்கும் இத்தகைய சமூக வலைத்தளங்களையே நம்பியிருக்கின்றன.

இந்த சூழலை வைத்து சமகால இலங்கை அரசியலில் நேர்ந்திருக்கிற குறிப்பிட்ட சில சம்பவங்களை இங்கு பார்க்கலாம்.

தேர்தல் காலம் வந்திவிட்டால் சமூக வலைத்தளங்களைக் கையாள்வதற்காக தனியான கைதேர்ந்த ஒரு குழுவை வாடகைக்கு அமர்த்துவது நீவீனகால  தேர்தல் வேலைத்திட்டத்தின் இன்றிமையாத ஒரு உத்தியாக ஆகியிருக்கிறது. இதற்கென்றே நிபுணத்துவ சேவையை வழங்கவென பல வர்த்தக ஏஜென்சி நிறுவனங்கள் (Political Campaign Management Companies) உலகம் முழுவதும் உருவாகியிருக்கின்றன. அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றி, இந்தியாவில் நரேந்திர மோடியின் வெற்றி என்பன சமீபத்தேய சிறந்த உதாரணங்கள்.

அதாவது இன்னொரு அர்த்தத்தில் சொல்லப்போனால் பணம் படைத்தவர்கள் மட்டுமே தேர்தல்களில் அதிகமாக வெல்லும் வாய்ப்பை உருவாக்கிவிட்டுள்ளன. வசதியற்ற அடித்தட்டு வர்க்க - நலிந்தவர்களால் இன்றைய தேர்தல்களில் ஈடுகொடுப்பது என்பது அவ்வளவு இலகுவானதல்ல. அதுமட்டுமின்றி எந்த புனைவுகளையும் இதன் மூலம் சாதாரண மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும் என்பதோடு எந்த உண்மையையும் இருட்டடிப்பு செய்யும் வலிமை இந்த வகை ஏஜென்சிகளுக்கு உண்டு.

இந்த தகவல் தொழில் நுட்ப ஏஜென்சிகள் எப்படி இயங்குகின்றன என்பது தனியாக விளக்கப்படவேண்டிய கட்டுரை.

2018 ஒக்டோபர் 26 இல் மைத்திரிபால-மகிந்த மேற்கொண்ட அரசியல் சதிமுயற்சியைத் தோற்கடித்ததில் சமூக வலைத்தளங்களுக்கு முக்கிய பத்திரம் உண்டு. சமூக வலைத்தளங்களே மக்களின் எதிர்ப்பையும், கண்டனங்களையும் பதிவு செய்தன.

இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக வன்மத்துடன் அதிகம் கதைத்திருப்பவராக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவைக் குறிப்படலாம்.

அதுபோல ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விபரங்களை; தான் சமூகவலைத்தளங்களுக்கு ஊடகத் தான் அறிந்துகொண்டதாக கூறியிருந்த ஜனாதிபதி சிறிசேன; முதலில் செய்ததே சமூக வலைத்தளங்களின் மீதான தடையை ஏற்படுத்தியது தான்.

2015 தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோற்றதும் அவரின் வாசஸ் தளமாக பயன்படுத்தப்பட்டிருந்த அலரி மாளிகையின் கீழ்தளத்தில் ஒரு தனிப் பெரிய மண்டபம் நிறைய கணினிகள் வைத்து இயக்கப்பட்டிருந்ததை ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன. மிகப் பெரிய அளவில் உள்ளூர் வெளியூர் வலைப்பின்னலுடன் அவை தொடர்புபடுத்தப்பட்டிருந்ததையும் கண்டுபிடித்திருந்தனர்.

கோத்தபாயவின் நுட்பம்
இப்போது ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்பட்டிருக்கும் ராஜசபக்ச குடும்பத் தரப்பு வேட்பாளரான கோத்தபாய அணியினர் ஏற்கெனவே இப்படியான சமூக வலைத்தள உள்ளூர், வெளியூர் ஏஜென்சிகளை தீவிரமாக களமிறக்கியிருப்பதை பலராலும் இப்போதே உணர முடிகிறது.

Colombo Telegraph என்கிற இணையத்தளத்தை நடத்திவருபவர் உவிந்து குருகுலசூரிய. ராஜபக்ச ஆட்சி காலத்தில் ஊடகவியலாளர்களின் மீதான வேட்டையில் இருந்து நாட்டைவிட்டு தப்பியோடி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களில் ஒருவர் உவிந்து. உவிந்துவின் இணையத்தளம் இலங்கையர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம். இலங்கையின் பல முக்கிய எழுத்தாளர்கள் பலரும் எழுதும் இணையத்தளம் அது. பல உரையாடல்களையும் நிகழ்த்திவருவது அதன் சிறப்பு.
கடந்த ஓகஸ்ட் 11ஆம் திகதி சுகததாச உள்ளரங்கில் நிகழ்த்தப்பட்ட கோலாகலமான நிகழ்வில் வைத்து ராஜபக்ஸ அணியின் வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டிருந்ததை அறிவோம். அந்த நிகழ்வில் பிரமாண்டமான மேடைப் பின்னணியாக ஒரு வீட்டின் செட் ஒன்றை போட்டிருந்தார்கள். அந்த வீடு அப்படியே ராஜபக்சவின் “மெதமூலன” வீட்டின் சாயலிலேயே செய்யப்பட்டிருந்ததை உவிந்து தனது முகநூலில் அந்தப் படத்துடன் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவைத் தொடர்ந்து அவரின் முகநூல் மூன்று நாட்களுக்கு முடக்கப்படுவதாக முகநூல் அறிவித்தது. இந்தப் பதிவின் கீழ் பின்னூட்டங்களைப் பதிவு செய்தவர்கள் சாமான்யர்கள் அல்லர். தயான் ஜயதிலக்க மற்றும் வேறு பல அரசியல் பிரமுகர்களும் கூட பதிவுகளை இட்டிருந்தார்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி குறித்து முகநூலில் தொடர்ச்சியாக வெளிவந்த அதிருப்திகளின் காரணமாக ஆத்திரமுற்றிருந்த ஜனாதிபதி; முகநூல் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை இலங்கைக்கு அழைத்து அழுத்தம் கொடுத்திருந்தார். முகநூலின் போக்கு இனங்களுக்கிடையிலான முறுகலை ஏற்படுத்தக் கூடியது என்றும் இந்த நிலை தொடர்ந்தால் முகநூலை இலங்கையில் தடை செய்வதாகவும் ஜனாதிபதியின் அதிகாரிகள் அவர்களுக்குத் தெரிவித்திருந்தனர். 

சிங்களம் தெரிந்தவர்களை தாம் பணிக்கு அமர்த்தி இந்த நிலைமையை சரி செய்வதாக முகநூல் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதன்படி அயர்லாந்தில் கற்று பெல்பாஸ்டில் இருந்த (Belfast) சிங்களக் குழுவொன்றை முகநூல் நிறுவனம் பணிக்கு அமர்த்தியது. அவ்வாறு அமர்த்தப்பட்டவர்கள் சிங்கள இனவாத போக்கு கொண்டோர் என்று அறியப்படுகிறது. கடந்த காலங்களில் முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களின் போது இந்தக் குழு இயங்கியவிதம் குறித்து ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

உவிந்துவின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டதற்கு முகநூலால் காட்டப்பட்ட காரணம் மேற்படி “ராஜபக்சவின் மெதமூலன வீடு” பற்றியதால் அல்ல. அம்பேத்கர்  எழுதிய “சாதியொழிப்பு” (Annihilation Of Caste) என்கிற நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு பற்றிய திறனாய்வு Colombo Telegraphஇல் 2017 ஏப்ரல் 21 இல் வெளியாகியிருந்தது. அந்த கட்டுரையை முகநூலிலும் அவர் பகிர்ந்திருந்தார். அந்நூலின் அட்டைப்படத்தில் மார்புகளை மறைக்காத இரு தலித் பெண்களின் புகைப்படம் இருந்தது. இதைத் தான் முகநூலுக்கு முறையிட்டிருகின்றனர். கோத்தபாயவின் மேற்படி நிகழ்வு தொடங்குவதற்கு சொற்ப நேரத்துக்கு முன் தான் உவிந்து “மெதமூலன வீடு” பற்றிய பதிவை வெளியிட்டிருக்கிறார். உவிந்துவின் வேறு பதிவுகள் மீதான வேறு எந்த முறைப்பாடும் செய்ய முடியாத நிலையில்; அம்பேத்கரின் நூல் அட்டைப்படத்தைப் பற்றிய முறைப்பாடு வேகமாக செய்யப்பட்டிருக்கிறது.

அந்தளவு விழிப்பாக பின் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள் ராஜபக்ச தரப்பு கூலிக்கு அமர்த்தியிருக்கும் நெட்டிசன்கள் (Netizens). இப்படி ஒரு முடக்கத்தை செய்ய நூற்றுக்கணக்கான  முறைப்பாடுகள் அவசியம். அப்படி என்றால் எத்தனை விழிப்பாகவும், வேகமாகவும், பரந்த பல வலைப்பின்னல்களுடனும், நுட்பமாகவும் திட்டமிட்டவகையில் இவர்கள் இயங்குமளவுக்கு வலிமையாக இருக்கவேண்டும்.

மக்கள் எதைத் தெரிந்துகொள்ள வேண்டும், எதைத் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் பலம் இப்பேர்பட்டவர்களிடமே இருக்கிறது.

பெயரை மாற்றிய ஞானசாரர்
இதற்கு இன்னொரு உதாரணத்தையும் குறிப்பிடவேண்டும். கடந்த யூலை 28 ஆம் திகதியன்று பொதுபலசேனாவின் செயலாளர் டிலந்த விதானகே ஒரு ஊடக சந்திப்பை நடத்தினார். அதில் அவர் இனிமேல் ஞானசார தேரரின் பெயரை மாற்றி அழைக்கப்படப்போவதாக அறிவித்தார். அதன்படி இனிமேல் “அப்பே ஹாமுதுருவோ” (எங்கள் ஹாமதுரு - Ape Hamduruwoo) என்றே அழைக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

இதற்கான காரணம் முகநூலில் ஞானசார தேரரின் பெயரில் வரும் அனைத்தையும் முடக்கியிருப்பதை அறியமுடிகிறது என்றும் இதனால் அவரின் செயற்திட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்தபோது
பொதுபல சேனாவின் முக்கிய பிரச்சார ஆயுதமாக கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக முகநூலே இருந்துவந்திருக்கிறது. இடையில் அவ்வியக்கத்தின் முகநூல் பக்கம் பல தடவைகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. ஆனாலும் புதுப்புது பெயர்களில் மீண்டும் மீண்டும் முகநூல் கணக்கை ஆரம்பித்து இயங்கி வந்தார்கள். முகநூலை அவர்கள் இழக்கத் தயாரில்லை. தொடர்ந்தும் தமது இனவாத வேலைத்திட்டத்திற்கு முகநூல் அவசியம். இப்போது முகநூல் மேற்கொண்டுள்ள முடக்கத்தை எதிர்கொள்ள இப்படியொரு உபாயத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். அது மட்டுமன்றி ஞானசாரரின் படத்தைக் கூட பதிவுசெய்யப்பட்ட சில நொடிகளில் காணாமல் ஆக்குவதற்கும், அதிகப்படியானவர்களிடம் சேராத வகையிலும் முகநூலின் “படிமுறைத் தீர்வு” (Algorithm) என்கிற தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய தொழில்நுட்பம் சமூக நீதிக்கு ஆதரவாக பயன்படுத்துவது வரவேற்கத்தக்கதே. ஆனால் மாறாக பணம் கொடுப்பவருக்கு விலை போகின்ற, மக்கள் விரோத சக்திகளுக்கு இசைந்து கொடுக்கின்ற மக்கள் விரோத நிறுவனமாக ஆகியிருப்பது தான் மாபெரும் ஆபத்து. உலகை ஆட்டுவிப்பதில் முகநூலின் பங்கு குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.

கயவர்களிடமும், பணக்காரர்களிடமும், ஆளும் வர்க்கத்திடமும், ஆதிக்க சக்திகளிடமுமே இவை இன்று  இருக்கிறது. இப்படி பலம் படைத்தவர்களிடம் இலகுவாக விலைபோகக்கூடிய; லாபத்தை மட்டுமே ஒற்றைக் குறியாகக் கொண்டிருக்கும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களால் இன்று சமூக நீதி குழிதோண்டிப் புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நன்றி - தமிழர் தளம்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates