Headlines News :
முகப்பு » » பொதுத்தேர்தலை எதிர்கொண்டுள்ள மலையக மக்களும், கட்சிகளும் - கிருஸ்ண பிரசாத்

பொதுத்தேர்தலை எதிர்கொண்டுள்ள மலையக மக்களும், கட்சிகளும் - கிருஸ்ண பிரசாத்


நாடு அடுத்த பொதுத்தேர்தலுக்குத் தயாராகி வருகின்றது. பொது மக்கள் அடுத்த பாராளுமன்றத்துக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதேபோன்று பாராளுமன்றத்துக்கு செல்லும் எதிர்பார்ப்புடன் பல கட்சிகளும் தலைவர்களும் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை, நுவரெலியா மாவட்ட மக்களும் இந்தத் தேர்தலை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். தற்போது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இது பொது மக்களிடம் பல்வேறு எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் பாராளுமன்றத்தில் தமது இருப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்காக கட்சிகளும் அரசியல் தலைவர்களும் முழுமையான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இறுதியாக 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 7 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி 5 பேரும் ஐக்கிய தேசிய கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2 பேருமாக தெரிவாகியிருந்தனர். அதில் அதி கூடுதலான வாக்குகளை முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் பெற்றிருந்தார்.

அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 60,997ஆகும். தேர்தலில் தற்போதைய கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் 54,083 வாக்குகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களான பெருமாள் ராஜதுரை 49,228 வாக்குகளையும் நவீன் திசாநாயக்க 43,514 வாக்குகளையும் ஆர்.எம்.சி.பி. ரத்நாயக்க 41,345 வாக்குகளையும் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட தற்போதைய தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் 39,490 வாக்குகளையும் பாராளுமன்ற உறுப்பினர் சிறி ரங்கா ஜெயரத்னம் 33,948 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றிருந்தனர். அத்துடன் தேசியப் பட்டியல் மூலம் நியமனம் பெற்ற முத்துசிவலிங்கம் பிரதியமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 2 ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன.

அந்தத் தேர்தலில் 37,236 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன. அதேவேளை, 66.38 வீதமானோர் வாக்களித்திருந்தனர். பதிவு செய்யப்பட்டிருந்த 4,57,137 வாக்குகளில் 3,03,470 பேர் வாக்களித்திருந்தனர். இதில் 1,53,667 பேர் வாக்களித்திருக்கவில்லை. 1,90,903 வாக்குகள் எந்த ஒரு உறுப்பினரையும் சென்றடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இறுதி ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு வீதம் இம்மாவட்டத்தில் அதிகரித்திருந்ததுடன் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி அடைந்திருந்தன. இது மக்கள் தெளிவாக வாக்களித்திருந்தமையையும் எடுத்துக் காட்டுகின்றது.

மலையக அரசியலை பொறுத்த வரையில் கட்சித் தாவல்கள் ஆரம்ப காலம் தொட்டு இருந்து வந்த ஒன்றாகும். ஆனால் இது அண்மைய காலத்தில் அதிகரித்திருந்தது.

நுவரெலியா மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்த ஆறு பேரில் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் தேசிய பட்டியலில் தெரிவாகியிருந்த முத்து சிவலிங்கம் ஆகியோர் இ.தொ.கா.வில் தொடர்ச்சியாக அங்கம் வகிக்கின்றனர்.

இ.தொ.கா.விலிருந்து வெளியேறிய வே. இராதாகிருஷ்ணன், மலையக மக்கள் முன்னணியிலும் பி.இராஜதுரை முதலில் தொழிலாளர் தேசிய சங்கத்திலும் பின்னர் ஐ.தே.க.வுக்கும் மாறினார். பி.திகாம்பரம் தொ.தே. சங்கத்திலும் உள்ளார்.

இதுவே நுவரெலியா மாவட்டத்தில் பாராளுமன்றத் உறுப்பினர்கள் கட்சி மாறியவிதமாகும். தொடர்ந்து சில மாதங்களில் அடுத்த பாராளுமன்ற தேர்தல் இடம்பெற இருக்கின்ற நிலையில் யார் எந்த அணியில் இருக்கப் போகின்றனர் என்பது இன்றைய அரசியல் நிலையில் அவ்வளவு இலகுவாக கூற முடியாதுள்ளது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறங்கியதையடுத்து தேசிய ரீதியில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவியமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இ.தொ.கா.வைச் சேர்ந்த இரு உறுப்பினர்களும் தொடர்சியாக ஆரம்பம் முதல் முன்னாள் ஜனாதிபதிக்கே ஆதரவு வழங்கினர். ஆனால் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக ஆரம்பத்தில் தெரிவித்த தொ.தே. சங்க பாராளுமன்ற உறுப்பினரும் ம.ம. முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சி மாறி பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கினர்.

தேர்தலின் பின்னர் மக்களின் மனநிலையில் ஓரளவு மாற்றத்தை அவதானிக்க முடிகின்றது. தற்போது 100 நாள் வேலைத்திட்டம் மலையக மக்கள் மத்தியில் பாரிய மாற்றத்திற்கு வித்திடும் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. அத்தோடு அது பாராளுமன்ற தேர்தலிலும் செல்வாக்கு செலுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கூட்டங்களுக்கு சென்று பிரதிநிதிகள் கூறுவதை செவிமடுத்தாலும் அவர்கள் பெற்று தரும் அற்ப சலுகைகளை மனமுவந்து பெற்றுக் கொண்டாலும் பொதுமக்களிடம் தனி தெளிவு ஏற்பட்டுள்ளதை மறுக்க இயலாது.

அரசியலில் தற்காலத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்களும் திருப்பங்களும் சாதாரண மக்களால் புரிந்து கொள்ளக் கூடிய நிலை உள்ளதால் புதிய நபர் வந்தாலும் புதிய சின்ன ங்கள் வந்தாலும் அவர்களை தெரிவு செய்யக் கூடிய சூழ்நிலை இருக்கின்றது. எனவே, மக் களின் எதிர்பார்ப்புக்கேற்ப செயற்படுபவர் களை தெரிவு செய்யும் நிலையே தோன்றியு ள்ளது. எனவே, வெற்றியும் தோல்வியும் வேட்பாளர்களாக களம் இறங்க காத்திருக்கும் நபர்களின் எண்ணத்திலும் செயற்பாடுகளிலு மேயே தங்கியுள்ளது.

நன்றி  வீரகேசரி 15.02.2015

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates