Headlines News :
முகப்பு » , » ‘மலையகத் தமிழர்கள் கற்கும் சமூகமாகவும் மற்றவர்கள் போற்றும் முன்மாதிரியான சமூகமாகவும் விளங்க வேண்டும்’ - பெ.சந்திரசேகரன்

‘மலையகத் தமிழர்கள் கற்கும் சமூகமாகவும் மற்றவர்கள் போற்றும் முன்மாதிரியான சமூகமாகவும் விளங்க வேண்டும்’ - பெ.சந்திரசேகரன்



இன்று 16.04.2014 அமரர்  பெ.சந்திரசேகரன் அவர்களின் 57 வது பிறந்த தினமாகும். லிந்துல சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் கணினிப் பிரிவை ஆரம்பிக்கும் வைபவத்தில் பிரதம விருந்தினராக கலந்துக்கொண்டு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரன் நிகழ்த்திய உரை
தொகுப்பு – எச்.எச்.விக்கிரமசிங்க

நுவரெலியா மாவட்டத்தில்; வாழ்கின்ற மலையகத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் சிறந்த கல்விக்கூடமாக விளங்குகின்ற விந்துல  சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயம் கணனி மயமாகும் நிகழ்வில் பங்கு கொள்வதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். இப்பாடசாலையின் ஊடாக இப்பகுதியில் வாழும் இளம் தலைமுறையினர் புதிய நூற்றாண்டில் சவால்களையும் தேவைகளையும் நிலைமைகளையும் எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பயிற்சி பெறுவதற்கான ஒரு களமாக இப்பாடசாலை நிலைமாற்றம் பெறுவதன் ஓர் ஆரம்பகட்டமே இந்தக் கணினி நிலையம் என்பதில் சந்தேகம் இல்லை. இத்தகைய ஆயத்தப்பயிற்சியை எமது பிள்ளைகளுக்கு வழங்குவதற்கான உதவிகளை செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கி முன் வந்துள்ளமை ஒரு வரவேற்கத்தக்க அம்சம். 1950 களில் எமது பாடசாலை முறைமை எவ்வாறு இருந்தது என்பதைப்பற்றி சுருக்கமாகக்கூறின் எமக்கு எழுத்தறிவைக் கூட சரியாக வழங்க முடியாத வசதியற்ற தகுந்த ஆசிரியர்கள் அற்ற தோட்டப் பாடசாலைகளே அப்போது இருந்தன. அவை கூட பெற்றோர்கள் வேலைக்குச் செல்கின்ற போது பிள்ளைகளை பராமரிக்கின்ற நிலையங்களாகவே செயற்பட்டன. க.பொ.த.சாதாரண தரம் க.பொ.த. உயர்தர வகுப்புகள் இருக்கவில்லை. இந்நிலையில் மலையகத்தின் பல இளைஞர்கள் யாழ்ப்பாணம் சென்று கல்வி கற்றனர் என்பது வரலாறு ஆகும். தஎனது மதிப்புக்குரிய ஆசிரியர் அமரர் எஸ்.திருச்செந்தூரன்,பேராசிரியர் சோ.சந்திரசேகரன், பேராசிரியர் எம்.சின்னத்தம்பி ஆகியோர் இவ்வாறு யாழ்ப்பாணத்தில் படித்து பல்கலைக்கழகம் சென்றவர்கள் பேராசிரியர் மூக்கையா கம்பளை சாஹிராக் கல்லு{hயில் க.பொ.த. உயர்தர வகுப்பை முடித்தவா.; இன்று நூறு பாடசாலைகளில் க.பொ.த.உயர்தர வகுப்புகள் இருப்பதாக அறிகிறேன். 15 1யுடீ பாடசாலைகள் இருக்கின்றன. பல குறைபாடுகள் இருப்பினும் எமக்கென இரு ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள் இருக்கின்றன. 

1960 களில் எமது மாணவர்கள் 300 மைல்களுக்கு அப்பாலுள்ள பலாலிக்கு ஆசிரிய பயிற்சிக்காக சென்றனர். எனபதும் வரலாறு எமது மத்தியில் ஆசிரியர்கள் உருவாக்கப்படாமையால் யாழ்ப்பாணத்திலிருந்து ஏறாளமான ஆசிரியர்கள் மலையகத்திற்கு வந்து கல்விப் பணியைப் புரிந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரிய போது ஒன்பதாயிரம் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மலையைகத்தவர்கள் விண்ணப்பித்தனர். 3600 பேருக்கு இதில் ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது. இன்று மலையகத்தில் க.பொ.த.உயர்தர வகுப்பு சித்தியடைந்த மனிதவளம் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்குமென நம்புகின்றேன்.

இன்று இப்பகுதியில் கற்று பல மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் பொறியியல் பீடம் என்பவற்றில் அனுமதி பெற்றுள்ளனர்.இன்று எம்மத்தியில் சுமார் 60 சட்டத்தரணிகளுக்கும் மேலாக உள்ளனர் என்பதை அறிகிறோம். இவ்வகையில் ஏற்பட்டுள்ள கல்வி வளர்ச்சியானது இன்று எமது தொழிலாளர்கள் வாழும் லயன் காம்பிரா அறைகளுக்குள்ளும் ஊடுருவிப் பாய்ந்துள்ளமை பெருமைக்குரியதாகும். இன்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் பிள்ளைகள் ஆசிரியர்களாக விளங்குவது பெருமைப் படத்தக்க விடயமாகும். மலையகச் சிறார்களின் கல்விக்கான பொறுப்பினை இம்மலையக ஆசிரியர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதும் மலையகப் பிள்ளைகளின் கல்வி நிர்வாகம் மேற்பார்வை என்பவற்றுடன் கல்வி அதிகாரிகளாக பொறுப்பானவர்களாகவும் விளங்குவதும் மலையகத்தவரே என்பதும் இன்று குறிப்பிடத்தக்கதாகும்.

1960 களில் மலையக செயல்வீரர்களான அமரர் இர சிவலிங்கம் எனது ஆசிரியர் அமரர் எஸ். திருச்செந்தூரன் ஆகியோர் ஆற்றிய கல்விப்பணியின் வழி நின்று எமது இளைஞர்கள் கல்வித்துறையில் பணியாற்றி வருவது பாராட்டத்தக்க அம்சமாகும்.

இந்தக் கல்லூரியில் அதிபராக விளங்கும் எஸ்.மோகன்ராஜ் சிறந்த தலைமைத்துவத்தினை வழங்கி வருகின்றார். அதே தலைமைத்துவத்தின் காரணமாக ஆசிய அபிவிருத்தி வங்கி இன்று லிந்துல தமிழ் மகா வித்தியாலயத்திற்கு கணினிகள் வழங்கியுள்ளது. நானும் எமது சார்பில் பாடசாலைக்கு விளையாட்டு மைதானத்தை சிறந்த முறையில் அமைத்துத் தர முன்வந்துள்ளேன். அதிபர் எஸ்.மோகன்ராஜ் இப்பாடசாலையின் அபிவிருத்திக்காக அரும்பாடுபடுகின்றார். இந்த முன்மாதிரியை பிற பாடசாலை அதிபர்களும் பின்பற்றுவது எமது சமுதாய வளர்ச்சிக்கு உகந்தது. மோகன்ராஜின் சகோதரர் தை.தனராஜ் மலையக கல்வி வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பணிகள் இவ்வேளையில் நினைவு கூரத்தக்கவை.திறந்த பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளரான அவர் மகரகம் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றியவர். இர.சிவலிங்கம் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் ஆகிய மலையக பிரக்ஞை மிக்க புத்திஜீவிகளினால் உருவாக்கப்பட்ட அவர் பல்கலைக்கழக கல்வியை நவீனமயப்படுத்தும் வெளிநாட்டு செயல்திட்டத்தின் நிபுணத்துவ ஆலோசகராகவும் பணியாற்றுகின்றார் என்பது எமக்கு பெருமைக்குரிய அம்சமாகும். இவ்வேளையில் மனதை உறுத்தும் ஒரு நெருடலான விடயத்தையும் குறிப்பிடுவது அவசியமாகின்றது.

மாவட்டச் செயலகங்களிலும் பிரதேச செயலகங்களிலும் செயலாளராக உதவிச் செயலாளர்களாக பணியாற்ற நம்மிடம் போதியளவு நிர்வாக சேவையில் தேர்ச்சி பெற்ற மலையகத்தவர்கள் இல்லாதிருப்பது துரதிர்ஷ்டமானது. இதேபோல் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே வெளிவிவகாரச் சேவையில் கடமையாற்றுகிறார்கள். இது போதுமானதல்ல. இத்துறைகளிலும் மலையகத்தவர்கள் தகுதிபெற்று நமது தேவைகளை எல்லாத்தரங்களிலும் வழங்கத் திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

அண்மைக் காலங்களில் கல்வித்துறையில் நாம் அடைந்துள்ள செயற்றிட்டங்களையும் ஒன்று திரட்டி ஒட்டு மொத்தமாக எமது சமூகத்தின் மேம்பாட்டிற்காக அதனைப் பயன்படுத்த வேண்டும். நாம் அரசியலில் கண்ட வெற்றி அரசியல் அதிகாரத்தில் நாம் பங்கேற்று அதிகாரத்தை பங்கு போடக்கூடியதாக அமைத்துக்கொண்ட சூழ்நிலை என்பவற்றின் காரணமாகத்தான் ஜேர்மனி சுவீடன் உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நாடுகளிலிருந்தும் கல்விக்கு உதவும் அமைப்புகளிடமிருந்தும் உதவிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. வல்லமைமிக்க இளைஞர்களினால் இத்தகைய மகாவித்தியாலங்களை உருவாக்கித்தர முடியும். வாழக்கற்றல் கற்பதற்கு கற்றல் வாழ்நாள் முழுவதும் கற்றல் என்ற புதிய கல்விக் குறிக்கோளுக்கு அமைய மலையகத்தில் பாடசாலைகள் மட்டுமன்றி மலையக மன்றங்கள் தனியார் ஸ்தாபனங்கள் வழிபாட்டுத் தலங்கள் கல்விப் பணியாற்றும் அரசாங்க சார்ப்பற்ற நிறுவனங்கள் அனைத்தும் கல்வி அமைப்புகளாக மாறவேண்டும். இன்றைய உலக வழக்கிற்கு அமைய மலையக சமூகம் கற்கும் சமூகமாக மட்டுமன்றி சமூக விழுமியங்களையும் பண்பாடுகளையும் மற்றவர்களுக்கு கற்பிக்கின்ற கடைபிடித்து ஒழுகுகின்ற முன்மாதிரியான சமூகமாக மாறவேண்டும். கல்வி கேள்விகளிலும் அறிவுப் புலமைகளிலும் எமது சமூகம் எவருக்கும் சளைத்தவர்களல்ல என்பதை துரிதமாக நாம் நிலைநாட்டிட வேண்டும். இத்தகைய உயர்ந்த பணியினை செய்வதில் இப்பாடசாலையும் அதன் ஆசிரியர்களும் மாணவர்களும் அத்தகைய முன்மாதிரியான ஒரு கல்விச்  சமூகமாகவும் மாற்றம் பெற வேண்டும் என்பது எனது பெரும் விருப்பம் ஆகும்.

இந் நிகழ்வின் போது நமது குழந்தைகள் நடாத்திய நடனங்கள் என்னை மெய்மறக்கச் செய்தன. போதிய வளவசதிகளைக் கொண்டிராத போதும் பெரும் முயற்சியினால் பயிற்சியினால் ஆற்றிய கலைத்தொண்டு இதுவாகும். இதற்காக செயல்புரிந்த ஆசிரிய மணிகளை நான் வெகுவாகப் பாராட்டுகின்றேன். நடனத்தைப் பயிற்றுவித்த ஆசிரியைகள் முருகையா சரஸ்வதி செல்விமேரி லலித் ஆகியோருக்கும் சக உதவி ஒத்தாசை புரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் நகர்ப்புற பாடசாலைகளில் நடக்கும் நடனசிகழ்ச்சிக்கும் மேலான தரத்தில் இங்கு மாணவிகளின் நடனத்தைக் கண்டுகளிக்கும் போது மனமகிழ்ச்சி மட்டுமல்ல நம்பிக்கையும் ஏற்படுகின்றது. இப்பாடசாலையில் தரம் பத்தில்  கல்வி கற்றும் மாணவி ஒருவர் மின்னஞ்சல் ஊடாக தகவல்களை பரிமாறிக் கொள்ளும் முன்மாதிரியை அறிந்து வியந்து போனேன்.பெற்றார் ஆசிரியர்கள் மாணவர்கள் என்ற முத்தரப்பு கூட்டு முயற்சி இதனைப் புரிந்துள்ளது.

எமது கல்வி கலாசார வளர்ச்சி மேம்பாடு எமது அடையாளத்தைப் பேணுவதில் முன்னெடுத்துச் செல்லல் எமது வரலாற்று ஆராய்ச்சி என்னும் பல்வேறு நோக்கங்களை அடைவதற்கு எமக்கென தனியான ஒரு பல்கலைக்கழகம் தேவை என்ற உணர்வுடன் செயற்பட்டு வருகின்றோம். மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பல கல்விமான்கள் இவ்விடயத்தில் எமக்கு பக்க பலமாக உறுதுணை புரிந்து வருகின்றனர். கடந்தகால வரலாற்றை நாம் மறந்து விடமுடியாது. ஆயினும் இன்று உலகளாவிய செல்நெறிப் போக்குகளை ஒட்டி கல்வித்துறையில் எதிர்கால சவால்களையும் எதிர்கொண்டு சமாளிக்கக்கூடிய வகையில் வெளிநாட்டு உதவிகளையும் எமது அரசியல் பலத்தின் துணையுடன் பெற்றுக் கொள்ள முடிந்தது.

எமது மலையகக் கல்விவளர்ச்சியின் ஒரு பிரதான கட்டமாக இன்று நாம் எமது மக்களுக்கான ஒரு தனியான பல்கலைக்கழகத்தை அமைத்துத்தர வேண்டுமென அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறான கோரிக்கை ஒன்றினை ஆணித்தரமாக நாம் விடுப்பதற்கு ஓங்கிக் குரல் கொடுப்பதற்கும் அரசியல் ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் நாம் பலமும் வளமும் பெற்றுள்ளோம் இலங்கையின் உயர்மட்ட அரசியல் பீடத்துடன் மட்டுமன்றி அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பித்த பல கோரிக்கைகளில் மலையகத்திற்கென தனியான பல்கலைக்கழகம் தேவை என்ற கோரிக்கையையும் முன் வைத்தோம். புதிய அறிவார்ந்த நூற்றாண்டில் விவேகமுடன் வாழ்வதற்கு மட்டுமன்றி எமது கலை கலாசார பாரம்பரியங்களை கட்டிக்காக்கவும் உலகறியச் செய்யவும் நமது இனக்குழுத்தனித்துவத்தினையும் மலையக தேசியத்தையும் பேணவும் அடையாளப்படுத்தவும் . இது மிகவும் அவசியமாகும். இது சமகாலத்தால் நாம் ஆற்ற வேண்டிய பணியாகும். 

இன்னொரு முக்கிய விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். கொட்டகலை யதன்சைட் தோட்டத்தை சேர்ந்த எம். வாமதேவன் அன்றே பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். நிதி தேசிய திட்டமிடல் அமைச்சில் உயர் அதிகாரியாக சிறப்பாகப் பணியாற்றியவர் நான் சமூக அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது எனது அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியவர் பல சர்வதேச உடன்படிக்கைகளை நிறைவேற்றுவதில் பின்னின்று ஆக்கப+ர்வமாக பணியாற்றியவர். இன்று முக்கிய அமைச்சில் ஆலோசகராக கடமையாற்றி அருஞ்சேவை செய்கின்றார். கடின உழைப்பும் தளரா முயற்சியுமே இதுவரை இந்த மேலான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. சமூகப் பற்றுறுதி கொண்ட இந்தக் கல்விமான் அமரர் இர. சிவலிங்கம் கண்ட கனவை நனவாக்கும் நற்பிரஜையாகும். இந்த நல்;ல முன் உதாரணத்தை பின்பற்றி இப்பகுதி மாணவர்கள் கல்விமான்களாக சமூகப் பிரஞைமிக்க மலையக செல்வங்களாக உருவாகவேண்டும்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates