Headlines News :
முகப்பு » , » புதிய அரசியலமைப்பு திருத்தமும் மலையக தேசியமும் - அருள்கார்க்கி

புதிய அரசியலமைப்பு திருத்தமும் மலையக தேசியமும் - அருள்கார்க்கி

இலங்கையில் கடைசியாக 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பு இன்று பலரும் இதையொரு யாப்பாக ஏற்றுக் கொள்ளாமல் இதனை ஒரு மாத சஞ்சிகையாகக் கருதுகின்றனர். இதற்கான முக்கிய காரணம் இந்த யாப்பின் மீது 20 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டமையே. அதில் முக்கியமாக 20 ஆம் திருத்தத்திற்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற அங்கத்தவர்கள் இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிராக சர்வாதிகார ஆட்சிமுறைமைக்கு ஆதரவாக வாக்களித்தமையே. அப்படியானால் பாராளுமன்ற அங்கத்தவர்கள் உண்மையாக மக்களுக்கான சேவை நோக்கில் செயற்படுகின்றனரா அல்லது தமது சுயநலம், பணம், அதிகாரம், பதவி என்பவற்றை தக்கவைத்துக் கொள்வதற்காக செயற்படுகிறார்களா என்பது எம் முன்னே எழும் வினா.

அத்தோடு குற்றம் செய்தவர்கள், ஊழல் புரிந்தவர்கள், வன்முறையில் ஈடுபட்டவர்கள், அதிகாரத்தை து~;பிரயோகம் செய்தவர்கள் போன்றோர் பாராளுமன்றத்தில் அங்கத்தவர்காளாக இருப்பது இந்த நாட்டிற்கு மிகவும் வெட்கக் கேடானதொரு விடயமாகும். ஆனால் இனிவரும் காலங்களில் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படுபவர்கள் படித்தவர்களாகவும் சுயநலமற்றவர்களாகவும் அதேவேளை எல்லா சமூகத்தினரையும் இணைத்துக்கொண்டு செயற்படக்கூடிய தொண்டர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு பாரிய சம்பளம், ஓய்வூதியம், விசேட சலுகைகள் என்பன மறுக்கப்பட வேண்டும். அவர்களுடைய அமைச்சில் அவர்களின் உறவினர்கள் எவரும் நிர்வாக சேவையில் அமர்த்துதலை தடைசெய்ய வேண்டும். அத்தோடு அவர்களின் தேர்தல் கால பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு பொதுத் துறையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது மறைமுகமாக பொதுமக்களாகிய எமது வரிப்பணத்தை மேலும் மேலும் அதிகரிப்பதாவே அமையும். இதனால் இன்று 17 பேருக்கு 01 பொதுத்துறை சேவையாளர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

அதாவது 2005ஆம் ஆண்டு ஐந்து இலட்சமாக இருந்த பொதுத்துறை இன்று பதினைந்து இலட்சமாக அதிகரித்திருக்கின்றது. உ-ம் இலங்கை போக்குவரத்து சபையை எடுத்துக் கொண்டால் ஒரு பஸ்வண்டிக்கு 07 ஊழியர்கள் என்ற விதத்தில் காணப்படுகின்றனர். இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபணம் 2009ஆம் ஆண்டு 800 ஊழியர்களை மட்டுமே கொண்டிருந்ததோடு அதில் எந்தவிதமான விருத்திகளையும் மேற்கொள்ளாது 2015ஆம் ஆண்டு 1800 ஊழியர்களாக அதிகரிக்கப்பட்டது. இதனால் பொதுத்துறை நிர்வாகம் மிகவும் நட்டத்தில் இயங்குவதாக பொதுத்துறை நிர்வாகத்தின் அறிக்கை செய்தி வெளியிட்டிருக்கின்றது. எமது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டுமென்றால் இவ்வாறான குறைகள் களையப்படல் வேண்டும். 

ஆங்கிலேயர் 1815ஆம் முழு இலங்கையையும் கைப்பற்றியதன் பின்னர் தனித்தனி இராச்சியங்களாக இருந்த இந்நாட்டில் தங்களுடைய நிர்வாக அபிலாஷைகளுக்காக 1833ஆம் ஆண்டு ஒன்றாக்கினர். இதுவே இன்றைய எமது நாட்டினுடைய பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

இதைவிடவும் மோசமான செயற்பாடு 1824ஆம் ஆண்டுக்குப் பின் இந்நாட்டில் தங்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய மக்கள் தொகை இல்லாத காரணத்தால் அவர்களின் ஆட்சியில் இருந்த இன்றைய இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஸ் போன்ற நாடுகளில் இருந்து தங்களுடைய பணப்பயிர்ச்செய்கை, நகர சுத்திகரிப்பு, புகைவண்டிப் பாதையமைத்தல், துறைமுகம் அமைத்தல் மற்றும் புதிய பாதைகள் அமைத்தல் போன்ற தங்களின் வியாபார நோக்கங்களுக்காக அரை அடிமைகளாக மக்களை இறக்குமதி செய்தனர். ஆனால் சுதந்திரம் கொடுத்தபொழுது பெரும்பான்மை இன அரசியல் தலைவர்களிடம் கையளித்த பின் இந்த மக்களுடைய பிரஜாவுரிமை குறித்த பிரச்சினை 1927ஆம் ஆண்டு தொடக்கம் 2003 ஆம் ஆண்டு வரை இழுபறியாய் இருந்தது. இதற்கு ஆங்கிலேயரும் பொறுப்பாவர். ஏனெனில் சோல்n;பறி யாப்பில் பிரஜாவுரிமை பற்றிய சரத்துக்கள் உள்ளடக்கப்படாமையாகும். 

1972ம் ஆண்டு யாப்பும், 1978ம் ஆண்டு யாப்பும் பெரும்பான்மை அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டு சிறுபான்மையினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் அந்த எதிர்ப்பை மீறி பெரும்பான்மை அரசியல்வாதிகளால் அங்கீகரிக்கப்பட்டது. அதே நிலைமை புதிய யாப்பில் உருவாகாமல் இருக்க சகல மக்களுடைய கருத்துக்களையும் கேட்டறிவது மிகவும் முக்கியமானதாகும். யாப்பு என்பது ஒரு நாட்டின் இதயத்துடிப்பு. இந்த யாப்பு சரியாக அமைக்கப்பட்டால்தான் நாட்டில் இனவாதம் வன்செயல்கள், தொடராமல் நாட்டினுடைய எதிர்கால சமூக அரசியல் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். எமது நாடு வறிய நாடல்ல. ஆனால் சுதந்திரம் அடைந்த நிலையிலும் பார்க்க இன்று ஏனைய நாடுகளையும் விட பின்தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு காரணம் எமது நாட்டினுடைய கொள்கைகளும் செயற்பாடுகளும்தான். இந்த நிலை தொடராமல் இருக்க புதிய யாப்பு எல்லா இன மக்களுடைய அபிலாசைகளையும் நிறைவேற்றக் கூடியதாகவும், யாப்பில் கூறப்பட்டவை நடைமுறைப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அந்தவகையில் மலையக தேசியத்தை அரசியலமைப்பு ரீதியாக மீள நிறுவுவதற்கு பின்வரும் ஏற்பாடுகள் மற்றும் திருத்தங்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

01. தேசிய இன அடையாளம் 

  • இந்திய வம்சாவளி மக்களை அரசியல் யாப்பு ரீதியாக மலையக தமிழர் என்ற பெயரில் அங்கீகாரம் வழங்க வேண்டும். அத்துடன் இச்சமூகத்தை வம்சாவளி பிரஜைகளாக ஏற்று கொள்வதுடன் இம்மக்களுக்காக பிரித்தானியரால் உருவாக்கப்பட்டு இன்றுவரை நடைமுறையிலுள்ள ஐனெயைn ழுசனiயெசல டுழற இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
  • சகல இனங்களும் தேசிய இனங்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  • இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரையும் இந்நாட்டின் வம்சாவளிப் பிரஜைகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
  • அண்மைக் காலமாக மலையகத் தமிழர் என்ற பதம் பாவிக்கப்பட்டு வருகின்றதொரு சூழலில் அதனை அநேகரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே அந்தப் பதம் யாப்பினூடாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

02. மொழி உரிமை

இலங்கையில் தொடர்ச்சியாக மொழி பிரச்சினைகள் இருப்பதன் காரணமாக இலங்கை அரசியல் யாப்பில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் அரசகரும மொழிகளாக  அங்கீகரிக்கப்பட்டுள்ளன.  ஆகவே நாம் முன்மொழிவது ஆங்கிலத்தை கரும மொழியாக (றுழுசுமுஐNபு டுயுNபுருயுபுநு) கொண்டு வருவதனூடாக சிங்களமும் தமிழும் நடைமுறை மொழிகளாக இருப்பின் மொழி ரீதியான பிரச்சினைக்கு தீர்வு காணலாம். அரச சுற்று நிரூபங்கள், தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், மரணச் சான்றிதழ் மற்றும் விவாகச் சான்றிதழ் என்பன மும்மொழிகளிலும் இருத்தல் வேண்டும். கடந்த அரசாங்கத்தில் 44 பிரதேச செயலகப் பிரிவுகளை இருமொழி பிரதேச செயலகங்களாக பிரகடனப்படுத்தியுள்ளார். இதனை முறையாக அமுலாக்குவதற்கு தமிழ் உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட வேண்டும். 

03. மலையக தமிழருக்கான ஒதுக்கீட்டு முறைமை

இலங்கையில் 200 வருடங்களாக இச்சமூகம் வாழ்ந்து வருகின்றது. ஆனால் இன்று வரையிலும் முழுமையான தேசிய நீரோட்டத்தில் இச்சமூகம்  இணைக்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும். இதனால் குறிப்பிடப்பட்ட காலங்களுக்கு தொழில் வாய்ப்புகளின்போது விசேட ஒதுக்கீட்டு முறைமைகளை பின்வரும் விடயங்களில் நடைமுறைபடுத்தப்பட வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எல்லா மட்டத்திலும் ஆகக் குறைந்தது 30 சதவீதம் ஒதுக்கப்பட வேண்டும். பிரதிநிதித்துவ அரசியல்,  அரச தொழில், நிதி, பொருளாதாரம், உட்கட்டமைப்பு, அபிவிருத்தி என்பவை பிரதானமானவையாகும். 

04. மத சார்பற்ற அரசு

அரசு குறிப்பிட்ட மதத்தை முன்னுரிமைப்படுத்தி யாப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மாற்றி அனைத்து மதத்திற்கும் சமனான அந்தஸ்;து வழங்கக் கூடியதான மத சார்பற்ற அரசு என யாப்பில் குறிப்பிடப்பட வேண்டியதுடன் அனைத்து மதங்களுக்கும் சமனான அந்தஸ்;து வழங்க வேண்டும். எமது நாடு ஏனைய நாடுகளைப்போல (இந்தியா, நேபாளம்) மதச் சார்பற்ற நாடாக மாறவேண்டும். அதேநேரம் எல்லா சமயமும் சமத்துவமாக கணிக்கப்பட வேண்டும் அரசு எந்தவொரு சமய நடைமுறையிலும் கைவைக்கக்கூடாது. ஆனால் எல்லா சமயங்களும் இந்நாட்டின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். அதனை மீறும்பொழுது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

05. அதிகார பகிர்வு

1972ம் ஆண்டு யாப்பில் உருவாக்கப்பட்ட ஒற்றையாட்சி முறை மாற்றப்பட்டு அதிகாரப் பரவலாக்கல் மூலம் விசேடமாக சமூகத்தில் கீழ்மட்டத்தில் காணப்படும் மலையகத் தமிழ் மக்களும் ஏனைய சமூகத்தவர்போல வாழ்வதற்கான சம வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட பாராளுமன்றம் அமைக்கப்படுவதுடன் பாராளுமன்றத்திற்கு வகைக் கூறக் கூடிய ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்த வேண்டும். அதேபோல் தேர்தலில் தோல்வியுற்ற ஒருவரை தேசிய பட்டியலில் இணைத்துகொள்வது அவருக்கு அமைச்சு பதவிகள் கொடுப்பது போன்றவை மக்களது இறைமையை உதாசினப்படுத்துவது ஆகும்.

மலையக தமிழருக்கு தேசிய பட்டியலில் இடம் ஒதுக்கப்படுவது அவசியம் என்பதுடன் பெண்களுக்கும் ஒதுக்கீட்டு இடம் வழங்கப்படல் வேண்டும். சிறுபான்மை மக்களுக்கான சட்டவாக்கம் - யாப்பில் குறிப்பிடபட்டுள்ள சிறுபான்மை மக்கள் தொடர்பான விடயங்களில் மாற்றங்கள் திருத்தங்கள் வரும்போது சிறுபான்மை மக்களின் கருத்துக்களை கருத்தில் கொண்டு மாற்றம் செய்யப்பட வேண்டும். அதேபோல் மலையக மக்களுக்கான அதிகாரப்பகிர்வு என்ற விடயம் அம்மக்களின் éர்வீக வாழிடம் மற்றும் இன விகிதாசாரம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும்.

அரசு 

இச்சிறிய நாட்டிற்கு 4 தேர்தல்கள் தேவையா? 225 பாராளுமன்ற அங்கத்தவர்கள் தேவையா? அமைச்சரவையில் ஆகக்கூடியது 25 அமைச்சர்களும், 25 பிரதி அமைச்சர்களும்தான் உள்ளடங்க வேண்டும். அமைச்சர்கள் (அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள்) கூடுவதால் வரிச்சுமையும் அரச செலவீனமும் மக்களின் மீது  சுமத்தப்படுகின்றது. அரசியல்வாதிகளுக்கு ஓய்வூதியம் கொடுப்பதாக இருந்தால் அது 60 வயதிற்கு பிறகு ஒரு சாதாரண அளவில் கொடுக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் யாராவது தேர்தலுக்குப் பின் கட்சி மாறினால் அதனால் தன்னுடைய பாராளுமன்ற அங்கத்துவத்தை இழக்கவேண்டும். மேலும் கடந்த காலங்களில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் வெஸ்ட் மினிஸ்டர் முறையிலும், விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையிலும் சிறுபான்மையினர் 20 சதவீதங்கூட அடையவில்லை. அவர்களுடைய பிரதிநிதித்துவம் 30 வீதமாக உயர்த்தப்பட்டு அதில் பெண்களின் வீதம் 25 ஆகக் காணப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். விசேடமாக காணி பொலிஸ் அதிகாரங்கள் 13 வது அரசியலமைப்பு திருத்தத்திற்குட்பட்டும் சிறுபான்மையினரின் சமகால தேவைகளை கவனத்திற் கொண்டும் மாகாண சபை முறைமை வலுப்படுத்தப்பட வேண்டும். சிறுபான்மையினருக்கு எதிராக கொண்டுவரப்படும் சட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவர்களுக்கான ஒரு பாதுகாப்பு வலை உருவாக்கப்பட வேண்டும். சோல்பரி அரசியல் திட்டத்தில் இத்தகைய ஒரு முறை காணப்பட்டது.செனட் சபையொன்று உருவாக்கப்பட வேண்டும். அதில் 51 வீதம் சிறுபான்மை மக்களை கொண்டிருக்க வேண்டும்.

தொழிலின் நிமித்தம் வெளிநாடுகளில் வாழும் இலங்கை வாக்குரிமை பெற்றவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.புதிய அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் குடியரசுக் கோட்பாடுகள், மதச்சார்பின்மை, அரசியல் பன்மைத்துவம், அரசியலமைப்பின் உயர் ஆதிக்கம், சட்டத்தின் ஆதிபத்தியம், அதிகாரப் பங்கீடு, என்னும் கோட்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு ரீதியிலான உரிமைகள், நல்லாட்சி, பன்மைத்துவம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான உரிய சட்டரீதியான பாதுகாப்புடன்,சட்டவாக்கச் சபைக்கு நிறைவேற்றுத்துறையின் அரசியல் வகைப்பொறுப்பை உறுதிசெய்யும் முழுமையான வெஸ்ட் மினிஸ்டர் முறைக்கு மீண்டும் செல்ல வேண்டும்.

பன்மைத்துவ சமூகத்தில் சரியான ஜனநாயகப் பிரதிநிதித்துவத்திற்கு, மிக முக்கியத்துவம் வாய்ந்த அனைத்தையும் உள்ளடக்குகின்ற விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறையை பாதுகாக்கின்ற அதேசமயம் தொகுதிவாரியான தேர்தல் முறையின் நல்லம்சங்களை ஒன்றிணைக்கும், கலப்பு பிரதிநிதித்துவ விகிதாசார முறையை அமுல்படுத்துவது அவசியம். நீதிமன்றம் அரசியலமைப்பின் உயர் ஆதிக்கத்தன்மை பற்;றிய அடிப்படைக்கோட்பாட்டின் பொறுப்பான அதியுயர் நிறுவனம் ஆக வேண்டும். பௌதீக அலகுகளுக்கிடையே கூட்டுறவைப் போதிக்கும் சட்டவாக்க ரீதியிலான ஆழ்ந்தாராய்வை அதிகரிக்கும் இரண்டாவது சபையை உருவாக்கி இதற்கு உறுப்பினர்களாக அரசியலமைப்பு சபைமூலம் நியமிக்கப்படக்கூடியதும், மாகாண நிதியச்சட்டவாக்க சபைகளில் இருந்தும் தெரிவுசெய்யப்படும் உயர்ந்த ஆற்றல்களைக் கொண்டவர்களாக அமைய வேண்டும். மேலும் சட்டவாக்க சீர்த்திருத்தங்கள், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு அதற்கு பதிலீடான தேசிய பாதுகாப்புச் சட்டம் என்பன உருவாக்கப்பட வேண்டும்.

அரச கடன்

அரசாங்கம் வெளிநாடுகளில் கடன் பெறும் போது நாட்டின் வருமானத்திற்கு ஏற்ப பெறப்படும் கடன் பாராளுமன்ற அங்கீகாரத்தை பெற்றதன் பின்னர் கடன் பெறப்படுதல் வேண்டும். ஏனெனில் 2012ஆம் ஆண்டு மட்டும் வெளிநாட்டு படுகடன் 3709 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதனால் ஒவ்வொரு தனிநபரும் சுமார் ஐந்து இலட்சத்துக்கும் மேலான கடனாளியாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான கொள்கைகள் வறுமையை வளர்க்குமே ஒழிய ஒருபோதும் குறைக்காது. 

மனிதவுரிமை மீறல் வழக்குகள்

இலங்கை கைச்சாத்திட்ட ஐ.நா சமவாய்ப்புகள் யாவும் அடிப்படை உரிமையில் சேர்க்கப்பட வேண்டும். இதில் சிறுபான்மையினர் தொடர்பில் சட்டங்கள் உருவாக்கப்பட்டால் அவர்களின் கருத்துக்களும் கேட்டறியப்படல் வேண்டும். தற்போதைய நிலையில் மனித உரிமை மீறலுக்கு உட்பட்ட ஒருவர் உயர் நீதிமன்றத்திலே வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும். இது சாதாரண குடிமகனுக்கு செய்ய முடியாதுள்ளதால் புதிய யாப்பில் மாவட்;ட நீதிமன்றங்களில் வழக்குத் தொடர வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

கல்வி

அரசு சர்வதேச பாடசாலைகளையும் தனியார் பாடசாலைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து அவற்றை நெறிப்படுத்த வேண்டும். தொட்டிலில் தொடங்கி தொழில் வரையிலும் ஒவ்வொரு பிள்ளைகளும் சரியான, முறையான கல்வியைக் கற்கக்கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டும்.  விசேடமாக மலையகத்தில் அமைந்துள்ள சகல தோட்டங்களிலும் அதன் பிரிவுகளிலும் முறையான முன்பள்ளிகள் அமைக்கப்பட வேண்டியதோடு அவை பிரதேச சபைக்குள் உள்வாங்கப்பட வேண்டும். இலங்கையின் உயர்கல்வியை வலுபடுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும். விசேடமாக மலையக மாணவர்கள் சந்திக்கும் வெட்டுப்புள்ளி குறித்த பிரச்சினைகளுக்கு அவர்களை ஏனைய சமூகத்துடன் ஒப்பிடாது வெட்டுப்புள்ளிகள் மீதான விசேட சலுகை வழங்கப்பட வேண்டும். இன்றைய நாட்களில் இலவசமாக வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் யாவும் சிங்கள மொழிகளில் தயாரிக்கப்பட்டு அதுவே தமிழாக்கம் செய்யப்படுகிறது. இதில்; 05ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ள வரலாறுகளே சரித்திரப் பாடத் திட்டமாக அமைகிறது. இதனால் ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட ஏனைய இனங்களின் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. எனவே ஏனைய தேசிய இனங்களின் இனத்துவ மற்றும் மொழி வரலாறுகள் திரிபு படுத்தப்படாமல் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

விவசாயம் மற்றும் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை 

இலங்கை சுதந்திரம் அடைந்தபோது இலங்கை ஒரு விவசாய நாடாக இருந்தது. படிப்படியாக அதன் நிலைமைகள் குறைக்கப்பட்டு இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களைக்கூட இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் இந்நாட்டின் பயிர்ச்செய்கைக்கு இன்றியமையாத பங்களிப்பை செய்தவராவர். எனவே தோட்டத் தொழிலாளர்கள் என்ற பதம் மாற்றப்பட்டு அவர்களையும் விவசாயிகள் என்ற பதத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும். இதற்காக இவர்களுக்கு 20 பேர்ச் காணி அளந்து வரைபடத்துடன் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட காணியுறுதியுடன் கொடுக்கப்பட வேண்டும். இது இவர்களின் வீடு, வீட்டுத் தோட்டம் மற்றும் சுயதொழில் என்பவற்றுக்கு பயன்படுத்தப்படுவதற்கு அரச மானியம் வழங்கப்பட வேண்டும். தேயிலை, இறப்பர், தென்னை, நெல் ஆகியவற்றுக்கான கவர்ச்சிகரமான விவசாயக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும். கொவிட் - 19 காரணமாக நாடு எதிர்நோக்கியுள்ள உணவுத்தட்டுப்பாடு, உற்பத்தி வீழ்ச்சி போன்ற சவால்களை எதிர்கொள்வதற்கு எமக்குள்ள ஒரே வழிமுறை உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதே ஆகும். எனவே விவசாயம் மற்றும் பெருந்தோட்டப்பயிர்ச்செய்கையை பிரத்தியேகமான அமைச்சின் கீழ் உள்ளடக்க வேண்டும். அந்த தொழில் துறையில் ஈடுபடுபவர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளை அரசு நிர்ணயிக்க வேண்டும்.

மெகாசிட்டி 

நகரமயமாக்கல் மூலமாக பல நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. இது கிராம மக்களையும் நகரத்தை நோக்கி செல்லது தூண்டுகிறது. இதனால் கிராமங்கள் அபிவிருத்தி அடையாததோடு எமக்கான உணவு உற்பத்தியிலும் தன்னிறைவு காணமுடியாதுள்ளது. உதாரணமாக கடந்த காலங்களில் அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதில் முதலிடத்தை வகித்த பணப்பயிர்கள் இன்று நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தப் பகுதிகளில் எந்தவிதமான அபிவிருத்தித் திட்டங்களோ வேலைவாய்ப்புகளோ உருவாக்கப்படாததால் இளைஞர் யுவதிகள் நகரங்கள் மற்றும் வெளிநாடுகளை நோக்கி செல்லத் தூண்டப்படுகின்றர். இது குடும்ப ரீதியாக மட்டுமின்றி சமூக மற்றும் கலாசார ரீதியான பிரச்சினைகளையும் உருவாக்குகின்றது. இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

பொருளாதார கொள்கை 

இலங்கையின் பொருளாதார கொள்கை வறிய மக்கள் சார்பாக உருவாக்கப்பட வேண்டும். எமது நாட்டில் இன்று நேர்முக வரி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதமாகவே இருக்கின்றது. இதுவே ஏனைய நாடுகளில் 20 வீதம் தொடக்கம் 25 சதவீதமாக இருக்கின்றது. ஆனால் எமது நாட்டில் மறைமுக வரி 40 சதவீதத்திற்கு மேலுள்ளது. இதனால் பொருட்;களின் விலை அன்றாடம் அதிகரித்துச் செல்லும் நிலை காணப்படுகிறது. இது உணவு பாதுகாப்பு உரிமையை மறுதளிக்கின்றது. இலங்கை நாணயத்தின் பெறுமதி நாளாந்தம் குறைந்துகொண்டே செல்வதால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டே போகிறது. இது உணவு பாதுகாப்பின்மையை தோற்றுவிக்கின்றது. எனவே கொவிட்டுக்கு பின்னரான (Pழளவ உழஎனை)  பொருளாதாரக் கொள்கைகள் குடும்ப பொருளாதாரத்தையும் கிராமியப் பொருளாதாரத்தையும் மையப்படுத்தியதாக அமைய வேண்டும்.

கடந்த 2016 ம் ஆண்டும் அரசியலமைப்பு சீர்த்திருத்ததிற்காக மக்களின் கருத்துக்களை அறியும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துடன் அப்பணி கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் தற்போதுள்ள அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தமொன்றிற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில் மலையக தேசியம் சார்ந்து மேற்குறிப்பிட்ட அடிப்படை திருத்தங்கள் உள்வாங்கப்பட வேண்டும். இதன் அடுத்த கட்டமாக சிவில் சமூக ரீதியாகவும் பாராளுமன்றிலும் இவ்விடயங்கள் விவாதப் பொருளாக வேண்டும்.

நன்றி - தினக்குரல்

Share this post :

+ comments + 2 comments

✊✊👌

5:17 AM

Super 👌👌👌👌

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates