Headlines News :
முகப்பு » » ஒப்பந்தக்காரர்களின் பிடிக்குள் மலையக அபிவிருத்திப் பணிகள் - கௌஷிக்

ஒப்பந்தக்காரர்களின் பிடிக்குள் மலையக அபிவிருத்திப் பணிகள் - கௌஷிக்


அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது. அவ்வாறு மலையகத்துக்கு ஒதுக்கப்படும் நிதி ஊழல் மோசடியின்றி முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்று பொதுமக்களால் குற்றம் சுமத்தப்படுகிறது.

உள்ளூராட்சி சபை அதிகாரிகளின் கண்காணிப்புடன் இத்தகைய நிதிகள் செலவிடப்படுகின்றன. பாதை சீரமைப்பு, குடியிருப்புகள் அமைத்தல், மின்னிணைப்புகள், நீர்வழங்கல்கள் போன்ற ஒட்டுமொத்த வேலைத்திட்டங்களை செய்து முடிக்க ஒப்பந்தக்காரர்கள் (காண்ட்ரக்டர்கள்) நியமிக்கப்படுகிறார்கள். இந்த ஒப்பந்தக்காரர்கள் சபைகளால் அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும். இவர்களின் அங்கீகாரத்தை மக்கள் பிரதிநிதிகள் முன்னின்று பெற்றுக்கொடுக்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பினாமிகளாக உறவினர்களையும் நண்பர்களையும் நியமித்துக்கொள்வார்கள்.

சபை அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றுக்கொண்டுதான் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் நேரில் வந்து பணிகள் இடம்பெறும் இடங்களைப் பார்வையிட வேண்டும். அவர்களை ஸ்பொட்டுக்குக் கூட்டிக்கொண்டு வரவே ஒப்பந்தக்காரர்களின் ‘கவனிப்பு’ தேவைப்படும். இங்கே தொடங்கும் கையூட்டு விவகாரம் பணிமுடிந்து பணம் பெறும்வரை தொடர் போராட்டமாக இருக்கும். தமிழ்நாட்டின் வார இதழ் ஒன்று இதனை இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது. ‘அலுவலகத்தின் பியூன், உதவி கிளார்க், தலைமை கிளார்க், உதவி தாசில்தார் என அத்தனை பேருக்கும் லஞ்சம் கொடுத்தால்தான் குறிப்பிட்ட (ஃபைல்) கோப்பு மேசையைவிட்டு நகர்ந்து செல்லும். வேலையின் தன்மைக்கேற்ப ‘ரேட்’ நிர்ணயிக்கப்படுகிறது.’ இவ்வாறு அந்த வார இதழ் கருத்துக் கூறியிருந்தது. எல்லா வகையிலும் தமிழகத்தைப் பிரதிபலிக்கும் எமது உள்ளூர் அரசியல்வாதிகளும் அச்சொட்டாக இந்த நடைமுறைகளையே கைக்கொள்கின்றனர்.

உள்ளூராட்சிச் சபை அலுவலகங்களில் கடமையாற்றும் சிலர் இதுபற்றி விசனம் தெரிவிக்கின்றனர். மக்களின் வாக்குப் பலத்தால் வெற்றிபெற்றவர்கள் மக்களின் பணத்தை எவ்வாறு சூறையாடுகிறார்கள் என்பதை கவலையுடன் கூறுகின்றனர்.

வைகைப்புயல் வடிவேலு ஒரு திரைப்படத்தில் தோன்றியபோது, ‘தன்னுடைய கிணற்றை யாரோ களவாடிவிட்டார்கள்’ என காவல் துறையிடம் முறையிடுவார். கிணறு இருந்ததாகக் கூறப்படும் இடத்துக்கு வந்து பொலிஸார் தலைமுடியை பிய்த்துக்கொள்வார்கள். தலைமை அதிகாரி தனது பொலிஸ் உடைகளைக் கழற்றி வைத்துவிட்டு செல்வதாக அந்தக் காட்சி இருக்கும். அது ஒரு நகைச்சுவைக் காட்சியாக இருந்தாலும் ஊழல் எவ்வாறு எல்லா மட்டங்களிலும் தலைவிரித்தாடுகிறது என்பதை எடுத்துக் கூறுகிறது.

மலையகத்திலும் ‘கிணறு காணாமல் போன கதைகள்’ பல இருப்பது பற்றி அலுவலர் சிலர் கூறுகின்ற தகவல்களில் இருந்து தெரிகிறது. ஹட்டன் பகுதியில் ஒரு நீண்ட பாதை ‘கார்பெட்’ செய்யப்பட இருப்பதாகக் கூறி அடிக்கல் நாட்டப்பட்டது. தோட்டப் பகுதியூடாகச் செல்லும் பல கிலோ மீற்றர் பாதை இது. மக்கள் பெருமளவு கூடியிருந்து பூஜையோடு அடிக்கல் நாட்டப்பட்டது. அதே தினத்தில் மஸ்கெலியாவில் தோட்டப்பகுதி பாதை ஒன்றுக்கும் இவ்வாறு பூஜை போடப்பட்டது. அதன்பின் அந்த பணி ஆரம்பிக்கப்படவே இல்லை. குறிப்பிட்ட வேலைத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லையா? வந்த நிதிக்கு என்னவானது என்பதும் தெரியவில்லை. வழக்கம் போல் மக்களும் மறந்துவிட்டார்கள். அந்த அரசியல்வாதியும் காணாமல் போய்விட்டார்.

ஹட்டன் பகுதியில் இருந்து பதுளைக்கு சென்ற திட்ட அதிகாரி அவர். அங்கே கார்பெட் பாதை அமைப்பதற்கென கோலாகலமாக பூஜை போடப்பட்டது. வேலைத்திட்டம் பற்றிய பெயர்ப்பலகை ஒன்றும் நாட்டப்பட்டது. சிறிது காலத்தின்பின் அப்பெயர்ப் பலகை காணாமல் போய்விட்டது. உரிய நிதி அந்த அதிகாரியினால் பெறப்பட்டதாகக் கூறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் தனது ஓய்வுகால பணத்தில் அதனை மீளச் செலுத்தினார் என்பது ஊரறிந்த இரகசியமாகும்.

தலவாக்கலை பகுதியில் ஓரிடத்தில் கலாசார மண்டபம் அமைப்பதற்கான பூஜை போடப்பட்டு பெரிய பெயர்ப்பலகை ஒன்று நாட்டப்பட்டது. பல மாதங்கள் வெறும் பெயர்ப்பலகை மட்டுமே காட்சியளித்துக் கொண்டிருந்தது. பின்னர் ஒருநாள் இரவோடிரவாக அந்தப் பலகை அகற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. நிதி ஒதுக்கீடு இல்லாமலா அடிக்கல் நாட்டப்பட்டது என்ற கேள்வி இயன்றளவும் விடை தெரியாமல் உள்ளது.

இதே பகுதியில் தோட்டமொன்றில் விளையாட்டு மைதானம் அமைப்பதாகக் கூறி பூஜை போடப்பட்டது. ஹட்டன் நுவரெலியா வீதி புனரமைக்கப்பட்ட காலம் அது. வெட்டப்படும் மண்ணை இந்த மைதானத்தில் கொட்டி மட்டமாக்கிக் கொடுத்தது அந்தப் பாதை அபிவிருத்திக்குப் பொறுப்பான வெளிநாட்டு நிறுவனம். ஆனால், பூஜை போட்ட பிரதிநிதி தானே அதனைச் செய்து முடித்ததாக நிதியைப் பெற முயற்சித்துள்ளார். மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து அதனைத் தடுத்துவிட்டனர். பின்னர் மறந்துவிட்ட நேரத்தில் அந்நிதி கைமாறியதாகக் கூறப்படுகிறது.

எமது மக்கள் பிரதிநிதிகள் கோயில்களுக்கு நிதி ஒதுக்குவதில் அதீத அக்கறை காட்டுவார்கள். சிலைகள், சீமெந்து, கூரைத் தகடுகள், கட்டடப் பொருட்கள் என பெருவாரியான நிதி கோயில்களுக்குப் போய்ச் சேருவதாக கணக்கு காட்டப்படும். கோயில் கமிட்டித் தலைவர்கள் தங்கள் தேவைகளுக்குப்போக போனால் போகிறது என ஒரு சிறு தொகையைக் கணக்கு காட்டுவார்கள். வருடக் கணக்கில் கோயில் பணி இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும். கோயில் கமிட்டிகள் இந்த காலத்தில் பல தடவைகள் மாற்றம் பெற்றிருக்கும். எவரிடம் கணக்கு கேட்பதென்று தடுமாறுவார்கள். கோயில்களில் குடிகொண்டிருக்கும் சாமியா சாட்சி சொல்ல வரப்போகிறார். வழக்கம்போல் கொள்ளையர்களை ஆசீர்வாதம் செய்து கொண்டிருப்பார். வேறென்ன அவரால் செய்யமுடியும்?

சிலர் சாமி சாபம் போட்டுவிடக் கூடாது என்பதற்காக சாமி சிலையையே மாற்றிவிடுவார்கள். மக்கள் பிரதிநிதிகளும் சாமி சிலைகளாக வாங்கிக் குவித்து அதிலும் பணம் பார்த்துவிடுவார்கள். இலங்கையில் எங்காவது ஒரு மூலையில் அந்த சிலைகள் வடிக்கப்பட்டிருக்கும். குறைந்த விலையில் தயாராகும் இந்த சிலைகள் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டவை என கணக்குக் காட்டி இலாபம் பார்த்துவிடுவார்கள்.

முதல் இல்லாத வியாபார நிலையங்களாக பிரதேச சபைகள் மற்றும் மாகாண சபைகள் மாறிவிட்டனவோ என மக்கள் சந்தேகப்படுகிறார்கள். எப்படியாவது சபைகளில் உறுப்பினராகிவிட வேண்டும் என்பதே எமது அரசியல்வாதிகளின் குறிக்கோளாக உள்ளது. ஆரம்ப காலங்கள் பிரதேச மற்றும் மாகாண சபைகளில் சாதாரண தொழிலாளர்கள் பிரதிநிதிகளாக இருந்தனர். கட்சி பிரதானமாக இருந்தது. இன்று பிரதேச சபைத் தேர்தலில்கூட கோடிக்கணக்கில் செலவிட்டு போட்டியில் இறங்குகிறார்கள். போஸ்டர்கள், பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள், பத்திரிகை, வானொலி விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் செலவழிக்கிறார்கள்.

காண்ட்ரக்ட் மூலம் செலவழித்த பணத்தைத் தேடிக் கொள்ளலாம் என்ற நிலைமை இருப்பதாலேயே உயிரையும் பணயம் வைத்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தாங்கள் இருந்த கட்சி தோற்று தாங்கள் வெற்றி பெற்றுவிட்டால் எந்தவித கூச்சமும் இல்லாமல் ஆளும் கட்சிக்கு தாவி அரசியல் செய்வார்கள். வாக்களித்த மக்களும் கேட்க முடியாது. ஏனென்றால், ஓட்டுக்கு இவ்வளவு என்று அவர்களும் கைநீட்டி பணம் பெற்றுவிடுகிறார்கள். மக்களாவது மண்ணாங்கட்டியாவது என்பதே இவர்களைப் போன்றோரின் கொள்கைக் கோட்பாடுகளாக இருக்கிறது. சில பிரதிநிதிகள் மாவட்ட மற்றும் பிரதேச காரியாலயங்களிலும் நாள் தவறாமல் ஆஜராகிவிடுகிறார்கள். கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வாங்க வேண்டியதை வாங்குவதே இவர்களின் அன்றாட தொழில். சபைக் கூட்டங்கள் நடந்தாலும் போக மாட்டார்கள். தங்களது வவுச்சர்களை சேதாரம் எதுவும் இல்லாமல் பாஸாக்கிக் கொள்வதற்காகவே மக்கள் வாக்களித்துள்ளதாகவே இவர்கள் நினைக்கிறார்கள். தேர்தலுக்கு முன்பு இவர்களுடைய உடம்பு எப்படி இருந்தது. இப்போது எப்படி கொழுத்து ஊதி இருக்கிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாவம் அமைச்சர்கள். இவர்களை நம்பி அவர்கள் அரசியல் செய்கிறார்கள்.

எது எதற்கோ விசாரணைக் கமிஷன்கள் நியமிக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகள் அரசியலுக்கு வரும் முன் எப்படி இருந்தார்கள்? இப்போது எப்படி இருக்கிறார்கள்? இவர்களது நிதி நிலைமை எவ்வாறு இந்தளவு உயர்ந்து நிற்கிறது? என்பதை அறிய ஒரு விசாரணைக் கமிஷன் நியமித்தால் எப்படி இருக்கும்?

பெரும்பான்மையின நேர்மையான உயர் அதிகாரிகள் சிலர் இந்த கமிஷன்காரர்களை எண்ணி வேதனைப்படுவதாக அங்கே பணிபுரியும் எமது இளைஞர்கள் தெரிவித்தார்கள். மக்கள் விழிக்க வேண்டும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates