Headlines News :
முகப்பு » , , , , » என்.சரவணனின் "அறிந்தவர்களும் அறியாதவையும்" - நூல் விமர்சனம் - அஹமட் பிஸ்தாமி

என்.சரவணனின் "அறிந்தவர்களும் அறியாதவையும்" - நூல் விமர்சனம் - அஹமட் பிஸ்தாமி

100வது நூலறிமுகம்

நூல் : அறிந்தவர்களும் அறியாதவைகளும்  (காலனித்துவ கால அரசியல் சமூக மாற்றத்தில் முக்கிய வகிபாகத்தை ஆற்றிய இலங்கையரல்லாத 24 ஆளுமைகள் பற்றிய நூல் )

நூலாசிரியர் : என் சரவணன்

அட்டைப்படம் போலவே வரலாற்றின் தலையையையும் காலையும் அகற்றி விட்டு இடைக்கு மேலால் இடையில் செருகப்பட்டவை தான் அரைகுறையாக முழுமையற்றவிதத்தில் எம்முள் இன்றுவரை சேகரமாகி செரிமானமாகி உள்ளன. அதன் உண்மைகளை மர்மங்களை உலகறியச்செய்கிறார் சரவணன்.

வரலாற்றில் எழுதப்பட்ட எண்ணற்ற பயன்மிகு நூல்கள் சிறந்த வாசகர்களையும் ஆய்வாளர்களையும் சென்றடையாமை, அந்த நூல்களின் பெறுமதி உணரப்படாமை அத்தகைய நூல்கள் பிரபலம் பெறாமைக்கும் பயன்பாட்டுக்கு உதவாமைக்கும் காரணிகளாகின்றன. அத்தகைய ஒரு நிலைமைக்கு இந்நூல் ஆளாகக்கூடாது என்பதால் இந்நூலை எனது 100 வது நூலறிமுகத்தில் இணைக்கின்றேன். அறியப்பாடாத ஆளுமைகளை அறியப்படுத்தும் அருமையான நூல் அறியப்படாமல் இருக்கக்கூடாதல்லவா?

வரலாறு என்பதே ஒருவகையில் இருட்டடிப்பும்  இழுத்தடிப்பும் சார்பியமும் தான். அவசியமானவர்கள் அவசியமற்றவைகளை வேண்டுமேன்றே தள்ளிப்போடும் கைங்கரியம் தான் அனேகமாக வரலாற்று நூல்களில் அரங்கேற்றப்பட்டுள்ளன. (பின்னால் வந்த ஆளும் அதிகார தரப்பு முன்னால் சென்ற தோற்கடிக்கப்பட்ட அல்லது வீழ்த்தப்பட்ட தரப்பை குரூரமாக விமர்சித்து வந்துள்ளதை  இஸ்லாமிய வரலாற்றிலும்  காண முடிகிறது.) 

அத்தகைய வரலாற்று அவலங்களை அற்புதமாக தோலுரித்து தலைப்புக்கு ஏற்றாற்போல அறியத் தருகிறார் சரவணன். நீண்ட காலனிய வேர்களைக் கொண்ட இலங்கை வரலாறும் அப்படிப்பட்டது தான்.

ஓரினத்தின் மேன்மையை மொழியை உயர்த்தி மற்றமைகளை அடக்கி ஒடுக்கி உதறித் தள்ளிய ஆயிரம் சம்பவங்களை சரித்திர நிகழ்வுகளை இங்கு நாம் காணலாம். அவற்றின் எதிராலிகள் தான் இன்றுவரை முரண்பட்டு முட்டி மோதுமளவு இறுகிய உள்ளம் கொண்டவர்களாக மாற்றி விடுபட முடியாதபடி  எம்மை பாடாய் படுத்துகின்றன.

பொதுவாக சமயமாகட்டும், சட்டமாகட்டும், சரித்திர மாகட்டும் பரம்பரை பரம்பரையாக,  வாய்வழியாக, பாடத்திட்டம் வழியாக  வந்து எம்மிடம் சேர்ந்தவை, அனுபவத்தில் கண்டவை இவை மட்டுமே உண்மையானவை, ஊர்ஜிதமானவை என்பதை உள்மனம் உறுதி செய்திருக்கும். இவற்றுக்கு அப்பால் ஏதாவது புதுமைகள் நுழைகையில் அங்கீகரிப்பது, ஜீரணிப்பது, சமரசம் செய்வது விட்டுக் கொடுப்புடன் நடப்பது எமக்கு  மிகவும் கஷ்டமாக அமையும். 

ஆண்டாண்டு காலமாக கூறப்பட்டு அலுத்து புளித்துப் போன விடயங்களை எல்லாம் கடந்து, ஏலவே பரீட்சயமான, ஆளுமைகள் பற்றிய அறியாத பக்கங்கள் சரியான ஆதாரத்துடன்  கூறப்படுகையில்  உண்மையில் சுவாரஷ்யமாகவே அமையும். நூல் முழுக்க அதன் உயிரோட்டத்தை காணலாம்.  பேசப்படும் ஆளுமைகளுடன் மிகவும் நேரடியாக தொடர்புபடும் அல்லது அவர்களாகவே அனுபவங்களை பகிரும்  மூல நூல்களில்    இருந்து தகவல்கள் தரப்பட்டுள்ளதால் இவை இன்னும் செழுமை பெற்று உறுதி செய்யப்படுகின்றன. இன்னொரு வகையில் சொல்வதானால்  மூடி மறைக்கப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட எமது தேசத்தின் வரலாற்றை கற்பதற்கான  புத்தக வடிவிலான புதுமையான நூலறிமுகமும் தான் இது எனலாம் .

பொதுவாக “ தாம் அறியாதவற்றை மக்கள் எதிர்ப்பார்கள்” என்ற கூற்றுக்கு இணங்க இங்கும் சில அஜீரணங்கள் தோன்றுவது இயல்பானது. ஊட்டப்பட்ட, போஷிக்கப்பட்ட, திணிக்கப்பட்ட, வரலாறாக்கப்பட்ட,  ஊறிப்போன சிந்தனைகளை, தகவல்களை எல்லாம் அகற்றி களைந்து விட்டு இன்னொரு  தளத்தில், கோணத்தில், பார்வையில் நின்று  அத்தகைய சம்பவங்களை அணுகுவது அலசுவது  பலருக்கும் சற்று விருப்பமற்ற அஜீரணமாகும் செயல்தான். 

ஆனால் சரவணன் செய்திருப்பது அத்தகைய இறுக்கமான மன நிலையில் இருந்து விடுபட்டு புதிய பார்வையில் வரலாற்றை நோக்கி திரும்பியே ஆக வேண்டும் எனும் உண்மையை தான். ஆக வேண்டியதும் அதுவே தான்.

தன் சார்பிலும் இருட்டடிப்பிலும் எழுதப்பட்ட இலங்கை வரலாற்றை அதில் மிகைத்துள்ள சார்பியங்களை திரைநீக்கம் செய்துவிடுகிறது நூல்.

பலபோது இலங்கை அரசியலில் அவசியமானவர்களாக  மட்டும்  கருதப்பட்டு ஆளும் அதிகாரவரக்கத்தால் உயர்த்திப் பிடித்தவர்கள், தமக்கு எதிராக வருமென கருதி கருத்தியல்களை கட்டமைத்து அவசியமற்றவர்கள் எனக்கருதப்பட்டு வேண்டும் என்றே மறக்கடிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் தோரணையில் தான் சில ஆளுமைகளை மட்டும் நூல் பேசுகின்றது.

உண்மையில் ஐவர் ஜென்னிங்க்ஸ் இங்கு முதலாவது  பல்கலையை ஆரம்பித்தது இலங்கையின் சுதேசிகளுக்கு சார்பாகவல்ல, தமது காலனித்துவ சுய நலன்களை இங்கு நிலைநாட்டி சுரண்டிப்பறித்து விழுங்கவும் தமக்கு சார்பான நிர்வாகிகளை தோற்றுவிக்கவுமே, இன்றும் கூட அவரால் வரையப்பட்ட சட்ட யாப்புகள் தானே உலக நாடுகள் பலதிலும் உயிர் வாழ்கின்றன.

கண்டியை வெல்ல எத்தகைய கபடத்தனமான நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் ஹென்றி மாஷல்.

அதிகாரத்தின் முன் ஆன்மாவின் இயல்பான காதலுணர்விடம் சரணடைகிறார் மெயிற்லன்

நொக்ஸை படுத்திய பாடும் நொக்ஸ் பட்ட பாடும் தான் இலங்கை பற்றிய மர்மங்களை வெளிப்படுத்துகின்றன.

புரோஹியர் இல்லாவிட்டால் இலங்கையின் பெறுமதி இன்னும் அறியப்பட்டிருக்கவே முடியாது.

உலக வரலாற்றில் ஐரோப்பா அரேபியர்களுக்கு கடன்பட்டிருப்பது போலஇலங்கையும் விதேசிகளுக்கு கடன்பட்டுள்ளது உண்மைதான்

ஒல்கொட்டின் வரலாறும் அப்படித்தான். ஆதர் சீ கிளாக்கின் வாழ்வின் பின்னாலும் ஏராளமான மர்மங்கள் உள்ளன. தேயிலையை கொண்டு வந்த டைலரும் இதே நோக்கில் தான் நடந்து கொண்டார். தேயிலைக் கொழுந்துகளுடன் வாழ்வை அடைத்துக்கொண்டு தவிக்கும் மலையக மக்கள்,  இந்திய வம்சாவளி மக்களின் வாழ்வியல் சிக்கல்களும் உரிமைகளும் இன்னுமே தீர்க்கப்படாத நிலையில் சுயநலன்களுக்காக இழுபறியாகி உள்ள அரசியலாகியுள்ள அவலத்தை எல்லாம் கடந்து பல நூற்றாண்டுகளுக்கு முன் ஏன் பெருந்தெருக்களும் தொடரூந்து பாதைகளும் மட்டும் அன்றே அமைக்கப்பட்டன என்ற வினா மூலம் எப்படி அவர்கள் உழைப்பால் சுரண்டப்பட்டு பொருளாதார நலன்களுக்காக உறிஞ்சப்பட்டனர் என்பதை புரியலாம். (மலையகம் குறித்த மேலதிக தகவல்களை கள்ளத் தோணியில் அறிமுகம் செய்ய உள்ளேன்)

உண்மையில்  இலங்கையின் காலனித்துவ அரசியல் ஆக்கிரமிப்பு கால அரசியல் சமூக மாற்றத்தில் முக்கிய வகிபாகத்தை ஆற்றிய இலங்கையரல்லாத 24 ஆளுமைகள் பற்றியதான அறிந்தும் அறியாத நூலாக தலைப்பிடப்பட்ட நூல் எமது பார்வையை இன்னொரு பக்கம் கொண்டு செல்கிறது. இலங்கை வரலாறு குறித்தான எனது  வாசிப்பு அனுபவத்தில் இன்னொரு இனத்தில் சமயத்தில் இருந்தவாறு அதுவல்லாத ஒரு சமயத்தை அதன் ஆளுமைகளை பேசுவது பன்மைத்துவ புரிதலின் வெளிப்பாடு என்பேன். இங்கு நாம் அதிகம் பேசாத  அத்தகைய  ஆளுமைகள் அரசியல் தளத்தில் நின்று பேசப்படுகின்றன. இங்கு பதூதாவும் துக்ளக்கும் போல இலங்கைக்கு வந்த இன்னொரு அசோகனாக ஒல்கொட்டும் சங்கமித்தியாக Petrovna Blavatsky யும்  வருகிறார் பைபிளை தமிழுக்கு தந்த  Philippus Baldaeus உம் வந்து செல்கின்றனர்.

அந்த நோக்கில் தான் அ. மாக்ஸின் நான் புரிந்து கொண்ட நபிகளாரையும், மாட்டின் லிங்ஸின் முஹம்மதையும் மைகல் ஹெச் ஹாட்டையும் எஸ் ராவின் கோடுகள் இல்லாத வரை படத்தில் வரும் இப்னு பதூதாவையும், முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் போன்ற நூல்களையும் வாசித்துள்ளேன். 

அந்த வரிசையில் தான் இந்த நூலிலும் இப்னு பதூதாவில் தொடங்கி மைக் வில்சன் வரையான மர்மங்களை கண்டுகொள்ளலாம்.

பதுதாவின் ரிஹ்லா மூலம் அறிந்த பதூதாவும் கலாநிதி சுக்ரி வழியாக அவரது அகன்ற ஆய்வுகள் மூலம் கண்ட பதூதாவுக்கும் கோடுகள் இல்லாத வரைபடம், தேசசஞ்சாரி மூலமாக எஸ் ராவின் பதூதா பற்றிய எனும் பார்வைக்கும் சரவனின் சமூக மாற்றத்தில் காத்திரமான பங்களிப்பை வழங்கிய பதூதா பற்றிய பார்வைக்கும் நிறையவே வித்தியாசமான கோணங்கள் உள்ளன. செய்யும் பதூதாவுடன் துக்ளக்கும் வருவது சுவையாக உள்ளது. 

துக்ளக்கின் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் முட்டாள் தனமான செயற்பாடுகளுக்கு பின்னால் உள்ளவர் பதூதா என்பதும் ஆய்வாளர்களது பார்வை. வரலாற்று உண்மையும் அதுதானே.14 ம் நூற்றாண்டு இந்தியாவை இலங்கையை அறிய பதூதாவை வாசித்தே இருக்க வேண்டும். அப்போது தான் இரண்டு தேசங்களிலும் நிகழ்ந்த அரசியல் மற்றும் சமூக மாற்ற தளங்களின் வீச்சை உணர முடியும். 

இடையில் பெண் ஆளுமையாக வரும் ஆயிஷா ரவூப் எனும் விதேச ஆளுமை பற்றிய குறிப்புகளும் பயன் மிக்கவை (இது குறித்து தனியாக ஒரு பதிவு எழுதியுள்ளேன்)

இஸ்லாமிய சிந்தனைப்பரப்பில் ஒரு விடயத்தை கண்மூடித்தனமாக ஏற்கவோ நம்பவோ அங்கீகரிக்கவோ இடமில்லை. சொல்லப்படும் விடயம் பற்றிய தெளிவு ஆதாரத்தினடியாக அமைய வேண்டும். அப்போதுதான் அது அரத்தமுள்ளதாக பெறுமானம் மிக்கதாக அமையும்.

ஏன்? எப்படி? எதற்கு? எதனால்? யாரால்? என்ன நோக்கத்திற்காக? போன்ற வினாக்களை முன்வைத்து சிந்திப்பதால் தான் ஒரு நிகழ்வின் ஆழ அகலங்கள், மர்மங்கள் துலாம்பரமாகும். வெறும் எடுகோள்கள், அனுமானங்கள் ஊகங்கள் அர்த்தமற்றவை.   விழுமியமிழப்பை (Valueless) பறைசாற்றுபவை. எதிர்ப்பை மட்டும் கக்கும் விசமத்தனமானவை. ஆனால்  முன்வைக்கும் அனைத்துக்குமே மூலாதார முதன்மை நூல்களையே ஆதாரமாக்கி அலசும் பணி அசகாய சூரர்களின் பணி. அதுவே வரலாற்றுக்குச் செய்யும் அறிவுப்பணி. அழியாத ஆய்வு மரபை அடியொட்டிய பணி. இந்த உன்னத வரலாற்றுப் பணியைத்தான் சரவணன் துணிந்தெழுந்து எழுதியுள்ளார். 

மர்மத்திரைகளை விலக்கி தெளிவூட்டியுள்ளார். காய்தல் உவத்தலின்றி துலாம்பரமாக வரலாற்று வியாக்கியானம் செய்து  விபரிக்கிறார்.

இப்படியெல்லாம் விபரிக்க வரலாற்று நூல்களை கற்று மட்டும் போதாது வரலாற்றுணர்வும் ரத்தத்தில் கலந்து சங்கமித்திருக்க வேண்டும். அப்படி கலந்தால் மட்டுமே வரலாற்றெழுதுகையூடாக இந்தளவு சுவாரஸ்யமாக விறுவிறுப்பாக எழுத முடியும்.

எத்தனையோ வரலாற்று நூல்களை ஆளுமைகளை அலசும் பெருத்த நூல்களை படித்துள்ளேன். ஆனால் நான்கைந்து பக்கங்களில் ஓர் ஆளுமையின் அறியப்படாத புதுமையான வாழ்வியலை அதன் பின்னாலுள்ள மர்ம அரசியலை இப்படி சுவைபட மூலாதார நூல்களுக் கூடாக படிக்க கிடைப்பது இங்கு தான். 

இதனால் தான் சரவணனின்  இலங்கையின் கடந்தகாலம் பற்றிய வரலாற்று எழுத்துகள் மீள உயிர்பெற்று  வீரியத்துடன் எதிர் காலத்தன்மை பெற்றுவிடுகின்றன. தகவல்களை மட்டும் உள்வாங்கி மெய்சிலிர்த்து புருவமுயர்த்தி புடைத்துவிட்டு அடங்காமல் புதுமையான தகவல்களின் பால் பயணிக்க உண்மைகளை கண்டறிய களமமைக்கிறார் சரவணன்.

எழுந்தமானமான பார்வை, ஒற்றைப்பரிமாண புள்ளியில் சுழன்று தவிர்த்துக் கொண்டிருத்தல் நுனிப்புல் மேய்தல் உதிரியான தகவல்களை கோர்த்தல், இணைத்தல் போன்ற அரத்தமற்ற அனைத்தையுமே தவிர்த்து தகர்த்து ஒழுங்குபடுத்தப்பட்ட உண்மையான ஊர்ஜிதமான பன்முக பரிமாணம் கொண்ட பார்வைக்கு அழைத்துச் செல்கிறார். 

கூறியதையே திரும்பத் திரும்பக்கூறும் மூடிய இருண்ட சார்பிய தகவல் மூலங்களிலிருந்து முழுமையாக விலகி உண்மையான மூலங்களின் பால் திறந்த புதிய பார்வையை நோக்கி நகர்த்திச் செல்கிறார் சரவணன் 

இதுவே அவரது கைதேர்ந்த ஆழமான வாசிப்பினதும் காய்தல் உவத்தல் அற்ற எழுத்தினதும் பெருத்த வெற்றி என்பேன்.

இங்கு பேசப்பட்டுள்ள அணைத்து விதேஷ ஆளுமைகளும் யாரின் சுக்கானின் கீழால் இயக்குவிக்கப்பட்டார்கள்?  எதற்காக வந்தார்கள்? அழைத்து வரப்பட்டார்கள்? இடையில் ஏன் துரத்தப்பட்டார்கள்? நாடுகடத்த எல்லாம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன? இன்றைய சமகால அரசியல் நிலைமையின் மூலங்களை எப்படி எப்படி எல்லாம் உரசி உராய்ந்து ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதனை அழகுற உணர்த்துகிறது நூல்.

மொத்தத்தில் நூல் தூக்கலாகவும் அசத்தலாகவும் உள்ளது.

சரவணன் வரித்துக்கொண்ட அரசியல் எவ்விதத்திலும் சமரசமற்றது. எவற்றையும் அரசியலாக நோக்குபவன் மாத்திரமல்ல, பத்திரிகையாளனாக மாத்திரமல்லாது அரசியல் களப்போராளியாகவும் வீதியில் இறங்கியவன் என பின்னட்டை குறிப்பிடுவதை அவரது எழுத்துக்கள் ஊர்ஜிதம் செய்கின்றன.

(அஹமட் பிஸ்தாமி அவர்களின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன்...)

Share this post :

+ comments + 1 comments

10:58 AM

பெருத்த நன்றிகள்

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates