Headlines News :
முகப்பு » , , , » மலையகத் தேசியத்தை உயிர்ப்புடன் இயக்கும் மலையக கவிதைகள் - மல்லியப்புசந்தி திலகர்

மலையகத் தேசியத்தை உயிர்ப்புடன் இயக்கும் மலையக கவிதைகள் - மல்லியப்புசந்தி திலகர்

மலையக ஆய்வரங்கம் - 13


மலையக கவிதை இலக்கிய செல்நெறியும் மலையக தேசியமும் எனும் தலைப்பில் மலையக கவிதை இலக்கிய செல்நெறியானது எவ்வாறு மலையக தேசிய கருத்துருவாக்கத்தில் பங்களிப்பு செய்துள்ளது என்பதாக மல்லியப்பு சந்தி திலகரின் ஆய்வுரை அமைந்திருந்தது. ஒவ்வொரு கால கட்டத்திற்குமான உதாரண கவிதைகளை மேற்கோள்காட்டி ஆற்றப்பட்ட உரையின் கட்டுரை வடிவம் நீட்சி கருதி கவிதைகள் நீங்களாக சாராம்சமாக இங்கே தரப்படுகின்றது.

மலையக இலக்கிய செல்நெறியை எடுத்துக்கொண்டால் பொதுவாக அது பயணித்த பாதை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சமூக பிரக்ஞையை வெளிப்படுத்தவதாக அமைந்துள்ளமையை அவதானிக்கலாம். மலையகக் கவிதை இலக்கியத்திலும் இதனை தரிசிக்க முடியும்.  மலையகக் கவிதை இலக்கிய செல்நெறி பற்றி உரையாடுகின்றபோது, அந்த சமூகத்தின் புலப்பெயர்வு, வாழ்வதார கட்டமைவு, அரசியல் பங்கேற்பு, குடியுரிமை பறிப்பு, நாடுகடத்தல், தம்மை மலையக மக்களாக நிறுவதல் முதலான படிநிலைகளைக் கருத்தில் கொண்டு,  ஆரம்பத்தில் ஐந்து தசாப்தங்களையும் பின்னர் மூன்று அல்லது இரண்டு தசாப்தங்களையும் கொண்டதான ஆறு காலகட்டங்களை வகுத்துக்கொண்டு நோக்கலாம். அந்தவகையில் மலையக இலக்கிய செல்நெறி காலகட்டத்தை பின்வருமாறு அமைத்துக்கொண்டு உரைக்குள் செல்வது பொருத்தப்பாடுடையது.

1850கள் முதல் 1920 வரையான காலம்
1920 லிருந்து -1948ல் இலங்கை சுதந்திரமடையும் வரையான காலம்
1948 சுதந்திரமடைந்தது முதல் 1960 களின் நடுப்பகுதிவரையான காலம்.
 1965 இன் நடுப்பகுதி முதல் 1985 வரையான காலம்
1985 முதல் 2005 வரையான காலம்
2005க்குப்பின் இன்றுவரை (2015)

1850கள் முதல் 1920 வரையான காலம்

1820களில் இருந்தே இந்தியாவின் தமிழகத்தின் தென் மவாட்டங்களில் இருந்து அந்நிய பெருந்தோட்ட முதலீடுகளுக்காகன உடல் உழைப்புக்காக அழைத்துவரப்பட்ட அல்லது வந்து சேர்ந்த மக்கள் கூட்டமே இன்று மலையக மக்களாக பரிணமித்திருக்கிறார்கள். தென்னிந்தியாவில் நிலவிய சாதிய மற்றும் பொருளாதார காரணிகள், பஞ்சம் பிழைப்பதற்காகவும் சாதிய ஒடுக்குமுறையில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்வதற்காகவும் இவர்களை இலங்கை நோக்கி புலப்பெயர்வதற்கு உந்துதல் அளித்துள்ளது. அந்த வகையில்முதலாவது புலப்பெயர்வுக்கு உள்ளான தமிழ்ச் சமூகமாக மலையக மக்களே அமைந்துவிடுகின்றனர்.

மலையகக் கவிதைப்பாரம்பரியத்தில் நாட்டார் பாடல்களின் சாயல் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்கின்ற குற்றச்சாட்டு அல்லது சிறப்புப்பண்புக்கு காரணம்  அதன் வேர் அதுவாகவே அமைந்துவிடுவதனாலாகும்;. முழுக்க முழுக்க உடலுழைப்பை விற்று வருவாய்தேடி வாழ்க்கையில் சுபீட்சம் காண நாடுகடந்து, கடல் கடந்து, காடுகடந்து அவர்கள் வந்து சேர்ந்த அந்த பயணத்தொடக்கத்திலேயே தமது தோள்களில் கனவுகளையும் மனதினில் தமது வாய் மொழிக்கலைகளையுமே சுமந்து வந்துள்ளனர். அந்த வகையில் முதலாவது புலம்பெயர் இலக்கியமாகவும் இந்த நாட்டார் பாடல்கள் அமைந்துவிடுகின்றன.

முதல் காலகட்டமான 1850கள் முதல் 1920 வரையான காலத்தில் மலையகக் கவிதை இலக்கியம்  அந்த மக்களின் வாய்மொழி இலக்கியமாகவும் அதேநேரம் அந்த மக்களின் கூலி நிலைமையை பாடும் பாடலாகவும்  சிறப்புற்று இருப்பதையும் அவர்கள் இந்திய வம்சாவளியாக அடையாளப் படுத்தப்படுவதையும்  அவதானிக்கலாம்.

1920 -1948ல் சுதந்திரமடையும் வரையான காலப்பகுதி:

1920களில் பின்னரே மலையகக் கவிதை முயற்சிகள் மலையக பிரதேசங்களில் இருந்தே பரவலாக வரத்தொடங்கின. அதுவும் இந்தியாவில் இருந்து வருகைதரும் இந்த மக்கள் சார்ந்த இன்னுமிரு செயற்பாட்டாளர்களோடு ஆரம்பிக்கிறது எனலாம். அவர்கள் நடேசய்யர் தம்பதிகள். வாய்மொழி இலக்கிய மரபாக இருந்த மலையகக் கவிதை இலக்கியமானது எழுத்து வடிவத்துக்கு மாறி வீறுபெற்றக் காலம் இது என கொள்ளலாம்.

கோ.நடேசய்யர் அவர்கள் ஒரு பத்திரிகையாளராக இலங்கைவந்து பின்னர் மலையக மக்களோடு தொழிற்சங்கம், இலக்கியம், அரசியல் என இரண்டரக் கலந்தவர். அன்றைய மலையக மக்களின் நிலை கண்டு இந்த தம்பதியர் பல சமூக விழிப்புணர்வு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அதில் பிரதானமானது துண்டு பிரசுரங்கள் மூலமாக மலையக மண்ணுக்கேயுரிய  பாடல்களை அச்சிட்டு,வெளஜயிட்டமை. தொழிலாளர்களாகவும் பாமரர்களாகவும் இருந்த இந்த மக்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த இவர்கள் இலக்கியத்தை கருவியாகக் கையாண்டுள்ளனர்.

நடேசய்யர்- மீனாட்சியம்மையினர் செயற்பட்ட இந்த காலம் கூலிகளாக வந்தவர்களின் அடையாளம் 'தொழிலாளர்கள்' என்ற நிலைக்கு மாறுகின்ற காலமாகவும் அதேநேரம் இந்திய வம்சாவளி வந்த இந்த தொழிலாளர் மக்கள் இலங்கை மண்ணுக்கு உரியவர்கள்என்பதை இலக்கிய ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பதிவு செய்துசென்ற காலம் எனக் கொள்ளலாம்.

(1948) சுதந்திரமடைந்தது முதல் 1960 களின் நடுப்பகுதிவரையான காலம்.

கல்விப் புலமையோடு இலக்கிய உலகுக்குள் பிரவேசித்த சி.வி.வேலுப்பிள்ளை மற்றும் கே.கணேஷ் ஆகியோர் இலங்கை சுதந்திமடைந்த காலப்பகுதியை ஊடறுத்து வந்தவர்கள். ஆதலால் வாய்மொழி பாரம்பரியத்தில் இருந்து  தாம் பெற்ற அனுபவத்தை நவீன இலக்கிய வடிவங்களில் உலாவவிட்டவர்கள். இவர்களது ஆங்கிலப்புலமை மலையக இலக்கிய சூழலை புதிய செல்நெறிக்கு இட்டுச்சென்றது. இக்காலகட்ட பாடுபொருள் எல்லாமே தொழிலாளர்களின் வேலைச்சுமைகளையும், அவர்களது வாழ்விட வசதியின்மைகளையும், அவர்கள் மீதான சுரண்டல்களையும் பாடும் அவலச்சுவை கொண்டவை என்பதனை மறுப்பதற்கில்லை. என்றாலும் எம்மக்கள் இந்த துயரங்களில் இருந்து மீண்டு எழுவர் எனும் நம்பிக்கை இந்த காலகட்ட படைப்புக்களில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கால கட்டத்தில் குடியுரிமை பறிக்கப்பட்ட மக்கள் தங்களை இனவாத மற்றும் ஒடுக்குமறை அரசியலுக்கு எதிராகவும் தங்களை மலை நாட்டவர்களாக, மலையக மக்களாக  நிலை நிறுத்திக்கொள்வதற்குமான கவிதைகளை படைத்துள்ளமையை அவதானிக்கலாம்.

1965 இன் நடுப்பகுதி முதல் 1985 வரையான காலப்பகுதி :

இன்னுமொரு சமூக அவலத்தைப் பிரதானப்படுத்தி மலையக கவிதைகள் படைக்கப்பட்ட காலம் இது . 1964ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் மலையக மக்கள் நாடு கடத்தப்பட்டமையும் அதனால் மலையக மக்களின் குடும்பங்கள் சிதறடிக்கப்பட்டு மலையக தேசிய மக்கள் குடும்ப மட்டத்திலேயெ கூறுபோட்ட சோக வரலாற்றை பதிவு செய்கிறது. 1990 களில் மீதமிருந்த மக்களுக்கு இலங்கைப் பிரஸாவரிமை வழங்கப்படும் வரை மலையக கவிதை இலக்கிய படைப்புக்களில் அதன் தாக்கத்தை தரிசக்கலாம். வெலிமடைக்குமரன், அல்அஸ10மத், அரு சிவானந்தன்  போன்ற கவிஞர்களின் படைப்புக்களில் இந்தியாவுக்கு (தாயகம்) திரும்பவதை மறுதலித்தும் இலங்கையையே நமது நாடாகவும். மலையகத்தையே தமது தேசமாகவும் கொள்ள வேண்டும் எனும் முனைப்பை எழுதிய கவிதைகளைத் தரிசிக்கலாம்.......

இந்த கால கட்டத்தை மலையகக் கவிதைகள் மரபில் இருந்து புதுக்கவிதைக்கு மாறிய காலமாகவும் தாம் நாடு கடத்தப்பட்ட அவலத்தையும் அதற்கு எதிராக குரல் கொடுத்த கவிதைப்படைப்புகளையும் இலங்கைiயையே மலையக மக்கள் தமது நாடாகொள்வதற்கு பிரயத்தனப்பட்ட கால கட்டமாகப் பார்க்கலாம்.

1985 முதல் 2005 வரையான காலம் :

1977க்குப்பின் மலையக அரசியலில் வெரூன்றத் தோன்றிய அரசியல் கலசாரம் (அமைச்சுப்பதவிசார் அரசியல் தந்திரொபாயம்) மற்றும் ஏற்கனவே இருந்தவந்த தொழிற்சங்க செயற்பாடுகள் அதன் அரசியல் என்பவற்றை விமர்சிக்கும் பொக்கு உக்கிரமடைந்த காலகட்டம் என கொள்ளலாம். இன்றுரையான காலம் வரை இந்த அரசியல் விமர்சனகவிதைப்பாங்கு தொடர்ந்துகொண்டிருக்கிறது. முன்வந்த காலகட்டங்களில் மலையக மக்களுக்கு எதிராக வெளியில் (அரச, இனத்துவ, முதலாளித்தவ) இருந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கவிதை எழுதிய அல்லது இலக்கியம் படைத்த நிலைமை மாறி மலையகச் சமூகம் தனக்கான எதிரியாக தன்னையே (தமது அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களை) அடையாளம் கண்டுகொண்டு பொது எதிரியை மறந்து தமக்குள் நாமே முட்டிமொதிக்கொள்ளும் ஒரு நிமையை மலையகத்திற்குள் தொற்றுவித்தஇலக்கியம் காலகட்டமாக இதனைக்கொள்ளலாம். இக்காலப்பகுதியில் மலையக மக்கிளிடம் இருந்து பறிக்கப்பட்ட குடியுரிமை வாக்குரிமை வடிவில் திருப்பி வழங்கப்படுகின்ற காலமாகவும் அமைகிறது.


2005க்குப்பின் இன்றுவரையான  (2015) காலம்

மலையகத்தில் வெளிப்படும் கவிதைகளிலும் முன்னைய காலப்பகுpயில் நிலவிய அதே தொழிற்சங்க அரசியல் தலைமைகளை விமர்சிக்கும் போக்கினைக்காணலாம். ஆனால் இந்தகாலப் பகுதிக்குரியவர்களின் கவிதை வீச்சு நவீன இலக்கியச் சூழலில் புதுக்கவிதை பெற்றுவரும் மாற்றத்தையும் கட்டமைப்பையும் சொல்லாட்சியையும் உள்வாங்கியதாக அமைவது மலையகக் கவிதை இயக்கத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்வதாக உள்ளது.

எவ்வாறெனினும்  மலையகத்தில் எண்ணிக்கையில் குறைந்த கவிஞர்கள் அதிக எண்ணிக்கையிலான கவிதைகளை எழுதிய காலம் போய் அதிக எண்ணிக்கையிலான  கவிஞர்கள் குறைந்த அளவான கவிதைகளை எழுதிவரும் ஒரு கவிதை இலக்கிய சூழலே தற்போது நிலவுவது உணரப்பட்டுள்ளது. இலக்கியமும் மாற்றங்களும் எப்பொதும் நிகழ்ந்து கொண்டிருப்பவை என்கிறதன் அடிப்படையில் மலையக கவிதை இலக்கியம் பல்வெறு காலகட்டங்களிலும் பல்வேறு பரிணாமங்களினதும் பதிவாக அமைந்துள்ளது. 

அந்தவகையில் மேலே எடுத்துக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு காலகட்டத்திலும் முறையே இந்திய வம்சாவளி கூலிகள், இலங்கை நாட்டுக்குரிய தோட்டத்தொழிலாளர்கள், குடியுரிமை பறிக்கப்படட்டபின் மலைநாட்டு  மக்கள், பின்னர் மலையக மக்கள் அந்த மலையகத்தை நிறுவுவதற்கான உயிர்த்தியாகங்கள் போராட்டங்கள், உள்ளக அரசியலாளர்களின் காட்டிக்கொடுப்புகள், இந்திய (தாயகப்) புறக்கணிப்பு, இலங்கையில் மலையகம் ஒரு தேசியம் என்பதற்கான பற்றுதல் என தனது படைப்புகள் ஊடாக தொடர்ச்சியாக மலையகக் கவிதை இலக்கியமானது மலையகத் தேசியத்தை  உயிர்ப்புடன்  இயக்கிக்கொண்டிருக்கிறது எனலாம்.  

நன்றி சூரியகாந்தி 


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates