Headlines News :
முகப்பு » , , , , , » இராவணனை சிங்களத் தலைவனாக ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல்! | என்.சரவணன்

இராவணனை சிங்களத் தலைவனாக ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல்! | என்.சரவணன்


மகாவம்சத்தில் உள்ள இரண்டு வரலாற்றுத் தகவல்கள் சிங்களவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

1. சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல் என்பது
2. வங்கத்தில் இருந்து வந்த விஜயனில் தொடங்குகிறது சிங்களவர்களின் வரலாறு என்பது

சிங்கள பௌத்தர்களின் புனித வரலாற்று நூலாக கருதப்படும் மகாவம்சத்தில் சிங்களவர்களின் தோற்றம் பற்றிய கதையின் பிரகாரம் சிங்களவர்களின் பூர்வீகம் சிங்கம் என்கிறது. ஆக மிருகத்தின் வம்சாவளி என்று ஒத்துக்கொள்ள வேண்டிவரும். ஏற்காவிட்டால் மகாவம்சத்தை நிராகரித்ததாக ஆகும். மகாவம்சத்தை நிராகரிப்பது என்பது அவர்களின் இனவரலாற்றுப் பெறுமதியை இழப்பதாகும்.

எனவே விஜயன் சிங்கத்தின் பேரன் அல்ல என்றும், சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல் அல்லர் என்றும் அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் தோன்றியுள்ளது. ஆகவே தாம் சிங்கத்தின் வம்சம் அல்ல, அதற்கும் முந்திய இராவண வம்சம் என்கிற இன்னொரு கதையை கட்டியெழுப்ப நேரிடுகிறது.

ஐயாயிரம் வருடங்களுக்கு முந்திய பூர்வீகக் குடிகள் சிங்களவர் என்கிற புனைவை நிலைநாட்ட இராவணன் இப்போது அவசியப்படுகிறார். இதுவரை தாம் ஆரியர் பரம்பரை என்றும்  கூறி வந்தவர்கள் இப்போது திராவிட பூர்வீகத்தைக் கொண்டவர்கள் என்றும் கூறியாகவேண்டும். ஆனால் அதில் அரசியல் சங்கடங்களும் சர்ச்சைகளும் நிறைந்துள்ளன. தமிழர்களை சிங்கள மொழியில் “திரவிட” (திராவிடர்) என்று தான் பொதுவில் அழைத்து வருவதை நாம் அறிவோம்.

அதைவிட அடுத்த சிக்கல் இக்கதைகளின் பிரகாரம் விஜயன் ஒரு அந்நியனாக இருக்கிறான். அவன் வட இந்தியாவிலிருந்து இன்னும் சொல்லப்போனால் வங்க தேசத்திலிருந்து வந்ததாக ஒத்துக்கொள்ளவேண்டும். தாம் அந்நியர் என்று ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும். அது மண்ணின் மைந்தன் கருத்துருவாக்கத்துக்கும் பெருந்தடையாக ஆகிவிடுகிறது. 

எனவே தான், தாம் வங்கத்திலிருந்து வந்த ஆரியர் என்கிற கதைகளையும் புறந்தள்ளி, கைவிட்டுவிட்டு இராவணக் கதைகளுக்கு உயிர்கொடுத்து இராவணனை தமது தலைவனாக ஏற்பதன் மூலம் முழு இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்கிற இடத்துக்கு வந்து சேருகிறார்கள். இராவணனை ஹைஜாக் (Hijack) செய்வதன் பின்புலம் இதுதான்.

ஒரு கற்பிதக் காவியத்துக்கு வரலாற்றுப் பெறுமதியையும், அரசியல் பெறுமதியையும், இனப்பெருமதியையும், மதப் பெருமையையும் கொடுத்து வெகுஜன அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் காவியமாக இன்று ஆக்கப்பட்டிருக்கிறது இராமாயணக் கதை. அந்தக் கதைக்கு தொல்பொருள் சான்றில்லாததால், காணக்கிடைக்கிற தொல்பொருள்களையெல்லாம் வலிந்து அவற்றுடன் தொடர்புபடுத்திப் புனைகிற செயற்பாடுகள் இலங்கையில் வெகுவாக வளர்ந்திருக்கிறது.

ஆய்வணுகுமுறையில் இரு வகையுண்டு. முதலாவது கிடைக்கப்பெறும் சான்றுகளைக் கொண்டு முடிவுக்கு வருதல். அடுத்தது எடுத்த முடிவை நிறுவுவதற்கு ஆதாரம் சேர்ப்பது. முற்கற்பித முடிவுகளை நிறுவுவதற்கு வலிந்து ஆதாரம் கோர்க்கும் பணிகளே இலங்கையில் தற்போது நிறைந்துள்ளது. இதில் உள்ள சோகம் என்னவென்றால் நிபுணத்துவம் பெற்ற தொல்பொருள் ஆய்வாளர்கள் இதில் இறங்கியிருப்பது தான். அவர்களின் இனவாத பின்புலம் அவர்களை இப்பணிகளை நோக்கி உந்துகிறது.

2012 ஆம் ஆண்டு ஜனவரி 11 அன்று திவயின பத்திரிகைக்கு வீரசேன அல்கெவத்த என்பவர் எழுதிய “இராவணன் வரலாற்றுப் பாத்திரமா? என்கிற கட்டுரையில் இப்படித் தெரிவிக்கிறார்.
“மகாநாம தேரர் மகாவம்சத்தில் பல தகவல்களை திட்டமிட்டே மறைத்துவிட்டார். விஜயன் வந்திறங்கிய தினத்தில் தான் புத்தரின் இறப்பு நிகழ்ந்திருக்கிறது. அதே வேளை புத்தர் இறப்பதற்கு முன்னர் இலங்கைக்கு வந்திருக்கிறார். அப்போது இயக்கர்களும் நாகர்களும் இருந்திருக்கிறார்கள். அரசர்களுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்திருக்கிறார். அப்படியென்றால் அவர் வரும்போது இந்தத் தீவு வெற்றுத் தீவாக இருக்கவில்லை. அப்படி இருக்கும் போது அதன் பின் பல ஆண்டுகள் கழித்து வந்த விஜயனில் இருந்து தான் சிங்கள இனத்தின் பூர்வீகம் தொடங்கியது என்றது எதற்காக? தனது இந்தியப் பூர்வீக உரிமையை எழுத்தில் நிலைநாட்டவா மாநாம தேரர் முயற்சித்திருக்கிறார்...
இலங்கையில் அதற்கு முன்னர் இருந்தே பண்டைய காலத்தில் வாழ்ந்த ராவண ராஜ்ஜியம் பற்றி இந்தியாவில் இருந்து கூறும்போது நமது வரலாற்றாசிரியர்கள் ஏன் அதைக் கண்டுகொள்ளவில்லை. விஜயன் வரும்போது எந்தக் குடிகளும் வாழவில்லை என்பது ஏன்? மகாவம்சம் இராவணனை இருட்டடிப்பு செய்துவிட்டது”
என்கிறார்.

இராவண உயிர்ப்பு எங்கிருந்து தொடங்கியது?
இராமாயணம் பற்றிய தேடல்கள் இலங்கையில் உயிர்த்த காலம் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தான். ஆங்கிலேய அறிஞர்கள்களின் இலக்கிய-வரலாற்றுத் தேடல்களின் மூலம் அது நிகழ்ந்தது எனலாம். ராஜரீக ஆசியக் கழகத்தின் இலங்கைக் கிளையின் சஞ்சிகையில் இது பற்றிய பல விவாதங்கள், ஆய்வுக் கட்டுரைகளின் சமர்ப்பிப்புகளைக் காண முடிகிறது.

இதேவேளை இலங்கையின் பாட நூல்களில் இராமாயணம் பற்றி இந்தியாவில் நிலவுகிற அதே இராமாயணக் கதையின் சுருக்கத்தைத் தான் கற்பித்து வந்தார்கள். ராமனை நாயகனாகவும், சீதையை நாயகியாகவும், சீதையைக் கவர்ந்து கடத்தி வந்து சிறைவைத்து சண்டையிட்ட இராவணனை வில்லனாகவும் சித்திரிக்கிற கதை தான் நெடுங்காலமாக சிங்களப் பாடநூல்களில் இருந்தன. இராவணன் இலங்கையில் வாழ்ந்தான் என்றும் இலங்கைத் தவிர வேறெங்கும் வாழவில்லை என்கிற கருத்தே உறுதிபட அக்கதைகளின் மூலம் மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது. சிங்கள அரசர்களான விஜயன், துட்டகைமுனு போன்ற வரலாற்றுப் பாத்திரங்களுக்கு முன் இராவணன் ஒரு சிங்கள வீரன் அல்லன். இராவணனுக்கு எந்த மரியாதைப் பெறுமதியும் கொடுக்கப்படவில்லை. ஒரு வகையில், மாற்றான் மனைவியைத் திருடிய திருடனாகவே இராவணன் உருவகப்படுத்தப்பட்டிருந்தான்.

இராவணின் வீரதீரச் செயல்கள் பற்றியோ, இராவணின் இராஜ்ஜியம் பற்றியோ, இராவணின் போர் முறைகள் பற்றியோ, இராவணின் பறக்கும் வானூர்தி பற்றிய கதைகளோ கூட முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. கணக்கில்கொள்ளப்படவில்லை. 

வீரம் செறிந்தவர்களாக இராமனும் அனுமானும் முக்கியப்படுத்தப்பட்டிருந்தனர்.  கதஹ்யின் படி இவர்கள் இராவணனைத் தோற்கடித்துச் சீதையை மீட்டுக்கொண்டனர். சுப்பர்மேன் (Superman) பற்மன் (Batman) ஆகிய இருவரும் செய்கிற தீரச் செயல்களைத் தொலைக்காட்சியில் பார்க்க முடியாத ஒரு காலத்தில் இராவணனின் இராவணனின் பறக்கும் வானூர்தி பற்றிய உருவகம் நிச்சயமாக பலரைக் கவர்ந்திருந்தது. அப்படியான உருவகங்கள் வழியாகத்தான் இராவணன் முற்றுமுழுதாக நீங்காமல் பலரது நினைவில் இருந்தான் என்று நான் நினைக்கின்றேன். சிங்கள இனத்தின் மாவீரனாக இராவணன் உணரப்பட்டதில்லை.

“ஹெல ஹவுல” இயக்கம்
இலங்கையின் மிகப் பிரசித்திபெற்ற சிங்கள மொழிப் பண்டிதராகவும், இலக்கியவாதியாகவும் கருதப்படுபவர் குமாரதுங்க முனிதாச. 1941 ஆம் ஆண்டு ஜனவரி 11 அவரின் தலைமையில் அவரின் வீட்டில் வைத்து உருவாக்கப்பட்ட இயக்கம் தான் “ஹெல ஹவுல” (Hela Havula) என்கிற இயக்கம். ஒரு வகையில் இதை மொழித் தீவிரவாத இயக்கம் என்றும் அழைப்பார்கள். (1)

“ஹெல” என்பதே சிங்கள மொழியின் மூல மொழி என்றும் அதை பலப்படுத்தும் வகையில் தான் “ஹெல ஹவுல” என்று பெயர் வைத்துக்கொண்டார்கள்.

சிங்கள இனத்தை தூயமைப்படுத்தவேண்டும் என்றால் சிங்கள மொழியும் அந்நிய கலப்பில்லாத தூய்மையான சிங்கள மொழியாக இருத்தல் வேண்டும் என்று அந்த இயக்கத்தவர்கள் கூறினார்கள். சிங்களத்தில் கலந்துள்ள பாலி, சமஸ்கிருதம் என்பவற்றின் செல்வாக்கை நீக்க வேண்டும் என்று இயங்கினார்கள். அது மட்டுமன்றி காலனித்துவ போத்துக்கேய, ஒல்லாந்து, ஆங்கிலேயக் கலப்புகள் கூட இல்லாத சிங்களத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற இயக்கத்தை முன்னெடுத்தார்கள். ஹெலியோ (The Helio) என்கிற ஒரு சஞ்சிகையும் 1941 இல் தொடக்கி நாடளாவிய ரீதியில் நடத்தினார்கள்.(2) குமாரதுங்க முனிதாச எழுதிய சிங்கள இலக்கணம் குறித்த நூல் ஒரு தலையாய நூலாக திகழ்கிறது.(3)

இந்திய ஆரியவாத செல்வாக்கிலிருந்து சிங்கள மொழியையும், இலக்கியங்களையும் மீட்கவேண்டும் என்று இயங்கியது இவ்வியக்கம். அதுபோல ஒரு இனம் பூரணப்படாமல் மொழி மட்டும் தனித்து எப்படி வாழும் என்றார்கள்.

இலங்கையின் பிரபல நாடகாசிரியர் ஜோன் த சில்வா 1886 இல் முதற் தடவையாக இராமாயணத்தை இலங்கையில் மேடையேற்றினார். அந்த இராமாயண நாடகத்தின் பிரதி பல ஆண்டுகளாக மேடையேற்றப்பட்டு வந்தது. அந்த பிரபலமான இராமாயணக் கதை இலங்கையின் சுயத்துக்கு இழுக்கு என்று “ஹெல ஹவுல” தீர்மானித்தது. இராமாயணத்துக்கு மாற்றாக அவர்கள் “சக்வித்தி ராவண” என்கிற ஒரு நாடகத்தை இயக்கினார்கள். அது 1946முதன் முதலில் மேடையேற்றப்பட்டது. சிங்கள சமூகத்தில் பிரசித்திபெற்ற இந்த நாடகம் இன்றும் ஆயிரக்கணக்கான தடவைகள் மேடையேற்றப்பட்டு வருகிறது. அந்த நாடகத்தில் வரும் “பொம்புளே மேக் பொம்புளே” என்கிற பாடல் தமிழர்கள் பலரும் அறிந்த பிரசித்தமான பாடல்.

ஹெல ஹவுல இயக்க திட்டத்தின் ஓர் அங்கமாக, இதிகாச வாயிலாகக் கூறப்பட்ட சிங்களவர்களின் மூதாதையரான விஜயனின் வருகைக்கும் முற்பட்ட காலத்தைப் பற்றிய கண்ணியமான வரலாறொன்றினை கட்டியெழுப்ப்புவதன் முக்கியத்தை உணர்ந்தார்கள். விஜயனின் வருகைக்கு முன்னரும், அதன் பின்னர் இந்தியச் செல்வாக்குகள் ஊடுருவுவதற்கு முன்னரும், இலங்கையில் தூய்மையான வரலாற்றைக் கொண்ட பாரம்பரியமும் நாகரிகமும் இருந்தன என்பதை வலியுத்தினார்கள்.

இராவணனின் கற்பனைக் கதைக்குப் புத்துயிர்ப்பு அளிக்கும் போது இராவணனை இயக்கன் என்றும் இராட்சத அரசன் என்றும் குறிப்பிடுவது வழக்கம். ஆரம்பத்தில் இயக்கர்களும் (Yakshas), இராட்சதர்களும் (Rakshas) இலங்கையில் வாழ்ந்தனர் என்றும் அவர்கள் மனிதர்கள் அல்லர் என்றுமே சிங்களப் புராணக் கதைகளில் காணப்படுகின்றது. “இயக்கர்', இராட்சதர்'' என்ற பதங்களின் வர்ணனைகளின் மூலம் அவர்கள் மனிதர்களை விழுங்கி தீங்கு விளைவிக்கிற பேய்களைப் போலத்தான் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இப்படியான இராவணனின் பேய்த்தோற்றத்தையும், இயக்கர்களின் பேய்த் தோற்றத்தையும் மாற்றி, மானிட உருவம் கொடுத்தது இந்த இயக்கம். 

2002 ஆம் ஆண்டு இங்கிலாந்து இராணி எலிசபத் இராணியாக பதவியேற்று 50 வருட நிறைவைக் கொண்டாடும் முகமாக பக்கின்ஹோம் மாளிகையில் நடத்தப்பட்ட கலை நிகழ்சிகளில் கலந்துகொள்வதற்காக இந்த நாடகமும் தெரிவானது. அந்நாடகத்தை இராணி மிகவும் இரசித்தார் என்கிற பதிவுகளையும் காண முடிகிறது. (4)

இந்த நாடகத்தில் தான் இராவணன் முதற் தடவையாக ஒரு கதாநாயகனாக மாற்றப்படுகிறான். இந்த நாடகம் இராவணனை பற்றி புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தது. அதுவே இராவணனைப் பற்றிய தேடலையும் தூண்டியது. இராவணன் இலங்கையின் தலைவன் தானே, நமது தலைவன் அல்லவா? சிங்களத் தலைவன் அல்லவா என்கிற முடிவுக்கும் வந்தார்கள்.

இராவணப் புனைவின் முன்னோடி நூல்
இராவணன் பற்றிய புனைவுகளை வரலாற்று உண்மை போல சித்திரிக்கும் வகையில் வெளியான முன்னோடி நூல் ஆரியதாச செனவிரத்ன என்பவர் 1991இல் எழுதிய (ශ්‍රී ලංකා - රාවණ රාජධානිය - ஸ்ரீ லங்கா : இராவண ராஜ்ஜியம்) என்கிற நூல். 

இன்று இராவணனைப் பற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள நூல்கள் வெளிவந்திருந்தாலும் இராவணனை சிங்களவர்கள் மத்தியில் மீளுயிர்த்ததில் இந்நூலுக்கு முக்கிய பங்குண்டு. அந்த நூல் பின்னர் பல (திருத்திய) பதிப்புகளைக் கண்டது. அந்நூலில் இராவணனின் உயில். (இறுதி ஆசை) என்றெல்லாம் கட்டுக்கதைகள் நிறைந்த அத்தியாயங்கள் உள்ளன. இந்நூல் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசவை கௌரவிக்குமுகமாக வெளியிடப்பட்டது. அப்போது இந்தியாவை கடுமையாக எதிர்த்தபடி இருந்தார் பிரேமதாச. 

இராவணன் இந்தியாவிற்கு எதிராகக் கொண்டிருந்த உணர்வலைக்கும், பிரேமதாச கொண்டிருந்த உணர்வலைக்கும் இடையிற் காணப்பட்ட நேரடி ஒருமைப்பாட்டினை இந்நூலில் அவர் விளக்குகின்றார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராவணன் காட்டிய துணிச்சலும், தியாக உணர்வும், உண்மையில் பிரேமதாசவின் வீரத்தை ஒத்திருந்தன என்கிறார்.
"இராவணன் காட்டிய துணிச்சலும், தியாக உணர்வும், பிரேமதாசவின் வீரத்தை ஒத்திருந்ததாக அந்நூலின் முகவுரையில் அவர் குறிப்பிடுகிறார். அப்போது பிரேமதாச துணிச்சலுடன் இந்தியாவை பகைத்துக்கொண்டார். IPKF ஐ வெளியேறச் சொன்னார்.
சமாதானத்தை நிலைநாட்டுவது என்ற பொய்யான போர்வையில், இந்தியாவின் புதிய அவதாரமான இராமரினால் அனுப்பப்பட்ட அந்நியப் படைகளை (IPKF) பிரேமதாச தனது சொற்போரினால் விரட்டியடித்தார்'' 
என்கிறார்.

1995 இல் சசங்க பெரேரா எழுதிய கட்டுயொன்றில்; விஜயன் பற்றி புனைந்து சிங்கள மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியிருக்கும் மகாவம்சக் கதைகளை இல்லாமல் செய்வதோ இராவண கதைக்கு புத்தியிரப்பளிப்பதோ வெற்றியடையமாட்டாது என்றும் அவர்களின் கற்பனையில் கூட இராவணனின் கதை பதியவில்லை என்றும், அது சாத்தியமில்லை என்றும் குறிப்பிடுகிறார்.(5) ஆனால் சரியாக இப்போது 25 வருடங்கள் ஆகும் போது அந்த கணிப்பு தகர்ந்திருக்கிறது பேரினவாத நிகழ்ச்சிநிரல் என்று தான் கூறவேண்டும். ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பின் மூலம் நில ஆக்கிரமிப்பையும் அதன் வழியாக ஒட்டுமொத்த தமிழர் அபிலாஷைகளை நிறைவுக்கு கொண்டுவரும் நிகழ்ச்சிநிரலின் அங்கமே இந்த இராவணக் கடத்தல் எனலாம்.
வெகுஜனமயப்படுத்தப்படும் இராவணன்
ராவணன் பற்றிய கதைகளும் அல்லது இராவணப் புனைவுகளும் இராமாயணக் காவியம் உருவாக்கப்பட்ட இந்தியாவிலும், இலங்கை வாழ் சிங்கள – தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி இந்திய உபகண்ட நாடுகளிலும் தாய்லாந்து, மியான்மார், பாலித்தீவு போன்ற தென் கிழக்காசிய நாடுகளிலும் பாரம்பரிய நாட்டார் கதைகள் மூலமும், இலக்கியங்களின் மூலமும், நம்பிக்கைகளின் மூலமும் செல்வாக்கு செலுத்தி வருகிறது.  மேற்கு நாட்டு நாட்டு அறிஞர்களையும் கலைஞர்களையும் கூட ஈர்க்கிறது, ஏனெனில் இதற்கு ஒரு இலக்கியக் காவியப் பெறுமதி உண்டு என்பது உண்மை. இது மாய, மந்திர, போர், காதல், பழிவாங்குதல் மற்றும் கதாநாயக வழிபாடு என ஈர்க்கிறது.

அந்த வகையில் காவியப் பெறுமதிக்கப்பால் அதற்கென்று ஒரு நம்பகப் பெறுமதி கிடையாது. ஆனால் அக்காவியம் மக்களின் செவி வழிக்கதைகளினூடாகவும், நாடகம், கூத்து என இன்னும் பல கலை இலக்கிய வடிவங்களின் ஊடாகவும் வழிவழியாக வெகுஜன செல்வாக்கை நிறுவியிருக்கிறது.

இராமாயணத்தையும், இராவணனையும் வரலாற்று, தொல்லியல் வழிமூலம் எவரும் நிறுவியது கிடையாது. ஆனால் இன்று வரை இந்தியாவில் இந்துத்துவ பாசிச சக்திகளால் புனிதப்படுத்தப்பட்டு இராமனை தெய்வமாக கோவில் கட்டி வழிபடுவதோடு நிற்காமல் இராமனை இன்றையை இந்துத்துவ போரின் தலைமை வடிவமாகவும் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றனர். அதே இந்தியாவில் இராவணனின் உருவப்பொம்மையை தீயிட்டு கொளுத்தி இராவணனைக் கொன்ற நாளாகக் கொண்டாடுவதை இந்திய வட மாநிலங்களில் இராமலீலா என்கிற பேரில் பண்டிகையாக நெடுங்காலமாக கொண்டாடப்படுகிறது.

வெகுஜனத் தளத்தில் இராமாயணமும், இராமனும், எப்படி வட இந்தியாவில் நம்பகமான கதையாக நிறுவப்பட்டுள்ளதோ அதுபோலவே இலங்கையில் இராவணன் சிங்களவர்கள் மத்தியில் சீமீபகாலமாக நம்பகமானதாக நிறுவப்பட்டுவருகிறது. ஆனால் இலங்கையில் சிங்களவர்கள் இராவணனைக் கொண்டாடிய அளவுக்கு இராமாயணத்தை கொண்டாட முற்பட்டதில்லை. ஏனென்றால் இராமாயணத்தில் வில்லன் “சிங்களத் தலைவன் இராவணன்”. ஆனாலும் இராமாயணத்தை தவிர்த்து இராவணக் கதைகளை நிறுவமுடியாததால் இராமாயணத்தை சில சிங்கள தொலைகாட்சி சேனல்கள் வெளியிட்டன. இந்தியாவில் இந்தி மொழியில் வெளியான இராமாயணத் தொடரை சிங்கள டப்பிங்குடன் வெளியிட்டு வந்தார்கள் அவர்கள். அதை மீண்டும் மீண்டும் வெளியிட்டார்கள்.

அதன் பின்னர் 2018இல் இராவணன் பற்றிய மெகா தொலைகாட்சி “உரையாடல்” தொடரொன்றை சிங்கள மொழியில் “ராவண” (රාවණ) என்கிற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் இனவாத தொலைக்காட்சிச் சேனலாக இயங்கிவரும் “தெரண” என்கிற சேனலில் இந்தத் தொடர் 100 தொடர்களையும் கடந்தது. இராவணன் பற்றிய ஊகங்களையும், புனைவுகளையும், கட்டுக்கதைகளையும் பேச பல சிங்கள வரலாற்றாசிரியர்கள், இலங்கையின் அதி பிரசித்திபெற்ற தொல்பொருள் நிபுணர்கள், பாரம்பரிய கலைஞர்கள் பலர் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் இந்தக் கற்பிதங்களை தொழில்சார் நிபுணர்களாக (Professionals) எப்படி இது முடிகிறது என்றே நமக்குத் தோன்றும்.

பின்னர் கடந்த நவம்பரிலிருந்து தொலைகாட்சி நாடகத் தொடராக இன்னொரு “ராவண” என்கிற பேரில் தெரண தொலைக்காட்சிச் சேவையில் ஞாயிறு நாட்களில் 8.30 மணியளவில் காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரம் Hi peak என்று சொல்லக்கூடிய அதிக பேர் பார்க்கக் கூடிய நேரம் என்பதால் ஒளிபரப்பு செலவும், விளம்பரக் கட்டணமும் உயர்ந்த நேரம் என்பதும் கவனிக்கத்தக்கது. இம்மாதம் (2020 யூன் மாதம்) அது 21 வாரங்களையும் கடந்து போய்க்கொண்டிருகிறது. துஷார தென்னகோன் என்பவர் இதனை இயக்கிவருகிறார். 100 வாரங்கள் வரை எட்டுவதே தனது இலக்கு என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் இது பற்றிய ஆய்வுகள் பல நிகழ்த்தியவர் என்கிற செய்தியுடன் தான் அதன் விளம்பரங்களும் வெளியிடப்பட்டன.

இது வெளிவர முக்கிய பாத்திரம் வகித்த “தெரண” தொலைக்காட்சியின் உபதலைவரான லக்சிறி விக்கிரமகே கதையின் மூலத்தைப் பற்றி இப்படி தெரிவிக்கிறார்.
“இராவணன் ஒரு அதிசயிக்கத்தக்க அரசன். அப்பேர்பட்ட ஒரு ஒரு தலைவனைப பற்றிப் பேச வான்மீகியின் இராமாயணத்தை ஒரு “மூலமாக” நாங்கள் பயன்படுத்தவில்லை. வால்மீகியின் இராமாயணத்தில் இராவணன் ஒரு துஷ்டனாக காண்பிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் நிகழ்ந்தது பாரதத் தரப்பை அவர் தோற்கடித்தார். அதனால் தான் அவர்கள் இராவணனை துஷ்டனாக காண்பிக்கிறார்கள்.” (6)
இராவணன் என்கிற திரைப்படமாகத் தயாரிப்பதே ஆரம்பத்தில் இருந்த திட்டம் என்கிறார் மேலும் அவர்.

இதைத் தவிர அரச தொலைக்காட்சி சேவையான ITNஇல் (சுயாதீன தொலைக்காட்சிச் சேவை) “இராவண புராணம்” (ராவண புராணய රාවණ පුරාණය) என்கிற ஆவணப்படத் தொடர் சென்ற ஆண்டு தொடங்கப்பட்டு 21 வாரங்கள் காண்பிக்கப்பட்டன. இத்தொடரில் இராவணன் புலங்கியதாக சொல்லப்படும் இலங்கையின் பல பகுதிகளுக்கு பயணித்து அங்குள்ள குகைகள், மலைகள், காடுகள், நதிகள் என்பவற்றைகே காட்டி பல கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள். இங்கு உறங்கினார், குளித்தார், சீதையை மறைத்துவைத்திருந்தார், ஐந்து வானூர்திகளை வைத்திருந்தார். இங்கு தான் இறக்கினார், என்றெல்லாம் கதை விடுகிறார்கள். இது ஒரு அரச தொலைக்காட்சியின் சொந்த நிகழ்ச்சி என்பதை கவனிக்க.

இந்த புனைவுகளின் உச்சம் என்னவென்றால் ஒரு இடத்தில் இப்படி குறிப்பிடுகிறார்

“இராவணனின் உடல் இன்னும் பக்குவமாக இருக்கிறது. ஆனால் தயவு செய்து எங்கே இருக்கிறது என்று தேடப்போகாதீர்கள். அது ஆபத்தானது. அப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்கியவர்களுக்கு என்ன ஆனது என்பதை நாங்கள் அறிவோம் அதனால் தான் கூறுகிறோம்” என்கிறார் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான கயான் சந்தகெலும். இவரின் இன்னொரு காணொளியும் காணக்கிடைத்தது அதன் தலைப்பு “இராவணன் பௌத்தனா? இந்துவா?” அதில் அவர் “புத்தருக்கு முற்பட்ட காலத்து இராவணனை” பௌத்தன் என்று நிறுவ அதிக சிரத்தை எடுக்கிறார். புத்தர் பௌத்தத்தைத் தந்தவர்களில் இடைப்பட்டவர் தான் என்றும் அதற்கு முன்னரே அத்தத்துவத்தை தந்துவிட்டு சென்றவர்கள் இருக்கிறார்கள் என்றும், ஆகவே இராவணன் ஒரு பௌத்தன் தான் என்றும் நிறுவ முற்படுகிறார்.
இந்திரஜித்தின் கிரியோடிஷ்ய (ඉන්ද්‍රජිත්ගේ  ක්‍රියොඩ්ඩිශය) என்கிற தலைப்பிலான சிங்கள நூலொன்றின் விமர்சனத்தை யூடியூப் சேனலில் சமீபத்தில் கண்டேன். இந்த விமர்சனத்தைச் செய்தவர் பேராசிரியர் லீலானந்த விக்கிரமாராச்சி. இராவணனின் மகன் இந்திரஜித் கையாண்ட போர் நுட்பங்கள் பற்றியதாம் இந்த நூல். இது தேவநாக எழுத்து வடிவத்தில் கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடியை சிங்களத்துக்கு மொழிபெயர்த்து அச்சுக்கு கொணரப்பட்ட நூல் என்று அறிமுகம் செய்கிறார். பேராசிரியர் லீலானந்த விக்கிரமாராச்சி பாரம்பரிய சிங்கள தற்காப்புக்கலைகளை கற்றுக் கொடுப்பதில் பிரசித்தி பெற்றவர். இலங்கை இராணுவத்துக்கு சிறப்புப் பயிற்சிகளை அவர் செய்பவர் என்பதை அவரின் இணையத்தள விபரங்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

மேற்படி கூறிய அனைத்து நாடகங்களும், ஆவணப்படங்களும், உரையாடல்களும். நூல் விமர்சனமும் youtube இல் காணக்கிடைக்கிறது. இக்கட்டுரைக்காக அங்கிருந்துதான் அவற்றை ஆதாரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டேன். இராவணனைப் பற்றி ஒருதொகை வீடியோக்கள் சிங்களத்தில் அங்கு உள்ளன.

மேலும் சிங்களச் சூழலில் இராவணன் பற்றிய அலை மேலெழுந்திருக்கிற இந்தக் காலத்தில்; சிங்களச் சந்தையில் இராவணன் ஒரு பெரும் விற்பனைப் பண்டமாக ஆக்கப்பட்டிருப்பதைத் தான் அவதானிக்க முடிகிறது.

இராணவன் பற்றி சிங்களச் சூழலில் இதுவரையான எனது அவதானிப்பில் கண்டு கொண்ட சில புள்ளிகள்:

இராவணின்  வழித்தோன்றல் தாங்கள் தான் என்று உரிமைகோரி சிங்களக் கிராமங்களே உள்ளன. அதன் தொடர்ச்சியாக இராவணின் உறவுகாரர் தாங்கள் தான் என்று அறிவித்துக்கொண்டு வாழ்வோர் இலங்கையில் உள்ளனர்.

இராவணன் மீண்டும் எழுவார் என்றும் இன்னும் சிலர் இராவணன் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார் என்றும் நம்மைச் சுற்றி இருக்கிறார் என்கிற ஐதீகங்களும் உள்ளன.

இலங்கையின் அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படும் சீகிரிய மலைக் கோட்டையை செய்தது இராவணன் என்கிற நம்பிக்கை உண்டு. அந்த மலையின் மேல் இராவணின் விமானம் இறங்கும் இறங்குதளத்தின் தடங்கல் இருப்பதாக நம்பப்படுகிறது.

சீகிரிய ஓவியத்தில் காணப்படுகிற ஓவியத்தில் இருப்பது இராவணின் மனைவி மண்டோதரியும், மண்டோதரியின் பரிவாரப் பெண்ணும் தான் என்கின்றனர். இதைப்பற்றிய செவிவழிக் கதைகள் இப்போதும் அந்த ஊர்களில் நிலவுகின்றன.

சிகிரியவைச் சுற்றி உள்ள ஊர்களில் கிராமிய மரபுவழிப் பாடல்களாக இன்னும் இப்படி ஒரு பாடல் பாடப்படுவதுண்டு. 
සීගිරි ගලේ විල සැදුවේ      කවුරුන්දෝ
සීගිරි ගලේ රූ ඇන්දේ       කවුරුන්දෝ
සීගිරි රුවෙන් දිස් වන්නේ  කවුරුන්දෝ
මෙතුන් පදේ විසඳන්නේ   කවුරුන්දෝ
පිළිතුර:
සීගිරි ගලේ රාවණ දෙවි විල   සැදුවා
සීගිරි ගලේ විස්කම් සිත්තම් කෙරුවා
සීගිරි රුවෙන් මන්දෝදරී  දිස්වෙනවා
මෙතුන් පදේ නිසි ලෙස මම විසඳනවා
சிகிரியா பாறையின் ஏரியை கட்டியவர் யார்
சிகிரிய ஓவியத்தை வரைந்தவர் யார்
சிகிரிய தோற்றத்தில் இருப்பவர் யார்
இம்முக்கேள்விக்கு விடை தருவார் யார்
பதில்:
ராவணன் கடவுள் சிகிரிய பாறையில் ஏரியைக் கட்டினார்
அவர் சிகிரியா பாறையில் ஓவியம் வரைந்தார்
சிகிரிய உருவத்தில் மண்டோதரி வியப்பூட்டுகிறார்
இம்முக்கேள்விக்கும் விடை தீர்த்தேன் நான். (7)
(இப்பாடல் எக்காலத்தில் இருந்து தொடரப்பட்டது, யாரால் இயற்றப்பட்டது போன்ற விபரங்களை அறிய முடியவில்லை. ஆனால் இப்பாடலை பல சிங்கள கட்டுரைகளிலும் மேற்கோள் காட்டுகிறார்கள்.)

இராமனையும், இராமாயணத்தையும், அதன் வழியாக வைணவத்தையும் கொண்டாடுவதும், வழிபடுவதும், நீட்சியாக இராவணனைக் கொண்டாடும் வெகுசிலராக தமிழர்கள் குறுகிவிட்ட நிலையில் இராவணன் தமது தலைவனே என்று சிங்களவர்கள் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். இராவணன் அரக்கர் இனத்தில் இருந்து வந்த“ஹெல” இனத்துத் தலைவன் என்றும், அந்த இராவணின் வழித்தோன்றல் குவேனி என்றும் குவேனியை கரம்பிடித்தவர் விஜயன் என்றும் அவர்களின் வழித்தோன்றலே சிங்களவர்கள் என்றும் நிறுவுகிற நூல்களை இப்போதெல்லாம் நிறையவே காணக் கிடைக்கின்றன. குறிப்பாக இராவணனைக் கொண்டாடுகின்ற சிங்கள நூல்கள் கடந்த பத்தாண்டுக்குள் மாத்திரம் 500 க்கும் அதிகமான நூல்கள் வெளிவந்திருப்பதாகக் கணிக்க முடிகிறது. ஒரு அரை மணி நேர இணையத் தேடலில் இராவணன் பற்றிய 50க்கும் மேற்பட்ட சிங்கள நூல்களின் அட்டைப் படங்களை தேடியெடுக்க முடிந்தது. உதாரணத்திற்கு 15 நூல்களின் தலைப்புகளை இங்கு தருகிறேன்.  இவை அனைத்தும் 2012க்குப் பின் வெளிவந்தவை தான்.
  • இராவணன் மீள எழுகிறான்
  • இலங்கையில் ராவண அரசனின் பின்னர் தோன்றிய நமது அரச பரம்பரையினர்
  • சிங்களவர்களின் தலைவன் இராவணன்
  • இராவண சக்கரவர்த்தியின் திதுலன பம்பர கோட்டை
  • இராவண நடவடிக்கை (Ravana operation)
  • சிங்களவர்களின் முன்னோடி இராவணன்
  • மகாராஜா இராவணன் கட்டியெழுப்பிய பண்பாடு
  • புனைவற்ற இராவண புராணம்
  • இராவணனின் தளம்
  • இராவணக் கோட்டை
  • இலங்கையில் இராவண இராஜதானியும் சீகிரிய புராணமும்
  • இலங்கையின் இராவண சக்கரவர்த்தியின் கலாசார மரபு
  • இராமாயணம் என்கிற மூவுலகையும் வென்ற நமது தலைவன் இராவணன்
  • சிங்கள வம்சத்தின் இராவணவாதம்
  • ஸ்ரீ லங்கேஷ்வர மகா இராவணன்


இராவணன் பற்றிய விசித்திரமான – வியப்பான சமீப கால சிங்களக் கட்டுரைகளின் தலைப்புகளைப் பாருங்கள்
  • இராவணனின் வரலாற்றை மூடி மறைக்க முடியாது
  • இராவணனின் விமானத் தொழினுட்பமும் பண்டைய விமானமும்
  • வெள்ளையருக்கு முன்னரே இராவணன் மேலே பறந்த இரகசியம்
  • இராவண அரசனின் போர் முறை
  • இராவணனின் இரத்தச் சொந்தங்களைக் காண ஒரு கிராமத்துக்குச் சென்றோம்.
  • இராவண வரலாற்றைப் புதைத்துவிட முடியாது
“வரிக பூர்ணிகா”
இயக்கர்களைப் பற்றிய பல விபரங்களை உள்ளடக்கியதே “வரிக பூர்ணிகா” (වරිග පූර්ණිකාව - Vargapurnikawa அல்லது Wargapurnikawa) என்கிற ஓலைச்சுவடிகள். இது இராவணன் காலத்திலிருந்து வாய்மொழியாகவும், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் வழியாகவும் இராவணப் பரம்பரை காத்து வந்த தகவல்களை ஒன்றிணைத்து எழுதப்பட்ட ஒன்று நம்பப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் மகாவம்சத்துக்கும் முந்தியது இது. கண்டி ராஜ்ஜியத்தில் ராஜாதிராஜசிங்கன் ஆட்சியின் போது “மனாபவி அருணவெசி நீலகிரிக போதி வங்க்ஷாபய” என்கிற ஒரு பௌத்த துறவியால் ஓலைச்சுவடிகளாக தொகுக்கப்பட்டது.

இயக்கர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், சட்டதிட்டங்கள் மட்டுமன்றி பல கதைகளையும் குறிப்பாக இராவணன் பற்றிய கதைகளையும் கொண்டது அது என்கின்றனர். “வரிக பூர்ணிகா” பற்றி எழுதியிருப்பவர்கள்  கௌரான மண்டக்க (කෞරාණ මන්ඨක) என்று அதில் குறிப்பிடப்படுவது இராவணனைத் தான் என்று அடித்துச் சொல்கின்றனர். கௌரான என்பதன் சிங்கள அர்த்தம் “பூரணமானவர்”. “மண்டக்க” என்பதன் அர்த்தம் “அரக்கர்” என்பதாகும். இதன்படி இராவணனை “பூரணத்துவமுடைய அரக்கன்” என்றே அழைத்திருக்கிறார்கள் என்று கொள்ளலாம்.

“வரிக பூர்ணிகா” ஓலைச்சுவடிகள் தற்போது மெனேவே விமலரதன தேரர் வசம் உள்ளது. பரம்பரை பரம்பரையாக இறுகல் பண்டார ரவிஷைலாஷ ராஜகருணா என்கிற வம்சத்தவர்கள் தான் பேணி வந்திருக்கிறார்கள். அந்த வம்சத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு தான் மெனேவே விமலரதன தேரர் (මානැවේ විමලරතන හිමි) இவர் வசம் ஏராளமான ஓலைச்சுவடிகள் உள்ளன. அவரால் ஆராயப்பட்ட சில ஓலைச்சுவடிகளை அவர் நூல்களாகவும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.


அப்படி அவர் வெளியிட்ட நூல்களில் ஒன்று தான் “இயக்கர்களின் மொழியும் ரவிஷைலாஷ வம்சத்தின் கதையும்” (යක්ෂ ගෝත්‍රික භාෂාව හා රවිශෛලාශ වංශ කථාව) என்கிற நூல். 2012 இல் முதன் முதலில் வெளியிடப்பட்ட இந்த நூலில் தான் அவர் “வரிக பூர்ணிகா” பற்றிய விபரங்களையும் வெளியிட்டிருந்தார். அதற்கு முன்னர் இந்த விபரங்கள் வெளிவந்ததாகத் தெரியவில்லை.

இந்த நூல் வெளிவந்ததன் பின்னர் தான் இராவணனை சிங்களத் தலைவராக முன்னிருந்தும் பல முனைப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டன. அதுவரை இராவணன் பற்றிய கதைகள் மிக மெல்லியதாகவே இருந்தன. இன்னும் சொல்லப்போனால் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், தமிழர்களின் மீதான நில ஆக்கிரமிப்பை செய்வதற்கும், நிலத் துண்டாடலைப் புரிவதற்குமான பேரினவாத முஸ்தீபுக்கு “சிங்கள இராவண” பிம்பத்தை உயிர்ப்பிப்பது வாய்ப்பாக ஆனது. சிங்களவர்கள் மத்தியில் இராவணப் புனைவை கருத்தேற்றுவதும், தமிழர்கள் மத்தியில் இராவண வழிபாட்டை பறித்தெடுப்பதுமான ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பு அவர்களுக்கு அவசியமாக உள்ளது என்றே கருது வேண்டியிருக்கிறது.

அது மட்டுமன்றி இராவணனின் பெயரில் அமைப்புகள், இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் அத்தனையும் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான முன்னெடுப்புகள் நகர்ந்தன. இலங்கையில் இப்போது இயங்கிவரும் சிங்கள பௌத்த பாசிச இயக்கமான “பொதுபல சேனா” இயக்கத்துக்கு நிகராக “ராவண பலய” என்கிற பேரினவாத அமைப்பும் இந்த நூலைத் தொடர்ந்து தான் உருவாக்கப்பட்டது.

இப்போதும் இராவணன் பற்றிய பல முகநூல் பக்கங்களையும், இணையத்தளங்களையும், youtube சேனல்களையும், பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளையும், ஆய்வுகளையும், விவாதங்களையும், கலைப் பண்பாட்டு படைப்புகளையும் காண முடிகிறது.

“வரிக பூர்ணிகா” 20 பக்கங்களைக் கொண்ட நூல் என்கிறார். அதேவேளை அதன் உப நூல்களாக “ரங்தெலம்பு பெந்தி அனபத்த”  கிரிதெலம்பு பெந்தி அனபத்த (රංතෙලඹු බැදි අණපත, කිරි තෙළඹු බැදි අණපත) என்கிற இரண்டு உள்ளதாகவும் அவை முறையே 500, 300 ஓலைப் பக்கங்களைக் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார்.

இவற்றில் “ரங்தெலம்பு பெந்தி அனபத்த”  என்பதானது “ரவிஷைலாஷ இயக்கர் மொழி”க்கான வழிகாட்டுவதற்கான அகராதியாக இருப்பது அதன் விசேடத்துவம். கடைசி அத்தியாயத்தில் இலங்கையின் வடக்கு பகுதியில் வாழ்ந்த “கேவேசஷ்ட இயக்கர்” பற்றிய விபரங்கள் உள்ளடங்கியிருகிறது. ஆனால் இவை எதுவும் தமிழ் ஆய்வுகளுக்கு கிட்டாதவை என்பதை இங்கு கூறியாகவேண்டும்.

ஆனால் இராவணனைப் பற்றியும், இயக்கர்களைப் பற்றியும், குவேனியைப் பற்றியும் ஏராளமான விபரங்கள் உள்ளதாக கூறப்படுவதில் எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை.

“வரிக பூர்ணிகா” வை எழுதியவர் நீலகிரிக போதி வங்க்ஷாபய என்கிற ஸ்ரீ போதி வங்ச விதான என்கிற ஒரு பௌத்த துறவியாவார். கண்டி மன்னன் ராஜாதிராஜசிங்க ஆட்சியின் போது வாழ்ந்த பௌத்த துறவி அவர். ராவணன் காலத்திலிருந்து பல நூற்றாண்டுகளாக பரம்பரையாக பாதுகாக்கப்பட்ட நூல்களைத் தொகுத்தே இந்த நூல் உருவாக்கப்பட்டதென்கிறார் மெனேவே விமலரதன தேரர்.

மெனேவே விமலரதன தேரர் ஒரு “திபிடக பண்டிதராக” உயர் நிலையில் வைத்து போற்றப்படுபவர் என்பது இன்னொரு தகவல்.

இராவணன் உருவாக்கிய சிங்கள ஆயுள்வேத மருத்துவ முறைகள் என்றே பல மருத்துவ முறைகளை அழைத்து வருகிறார்கள். ஆயுள்வேத வைத்தியர்கள் இராவணனை வணங்கிவிட்டு மருத்துவம் செய்யும் மரபும் இருக்கிறது. ஆனால் அது எப்போதிலிருந்து கடைபிடிக்கத் தொடங்கினார்கள் என்பதை அறிதல் வேண்டும்.

சமீபத்தில் மெனேவே விமலரதன தேரர் யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தன்னிடமுள்ள பல ஓலைச்சுவடிகள் குறித்து விபரித்திருந்தார். பல ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயிரகணக்கான குறியீடுகளை தான் இன்னமும் உறுதியாக கண்டுபிடிக்கவில்லை என்கிறார். அந்த நேர்காளில் 26 வது நிமிடத்தில் ஒரு ஓலைச்சுவடியை எடுத்து உதாரணத்துக்கு விளக்குகிறார்.
“இது இயக்கர்கள் பற்றிய ஓலைச்சுவடி இல்லை. ஆனால் இது தமிழில் எழுதப்பட்டிப்பது தெரிகிறது. நாம் அதையிட்டு குழப்பமடையத் தேவையில்லை. எனது தகப்பனார் இவற்றை வாசிக்கக் கூடியவர். என்னால் கூட புரிந்துகொள்ள முடியவில்லை. இதை வாசித்தறியும் அறிவு இன்று இல்லாமல் போய் விட்டது. சில வல்லுனர்களின் உதவியுடன் அவற்றில் சில ஆராயப்பட்டு மொழியாக்கம் செய்யப்பட்டுக்கொண்டிருகின்றன.” 
என்கிறார் அவர்.

மகாவம்சமும் சொல்லாத “வரிக பூர்ணிகா” சொல்லியுள்ள “சிங்களவர் கதை” என்ன என்பதைத் தேடி இன்று வரலாற்று ஆய்வாளர்களும், தொல் பொருள் ஆய்வாளர்களும் கிளம்பிக்கொண்டிருக்கின்றனர். சில மதங்களுக்கு முன்னர் எழுத்தாளர் பிரபாத் அத்தநாயக்க என்பவர் அப்படி ரிட்டிகல என்கிற இடத்தில் இராவணனின் அடிச்சுவட்டைச் தேடிச் சென்றதாக கூறி ஒரு கட்டுரையை எழுதினார். 29.02.2020 அன்று வெளியான அந்தக் கட்டுரையின் தலைப்பு கூட “மகாவம்சத்தில் இல்லாத “வரிக பூர்ணிகா”வில் இருக்கிற இராவணனின் வரலாற்றைத் தேடி ரிட்டிகல பயணம்” என்று இருந்தது.

“வரிக பூர்ணிகா”  புனைவுகளைக் கொண்ட பெரும் திரிபு என்று வாதிடும் ஆய்வாளர்களும் உள்ளார்கள். ஆனால் இதுவரை இராவணன் பற்றி எழுதிய தமிழ் ஆய்வாளர்களின் பார்வைக்கு இந்த விபரங்கள் எட்டியதாகத் தெரியவில்லை.

இராவணனின் தற்காப்புக்கலை !?
அதேவேளை சிங்களவர்களின் தற்காப்புக் கலையாக இன்று போற்றப்படும் “அங்கம்பொற” கலையை கற்பவர்களும், கற்பிப்பவர்களும் இராவணனை வணங்கிவிட்டு தொடருகின்றனர். அது இராவணனின் கலை என்கின்றனர். ஆனால் சமீப காலம் வரை அக்கலை கேரளாவிலிருந்து இலங்கைக்கு வந்த களரி இலங்கைக்கான வடிவமெடுத்தே “அங்கம்பொற” ஆனது என்றே கூறி வந்தனர். 2019 மார்ச் மாதம் இலங்கையின் அமைச்சரவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் “அங்கம்பொற” கலையை மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முடிவை எடுத்தார்கள். அதைத் தொடர்ந்து பெரிய விழாவெடுத்து இலங்கையின் “மரபுரிமையாக” அதை பிரகடனப்படுத்தியதும் நினைவிருக்கலாம்.


இராவணனைப் பற்றி அதிகம் எழுதி அக்கருத்துக்களை வெகுஜனமயப்படுத்தியதில் பேராசிரியர் மிராண்டோ ஒபேசேகரவின் ஆராய்ச்சிகளைப் பற்றி லங்காதீப பத்திரிகையில் “இராவண அரசனின் போர்முறை” என்கிற தலைப்பிலான கட்டுரையில் “அங்கம்பொற” கலையானது இராவணன் நமக்கு விட்டுச் சென்ற தற்காப்புக்கலை என்று நிறுவ முயல்கிறார். இராவணனுக்குப் பின்னர் விபீஷணன் போன்றோர் அக்கலையை முன்னெடுக்காததன் விளைவு அது “அங்கம்பொற” கலையைக் கற்றிருந்த குலமொன்று இந்தியாவுக்குச் சென்று விட்டதென்றும் அவர்கள் தென்னிந்தியாவில் “அகம்படியார்” என்கிற சாதியாக மாறிவிட்டனர் என்றும், இந்த அகம்படியார் சாதியானது இராவணனின் வழித்தோன்றலே என்றும், முதலாவது விஜயபாகு அரசர் அவர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைத்து அவர்களுக்கு கிராமங்களை பரிசளித்து குடியேற்றினார் என்றும், அவர்கள் குடியேற்றப்பட்ட வெளிதொட்ட என்கிற பகுதி தான் இப்போது தெற்கில் பலபிட்டிய என்கிற பிரதேசம் என்கிறார்.

இராவணனின் மருத்துவ முறைகளை இவர்கள் “அங்கம்” கலையோடு சேர்த்து பேணி வந்ததாகவும் குறிப்பிடுகிறார். இதைவிட அடுத்த புரட்டு என்னவென்றால்
“இராவணனின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர் இராவணனைக் காண நான்கு சில்லு பொருத்திய வாகனத்தில் தான் வந்து போனார். இந்த வாகனத்துக்கு என்று அதிசயிக்கத்தக்க எஞ்சின் பொருத்தப்பட்டிருந்ததுடன், அது சூரிய ஒளியில் இயங்கியது. இவை ஓலைச்சுவடிகளிலும், செய்திகளிலும் காணக்கிடைக்கின்றன. இதன்படி சக்கர வண்டிகளின் தோற்றம் இராவண காலத்தில் இருந்தா? இந்த நாற்சக்கர வண்டியை உலகுக்கு அறிமுகப்படுத்தியது இலங்கையா என்கிற கேள்வி புதிய தேடலுக்கு வழிவகுக்கும்”
என்கிறார். (8)

இலங்கையில் இராவணனின் அடையாளங்கள் இருப்பதாக நம்பப்படும் பல இடங்களை குறிப்பிட்டு வருகின்றனர். அவ்வாறான பல இடங்களுக்கு உல்லாசப் பயணங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். 

குருநாகல் மாவட்டத்தில் வாரியபொல என்கிற ஒரு ஊர் உண்டு. அங்குள்ள ஒரு புறநகர்ப் பகுதியில் ஒரு பலகையின்  அடையாளக்குறிப்பில் “நீங்கள் வாரியபொல நகரினுள் பிரவேசிக்கிறீர்கள். இராவணனின் ஆட்சிக்காலப் பகுதியில் இந்நகரம் காற்றிலும் பார்க்க அதிவேகம் கூடிய வாகனங்கள் தரையிறங்கும் பகுதியாக விளங்கியது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்பலகை வாரியபொல பிரதேச சபையினால் பல சில தசாப்தங்களாக அங்கு வைக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

அந்த நகருக்கு அந்தப் பெயர் வரக் காரணமாக இப்படிச்  சொல்லப்படுகிறது. 'வா' என்பது காற்றையும், ரிய' என்பது வாகனத்தையும், 'பொல' என்பது இடப்பரப்பையும் குறிக்கின்றன. இவ்வாறு . இம்மூன்று கருத்துக்களையும் ஒன்று சேர்க்கையில், இந்த ஊகம் காற்றினால் இயங்கும் அல்லது காற்றின் வேகத்தில் பறக்கும் வாகனங்கள் தறையிரங்கிய இடத்தைக் குறிக்கின்றது எனலாம்.

இராவண கற்பனைக்கதையை வரலாற்றுண்மைகளாக மாற்றியமைப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்று.

“வன்னி ராஜாவலிய”வும் “மகாசம்மத” மன்னனும்
இராவணன் பற்றிய ஆய்வுக்கட்டுரையொன்றுக்கான தேடல்களின் போது “வன்னி ராஜாவலிய” (වන්නි රාජාවලිය) என்கிற ஓலைச்சுவடி குறித்து பல இடங்களில் அறிய முடிகிறது. தமிழில் தேடினால் அப்படி ஒன்றைப் பற்றிய விபரங்கள் எங்கும் பதிவுசெய்யப்பட்டதாக அறிய முடியவில்லை. சிங்கள ராஜாவலிய என்பது சிங்களவர்களின் அரச வழிமுறை பற்றிய விபரங்களை அடக்கியது என்பதை அறிவீர்கள். பல நூல்களில் உள்ள அடிக்குறிப்புகளின் படி இந்த “வன்னி ராஜாவலிய” ஓலைச்சுவடியை கொழும்பு நூதனசாலையின் நூலகத்தில் இருந்து பயன்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். சிங்களத்தில் பேராசிரியர் கணநாத ஒபேசேகர நூலாகவும் வெளியிட்டிருக்கிறார். அவர் இது பற்றி வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறார்.

“வன்னி ராஜாவலிய” நூலில் குறிப்பிடப்படுகின்ற “மகாசம்மத்த” என்கிற அரசன் இராவணனைத் தான் குறிப்பிடுகின்றனர் என்றும், அதன்படி விஜயனுக்கு முன்னர் இருந்தே தமது சிங்கள அரச வம்சாவழி தொடங்கிவிட்டதாகவும் உறுதியாகவும் கூறுகிறார்கள்.

வன்னி பற்றிய விபரங்களை சிங்களத்தில் பேசுபவர்கள் இதைத் தவிர “வன்னி உபத்த” (වන්නි උපත,), “வன்னி வித்திய” (වන්නි විත්ති), “வன்னி கடைய்ம் பொத்” (වන්නි කඩයිම්) போன்ற ஓலைச்சுவடிகளையும் குறிப்பிட்டு வந்துள்ளனர். இந்த ஓலைச்சுவடிகள் பிரிட்டிஷ் நூலகத்தில் இருப்பதாக கூறுகின்றனர். வன்னி உள்ளிட்ட பகுதிகள் சிங்களப் பிரதேசமாக உரிமைகொண்டாடுவதற்கும் இவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழருக்கா சிங்களவருக்கா இராவணன் சொந்தம்
இப்போது உள்ள வாதம் இதுதான்; இராவணனை தமிழர்கள் தான் கொண்டாடி வந்தார்கள். தமிழர்களின் தலைவனாகத் தான் பெருமிதமடைந்து வந்தார்கள். கோவில் கட்டினார்கள். சிலைகள் எழுப்பினார்கள். தொல்பொருள் ஆதாரங்களை தமதேன்றே கூறிவந்தார்கள். குறிப்பாக வடக்கு கிழக்கில் இராவணன் தமது புராண தமிழ் – இந்துத்துவ தலைவனாகவே கொண்டாடி வந்திருக்கிறார்கள்.

இப்போது சிங்களவர்கள் தமது தலைவர்கள் என்று வாதிடத் தொடங்கியிருப்பதுடன், தமது பெரும்பான்மை பலத்துடனும், அரச அதிகாரத்தின் அனுசரணையுடனும் அதை பலமாக நிறுவி வருகிறார்கள். வெகுஜனப் புனைவுப் பரப்புரை தொடக்கம், தொல்பொருள் புனைவுகள் வரை அது நீண்டுவிட்டிருக்கிறது. வடக்கு கிழக்குப் பகுதியில் நில அக்கிரமிப்புக்காகவும், பண்பாட்டு ஆக்கிரமிப்புக்காகவும் தற்போது மேற்கொள்ளப்பட்டு தொல்பொருள் ஆக்கிரமிப்பின் இன்னொரு வடிவமாகவும் இராவணனின் இடங்கள் தான் இவை எனவே இது சிங்களவர்கள் நிலமே என்கிற தர்க்கத்தை முன் வைக்கத் தான் போகிறார்கள். வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஏற்கெனவே கண்டெடுக்கப்படுகின்ற பௌத்த தொல்பொருள் எச்சங்களை காண்பித்து “பௌத்த எச்சங்கள் ஆகவே இது சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது” என்று உரிமை கோரத் தொடங்கிவிட்டார்கள். தமிழர்கள் ஒரு காலத்தில் அங்கு பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதையோ, பௌத்தம் தமிழர்களிடம் தலைத்தோங்கியிருந்தது என்பதையோ கொண்டாடாததன் விளைவு அந்த இடைவெளியை அவர்கள் நிரப்ப தலைப்பட்டிருக்கிறார்கள். அதே கதி தான் இன்று இராவணனுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

இலங்கையில் வரலாறும், தொன்மம் பற்றிய மரபும், அதன் முதுசமும் இருவேறு மொழிகளில், இரு வேறு வழிகளில், இருவேறு அர்த்தங்களில், இருவேறு வியாக்கியானங்களில் நெடுங்காலமாக பயணித்தபடி இருப்பதை அவதானித்தாக வேண்டும். இப்போதும் தமிழில் பேசப்படுகிற வரலாற்றுத் தொன்மை பற்றி சிங்களவர் அறியார். சிங்களவர் மத்தியில் ஊன்றியிருக்கும் வரலாற்று மரபு குறித்து தமிழர் அறியார். இந்த இரண்டும் தற்செயலாக ஆங்காங்கு சந்தித்துக்கொள்ளும்போது திடுக்கிட்டு வியக்கின்றன. மோதிக்கொள்கின்றன. ஈற்றில் பெருமிதத் தொன்மை பேசி இருப்பைத் தக்கவைக்கும் அவசர நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இந்த நிலை மிகவும் அபாயகரமானது. குறிப்பாக இனத்துவ முறுகலின் உச்சத்தில்  இருக்கிற இந்த நாட்டில் இந்த துருவமயப் போக்கு ஆபத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. ஆபத்தை தூண்டிக் கொண்டிருக்கிறது. வெடித்து வெடித்துத் தணிகிறது.

இப்போது இராவணனை தங்கள் பாரம்பரிய புராதன பண்பாட்டின் நாயகன் என்று பரஸ்பர பகைமையுணர்வு கொண்ட சிங்களவர்களும், தமிழர்களும் கொண்டாடுகின்றனர். புராணக் கதைகளுயும் இதிகாசங்களும் இப்போது அரசியல்வாதிகள், தேசியவாதிகள், இனவாதிகள் அனைவருக்குமே தமது கைகளில் சூழ்நிலைக்கிசைந்த கருவியாக மாறியுள்ளது. இவற்றை இன-மத தேசியவாதத்துடனும் இணைத்து அவற்றின் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்காக பயன்படுத்திகொள்கின்றனர். புனித மேன்மைக்கு அவற்றைக் கொண்டு வைப்பதன் மூலம் அதற்கு ஒரு ஆன்மீக அந்தஸ்தையும் கொடுத்துவிடுகின்றனர்.

இராவணனை சொந்தம் கொண்டாடுவதில் இன்னமும் இரு இனங்களுக்கும் மத்தியில் இதுவரை சண்டைகள் வெடிக்கவில்லை. ஆனால் அப்படிப்பட்ட நெருக்கடிகளுக்குள் தற்போது இந்த உரிமைகோரல் நெருங்கிக்கொண்டிருப்பதாக அச்சம் கொள்ள முடிகிறது. 

இராவணனை விட்டுக்கொடுப்பதை விட, அல்லது போனால் இராவணனை உரிமை கூறுவதைவிட செய்யவேண்டியது என்னவென்றால் இராவணன் நம் தலைவன் இலங்கையின் தலைவன். நீயும் நானும் வேறல்ல. நாம் இரு சாராருமே மண்ணின் மைந்தர்கள் தான், நாம் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அல்ல என ஒப்புக்கொள்வதே இனப்பிரச்சினைக்கு முடிவைக் கட்டும். இனங்களுக்கிடையிலான புரிதலையும் எட்டச் செய்யும். ஈற்றில் இனப்பிரச்சினையும் தீர்க்க உதவும்.

இராவணனை ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல் சூட்சுமத்தை இப்படித்தான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

அடிக்குறிப்புகள்
  1. இராவணனை ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல் சூட்சுமத்தை இப்படித்தான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
  2. A. Jeyaratnam Wilson - Politics in Sri Lanka, the Republic of Ceylon: A Study in the Making of a New Nation - Macmillan; 1st ed 1st printg edition (9 May 1974)
  3. K. E. O. Dharmadasa, - Language, Religion, and Ethnic Assertiveness: The Growth of Sinhalese Nationalism in Sri Lanka - University of Michigan Press, 1992
  4. Professor of Linguistics James W Gair, - Studies in South Asian Linguistics: Sinhala and Other South Asian Languagesir - Oxford University Press, 1998
  5. ஜினதாச நிவித்திகல - இங்கிலாந்து மகாராணியை மகிழ்வூட்டிய ஹனுமான் – திவயின – 21.04.2019
  6. சசங்க பெரேரா - இராவணன் புத்துயிர் பெறுகின்றான் - தேர்ந்த கட்டுரைகள் தொகுதி - 33 - விடுதலைப் புலிகளின் அரசியல் பிவி வெளியீடு - யூலை 1995
  7. “இலங்கையின் தொலைகாட்சி நாடகத்துறையை உயர் தரத்துக்கு கொணர்வதே எமது இலக்கு” என்கிற தலைப்பில் வெளியான நேர்காணல் http://www.saaravita.lk/ 4 දෙසැම්බර් 2018 (நேர்கண்டவர் – நிதுன் மதுஷிக)
  8. ஹன்சி சந்தமாலி “රාවණාගේ අපරිමිත ප්‍රේමයේ හිමිකාරී, මන්දෝදරී” (இராவணனின் எல்லையில்லாக் காதலுக்கு உரிமைக்காரி மண்டோதரி) - https://roar.media
  9. அசங்க ஆட்டிகல - “இராவண அரசனின் போர்முறை” – லங்காதீப – 09.09.2014
நன்றி : காக்கைச் சிறகினிலே யூலை - 2020

Share this post :

+ comments + 1 comments

இங்கு முதலாவதாக ஆராயப்படவேண்டியது என்னவென்றால், இராவணன் என்ற ஒருவன் பற்றி ராமாயண தவிர்ந்த வேறு பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதா, குறிப்பிடப்பட்டிருந்தால் எவற்றில், அந்த இலக்கியங்கள் எக்காலத்தவை, அவை எவர்களால் எப்போது இயற்றப்பட்டவை என்பதாகும். அடுத்ததாக இராவணன் பற்றித் தொல்பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ளனவா, குறிப்பிடப்பட்டிருந்தால் எவற்றில், அவை எக்காலத்தவை?

இராமன் கதையானது இலங்கை 70 வருடகாலம் சோழ மேலாதிக்கத்தின்கீழ் இருந்துவந்து, கி. பி. 1070இல் முதலாவது விஜயபாகுவின் தலைமையில் சோழ மேலாதிக்கம் இராணுவ ரீதியாக முறியடிக்கப்பட்டு, பொலநறுவவில் புத்தபெருமானின் புனித தந்ததாது வைக்கக் கோயிலும் கட்டப்பட்டு, பௌத்த சங்கம் புனரமைக்கப்பட்டு, புத்தகோயில்கள் திருத்தி அமைக்கப்பட்டு, முதலாவது வியபாகு தன்னை இலங்கையின் பௌத்த அரசனாக முடிசூடி, பௌத்த அறமானது கி. பி. 1073ஆம் ஆண்டில் இலங்கையில் மீண்டும் நிலைநாட்டப்பட்டதைக் கூறும் காவியமாகும். இது இறந்து துடிதலோகத்திற்குச் சென்றிருந்த புத்தபெருமான் கி. பி. 1073ஆம் ஆண்டில் மீண்டும் பூமியில் அவதரித்து, பௌத்த அறத்தினை நிலைநாட்டியது போன்றதே! கி. பி. 1073ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தினை மணிமேகலையின் அறவணர் தொழுத காதையின் வரி - 72 முதலான விபரிப்புக்களில் காணலாம். அதில் புத்தபெருமான் பூமியில் மீண்டும் அவதரித்தமையானது ”ஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டு ஆண்டு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பௌத்த காப்பியமான மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஆண்டானது பெள்த்த ஆண்டாகவே இருக்கமுடியும். ”பௌத்த ஆண்டு 1616” என்பது, கி. பி. (1616 - 543) ஆகும். அதாவது கி. பி. 1073ஆகும்!! தமிழ் மரபின்படி புத்தபெருமான் இறந்தது கி. மு. 543 ஆகும். இந்தநிலையில், இலங்கையின் பௌத்த வரலாற்றினது மிக முக்கிய சம்பவத்தினை காப்பியமாக உருவாக்கப்பட்டதுதான் இராமன் கதையாகும். அதாவது இராமாயணம் ஆகும். இராமாயணத்தில், இமயமலைப் பகுதியைச் செர்ந்த புத்தபெருமான் அயோத்தியைச் செர்ந்த இராமன் ஆக்கப்பட்டான். புத்தபெருமானிலிருந்து பிரிக்கப்படமுடியாத அவரது அறப்போதனையானது இராமனின் மனைவி சீதை ஆக்கப்பட்டது. சோழ மேலாதிக்கமானது இராவணன் ஆக்கப்பட்டது. முதலாவது விஜயபாகு விபீஷணன் ஆக்கப்பட்டான். தென்னிந்தியவிலிருந்து இலங்கை சென்று போரிட்டு வந்த தமிழ்ப் பௌத்தர்கள் குரங்குகள் ஆக்கப்பட்டனர். குத்தபெருமான் மீண்டும் அவதரித்து அறத்தினை நலைநாட்டியமையை இலக்கிய ரீதியாக உருவாக்கியதுதான் இராமன் கதை, அல்லது ராமாயண. அதைப் பௌதீக ரிதியாக உருவாக்கியதுதான் சீகிரிய மலையும், அதன் பாதப் பகுதியுமாகும்.

இவைகள் எல்லாம் இலங்கைத் தமிழ் மஹாயாண பௌத்தர்களின் உருவாக்கமாகும்.

இந்தநிலையில், ”இராவணன்” என்பது தூய கற்பனையாகும். தமிழ் இலக்கியங்களை ஆராயாத சிங்கள தேரவாத பௌத்தர்கள் மீண்டும் தமது கோபாட்டினையும், வரலாற்றையும் கற்பனை அடிப்படையில் உருவாக்க முயற்சிக்கின்றனர். இது ஆபத்தானது. இதைச் சிங்க தேரவாத பௌத்தர்களுக்கு ஆதாரபுர்வமாக விளக்கவேண்டியுள்ளது.

ஆனால். துரதிஷ்டவசமாக தமிழ் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், அரசியல்வாதிகள் இதைச் செய்யாது, சிங்களவர்களைப்போல் கற்பனையில் சஞ்சரித்து வருகின்றனர். சிங்களவரும், தமிழரும் அறியாமையிலிருந்து மீட்கப்படாத நிலையில், இலங்கையில் இனப்பிரச்சினை தீர்க்கப்படமுடியாது. இலங்கை முன்னேற முடியாது!!

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates