Headlines News :
முகப்பு » , , , , » பற்றிய தீக்கு எண்ணெய் ஊற்றிய பொலிசார்! (1915 கண்டி கலகம் –22) - என்.சரவணன்

பற்றிய தீக்கு எண்ணெய் ஊற்றிய பொலிசார்! (1915 கண்டி கலகம் –22) - என்.சரவணன்


இந்தக் கலவரம் மதப்பதட்ட நிலை, தீர்க்கப்படாமல் இழுபறிபட்டுக்கொண்டிருந்த கண்டி மதக்கெடுபிடிகள், அதன் பின்னர் கொள்ளையர்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் போன்றன கலவவரத்தை வெகு வேகமாக அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது.

இலங்கை சட்ட சபையில் ஐரோப்பிய பிரதிநிதியாக இருந்த ஹர்ரி க்ரீசி (Harry Creasy) போன்றோர் கலவரம் விடயத்தில் பிரித்தானிய ஆட்சியின் செயலுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தார்கள். வெளிப்படையாக விமர்சித்தார்கள். ஹர்ரி க்ரீசி இராமநாதன் கொண்டிருந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவாக பல இடங்களில் பக்கபலமாக இருந்தார். இலங்கையில் அனைத்து சமூகங்களின் நன்மதிப்பை பெற்றவர் அவர். 11.081919 அன்று ஹர்ரி க்ரீசி சட்டசபையில் ஆளுநரையும் அதிகாரிகளையும் கடுமையாக விமர்சித்து உரையாற்றினார்.

“இத்தனை கலவரமும், உயிர் சேதம், சொத்து சேதங்களும் ஏற்படுவதற்கு காரணம் கண் முன் நடந்துகொண்டிருந்தபோது பொலிசார் வெறும் கம்புகளை மட்டும் வைத்துக்கொண்டிருந்தது தான்” என்றார்.

இந்த கலவரம் குறித்து எழுதிய அனைவரும் பொலிசாரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சிக்காத எவரும் இருக்கமாட்டார்கள் என்றே சொல்லலாம். கலவரம் உச்ச நிலையை அடைந்த பின்னர் மிக மோசமான அராஜகத்தில் ஈடுபட்ட பொலிசார் அதன் ஆரம்பத்தில் அனைத்தையும் கண்டும் காணாமலே இருந்தார்கள். அவர்கள் விழிப்பாகவும், முன்னெச்சரிக்கையுடனும், கண்டிப்பாகவும் நடந்து கொண்டிருந்தால்  இந்த கலவரமே தடுத்து நிறுத்தப்பட்டிருக்கலாம்.

இந்த கலவரத்தை அடக்க மோசமான வழிகளைப் பின்பற்றிய ஆளுநர் சேர் ரொபர்ட் சார்மஸ் இப்படி கூறினார்.

“யாராலும் மறுக்க முடியாத உண்மை என்னவெனில், சாம்ராஜ்யத்தின் காலனித்துவத்தின் கீழ் இருந்த மக்கள் கூட்டம் இன்னொரு கூட்டத்தை தாக்கியது. தாக்கியவர்கள் சிங்களவர்கள். தாக்கப்பட்டவர்கள் அமைதியான முஸ்லிம்கள்.”

சார்மசின் கருத்தை விமர்சித்து சூசா மறுத்து வெளியிட்ட கருத்தின்படி “இது மறுக்க முடியாத உண்மை எனில், முதலாவது துப்பாக்கி சூடு முஸ்லிம் ஒருவரால் சிங்கள ஒருவர் தாக்கப்பட்டார். முதலாவது கத்திக்குத்து முஸ்லிம் ஒருவரால் சிங்களவருக்கு நிகழ்ந்தது. பௌத்த பெரஹரவை நிறுத்தும் வகையில் தொடர்ச்சியாக நடந்து கொண்டார்கள் அவர்கள். குருநாகலிலும் பெரஹர தாக்கப்பட்டது. கண்டியில் பொலிசாரை தமக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டு பெரஹரவை கட்டுப்படுத்தும் ஆணையைப் பெற்றுக்கொண்டார்கள். இப்படி ஒரு நிலைமை இதற்கு முன்னர் இந்த நாட்டில் வேறெந்த மதத்தவருக்கு ஏற்பட்டதில்லை. பொலிசாரின் விதிகளை ஏற்றுக்கொண்டு விதிகளை பின்பற்றிய சிங்களவர்களை குழப்பியவர்களும் அவர்கள் தான்.

பொலிசாரின் அங்கவீனத்தனம் தான் உயிர், உடமை சேதத்துக்கு காரணமென்று கலவரத்தை ஆய்வு செய்து ஐரோப்பிய ஆய்வாளர்கலும் தெரிவித்தார்கள்.

இதே காலப்பகுதியில் இந்தியாவிலும் பல்வேறு மதச் சண்டைகள் நிகழ்ந்துள்ளன. 1911 இல் கல்கத்தாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு கலவரம் நிகழ்ந்தது. அதனை அந்த பிரதேசத்து அரசர் மதத்தலைவர்களை அழைத்து சுமுகமாக பேசித் தீர்த்திருக்கிறார். 1914இல் ஏரா எனும் இடத்தில் திடீரென்று தோன்றிய கலவரத்தின் போது ஆளுநர் நேரடியாக களத்தில் இறங்கி தேவையான ஆணைகளை பிறப்பித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த செய்திகள் பதிவாகியுள்ளன. ஆனால் இலங்கையில் ஆளுநரோ இந்த கலவரம் பற்றியெறிந்து, பரவி சின்னாபின்னமாகும் வரை வெளியில் எவரையும் சந்திக்கவில்லை. அன்றைய கண்டி மாவட்ட அரசாங்க அதிபரை சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கி தலைவர்கள் ஒன்று சேர்ந்து  சந்தித்து இது குறித்து விசாரணை செய்வதாக ஒரு வார்த்தை சொல்லுங்கள் இது அடங்கிவிடும் என்று கோரனர். ஆனால் அக்கோரிக்கை அலட்சியமாக நிராகரிக்கப்பட்டது. கண்டி பொலிசாருக்கு அசம்பாவிதம் நடக்கப் போவது தெரிந்திருந்தும் கணக்கில் எடுக்கவில்லை. கலவரத்தை அடக்குவதற்கு அப்போது அங்கிருந்தவர் ஒரு பொலிஸ் அத்தியட்சகரும், சாஜன்ட் ஒருவர், கான்ஸ்டபிள் ஒருவர் ஆகிய மூவர் மட்டுமே.

ஓகஸ்ட் 11 அன்று சட்டசபையின் இலங்கைப் பிரதிநிதியாக இருந்த பொன்னம்பலம் இராமநாதன்  ஆற்றிய நீண்ட உரையில்...

“கொழும்பில் கலவரம் தொடங்கியபோது கொழும்பில் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் மாத்திரமே இருந்தார். கொழும்பில் இருந்த 674 பொலிசாரில் 180 பொலிசாரும், பொறுப்பதிகாரியும் கண்டிக்கு அனுப்பப்பட்டிருந்தனர். கொழும்பு பாதுகாப்பை அவர் மேற்கொண்டிருக்க வேண்டும். பொலிசார் எங்கும் அனுப்பபடாமல் அவஇவர் இடங்களில் நிலைத்து இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது...”

ஹர்ரி க்ரீசி வெளியிட்ட கருத்துக்களும் பிரசித்தமானவை. “கலவரம் நிகழ்ந்துகொண்டிருந்த வேளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூவர் மட்டுமே கடமையில் ஈடுபட்டிருந்தார்கள். யூன் 1ஆம் திகதியன்று கலகக் காரர்கள் படுகொலைகளை நிகழ்த்தியபடி, கொள்ளயடித்தபடி கையில் கனமான ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தபோது, பொலிசாரோ வெறும் கட்டைகளை வைத்துக்கொண்டு வீதியுலா வந்தார்கள். அவர்கள் ஆயுதம் தரித்திருந்தால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். ஒரு கட்டத்தில் நான் பாதுகாப்பு தேடினேன். வீதிகளில் இப்படி கொள்ளையடித்துக்கொண்டு அடாவடித்தனம் செய்கிறார்களே அவர்களை விரட்டியடிக்க வேண்டாமா என்று நான் பொலிசாரிடம் கேட்ட போது தமக்கு அதற்கான ஆணை பிறப்பிக்கப்படவில்லை என்று சர்வ சாதரணமாக கூறினார்கள்.”

கொழும்பில் கலவரத்தை தொடக்கியவர்கள் இரயில் திணைக்கள ஊழியர்கள். அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டபோதும் சிலர் பொலிசாருடன் இருந்த நட்பின் காரணமாக விடுவிக்கப்பட்டனர். பாணந்துறையில் பொலிசார் கைது செய்திருந்தவர்களை இன்னொரு குழு வந்து மிரட்டி விடுவித்துச் சென்றது. பொலிசாரின் அலட்சியமான போக்கும், கண்டிப்பின்மையும் கலகக்காரர்களுக்கு சாதகமாக அமைந்தன.

இலங்கையின் தேசப்பிதாவாக அழைக்கப்படும் டீ.எஸ்.சேனநாயக்கவின் சகோதரர் எப்.ஆர்.சேனநாயக்க பொலிஸ் தலைமையகத்தோடு சேர்ந்து பணியாற்றினார். அவர் இப்படி குறிப்பிடுகிறார்.

“...கலகக் காரர்கள் மேலும் பெருகி வருகிறார்கள் என்றும் மேலும் மோசமடைந்து பரவி வருவதாகவும் தகவல் கிடைத்ததும் பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று எனது ஒத்துழைப்பையும் வழங்கினேன். கலகக் காரர்களை அடக்கவோ, அவர்களை கைது செய்யவோ பொலிசார் எந்தவித முயற்சியையும் எடுக்காதது குறித்து சினமடைந்தேன். ஒன்றரை மைல் தூரம் நான் நடந்து சென்று கொண்டிருந்த போது பொலிசாரின் முன்னிலையில் கடையுடைப்புகள் நிகழ்வதைக் கண்டேன். பொலிஸ் பொறுப்பதிகாரி எங்கே என்று கேட்டபோது அவர் கொழும்பில் இல்லை என்று பதில் வந்தது. இணைப்பொலிஸ் அதிகாரி எங்கே என்றபோது அவரைப் பற்றி ஒரு தகவலும் இல்லை என்று பதில் வந்தது. பொலிஸ் அத்தியட்சகர் எண்டன் டோரப் என்பவரை சந்தித்து நான் எனது ஒத்துழைப்பை வழங்க விருப்பம் தெரிவித்தபோது தமக்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து எந்த ஆலோசனையும் வழங்கப்படவில்லை என்று பதில் வந்தது. இதே நாளில் பாணந்துறை, வேயங்கோடை கொன்ற இடங்களிலிருந்து உதவி கேட்டு பொலிஸ் நிலையங்கள் அவசர செய்தி அனுப்பின...”

கலவரத்தின் காரணமாக முஸ்லிம் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. பொலிசார் வெறும் பார்வையாளர்களாகவே இருந்தார்கள். பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் தன்னால் தூக்க முடியாத ஒரு இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டு வந்து ஒரு கடையை உடைக்கிறான். அவனுடன் கூட வந்த அவனின் வயதையொத்த சிறுவர்கள் அந்த கடைக்குள் இருக்கும் பொருட்களை அள்ளிக்கொண்டு வெளியே வருகிறார்கள். கூட்டமாக வந்த சில பெண்களும், வயது முதிர்ந்தவர்களும்  இப்படி கடைக்குள் நுழைந்து தம்மால் கொண்டு செல்லக்கூடிய அளவுக்கு தூக்கிக்கொண்டு வருகிறார்கள். ஒரு அரிசி மூட்டையை கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு வெளியே வந்து கொண்டிருந்தவர் வெளியிலிருந்த பொலிசாரை உரசிக்கொண்டு கடந்து செல்கிறார். துணிக்கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட துணி ரோல்களை சுமந்துகொண்டு பாதையில் செல்லும் கொள்ளையர்களையும் காணக் கூடியதாக இருந்தது. பொலிசாரைக் கண்ட சிலர் பொருட்களுடன் நின்று பார்த்தபடி இருக்க.

“எடுத்தாச்சு தானே.. போ..” என்று போலிசார் கத்தினர்.

பொலிசார் கையறு நிலையில் இருந்தனர். நடவடிக்கை எடுக்குமளவுக்கு பொலிசார் பலமாகவும் இருக்கவில்லை. கொள்ளையர்களுக்கு சாதகமாகவும் முஸ்லிம்களுக்கு பாதகமாகவும் இருந்தனர் பொலிசார்.

சாதாரண சட்டத்தின் படி தேவையேற்படின் பொலிசாருக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளும் அதிகாரம் கூட அன்று இருந்தது. ஆனால் இத்தனை பெரிய கலவரத்தின் போது கூட அவர்கள் அதனை செய்யவில்லை. தேவையேற்படின் இராணுவத்தை அழைத்திருக்க முடியும் அப்போதும் செய்யவில்லை. கண்டி நிகழ்வுகளில் போதும் இராணுவம் காலம் தாழ்ந்தே வந்தது. கண்டி நிகழ்வுகளில் போது முஸ்லிம்களுக்கு சாதகமாக பொலிசார் இருந்தார்கள் என்கிற குற்றச்சாட்டை கொழும்பில் வைக்கமுடியவில்லை. கொழும்பில் ஆரம்பத்தில் சிங்களவர்களுக்கே சாதகமாக இருந்தார்கள் பொலிசார். 

இதேவேளை இந்த நிலைமையை பயன்படுத்தி சில தனிப்பட்ட பழிவாங்கல்களும் நிகழ்ந்தன. களுத்துறையில் இப்படியான சம்பவங்கள் பதிவாகின. அங்கிருந்த ஆங்கில பொலிஸ் அதிகாரி பௌத்த விகாரைகளுக்கு சென்று பௌத்த மதகுருமாரிடம் ‘விகாரைகளை உடைப்பதற்காக முஸ்லிம்கள் வந்துகொண்டிருக்கின்றனர் உங்களை ஆயுதங்கள் சகிதம் தயார் நிலையில் பாதுகாத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறி பயமுறுத்தி இருக்கிறார். இந்த செய்திய வதந்தியாகவும் பரவவிடப்பட்டுள்ளது. கொழும்பை சேர்ந்த வழக்கறிஞர் ஈ.ஏ.பி.விஜேரத்ன இப்படி பொலிசார் அனாவசியமான வதந்திகளை பரவ விட்டிருப்பது குறித்து பொலிஸ் உயரதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். அது போல மட்டக்குளியில் பொலிஸ் சாஜன்ட் ஒருவர் துப்பாக்கியுடன் “மரக்கல”காரர்கள் வருகிறார்கள் என்று கத்திக்கொண்டு ஓடிச்சென்றுள்ளார். இவற்றின் போது பீதியடைந்த மக்கள் ஆயுதங்களுடன் காத்திருந்தது தான் மிச்சம். அனைத்தும் வெற்று வதந்திகள் என்பது நேரம் செல்லத் தான் தெரியவந்தது. அதேவேளை இந்த கூட்டங்களில் காத்திருந்தவர்கள் கொதிப்படைந்த நிலையில் அருகில் தென்பட்ட முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்துக்களை உடைத்து ஆத்திரத்தை தீர்த்துகொண்டனர் என்று கொழும்பு வழக்கறிஞர் டபிள்யு,ஜே.சீ.பெர்னாண்டோ தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

100 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கலவரம் நடந்திருக்கிறது. அதன் பின்னர் இலங்கையில் பல்வேறு கலவரங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1915 கலவரத்தின் காட்சிகள் அப்படியே அதன் பின்னர் நிகழ்ந்த கலவரங்களின் போது நம் கண் முன்னே நிகழ்ந்ததை அப்படியே காட்சிப்படுத்தியத்தை காண முடிகிறது.

இன-மத வெறுப்புணர்ச்சி படிப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டு, பரப்பப்பட்டு,  ஸ்தூலமாக நிறுவிய பின்னர் பரஸ்பரம் மூட்டிவிடப்படும் சண்டைகள் இலகுவாக ஒப்பேற்றப்பட்டுவிடுகின்றன. இந்த சண்டைகளுக்கு இடையில் பல்வேறு சக்திகள் தமது நலன்களை அனுபவிப்பதற்காக பற்றியெறியும் தீயை பூதாகரப்படுத்தி சமூகங்களுக்கிடையே பாரிய இடைவெளியையும், பிளவையும் ஏற்படுத்தி துருவ நிலைகளுக்குள் தள்ளி விடுகின்றனர். இலங்கையில் இனங்களுக்கு இடையில் இன்று பலமாக வேரூன்றியிருக்கும், அச்சவுணர்வு, பகையுணர்வு , சந்தேகவுணர்வு என்பனவற்றின் அடிப்படை அது தான்.

தொடரும்..


இக்கட்டுரையாக்கத்துக்கு உசாத்துணைக்கு பயன்பட்டவை
  • Memorandum upon recent disturbances in Ceylon - Perera, Edward Walter – (London, E. Hughes & co., 1915)
  • Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
  • A History of Sri Lanka - K. M. De Silva – (University of California Press - 1981)
  • The Rise of the Labor Movement in Ceylon - Kumari Jayawardena - Duke University Press, 1972
  • Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
  • “Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
  • “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam,  (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
  • “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
  • ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
  • ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates