Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

தலதா புனித தாதுப்பல் கோவாவில் அழிக்கப்பட்டுவிட்டதா? - என்.சரவணன்

புத்தரின் அடையாளச் சின்னங்களென இலங்கையில் குறிக்கப்பட்ட அத்தனையும் இலங்கையின் தன்மையை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளன.

பௌதீக நினைவுச்சின்னங்கள், பயன்பாட்டு நினைவுச்சின்னங்கள், அழகியல் நினைவுச்சின்னங்கள் என வகுக்க முடியும். புத்தரின் அஸ்தியில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பகுதிகள், புத்தர் பயன்படுத்திய பொருட்கள், புத்தர் சிலைகள், அரச மரங்கள், பௌத்த தூபிகள், புத்தரின் அட்சய பாத்திரம், அவரின் தர்ம நூல்கள் என அடுக்கிக் கொண்டு போகலாம். இவற்றில் தலையாய அடையாளமாக கருதப்படுவது தான். கண்டி தலதா மாளிகையில் காணப்படும் புனித தாதுப்பல்.

1561 ஏப்ரல் மாதம் போர்த்துகேயரால் கோவாவில் வைத்து அப்புனிதப்பல் அழிக்கப்பட்டுவிட்டதாக ஒரு பிரபல கதையுண்டு. அதைப் பற்றிய ஆய்வுகளின் மீதான ஒரு பார்வையே இது.

இதைப் பற்றி பல ஆங்கில ஆய்வுகள் உள்ளன. இறுதியில் The Buddha’s Tooth: Western Tales of a Sri Lankan Relic என்கிற நூலில் ஜோன் ஸ்ட்ரோங் அந்த சம்பவத்தை மறுக்கிறார்.

போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் கதையின் தொடக்கம் எது என்று ஆராய்ந்து கொண்டு போனால் Diogo Do Couto 17-18 ஆம் நூற்றாண்டுகளில் இல் போர்த்துக்கேய மொழியில் எழுதிய “Da Asia de João de Barros e de Diogo de Couto” என்கிற நூல் தொகுதிகள் வரை பின் செல்கின்றது.

அவரோ பல நூற்றுக் கணக்கான பக்கங்களைக் கொண்ட 12 தொகுதிகளாக போர்த்துகேய நூல்களை எழுதி வைத்திருக்கிறார். சில தொகுதிகள் பாகங்கள் 1,2,3, என நீள்கின்றன. அத்தொகுதிகள் அனைத்தையும் தேடி எடுத்துக் கொண்டேன். இதில் எந்த நூலில் இதைப் பற்றி எழுதி இருக்கக் கூடும் என்பதை அறிவதில் கடும் சிக்கலை எதிர்கொள்ள நேரிட்டது. இதை ஆதாரம் காட்டி எழுதிய பல ஆங்கில ஆய்வுகளும் கூட எத்தனையாவது தொகுதியில் என்பதை கூறவுமில்லை. அந்த செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் என்னிடம் இதைப்பற்றி உள்ள ஆய்வு நூல்கள், ஆவணங்கள் அனைத்தையும் கொடுத்து பதில் கேட்டேன். அங்கே இவற்றை அறிய முற்பட்டபோது ஏழாவது தொகுதியில் இத்தகவல்கள் இருபதாகக் கூறியது. ஆனால் போர்த்துகேய மொழியில் தான் Sexta, Setima, Ottava, Nona என்கிற வரிசையில் இத்தொகுதியின் இலக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  அதை மொழிபெயர்த்து அது Setima (ஏழாவது தொகுதி) என்பதை அறிந்து கொண்டு எத்தனையாவது பக்கம் என்பதை கேட்டறிந்தேன். 316-318 பக்கங்களில் உள்ளதாகவும் வேறு சில இடங்களிலும் இதைப் பற்றிய விபரங்கள் உள்ளதையும் அப்பதில்களில் இருந்து அறிந்துகொண்டேன்.

இறுதியில் அப்பக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதில் உள்ள எழுத்துக்களை தனியாக பிரித்து எடுத்து தோராயமாக மொழிபெயர்த்து அப்பகுதிகளை கண்டு பிடித்தேன்.

தியோகோ டோ கூட்டோ (1542 - 1616) ஒரு போர்த்துகேய வரலாற்றாசிரியர். 1559 இல் அவர் போர்த்துகேயரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியப் பகுதிக்கு சென்று ஒரு படை சிப்பாயாக பணியாற்றியிருக்கிறார். 

1561 ஆம் ஆண்டு இலங்கைத் தீவின் வடக்கு முனையில் உள்ள யாழ்ப்பாணத்தில் ஒரு மதஸ்தலத்தில் வைத்து புனித தாதுப்பல் நினைவுச்சின்னம் கைப்பற்றப்பட்டதாக கூட்டோ கூறுகிறார். யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய பின்னர் போர்த்துக்கேய வைஸ்ராய் டோம் கொன்ஸ்டன்டினோ டா பிராகன்சாவின் (Don Constantino de Braganza) படையெடுப்பின் போது இச்சம்பவம் நிகழ்ந்தது என்கிறார் அவர்.

போர்த்துக்கேயரால் அத்தாதுப்பல் கைப்பற்றப்பட்டது என்பதைப் பற்றி வெளிப்படையாகக் கூறிய முதல் மேற்கத்திய ஆதாரம் கூடோவின் நூலாகும். அவர் "பூர்வீகவாசிகளிடமிருந்து" அறிந்தகொண்டவற்றின் அடிப்படையில் புத்தரின் வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறார். கூட்டோ தொகுத்துள்ள இலங்கை பற்றிய குறிப்பின்படி, புத்தர் இறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கும் ‘பெகு’வுக்கும்  விஜயம் செய்ததாகவும் அவரின் இறப்புக்குப் பின்னர் அஸ்தியில் இருந்து ஒரு பல்லை எடுத்து இலங்கைக்கு அனுப்பப்பட்டதையும் விபரிக்கிறார்.

இந்த காலப் பகுதியில் கோட்டே மன்னர் தொன் ஜுவான் தர்மபாலவும் (1551-1581)  1567 ஆம் ஆண்டில் பர்மாவுக்கு அனுப்பிய தூதுக்குழுவிடம் புனிதப் பல்லை கொடுத்து அனுப்பியதாக சில பர்மிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால் இதே காலப்பகுதியில் சபரகமுவவின் உள்ள விகாரையொன்றில் அது வைக்கப்பட்டிருந்ததை சூளவம்சம் தெளிவாகக் கூறுவதால்,  பர்மிய ஆதாரங்களில் உள்ள விளக்கத்தை நம்புவது கடினம் என்பது தெளிவாகிறது.

மேலும், இக்காலப்பகுதியில் முதலாம் இராஜசிங்க மன்னனினதும் போர்த்துக்கேயரதும் தாக்குதல்களின் காரணமாக வீதிய பண்டார புனிதப்பல்லுடன் யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்றதாக சில நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் யாழ்ப்பாணத் தமிழ் மன்னன் வீதிய பண்டாரவுக்கு உதவ இணங்கியதாகவும், அதற்காக நல்லூர் கோவிலில் ஒரு விசேட வைபவத்தை நடத்தியதாகவும் இக்கதைகளில் குறிப்பிடுகின்றன. ஆனால் அங்கே நிகழ்ந்த சில எதிர்பாராத சம்பவங்களால் வீதிய பண்டார கொள்ளப்பட்டுவிட்டதால் வீதிய பண்டாரவின் வசம் இருந்த புனிதப் பல்லும், பொக்கிசங்களும் யாழ்ப்பாண அரசர் வசம் சென்று விட்டதாக வரலாற்றாசிரியர் கொட்ரிங்க்டன் கூறுகிறார். 


கி.பி. 1560 ஆம் ஆண்டு  போர்த்துக்கேயர் யாழ்ப்பாணம் மீது படையெடுத்த போது மன்னனின் அரண்மனைக்கு தீயிடப்பட்டதாகவும் போர்த்துக்கேயர் அங்கிருந்த வீதிய பண்டாரவின் உடைமைகளைக் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. அதன்  போது கண்டெடுக்கப்பட்ட புத்தரின் புனிதப்பல் போர்ச்சுக்கேய படையினரால் காப்பாற்றப்பட்டு டொன் அகோஸ்டினோ நொரேக்ஞோவிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது என்றும், போர்த்துக்கேய பாதிரிமார் அதைக் கோரிய போதும் அவர்களிடம் அது கொடுக்கப்படவில்லை என்றும் பின்னர் சிறைபிடிக்கப்பட்ட யாழ்ப்பான மன்னருடன் சேர்த்து கோவாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் கொட்றிங்டன் குறிப்பிடுகிறார். 

இந்தச் சம்பவம் பர்மா அரசனுக்குத் தெரிய வந்ததும் அவன் கோவாவுக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி அப்புனிதப் பல்லை சுமார் 300,000–400,000 குரோசோடோவுக்கு   கேட்டிருக்கிறார். அதை பர்மிய அரசனுக்குக் கொடுப்பதை கோவாவிலிருந்த அதிகாரிகளும் பாதிரிமாரும் கடுமையாக எதிர்த்ததால், டொன் அகோஸ்டினோ நொரேக்ஞோ இறுதியில் அப்பல்லை கோவாவின் பேராயரிடம் அதை ஒப்படைத்தார். 

கோவாவில், நினைவுச்சின்னத்தை என்ன செய்வது என்பது குறித்து பேராயருக்கும் பிற இறையியலாளர்களுக்கும் இடையில் ஆலோசனை நடத்தப்பட்டது என்றும், இறுதியில் அது ஒரு அந்நிய மத அடையாளம் என்றும் பிசாசின் நினைவுச் சின்னம் (reliquia do demonio) என்றும் அதை வைத்திருப்பது கடவுளை அவமதிப்பதாகும் என்றும் வாதிட்டனர். இறுதியில் அதை அழிக்க வேண்டும் என்றும் அவர்கள் முடிவு செய்தனர்.  

டோம் கொன்ஸ்டான்டினோவின் செயல்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் எதிர்வினைகள் இருந்ததாக கூட்டோ குறிப்பிடுகிறார். சிலர் விக்கிரகாராதனைக்கு எதிராக நின்றதற்காக அவரைப் பாராட்டினர், மற்றவர்கள் போர்த்துக்கேய சாம்ராஜ்யத்திற்கு சாதகமான செயலை ஆற்றியதாகவும், பௌத்தர்கள் வழிபடுவதற்கான மற்றொரு பொருளை உருவாக்கிக் கொள்வார்கள் என்றும் கருத்துக்கள் கூறப்பட்டன.


பேராயர் டொன் காஸ்பர் (Don Gaspar) தலைமையில் அன்றைய வைசிராய் கொன்ஸ்டண்டைன் கோவாவில் மண்டோவின் ஆற்றோரத்தில் பகிரங்கமாக அனைவரிடமும் காண்பித்து அப்பல்லை ஒரு உரலில் நசுக்கி, சிதைத்து பொடியானதை எடுத்து எரிந்துகொண்டிருந்த தீயில் போட்டு எரித்து, அதன் மீதான வணக்கத்தைத் முற்றாகத் தடுக்க அதன் சாம்பலை அங்கிருந்த ஆற்றில் எறிந்து அழித்ததாகவும் கூட்டோ கூறுகிறார்.

கொந்தளிப்பான காலகட்டத்தில் தலதாவை ஆக்கிரமித்த போர்த்துகீசியர்கள் அதை அழித்ததாகவும் குவைரோஸ் குறிப்பிடுகிறார். 

ரிபைரோவும் இதே போன்றே விபரித்திருப்பதாகத் தெரிகிறது. அவரின் கூற்றுப்படி யாழ்ப்பாணத்தில் அப்பல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பெகு (பர்மா) மன்னன் அதைப் பற்றி அறிந்து, அதை எப்படியாவது தன்னிடம் கொடுக்குமாறு கேட்டதாக அவர் கூறுகிறார். இதற்காக கோவாவுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பிய மன்னர் அப்புனிதப்பல்லை பெறுவதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்துமாறு கோவாவுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பினார்.   அவர்கள் இதற்காக போர்த்துக்கல்லுடன் ஒரு நிரந்தர ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ளவும், மலாக்காவில் உள்ள போர்த்துகேய கோட்டைகளுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கவும் ஒப்புக் கொண்டதைக் காண முடிகிறது.  அப்போது கோவாவில் இருந்த போர்த்துக்கேய அதிகாரிகள் அப்பல்லை மன்னரிடம் ஒப்படைக்கவும் தயாராக இருந்தனர், ஆனால் பாதிரிமாரும், பேராயரும் அதை எதிர்த்ததுடன் கடவுளின் நற்பெயருக்கு அவமானம் என்று அறிவித்து அழிக்கப்பட்டு கடலில் வீசப்பட்டன  என்று ரிபெய்ரோ குறிப்பிடுகிறார்.


எவ்வாறாயினும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு குரங்கின் பல் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டதென்றும் ரிபைய்ரோ குறிப்பாக குறிப்பிடுகிறார், எனவே இலங்கையர்கள் ஒரு குரங்குப் பல்லை வணங்குகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புனிதப் பல் என்று நம்பப்பட்ட வேறொன்றைத் தான் போர்த்துகேயர் அழித்தார்கள் என்று பிற்கால ஆய்வாளர்கள் பலர் சுட்டிக்காட்டியுமுளனர். பிரபல வரலாற்றாசிரியர் எமர்சன் டெனன்ட் இந்த சம்பவத்தை சற்று வித்தியாசமான வேறு வழியில் விளக்க்கிறார், போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தில் ஒரு குரங்கு பல்லை கைப்பற்றியதாகவும், ஆனால் அது ஒரு தங்கப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அது ஹனுமனை வணங்குவதற்கான அடையாளமாக பொதுமக்களால் அது பேணப்பட்டு வந்ததாகவும் விளக்குகிறார். அதுவே கோவாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் டெனன்ட் விவரிக்கிறார். 

பின்னர்  "உண்மையான" தாதுப்பல் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் கோட்டே மன்னர் யுவான் தர்மபால அதனை பெகுவின்  (பர்மா) மன்னருக்கு  விற்றதாகவும் கூட்டோ மேலும் விவரிக்கிறார். அதனைத் தொடர்ந்து, கண்டி மன்னன் விமலதர்மசூரிய இதற்கு முரணாக, உண்மையான புத்தரின் பல் நினைவுச்சின்னம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மனனர் தர்மபால போலிப்பல்லையே அவ்வாறு பர்மா மன்னருக்கு விற்றார் என்கிறார்.  

கூட்டோவின் பதிவுகளில் உள்ள உண்மைத்தன்மையை பகுப்பாய்வு செய்வதற்கு, மேற்கத்திய மற்றும் சுதேச ஆதாரங்களில் இருந்தும் வரலாற்றுப் பின்னணியிலிருந்தும் அதைப் பரிசீலிக்க வேண்டும்.

"புத்தரின் பல்..." மேற்கத்திய ஆதாரங்கள் குறிப்பிடத்தக்க மாறுபட்ட கருத்துக்களை பதிவு செய்துள்ளன. சில டச்சு ஆதாரங்கள் 1554 ஆம் ஆண்டில் ஆதாமின் சிகரத்திற்கு அருகில் அப்பல் எடுக்கப்பட்டதாகக் கூறுகின்றன, இன்னும் சிலர் இது காலிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுகின்றன. கூட்டோவுக்கு முன்பு, மேற்கத்திய நூல்களில் பொதுவாக அவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருள் புத்தரின் பல்லே அல்ல என்றும் குரங்கின் பல் என்றும் குறிப்பிட்டன. 


இதைப் பற்றிய முன்னைய பல ஆய்வுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தி “புத்தரின் பல்: இலங்கை நினைவுச்சின்னம் பற்றிய மேற்கத்திய கதையாடல்கள்” (The Buddha's Tooth: Western Tales of a Sri Lankan Relic) என்கிற நூலை எழுதியவர் ஜோன் எஸ்.ஸ்ட்ரோங் (John S.Strong). இதைப் அப்ற்றிய முதற் தகவல்களைக் கூறியவர் கூட்டோ என்கிறார் அவர்.

பிற்கால போர்த்துகீசிய வரலாற்றாசிரியர்கள், குவைறோ மற்றும் டி சூசா போன்றவர்கள், இது புத்தரின் பல் என்பதை அதிகளவில் உறுதிப்படுத்தினர். பிரான்சிஸ்கோ டி சூசா (1710) இது புத்தரின் பல் தான் என்று திட்டவட்டமாகக் கூறினார். 

இலங்கை மக்கள் "புத்தரின் பல்லை" போர்த்துக்கேயர்கள் கைப்பற்றியதையும், அதை அழித்ததையும்  ஏற்க மறுத்தனர். யாழ்ப்பாணத்தில் அது கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்றும், அவர்கள் அழித்தது இராமாயணக் கதைகளில் வரும் குரங்குத் தெய்வமான ஹனுமானின் பல்லாக இருக்கக் கூடும் என்றும் கூறினர். இன்னும் சிலர் அது அதிர்ஷ்டவசமாக தப்பி இருக்கிறது என்றும். தாதா வம்சத்தின் பிரகாரம் அது அளிக்கப்பட முடியாதது என்றும் கூறினார். அதற்கேற்றாற் போல தொன் ஜூவான் தர்மபால, கொனப்பு பண்டார போன்றவர்கள் தம்மிடம் அப்பால் பத்திரமாக இருக்கிறது என்று தெரிவித்த கருத்துக்களும் மக்களின் நம்பிக்கைக்கு சாதகமாக அமைந்தன.

தாதாவம்ச காப்பியமானது இலங்கையின் புனித தாதுப்பல் நினைவுச்சின்னத்தின் வரலாற்றை விரிவாக விளக்குகிறது. தாதவம்சம் போன்ற 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சுதேசிய பாலி மொழி வம்ச காப்பியங்கள் அதற்கு முந்தைய சிங்கள இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டது. கிபி 4 ஆம் நூற்றாண்டில் புத்தரின் தகனத்திலிருந்து; அஸ்தி இலங்கைக்கு வரும் வரையிலான புனிதப்பல் வந்து சேர்ந்த வழித்தடத்தை விவரிக்கிறது. ஆனால் ஸ்ட்ரோங் அதில் உள்ள பல விவரங்களின் வரலாற்றுத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறார். பிற மத மற்றும் இலக்கியப் படைப்புகளிலிருந்து எடுத்தாண்டு புனையப்பட்ட பல கதைகளும் அதில் உள்ளதாக குறிப்பிடுகிறார் ஸ்ட்ரோங். 4 -15 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இலங்கையில் புனித தாதுப்பல் ஏற்படுத்தியிருந்த அரசியல் முக்கியத்துவத்தை இக்காப்பியம் விளக்குகிறபோதும்  16 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை எப்படி சேர்ந்தது என்கிற விபரங்களை அது சொல்லவில்லை.

இலங்கையில் பௌத்த மத நினைவுச் சின்னங்கள் இலங்கையின் அரசியல் அதிகார மையங்கள் நிலை கொண்டிருந்த பிரதேசங்களோடு தொடர்புடையவை. மாறாக 16 ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்துடன் தொடர்புபடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்கிறார் அன்ன பிலேக்பெர்ன். 

கூட்டோவின் பதிவுகள் எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டும் என்கிறார் ஸ்ட்ரோங். அவர் அன்றைய கால பல விவரிப்புகளை வழங்கினாலும், கைப்பற்றப்பட்ட பல்லின் அமைவிடம் மற்றும் ஆரம்ப அடையாளம் போன்ற தகவல்களை வழங்கும் பொது  மற்ற மேற்கத்திய ஆதாரங்களுடன் முரண்படுகிறது. சுதேச நூல்களோ அல்லது வேறு இலக்கியங்களோ இந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் அத்தகைய ஒரு நினைவுச்சின்னம் இருந்ததை உறுதிப்படுத்தியதில்லை.

கண்டி ராஜ்ஜிய காலத்தில் எழுதப்பட்ட “சிறு ராஜாவலிய”, “சிறு பூஜாவலிய” போன்ற   நூல்களில் இத்தாதுப்பல் எங்கெல்லாம் பாதுகாக்கப்பட்டு இறுதியில் கண்டி தலதா மாளிகையில் நிலைகொண்டது என்பது பற்றிய விபரங்களைத் தருகிறது.1693 இல் எழுதப்பட்ட “தலதா புவத்” என்கிற காவிய நூலிலும் இதைப் பற்றிய விபரங்களை பதிவு செய்திருக்கிறது. 

நினைவுச் சின்னங்களின் நம்பகத் தன்மை

புத்தரின் அஸ்தியில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகளை தாங்கள் வைத்திருப்பதாகக் கூறும் நாடுகள் பல உள்ளன. இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான், பர்மா, சிங்கப்பூர், சீனா, அமெரிக்கா, யப்பான், தென் கொரியா, மேலேசியா, கம்போடியா, தாய்வான்,  நேபாள், பங்களாதேஷ், திபெத், போன்ற நாடுகளில் இத்தகைய புத்தரின் நினைவுச் சின்னங்கள் இருப்பதை காண முடியும்.

ஆனால் இவற்றில் பல நம்ப முடியாத அளவுக்கு புனைவுகளைக் கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி நமக்கு எழும். உதாரணத்திற்கு சீனாவில் இருபது இடங்களில் புத்தரின் உடற்பாகங்களினாலான நினைவுச் சின்னங்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள்.

சீனாவில் பீஜிங் நகரில் உள்ளதாக இன்றும் நம்பப்படும் புத்தரின் தாதுப் பல்லின் அளவு மூன்று அங்குலமாகும்.

சிங்கப்பூரில் சைனா டவுனில் புத்த விகாரையும், அதனோடு இணைந்த நூதனசாலையொன்றும் உள்ளது அங்கிருப்பதாக சொல்லப்படும் புத்தரின் புனிதத் தாதுப் பல் விகாரையின் நான்காம் தளத்தில் 350 கிலோ தூபியின் உள்ளே வைக்கப்பட்டிருகிறது. இந்தப் பல் 7.5 சென்றிமீற்றர் நீளமானது என்றால் இதன் உண்மைத் தன்மையை நீங்களே புரிந்துகொள்ளலாம். சிங்கப்பூர் சுற்றுலாத்துறைக்கு இதனால் ஏராளமான வருமானம் வருகிறது. அந்த விகாரைக்கு மட்டும் வருடாந்தம் சராசரியாக 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்படுகிறது. சுமார் 3.6 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்ப்பதற்காக மட்டும் வருகிறார்கள்.

உலகம் முழுவதும் உள்ளதாகச் சொல்லப்படும் இந்த எந்தவொரு நினைவுச் சின்னங்களும் புத்தரது தான் என்று தொல்லியல் ரீதியில் நிறுவப்பட்டதில்லை.

இலங்கையில் காணப்படுவதாகக் கூறப்படும் புத்தரின் எந்தவொரு அஸ்தி தொடர்பான நினைவுச் சின்னங்கள் பற்றிய கதைகள் இலங்கையில் உள்ள இலக்கியங்கள் மட்டுமே குறிப்பிடுகின்றனவே ஒழிய எந்தவொரு இந்திய நூல்களோ அல்லது புத்தர் பற்றி இலங்கைக்கு வெளியில் எழுதப்பட்ட பண்டைய திரிபீடகம் உள்ளிட்ட எந்தவொரு நூல்களிலும் குறிப்பிடப்பட்டதில்லை. அதே திரிபீடக நூல்கள் எதுவும் இலங்கைக்கு புத்தர் மூன்று முறை விஜயம் செய்ததையோ, ஐயாயிரம் வருடங்களுக்கு பௌத்தத்தை பாதுகாக்கும் பணி இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டதையோ பற்றி கூட குறிப்பிட்டதில்லை என்பதையும் நினைவிற் கொள்வோம்.

நன்றி காக்கை சிறகினிலே! - யூன் 2025

உசாத்துணை:

  1. பெகு என்றால் பர்மா என்று அறியமுடிகிறது.
  2. මූර්ති, ලංකාව සහ බුරුමය, මියුරෝ පොත් ප්‍රකාශකයෝ, 2005,
  3. Culavamsa, tr. W. Geiger, Ceylon Government Information, Department, Colombo, 1953, Vol. II, 5
  4. Codrington H. W, A Short History Of Ceylon, Macmillan and Co., Limited, 1926
  5. கொட்ரிங்டன் (Humphry William Codrington) இலங்கையில் ஒரு சிவில் அதிகாரியாக 1903 ஆம் ஆண்டிலிருந்து சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் இலங்கையில் கடமையாற்றியவர். பல மாவட்டங்களில் அரசாங்க அதிபராக பணியாற்றியதுடன், இலங்கை பற்றிய பல வரலாற்று ஆய்வுகளை செய்திருக்கிறார். செனரத் பரணவிதான போன்ற தொல்லியல் அறிஞர்களால் கொண்டாடப்பட்டவர். பிற்காலத்தில் ஜோன் டொயிலியின் நாட்குறிப்பை தொகுத்துவெளியிட்டதும் அவர் தான்.
  6. Cruzados என்பது 15-17 ஆம் நூற்றாண்டுகளில் போர்த்துக்கேயர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த நாணயம்
  7. Harvey GE, History of Burma, Longman Green and co, London, 1925
  8. Strong, John S., ‘The Devil was in that Little Bone’: The Portuguese Capture and Destruction of the Buddha’s Tooth-Relic, Goa, 1561. Past & Present, Volume 206, Issue suppl - 5, 2010, Pages 184–198.
  9. Fernao De Queyroz, The Temporal and Spiritual conquest of Ceylon, tr. SG Perera, Government Printer, Colombo, Vol.II, 1930
  10. ප්‍රතිකාල් ජාතික රෙබෙයිරෝගේ ලංකා ඉතිහාසය, පරි. ටී කේ රුබේරු, ඇස් ගොඩගේ සහ සහෝදරයෝ, කොළඹ, 2003
  11. J Emmeron Tennent, Ceylon, Longman, London, Vol.2, 1859
  12. “Pegu” என்று அன்று அழைக்கப்பட்டது எதனை என்று தேடித் பார்த்தபோது பர்மா என்று அறியக்கிடைகிறது. அதாவது பர்மா அரசருக்கு விலைக்கு விற்றுவிட்டதாக அந்நூலில் குறிப்பிடுகிறார்.
  13. Cruzados என்பது 15-17 ஆம் நூற்றாண்டுகளில் போர்த்துக்கேயர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த நாணயம்
  14. João de Barros, Da Asia de João de Barros e de Diogo de Couto, Volume VII ( 1616), IX ( 1736)
  15. John S. Strong, The Buddha's Tooth: Western Tales of a Sri Lankan Relic (Buddhism and Modernity) 2021 
  16. De Sousa, Francisco. Oriente Conquistado a Jesu Christo pelos padres da Companhia de Jesu da Provincia de Goa. Lisbon: Valentim da Costa Deslandes, 1710.
  17. Anne M. Blackburn, Buddha-Relics in the Lives of Southern Asian Polities, Vol. 57, No. 3/4, Relics in Comparative Perspective (2010)


தலதா புனிதத் தாதுப்பல் கோவாவில் அழிக்கப்பட்டுவிட்டதா? என்.சரவணன் by SarawananNadarasa on Scribd

1816 - இலங்கையில் அடிமையொழிப்பும் ஹன்னா மூரின் வகிபாகமும் - என்.சரவணன்


ஹன்னா மூர் (Hannah More) இந்தப் பெயர் நமக்கு நினைவுக்கு வராமல் போகலாம். ஆனால் ஆங்கில இலக்கிய, அரசியல் உலகில் மிகப் பெரும் ஆளுமையாக கொண்டாடப்படுகிறார்.

இலங்கைக்கும் ஹன்னா மூருக்கும் உள்ள இலக்கிய அரசியல் தொடர்பு பற்றியதே இக்கட்டுரை.

இலங்கையின் முதலாவது நாவலாக கொண்டாடப்படுகிற காவலப்பன் கதை என்கிற நாவலின் மூல ஆசிரியர் இவர் தான். அது மட்டுமன்றி இக்கட்டுரையை எழுதத் தூண்டியது அவர் இலங்கையைப் பற்றி எழுதிய ஒரு கவிதையே.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் நிலவிய அடிமை முறைமையை எதிர்த்து அவர் எழுதிய “சுதந்திரத்தின் கொண்டாட்டம்” என்கிற கவிதை அப்போதே பெரும் பிரபலம் பெற்ற ஒரு படைப்பு. தற்செயலாகக் கண்ட அந்தக் கவிதை என்னை உலுக்கியது மட்டுமன்றி. அப்படியொரு கவிதை குறித்து இலங்கை இலக்கியங்களில் பேசப்பட்டதாக அறிந்ததுமில்லை.

இலங்கையில் அடிமைகள்

இலங்கையில் அடிமைமுறையை ஒழிக்கப் போராடியவர் அன்றைய தலைமை நீதிபதியாக இருந்த அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன். இலங்கையில் வாழ்ந்த காலத்தில் அவர் இலங்கையின் நலன்களில் அக்கறையெடுத்த ஆங்கிலேய முன்னோடி என்று கூறலாம்.

அடிமை முறையை இலங்கையில் ஒரே தடவையில் ஒழிக்க இயலவில்லை. சமூக அளவில் அந்தளவு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அடிமை முறை சாதியத்தோடு பிணைந்து இருந்தது. சாதியம் இலங்கையின் பண்பாட்டு வழக்கங்களோடு இணைந்திருந்தது.

யாழ்ப்பாண சமூகத்தில் கோவியர், நளவர், பள்ளர் ஆகிய சாதியினர் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தனர். இதைப் பற்றிய பல ஆய்வுகளும், அன்றைய காலனித்துவகால அறிக்கைகளும், சட்டங்களும் உள்ளன.

ஒருபுறம் யாழ்ப்பாண சமூகத்திலும், மறுபுறம் தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் குறிப்பாக கண்டிய ராஜ்ஜிய பகுதிகளிலும். மறுபுறம் டச்சு காலத்தில் விட்டுச் சென்ற கணிசமான நீக்ரோ அடிமைகளும் நாட்டில் இருந்தனர்.

அடிமை முறைக்கு எதிராக உள்நாட்டிலிருந்து குரல்கள் எழவில்லை. மாறாக இந்த அடிமைமுறையை நேரில் கண்ட தாராளவாத எண்ணம் கொண்ட அரச அதிகாரிகள் இதற்கு எதிராக குரல் கொடுத்தனர். அவர்களில் முக்கியமானவர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன். அதனைத் தொடர்ந்து இலங்கையில் 1816 ஆம் ஆண்டு அடிமைமுறை ஒழிப்பு பற்றிய ஆணை பிறப்பிக்கப்பட்டன. ஆனால் அது முழுமையான ஒழிப்பு அல்ல. இலங்கையில் அடிமைமுறை மூன்று கட்டங்களாக ஒழிக்கப்பட்டன. 1816 இல் வீடுகளில் அடிமைகளாக வேலை வாங்குவதைத் தடை செய்கிற சட்டமே கொண்டு வரப்பட்டது.

முக்கியமாக 1816 ஓகஸ்ட் 12 ஆம் திகதிக்குப் பின்னர் அடிமைப் பெண்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் அடிமை நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களாக பிரகடனப்படுத்தப்பட்டது. 

இந்தத் திகதி தெரிவு செய்யப்பதற்கு ஒரு காரணம் உண்டு. அன்றைய மூன்றாம் ஜோர்ஜ் மன்னரின் பிறந்த நாள் அது. ஆனால் அவரின் உண்மையான பிறந்த நாள் யூன் 4 ஆம் திகதியாகும். ஆனால் அரசவை அவரின் உத்தியோகபூர்வ பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஓகஸ்ட் 12 அன்றே மேற்கொள்ளும் வழக்கத்தைக் கையாண்டது. எனவே அவரின் அந்த பிறந்த நாளிலேயே அரசரின் பெயரால் இந்த அடிமைமீட்பு பிரகடனம் செய்யப்பட்டது.

பிரித்தானிய முடி அடிமைகளுக்கு சுதந்திரம் வழங்குவதன் குறியீடாக இந்த பிரகடனத்தைக் பிரபலப்படுத்திய போதும் முழுமையாக இந்த அடிமையொழிப்பு நடைமுறைக்கு வரவில்லை. அடிமைப் பெண்ணுக்குப் புதிதாகப் பிறக்கின்ற குழந்தைகள் தான் அடிமை முறையில் இருந்து தப்பினார்களே தவிர அதுவரை இருந்த அடிமைகள் அடிமைகளாகவே தொடரப்பட்டனர். அதுமட்டுமன்றி அக்குறிப்பிட்ட திகதிக்கு முதல் நாள்வரை பிறந்த குழந்தைகள் கூட அடிமைகள் தான்.


பிரித்தானியாவில் முதன்முறையாக அடிமை முறை 28.08.1833இல் ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து (Slavery Abolition Act 1833) அதன் கீழ் இருந்த பல காலனித்துவ நாடுகளில் படிப்படியாக அடிமை முறை ஒழிக்கப்பட்டன. பிரித்தானியாவின் காலனி நாடுகளுக்கும் செல்லுபடியாகும் வகையில் அச்சட்டம் கொண்டுவரப்பட்டாலும், இரண்டு நாடுகள் விதிவிலக்கு. இலங்கையில் ஒழிக்கப்பட சற்று தாமதமாக்கப்பட்டது. இலங்கையும், செயின்ட் ஹெலேனா என்கிற தீவுகளும் விதிவிலக்கு என்கிற ஒரு சரத்து அந்தச் சட்டத்தில் உண்டு. (Section LXIV). 

இந்த காலப்பகுதியில் பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் உலகம் முழுவதும் 60 க்கும் மேற்பட்ட நாடுகள் இருந்தன. இந்த நாடுகளில் அடிமைநிலை காலனி நாடுகளாக கரீபியன் தீவுகளான பார்படோஸ், ஜமைகா, அன்டிகுவா உள்ளிட்ட பல நாடுகள் இருந்தன. அவை நேரடியாக பிரித்தானியா அடிமை முறையை  மோசமாக நடைமுறைப்படுத்தி வந்த நாடுகள் எனலாம். ஆனால் அந்த தரத்தில் இலங்கை போன்ற நாடுகள் கையாளப்படவில்லை. அதுமட்டுமன்றி ஒருவகை அரை அடிமைநிலையை இலங்கையில் பின்பற்றியவர்கள் சுதேசிய மக்களே. இன்னும் சொல்லபோனால் சுதேசிகளே சுதேசிகளை அடிமைகளாக வைத்திருந்தார்கள். சாதிய வர்ண நிலை மரபை சாதகமாக ஆக்கிக்கொண்டு அடிமைமுறையை நடாத்தி வந்த ஒரு சமூகம் இங்கே இருந்தது. அவர்களிடம் இருந்து அடிமைகளை விடுவிக்கும் தரப்பாக பிரித்தானிய தரப்பு இருந்தது தான் இங்கே வேடிக்கை.


தமக்குக் கீழ் இருந்த சுமார் 20 நாடுகளில் படிப்படியாக அடிமையொழிப்பை செய்ததன் பின்னர் தான் இலங்கையில் செய்தார்கள். அதற்கான காரணம் இந்தியத் தொழிலாளர்களை கையாளவும் இந்த அடிமைமுறை அவர்களுக்கு சாதகமாக இருக்குமா என்கிற எதிர்பார்ப்பும் தான். இங்கிலாந்தில் அடிமை முறை ஒழிக்கப்பட்ட அதே 1833 ஆம் ஆண்டு இராஜகாரிய முறையை  இலங்கையில் ஒழிப்பதன் மூலம் சமாளிக்கப் பார்த்தார்கள். ஆனால் அடிமைமுறையை ஒழிக்கவில்லை. இறுதியில் பல அரசியல் அழுத்தங்களின் பின்னர் 1844 இல் இலங்கையில் அடிமையொழிப்பு சட்டத்தை கொண்டுவந்தார்கள்.

சூரியன் மறையாத சாம்ராஜ்யம் என்று சொல்லும் அளவுக்கு உலகம் பூராவும் நாடுகளைக் கைப்பற்றி வைத்திருந்தது பிரித்தானியா. அந்நாடுகளை சுரண்டுவதற்கான இலவச ஊழியர்களாக ஆபிரிக்க அடிமைகளை பல நாடுகளுக்கும் கொண்டு போய் சேர்த்தார்கள். அடிமைகளை விற்பதும் வாங்குவதும் பெரும் வர்த்தகமாகவே குறிப்பாக 17, 18, ஆம் நூற்றாண்டுகளில் காணப்பட்டன. 1562 to 1807 காலப்பகுதிக்குள் மூன்று மில்லியன் அடிமைகளை ஆபிரிக்காவிலிருந்து கரிபியன் வழியாக கடத்திச் சென்றது பிரித்தானியா.

ஈற்றில் அடிமைமுறையின் கொடுமைகளை எதிர்த்து பிரித்தானியாவில் எழுந்த கிளர்ச்சிகளின் விளைவாக அடிமைமுறையை ஒழிக்கும் நிலைக்கு பிரித்தானியா தள்ளப்பட்டது. சகல நாடுகளிலும் அடிமைமுறையை வரிசையாக ஒழித்தபோதும் இறுதியாக அடிமைமுறை ஒழிக்கப்பட்ட நாடே இலங்கை என்பதை இங்கே முக்கியமாக சுட்டிக் காட்ட வேண்டும்.

இச்சட்டத்தின் விளைவாக வடக்கில் உள்ள தமிழர்கள் மத்தியில் அடிமைத்துவம் அவ்வளவு பெரிதாக தளரவில்லை. காரணாம் சாதியத்தொடு அவ்வடிமை முறை பிணைந்திருந்தது. எனவே அடிமை முறை மாற காலம் எடுத்தது. ஆனால் தெற்கில் குறிப்பாக அடிமைப்படுத்தல் வீடுகளில் நிலவிய கண்டி ராஜ்ஜிய பரப்பில் வடக்கை விட வேகமான மாற்றம் நிகழ்ந்ததை நீரா விக்ரமசிங்க தனது நூலில் விளக்குகிறார். 


அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன்

இலங்கையில் அடிமை முறையை ஒழிப்பதற்கான ஆரம்பக் குரல்கல்களின் முன்னோடியாக அலெக்சாண்டர் ஜோன்ஸ்டனை நாம் கொண்டாட வேண்டும். இலங்கையின் நீதித்துறைக்கு மட்டுமன்றி, சமூக விடுதலை, வரலாற்று மீள் கண்டுபிடிப்பு என்பவற்றுக்கும் கூட அவரின் தனித்துவமான பாத்திரம் விரிவாக பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று. மகாவம்சத்தை முதன் முதலில் மீட்டு எடுத்து அதனை வெளிக்கொணரக் காரணமாக இருந்தவரும் அவரே. இலங்கையின் சுதேச மொழிகளான சிங்களத்தையும், தமிழையும் கூட அவர் கற்றார்.

கிறிஸ்தவ நம்பிக்கையாளரான ஜோன்ஸ்டன் தமிழ் சிங்கள சமூகத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு ஊடாக விழிப்புனர்ச்சியையும் சமூக விடுதலைக் கருத்துக்களையும் பரப்பலாம் என நம்பினார். பைபிளை தமிழிலும், சிங்களத்திலும் மொழிபெயர்த்து வெளியிடுவதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டியிருந்தார். மேலும் “வெஸ்லியன் மிஷன்” என்கிற பிரபல மிஷனரி அமைப்பை நிறுவிய நிறுவனர்களில் ஒருவர் ஜோன்ஸ்டன். 

இலங்கையில் அப்போது யாழ்ப்பாண சமூகத்தில் நிலவிய அடிமை முறையைப் போலவே சிங்கள சமூகத்திலும் அடிமைமுறை இருந்தது. குறிப்பாக கண்டி ராஜ்ஜியத்தில் அடிமைமுறை எவ்வாறு இருந்தது என்பது பற்றிய பல பதிவுகள் உள்ளன.

அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் இதனை ஒழிப்பதற்காக கடுமையாக பாடுபட்டவர்களில் ஒருவர். அவர் இங்கிலாந்தில் உள்ள உயரதிகாரிகள் வரை இலங்கையில் அடிமைமுறையை ஒழிக்க வேண்டும் என்கிற முறைப்பாடுகளை செய்து கொண்டே இருந்தார்.

அதைப் பற்றிய பல கடிந்தங்கள், அறிக்கைகள், பத்திரிகை செய்திகள் என்பன பரவலாக வெளியாகின. 1800 களின் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் அடிமையொழிப்புக்கான இயக்கம் தீவிரமாக இயங்கத் தொடங்கின. பிரித்தானியாவில் மாத்திரமன்றி அதன் குடியேற்ற நாடுகளிலும் அடிமை முறையை ஒழித்தாகவேண்டும் என்கிற கோஷம் தீவிரமாக ஒலிக்கத் தொடங்கிய காலம் அது.

இங்கிலாந்தில் அடிமைமுறைக்கு எதிரான விவாதங்கள் வலுப்பெற்ற இந்தக் காலப்பகுதியில் அடிமைமுறைக்கு எதிராக இயங்கிய பெண் தான் ஹன்னா மூர் (Hannah More 2.2.1745 – 7.09.1833) அவர் ஒரு கல்வியியலாளர், கவிஞர். இறையியல் செயற்பாட்டாளர். 

அலெக்சாண்டர் ஜோன்ஸ்டனின் செயற்பாடுகளை அறிந்த ஹன்னா அவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.

ஹன்னா மூரின் வாழ்க்கைக் குறிப்புகளையும், அவரின் கடிதங்களையும் தொகுத்து 1835 ஆம் ஆண்டு வில்ல்லியம் ரொபர்ட்ஸ் இருண்டு தொகுதிகளைக் கொண்ட நூலொன்றை வெளியிட்டார். அதன் இரண்டாவது தொகுதியில் ஜோன்ஸ்டனுக்கும் ஹன்னா மூருக்கும் இடையில் நிகழ்ந்த கடிதப் பரிமாற்றங்களும் உள்ளன.  இக்கடிதங்களின் ஆரம்பம் 1818 இல் ஆரம்பித்துள்ளதை கவனிக்க முடிகிறது. அக்கடிதங்களின் சாரத்தை இப்படிக் கூறலாம்.

ஹன்னா – ஜோன்ஸ்டன் கடிதத் தொடர்புகளின் சாரம்

பலராலும் நன்கு அறியப்பட்ட சுவிசேஷ எழுத்தாளரும் தார்மீக சீர்திருத்தவாதியுமான ஹன்னா மூர், இலங்கையின் தலைமை நீதிபதியான சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டனுடன் கல்வி, கிறிஸ்தவ விழுமியங்கள் மற்றும் அடிமைத்தனத்தை ஒழித்தல் ஆகியவை பற்றி பகிர்ந்து கொண்டதன் மூலம் குறிப்பிடத்தக்க தொடர்பை வளர்த்துக் கொண்டார். இலங்கையில் புதிய நிர்வாக சீர்திருத்தங்களில் அக்கறை கொண்டவராக அறியப்பட்ட ஜோன்ஸ்டன், சிங்கள மற்றும் தமிழ் சமூகங்கள் உட்பட இலங்கை மக்களின் அரசியல் - சமூக நிலைமைகளை மேம்படுத்த முயன்றார். 1816ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12க்குப் பின்னர் அடிமைகளுக்குப் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் சுதந்திரமாக இருப்பார்கள் என்ற தீர்மானத்தால் குறிக்கப்பட்ட  வீட்டு அடிமைத்தனத்தை படிப்படியாக ஒழித்தது அவரது மிகவும் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாகும்.

இந்த வரலாற்று தருணத்தை நினைவுகூரும் வகையில், ஜோன்ஸ்டன்  ஹன்னா மூரிடம் பகிரங்கமாக கொண்டாடப்படக்கூடியதும் அறிவூட்டுவதற்குமான பயன்படுத்தக்கூடிய ஒரு கவிதையை இயற்றுமாறு கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த மூரே, "ஓகஸ்ட் பன்னிரண்டாம் தேதி; அல்லது, சுதந்திரகே கொண்டாட்டம் " என்ற குறுநாடகக் கவிதையை எளிமையான, உரையாடல் அடிப்படையிலான பாணியில் எழுதினார். குறிப்பாக இலங்கை மக்களால் எங்கும் நிகழ்த்துகை செய்யக்கூடிய வகையில் இது இயற்றப்பட்டது. அதன் பின்னர் ஜோன்ஸ்டன்  இங்கிலாந்துக்கு அழைத்து வந்த இரண்டு பௌத்த குருக்களால் இந்த படைப்பு சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்படுவதை உறுதி செய்தார். அவரது கவிதை மட்டுமல்ல, அவரது பல சுவிசேஷ நாடகங்களும் நீதிக் கட்டுரைகளும் இந்தியா, இலங்கை முழுவதும் பரவலாக விநியோகிக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டிலும் மொழிபெயர்க்கப்பட்டு வருவதாகவும் ஜோன்ஸ்டன் மூரேயிடம் தெரிவித்தார்.

ஜோன்ஸ்டன்  மூரேயின் மொழிபெயர்க்கப்பட்ட நாடகங்களில் ஒன்றின் ஒரு பிரதியை வழங்கினார். அது பனை ஓலைகளில் சிங்கள மொழியில் பொறிக்கப்பட்டு, நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட மரப்பெட்டியில் மூடப்பட்டிருந்தது. இது இதயப்பூர்வமாகவும் ஆழமாகவும் அவரை நெகிழ வைத்தது. மூரே தனது கடிதங்களில் இதைக் குறிப்பிட்டுள்ளார், தனது எழுத்துக்கள்  தொலைதூர நாடுகளில் ஆன்மீகக் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தத்தின் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று நன்றியையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தினார்.

கவிதைக்கு அப்பால், மூரேயின் கிறிஸ்தவ தார்மீக இலக்கியம் ஐரோப்பிய இலட்சியங்களுக்கும் இலங்கையின் உள்ளூர் மரபுகளுக்கும் இடையிலான ஒரு பாலமாக மாறும் என்று ஜோன்ஸ்டன் கருதினார்.  நாடகங்கள் மற்றும் உருவகங்கள் ஏற்கனவே இந்து மற்றும் பௌத்த சமூகங்களில் மரபாக கதைசொல்லலின் பிரபலமான வடிவங்களாக உள்ளன என்றும், மூரேவின் படைப்புகளை மொழிபெயர்ப்பதன் மூலம், அதே வடிவங்களை கிறிஸ்தவ விழுமியங்களையும் சுதந்திரத்தின் செய்தியையும் மேம்படுத்த மாற்றியமைக்க முடியும் என்றும் ஜோன்ஸ்டன் குறிப்பிட்டார். மூரேவின் எழுத்துக்கள் உற்சாகத்துடன் வரவேற்கப்படுவதாகவும், பள்ளிகள் மற்றும் மத மையங்களில் நிகழ்ச்சிளில் கற்பிப்பதற்காக தயாராகி வருகிற செய்தியையும் ஜோன்ஸ்டன் தனது கடிதங்களில் பகிர்ந்து கொண்டார்.

பின்னர், சுதந்திரத்தின் கொண்டாட்டம் என்ற கவிதை  இசையமைப்பாளர் சார்லஸ் வெஸ்லி, எஸ்க். என்பவரால் இசையமைக்கப்பட்டது. அத்துடன் ஏழை ஐரிஷ் குழந்தைகளின் கல்விக்காக நிதி திரட்டுவதற்காக இசை பதிப்பின் பிரதிகள் விற்கப்பட்டன. எனவே இந்த முயற்சிகளை மூரே தொடர்ந்து ஆர்வத்துடன் ஆதரித்தார். சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தையும் அவரது இலக்கியப் படைப்புகளின் தாக்கம் உட்பட இலங்கையின் முன்னேற்றங்கள் குறித்து ஜோன்ஸ்டன் தொடர்ந்து ஹன்னா மூரேவுக்கு  அறிவித்து வந்தார். மேலும் இதுபோன்ற படைப்புகள் வெளிவரவேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தனது வயது மற்றும் உடல்நிலை காரணமாக அவரால் தொடர்ந்து அவ்வாறு செய்ய முடியாவிட்டாலும், இலங்கை மக்களின் தார்மீக மற்றும் அரசியல் முன்னேற்றத்திற்கு தனது எழுத்து அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கியதையிட்டு அவர் பெருமிதத்தையும் நன்றியையும் தெரிவித்தார்.

ஜோன்ஸ்டனுக்கும் மூரேக்கும் இடையேயான இந்த இலக்கிய கூட்டு 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால கலாச்சார ஒத்துழைப்பின் ஒரு தனித்துவமான உதாரணத்தை எடுத்துக்காட்டியது. அங்கு சிங்களம், தமிழ் இரண்டிலும் மொழிபெயர்க்கப்பட்ட கிறிஸ்தவ சீர்திருத்த இலக்கியங்கள், பிரிட்டிஷ் காலனியில் உள்ளூர் விடுதலை, கல்வி போன்ற முயற்சிகளை ஆதரிப்பதில் கணிடமான பங்கை ஆற்றியிருந்தது. மூரேயின் குரல், இலங்கையில் ஒருபோதும் நேரடியாக இருந்ததில்லை என்றாலும், சிங்கள, தமிழ் சமூகங்களிடையே அவரது படைப்புகளின் மொழிபெயர்ப்புகள், நிகழ்ச்சிகள் மற்றும் கல்விப் பயன்பாடு ஆகியவற்றின் மூலம் அனுபவிக்கக் கூடியதாகவும், அவை செல்வாக்கு செலுத்தக்கூடியதாகவும் ஆக்கப்பட்டது. சுதந்திரத்தின் கொண்டாட்டம் என்ற கவிதை  இலங்கையின் சுதேச மக்களின் சமத்துவத்துக்கான தொடக்கத்தின் அடையாள இலக்கிய நினைவுச்சின்னமாக இருந்தது எனலாம்.


ஹன்னா மூர் : வரலாற்று வகிபாகம்

ஹன்னா மூர் பிரபல ஆங்கில எழுத்தாளராக அறியப்பட்டவர்,  கல்வியாளர், ஒரு இறையியல் செயற்பாட்டளரும் கூட, 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தார்மீக சீர்திருத்த, அடிமை ஒழிப்பியக்கத்தில் செல்வாக்கு செலுத்தியவராகவும் அறியப்பட்டவர்.

பிப்ரவரி 2, 1745 அன்று இங்கிலாந்தின் குளூசெஸ்டர்ஷையரில் உள்ள ஸ்டேபிள்டனில் பிறந்த ஹன்னா மூர், கல்விப் பின்னணியையுடைய ஒரு குடும்பத்தில் ஐந்து மகள்களில் நான்காவது மகளாவார். பள்ளி ஆசிரியரான இவரது தந்தை ஜேக்கப் மூர், மகளையும் லத்தீன் மொழியிலும் இலக்கியத்திலும் வலுவான அடித்தளத்தை ஹன்னாவுக்கு வழங்கினார். 1758 ஆம் ஆண்டில், ஜேக்கப் பிரிஸ்டலில் ஒரு பெண்கள் விடுதிப் பள்ளியை நிறுவினார், அதை ஹன்னாவும் அவரது சகோதரிகளும் பின்னர் நிர்வகித்தனர். இந்த காலகட்டத்தில், ஹன்னா தனது 17 வது வயதிலேயே ‘த சேர்ச்  ஆப்டர் ஹேப்பினஸ்’ (1762) உள்ளிட்ட நாடகங்களை எழுதத் தொடங்கினார், இது இளம் பெண் பார்வையாளர்களிடையே பிரபலமடைந்தது. இந்த நாடகப் பிரதி அபோதே 10,000 பிரதிகளை விற்றுத் தீர்த்து.

1770 களில், ஹன்னா லண்டனின் இலக்கிய வட்டங்களுடன் தொடர்பு கொண்டார், சாமுவேல் ஜோன்சன், ஜோசுவா ரெனால்ட்ஸ் மற்றும் எட்மண்ட் பேர்க் போன்ற பிரபல இலக்கியவாதிகளுடன் தொடர்புகளை உருவாக்கினார். அறிவார்ந்த பெண்களின் சமூகமான புளூஸ்டாக்கிங் குழுவின் முக்கிய உறுப்பினராகவும் அவர் இருந்தார். த இன்ஃப்ளெக்ஸிபிள் கேப்டிவ் (1775) மற்றும் பெர்சி (1777) போன்ற அவரது நாடகங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

1779 இல் ஹன்னாவின் வழிகாட்டியாகவும், அவரின் நாடகங்களை அரங்கேற்றுவதில் பெரும் பங்களிப்பை வழங்கிவந்த கேரிக்கின் மரணத்திற்குப் பிறகு, ஹன்னாவின் கவனம் மத மற்றும் சமூக தார்மீக பிரச்சினைகளை நோக்கி கவனம் மாறியது. வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் மற்றும் பெய்ல்பி போர்டியஸ் போன்ற கிறிஸ்தவ சுவிசேஷிகளால் ஈர்க்கப்பட்ட அவர் சமூக சீர்திருத்தத்திற்காக போராடுபவராக ஆனார். பொதுச் சமூகத்தின் உயர் நடத்தைகளின் முக்கியத்துவம் பற்றிய சிந்தனைகள் (1788), நாகரீக உலகில் மதத்தின் மதிப்பீடு (1790) போன்ற அவரின் அவரது நூல்கள், உயர் வகுப்பினரிடையே தார்மீக ஒருமைப்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தின.

ஒரு உறுதியான அடிமையொழிப்புவாதியான ஹன்னா, 1788ல் அடிமைத்தனம் (Slavery a Poem) என்ற கவிதை நூலை வெளியிட்டார். அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இயக்கத்துடனும் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது இங்கிலாந்தில் இயங்கிவந்த அடிமையொழிப்பு முன்னணி செயற்ப்பாட்டாளர்களுடன் சேர்ந்து இயங்கினார். அடிமைத்தனத்தின் மனிதாபிமானமற்ற தன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தனது இலக்கிய திறன்களைப் பயன்படுத்தினார். தனது இலக்கியத்தை உச்ச அளவில் அடிமையொழிப்புக்காகப் பயன்படுத்தத் தொடங்கினார்.

1790 களில், ஹன்னாவும் அவரது சகோதரி மார்த்தாவும் கிராமப்புறங்களில் இருந்த வசந்தகால விடுதிகளில் ஞாயிறு பள்ளிகளை நிறுவினர். ஏழைகளுக்கு அடிப்படைக் கல்வியை வழங்கும் நோக்கில். அவர் மலிவான வெளியீட்டுப் பணிகளையும் ஆரம்பித்து (1795-1798) சிறு நூல்களை வெளியிட்டார். கிறிஸ்தவ விழுமியங்களை ஊக்குவிக்கிற வகையிலும் தவறான அரசியலை எதிர்க்கும் வகையிலும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய வகையில் சஞ்சிகைத் தொடரை வெளியிட்டார். தொடராகும். பிரெஞ்சு புரட்சி பற்றிய அரசியல் விவாதங்களை அதில் தொடர்ந்தார். இந்த துண்டுப்பிரதிகள் பரவலாக விநியோகிக்கப்பட்டன, மில்லியன் கணக்கான பிரதிகள் விற்கப்பட்டன, இது பொதுமக்களின் வெகுஜன மனநிலையில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியது.

ஹன்னாவின் “பெண் கல்வியின் நவீன அமைப்புமுறை (1799) பெண்களுக்கு வழங்கப்படும் மேலோட்டமான கல்வியை விமர்சித்து, தார்மீக மற்றும் மத போதனைகளை வலியுறுத்தும் ஒரு பாடத்திட்டத்தை வலியுறுத்துகிற நூலாக இருந்தது.

தனது இறுதிக் காலத்திலும் ஹன்னா தனது சமூகப் பணிகளைத் தொடர்ந்தபடி இறையியல் செயப்பாடுகளிலும் தீவிரமாக இயங்கினார். சர்வதேச அளவில் பிரித்தானியாவின் அடிமைத்துவ நடத்தைக்கு எதிராக இயங்கிய ஹன்னா மூர் செப்டம்பர் 7, 1833 அன்று பிரிஸ்டலின் கிளிப்டனில் காலமானார். 1833 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28 திகதி காலமானார். அதற்கடுத்த மாதம் 1833 செப்டம்பர் 7 ஆம் திகதி பிரித்தானிய பாராளுமன்றத்தில் அடிமையொழிப்பு சட்டம் நிறைவேற்றைப்பட்ட போது அதைக் காண அவர் உயிருடன் இருக்கவில்லை.

ஆங்கிலேய இலக்கியப் பங்களிப்பில் ஹன்னாவின் பங்கு முக்கியமானது. கல்வி, தார்மீக சீர்திருத்தம் மற்றும் அடிமை ஒழிப்பியக்கம் ஆகியவற்றில் அவரது பங்களிப்புகள் பிரிட்டிஷ் சமூகத்தில் நீடித்தத் தாக்கத்தை ஏற்படுத்தின. அவர் எழுதிய நாடகங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள், இறையியல் பிரச்சார வெளியீடுகள், நூல்கள், கவிதைகள் என்பன காலத்தால் அழியாதவை.

அடிமைத்துவம், காலனித்துவம், நிறவாதம், வர்க்க பேதம், வதையியல் என்பவற்றுக்கு எதிரான குரலை அவரின் படைப்புகளில் காணலாம்.

அவர் எழுதிய யம்பாவின் துயரங்கள்; - நீக்ரோ பெண்ணின் புலம்பல் (The Sorrows of Yamba; or, The Negro Woman’s Lament (1795)) என்கிற அவரின் நூல் ஆபிரிக்க அடிமைப் பெண்களின் துயரத்தை பதிவு செய்த ஆரம்ப முன்னோடி நூலாக கொள்ளப்படுகிறது.

ஹன்னாவின் நூல்கள் பல இன்றும் பல பதிப்புகளை கடக்கின்றன. அவரின் எழுத்துக்கள் இன்றும் பலரால் திறனாய்வுக்கு உட்படுத்தபடுகின்றன. அடிமையொழிப்பைப் பற்றி பேசுவோர் அவரை தவிர்த்து பேச முடிவதில்லை.

அந்த வரிசையில் அபிரிக்க அடிமைகளுக்கு அப்பால் அவர் அடிமைத்துவம் பற்றிய பேசிய இன்னொரு நாடென்றால் அது இலங்கை. 

ஹன்னாவின் “சுதந்திரத்தின் கொண்டாட்டம்”

அவர் எழுதிய கவிதை நூல்களில் பிரபலமான நூலாக கொண்டாடப்படுகிற “அடிமைத்துவம்” பற்றிய கவிதைத் தொகுப்பு 1788 இலேயே வெளிவந்துவிட்டது. அதன் பின்னர் அவர் அடிமைத்துவத்தை எதிர்த்து எழுதிய கவிதைகளில் முக்கியமான கவிதை இலங்கையைப் பற்றிய கவிதை.

ஹன்னா மூரின் படைப்புகள் பல தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.  ஆவற்றில் 1853 இல் வெளிவந்த பதினோராவது (XI)  தொகுப்பு நூலில்தான் இலங்கையின் அடிமைத்துவம் பற்றிய கவிதை தொகுக்கப்பட்டிருக்கிறது.

இக்கவிதையை அவர் எழுத உந்திய நபர் தான் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன். ஹன்னா மூரின் நண்பரான ஜோன்ஸ்டன் 1816 ஆம் ஆண்டு அடிமைக் குழந்தைகள் விடுதலை பெற்றது தொடர்பாக எழுதும்படி விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து மிகுந்த ஆர்வத்துடன் அந்த நெடுங்கவிதையை ஒரு உரையாடல் பாணியில் ஹன்னா அழுத்தி முடித்தார்.

இக்கவிதை முதன் முதலில் 1819இல் எழுதப்பட்டிருப்பதாக சில குறிப்புகளைக் காண முடிகிற போதும் முதன் முதலில் அது 1827 இல் வெளிவந்ததாக அவரின் XIவது தொகுப்பு நூலில் ஒரு குறிப்பு காணப்படுகிறது. அதன் பின்னர் அவரின் பல தொகுப்புகளிலும் அது இடம்பெற்றிருக்கிறது.  அதே வேளை காரின் ஸ்வலோ (Karen Swallow Prior) ஹன்னா பற்றிய தனது நூலில் 1819 இலேயே “சுதந்திரத்தின் கொண்டாட்டம்” என்கிற இந்தக் கவிதையை எழுதியிருப்பதாக உறுதியாகக் கூறுகிறார்.  அது சரியாகவும் இருக்கலாம். ஜோன்ஸ்டனின் கோரிக்கை 1818 இல் விடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது 1819 சரியாக இருக்கலாம்.

அடிமை ஒழிப்பில் ஹன்னா கொண்டிருந்த ஈடுபாடு அடிமையொழிப்பில் தீவிரம் கொண்ட ஆதரவு வலைப்பின்னலை அவருக்கு ஏற்படுத்தியிருந்தது. ஓகஸ்ட் பன்னிரண்டாம்; அல்லது 1816 ஆகஸ்ட் 12 க்குப் பிறகு பிறந்த இலங்கையில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சுதேசிய அடிமைத்துவதிலிருந்து விலக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் “ஓகஸ்ட் பன்னிரண்டாம் நாள்” என்றே முதலில் அந்த கவிதைக்கு தலைபிட்டிருந்தார். ஆனால் அந்த நாளானது அரசரின் பிறந்த நாள் வைபவத்துக்குரிய நாளென்பதால் பிழையான வரைவிலக்கணத்தை கொடுத்து விடும் என்று அவர் கருதினார்.  இறுதியில் அக்கவிதைக்கு “சுதந்திரத்தின் கொண்டாட்டம்” என்று தலைப்பிட்டார். ஆனால் அவரின் வெளியீடுகளில் “சுதந்திரத்தின் கொண்டாட்டம்” அல்லது “ஓகஸ்ட் பன்னிரண்டாம் நாள்” (The Feast of Freedom ; or The Twelfth of August) என்று சேர்த்தே தலைப்பிட்டார்.


1827 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இக்கவிதை நூலில் வேறு பல கவிதைகள் உள்ளடங்கியிருந்தாலும் அந்தக் கவிதை நூலுக்கு தலைப்பாக இலங்கைப் பற்றிய கவிதையின் தலைப்பையே இட்டிருந்தார். “சுதந்திரத்தின் கொண்டாட்டம் அல்லது இலங்கையின் சுதேசிய அடிமையொழிப்பு” (The Feast Of Freedom ; Or, The Abolition Of Domestic Slavery In Ceylon) என்று அந்த நூலுக்கு தலைப்பிடப்பட்டிருக்கிறது. 

இந்த உரையாடல் பாணியிலான கவிதையில் சபாத் என்கிற பாத்திரம் ஆரம்பத்தில் சிங்களப் பெயரான சில்வா என்றே பெயரிடப்பட்டிருந்திருக்கிறது.  

ஜோன்ஸ்டனிடமிருந்து அவர் பெற்ற மிகவும் மதிப்புமிக்க பரிசாக இந்த சந்தர்ப்பத்தை ஹன்னா கருதினார்.

இந்தக் கவிதை சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பனை ஓலைகளில் எழுதப்பட்டு அலங்கார மரப்பெட்டியில் மூடிவைக்கப்பட்டதைப் பற்றி ஜோன்ஸ்டன் தன்னிடம் கூறியதாக ஹன்னா குறிப்பிடுகிறார். புச்சான் என்கிற தனது நண்பிக்கு எழுதிய கடிதமொன்றில் "எனது எல்லா நாடகங்களும் இப்போது மொழிபெயர்க்கப்படுகின்றன, அத்துடன் எனது பிற எழுத்துக்கள் சிங்களம் தமிழ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன, அவை இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட உள்ளன." என்று குறிப்பிட்டிருக்கிறார். 

இக்கவிதை  குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமாக ஆனது. பிரபல இசையமைப்பாளர் சார்லஸ் வெஸ்லி (Charles Wesley) 1820 களில் “சுதந்திரத்தின் கொண்டாட்டம்” கவிதைக்கு இசையமைத்தார். அந்த இலங்கை அடிமைத்துவ விடுதலை பற்றிய கவிதைக்கான இசைக் குறியீடு (Music Notes) மேற்படி “சுதந்திரத்தின் கொண்டாட்டம்” என்கிற நூலில் நான்கு பக்கங்களில் வெளியாகியிருகிறது.

சார்ல்ஸ் ஓகில்வி (Reverend Charles Ogilvie) என்கிற பாதிரியார் இந்தப் இசையின் விநியோகப் பொறுப்பை வகித்திருக்கிறார். இந்த விற்பனையில் கிடைத்த பணம் ஏழை ஐரிஷ் மக்களுக்கு ஹன்னா மூருக்கு ஊடாக செலவிடப்பட்டிருக்கிறது. 

சுதந்திரத்தின் கொண்டாட்டம் என்கிற அந்த நூலின் முன்னுரையில் இலங்கை பற்றிய குறிப்புகளை அவர் இவ்வாறு எழுதியிருக்கிறார்.

“இந்த குறு நாடகம் இந்து சமுத்திரத்தில் உள்ள இலங்கைத் தீவில் உள்நாட்டு அடிமைத்தனம் முடிவுக்கு வந்ததை நினைவுகூரும் வகையில் எழுதப்பட்டது  . அந்த நேரத்தில், சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன்  இலங்கை மன்னர் சபையின் தலைவராக இருந்தார்.

இலங்கை மக்களின் அரசியல், தார்மீக மற்றும் அறிவுசார் வாழ்க்கையை மேம்படுத்த அவர் நேர்மையாகவும் அறிவுபூர்வமாகவும் பணியாற்றினார். அவரது முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று; பிரித்தானிய முடியரசிடமிருந்து  உத்தியோகபூர்வ அனுமதியை (ஒரு சாசனம்) பெற்று, இலங்கையில் உள்ள அனைத்து உள்ளூர் மக்களும் நீதிமன்றத்தில் ஜூரி உறுப்பினர்களாக பணியாற்ற அனுமதித்தது - இந்த உரிமை மற்ற ஆசிய நாடுகளில் உள்ளவர்களுக்கு இல்லை.

அத்தோடு சேர் அலெக்சாண்டர் பல ஆண்டுகளாக உள்நாட்டு அடிமைத்தன முறையை மெதுவாகவும் அமைதியாகவும் முடிவுக்குக் கொண்டுவர உள்ளூர் மக்களை ஊக்குவித்தார். அவரது வேண்டுகோளின் காரணமாக அடிமைகளின் உரிமையாளர்கள் ஆகஸ்ட் 12, 1816 க்குப் பிறகு பிறந்த அனைத்து குழந்தைகளும் விடுதலை வழங்க  ஒப்புக்கொண்டனர். இந்த முடிவு இலங்கையில் சுமார் 300 ஆண்டுகளாக நிலவி வந்த உள்நாட்டு அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இந்தப் புதிய சுதந்திர காலத்தைத் தொடங்க ஓகஸ்ட் 12 ஐ சர் அலெக்சாண்டர் தேர்ந்தெடுத்தார். இந்த திகதி இளவரசரின் (பின்னர் மன்னர்) பிறந்த நாளாகும். மக்கள் தங்கள் சுதந்திரத்தை நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார், பிரிட்டிஷ் கிரீடத்தின் மீதான மரியாதை, அது சாத்தியமாக்க உதவியது.

இந்த நாடகம் ஏற்கனவே பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சேர்  அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் அவர்களுடன் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்த பௌத்த மதகுருமார்களால் சிங்களத்தில் முதலாவதாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

தற்போது இந்த நாடகம் விசேடமாக வெளியாகிறது. பிரபல இசைக்கலைஞர் சார்லஸ் வெஸ்லி சமீபத்தில் அதை ஒரு இசைப் பாடலாக மாற்றினார். அந்த மகிழ்ச்சியில் கவிதையின் ஆசிரியர் ஹன்னா அதை மீண்டும் ஆங்கிலத்தில் வெளியிட முடிவு செய்தார். சில கூடுதல் சிறிய பகுதிகளைச் சேர்த்திருக்கிறார். இந்த சிறு நூலை விற்பதன் மூலம் கிடைக்கும் பணம் ஏழை ஐரிஷ் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடையாக வழங்கப்படும்.”

இதன் மூலம் அந்தக் கவிதை குறுநாடக வடிவில் மாற்றப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. அது மட்டுமன்றி இந்த கவிதை பல இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது என்கிற தகவலின் படி நிச்சயம் சிங்களத்திலும், தமிழிலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இதுவரை அதைப் பற்றி நாம் அறிந்ததில்லை. மேலும் இக்கவிதை நாடகத்தின் விற்பனையிந மூலம் பெறப்பட்ட பணம் பல ஐரிஷ் குழந்தைகளின் கல்விக்காக அன்று செலவிடப்பட்டிருக்கிறது என்கிற தகவலும் நமக்குப் பேருவகையைத் தருகிறது.”

இலங்கையின் முதலாவது தமிழ் நாவல் ஹன்னாவினுடையதா?

அலெக்சாண்டர் ஜோன்ஸ்டனின் குறிப்புகளின் படி ஹன்னாவின் பல படைப்புகள் இலங்கை இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இன்றும் இலங்கையில் வெளியான முதலாவது நாவல் என கூறப்படும் “காவலப்பன் கதை” நூலின் மூல ஆசிரியர் ஹன்னா மூர் என்றால் வியப்பாக இருக்கும்.

இலங்கையில் வெளியான முதலாவது நாவல் எது என்கிற கேள்வி பல இடங்களிலும் சர்சைக்குள்ளானதாகவே இருப்பதை அவதானிக்க முடிகிறது.

வேதநாயகம் பிள்ளையின் "பிரதாப முதலியார் சரித்திரம்" தான் தமிழ் மொழியில் முதலாவதாக வெளிவந்த நாவல் என்று குறிப்பிட முடியும். அது வெளிவந்த ஆண்டு 1879 ஆகும். அதுவரை செய்யுளையே பிரதான இலக்கிய வகையாகக் கொண்டிருந்த தமிழுக்கு உரைநடையிலிருந்த புனைகதை இலக்கிய வடிவம் இந்நூலுக்கூடாகவே அறிமுகமானது. ஆனால் இந்த நூல் தமிழகத்தில் வந்தது.

அப்படிப்பார்க்கும் போது சித்திலெவ்வை மரைக்கார்' இயற்றி 1885 இல் வெளிவந்த “அசன்பே சரித்திரம்” இலங்கை நாவல் இலக்கியத்தின்  முதலாவது நாவல் என்று கூறலாம்.

ஈழத் தமிழ் நாவலிலக்கியப் பாரம்பரியத்தில் தி. த. சரவணமுத்துப்பிள்ளை எழுதி 1895 இல் வெளியான ‘மோகனாங்கி’ நாவலை இலங்கையின் முதலாவது சரித்திர நாவல் என்று குறிப்பிட முடியும். இதன் கதைக் களமும் வெளியிடப்பட்ட இடமும் தமிழகமாக இருந்தபோதும் இதை எழுதிய சரவணமுத்துப்பிள்ளை இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்தவர்.

நாவலிலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதியுள்ளவர்கள் சிலர் இந்த வரலாற்றுத் தகவல்களோடு “காவலப்பன் கதை”யைக் குழப்பியுள்ளதைக் காண முடிகிறது.  "காவலப்பன் கதை" தான் ஈழத்தின் முதலாவது நாவல் என்று அடித்துச் சொல்பவர்கள் இன்றும் உள்ளார்கள்.

"காவலப்பன் கதை" முதலாவது மொழிபெயர்ப்பு நாவல் யாழ்ப்பாணத்தில் 1856ம் ஆண்டில் வெளியிடப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிற போதும் அப்படிப்பட்ட ஒரு நாவலை கண்ட எவரும் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.

இதைப்பற்றி மு.கணபதிப்பிள்ளை சில்லையூர் செல்வராசனின் நூலில் எழுதியிருக்கிறார்.  ஆனால் கணபதிப்பிள்ளையோ பின்வந்தவர்களோ அந்த நாவல் குறித்த விபரங்களை சரிவர நிறுவவில்லை. மேலும் இந்த நூல்களில் பிரதிகளும் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் “கைக்குக் கிடைக்காத நூல் ஒன்றினை நாவலா நாவலில்லையா என்று எப்படிக் கூறலாம்” என்று பேராசிரியர் அ. சண்முகதாஸ் எழுதிய ‘சித்திலெவ்வை மரைக்காரின் அஸன்பே சரித்திரம்” தனது கட்டுரையொன்றில் எழுதுகிறார்.  


“காவலப்பன் கதை”யானது ஹன்னா மூர் 1796 இல் இயற்றிய "Parley the Porter" என்னும் நாவலின் மொழிபெயர்ப்பு என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதன் மூலப் பிரதியை இக்கட்டுரைக்காகத் தேடி எடுத்தபோது அந்த நூலானது அட்டையோடு சேர்த்து 12 பக்கங்களை மட்டுமே கொண்ட சிறு நூல் என்பதை காண முடிந்தது. 1856ஆம் ஆண்டு ஹன்னா மூர் எழுதிய படைப்புகள் அனைத்தும் மீண்டும் ஒரே நூலாக தொகுக்கப்பட்டபோது அந்த நூலில் இந்தக் கதை வெறும் நான்கே பக்கங்களுக்குள் அடங்கிவிட்டன.   இன்னும் சொல்லப்போனால் மொத்தமே சுமார் 4500 சொற்களை மட்டுமே கொண்ட கதை. அதை ஒரு சிறு கதை என்று வேண்டுமென்றால் கூறலாமேயொழிய ஒரு நாவலாக எப்படி தமிழில் அடையாப்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. ஆங்கில உலகில் எங்குமே இக்கதையை ஒரு நாவலாக அடையாளப்படுத்தியதில்லை. குறைந்த பட்சம் ஒரு குறுநாவல் உள்ளடக்கத்தைக் கூட இது கொண்டதில்லை.

ஆகவே “காவலப்பன் கதை” என்கிற நூல் வெளிவந்திருந்தாலும் கூட அது நாவலாக இருக்க வாய்ப்பே இல்லை என்பது தெளிவாகிறது.

பார்னெட் (L.D.Barnett), போப் (G.U.Pope) ஆகியோர் தொகுத்த A Catalogue of the Tamil books of the British Museum என்கிற நூலில் "Parley the Porter" என்கிற நூலைப் பற்றிய குறிப்புகளைக் காண முடிகிறது. பிரிட்டிஷ் மியூசியம் 1909 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள இந்த நூல் பட்டியல்களை இன்றும் பலரும் ஒரு முக்கிய மூலாதார நூலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நூலில் 177 ஆம் பக்கத்தில் உள்ள குறிப்பு இது தான்.

MORE (HANNAH).  “Parley the Porter” காவலப்பன் கதை. [Translated into Tamil] pp. 36. Jaffna, 1856. 16°. 14170. a. 33.(3.) No. 1 of the New Series of the Jaffna Religious Tract Society.

மேலும் இந்த நூலில் கிறிஸ்தவ மதம் சம்பந்தப்பட்ட நூல்களின் கீழ் 584 ஆம் பக்கம் “காவலப்பன் கதை” பட்டியலிடப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளதையும் காண்கிறோம். இது “யாழ்ப்பாண சன்மார்க்க புத்தக சங்கத்தால்” (J.R.T.S - Jaffna Religious Tract Society)  வெளியிடப்பட்டிருக்கிறது.

நா. சுப்பிரமணியம் எழுதிய “ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்” (1978) என்கிற நூலில் இந்த நூலைப் பற்றி குறிப்பிடும் போது“இந்நூல் பார்லே என்ற சுமைதூக்கி (1869), பார்லே என்னும் சுமையாளியின் கதை (1876) ஆகிய தலைப்புக்களுடன் தமிழ் நாட்டில் வெளிவந்துள்ளது. இந் நூற் பிரதிகள் கிடைக்கவில்லை. இதனை 'நாவல்' என்று கொள்ளலாமா என்பது ஆய்வுக்குரியது.” என்றும் அவர் குறிப்பிடுகிறார். மேலும்

“பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட கதை நூல்கள் வெளிவந்துள்ளன. இதிகாச புராணக் கதைகள், நாடோடிக் கதைகள், பிறமொழிக் கதைகள், மேலைநாட்டுச் சமயக் கதைகள் முதலிய பல்வேறு வகைகளிலும் அமைந்த இக் கதைகளை நாவல் எனக் கொள்வதில்லை. காவலப்பன் கதை மேலை நாட்டுச் சமயக் கதைகளிலொன்றாகவிருக்கலாம்.” என்கிறார்.

அவரின் அந்த ஐயம் மிகவும் சரியானதே என்கிற கருத்தை அந்த கதையின் மூல ஆங்கிலப் பிரதியை நோக்கும்போது உறுதி செய்துகொள்ள முடிகிறது. கூகிள் தனது Google Books இல் இதை வகைப்படுத்தும்போது “சிறுவர்களுக்கான கதையாக” (Children's stories) வகைப்படுத்தியிருக்கிறது.

இந்த நூலை “Chapbook” என்றும் மேற்கில் வகைப்படுத்துகிறார்கள். மிகக் குறைந்த அளவிலான பக்கங்களைக் கொண்ட கதைகளுடன் பிரசுரிக்கப்படுகின்ற பிரசுரங்களையே “Chapbook” என்று அழைத்தார்கள். பல்லாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் தெரு இலக்கிய  (street literature) கலாசாரத்தின் அங்கமாக இந்த வகை இலக்கிய வெளியீடுகள் காணப்பட்டன. மலிவு விலையில் எளிமையான நூல்கள் தெருக்களில் விற்கப்பட்ட கலாசாரம் அது. அச்சுப் பண்பாட்டின் தொடக்கக் காலப்பகுதியில் குறிப்பாக பதினைந்தாம் நூற்றாண்டு தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருந்த வாசிப்பு கலாசாரம் இது.

இந்தக் கதை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே மேற்கு நாடுகளில் சிறுவர்களுக்காக நடத்தப்படும் கிறிஸ்தவ ஞாயிறு பாடசாலைகளில் வாசிக்கப்பட்டிருக்கிறது.  

மூல நூலை இங்கிலாந்தில் அன்றே வெவ்வேறு பதிப்பாளர்கள் பதிப்பிட்டிருக்கிற போதும் அமெரிக்க சமார்க்க புத்தக சங்கமும் (American Tract Society) 1825 ஆம் ஆண்டு ஆங்கிலப் பிரதியை வெளியிட்டிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். ஹன்னா மூரின் சுமார் 50 கதைகளை அச்சங்கம் பதிப்பித்துள்ளது.

பார்லி என்பவன் தான் பிரதான கதா பாத்திரம். Parley the Porter என்பதை நேரடியாக தமிழ்ப்படுத்தினால் “பார்லி என்கிற சுமைதூக்கி” என்று கூறலாம். ஆனால் “காவலப்பன்” என்று இலக்கிய சுவையுடன் அந்த தலைப்பை இட்டிருக்கிறார்கள்.

ஒரு காட்டிக்கொடுப்பாளனின் உதவியின்றி கொள்ளையர்கள் எப்படி ஒரு வீட்டிற்குள் நுழைய முடியாது என்பதை உணர்த்தும் கதை. 

“காவலப்பன் கதை”யை நமது கதைசொல்லி இலக்கிய வரலாற்று மரபில் இருந்து நீக்கிவிட முடியாது என்பது உண்மை. அதே வேளை அதை நாவலிலக்கியத்தின் தொடக்கம் என்று பதிவு செய்ய முனைகின்ற முயற்சி வரலாற்றுத் திரிபாகிவிடும்.

இலங்கையின் இலக்கியத்தில் கணிசமான பாத்திரத்தை ஆற்றிய முன்னோடிகளில் ஒருவராக ஹன்னா இருந்தும் இதுவரை ஹன்னா பற்றி தமிழில் எதுவும் வெளிவராதது வியப்பளிக்கிறது. ஹன்னா இலங்கைக்கு ஆற்றியது வெறும் இலக்கிய வகிபாகம் மட்டுமல்ல. மாறாக சமூக விடுதலை சார்ந்த பணிகளுக்கு அவரின் இலக்கிய படைப்புகள் கணிசமான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது என்பதை நமது இலக்கிய பரப்பில் மறந்து விடக் கூடாது.

விடுதலையின் பண்டிகை (அல்லது) ஓகஸ்ட் 12


காட்சி: சிலோன்

சபாத். (Sabat),  து(D)மால் (Dumal), சிங்களவர்கள் Etc. 

முதல் மூன்று பல்லவிகளும் பாடப்படும்


துமால்

மகிழ்வோம் பாடுவோம், ஆடுவோம் ! 

இன்று விடுதலையின் விடுமுறை நாள்!


சபாத்

எமது மீட்பின் ஆனந்த நாளை ஆசீர்வதிப்பாராக!

விடுதலையின் விடியலே வாழ்க!

எம் பிள்ளைகளின் பிள்ளைகள் ஒன்றுகூடப் போகிறார்கள்

நீதியான விடுதலையின் பிறப்பைக் கொண்டாடும் நாள்!


துமால்

ஆசீர்வாதத்தை எங்கெங்கும் பரப்புங்கள், 

அக்கறையும் கண்காணிப்பும் ஒருபுறம் இருக்க

ஒன்றுகூடி புசித்துக் குடித்து எக்காளத்தொனி 

பள்ளத்தாக்குகளில் முழங்க ஆடுவோம். பாடுவோம்


கோரஸ் (கூட்டுப் பாட்டு)

ஆடுவோம், பாடுவோம்

விடுதலையின் விடுமுறை இந்நாள்! (பாட்டு இங்கு முடிகின்றது)


சபாத்

ஆனால் எல்லா களியாட்டமும் தொடங்குமுன் 

எம் சுதந்திர வேட்கையை எண்ணுவோம்.

பாட்டுப் பாடி களிக்க மட்டுமல்ல

குடித்து புசிப்பதற்குமான சுதந்திரம்


துமால்

ஓம். தென்னை மரத்தினை போற்றுவோம்!

அது தரும் அத்தனை மகிமையோடும் 

சிரித்து மகிழுகின்ற சுதந்திரம்

எமது மனதில் நித்தம் உயிர் பெறுகிறது,


சபாத்

இந்தக் கொடைகளை வீணடிக்க வேண்டாம்

ஆதிகாரத்தை வீணில் வணங்கவேண்டாம்

குடிபோதை அல்ல எமது மீட்பு இன்று

அளவுக்கடந்த ஆசையும் அல்ல எமது விடிவு


கறுவாக் காடுகள் எமது பொக்கிஸம்

வேறு எத்தீவிலும் காண்பது அரிது.

அவற்றின் சுகந்தம் ஆகாயத்தின் விட்டத்தினை எட்டும்

அவற்றின் இனிமை எமது உழைப்பினை மெச்சும். 


ஆனாலும் எல்லாம் சிறந்த வல்ல மூலிகை

எமக்கு உன்னதமான ஆறுதல் தரும்

எமது ஆத்மாவினை வருடிச் செல்லும்

மேன்மை மிக்க இங்கிலாந்து 

விடுதலை வேட்கையின் சிறந்த நண்பன்

புனிதக் கனியினை காட்டுகிறது


எல்லா விருட்சங்களுக்கும் மேலாக

ஒரு இறைமைமிக்க விருட்சம் ஒங்கி வளரும்

அது தோன்றும் எங்கும் ஆனந்தமும் அமைதியும் விளங்கும்.

உடைந்த மனதுகளை ஆற்றி மீட்கும் கொடையே அது.


அதன் கிளைகள் ஆழமாகப் படியும்

அதன் கிளைகள் பரந்து நிற்கும்

அறிவினைப் பரப்பும்

அதன் நிழலில் பாவிகள் ஒதுங்குவர், பதுங்குவர்

அதன் உச்சி ஆகாயத்தை தழுவும்.


அதன் இலைகளில் பின்னிய நூல்

மடிந்துகொண்டிருக்கும் தேசத்தை மீட்கக் கூடும்

அதனை விசுவாசத்துடன் விரும்பிப் பெறுபவன்

தனது சுய இரட்சிப்பை உறுதி செய்வான்


துமால்

அப்படியா? இந்த நட்பின் விருட்சத்தை

தந்திடுக எமக்கு - நீவிர்

அதன் பயனை எமக்கு காண்பித்தால் 

உமது மகிமையை நாம் துதிப்போம்.


சபாத்

தென்னை மரத்தின் செறிந்த பானம்

எண்ணற்ற உயிர்களைத் தரும் பானம்.

எத்தனையோ உடைந்த மனங்களை ஆற்றி மீட்கும்

வல்லைமை பெற்றது இப் பானம்.


துமால்

குழப்புகிற புதிர்கள் இனி வேண்டாம் 

உமது கருத்தினை எடுத்துரைக

அந்த விருட்சம் எது அந்த வேதமெது?

உமது அறிவுக்கு எட்டியிருக்குமென நம்புகிறேன்.


சபாத்

உமது மரத்தின் இனிய பானம்

அதிகம் உட்கொள்ளின்

குரோதமும், சண்டையும் உண்டாகும்.

ஆனால் நான் எடுத்துக் கூறும் விருட்சம்

எல்லாவற்றுக்கும் மேன்மையான ஒன்று

ஒரு உன்னத படைப்பு. அதுதான்

வாழ்க்கை அளிக்கும் கற்பகத் தரு


மூளையைக் குழப்பும் தேங்காய் பானம்

உம்மை அலைய வைக்கும், அதனை நாடி

ஆனால் இம்மாபெரும் மரத்தின் 

பானத்தை அருந்துவோர்

தமது தாகத்தினை என்றென்றென்றுக்கும் தீர்ப்பர்.

(சபாத் பைபிளை நீட்டுவார் இத்தருணத்தில்)


இங்கிலாந்து அளிக்கும் கொடை இதுதான்

பாவத்தின் சங்கிலித் தொடரை அறுக்கும்

நறுமணம் கமழும் சோலைகளில் பரிமாறிக்கொள்ளும் 

தேனினய பானம்.

சொர்க்கத்தின் தெய்வீக பண்ட பரிமாற்றம்.


இந்தப் பரிமாற்றம் உன்னதமானது.

மற்றைய பண்டமாற்றம் போலல்லாது 

ஒரு சில வருட கவனிப்பும் கண்காணிப்பும் தான்

பின்னர், முடிவிலாத நிறைந்த ஆனந்தப் பிரவாகம்

உமக்கு உரித்தாகும்


இது எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற சுதந்திரத்தை நமக்கு காட்டுகிறது, 

நம் அன்றாட உழைப்பை நேசிப்பதும்; _ 

அல்லது பக்கத்து வீட்டுக்காரனுடன் கலவரம் செய்யாமல்

சோம்பேறித்தனத்தில் நம் நேரத்தை இழக்க விடாமல் தடுப்போம்


விடுதலை பெற்ற சுதந்திர மனிதனே

தனது உழைப்பை செவ்வனே செய்வான்

எஜமானருக்கு இது தெரியட்டும்.

கண்ணும் கருத்துமாக ஆண்டவருக்கு சேவை செய்பவனே

எஜமானருக்கும் நல்வழியில் ஊழியம் செய்வான்.


உடலும் உள்ளமும் விடுதலையடைந்தால்

நாட்களும் மாதங்களும் சுருக்கென கழியும்.

புகலில் சூரியனின் எம்நல் உழைப்பின் மேல் கண்கள் பதிக்க

இரவில் நாம் பிரார்த்தனையில் மூழ்கி நிதானத்தில் அமைதியாவோம்.


கூட்டாக சிங்களவர்கள் கோரஸ்

சபாத்தின் அரிய விருட்சம் எமக்கு தந்திடுவீர்

ஏகோபித்த குரலில் கேட்டு நிற்போம்

எமது தேவனை நாம் வேண்டி நிற்பதால்

நாம் சுதந்திரம் அடைந்ததை நிரூபித்து காட்டுடிவோம்.


ஆனந்தம் நிறைந்த உள்ளங்களுடன் 

அப் புனித நூலை வாசிப்போம்.

அப்போது நாம் எடுத்துக் காட்டுவோம்

எங்கு பார்த்தாலும் தோன்றும் காட்சி

தேவனின் கனிவில் சுதந்திரம் பெற்றவர்

சுயமாகவே திகழுகிறார்கள்.


சபாத்

ஒகஸ்ட் 12

அன்றைய நாளை மறக்க வேண்டாம்.

அன்றிலிருந்து எமக்கு விடுதலை.

சுதந்திரம். சுதந்திரம். சுதந்திரம் எமதே

என்றென்றும்!


கூட்டாக

எங்களை விடுவிக்கும் நாளை ஆசீர்வதிப்பாராக! 

வாழ்க விடுதலை!

முடிவு

(இக்கவிதையை இக்கட்டுரைக்காக மொழிபெயர்த்துத் தந்த சுமதி சிவமோகன்அவர்களுக்கு நன்றிகள்)

நன்றி - தாய்வீடு

இலங்கையில் அடிமையோழிப்பும் ஹன்னா மூரின் வகிபாகமும், என்.சரவணன் by SarawananNadarasa

டச்சு கால இலங்கையின் வரைபடவியல் பற்றிய வியக்கத்தக்க நூல்! - என்.சரவணன்

வாழ்க்கையில் இதுவரை வாங்கிய நூல்களிலேயே அதிக விலையை கொடுத்து வாங்கியது “Grote Atlas van de Verenigde Oost-Indische Compagnie” என்கிற நூலைத்தான். தபால் செலவுக்கும் சேர்த்து மொத்தம் 530 டொலர்கள் செலவாகும் என்கிற அறிவிப்பை இணையத்தளங்களில் கண்ட போது இது சாத்தியமில்லை என கைவிட்டு இருந்தேன். ஆனால் நெதர்லாந்தில் இருந்து ஒருவர் தன்னிடம் பயன்படுத்திய பிரதி இருக்கிறது என்றும் அதனை 175 டொலர்களுக்கு அனுப்பலாம் என்றும் அறிவித்திருந்தார். இறுதியில் அது என் கைகளுக்கு வந்து சேரும் போது 216 டொலர்களாக ஆகியிருந்தது. இலங்கைப் பெறுமானத்தில் அது சுமார் 65,000 ஆயிரம் ரூபா எனலாம். நான் மேற்கொண்டு வரும் சில நூல்களுக்கு தேவையான முக்கிய தகவல்களும் அவற்றுக்குப் பயன்படுத்தவேண்டிய வரைபடங்களும் இதில் நிறையவே இருக்கின்றன.

தமிழில் இதனை “டச்சு ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனியின் விரிவான வரைபடம்” என்றழைக்கலாம். ஒல்லாந்தர் (டச்சு) Dutch East India Company (VOC) ஆட்சி காலத்து வரைபடவியல் என இந்த நூலைப் பற்றி சாராம்சமாக குறிப்பிடலாம்.

புவியியலாளரும், வரலாற்றாசிரியருமான மார்டின் ஸ்ட்ரோம்ஸ் (Martijn Storms) இலங்கையில் டச்சு கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சி செய்த காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு தொகை வரைபடங்கள் இந்தத்தொகுப்புகளில் உள்ளன. மொத்தம் ஏழு தொகுப்புகள். டச்சுக் கட்டுப்பாட்டின் கீழ் அப்போது  இருந்த இந்தியா, ஆபிரிக்க நாடுகள், இந்தோனேசியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகள், அவுஸ்திரேலியா, ஜப்பான், சீனா, தைவான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைப் பற்றி தனித்தனியான தொகுப்புகள் இவை. இதில் நான்காவது தொகுப்பு இலங்கையைப் பற்றியது.


400 பக்கங்களுக்கும் மேற்பட்ட இந்த நூலில் இதுவரை வெளிவராத இலங்கையின் பல வரைபடங்களும், மூன்று - நான்கு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கோட்டைகளினதும், கட்டிடங்களினதும், குடியிருப்புகள் என்பவற்றின் வரைபடங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. அவ்வரைபடங்கள் ஆய்வுக்குட்படுத்தி பல விபரங்களும் அதில் தரப்பட்டுள்ளன. இலங்கையின் ஆரம்பகால வரைபடங்களின் தொகுப்பாக இதை விட சிறந்த ஒரு தொகுப்பு இதுவரை வெளிவந்ததில்லை என உறுதியாக சொல்ல முடியும்.

டச்சு மொழியிலும், ஆங்கில மொழியிலுமாக இரு மொழி விளக்க நூலாக அமைந்திருப்பதை காண முடிகிறது. அவ்வாறு டச்சு மொழியிலும் இருப்பதால் மூல ஆவணம் பற்றிய விபரங்கள் அதே தலைப்புகளில் கிடைக்கின்றன. எனவே மேலதிகமாக தேட விரும்புபவர்கள் அவற்றைக் கொண்டு மேலும் தனியாக விரித்துச் செல்ல முடியும்.

உதாரணத்துக்கு இந்த நூலுக்குத் துணையாக இருந்த ஆவணங்களில் முக்கிய ஒன்றாக இருந்திருப்பது Beschrijving en Caarten van den Eijlande Ceijlon என்கிற தலைப்பில் டச்சு சுவடிகூடத்தில் கண்டெடுக்கப்பட்ட தொகுப்புகளாகும். அதில் 1628 போர்த்துக்கேய ஆட்சிக் காலத்தில் இருந்து வரையப்பட்ட வரைபடங்கள் அதில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் தேடி இதனை பெற முடியாது என்பதை அறிவீர்கள். இதில் உள்ள வரைபடங்கலானது அன்றைய போத்துக்கேய அரசர் மூன்றாம் பிலிப்பின் ஆணையின் பேரில் போர்த்துக்கேய ஜெனரல் கொன்ஸ்டன்டினோ (captain-general Constantino de Sa de Noronha) என்பவரால் 1623 – 1630 காலப்பகுதியில் அவர் கடமையில் இருந்த பொது முதற் தடவை தயாரிக்கப்பட்டிருக்கிறது. கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணப் பட்டினம், திருகோணமலை, அலுத்கம, மெனிக்கடவல, வெலிகம,  நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், மன்னார், மாத்தறை, களுத்துறை, மல்வான உள்ளிட்ட பல பகுதிகள் பற்றிய குடியிருப்பு வரைபடங்களும், கோட்டைகள், கட்டிடங்கள் என்பவற்றின் தள வரைபட அமைப்புகளும் உள்ளன.


இவை சிதைவடைந்த நிலையில் பின்னர் அதை டச்சு அரசாங்க சுவடிகள் காப்பகம் மூலப் பிரதியைப் போலவே மீளவும் தயாரித்து வைத்திருக்கிறது.

இலங்கையின் வரைபடவியல் (cartography) வரலாற்று மரபை எடுத்துக்கொண்டால் 1477இல் தொலமியால் வரையப்பட்ட தப்ரபோன் என்று அழைக்கப்பட்ட பழமையான வரைபடமே பழமையானதாகக் கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் 1580 களின் பின்னர் தான் இலங்கையின் வரைபடங்கள் சற்று உண்மைக்கு நெருக்கமான வரைபடங்களாக வெளிவரத் தொடங்கின.

அதன் தொடர்ச்சியாக ஸ்பானிய வரைபடவியலாளரான கிப்ரியானோ (Cypriano Sanchez) என்பவர் 1590 இல் வரைந்த வரைபடம் இலங்கையின் மிகச்சரியான உருவ அமைப்பை காட்டாத போதும், முக்கிய குறிப்பான இடங்களை காட்டுகின்ற வரைபடமாக அமைந்தது. அதில் கண்டி, மகாவலி கங்கை, சிவனொளிபாதமலை (Adam’s Peak) உள்ளிட்ட இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கையின் வரைபடவியலில் உத்தியோகபூர்வமாக காத்திரமான பாத்திரத்தை ஆரம்பத்தில் ஆற்றியவர் டென்மார்க் இராணுவப் பொறியியலாளரான யான் கிறிஸ்டியான்ஸ் (Jan Christiaensz Toorzee). அவர் 1684-1708 காலப்பகுதியில் இலங்கையில் மிக முக்கியமான நில அளவையாளராக தீவிரமாக பணியாற்றிய ஒருவர். கான்ஸ்டபிள்-மேஜர் என்ற மிக உயர்ந்த பதவியை வகித்து வந்தவர். அவர் கொழும்பில் ஒரு நில அளவையாளராக பணியாற்ற வருமுன்னர் 1672இல் டென்மார்க்கின் கடற்படை,  பீரங்கிப் படைகளில் உயர் பதவி வகித்தவர். 1750க்குப் பின்னர் அவர் வரைந்த இலங்கை, மதுரை கடற்கரையின் வரைபடம் இலங்கையின் வரைபடவியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். அவர் நில அளவைக் கடமைகளுக்கு அப்பால், கொழும்பின் திசாவ போன்ற பிற உயர் பதவிகளையும் வகித்தத்துடன் இலங்கைக்கான டச்சு அரசியல் கவுன்சிலின் உறுப்பினராகவும் இருந்தார். அவருக்கு இணையான ஒரு சிறந்த நிபுணத்துவம் கொண்ட ஒரு வரைபடவியலாளர் இல்லை என அன்றைய ஆளுநர் ரிஜ்க்லோஃப் வான் கோயன்ஸ் (Rijklof van Goen) தெரிவித்திருக்கிறார்.

இந்த நூலில் மாத்திரம் இலங்கையை Ceijlon, Celon, Seijlon, Eylant van Celon, Eijland Ceijlon, Eyland Ceylon, Grot Eijland Seijlon, Taprobane, Lankaun, Lankadiep Sri Lanka போன்ற பெயர்களில் குறிப்படப்படுகிற வரைபடங்களைக் கவனிக்கலாம்.

இந்த வரலாற்றுப் பெறுமதிமிக்க இந்த ஆவணங்கள் ஒல்லாந்திலிருந்தும், இன்னும் வேறு நாடுகளிலிருந்தும் கவனத்துக்குள்ளாக்கப்படாமல் விரவிக் கிடந்தவற்றில் இருந்து தேடி எடுத்து ஆய்வுக்குட்படுத்தி தொகுக்கப்பட்டதே இந்த நூல்.

Map by Joris van Spilbergen 1602

இந்த வரைபடங்களுக்கு ஊடாக இலங்கையின் வரலாற்று வரைவியலின் நுட்பமான விபரங்களையும் திரட்டுவதற்கு இந்த நூல் வழிதிறக்கிறது எனலாம். மிகச் சின்ன எழுத்துக்களில் ஏராளமான வரலாற்றுத் தகவல்களையும் சேர்த்தே பல விடயங்களையும் பேசுகிறது இந்த நூல்.

இந்த பழைய வரைபடங்களில் இராணுவப பாதுகாப்பு, அரசியல் எல்லைகள், இடங்களின் பண்டைய பெயர்கள், மலைகள், காடுகள், நதிகள், குடியிருப்புகள், நீர்ப்பாசன அமைப்புகள், விவசாயம், கறுவா, தென்னை, நெல் தோட்டங்கள் என்பனவெல்லாம் இவற்றில் காணப்படுகின்றன.

சில வரைபடங்கள் யாரால் தயாரிக்கப்பட்டன என்கிற விபரங்களை கண்டெடுக்க முடியாத போதும் அவற்றின் முக்கியத்துவம் கருதி அவையும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றின் காலப்பகுதியையும் அண்ணளவாக கணித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுகம், கொழும்பு நகர அமைப்பு, அங்கிருந்த ஆரம்பகால காலனித்துவ கட்டிடங்கள் என்பவற்றின் படங்கள் மிகவும் சுவாரசியமானவை. அன்றைய காலத்துக்கே நம்மை அழைத்துச் சென்று பண்டைய கொழும்பை கண் முன் நிறுத்துபவை.

இப்படி இந்த நூலின் சிறப்பை அதிகம் கூறிக்கொண்டு செல்லலாம். பல புதிய ஆய்வுகளுக்கு ஆதாரமாக அமையக்கூடிய ஒரு சிறந்த நூல் இது எனலாம்.


ஊழலுக்காக இலங்கை டச்சு ஆளுநருக்கு 1734இல் வழங்கப்பட்ட தண்டனை!

டச்சு ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனியின் விரிவான வரைபடம்” (Grote Atlas van de Verenigde Oost-Indische Compagnie) என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரைபடவியல் நூலில் 108 ஆம் பக்கத்தில் ஸ்டீபனஸ் வெர்ஸ்லூயிஸின் (Stephanus Versluys - 1694-1736) உருவப்படம் ஒன்று  உள்ளது.

இந்த ஓவியம் 1947 ஆம் ஆண்டு வெர்ஸ்லூயிஸின் இன்றைய சந்ததியைச் சேர்ந்த ஜோஹன் வான் ரெய்கர்ஸ்பெர்க் வெர்ஸ்லூயிஸின் (Johan van Reigersberg Versluys) என்பவரின்  தோட்டத்திலிருந்து டச்சு ராஜரீக விஞ்ஞானிகள் கழகத்துக்கு (KZGW) அன்பளிப்பாக க்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது. அப்படத்தின் பின்புறத்தில்

"ஸ்டீபனஸ் வெர்ஸ்லூய்ஸ், வயது 35, ஆண்டு 1729. ஆளுநரின் கைப்பிடி  இலங்கையின் வரைபடத்தில் ஊன்றி வைத்திருப்பது காட்டப்பட்டுள்ளது. அவரின் பின்னணியில் ஆளுநர் மாளிகை காணப்படுகிறது” என்று குறிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்டீபனஸ் 1713 இல் டச்சு கிழக்கிந்திய கம்பனியில் இணைந்திருக்கிறார். வ.உ.சி.யில் சேர்ந்தார். வணிகராக ஒரு வாழ்க்கைக்குப் பிறகு, அவர் 1724 இல் அம்போன் என்று அன்று அழைக்கப்பட்ட இந்தோனேசியாவின் ஒரு பகுதிக்கு ஆளுநராக கடமையாற்றிவிட்டு பின்னர் 1729 இல் இலங்கையின் ஆளுநராக இலங்கைக்கு வந்து சேர்ந்தார். அதே வேளை டச்சு கிழக்கிந்திய கம்பனியின் தலைமையகமான பத்தாவியாவின் (ஜகார்த்தா) நிறைவேற்றுக் கவுன்சிலின் உறுப்பினராகவும் உயர் பதவி வகித்தார். ஆனால் அவர் ஐந்து வருடங்கள் கூட இலங்கையில் ஆளுநராக தாக்கு பிடிக்க முடியாமல் போனமைக்கு அவர் இலங்கையில் செய்த ஊழல்களே காரணம். லஞ்சமாக பரிசுகளைப் பெற்று அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என்பதே அவரின் மீது நிரூபிக்கப்பட்ட குற்றங்களாகும்.

1734 ஆம் ஆண்டில், அவர் ஊழல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, பதவியில் இருந்தும் அகற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. தண்டனை முடிவடைவதற்குள்ளேயே அவர் 1736 பெப்ரவரி 27அன்று பத்தாவியாவில் இறந்தார்.

இந்த உருவப்படத்தின் நகல் கொழும்பில் உள்ள இன்றைய ஜனாதிபதி மாளிகையிலும் வைக்கப்பட்டுள்ளது.


 

இலங்கையின் சுதந்திரம்! 1948? 1972? - என்.சரவணன்


இலங்கையில் இருந்த முடியாட்சிகளை கைப்பற்றி போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என மாறி மாறி அவர்களின் முடியாட்சிக்குள் இலங்கைத் தீவை 450 ஆண்டுகளுக்கும் மேல் வைத்திருந்தார்கள். இலங்கை முடியாட்சிலிருந்து முற்றாக நீங்கி குடியாட்சிக்கு மாறிய நாள் தான் குடியரசு நாளான மே.22.

 இலங்கை காலனித்துவ ஆட்சியின் கீழ் 1505 – 1948 வரையான 443 ஆண்டுகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது என்று கூறப்பட்டாலும், உண்மையில் 443 ஆண்டுகள் அல்ல. மொத்தமாக 467 ஆண்டுகள் என்றே கூற வேண்டும். ஏனென்றால் இலங்கை பிரித்தானிய முடியிடம் இருந்து முழுமையாக விடுதலை அடைந்தது 1972 குடியரசாக ஆனதன் பின்னர் தான். அதுவரை பிரித்தானிய முடியின் கீழ் தான் இலங்கை ஆளப்பட்டது. 1948ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது என்று கூறினாலும் பிரித்தானியா டொமினியன் அந்தஸ்தைத் தான் வழங்கியது. பூரண சுதந்திரத்தை அல்ல. “சுதந்தர”த்தின் பின்னர் 24 ஆண்டுகள் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் தான் இலங்கை இருந்தது. 1795 – 1948 வரை பிரித்தானிய ஆண்டது என்பது பிழையான கணக்கு. 1795 – 1972 வரை பிரித்தானியாவின் முடியின் கீழ் இருந்தது எனும் போது மொத்தம் 178 ஆண்டுகள் பிரித்தானியா ஆண்டது என்று தான் கூற முடியும்.

இந்து சமுத்திரத்தில் பிரித்தானியாவின் பெரிய காலனித்து நாடான இந்தியாவுக்கு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் வழங்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் அது அப்படியல்ல. டொமினியன் அந்தஸ்தைத் தான் இந்தியாவுக்கும் 1947 ஆம் ஆண்டு கொடுத்தார்கள். பின்னர் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26  தான் இந்தியா டொமினியன் அந்தஸ்திலிருந்து முழுமையாக விடுதலை அடைந்தது. இந்தியா ஆண்டு தோறும் ஓகஸ்ட் 15ஐ சுதந்திர தினமாகவும், ஜனவரி 26ஐ குடியரசு தினமாகவும் கொண்டாடி வருவதை அறிவீர்கள்.

ஆனால் இலங்கை அவ்வாறு குடியரசாவதற்கு அதை விட காலம் எடுத்தது. இந்தியா பூரண சுதந்திரம் வேண்டி கடுமையான சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த நாடு. ஆனால் இலங்கையில் பூரண சுதந்திரம் என்பது வீரியமாக இருக்கவில்லை. அரசியல் சீர்திருத்தங்களைத் தான் இலங்கையின் அரசியல் தலைவர்கள் கோரினார்கள். சுதேசிகளுக்கு அதிக அதிகாரங்களுடனான பிரித்தானிய முடியின் ஆட்சியை ஏற்றிருந்தார்கள். எனவே பிரிட்டிஷாருக்கும் இலங்கையின் மீதான வல்லாதிக்கத்தை இன்னொரு முகமூடியுடன் தொடர வாய்ப்பு கிட்டியது. அது தான் டொமினியன். டொமினியன் என்பது முடியின் அதிகாரத்தின் கீழான ஆட்சியைத் தான்.

பிரித்தானிய முடியின் கீழான ஆளுநரின் பிடி இருந்தது. அரச தலைவராக பிரித்தானிய மகாராணி தான் இருந்தார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் ஆளுநரின் கையெழுத்துடன் தான் சட்டங்கள் அமுலுக்கு வந்தன. இலங்கையின் உச்ச நீதிமன்றம் என்பது பிரித்தானியாவின் கோமரைக் கழகம் (பிரிவிக் கவுன்சில்) தான் இருந்தது. பிரிட்டன் படைகள் வரலாம், அனுமதியின்றி வான் பரப்பை பயன்படுத்தலாம் என்பது உட்பட பிரித்தனியாவின் அதிகாரங்கள் பல நடைமுறையில் இருந்தன.


1948 இல் பூரண சுதந்திரம் அடையவில்லை

சிறிமா பண்டரநாயக்காவின் ஆட்சி காலமான 1973 - 1977 வரை பிரித்தானியாவிடமிருந்து முழுமையாக விடுதலையடைந்த குடியரசு நாளை ஆண்டு தோறும் குடியரசு நாளாகவும், தேசிய வீரர்கள் தினமாகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த நாள் அரச பொது விடுமுறையாகவும் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி இக்காலப்பகுதியில் பெப்ரவரி 4ஆம் திகதியை சுதந்திர தின விழாவாக கொண்டாடுவதை நிறுத்தியிருந்தது.

1977 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஆட்சிக்கு வந்ததும் மே 22 குடியரசு கொண்டாட்டத்தை நிறுத்தினார். விடுமுறை நாளையும் இரத்து செய்தார். அதற்குப் பதிலாக மீண்டும் 1948 பெப்ரவரி 04 ஆம் திகதியையே சுதந்திர நாளாக விமரிசையாக கொண்டாடும் வழிமுறையைத் தொடர்ந்தார். இதனால் பலருக்கு குடியரசு தினமே மறந்து போனது. அதேவேளை இந்திய குடியரசு தினக் கொண்டாட்டம் எப்பேர்பட்ட கொண்டாட்டம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

முடியின் கீழ் 1972 வரை

72 வரையான அரசு பிரித்தானிய இராணியின் கீழான அரசாக இருந்ததால் 1962 ஜனவரி 24 அன்று இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் சில அரசியல் தலைவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த அரச கவிழ்ப்புச் சதியைக் கூட இராணியின் ஆட்சிக்கு எதிரான சதியாகவே அது உலகெங்கும் அழைக்கப்பட்டது. அந்த சதியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு விசாரணை நடந்தது. அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் வேடிக்கை என்னவென்றால் அது தொடர்பான மேன்முறையீடு பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலில் நடந்தது. அங்கே இராணியின் நீதிமன்றத்தில் (பிரிவிக் கவுன்சிலில்) அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையானார்கள் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்வது முக்கியம்.

இந்த தோல்வியுற்ற சதியில் சந்தேகநபராக கருதப்பட்டவர்களில் ஒருவர் அன்றைய பிரித்தானிய ஆளுநர் ஒலிவர் குணதிலக்க. அவருக்குப் பின் அந்த இடத்துக்கு ஆளுநராக தெரிவான வில்லியம் கொபல்லாவ நியமிக்கப்படுவதை 26.02.1962 அன்று இங்கிலாந்தில் பகிங்க்ஹோம் மாளிகையில் அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் தான் இலங்கையில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவாலும் அதே அறிவித்தல் விடுக்கப்பட்டது. இப்படித்தான் டொமினியன் ஆட்சி இலங்கையில் இயங்கியது.

1971 ஜே.வி.பி. கிளர்ச்சியில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கிய போது கூட இராணியின் சட்டத்தை மீறியமைக்காக ஜே.வி.பி.யினருக்கு தண்டனை அளிக்கப்பட்டதாகவே அறிவிக்கப்பட்டது.

அதுவரையான அரசாங்கமும், அமைச்சரவையும் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளும் போது மகாராணிக்கு விசுவாசமாக இருப்பதாகவே உறுதிமொழி எடுத்தனர். 1972 குடியரசின் பின்னர் தான் இலங்கை ஜனநாயக சோசலிசக் “குடியரசுக்கு” விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி எடுக்கும் சந்தர்ப்பம் வரலாற்றில் முதல் தடவை வாய்த்தது.

சகல இராணுவ பொலிஸ் அதிகாரிகளின் சீருடைகளிலும், தொப்பியிலும் பிரித்தானிய அரச சின்னம் கட்டாயமாக அணியப்படிருந்தது. கடும் மழையில் கூட எந்தவொரு இராணுவத்தினரும், பொலிசாரும் குடையொன்றை வைத்திருக்கும் அனுமதியைக் கூட கொண்டிருக்கவில்லை. அது பிரித்தானிய அரச முடியை அகௌரவப்படுத்தும் ஒன்றாக கருதப்பட்டது. 

1970 ஆம் ஆண்டு தேர்தல்

1970 ஆம் ஆண்டு 7வது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது கொம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமமாசக் கட்சி போன்ற இடது சாரிக் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி கூட்டணியை உருவாக்கிக்கொண்டு தேர்தலில் களம் இறங்கியது.

ஐக்கிய முன்னணிக் கூட்டணியை உருவாக்கிக் கொள்வதற்காக 06.06.1968 அன்று கண்டி போகம்பரை மைதானத்தில் வைத்து அக்கட்சிகள் மூன்றும் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுக் கொண்டனர். 27 விடயங்களைக் கொண்ட அந்த கொள்கைத் திட்டத்தில் ஒன்று தான் புதிய அரசியலமைப்பை உருவாக்கி பிரித்தானியாவிடமிருந்து பூரணமாக விடுதலை பெறுவது என்கிற ஒப்பந்தம். 1935 இல் என்.எம்.பெரேரா தலைமையில் நவ சமசமாஜக் கட்சி தோற்றுவிக்கபட்டபோதே இலங்கையை பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து நீக்குவது என்கிற கொள்கையுடன் தான் ஆரம்பித்தார்கள் என்பதையும் இங்கே நினைவுக்கு கொண்டு வரலாம்.

1970 தேர்தலில் வெற்றி ஈட்டினால் இங்கிலாந்தின் அரசியலமைப்பை நீக்கிவிட்டு புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்கிற வாக்குறுதியை அந்தக் கூட்டணி மக்களுக்கு அளித்திருந்தது. இறுதியில் ஐக்கிய முன்னணி மூன்றில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்களின் கையெழுத்து

குடியரசின் அரசியலமைப்புருவாக்கம்

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக 1970 ஆம் ஆண்டு யூலை 19 ஆம் திகதி கொழும்பு றோயல் கல்லூரியின் நவ ரங்கஹால மண்டபத்துக்கு வரும்படிசகல பாராளுமன்றப் பிரதிநிதிகளிடமும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். சகல உறுப்பினர்களையும் கொண்ட அரசியலமைப்பு நிர்ணய சபையை உருவாக்கினார். அதற்கு நீதி அமைச்சரான கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வாவை தலைவராக நியமித்தார்.

அடுத்த பத்தாவது நாளான யூலை 29 ஆம் திகதியும் அச்சபை கூடியது. இடையில் யூலை 22ஆம் திகதி தேசிய அரசுப் பேரவையின் விவாதத்தில் அவர் உரையாற்றும் போது

“ பிரித்தானிய முடியுடன் எவ்வித தொடர்பும் இன்றி எமது நாட்டில் சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட ஆட்சி முறையை நிறுவுவதற்கு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள. இந்த ஆண்டின் இறுதிக்குள், சுதந்திரமான, இறையாண்மையுள்ள ஒரு தேசமாக நாம் அங்கீகரிக்கக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க முடியும் என்று எதிர்பார்க்கிறேன். நாங்கள் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டுவோம்.” என்றார்.

இலங்கை பொதுநலவாய உறுப்பு நாடாக செயற்பட்ட போதிலும் இறைமையும் சுதந்திரமும் கொண்ட நாடாக இருந்தது. குடியரசாக ஆனதிலிருந்து இலங்கை அரசியல் ரீதியாக மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டிற்கு தலைமை தாங்கிய கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா, அரசியலமைப்புச் சபையை உருவாக்குவது தொடர்பாக கருத்து கூறியபோது 

“இதுவரை காலம் மக்களாக நாம் ஒரு வீட்டில் வசித்து வந்தோம். அந்நிய சக்தியான பிரித்தானியாவும் இராணியும் தான் அந்த வீட்டை அமைத்துக் கொடுத்தார்கள். ஆனால் அதற்குப் பதிலாக இன்று நாம் முழுமையாக புதிய அத்திவாரமிட்டு நமக்குத் தேவையான வீட்டைக் கட்டி அதில் குடிபுகுவதற்கான கட்டமைப்பைத் தான் இந்த அரசியலமைப்பு உருவாக்கச் சபையின் மூலம் மேற்கொள்ளப் போகிறோம்” என்றார்.

இந்த அரசியலமைப்பு நிர்ணய சபை மொத்தம் 35 தடவைகள் கூடி பல்வேறு அமைப்புகள், கட்சிகள் என்பவற்றின் அபிப்பிராயங்களையும் அறிந்தது.

1971 யூலை 10ஆம் திகதி அரசியலமைப்பு முழுவதும் தயாரிக்கப்பட்டுவிட்டது. அதன் பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அது நிறைவேற்றப்பட்டும் விட்டது. அதனை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தி அறிவிக்க்கப்பட்ட நாள் தான் 1972 மே 22.

புதிய அரசியலமைப்பை உருவாக்க உபகுழுக்களும் அமைக்கப்பட்டன. 1972 மே 4 ஆம் திகதி இந்த வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மே 22, 1972 இல் "குடியரசு அரசியலமைப்பு" தேசிய அரசுப் பேரவையில் நிறைவேற்றப்பட்டபோது, அதற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


“சுப முகூர்த்தத்தில்” குடியரசு

குடியரசுக் கட்சியின் அரசியலமைப்பை கொழும்பு ரோயல் கல்லூரி “நவ ரங்கால” மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டது.  பிற்பகல் 12.30 மணியளவில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் தலைவர் மைத்திரிபால சேனாநாயக்கவும், அரசியலமைப்பு வரைவு அமைச்சர் கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வாவும் வருகை தந்தனர்.

அன்றைய தினம் மதியம் சரியாக 12.43 மணியளவில் புதிய அரசியலமைப்பை முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிவித்த அரசியலமைப்பு நிர்ணயச் சபையின் தலைவர் ஸ்டான்லி திலகரத்ன 12.43க்கு கையெழுத்திட்டு அறிவித்தார். மங்கள மேளதாள பேரிகை முழக்கங்களுடன் இது நிகழ்ந்தது. அதன் பின்னர் புதிய அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் முதலாவது குடியரசின் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க பகல் 12.56க்கு பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். சோதிடரின் பஞ்சாங்கத்தின் பிரகாரம் அந்த நேரத்தை அவர் தெரிவு செய்திருந்தார் என்று அன்று பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. சுபநேரம், சுபமுகூர்த்தம் பார்த்து பக்தி சிரத்தையுடன் அது நடைபெற்றது உண்மை. அரசியலமைப்பின் கீழ் தனது முதல் கடமையை நிறைவேற்றியதாக அறிவித்து, வில்லியம் கோபல்லவவை குடியரசின் முதல் ஜனாதிபதியாக நியமித்தார் பிரதமர்.

புதிய குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொண்டதன் மூலம், பிரித்தானியாவின் பல காலனி நாடுகளைப் போலவே இலங்கையும் குடியரசாக மாறியது. குடிகளின் ஆட்சியாக ஆனது.

1956 இல் பண்டாரநாயக்கவின் முயற்சி

1956ல் மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்த போது பிரதமர் எஸ் டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையில் கட்டுநாயக்கா விமானத்தளமும் கொழும்பில் உள்ள பிரித்தானிய கடற்படைத் தளங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன. அதுவரை இலங்கையின் விமான நிலையங்கள், கடற்படைத் தளங்கள் பிரிட்டிஷ் முடியின் கட்டுப்பாட்டில் தான் (Royal Navy) இருந்தன. அப்போதிருந்தே காலனி ஆதிக்கத்தில் இருந்து முற்றாக விடுதலை பெற வேண்டும் என்கிற வேட்கை மீண்டும் தலைதூக்கியிருந்தது. ஆனால் அது பத்தாண்டுகளுக்கு பின்னர் தான் பண்டாரநாயக்கவின் துணைவியின் தலைமையிலான ஆட்சியில் சாத்தியப்பட்டது. பிரதமர் பண்டாரநாயக்க மூன்றில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருக்காத போதும் சோல்பரி அரசியலமைப்பை திருத்தி குடியாட்சி அரசிலமைப்பை உருவாக்குவதற்காக செனட் சபை, பிரதிநிதிகள் சபை என்பவற்றின் கூட்டுக் குழுவொன்றை  07.11.1958 அன்று நியமித்தார். ஆனால் ஓராண்டு ஆவதற்குள் அவர் கொல்லப்பட்டுவிட்டார். 

1972 குடியரசு தின வைபவத்தை கொண்டாடுமுகமாக 24 ஆம் திகதி புதன்கிழமை கண்டி தலதா மாளிகையில் விசேட ஆராதனைகளை செய்து விட்டு வெளியே வந்து உரையாற்றிய பிரதமர் சிறிமா,

“எனது கணவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தக் குடியரசு எப்போதோ உதயமாகியிருக்கும். 1956 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகையில் இலங்கைக் குடியரசாக்கும் அபிப்பிராயத்தை அவர் வலியுறுத்திப் பேசியிருந்தார். அதன் பின்னர் அவர் கஷ்டப்பட்டு எடுத்த முயற்சிகள் நிறைவேறவில்லை. அதைத் தான் 1970 ஆம் ஆண்டு எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் மக்களுக்கு தெரிவித்திருந்தோம். இன்று அவரின் கனவு நனவாகியுள்ளது. இக்குடியரசின் மூலகர்த்தாவான அவருக்கு கிடைக்கவேண்டியது இந்தக் கௌரவம்...” என்றார்.

1972 வரை, மேல்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலால் தான் தீர்மானிக்கப்பட்டன. குடியரசு அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் இந்த நிலையும் மாறியது.

சிலோன் ஸ்ரீ லங்கா ஆனது

குடியரசு தினம் பிரகடனப்படுத்தப்பட்ட அன்று சிலோன் என்று காலனித்துவம் சூட்டிய பெயரை நீக்கியதன் நினைவாக 15 சத பெறுமதியுள்ள ஒரு முத்திரையும் வெளியிடப்பட்டது. அது வரை சிலோன் என்று இருந்த முத்திரைகள் அன்றிலிருந்து “ஸ்ரீ லங்கா” என்று மாறியதன் நினைவாக அதில் ஸ்ரீ லங்கா என்று குறிக்கப்பட்டது.

குடியரசு தினம் தமிழர்களுக்கு ஒரு பொருட்டாக இருந்ததில்லை. ஏனென்றால் சுதந்திர தினமும் கூட அவர்களுக்கு பொருட்டாக இருந்திருக்கவில்லை. 

ஆனால் இலங்கை முடியாட்சியில் இருந்து முற்றாக விடுபட்ட நாள் எனும் அர்த்தத்தில் இலங்கை மக்களுக்கு குடியரசு தினம் ஒரு முக்கியமான தினம். அது அரசியல் சித்து விளையாட்டுகளின் காரணமாக இலங்கை மக்களால் முக்கியமிழந்து போயிருக்கிறது.

2022 அதன் பொன்விழா கொண்டாடப்படாமைக்கு இலங்கை எதிர்நோக்கியிருந்த பாரிய பொருளாதார அரசியல் நெருக்கடியைக் காரணமாகக் கூறிக்கொள்ளலாம். ஆனால் அந்த நாளுக்கு கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச முக்கியத்துவத்தை ஊடகங்கள் கூட கொடுத்திருக்கவில்லை.

வழித்தடம்

  1. 15.08.1947  - டொமினியன் அந்தஸ்தின் கீழ் முதல் தேர்தல் நடத்தப்பட்டது
  2. 25.11.1947 - பாராளுமன்றம் திறக்கப்பட்டது
  3.  04.02.1948 – சுதந்திர பிரகடனம்
  4. 07.11.1958 - அரசியலமைப்பு சீர்திருத்த குழுவொன்று பண்டாரநாயக்கவால் உருவாக்கம்.
  5. 06.06.1968 - கண்டி போகம்பரையில் ஐக்கிய முன்னணி தோற்றமும், குடியரசாக ஆக்கும் பிரகடனமும்
  6. 27.05.1970 - பொதுத் தேர்தல்
  7. 19.07.1970 - அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கம்
  8. 10.07.1971 - அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுவிட்டது.
  9. 04.05.1972 - அரசியலமைப்பு வரைவு பாராளுமன்றத்தில் சமர்பிப்பு
  10. 22.05.1972 - குடியரசு தின பிரகடனம்

நன்றி - "சாளரம்" தினகரன் - 25.05.2025


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates