Headlines News :
முகப்பு » , » 50 வருடமாக சிலர் செய்யாததை நாம் 3 வருடங்களில் செய்துள்ளோம் - அமைச்சர் திகாம்பரம்

50 வருடமாக சிலர் செய்யாததை நாம் 3 வருடங்களில் செய்துள்ளோம் - அமைச்சர் திகாம்பரம்


50 வருட காலமாக ஆட்சி செய்கிறோம் என்று கூறுபவர்கள் செய்த அபிவிருத்தித்திட்டங்களை முதலில் பட்டியலிடுங்கள் அடுத்ததாக மூன்று வருடங்கள் அமைச்சராக இருந்து நான் முன்னெடுத்த திட்டங்களை பெயரிடுங்கள் எது மக்களுக்கு உரிமைகளைப்பெற்றுக்கொடுத்திருக்கிறது என்பதை தீர்மானித்து அதன் பின்னர் முடிவெடுங்கள்.இது தான் நான் மக்களிடம் கேட்டுக்கொள்வது. வருடக்கணக்காக பரம்பரை அரசியல் செய்தவர்கள் மாளிகைகளை கட்டி சுகபோகம் அனுபவித்து இந்தியாவிலும் போய் பல தலைமுறைகளுக்கு சொத்துச் சேர்த்து விட்டார்கள் ஆனால் இன்னும் எமது மக்கள் லயன் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றனர். நான் மூன்று வருடங்களில் இவ்வளவு செய்ய முடியும் என்றால் ஏன் அவர்களுக்கு முடியாது? இதை ஒவ்வொரு தொழிலாளியும் தன்னிடமே கேட்டுக்கொள்வார்களாக என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். இந்திய நிதியுதவியுடன் பெருந்தோட்டப்பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் வீடமைப்புத்திட்டத்தில் 404 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று பூண்டுலோயாவில் இடம்பெறுகிறது. மேற்படி வீட்டுத்திட்டம் மற்றும் ஏனைய மலையக அபிவிருத்தி குறித்து அமைச்சர் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய நேர்காணல்.

கேள்வி: இந்திய வீடமைப்புத்திட்டம் தொடர்பில் ஆரம்பத்தில் இ.தொ.கா தானே பேச்சுக்களை முன்னெடுத்திருந்தது?

பதில்: நான் இல்லை என்று கூறவில்லையே? ஆனால் அதை செயற்படுத்தினார்களா இல்லையே எங்கே போனது அவர்களின் திறமை? மேலும் அவர்கள் 4 ஆயிரம் வீடுகள் தொடர்பிலேயே கதைத்திருந்தனர் நாம் இப்போது மேலதிகமாக 10 ஆயிரம் வீடுகளை கேட்டுப்பெற்றிருக்கிறோம். 4 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என இந்தியா அறிவித்து நான்கு வருடங்களில் ஒரு வீட்டுக்கு ஒரு செங்கல்லை கூட இவர்களால் வைக்க முடியவில்லையே? அந்நேரம் அமைச்சர்களாகக் கூட இருந்தனர். பலமிக்க அமைச்சரவை அந்தஸ்த்தை வைத்துக்கொண்டும் எவருக்கும் ஒன்றும் செய்யமுடியவில்லை. என்ன காரணம்? தொழிலாளர்களுக்கு படம் காட்டுவதற்காக ஒரு சில இடங்களில் பெக்ககோ எந்திரம் மூலம் நிலம் சுத்தப்படுத்தப்பட்டது. இப்போது அவ்விடம் காடு மன்டிக் கிடக்கின்றது. எல்லாவற்றிலும் இலாபம் பார்ப்பதே சிலரின் அரசியலாக உள்ளது. அதை விட தொழிலாளர்கள் தொடர்ந்தும் லயங்களிலேயே தமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற அதிகார மமதை சிலரிடம் இன்னும் இருக்கின்றது. ஆனால் நாம் 100 நாள் வேலைத்திட்டத்திலேயே அதை ஆரம்பித்துவிட்டோம்.. 4 ஆயிரம் வீடுகளின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதே வேளை மேலதிக 10 ஆயிரம் வீடுகள் எங்கு அமைக்கப்படல் வேண்டும் என்பதை தெரிவு செய்து நிலங்களையும் பெற்றுள்ளோம். தோட்ட நிர்வாகங்கள் எமக்கு ஒத்துழைப்பை தந்து வருகின்றன. அதில் 404 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று டன்சினன் தோட்டத்தில் இடம்பெறுகிறது. இத்திட்டத்தை இந்திய அரசுடன் பேசி குறுகிய காலத்தில் எவ்வாறு நாம் முன்னெடுத்தோம் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து நாமே ஆரம்பித்தோம் என்ற கதைகளை எல்லாம் அவர்களின் பேஸ் புக் ஆதரவாளர்கள் நம்பக்கூடும் ஆனால் தொழிலாளர்கள் நம்பத்தயாராக இல்லை.

கேள்வி: அப்படியானால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தோட்ட மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்கிறீர்களா?

பதில்: நான் அப்படிக் கூறவில்லையே? இன்னும் எவ்வளவோ செய்திருக்கலாம் என்கிறேன். ஆரம்பத்தில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் அவர் செய்த பணிகளை குறை கூற முடியாது. அவரது காலகட்டத்திற்குப்பிறகு மலையகத்தில் அடிதடி கலாசாரம் அராஜகம் உருவாகி விட்டன. கட்சிக்காக பல தியாகங்களை செய்தவர்களும் அடித்து விரட்டப்பட்டனர். அவர்கள் மீது அபாண்டமான பழி சுமத்தப்பட்டது. அந்த வழியையே இன்று கட்சியின் தொண்டர்களும் பின்பற்றுகின்றனர். இது சரியா? எதற்கெடுத்தாலம் அடி தடி சண்டை என்பது தான் பாரம்பரிய கட்சியின் வரலாற்றுச் சாதனையா? தொழிலாளர்கள் யோசித்துப்பார்க்க வேண்டும். எல்லாமே நாம் தான் செய்தோம் என்றால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட லயன் குடியிருப்புகள் அப்படியே இருக்கின்றன. தோட்டங்களுக்குகொங்ரீட் பாதை அமைத்தது தான் அபிவிருத்தியா? தொழிலாளர்களுக்குத்தான் ஒன்றும் செய்யவில்லை கல்வித்துறையையாவது விட்டார்களா? அவர்களின் காலில் விழுந்து வணங்குபவர்கள் தான் அதிபர்கள் தேர்தல் காலங்களில் கட்சிக்கு வேலை செய்பவர்கள் தான் நகர பாடசாலைகளில் இருக்க முடியும்.. இவை தான் சாதனையா என்று கேட்கிறேன்.

கேள்வி: மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்படுகின்றதே?

பதில்: வீடுகளே அமைக்கப்படாத காலத்தில் மௌனமாக இருந்தவர்கள் இப்போது எனது அமைச்சினாலும் இந்திய அரசாங்கத்தின் நிதியினாலும் வீடுகளை அமைத்துக்கொண்டு செல்லும் போது வயிற்றெரிச்சலில் புலம்புகின்றனர்.

இந்தப் புலம்பல்களை பேஸ் புக்கிலும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இதையெல்லாம் ஏன் கடந்த காலங்களில் உங்கள் தலைவர்களிடம் கேட்கவில்லை என்று தான் நான் அவர்களிடமே கேட்கிறேன். அந்த தைரியம் இல்லாததால் தானே இன்னும் லயன் வீடுகளிலேயே இருக்கின்றீர்கள். தொழிலாளர் தேசிய சங்கத்தில் ஜனநாயகம் உள்ளது. யாரும் என்னிடம் கேள்வி கேட்கலாம். நான் எந்தத் தொழிலாளியையும் இது வரை அடித்ததில்லை. ஏசியதில்லை ஏனென்றால் அந்த வர்க்கத்திலிருந்து வந்தவர்களுக்குத்தான் வலி தெரியும். தொழிலாளிகளை வைத்து சொத்து சேர்ப்பவர்களுக்கு அது புரியாது. ஆகவே சில அரைவேக்காடுகளின் விமர்சனங்களுக்கெல்லாம் பதில் கூறிக்கொண்டிருந்தால் என்னால் மக்களுக்குச் சேவையாற்ற முடியாது போகும் அதை தவிர்க்கிறேன்.

கேள்வி: அமரர் சந்திரசேகரனின் காலத்தில் தானே தனி வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது அது குறித்து ஒன்றும் கூறமாட்டீர்களா?

பதில்: இது நல்ல கேள்வி அவர் தான் ஆரம்பித்தார் அதே வேளை இப்போது அதன் தொடர்ச்சியாக வீடுகளை அமைக்கும் திட்டத்தை நான் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் அவர் தான் காரணம்.

எப்படி என்கின்றீர்களா? அவரால் தான் நான் இன்று அரசியலில் இருக்கின்றேன். அதற்குக்காரணம் மலையக மக்கள் முன்னணியில் நிலவிய ஜனநாயகத்தன்மை. சாதாரண திகாம்பரம் என்ற மனினுக்கும் அரசியலில் இடம் கொடுத்தவர் அமரர் சந்திரசேகரன். அக்கட்சியின் மூலமே நான் அரசியலில் பிரவேசித்தேன்.

அதை என்றும் மறக்க மாட்டேன். பாருங்கள் தலைவர் சந்திரசேகரன் முன்பு எங்கிருந்தாரோ அக்கட்சியினால் இந்த மக்களுக்கு நடக்கப்போவது ஒன்றுமில்லை என்று தானே பிரிந்து வந்தார்? பின்பு தனிக்கட்சி ஆரம்பித்து அமைச்சராகி தனி வீட்டுத்திட்டத்தின் பிதாமகனாக இன்று பேசப்படுகிறார். அதற்கும் அந்த காலத்திலேயே அவரை தூற்றியவர்கள் விமர்சித்தவர்கள் இன்று என்னை விமர்சிப்பது ஆச்சரியமில்லையே? காய்த்த மரத்துக்கு தான் கல்லடி விழும் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

கேள்வி: உங்கள் திட்டங்களுக்கு மலையகத்தில் உள்ள வரவேற்பு எப்படியாக இருக்கின்றது?

பதில்: தொழிலாளர்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் நான் கூற வேண்டியது ஒன்று தான். எனக்கு வாக்களித்து அமைச்சராக்கியுள்ளீர்கள் அதற்கு நான் செய்ய வேண்டிய கடமையை பொறுப்பாக செய்து வருகிறேன். எனது 3 வருட காலத்தில் நான் செய்தவற்றை பட்டியலிடுங்கள் அதே போன்று பாரம்பரிய கட்சி என லேபல் குத்திக்கொள்பவர்கள் செய்ததையும் பட்டியலிடுங்கள். முக்கியத்துவத்தின் அடிப்படையில் ஆதரவை தாருங்கள். நாம் எதிர்கால மலையகத்தை கருத்திற்கொண்டு செயற்படுகிறோம். மலையகத்தில் சர்வாதிகாரத்தை இல்லாதொழித்துள்ளோம். மத்திய அரசிடம் இருந்து எந்த வித தடைகளுமின்றி நிதி மற்றும் ஏனைய விடயங்களைப் பெற மலையக அதிகார சபையை உருவாக்கியுள்ளோம். இனி அடுத்து வரும் தலைமுறையினர் அதன் பிரதிபலனை பெறுவர். புதிய பிரதேச சபைகளை உருவாக்கியதன் மூலம் அப்பிரதேச சபைகளில் கடமையாற்றுவதற்கு உத்தியோகத்தர்களை அடையாளம் கண்டுள்ளோம். அடுத்து பிரதேச செயலகங்களும் உருவாக உள்ளன.

கேள்வி:தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்க கூட்டமைப்பில் எத்தனை தொழிற்சங்கங்கள் உள்ளன? அவை எல்லாவற்றினதும் அங்கத்தவர்களை சேர்த்தாலும் அதை விட தனிப்பெரும் கட்சியான நாம் அதிக அங்கத்தவர்களைக்கொண்டிருக்கிறோம். அதை எம்மால் நிரூபிக்கவும் முடியும் ஆனால் நாம் உள்ளே வந்து விட்டால் எமது அணுகுமுறை வேறு மாதிரியாக இருக்கும். தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை நாம் பெற்றுக்கொடுத்து விட்டால் அவர்களின் அரசியல் அன்றோடு முடிவுக்கு வந்து விடும் என்ற பயத்தினால் எம்மை கண்டு நடுங்குகின்றனர். ஆனால் அதற்காக எமக்கு வாக்களித்தவர்களின் நிலைமையை கண்டு சும்மா இருக்கப்போவதில்லை. நிச்சயமாக இவர்கள் கேட்கும் தொகையை கம்பனிகள் வழங்காது. அவர்களுக்கு அழுத்தம் தரும் வகையில் நாம் செயற்பட போகின்றோமே ஒழிய பேச்சு வார்த்தையை குழப்பவில்லை. எமக்கும் தொழிலாளர்களின் பலம் உள்ளது என்பதை கம்பனிகள் மட்டுமல்ல நாடும் அறிய வேண்டும். ஆகவே தான் நாம் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கப்போகின்றோம். அதைத் தவிர்க்க முடியாது.அது எமது உரிமையும் கூட.

கேள்வி: 7 பேர்ச் காணியில் அமைக்கப்பட்டு வரும் சில வீடுகள் காற்றினால் சேதமடைந்துள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளதே?

பதில்: லயன் குடியிருப்புகளில் வாழ்க்கையை கொண்டு நடத்தியவர்களுக்கு இப்போது ௭ பேர்ச் காணி உரித்துடன் வீடு கிடைத்துள்ளது. எமது மலையகப்பிரதேசத்தின் காலநிலை எல்லோருக்கும் புரியும். கடுங்காற்று மழையினால் நாம் அமைத்த வீட்டின் கூரைகள் மட்டுமா அடித்துச்செல்லப்பட்டன என்று கேட்கிறேன். இதற்கு முன்னர் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் காற்றே வீசவில்லையா? குடியிருப்புகள் சேதமடையவில்லையா? இதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு சில அரைவேக்காடுகள் முக நூலில் செய்தி போடுகின்றன. சில ஊடகங்களுக்கு இதை செய்தியாகப்போட்டால் தான் வியாபாரம் நடக்கும் என்பது தலை விதி. நான் என்ன சொல்ல இருக்கின்றது? 7 பேர்ச் காணியில் கடன் சலுகை அடிப்படையில் அமைக்கப்பட்டு வரும் வீடுகளுக்கு இரும்பிலான கூரைகளையா போட முடியும்? அல்லது இதற்கு முன் அப்படி வீடுகள் அமைக்கப்பட்டனவா? இப்படி எல்லாவற்றுக்கும் குற்றம் குறை சொல்பவர்கள் என்ன செய்தார்கள் என்பதைத்தான் நான் கேட்க விரும்புகிறேன் ஆகவே பட்டியலிடுங்கள் அவ்வளவு தான்.

கேள்வி: அடுத்த 2 வருடங்களில் எத்தனை வீடுகள் தான் அமைக்க முடியும்?

பதில்: 50 ஆயிரமோ ஒரு இலட்சமோ ஒரு இலக்கை வைத்துக்கொண்டு தான் பயணிக்க முடியும். மில்லேனிய இலக்குகள் போன்று குறித்த காலத்தில் அதை அடைய எடுக்கப்படும் முயற்சிகளே இப்போதைய தேவை.அதை அடைந்திருக்கின்றோமா இல்லையா அடுத்த என்ன செய்ய வேண்டும் என்பது தான் ஒவ்வொருவரினதும் வாழ்க்கை இலட்சியமாக இருக்கின்றது. நாம் இப்போது தான் ஆரம்பித்துள்ளோம் அதற்கிடையில் ஐந்து வருடங்களில் எப்படி 50 ஆயிரம் வீடுகள் கட்ட முடியும் என்று கேட்பவர்கள் 50 ஆண்டு அரசியல் செய்தவர்கள் எத்தனை வீடுகளை கட்டினார்கள் என்று தான் சற்றுக்கேட்டுப்பாருங்களேன்.

நேர்காணல்:சிவலிங்கம் சிவகுமாரன்

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates