இலங்கையின் சிறுபான்மை இனங்களில் ஒன்றான மலையகத் தமிழ் மக்கள் பெருந்தோட்டத் துறையிலேயே பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந் தோட்டத்துறையைப் பொறுத்தமட்டில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட லயன் காம்பிராக்களிலேயே இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சிலர் தற்போது இந்தக் குடியிருப்புகளை சற்று சீர்செய்து வடிவமைத்திருப்பது வரவேற்கத்தக்கதாக இருப்பினும் இந்த லயன் காம்பிராக்கள் தொழிலாளர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளைக் கொண்டதாக அமையவில்லை என்ற கருத்து ஐம்பதுகளிலேயே முன்வைக்கப்பட்டது.
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அவனது குடும்பத்தவரும், தாம் வாழ்வதற்கு சொந்த வீட்டினை கொண்டிருக்க உரிமையுடையவனாகிறான். சொந்த நிலத்துடனான வீடில்லாதோர் அடிமையைப் போல் வாழ்பவராக கருதப்படுகின்றனர். எப்போதும் மற்றவரில் தங்கியிருப்போர் சுதந்திரமில்லாத மன நிலையோடு வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதன் அடிப்படையில் மனித உரிமைக ளில் ஒன்றான வீட்டுரிமையை மேலும் வலியுறுத்தும் வகையில் 1948ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை பல சமவாயங்களை பிரகடனப்படுத்திய தன் காரணமாக உலகின் பல நாடுகள் தமது பிரஜைகளின் வீட்டுரிமையை உத்தரவாதம் செய்ய முன்வந்தமை ஒரு குறி ப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது என்று சொல்லத் தோன்றுகிறது.
மனித வளர்ச்சியின் ஒரு படியாக வீடு என்பது ஒரு தனி மனிதனின், அவனது குடும்பத்தின் அடையாளத்தை அல்லது அவனது கௌரவத்தை வெளிப்படுத்துகி றது என்றால் அது மறுக்க முடியாது. குறி ப்பாக சொந்த வீடுள்ளவனுக்கும் வாடகை வீட்டில் வாழ்பவனுக்குமிடையில் ஏற்றத் தாழ்வைக் காணமுடியும். இந்த ஏற்றத் தாழ்வு தனிமனித வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது. இதனால் அவனது வள ர்ச்சி தடைப்படுவதோடு நாட்டின் அபிவிருத்தியிலும் இது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனைக் கருத்தில் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை, வீட்டுரிமையும் மனித உரி மைகளில் மிகப் பிரதானமானது எனக் கருதி வீட்டுரிமையையும் மனித உரிமைகளில் ஒன்றாக தமது சாசனத்தில் பிரகடனப்படுத்தியுள்ளது.
அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான வீட்டுரிமையை மேலும் வலியுறுத் தும் வகையில் 1987 ஆம் ஆண்டில் இலங்கையில் வீடமைப்புக்கென தனியான அமைச்சு உருவாக்கப்பட்டு வீடமைப்புத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வந்ததுடன் வீடற்றோருக்கு வீடுகள் சொந்தமாக்கப்பட்டுள்ளன. கம்உதாவத் திட்டம், சுவர்ணபூமி திட்டம் போன்ற பல திட்ட ங்கள் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்த நாட்டின் அபிவிருத்திக்காக தம்மை அர்ப்பணித்த 95 சதவீதமான தோட்டத் தொழிலாளர்களின் நில உரிமை மற்றும் வீட்டுரிமை தொடர்பாக இந்த நாட்டை ஆண்ட, தற்போது ஆளுகின்ற அரசுகள் சிறிதளவு திட்டங்களை மேற்கொண்ட போதிலும் அவை பூரணமாக செயற்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய விடயமாகவே கருதப்படுகிறது.
200 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்தும் தோட்டத் தொழிலாளர்கள் நில உரிமை இல்லாதவர்களாக வாழ்வது வேடிக்கையாகவே இருக்கின்றது.
இருந்த போதிலும் 1977ஆம் ஆண்டு முதல் இது நாள் வரை தோட்டப் புறங்களைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டங்களை பார்க்கின்ற போது வீட்டின் உரிமை அல்லது காணியின் உரிமை குறி ப்பிட்ட நபருக்கே வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான உறுதிப் பத்திரமும் குறிப்பிட்ட நபருக்கே வழங்கப்படுகிறது. இதனை அடமானமாக வங்கியில் வைத்து வீட்டுக்கடன் பெற்று வீட்டைக் கட்டுவதோடு கடனை கட்டியவுடன் வீடு சொந்தமாகி விடுகின்றது. ஆனால் தோட்டப்புற வீடமைப்புக்களைப் பொறுத்தமட்டில் இவ்வாறு செய்யப்படுவதில்லை.
தோட்டத் தொழிலாளர்களை எடுத்துக்கொண்டால் இந்தத் தொழிலாளர் வர்க்கம் நிலமற்றவர்கள். இவர்களுக்கு நில உரிமையோ வீட்டுரிமையோ கிடையாது. இன்று தோட்டத் தொழிலாளர்க ளின் போராட்டம் தனது சம்பளத்துக்கா? இல்லையேல் வீட்டுரிமைக்கா? என்ற இந்த கேள்விக்கு விடை தெரியாதவர்க ளாக கடந்த 200 வருடத்தைக் கழித்து விட்டார்கள்.
எது எப்படியோ ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை, வீடு, மருந்து, கவனிப்பு, அவசியமான சமூக சேவைகள் என்பன உட்பட தமதும் தமது குடும்பத்தினரதும் உடல் நலத்துக்கும் நல்வாழ்விற் கும் போதுமான வாழ்க்கைத் தரத்திற்கு உரித்துடையவர்கள். அத்துடன் வேலையின்மை, நோய், இயலாமை, கைம்மை, முதுமை மற்றும் வேறு காரணிகளினால் வாழ வழியின்மை ஏற்படும்போது பாதுகாப்பிற்கு உரித்துடையோராவர் என 1ஆம் உறுப்புரை தெளிவுபடுத்துகிறது.
இதில் எல்லா மக்களும், தாம் மனிதப் பிறவிகள் என்ற உள்ளார்ந்த கௌரவத்தை உடையவர்களாக இருப்பதால் சட்ட ரீதியாக உரிமையளிக்கப்பட்டுள்ளவையே மனித உரிமையாகும். அவை அரசாங்க ங்களினால் மக்களுக்கு வழங்கப்படுபவையோ அல்லது அரசாங்கங்களினால் பறிக்கப்படக் கூடியவையுமோ அல்ல.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இவ்வுரிமைகளை கொண்டுள்ளனர். இதனை நடைமுறைப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை நமது நாடும் தெரிவித்துள்ளது. அத்துடன் பல சர்வதேச உடன்படிக்கைகளினால் இத்தகைய மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் மிக முக்கியமாகக் கருதப்படுபவை யாவையெனில், வேறுபட்ட மனித உரிமைகளின் வகைகள் காணப்படினும் மக்கள் கௌரவமான வாழ்க்கை யொன்றை வாழமுடியும் என்பதனை உறுதிப்படுத்துகின்ற பொதுவான இலக்கையே அவை கொண்டுள்ளன. நீதியான விசாரணைக்கான உரிமை, அரசியல் உரிமைகள் மற்றும் வாக்களிப்பதற்கான உரிமைகள் என்பன குடியியல் உரிமைகளாகவும் வீட்டு வசதிக்கான மற்றும் நீரைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமைகள் என்பன பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளாகவும் கருதப்படுகின்றன. அதி முக்கிய சர்வதேச ஆவணங்களில் ஒன்றான அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் எல்லா இடங்களிலும் வேறுபட்ட இத்தகைய உரிமைகள் அனைத்தையும் உத்தரவாதப்படுத்துகின்றன.
இவை போன்ற மிக முக்கியமான மனித உரிமைகள் பற்றிய சாசனங்களை சட்டபடி அமுல் செய்வதற்கு இலங்கை இணங்கியுள்ளது.
பெருந்தோட்ட மக்களின் நில உரிமை மற்றும் வீட்டுரிமை பற்றிய பல ஏமாற் றுக் கருத்துக்களும் பொய்யான வாக்குறுதிகளும் வழங்கப்பட்டு பல தடவைகள் இம்மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அண் மையில்கூட இந்திய அரசினால் தோட் டப் பிரதேச மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதாக கூறப்பட்டு தொழிற்சங் கங்களினதும் அரசியல் தலைமைகளி னதும் போட்டா போட்டி காரணமாக மலையக மக்களுக்குக் கிடைக்க விருந்த வீடமைப்புத் திட்டம் இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டது. ஜனாதிபதி யின் மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் வீடமைப்புத் திட்டங்கள் குறித்தும் இது வரை நடைமுறைக்கு வரவில்லை என் பது வேதனைக்குரியது.
எனவே, அரசின் எதிர்கால வேலைத் திட்டங்களில் பெருந்தோட்டத் தொழிலா ளர்களின் நில உரிமை மற்றும் வீடமை ப்புத் திட்டங்களில் இந்த நாட்டின் அபி விருத்தியின் பங்காளர்களான இம்மக்க ளின் நிரந்தர வதிவிடப் பிரச்சினைகளை தீர்க்கும் முகமான வேலைத் திட்டங்கள் அமைய வேணடும் என்பதோடு தோட்டத் தொழிலாளர்களுக்கு காணியுரிமையுடனான வீடமைப்புத் திட்டம் உருவாக அரசு வழிவகை செய்ய வேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...