Headlines News :
முகப்பு » , , , , » செல்வந்தர்களின் புகலிடமாகிப் போன கறுவாத் தோட்டம் (கொழும்பின் கதை - 16) - என்.சரவணன்

செல்வந்தர்களின் புகலிடமாகிப் போன கறுவாத் தோட்டம் (கொழும்பின் கதை - 16) - என்.சரவணன்

இலங்கை காலனித்துவத்துக்குள் சிக்கிக்கொள்ள வழிவகுத்ததே கறுவா மீதான மேலைத்தேயர்களிடம் இருந்த அளப்பெரிய மோகம் தான். தாகம் தான்.

முதன் முதலில் போர்த்துக்கேயர் வழிதவறி இலங்கையில் கரையொதுங்கிய போது கறுவா வணிகத்தில் ஏகபோகமாக திளைத்திருந்தவர்கள் அரேபியர்கள். கொழும்புத் துறைமுகம் முக்கியத்துவம் பெற்றதும் அதனால் தான். போர்த்துகேயர் அரேபியர்களை விரட்டிவிட்டு படிப்படியாக கறுவா வணிகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது மட்டுமன்றி “கோட்டே” அரசனுடன் கறுவா வணிகம் சம்பந்தமாக ஒப்பந்தத்தையும் ஏற்படுத்திக்கொண்டு, தமக்கு ஒரு கோட்டையை அமைத்துக்கொள்ள அனுமதியையும் பெற்றுக் கொண்டனர். அதுவே கொழும்பு என்கிற நகரம் உருவாகவும், அதுவே இலங்கையில் தலைநகராக நிலைபெறவும் காரணமாயிற்று.


காலனித்துவ ஆட்சியாளர்கள் பிற்காலத்தில் கறுவாவை விட மேலும் பல வருமானங்களை இலங்கையில் ஏற்படுத்திக்கொண்டார்கள். இலங்கையின் வளங்களை எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டிச் சென்றார்கள். ஆனால் இலங்கையின் கறுவாவுக்கு இன்றும் சர்வதேசிய அளவில் ஒரு பேரு மதிப்பு உண்டு.

கொழும்பில் அன்று கறுவா பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட இடம் தான் இன்று அப்படி ஒரு பயிர்ச்செய்கை இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் இலங்கையின் பெரும் செல்வந்தர்கள் வாழும் மையமாகவும், கட்டடங்களாகவும் காட்சியளிக்கிறது.

ஆங்கிலத்தின் சின்னமன் கார்டன் (Cinnamon Garden) என்றும் சிங்களத்தில் குறுந்து வத்த (කුරුඳු වත්ත) என்றும் அழைக்கப்படும் இந்த கொழும்பு 7இல் (கறுவாத் தோட்டப் பகுதி) வாழ்பவதை பலரும் பெரும் கௌரவமாகக் கருதுகிறார்கள். முக்கியமான நாடுகளின் தூதுவராலயங்களும், உயர்ஸ்தானிகர்களின் இல்லங்களும் இங்கே உள்ளன.

இலங்கையில் தென்னையும் பனையும் மலிந்திருந்த ஒரு காலத்தில்; உள்நாட்டுக்குள் அத்தனை பிரபல்யமாக கருவா இருக்கவில்லை. ஆரம்பத்தில் கறுவாவை உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் கொள்வனவு செய்து ஏற்றுமதி செய்தவர்கள் படிப்படியாக இலங்கையை ஆக்கிரமிக்கத் தொடங்கியதும் தாமே ஆனால் கரையோரப் பிரதேசங்களில் இத்தகைய தென்னைக் காடுகளை அழித்து கறுவா உற்பத்தியைப் பெருக்கி ஏற்றுமதி செய்தார்கள். போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், ஆங்கிலேயர்களும் அதைத் தொடர்ந்தார்கள்.

போர்த்துக்கேயர் காலத்திலும், ஒல்லாந்தர் காலத்திலும் அவர்களின் பிரதானமான வருவாயாக கறுவா வணிகம் ஆனது. ஐரோப்பா முழுவதும் இலங்கை கறுவாவை ஏற்றுமதி செய்தார்கள். கறுவா திணைக்களம் என்கிற ஒரு அரச நிறுவனத்தையே ஏற்படுத்தியிருந்தார்கள். கண்டி ராஜ்ஜியத்தின் படையெடுப்பில் இருந்து தம்மை பாதுகாப்பதற்காக கோட்டை அரசன் போர்த்துகேயருடன் ஆண்டுதோறும் 250,000 இறாத்தல் கறுவாவை வழங்குவதாக ஒப்பந்தம் செய்துகொண்டான். அதுபோல பிற்காலத்தில் கண்டி மன்னன் 1602 ஆம் ஆண்டு ஒல்லாந்து மன்னனுக்கு 3000 இறாத்தல் கறுவாவும், மிளகும் பரிசாக அனுப்பினான். 

போர்த்துகேயர், ஒல்லாந்தர் காலத்தில் கூட இலங்கையர்கள் கறுவாவை காட்டுப் பகுதிகளில் சென்று தான் சேகரித்தார்கள். அதில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கையர்கள் காட்டு மிருகங்களினால் ஏற்படுகிற இடையூறுகளில் இருந்து பாதுகாப்பதற்காக போர்த்துக்கேய காவலர்கள் பாதுகாப்புக்குச் சென்றார்கள். ஒரு கட்டத்தில் கறுவா குறைந்து கொண்டு வந்தபோது கறுவா செய்கையை ஆரம்பித்தவர்கள் ஒல்லாந்தர்கள் தான். 1705ஆம் ஆண்டு சேனைப் பயிர்ச்செய்கையாக அதைத் தொடங்கினார்கள்.

இமான் வில்லம் பல்க் (Iman Willem Falck - 1765-1785) என்கிற டச்சு ஆளுநரின் கீழ் தான் கறுவா பெருந்தோட்டங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டன. 1769 இல் அவர் ஒரு பரிசோதனை முயற்சியாக கிராண்ட்பாஸ் பகுதியில் செய்துபார்த்தார். ஒரு சில ஆண்டுகளில் அது பலன் தரவே கொழும்பில் கறுவாத்தோட்டப் பகுதியில் 232 ஏக்கரில் முதலில் அவரின் ஆணையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அது மட்டுமன்றி வேறெவரும் கறுவா பிடுங்கக் கூடாது என்று சட்டமியற்றினார்கள். களவாக பிடுங்கப்படுவோருக்கு எதிராக சட்டமும் இயற்றப்பட்டது. ஒரு செடிக்கு பத்து ரிக்ஸ்டொலர்கள் தண்டப்பணமாக அறிவித்தார்கள். அதை செலுத்த முடியாதவர்கள் பத்தாண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 1745 ஒக்டோபர் 8 இல் வெளியான சட்டம் இது. இந்தச் சட்டத்தின் பிரகாரம் கறுவா செடியை பறிப்பவர்கள் இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்டு கேப் பொயிண்டுக்கு (Cape Point ) அனுப்பப்பட்ட பதிவுகளும் உண்டு.

டச்சு காலத்தில் கொழும்பு கறுவாத் தோட்டத்தில் 3826 ஏக்கர்களில் கறுவா உற்பத்தி செய்யப்பட்டதென பிற்காலத்தில் கொல்வின் ஆர் டி சில்வா எழுதிய “பிரித்தானியர் ஆக்கிரமிப்பின் கீழ் இலங்கை” (Ceylon Under the British Occupation) என்கிற நூலில் குறிப்பிடுகிறார்.

கறுவா பயிர்ச்செய்கையாக ஆரம்பமானதும் முதலாவது கறுவாத் தோட்டம் உருவாக்கப்பட்ட இடம் அன்றைய மருதானைப் பகுதி. இதன் சாத்தியம் உறுதியானதும் நீர்கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை போன்ற பகுதிகளில் விரிவாக்கினார்கள்.

1832 வரை ஆங்கிலேய குடியேற்ற நாட்டரசாங்கம் பெற்ற வருமானத்தில் பெரும்பகுதி கருவா வர்த்தகத்தின் மூலம் தான் கிடைத்தது. உலக சந்தையிலும் இலங்கை கறுவா உயர்ந்த தரமுடையதாக இருந்ததால் அது தனி இடத்தைப் பிடித்திருந்ததுடன் அந்த வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் செல்வந்தர்களாக ஆனார்கள். 

அன்றைய மருதானைப் பகுதியில் முதன் முதலில் கறுவா உற்பத்திசெய்யப்பட்ட இடம் தான் கறுவா தோட்டம். இன்னும் சொல்லப்போனால் இன்றைய கறுவாத் தோட்டம் என்று அழைக்கப்படுகிற இடத்திலிருந்து யூனியன் பிளேஸ் வழியாக, சின்ன பொரளை, மருதானை, பஞ்சிகாவத்தை, நாரஹேன்பிட்டி, திம்பிரிகஸ்யாய ஆகிய பகுதிகள் வரை கறுவா தோட்டங்கள் பரந்திருந்தன.

இன்று இலங்கைப் பிரதமரின் அலுவலகம், சுதந்திர சதுக்கம், சுவடிகூடத் திணைக்களம், ரோயல் கல்லூரி, கொழும்பு பல்கலைக்கழகம், இலங்கை ஒலிபரப்புப் கூட்டுத்தாபனம், ரூபவாகினி, ஐ.டி.என். கொழும்பு நகர மண்டபம், தாமரைத் தடாகம், பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், கொழும்பு தேசிய அருங்காட்சியகம், மாநகரசபைக் கட்டிடம், கொழும்பின் வானிலை ஆராய்ச்சி மையம் (வளிமண்டலவியல்த் திணைக்களம்) மற்றும் இலங்கை கோள்மண்டலம், பெரிய ஆஸ்பத்திரி, ஆனந்தா கல்லூரி, சங்கமித்த மகளிர் கல்லூரி, மருதானை இரயில் நிலையம் போன்ற பரந்துபட்ட இடங்கள் அன்றைய கறுவா தோட்டங்கள் என்றால் நம்ப கடினமாக இருக்கும்.

கறுவா தொழிலில் ஈடுபட்டவர்கள் இளைப்பாறும் இடமாக மருதானையில் “பரனவாடி” என்கிற இடம் இருந்தது. அதற்கருகில் உள்ள பிரதேசம் மரியக்கடை என்றும் அழைக்கப்பட்டது. பஸ் கண்டக்டர் கூட இந்த இடங்களை சொல்லி நிறுத்தும் வழக்கம் இருந்தது. இப்போது ஆனந்த கல்லூரி அருகில் நிறுத்தச் சொன்னால் தான் நிறுத்துவார்கள்.

அங்கெல்லாம் கருவாத் தோட்டங்களை உருவாக்கியவர்கள் ஒல்லாந்தர்கள் தான். அதற்கு முன்னர் அது காடு. பொரளை பகுதியிலிருந்து காடு இன்னமும் அடர்ந்த காடாக இருந்தது. டச்சு ஆளுனரும் அதிகாரிகளும் இங்கிருந்து தான் வேட்டைக்கு புறப்பட்டதாக பதிவுகள் உள்ளன. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் தான் நகர விரிவாக்கத்துக்காக இந்தக் கறுவாத் தோட்டங்கள் அகற்றினார்கள். ஆங்கிலேயர்கள் கறுவாவை விட கோப்பி, தேயிலை போன்ற பணப்பயிர்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டிருந்தார்கள்.

சலாகம சாதி

ஆரம்பத்தில் கேரளப் பின்னணியைக் கொண்ட சலாகம என்கிற சிங்கள சாதியினர் தான் கறுவா உரிக்கும் பணியை மேற்கொண்டார்கள். குறிப்பாக மூத்தவர்களே இதனை செய்தார்கள். ஆனால் போர்த்துக்கேயருக்கு அதிகளவு உற்பத்தியை பெருக்குவதற்காக அச்சமூகத்தின் சிறுவர், சிறுமிகளையும் இத்தொழிலில் ஈடுபடுத்தினார்கள்.

ஒல்லாந்தர் காலத்தில் மகா வரி என்கிற ஒன்றை ஏற்படுத்தினார்கள். கறுவா தொழிலில் ஈடுபடுபவர்கள் பணமாகவோ, அல்லது கறுவா மூலமாகவோ வரியாக செலுத்தவேண்டும். இந்த வரியை அரவிடுவதற்காகவே பதவிகளும் உருவாக்கப்பட்டன. இந்த வரியால் சலாகம சாதியினர் தான் பாதிக்கப்பட்டனர். 

சலாகம சாதியினரை மட்டும் இத்தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்தி வந்தார்கள். சலாகம என்கிற சாதி உயர் சாதினராகவே கருதப்பட்டு வந்தது. ஒல்லாந்தரின் வலுக்கட்டாயப் பணிகளில் இருந்தும், ஒடுக்குமுறையில் இருந்தும் தப்புவதற்காக அவர்கள் சிங்கள தாழ்த்தப்பட்ட சாதியினரை திருமணம் முடிக்கின்ற போக்கும் வளர்ந்தது. உயர்த்தப்பட்ட சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதியினரை மணமுடித்தால் அவரும் தாழ்த்தப்பட்டவராக கருதப்படுகிற சாதிய பொதுப்பண்பு நிலவிய சூழலில் அவர்கள் சாதியை மாற்றிக்கொள்வதற்காக இந்த கலப்பு திருமண வழியைக் கையாண்டார்கள் என்று வரலாற்றாசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி குறிப்பிடுகிறார். இதற்காகவே ஒல்லாந்தரும் தாழ்த்தப்பட்ட பெண்ணை மணமுடித்தாலும் ஆணின் மூல “சாதி” மாறுபடாது என்று அறிவிப்பு செய்தார்கள். பின்னர் வேறு வழியின்றி ஏனைய சாதியினரையும் இத்தொழிலில் ஈடுபடுத்தினார்கள்.

“கறுவாத் தோட்டம்” போர்த்துகேயர், ஒல்லாந்தர் காலத்திலேயும் பெரும் காட்டுப் பிரதேசமாகத் தான் இருந்தது. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் இறுதியில் தான் 

கறுவாத் தோட்டத்து மாற்றங்களோடு தொடர்புடைய ஹெவ்லொக், (Sir Arthur Havelock) ரோஸ்மீட், (Lord Rosmead), எட்வர்ட் பார்ன்ஸ் (Sir Edward Barnes), ஜேம்ஸ் லோங்க்டன் (Sir James Longdon), டொரிங்டன் (Torrington) போன்ற முக்கிய ஆங்கிலேய ஆளுநர்களின் பெயர்களில் இங்குள்ள இடங்களின் பெயர்கள் இன்றும் நிலைத்து நிற்பதைக் காண முடியும்.

அதேவேளை பிரித்தானிய இராணியின் நினைவாக சூட்டப்பட்ட “விக்ரோரியா பூங்கா”வின் (Victoria Park) பெயர் 1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கவின் ஆட்சியின் போது புத்த ஜயந்தி கொண்டாடப்பட்ட வேளை விகாரமகாதேவி பூங்கா என்று மாற்றப்பட்டதையும் இங்கே நினைவுறுத்திக் கொள்வோம். விகாரமகாதேவி; மகாவம்சக் கதாநாயகன் துட்டகைமுனுவின் தாயார் என்பதையும் அறிவீர்கள்.

அன்றைய பசுமைக் காடு, கறுவாத் தோட்டமாகி கட்டிடக் காடாக மாறிய கறுவாத் தோட்டத்தில் எஞ்சியிருக்கும் நிழல் தரும் பூங்காவாக எஞ்சியிருப்பது விகாரமகா தேவிப் பூங்கா மட்டும் தான்.



நன்றி தினகரன் - 27.02.2022
தொடரும்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates