Headlines News :
முகப்பு » , , , , » மலையக சிறுகதை வழித்தடத்தில் "அப்பாயி" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)

மலையக சிறுகதை வழித்தடத்தில் "அப்பாயி" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)

10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் பிரமிளா பிரதீபன் ஆற்றிய விமர்சன உரை சில திருத்தங்களுடன் தரப்பட்டுள்ளது. 

கதை சொல்வதி;ல் மிக நீட்சியான மரபை கடந்து வந்துகொண்டிருப்பவர்கள் நாங்கள். அந்த மரபில் கதை என்பது எமது வாழ்வுடன் மிகவும் நெருக்கமாக கலந்து விட்டிருக்கும் கலை எனும் வகையிலேயே அதனை எம்மால் நோக்க முடிகிறது. 

இந்த கதைசொல்லல் பற்றிய ஆழமான பார்வையினை சமகால நவீன இலக்கிய கோட்பாடுகள் வேகமாக முன்னெடுக்கிறது என்பதுடன் பன்னாட்டு இலக்கிய பரப்பில் பெருமளவில் ஆய்விற்குட்படுத்தும் துறையாகவும் புனைகதை இலக்கியம் வளர்ந்து வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிகிறது.  

இத்தகைய நடைமுறை சூழ்நிலைக்கு ஈடுகொடுக்கும் வகையில்  மாற்றுச்சிந்தனைகளுடன் தர்க்கம்புரிதல், புதிய சிந்தனைகளுடன் ஊடாடுதல்;, புத்தாக்கத்திறன்களை விருத்தி செய்துக்கொள்ளல் முதலிய விசேட பண்புகளை எமதாக்கிக்கொண்டவர்களாகவே நாங்கள் இன்று இலக்கியத்தளத்தில் இயங்க வேண்டுமென்பது காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது. 

இந்த குறிப்பிட்ட தேவையின் நிமித்தம் எம்மிடத்தில் நாமே கேட்டுக்கொள்ள வேண்டியதான இரண்டு முக்கிய கேள்விகள் உள்ளன. 

  1. இலங்கை இலக்கியப்பரப்பிற்குள் நாங்கள் எங்கே நிற்கிறோம்?
  2. உலக இலக்கியப்பரப்பு எனும் தளத்தில் எங்களுக்கான வகிபாகம் எவ்வாறானதாக உள்ளது?  

இங்கே நான் ‘நாங்கள்’ என குறிப்பாக சுட்டியது மலையக இலக்கியத்தளத்தினையே. 

இதன்படி மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகளினூடாக நாம் பெற்றிருக்கும் அந்த இடமும் வரையறையும் இதுதானென எங்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கும் பட்சத்தில் அதனை விருத்தி செய்ய அல்லது குறைபாடுகளை நிவர்த்தித்துக்கொள்ள நாங்கள் மேற்கொண்டிருக்கும் எத்தனிப்புகள் ஏதேனும் உள்ளதாவென சிந்திக்க வேண்டிய கட்டாயமும் எங்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. 

எங்களிடத்தே சிறுகதைகள் பெருகிய அளவிற்கு அவை பற்றியதான விமர்சனங்கள் பெருகவில்லை. ஆய்வுகளிற்கான தேவை ஏற்படுத்தப்படவில்லை.  அதன் விரிவும் ஆழமும் வளர்ச்சியடையா நிலையில்  எமக்கான சமூக பொறுப்பும், படைப்பொன்று குறித்ததான எச்சரிக்கையுணர்வும் படைப்பாளனிடத்தே சரியான முறையில் விழிப்படையவில்லை.  

ஒரு விமர்சனம் என்பது வெறும் புகழ்ச்சியினை மாத்திரம் மையப்படுத்தியதாகவோ அல்லது ஒரு விளம்பரமாகவோ இருந்துவிட முடியாது. ஒரு படைப்பு குறித்ததான விமர்சனமானது  படைப்பாளர்களை செதுக்க வேண்டும். அவர்களது படைப்புக்களின் நேர்த்தியை செம்மைப்படுத்தத் தூண்டுமொரு உந்தலை அளித்திட வேண்டும். அவர்களின் அடுத்த படைப்பின் மீதான தெளிவிற்கு வித்திட வேண்டும். 

மலையக இலக்கிய பரப்பிற்குள் அந்த நடைமுறை வளர்ந்திருக்கிறதா? 

அதற்கான வாய்ப்புக்களையும் களங்களையும் நாங்கள் விரிவாக்கம் செய்துகொண்டிருக்கிறோமா?

இதுவல்லா வேறுவகையில் சிந்தித்தால்… 

எமது இலக்கியத்தளத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த நாங்கள் எத்தகைய முயற்சிகளை நடைமுறைப்படுத்தியிருக்கிறோம்?

இந்த வினாக்களுக்கான விடைகளை தேடினால் அல்லது அதற்காக இனியேனும் முயற்சித்தால்  எமக்கானதாய் தனித்துவத்துடன் மிளிரும் மலையக இலக்கிய பரப்பில் நேர்மறையான நகர்தலை சாத்தியப்படுத்த முடியுமென்றே எனக்குத் தோன்றுகிறது.

இத்தகையதொரு புரிதலுடன் ‘அப்பாயி’ எனும் நூலின் சிறுகதைகள் பற்றி ஆராய்ந்தால், இதனை பிரதான நான்கு பிரிவுகளுக்கமைவாக தெளிவுப்படுத்தலாம் 

  1. கதைக்களம்
  2. கருப்பொருள்
  3. மொழி  
  4. கதைசொல்லும் முறை 

கதைக்களம் எனும் வகையில், இந்நூலின் எல்லா கதைகளுமே மலையக வாழ்வியலையும் அதன் சூழலையுமே சார்ந்து நிற்கின்றன. நிகழ்வெளிகள் மொத்தமும் சமூகவியல் கோலத்தோடும் புவியியல் வளத்தோடும் ஒன்றிணைந்ததாகவே ஆக்கப்பட்டிருக்கிறது. 

இதற்கமைவாக கதைக்களம் அல்லது நிகழ்வெளி பற்றியதான விபரிப்புக்களினூடாக காண்பியல் உருவாக்கங்களை படைத்திட இந்நூலாசிரியர் முயற்சித்திருக்கும் விதத்தினை ‘எங்களின் மேதினம்’ எனும் கதையில் விபரிக்கப்பட்டிருக்கும் பின்வரும் பகுதியினூடாக தெளியலாம். 

‘…முகத்தையும் உடம்பையும் அடிக்கும் சாரலில் இருந்து காப்பாற்றிக்கொள்ள கொங்காணியாக போட்டிருக்கும் பொலித்தீன் ரெட்டை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு கொழுந்து மலைக்கு போய் நிரைப்பிடித்தார்கள். மற்ற ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து கொழுந்து நிரையில் கொழுந்தைப் பறித்தார்கள். மழை நீரால் கொழுந்து சேகரிக்கும் பொலித்தீன்கள் கூடையின் பாரத்தை அதிகப்படுத்தின…’

இத்தகையதான  களவிபரிப்புகளை அநேகமாக எல்லா கதைகளிலுமே காணக்கூடியதாய் இருப்பதை இங்கே சுட்டிக்காட்டுதல் பொருத்தமாக அமைகிறது.

அடுத்ததாக இந்த சிறுகதைகளின் கருப்பொருள் பற்றி ஆராய்கையில் தனது உளப்பாங்கினையும் கண்ணோட்டத்தினையும் கருத்தியலையும் தாங்கி நிற்க வேண்டும் எனும் வகையில் படைப்பளர் முயற்சித்திருப்பது புலனாகிறது.  

மலையக மக்கள் சார் வாழ்வியல் பிரச்சனைகள், சம்பளப்போராட்டம், அரசியலில் மலையகப் பெண்களது பங்களிப்பு போன்றதான சமகாலத்திற்கு பொருந்திப்போக கூடியதான பாடுபொருள்களையே நூலாசிரியர் பயன்படுத்த துணிந்திருக்கிறார். 

தொடர்ச்சியாக, மொழிப்பிரயோகம் பற்றி நோக்குகையில் வட்டார வழக்கின் இயல்பான பிரயோகத்தை கதைகளினூடே இரசிக்க  முடிகிறது. குறிப்பிட்ட சில வட்டார வழக்குகளினூடாக நிகழ்வெளியும் சமூகத்தின் தனித்துவமும் அடையாளப்படுத்தப் பட்டிருக்கின்றன. அத்துடன் வட்டார வழக்குகள் ஒரு மொழியின் செழுமைக்கும் ஒன்றிணைப்பிற்கும் வலுவூட்டக் கூடியவை எனும் வகையில் தனக்கானதான சமூகவியல் கோலத்தையும் கலாசார மரபுகளையும் தெளிவுப்படுத்தி பதிவு செய்துள்ளமையும் இங்கே நோக்கத்தக்கது.

குறிப்பாக ‘அப்பாயி’ எனும் கதையில் ‘என்ன உன்னோடு சேர்த்துக்கொள்ளு மவராசனே…!’ என்ற ஒரு பகுதி அவளின் நினைவாக குறிப்பிடப்படுகிறது. 

இந்த ஒரு சிறிய வரியை ஆதாரமாக்கி அம்மூதாட்டியின் தனிமையுணர்வை அல்லது அவ்வுணர்வில் தொக்கு நிற்கும் அவர்களது அந்நியோன்னிய வாழ்வை என்று பல்வேறு கோணங்களில் சிந்திக்க தூண்டியிருப்பது சிறப்பு. 

அதற்கடுத்ததாய் இந்நூலின் கதைசொல்லும் முறை அல்லது பயன்படுத்தப்படும் மொழிநடை பற்றியதான தேடலின் போதில்தான் எனதெண்ணத்தில் ஒருசில முரண்பாடுகள் தோன்றுவதை தவிர்க்க முடியாமலிருந்தது.  

கதை சொல்லும் முறையினூடாகவே கதையின் நுகர்வினை அனுபவிப்போர்களாகிய வாசகர்கள் கதையுடன் நேரடியாக தொடர்புப் படுகிறார்கள்.  வாசிப்பின் தொடர்பயண உத்வேகத்தை அடைகிறார்கள்.  

நல்ல வாசகர்கள் கதையை வாசிப்போராக மட்டும் தொழிற்படுவதில்லை. குறித்த இலக்கியப்படைப்போடு இடைவினை கொள்பவர்களாயும் இருக்கின்றார்கள். அவ்வாறான இடைவினைத் தொடர்புக்கு மொழிநடை என்று கொள்ளப்படும் கதைசொல்லல் முறையே பாரிய பங்களிப்பைச் செய்கின்றது. 

ஒரு படைப்பினது காண்பியல் தரிசனத்தை வாசகர்களுக்கு கடத்த மொழியை மாத்திரமே படைப்பாளர்கள் பயன்படுத்துகிறார்கள் எனும் போது கதைசொல்லல் முறையின் முக்கியத்துவம் எத்தகையதென உணரல் அவர்களது கடமையாகவே உள்ளது.

அவ்வகையிலான நோக்கில் இந்நூலை ஆராயும் போது ‘அப்பாயி’ எனும் நூலின் புனைவுமதிப்பானது  மனித பிரச்சனைகளுடனும் உறவுகளுடனும் தொடர்புறும் போதிலான நிகழ்வுகளை சித்தரிப்பதனூடாக வலுப்பெற்றிருப்பதாகவே காணப்படுகிறது.  எனினும் இந்நூலாசிரியர் அதனை   வெளிப்படுத்தத் துணிந்த எடுத்துரைப்பு முறையை ஆராயும் பொழுதுதான் அவர் அதனை இன்னுமொருச்சுற்று செம்மைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருக்கலாமோவெனும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

அவ்வாறான செம்மைப்படுத்தல் நடைபெற்றிருக்குமாயின் இதே கதைகள் புதியதொரு பரிணாமத்துடன் வாசகனை சென்றடையும் வாய்ப்பை நிச்சயமாய் ஏற்படுத்தியிருக்கும்.  மேலும் அத்தகையதொரு செயற்;பாடு படைப்பாளனை மேலும் வலுவடையச் செய்யவும் உதவியிருக்கும்.

இவ்விடயங்களை தவிர இந்த நூல் பற்றி பேசுகையில் கொடகே எனும் இலங்கையின் மிகப்பிரபல்யமான பதிப்பகத்தினூடாகவே இந்நூல் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே இந்நூலை படிக்க ஆரம்பிக்கும் வாசகரது மன உணர்வில் இயல்பாகவே ஒரு நம்பிக்கையும் பூரண திருப்தியும் ஏற்பட்டிருக்கும்.  

எனினும் அத்தகைய நம்பிக்கையுடனான வாசகர்களுக்கு இந்நூலில் இடைக்கிடையே பரவலாக காணக்கிடைக்கின்ற எழுத்துப்பிழைகளாலும் அதனால் ஏற்படுகின்ற கருத்துப்பிழைகளாலும் வாசிப்பு இடர்பாடுகள் ஏற்படுமிடத்து அங்கே அவர்களது நம்பிக்கை சிதைவடையும் நிலை உருவாகிறது.  எனவே இவை போன்ற சிறிய கவனயீனங்களை இனிவரும் காலங்களில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமென்பதையும் இவ்விடத்தில் தாழ்மையுடன் பதிவு செய்யலாமென விரும்புகிறேன்.

அத்துடன் தற்கால நவீன இலக்கியத்தின் புதிய பரிணாமங்கள் வித்தியாசமான பாய்ச்சலுடன் புதிய சிந்தனைகளை எமக்குள் தோற்றுவிக்க முயற்சிப்பதால் இலக்கியத்தின் போக்கு எம்மையொத்தோருக்கு  மிகவும் சாதகமாக அமைந்திருப்பதாகவே எண்ண முடிகிறது.  

அதாவது சமகால நடைமுறையில் மூன்றாம் உலக நாடுகளின் இலக்கியங்கள் முன்னனிக்கு வந்து, விளிம்புநிலை எழுத்துக்களையும் காலங்காலமாய் ஒடுக்கப்பட்ட எழுத்துக்களையும் இருண்டுபோனதாய் ஓரங்கட்டப்பட்ட எழுத்துக்களையும் வெளிக்கொண்டுவரும் புதியவெளிகளை திறந்துவிட்டிருக்கும் நிலையினை வெகுவாக அவதானிக்க முடிகிறது.  

இந்த சூழ்நிலையை சாதகமாக்கி எமது மலையக இலக்கியத்தின் வெளிப்படுத்தல்களையும் தனித்துவத்தையும் நிலைநிறுத்திக்கொள்ள அல்லது உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமெனின்…  

  1. மலையக இலக்கியத்து மூத்த ஆளுமைகள் அடுத்த சந்ததியினருக்கான வழிகாட்டல் பற்றி சிந்தித்தல்…
  2. புதிய படைப்பாளர்களின் தகைமைகளை இனங்கான தமது அகவயத்தன்மையினை விடுத்து அவர்களை அணுகுதல்…
  3. ஒரு படைப்பாளனை வெறும் புகழ்ச்சியினால மாத்திரமே அணுகி ஊக்குவிக்கும் பாங்கை இல்லாதொழித்தல்…

முதலிய மிகவும் அத்தியாவசியமான சில நடைமுறைகளை கையாள்வதனூடாக நாம் எம்மை வளர்த்துக்கொண்டு உலக இலக்கியங்களுக்கு ஒப்பான இலக்கிய படைப்புகளை உருவாக்கும் தலைமுறையினரை தோற்றுவிக்க இயலும் என்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்துக்கொள்கிறேன். 

அத்துடன் புதிதாக இலக்கியவெளிக்குள் பிரவேசித்திருக்கும் படைப்பாளர் நடேசன் துரைராஜ் அவர்கள் மென்மேலும் படைப்புளை சிறந்த முறையில் படைத்து மலையக இலக்கியத்திற்கு வளம் சேர்க்க வேண்டும் எனவும்  விரும்புகிறேன். 

நன்றி.

Share this post :

+ comments + 1 comments

அண்மைக்காலமாக தங்களது ஆக்கங்கள் பலவற்றை வாசிக்க கிடைத்தது. மிகவும் அருமையான தரமான ஆக்கங்கள். அவை வாசகர்களை வாசிக்க ஊக்கப்படுத்தும் அதேநேரம் சிந்திக்கவும் தூண்டுகிறது. உங்களது இந்த விமர்சனம் இந்நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates