Headlines News :
முகப்பு » , , , » "கொட்டாஞ்சேனைக் கலவரம்" (1915 கண்டி கலகம்) –11 -என்.சரவணன்

"கொட்டாஞ்சேனைக் கலவரம்" (1915 கண்டி கலகம்) –11 -என்.சரவணன்


கேணல் ஒல்கொட் இலங்கையில் பௌத்தம் தலையோங்குவதற்கும் உலக அளவில் அதன் அந்தஸ்தைப் பரப்புவதற்கும் பெரும் பாத்திரம் வகித்தார். இவரது காலத்தில் நிகழ்ந்த துரித மாற்றங்கள் பௌத்தத்தை பலப்படுத்தின. ஒல்கொட் பற்றி ஸ்ரீ சுமங்கல தேரர் குறிப்பிடுகையில் அவர் இலங்கை வந்த “இரண்டாவது அசோகன்” என்கிறார்.

பௌத்த பாடசாலை நிதியத்தை ஆரம்பித்து அந்நிதியைக்கொண்டு பல பௌத்த பாடசாலைகளை உருவாக்கினார் ஒல்கொட். சிங்களவர்களின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம் 1877இல் முதல் தடவையாக பாலியில் இருந்து சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட. அதுபோல சூளவம்சம் 1879 இல் மொழிபெயர்க்கப்பட்டது. அதாவது சிங்கள பௌத்த சாமான்யர்கள் தமது வரலாற்றுப் பெருமிதங்களை முதல் தடவையாக தமக்குரிய மொழியில் முழுமையாக அறிந்துகொள்ள வாய்ப்பு திறக்கிறது.

ஒல்கொட் இலங்கைக்கு 37 தடவைகள் பயணம் செய்திருக்கிறார். அவருடன் வந்த பல வெள்ளை இனத்தவர்களையும் சேர்த்துக்கொண்டு பௌத்த பிரச்சார – கிறிஸ்தவ எதிர்ப்பு பிரச்சார பயணங்களை நாடுமுழுவதும் மேற்கொண்டார். இந்த கூட்டங்களால் கவரப்பட்ட பல பௌத்தர்கள்; கிறிஸ்தவர் ஒருவரே அவரது சொந்த மதத்தை விட்டுவிட்டு பௌத்த மதத்துக்கு மாறி இத்தனை பெரிய பணிகளை முன்னெடுப்பதால் கிறிஸ்தவ மதத்தைவிட தமது மதம் உன்னதமானது என்று இறுமாப்பு கொண்டனர். கிறிஸ்தவ எதிர்ப்பு சஞ்சிகைகள், பிரசுரங்கள் பல இந்த காலப்பகுதியில் வெளியிடப்பட்டன. இதன் வளர்ச்சியே 1883இல் கொட்டாஞ்சேனைக் கலவரத்துக்கு வித்திட்டது.

கொட்டாஞ்சேனைக் கலவரம்
இலங்கையின் முதல் மதக்கலவரம் என்று அறியப்படும் இந்த கலவரத்தை ஆங்கிலேய ஆட்சி கால அரச பதிவுகள் “Kotahena Riots” என்றே குறிப்பிடுகின்றன. இதனை விசாரிப்பதற்காக ஆங்கிலேய அரசினால் அமைக்கப்பட்ட குழு “The Kotahena Riots” என்கிற ஒரு அறிக்கையையும் வெளியிட்டது. இது இலங்கையின் முதலாவது முதலாவது மதக் கலவரம் என்றே அழைக்கப்படுகிறது.

ஏற்கெனவே வளர்ச்சியடைந்துவந்த கிறிஸ்தவ எதிர்ப்பு நடவடிக்கைகளால் கத்தோலிக்கர்களுக்கு  இடையில் விரிசல் அதிகரித்திருந்ததுடன், பரஸ்பர சந்தேக உணர்வும், ஆங்காங்கு முறுகல் நிலையும் வளரத் தொடங்கின. 

மீகெட்டுவத்தே குணானந்த தேரர் கொட்டாஞ்சேனை தீபதுத்தாமாறாமயவில் தலைமை மதகுருவாக இருந்தார். அந்த விகாரையில் உள்ள புத்தர் சிலைக்கு கண்களை வைப்பதற்கான வைபவத்தை 1883 பெப்ரவரி 12 அன்று நடத்த திட்டமிட்டிருந்தார். பெப்ரவரி 8 தொடக்கம் மார்ச் 31 வரை அது தொடர்பான மத நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்தி இரண்டு மாதங்களுக்கு பௌத்த உணர்வுடன் கொழும்பை தக்க வைத்திருக்க திட்டமிடப்பட்டிருந்தது. கத்தோலிக்கர்கள் தமது குருத்து ஞாயிறு காலமும் இதே காலத்தில் இருந்ததால் பௌத்தர்களின் இந்த முடிவு தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒரு நிகழ்வாக சந்தேகித்தார்கள்.

இந்த நிகழ்வு தொடர்பில் பிரதான அரச வைத்திய அதிகாரி ஒரு அறிக்கையை அனுப்பி வைத்திருந்தார். அதன்படி கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பரவி வரும் நோயொன்றின் காரணமாக இந்த வைபவத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. மார்ச் 31 வரை நிறுத்தி வைக்கப்பதற்கு குணானந்த தேரர் ஒப்புக்கொண்டபோதும் இந்த செய்தியின் பின்னணியில் சதி இருப்பதாக சந்தேகித்தார்.

இதற்கு முன்னரும் 1872இல் கொச்சிக்கடையிலும் 1880இல் மாதம்பிட்டியிலும் பௌத்த பெரஹரவின் போது கல் எறிந்து குழப்ப முயற்சித்ததையும் முகத்துவாரத்தில் பாதையை மறித்த சம்பவத்தையும் அவர் நினைவுபடுத்தினார். சிலைகளுக்கு கண் வைக்கும் வைபவத்துக்கு ஊர்வலமாக வந்து பூஜைகளை செய்யும்படி பெளத்தர்களைக் கேட்டுக்கொண்ட குணானந்த ஹிமி அதற்கான போலிஸ் ஒப்புதலையும் பெற்றிருந்தார். 

அன்றைய மிசனரி திருத்தூதர் ஜே.மாசிலாமணி இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு 6ஆம் திகதியே சில எச்சரிக்கையை எழுத்து மூலம் செய்திருந்தார்.  ஈஸ்டர் பண்டிகைக் காலத்தில் பெரிய வெள்ளி மற்றும் குருத்து ஞாயிறு ஆகிய தினங்களில் பௌத்த பெரஹரவுக்கு அனுமதி வழங்குவது முறுகலை ஏற்படுத்தும் என்றும் சில அசம்பாவிதங்கள் நடக்கவிருப்பதாக கதைகள் உலவுவதாகவும், வழமைபோல ஈஸ்டர் காலத்து புனித ஊர்வலத்தை இடையூறு இல்லாமல் நடத்திமுடிக்க ஒத்துழைக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடித விபரங்கள் “The Kotahena Riots” அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறன.

பெரிய வெள்ளிக்கு முன்னர் நடந்த பெரஹர நிகழ்வுகளுக்கு போலீசார் பந்தோபஸ்து வழங்கியிருக்கிறார்கள். சில கத்தோலிக்கர்கள் கல்லெறிந்தார்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் கைதும் செய்யப்பட்டிருகிறார்கள். இதனைத் தொடர்ந்து பெரிய வெள்ளியன்று நடத்தப்படவிருந்த புனித ஊர்வலத்துக்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டது. மார்ச் 25 குருத்து ஞாயிறன்று மதியம் 12 வரை தேவாலய பூஜைகள் முடிந்த பின்னர் பெரஹர நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

இந்த சமயத்தில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டிருந்தன. இலங்கையில் எந்த மூலையிலும் எந்த நேரத்திலும் பௌத்த பெரஹர நடத்துவதற்கான அனுமதியை பிரித்தானிய இராணியிடமிருந்து குணானந்த தேரர் பெற்று வந்திருப்பதாகவும் நாடு முழுதும் வதந்தி பரப்பப்பட்டதுடன் அது பத்திரிகையிலும் வெளிவந்திருக்கிறது.

விகாரைக்கும் புனித லூசியாஸ் தேவாலயத்திற்கும் ஏறத்தாழ ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரமே உள்ளது.

மார்ச் 25  இரவு பொலிஸ் பந்தோபஸ்துடன் பெரஹர பொரல்லையிலிருந்தும் கொள்ளுப்பிட்டியிலிருந்தும் வந்த ஊர்வலம் மருதானையில் இணைந்துகொண்டு கொட்டாஞ்சேனை தீபதுத்தமாறாமய விகாரையை நோக்கி நகர்ந்தது. இதனை தடுத்து நிறுத்த கத்தோலிக்க தரப்பு மேற்கொண்ட சகல முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஊர்வலத்தில் இருந்துள்ளனர்.

குணானந்த தேரர் இந்த பெரஹரவில் பல வித ஆட்டங்களை சேர்த்துக்கொண்டார். தாள வாத்திய அணி, சாட்டையடி, புலியாட்டம், மரபான பேயாட்டம், தீ விளையாட்டு, வில் அம்பு தரித்தவர்கள், பெரிய உருவப்பொம்மை என பலதும் சேர்த்துக்கொள்ளப்பட்டன. 




இதற்கிடையில் பெரிய உருவப்பொம்மை குறித்து மின்னல் வேகத்தில் ஒரு வதந்தி பரவியது. அதாவது ஒரு குரங்கொன்றை சிலுவையில் அறைந்து யேசுநாதரை நிந்திக்கும் வகையில் ஊர்வலமாக கொண்டு வருகிறார்கள் என்பதே அது. அன்னை மரியாளைக் கேலி செய்யும் பொம்மைகள் உள்ளன என்றும் பிழையான வதந்தி பரப்பட்டிருந்தது. அதுபோல மறுபக்கம் பெரஹரவைத் தாக்குவதற்காக கொட்டாஞ்சேனையில் கத்தோலிக்கர்கள் தயாராக நிற்கிறார்கள் என்று ஊர்வலத்தில் ஒரு புரளி கிளப்பிவிடப்பட்டிருந்தது. பெரஹரவில் இருந்து பெண்களும் சிறுவர்களும் அகற்றப்பட்டார்கள். ஊர்வலத்தில் கற்களையும். பொல்லுகளையும் தாங்கியவர்கள் இடையில் இணைந்து கொண்டார்கள்.

பெரஹர கொட்டாஞ்சேனையை நெருங்கியபோது திடீரென்று புனித லூசியாஸ் ஆலயத்தின் மணிகள் பலமாக அடிக்கத் தொடங்கியதும் அனைவரும் குழம்பிப்போனார்கள். பலர் தேவாலயத்தை சூழ்ந்தனர். அந்த மணியை யார் எதற்காக அடித்தார்கள் என்பது பற்றி போலீசாரால் இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அனால் அந்த ஒலி ஒரு பெரிய கலவரத்தையே உண்டு பண்ணியிருந்தது. பரஸ்பர சந்தேகங்கள், ஊகங்கள், வதந்திகள், பய உணர்ச்சி, தூண்டுதல், எதிர்பாரா திடீர் சம்பவங்கள் எல்லாம் சேர்ந்து உணர்ச்சிமேலோங்கிய நிலையில் ஆளையால் கொலைவெறிகொண்டு தாக்கிக்கொண்டனர். கட்டுப்படுத்துவதர்க்காக அழைக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் வந்து சேர்ந்தபோது அனைத்தும் ஓய்ந்திருந்தது.

இந்த கலவரத்தில் பௌத்த தரப்பை சேர்ந்த ஜூவன் நைதே என்பவர் கொல்லப்பட்டார். 12 பேர் உட்பட 30 பேர் மோசமான காயத்துக்கு உள்ளானார்கள். அதே நாள் பலங்கொட, கண்டி போன்ற இடங்களிலும் அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன. மார்ச் 27 அன்று வனவாசல எனும் இடத்திலிருந்து ஆயுதங்கள் சகிதம் ஊர்வலமாக வந்த பௌத்த கும்பலை பேலியகொடையில் வைத்து இராணுவம் விரட்டியடிக்காவிட்டால் இந்த கலவரம் மேலும் மோசமான நிலையை எட்டியிருக்கும்.

சம்பவம் நடந்து அடுத்தடுத்த நாட்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்த சிறு தேவாலயங்கள் தீயிடப்பட்டன. அதுபோல பௌத்த பெரஹரக்களும் குழப்பப்பட்டன. தீபதுத்தமாறாமய விகாரையை கொளுத்தி குணானந்த தேரரை கொல்வதற்காக நீர்கொழும்பிலிருந்து 3000 பேர் வந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற வதந்தியும் வேகமாக பரப்பப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை பௌத்தர்களுக்கு சாதகமாக இருக்கவில்லை என்று கொதிப்படைந்தது பௌத்த தரப்பு. இந்த சம்பவத்துக்காக எவரும் கைது செய்யப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை.

இதனால் கடுப்படைந்த பௌத்த தரப்பு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அடிபணிந்தது பிரித்தானிய ஆட்சி. பௌத்த தரப்பு மேலும் பலமடைவதற்கு அது வித்திட்டதுடன் “பௌத்த மறுமலர்ச்சி” அடுத்த பாய்ச்சலை அடைந்தது. அது என்ன என்பதை அடுத்த வாரம் பாப்போம்.

உசாத்துணையாக பயன்பட்டவை
  1. The Kotahena Riots – Commission report (Frank Luker Government printer, Ceylon - 1883)
  2. ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
  3. ශ්‍රීමත් අනගාරික ධර්මපාල චරිතාපදානය : නත්ථි මේ සරණං අඤ්ඤං (මට අන් සරණක් නැත) - ආර්. ජේ.ද සිල්වා, (Dayawansa Jayakody & company - 2013)
  4. පන්සලේ විප්ලවය Victor ivan – (Ravaya publication – 2006)
  5. මොහොට්ටිවත්තේ ශ්‍රී ගුණානන්ද අපදානය -  විමල් අභයසුන්දර (Godage publication, 1994)
  6. கொட்டாஞ்சேனைக் கலவரம் 1883 : இலங்கையின் முதலாவது மதக் கலவரம் - என்.சரவணன் (தினக்குரல் - 29.03.2015)
  7. இலங்கையின் முதலாவது கலவரத்தின் சுவட்டைத் தேடிய பயணம் – என்.சரவணன் (நமது மலையகம் இணையத்தளம்)

(தொடரும்)



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates