Headlines News :
முகப்பு » , , , » 2020 தேர்தலில் மேலும் மோசமடைந்துள்ள பெண்களின் பிரதிநிதித்துவம் - என்.சரவணன்

2020 தேர்தலில் மேலும் மோசமடைந்துள்ள பெண்களின் பிரதிநிதித்துவம் - என்.சரவணன்

நடந்து முடிந்தத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்தம் 12 பேர் மாத்திரமே இம்முறை தெரிவாகியுள்ளனர். எட்டு பேர் பொதுஜன முன்னணி சார்பிலும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பிலும், தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தலா ஒவ்வொருவரும் தெரிவாகியுள்ளனர். இவர்களில் ஐவர் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டிருப்பவர்கள். சிறுபான்மை இனங்களில் இருந்து எவருமே தெரிவு செய்யப்படவில்லை. சென்ற பாராளுமன்றத்தில் 13 பேர் (5.77%) இருந்தனர். கீதா குமாரசிங்கவின் உறுப்புரிமை பறிபோனதோடு அதுவும் பின்னர் 12 ஆக சுருங்கியது. இம்முறை 5.3.% வீதமாக சுருங்கிவிட்டது.

இம்முறை 2020 பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் பெண் வேட்பாளர்கள் அதிகமாகத் தென்படுவதாக சில ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் உரையாடப்பட்டதை அவதானிக்க முடிந்தது. உண்மையில் அந்த தகவல் தகவல் சரிதானா. இல்லவே இல்லை.

கடந்த 2015 பாராளுமன்றத் தேர்தலில் 6,151 பேர் போட்டியிட்டனர். அதில் 556 பெண்வேட்பாளர்கள். அதாவது மொத்த வேட்பாளர்களில் 9.2% வீதம் பெண்கள். ஆனால் இம்முறை 2020 பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 7452 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் 819 பேர் மட்டுமே பெண்கள். அதாவது மொத்த வேட்பாளர்களில்  8.19% வீதம் மட்டுமே. இன்னும் சொல்லப்போனால் சென்ற தேர்தலை விட பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை இறங்கியுள்ளது. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு 89 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுககளுக்குள் பெண்களின் பிரதிநிதித்துவம் தேய்ந்து தான் போயிருக்கிறது. வளர்ந்ததில்லை.

இலங்கையின் சனத்தொகையில் 52% வீதத்துக்கும் அதிகமான பெண்கள் இருந்தும் பல முக்கிய கட்சிகளிடம் தமது வேட்பாளர் பட்டியலில் 25% பெண் பிரதிநிதிகளையாவது உள்ளடக்குமாறு பெண்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இடையறா வற்புறுத்தியிருந்தனர். பல பிரதான கட்சிகளும் பெண்கள் அமைப்புகளிடம் உறுதியளித்திருந்தன. ஆனால் அது நடக்கவில்லை. 20வது திருத்தச்சட்டத்திலும் அந்த கோரிக்கையை உள்ளடக்குவதாக கடந்த அரசாங்கம் ஒப்புக்கொண்டிருந்தது அதுவும் கைகூடவில்லை. இத் தேர்தலில் போட்டியிட்ட பிரதான கட்சிகள் சேர்த்து நாடளாவிய ரீதியில் மொத்தமாக 75 பெண்களைத் தான் நிறுத்தியிருந்தன. (தேசியப் பட்டியலையும் சேர்த்துத் தான்)
  • ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி - 17
  • ஐக்கிய தேசியக் கட்சி – 15
  • ஐக்கிய மக்கள் சக்தி (சஜித்) - 14
  • தேசிய மக்கள் சக்தி (ஜே.விபி) – 22
  • தமிழ் தேசிய கூட்டணி – 6
  • ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1

இதன் அடிப்படையில் ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியே இலங்கையில் அதிகப் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருந்தது.

மேற்படி கட்சிகளில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னனி எந்தவொரு தமிழ்/முஸ்லிம் சிறுபான்மை சமூகத்துப் பெண்ணையும் சேர்த்துக்கொள்ளவில்லை. ஐ.தே.க., ஐ.ம.ச. ஆகியன தலா ஒரு தமிழ்ப் பெண்ணை மாத்திரம் நிறுத்தியிருந்தது. தே.ம.ச (ஜே.வி.பி) வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும் மாத்தறையிலும், தலா ஒரு பெண் வீதம் மூன்று தமிழ் பெண்களை நிறுத்தியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டணி 6 தமிழ்ப் பெண்களையும், முஸ்லிம் காங்கிரஸ் ஒரே ஒரு முஸ்லிம் பெண்ணையும் நிறுத்தியிருந்தது.

இதுவரையான தமிழ்ப் பெண் பிரதிநிதிகள்

சிறுபான்மை சமூகப் பெண்கள்
தமிழ் முஸ்லிம் இனங்களில் இருந்து ஒரு பெண்ணும் இம்முறை தெரிவாகவில்லை. 1980க்குப் பின்னர் 2000 ஆண்டு தேர்தலில் மாத்திரம் தான் தமிழ் பெண் தெரிவாகவில்லை. மற்றும்படி தொடர்ச்சியாக தமிழ்ப் பெண்கள் தெரிவாக்கியிருக்கின்றனர். ஆனால் இம்முறை யாழ் மாவட்டத்தில் உமா சந்திர பிரகாஷ், சசிகலா ரவிராஜ் (கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிஜாஜ்ஜின் மனைவி), மட்டக்களப்பிலிருந்து மங்களேஸ்வரி போன்றோர் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டவர்கள். அது நூலிலையில் தவறியிருக்கிறது. மலையகத்திலிருந்து முன்னாள் அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான சந்திரசேகரனின் மகள் அனுஷா சந்திரசேகரனும் இம்முறை போட்டியிட்ட பெண்களில் அதிகம் பேசப்பட்டவர்.

இலங்கையின் வரலாற்றில் பேரியல் அஷ்ரப், அஞ்ஞான் உம்மா ஆகியோரைத் தவிர் வேறெந்த முஸ்லிம் பெண்களும் பாராளுமன்றத்துக்கு தெரிவானதில்லை.

தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டவர்களும் அவர்களின் ஆணுரவுமுறை செல்வாக்கும்

2020 தேர்தல்
இம்முறை தெரிவான பன்னிரண்டு ஐவர் இதற்கு முன்னைய 2015 பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவர்கள்.


தெரிவானவர்களில் மூவர் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பொது ஜன முன்னணியின் மூலம் பவித்ரா வன்னி ஆராச்சியும், முதிதா சொய்சாவும், ஐக்கிய மக்கள் சக்தியின் மூலம் தலதா அத்துகோரலவும் இரத்தினபுரியிலிருந்து தெரிவாகியுள்ளார்கள். பவித்திரா வன்னி ஆராச்சி அம்மாவட்டத்திலேயே அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற பெண் மட்டுமன்றி 2020 தேர்தலில் இலங்கையிலேயே அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற பெண்ணும் அவர் தான். அவர் பெற்ற மொத்த விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை 200,977.

முதிதா சொய்சா இம்முறை முதற் தடவை பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்திருப்பவர். அவரின் கணவர் ரஞ்சித் த சொய்சா கடந்த டிசம்பர் மாதம் மரணமானார். அவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும் ராஜபக்ச தரப்பின் முக்கியமான பேச்சாளராகவும் இருந்தவர். அவரின் இறப்புக்குப் பின் அவரின் இடத்துக்கு அவரின் மனைவியை வேட்பாளராக நிறுத்தியது பொதுஜன முன்னணி.

கேகாலை மாவட்டத்தில் இருந்து பொது மக்கள் முன்னணியில் வெற்றிபெற்ற இன்னொருவர் ராஜிகா விக்கிரமசிங்க. 68,802 விருப்பு வாக்குகளைப் பெற்றிருக்கிறார் அவர். அவரின் கணவரும் கேகாலை மாவட்டத்தில் பொதுஜன முன்னணியின் பிரபல அரசியல் பிரமுகர்.

கம்பாஹா மாவட்டத்தில் இருந்து ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தரப்பில் இருந்து சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் கோகிலா ஹர்ஷனி குணவர்தன ஆகிய இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் பொது ஜன பெரமுன கட்சியின் சார்பில் வெற்றிபெற்ற மொத்த 13 பேரில் சுதர்ஷினி பெர்னாண்டோபிள்ளை – 89,329 வாக்குகளைப் பெற்று 7 வது இடத்திலும், கோகிலா ஹர்ஷனி குணவர்தன 77,922 வாக்குகளைப் பெற்று 9 வது அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

கோகிலா ஹர்ஷன குணவர்தன இம்முறை 77,922 வாக்குகளைப் பெற்றுள்ளார். 2004 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட அவரது மூத்த சகோதரர் அப்போது பிரதேச சபைத் தலைவர். அவரின் மரணத்தைத் தொடர்ந்து அவரின் இடத்துக்கு தெரிவானவர் தான் கோகிலா குணவர்தன. அவர் பொதுஜன முன்னணியின் மீரிகம தொகுதி அமைப்பாளர். அதன் பின்னர் 2014 மார்ச்சில் நடந்தமேல்மாகாண சபைத தேர்தலில் போட்டியிட்டு 40,291வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 55,530 வாக்குகளை பெற்றபோதும் அவர் வெற்றியடையவில்லை. 

கீதா குமாரசிங்க பொது ஜன முன்னணி சார்பில் காலி மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரபல நடிகையான இவர் 2014ஆம் ஆண்டு தென் மாகாணசபைக்கு போட்டியிட்டு தெரிவானார். பின்னர் அதற்கடுத்த ஆண்டு 2015இல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 63,955 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் இலங்கையில் 19 வது திருத்தச் சட்டத்ம் கொண்டுவரப்பட்டதன் மூலம் இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள் அரசியல் அங்கங்களில் அங்கத்துவம் வகிக்கத் தகுதியற்றவர்கள் என்கிற விதிகளின் காரணமாக 2017 இல் அவர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். பின்னர் அவர் தனது சுவிஸ்சர்லாந்து பிரஜாவுரிமையைக் கைவிட்டு 2020 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

மாத்தளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரோகிணி குமாரி கவிரத்ன 27,587 வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாத்தளை மாவட்டத்திலிருந்து அக்கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒருவர் இவர் தான். இவர் கடந்த பாராளுஜ்மன்ரத் தேர்தலிலும் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

தேசியப் பட்டியலின் மூலம் 29 பேரைத் தெரிவு செய்யலாம். அவர்கள் தேர்தலில் போட்டியிட்டிருக்கமாட்டார்கள். அதற்கான பட்டியலை ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையாளரிடம் வழங்கியிருப்பார்கள். அதன்படி இம்முறை தேசியப் பட்டியலின் மூலம் இரு பெண்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். தேசியப் பட்டியலிலும் இடம்கொடுக்காவிட்டிருந்தால் இம்முறை 8 பேராக மாத்திரமே பெண்களின் பிரதிநிதித்துவம் சுருங்கியிருக்கும். அவ்வாறு நியமனமான இருவரும் பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மஞ்சுளா திசாநாயக்க, இன்னொருவர் சீதா அறம்பேபொல.

இவர்களில் மஞ்சுளா திசாநாயக்க முன்னாள் அமைச்சர் சாலிந்த திசாநாயக்கவின் மனைவி. சாலிந்த திசாநாயக்க கடந்த 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 05 ஆம் திகதி மரணமானார். அதன் மூலம் அவரின் மனைவி மஞ்சுளா அரசியலுக்கு கொண்டு வரப்பட்டு தேசியப் பட்டியலின் மூலம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

சீதா அறம்பேபொல ஒரு வைத்தியர். கோத்தபாய ராஜபக்ச கடந்த நவம்பர் ஜனாதிபதியாக தெரிவானதும் மேற்கொண்ட நியமன மாற்றங்களின் போது மேல்மாகாண ஆளுநராக நவம்பர் 21 அன்று நியமிக்கப்பட்டிருந்தவர் தான் சீதா அறம்பேபொல. பின்னர் மார்ச் மாதம் அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்யவைத்து தேசியப் பட்டியலில் இடம்பெற வைத்தார்கள். கோத்தபாய ராஜபக்சவை வெற்றி பெறச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட “வியத்மக” இயக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளர் இவர். “வியத்மக” இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் 10 பேரை பொது ஜன முன்னணி தமது வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவைத்தது. அந்த பத்து பேரில் இருவரை தேசியப் பட்டியலில் சேர்த்திருந்தது அவர்களில் ஒருவர்  சீதா அறம்பேபொல.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் மூலம் கலாநிதி ஹரிணி அமரசேகர தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.  அவர் திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றிவருபவர். அது மட்டுமன்றி பெண்கள், தொழிலாளர், சூழலியல் போன்ற விடயங்களில் முன்னின்று தீவிரமாக உழைத்து வரும் செயற்பாட்டாளர். ஜே.வி.பியை தலைமையாகக் கொண்ட தேசிய மக்கள் கட்சியை (NPP) வெற்றி பெறச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட தேசிய புத்திஜீவிகள் இயக்கத்தில் (NIO) முக்கிய பொறுப்புகளில் இயங்கியவர். அதுமட்டுமன்றி பல்கலைக்கழக பேராசிரியர்கள் சம்மேளனத்தில் செயலாளராக இயங்கியவர். பெண்களின் வாக்குரிமைக்காக பெண்கள் அமைப்புகளுடன் சேர்ந்து பல காலமாக இயங்கி வருபவர்.

அடுத்ததாக டயனா கமகே ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் தேசியப் பட்டியலின் மூலம் நியமிக்கப்பட்டிருக்கிறார். இறுதியாக கொடுக்கப்பட்ட தேசியப் பட்டியல் இது. டயனா கமகேவுக்கு பிரித்தானிய குடியுரிமை இருப்பதாகவும் அதனால் அவருக்கு கிடைக்காமல் போகலாம் என்றும் பேசப்பட்ட நிலையில் இறுதியில் அவரும் நியமிக்கப்பட்டார். லண்டனிலிலுள்ள பெட்ரோ பொலிடன் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பயின்று வழக்கறிஞராகவும் நோர்த் ஹெம்டன் பல்கலைக்கழகத்தில்  நிர்வாகத்துறை சார் பின் பட்டப்படிப்பையும் முடித்துக்கொண்டு திரும்பியவர் டயனா. ஐக்கிய தேசியக் கட்சியில் 2001 ஆம் ஆண்டு இணைந்து அதன் முன்னணி அமைப்புகளுக்கு தலைமை கொடுத்தவர். 2004 ஆம் ஆண்டு நடந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு மேல்மாகாணத்தில் 12,000 வாக்குகளைப் பெற்றார். தமிழ் மொழியும் பேசக்கூடிய ஆற்றலுல்ள்ள அவரை 2019 இல் ரணில் விக்கிரமசிங்க வுவுனியா மாவட்டத்தின் அமைப்பாளராக நியமித்திருந்தார்.

இதன்படி பன்னிருவரில் எட்டுபேர் தான் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். நால்வர் தேசிய பட்டியலின் மூலமே நியமிக்கப்பட்டார்கள். சென்ற பாராளுமன்றத்தில் 13 பேரில் இருவர் இவ்வாறு தேசியப் பட்டியலின் மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.

இம்முறை கீதா குமாரசிங்க, சீதா அறம்பேபொல, ஹரிணி அமரசேகர, டயனா கமகே ஆகிய நால்வரைத் தவிர ஏனைய 8 பெண்களும் ஆண் உறவுமுறைச் செல்வாக்கின் மூலம் பாராளுமன்றத்துக்கு வந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. அதிலும் இம்முறை புதிதாக தெரிவான ஐவரில் நால்வரும் அப்படி ஆண் உறவு முறைச் செல்வாக்குக்கு ஊடாகவே தெரிவாகியுள்ளார்கள். அதிலும் இந்தப் பத்துபேரில் பலர் தமது கணவனோ, சகோதரனோ, தகப்பனோ இறந்ததால் அந்த அனுதாப வாக்குகளுக்காக கட்சிக்குள் இழுக்கப்பட்டவர்கள் என்பதும் முக்கியமான செய்தி.

என்பதையும் இங்கு கூறி வைக்கவேண்டும். சென்ற தேர்தலில் கூட பிரதான கட்சிகளின் விஞ்ஞாபனங்களில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய வாக்குறுதிகள் இருந்தன. ஆனால் இம்முறை  தேர்தல் விஞ்ஞாபனங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றி எதுவும் கிடையாது. 
2015 அமைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவர்கள்
வரலாற்றுப் பின்புலம்
1931 ஆம் ஆண்டு இலங்கையில் டொனமூர் சீர்திருத்தத்தின் கீழ் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் போதே பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. 1927 இல் டொனமூர் விசாரணைக் குழு இலங்கையில் விசாரணைகளை ஆரம்பித்தபோது பெண்கள் வாக்குரிமைச் சங்கம் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்த போது அன்றைய அரசியலில் முன்னணித் தலைவர்களாக இருந்த ஆண்கள் பலர் அதை பகிரங்கமாக எதிர்த்தார்கள். பெண்களுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது என்று அரசாங்க சபையில் பேசினார்கள். கூட்டங்களில் உரையாற்றினார்கள். பத்திரிகைகளில் எழுதினார்கள்.

இதையெல்லாம் எதிர்கொண்டு கடுமையாகப் போராடித் தான் பெண்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொண்டார்கள். ஆங்கிலேய குடியேற்ற நாடுகளில் முதன் முதலாக பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட நாடு இலங்கை. அப்போது ஐரோப்பாவில் கூட பல நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை. உலகுக்கே பெண் பிரதமர் ஒருவரை முதலாவது தடவையாக தெரிவு செய்து காட்டிய முன்னுதாரண நாடும் நமது நாடு தான். ஆனால் பெண்களை அரசியல் அதிகாரத்துக்கு கொண்டுவராத உலகிலேயே மோசமான முன்னுதாரண நாடுகளின் வரிசையில் இப்போது இலங்கை சுட்டிக்காட்டப்படுகிறது. 

உலக நாடுகளில் உள்ள மொத்தம் 193 நாடுகளில் பாராளுமன்றங்களில் பெண்களின் அங்கத்துவ வீதாரசாரத்தை கணக்கிட்டு பட்டியிலிட்ட சர்வதேச நிறுவனங்கள் இலங்கை தற்போது 186 வது நாடாக ஆகியிருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர். உலகில் அதிகப் பெண்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கிற நாடு எது தெரியுமா? ருவாண்டா. இலங்கையை விட பொருளாதார ரீதியிலும், வாழ்க்கைச் சுட்டியிலும் பின் தங்கிய நாடு அது. அங்கே  நாடாளுமன்றத்தில் 61.3% வீதத்தினர் பெண்கள். அப்படியிருக்க இலங்கைக்கு என்ன நடந்தது.

1931 தொடக்கம் 2020 வரையான இந்த 89வருட காலத்துக்குள் மொத்தம் பாராளுமன்றத்துக்கு ஆயிரக்கணக்கான ஆண்கள் தெரிவுசெய்யப்பட்டபோதும் வெறும் 124 பெண்களே இக்காலப்பகுதிக்குள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இத்தனை பழமையான வரலாறு இருந்தும் கூட இலங்கையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6.5% ஐத் இது வரைத் தாண்டியதில்லை.இதுவரை காலம் எந்த ஒரு பாராளுமன்றக் காலத்திலும் 13 பெண்களுக்கு மேல் அங்கம் வகித்ததில்லை. 

இலங்கையின் சனத்தொகையில் இன்று 52% சத வீதத்தினர் பெண்கள். அதுமட்டுமன்றி இம்முறைத் தேர்தலில் 56% வீத வாக்காளர்கள் பெண்களே என்கிற தகவலும் வியப்பாக இருக்கும். இலங்கையில் மாணவர்களின் எண்ணிக்கையும், கல்வி கற்ற பெண்களின் தொகையிலும் ஆண்களை விட பெண்களே அதிகமானவர்கள்.

தென்னாசியாவிலேயே குறைந்தளவு பெண்களின் பிரதிநிதித்துவம் கொண்ட ஒரே நாடு இலங்கை மட்டுமே

1931இல் இலங்கையில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏக காலத்தில் வழங்கப்பட்டது. ஆங்கிலேயே காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளில் முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நாடு இலங்கை. வளர்ச்சியடைந்த பல நாடுகளில் கூட அப்போது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. 

அதிகார அசமத்துவத்தை சரி செய்வதற்காக குறிப்பிட்ட வகுப்பினருக்கோ, பாலினருக்கோ கோட்டா முறையினை பயன்படுத்தி வரும் பல நாடுகள் உலகில் உள்ளன. பெண்களின் பிரதிநித்துவத்தையும் அப்படித்தான் சரி செய்து வருகிறார்கள். ஆனால் இலங்கையில் பெண்களுக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்து நூற்றாண்டை நெருங்குகிற போதும் அப்படிப்பட்ட குறைந்தபட்ச கோட்டாவுக்காக பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது.

2020 பொதுத்தேர்தல் பெறுபேறானது பழமைவாத - வலதுசாரி - தேசியவாத - ஆணாதிக்கத்தனத்தின் வெளிப்பாடாகவே நாம் வரைவிலக்கணப்படுத்தலாம்.

நன்றி – தினகரன் - 09.08.2020

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates