Headlines News :
முகப்பு » » மலையக மக்களின் கல்விக்கான அக்கறையும் அரசியல் தலையீடுகளும்

மலையக மக்களின் கல்விக்கான அக்கறையும் அரசியல் தலையீடுகளும்


எமது நாட்டில் கல்வி உரிமையைப் பற்றி மேடைகளில் பேசாத அரசியல்வாதிகளை காண்பது அரிது. இது அரசியல்வாதிகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்தும் தோற்றப்பாட்டை வழங்கினாலும், மக்கள் கல்விக்கு வழங்கும் முக்கியத்துவத்தின் காரணமாக அதற்கு ஏற்றப்படி அரசியல்வாதிகள் தம்மை தகவமைத்திருக்கின்றமையின் வெளிப்பாடாகும். மலையக அரசியல்வாதிகள் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. மலையக மக்களுக்கான கல்வி உரிமை வரலாற்று ரீதியாக மறுக்கப்பபட்டு வந்த நிலையில் இன்று முறைசார் கல்வியைப் பெற்றுக்கொள்வதில் மலையக சமூகத்தவரிடையே அதிக அக்கறைக் காணப்படுகிறது. கல்வி மீதான மலையக மக்களின் அக்கறை அவர்களின் அரசியல் வரலாற்றின் அடிப்படையிலான வெளிப்பாடாகும். அந்நியர்கள் என்றும் உழைப்பதற்கு மட்டுமே உரிமையுடையவர்கள் என்றும் அங்கீகாரம் அற்றவர்களாக ஒடுக்கப்பட்டு வாழும் நிலையில் இருந்து மீளுவதற்கான ஒரே ஒரு மாற்று வழியாக கல்வியின் முன்னேற்றத்தை மலையக மக்கள் காணுவதே இந்த அக்கறை வெளிப்படுத்தி நிற்கிறது.

மலையக மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கிய, வழங்கி வருகின்ற சக்திகள் மலையக மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுத்து அவர்களை இலங்கையின் சம பிரஜைகளாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள தவறியமையும், இம்மக்களின் உழைப்பின் மீதான தீவிர சுரண்டலுக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வலுவிழந்த நிலையில் உள்ளமையும் இம் மக்கள் கல்வியை மட்டுமே தமது விமோசனத்துக்கான வழிகாட்டியாக காணும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இச் சூழலுக்கு வரலாறு முழுவதும் இலங்கை அரசாங்கங்கள் மலையக மக்கள் மீது மேற்கொண்ட பேரினவாத அடக்குமுறைகளின் பங்கும் குறிப்பிட்டுச் செல்லத்தக்கதே.

எனவே, கல்வியை மட்டும் தமது விமோசனமாக மலையக மக்கள் இன்று நோக்குவதற்கும் மலையக அரசியல் சக்திகளின் இயலாமைக்கும் நேரடியான உறவுண்டு. ஒடுக்கப்பட்ட இனம் என்ற நிலையில் அவர்களின் அடிப்படை அரசியல் பொருளாதார உரிமை பிரச்சினைகளை ஒதுக்கி விட்டு, கல்வியினூடாக தனித்தனியாக விமோசனம் காணுதல் என்பது ஒரு குறுகிய வட்டத்துக்குள் தம்மை உட்படுத்திக்கொள்ளும் போக்காகும். இப்போக்கானது கல்வியை பெறுவதன் ஊடாக தமது சமூக அடையாளங்களை விமர்சனங்களுக்கு உட்படுத்தி நிலைநிறுத்துவதிலும் பார்க்க அதனை மறைக்கும் முயற்சிகள் கற்றவர்களிடத்தில் அதிகமாக இருக்கின்றமை கவனிக்கத்தக்கது. இது கல்வி மலையகத்தில் ஏற்படுத்தி வரும் ஒரு எதிரிடையான மாற்றமாகும். இந்த மாற்றமானது முடிவில் மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதனையும் தீர்க்க எத்தனங்கள் எதுவுமின்றி இருக்கும் அரசியல் சக்திகள் தொடர்ந்து கோலோச்சுவற்கும் வழிவகுக்கிறது.

மேற்குறித்த காரணங்களினால் மலையக மக்கள் இன்று கல்வி தொடர்பாக கொண்டுள்ள அக்கறையை சாதகமில்லாத அல்லது அவசியமற்ற ஒரு அம்சமாக நோக்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை. மேலே குறிப்பிட்டுள்ள அம்சங்கள் வெளிப்பட்டுள்ள போதும் தொடர்ந்தும் அதேவிதமான போக்கே நிலவும் வாய்ப்பு உள்ளது என்று கூறமுடியாது. இன்றைய கல்வி முறை வளர்க்கும் சுய ஈடேற்றத்தின் மீதான நாட்டம் சமூக பிரக்ஞை அக்கறையின் மீதான விரோதங்கள் மீதான கேள்விகளைக் கேட்பதற்கான அரசியல் பொருளாதார சூழ்நிலைகள் பொதுவில் நாட்டிலும் மலையகத்தில் இடம்பெற்றே வருகின்றன. அதன் வெளிப்பாடுகளை மலையகத்தில் வரலாற்றிலும் இன்றும் காணக்கூடியதாக உள்ளது. எனவே மலையக சமூகத்தின் கல்வி மீதான அக்கறையானது இறுதி பகுப்பாய்வில் சாதமகமான ஒரு அம்சமே.

மலையக மக்களின் கல்வி உரிமை தொடர்பாக ஆதிக்க அரசியல் தலைமைகள் உதட்டளவில் பேசினாலும், “அவர்களுக்கு கல்வி வழங்கினால் அது தமது ஆதிக்க அரசியலுக்கு அச்சுறுத்தல்களை கொண்டு வந்துவிடும்” என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளூர உண்டு. மலையக மக்களுக்கு வாக்குரிமை வழங்கினால் தமது ஆதிக்கத்துக்கு பாதிப்பு என்று சிங்கள பேரினவாத அரசியல்வாதிகள் வாக்குரிமையை மறுத்தமைக்கும் இவர்களின் கல்வி உரிமை மறுப்பிற்கும் இடையே வேறுபாடு இல்லை. எனினும் மக்கள் கல்விக்கு வழங்கம் முக்கியத்துவம் காரணமாக அப்பியாசக்கொப்பிகளையேனும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் “அரசியல் பணியை” மலையக புதுத்தலைமைகளும் செய்து வருகின்றனர். தனது பிள்ளைக்கு அப்பியாசக்கொப்பி வாங்கி கொடுக்க முடியாத நிலையில் பெற்றோர்கள் இருப்பது இவர்களுக்கு ஒரு அரசியல் பிரச்சினையாக தெரிவதில்லை. இவற்றுக்கு அப்பால் எமது கவனத்துக்குட்பட வேண்டிய முக்கிய அம்சமாக இருப்பது இவர்கள் பாடசாலைக் கல்வியில் செலுத்தும் தாக்கமாகும்.

மலையகத்தில் கற்றவர்களுல் அதிகமானவர்கள் ஆசிரியர் சேவையில் இருக்கின்றமையால் ஏனைய சமூகங்களை விட மலையகத்தில் பாடசாலை முக்கிய இடமாக நோக்கத்தக்கதாகும். சமூகத்தில் கருத்துக்களின் ஊடாக வழிநடாத்தக்கூடியவர்கள் இங்குதான் உள்ளனர். இதனை உணர்ந்துள்ள அரசியல் தலைமைகள் பாடசாலைகளில் தமது அரசியல் செல்வாக்கை வெவ்வேறு வழிகளில் நிலைநிறுத்தி பாடசாலையை தமது ஆதிக்கதில் நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர். இதற்கு எதிர்வினையாற்றும் ஆசிரியர்கள் குறைவே. அதிபர்களில் ஏக பெரும்பான்மையானவர்கள் தமது அதிபர் பதவியை அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் பெற்றுக் கொள்கின்றமையினால் குறித்த அரசியல் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் முழு விசுவாசத்தை வெளிப்படுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

பாடசாலைகளையின் நிர்வாகம் அதன் அபிவிருத்தி என்பது அவர்களுக்கு இரண்டாம் பட்ச பணிகளாகவே இருந்து வருகின்றன. இதனால் இன்று மலையகத்தின் பல பாடசாலைகள் சீரழிக்கப்பட்டுள்ளன. மலையகத்தில் சில அதிபர்களினால் தமது கடமைகள் மேற்கொள்ளப்படாமை தொடர்பாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டும் போது அதிபர்கள் சொல்லும் பதில் நீங்கள் இது தொடர்பாக யாரிடமும் முறையிடலாம். நான் பயம் இல்லை என்பதே. இவ்வாறு கூறுவதற்கு அவர்களின் அரசியல் செல்வாக்கே காரணம் என மக்கள் அறிவர். இந்த நிலை இலங்கை முழுவதற்கும் ஏற்புடைய அம்சமாகும். எனினும் இந்நிலையானது ஏனைய சமூகங்களை விட கல்வி அடைவுகளில் பின்தங்கியுள்ள மலையக மாணவர்கள்; கல்வியை பெற்றுக் கொள்வதில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் மேல் கொத்மலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட இருந்த கட்டிடங்களில் மூன்று மாடி கட்டிடம் ஒன்றை பாடசாலைக்கு வழங்க விடாது தடுத்து அதனை தமது அரசியல் அதிகார விஸ்தரிப்புக்கு பயன்படுத்திக்கொள்ள மலையகத்தில் பலம்பெரும் தொழிற்சங்கமும் அதன் தலைமைகளும் முயன்றமை பலரும் அறிந்ததே. மலையக மக்களின் கல்வியில் மலையக தலைமைகள் கொண்டிருக்கும் அக்கறையின் இயல்பு வெளிப்பட முதலாவது சந்தர்ப்பம் இது அல்ல என்ற போதும், தலவாக்கலை பாடசாலையின் பழைய மாணவர்களும் பெற்றோர்களும் இதனை நேரடியாக உணர வாய்ப்பளித்தது. பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோரின் போராட்டங்களும் அதன் பின் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளாலுமே அக் கட்டிடத்தை பாடசாலைக்கு பெற்றுக்கொள்ள முடிந்தது.

மேல் கொத்மலைத் திட்டம் என்ற மலையக மக்களின் இருப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட திட்டத்துக்கு ஆதரவு வழங்கிய நிலமைகள் அந்த அழிவில் இருந்து கிடைத்த சில சலுகைகளையும் மக்களுக்கு வழங்க மறுப்பதில் இருந்து அவர்களின் மக்கள் சார்புத் தன்மையை அறியலாம். கல்வி உரிமையைப் பொறுத்தவரை யாரெல்லாம் இன்றைய கல்வி முறையின் குறைபாடுகளையும் அதன் அழிவுசார் அம்சங்களையும் வெளிப்படுத்தி விமர்சிப்பவர் அனைவரும் இருக்கும் கல்வி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி போராடி வருகின்றனர். எனினும் இந்தக் கல்வி முறையை மெச்சுகின்ற அரசியல் தலைமைகள், கல்வியியலாளர்களும் கூட இக் கல்வி முறையின் பெறுபேறுகள் அனைவருக்கும் சமமாக எட்ட வேண்டும் என்று எண்ணுவதில்லை.

எனவே மலையகத்தில் கல்வியை வளர்க்க வேண்டும். கல்வியே மலையக மக்களின் வாழ்வை மாற்ற ஒரே வழி என்று அரசியல்வாதிகள் கூறும்போது, அவர்களிடம் திருப்பிக் கேட்பதற்கு பல கேள்விகள் மலையக மக்களுக்கும் மலையகத்தின் கல்வி முன்னேற்றத்தின் அக்கறை கொண்டவர்களுக்கும் உண்டு.

மலையகத்தில் இருந்து - விஜயகுமார்
நன்றி - tamicircle
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates