Headlines News :
முகப்பு » , , , , » “கோட்டா” US குடியுரிமையை இழக்கவில்லை – இன்றைய அமெரிக்க ஆதாரம் - என்.சரவணன்

“கோட்டா” US குடியுரிமையை இழக்கவில்லை – இன்றைய அமெரிக்க ஆதாரம் - என்.சரவணன்


அமெரிக்கா தமது நாட்டில் குடியுரிமையை இழந்தவர்களின் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை என வருடத்துக்கு நான்கு தடவைகள் வெளியிடுவது வழக்கம். இந்த வருடம் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்த பட்டியலில் கோட்டபாயவின் பெயர் இருக்கவில்லை. ஆனால் தனது குடியுரிமையை ரத்து செய்வதற்கான விண்ணப்பத்தை எப்போதே செய்துவிட்டதாகவும் தற்போது அமெரிக்க குடியுரிமையை இழந்துவிட்டதாகவும் கோட்டபாய கூறிவந்தார். எதிர்தரப்பினர் அவரின் அந்த அறிவிப்பை சவால் செய்தார்கள். முடிந்தால் அதனை வெளிப்படுத்துமாறு கேட்டிருந்தார்கள். ஆனால் அது தன்னிடம் இருப்பதாகவும் அதனைக் காட்டவேண்டிய அவசியம் இல்லையென்றும் கோட்டாபய கூறியிருந்தார்.

இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் அறிவிப்பதற்கு முன்னர் வெளிவரப்போகும் அமெரிக்க அறிக்கையில் கோட்டபாயவின் பெயர் வெளியிடப்படலாம் என்றே ராஜபக்ச தரப்பினர் நம்பியிருந்தனர். இந்த நிலையில் இன்று அதாவது 15.08.2019 வெளியிடப்பட்டிருக்கிற 17 பக்கங்களைக் கொண்ட இறுதிப் பட்டியலில் கோட்டபாயவின் பெயர் வெளியாகவில்லை.

இலங்கையின் அரிசயல் அமைப்பின் 19வது திருத்தச் சட்டத்துக்கு அமைய இலங்கை பிரஜை ஒருவர் மட்டுமே ஜனாதிபதி வேட்பாளராக ஆக முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட குடியுரிமை பெற்ற எவரும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தவராக கணிக்கப்படுவார்.

ராஜபச்க தரப்பைப் பொறுத்தளவில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளராக “நந்தசேன கோட்டபாய ராஜபக்ச”வைத் தான் நம்பியிருக்கின்றனர். அதற்கான ஆயத்தங்களை அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டபோதும்; கோட்டபாய அமெரிக்க குடியுரிமையையும் கொண்ட ஒருவராக இருப்பதால் அவரை முதலில் அக்குடியுரிமையை ரத்துசெய்துவிட்டு வரும்படி ராஜபக்ச அணியினர் தெரிவித்திருந்தனர்.



ஜனாதிபதித்தேர்தலில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைத் தான் களமிறக்க வேண்டும் என்பதே ராஜபக்ச தரப்பினரின் ஒரே லட்சியம். ஆனால் 19வது திருத்தச் சட்டம் அவர்களின் அந்தக் கனவைக் கலைத்திருந்தது

19வது திருத்தச்சட்டத்தில் முக்கிய மூன்று திருத்தங்கள் ராஜபக்ச குடும்பத்தின் எதிர்கால கனவை நாசமாக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டதாக குற்றச்சாட்டு உண்டு.
ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் தடவை ஜனாதிபதியாக ஆக முடியாது. அதாவது மகிந்தவால் மீண்டும் ஜனாதிபதியாக முடியாது.
இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது. அதாவது கோத்தபாய, பசில் ஆகிய மகிந்தவின் இரு சகோதர்களும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.
மகிந்தவின் மகனை ஜனாதிபதித் தேர்தலில் நிற்கவைக்கவும் முடியாது. ஏனென்றால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் 35 வயதைத் தாண்டியிருக்கவேண்டும் என்பது அரசியலமைப்பு விதி. 2015 வரை வயதெல்லை 30ஆக இருந்தது. 1986இல் பிறந்த நாமல் ராஜபக்ச 35 வயதைக் கடக்க 2021 ஆக வேண்டும். 2019 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் பங்குபெறமுடியாது. அதாவது 2024 ஆம் ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தான் பங்குபெறலாம். அல்லது 2021குப் பின்னர் ஜனாதிபதி பதவி வெற்றிடம் ஏற்படவேண்டும் வேண்டும். இந்த இடைக்காலத்துக்குள் “ராஜபக்சவாத”த்துக்கான மக்கள் மவுசுக்கு என்ன நிகழும் என்றும் தெரியாது.
அமெரிக்காவின் அறிக்கை வெளிவரும் வரை ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபயவின் பெயரை அறிவிப்பதை இழுத்தடித்தே வந்த ராஜபக்ச தரப்பு ஓகஸ்ட் 11 வேறு வழியின்றி கோட்டாபயவின் பெயரை அறிவித்தனர். வரப்போகும் அமெரிக்க அறிக்கையை அவர்கள் பெரிதும் நம்பியிருந்தனர். ஆனால் இன்றைய அறிக்கை அந்த கனவுகளுக்கு ஆப்பு வைத்து விட்டது.

அமெரிக்க உள்துறை வருமான சேவை (IRS - Internal Revenue Service) தான் இந்த அறிக்கையை வெளியிடும் அதிமாரபூர்வமான உரிமையைக் கொண்டது. 2019-17498 என்கிற இலக்கத்தைக் கொண்ட இன்றைய அதிகார பூர்வமான அறிக்கையை https://s3.amazonaws.com/public-inspection.federalregister.gov/2019-17498.pdf என்கிற இணைப்பில் நீங்கள் காணலாம்.


இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் இலங்கையின் எந்தவொரு பிரஜையும் அதை எதிர்த்து வழக்கு தொடர முடியும் என்று (PAFFREL - PEOPLE'S ACTION FOR FREE & FAIR ELECTIONS) இயக்கம் அறிவித்திருக்கிறது. வேட்புத் தாக்கல் இடம்பெற்றதும் அதனை எதிர்த்து முறைஈடு செய்ய கால அவகாசம் வழங்கப்படும். அது இயலாவிட்டால் நீதிமன்றத்துக்கு செல்லவும் பிரஜை ஒருவருக்கு உரிமை உண்டு என்றும் பெப்ரல் அமைப்பின் தலைவர் றோகன ஹெட்டிஆராச்சி நேற்று 14 அன்று தெரிவித்திருந்தார்.

19வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் வேட்பாளர் ஒருவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்யும் போது உண்மையான தவல்களை வழங்கவேண்டியது வேட்பாளரின் பொறுப்பாகும். என்பதையும் ஹெட்டிஆராச்சி குறிப்பிட்டிருந்தார்.

நன்றி - அரங்கம்

அமெரிக்க குடியுரிமையை இழந்தோர் பற்றி 15.08.2019 வெளியான அறிக்கை



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates