Headlines News :
முகப்பு » , , , » ஊடக மாபியாவின் எழுச்சி! - என்.சரவணன்

ஊடக மாபியாவின் எழுச்சி! - என்.சரவணன்

பட்டறிவு

இன்று மக்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்தும் பெருவாரியான ஊடகங்கள் அரசியல் வாதிகளினாலும், கார்ப்பரேட் நிறுவனங்களாலுமே வழிநடத்துப்படுகின்றன. இலங்கையின் வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு சமகால ஊடக போக்கில் இந்த நிலை உச்சத்தை அடைந்திருக்கிறது என்றே கூற வேண்டியிருக்கிறது.

சமீபகாலமாக இலங்கையின் பிரபலமான ஊடகங்களின் பக்க சார்பை தெளிவாக இனங்கான முடிகிறது. அரசியல் குழப்ப நிலைகளின் போது உண்மையை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்குப் பதிலாக பொய்களைப் பரப்புவதிலும், தமது நலன்களுக்கு நெருக்கமான அரசியல்வாதிகளின் புனைவுகளுக்கு அதி முக்கியத்துவம் கொடுப்பதும் நிகழ்ந்து வருகிறது. சிவில் அமைப்புகள் இது ஒரு பாரதூரமான நிலைமை என்று கண்டிப்பதுடன் இப்படியான நிறுவனங்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடவும் தொடங்கிவிட்டன. குறிப்பாக மகாராஜா நிறுவனம், தெரண,  ஹிரு போன்ற நிறுவனங்களுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளை காண முடிகிறது.

77% சிந்தனையை கட்டுபடுத்துவது யார்?

பாரிஸ் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் RSF என்ற எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு   (Reporters Without Borders – RSF) இலங்கையின் ஊடகத்துறையை கட்டுப்படுத்துபவர்கள் பற்றிய முக்கியமானதொரு ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையின்படி இலங்கையின் மூன்று குடும்பங்களும் அரசும் சேர்ந்து இலங்கையின் 77% வீதமான தொலைகாட்சி பார்வையாளர்களின் (audience) சிந்தனையைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்று கருத்து வெளியிட்டிருக்கிறது. இந்த நிலைமை ஒரு அபாய சமிக்ஞை என்று தெரிவித்திருக்கிறது.

ராஜமகேந்திரன் குடும்பத்துக்கு சொந்தமான கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்துக்கு சொந்தமான சிரச, சக்தி, டீவி1 ஆகிய ஊடகங்கள் மாத்திரம் 22.22 % வீதமான பார்வையாளர்களிடம் சென்றடைகின்றன.

திலித் ஜெயவீர, வருணி அமுனுகம (சரத் அமுனுகமவின் மகள்) பவர் ஹவுஸ் என்கிற நிருவனத்துக்கூடாக நடத்திவரும் தெரண ஊடக நிறுவனம் 19.8 % வீதமான பார்வையாளர்களிம் சென்றடைகின்றன.

மரண தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கும் மகிந்த தரப்பு அரசியல்வாதியான துமிந்த சில்வாவின் சகோதரன் ரைனோர் சில்வாவுக்கு சொந்தமான ஹிரு நிறுவனம் 18.1.% வீதமான பார்வையாளர்களிடம் சென்றடைகின்றது.

அரச கட்டுப்பாடு ஊடகங்கள் 16.9% வீதத்தினரிடம் சென்றடைகிறது.


ஆதாரம் :

மக்களின் சிந்தனையை தீர்மானிப்பதில் ஊடகங்களின் பெரும்பங்கை அறிந்த அரசியல் தலைவர்கள் பலர் ஒன்றில் தமக்கான ஊடகங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள். அல்லது அப்பேர்பட்ட ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துமளவுக்கு அங்கே தமது ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் பிரயோகிக்கிறார்கள். அதிகாரம், பணம் என்பன இதற்காக போதிய அளவு பயன்படுத்தப்படுகிறது.

அதுபோலவே 74% வீதமான வானொலி கேட்டுனர்களையும் இவர்கள் தான் கட்டுப்படுத்துகிறார்கள் என்று RSF நிறுவனம் மேற்படி அறிக்கையில் விபரித்துள்ளது.

அதுபோல நான்கு நிறுவனங்களே 75.45 % வீதமான சிங்கள அச்சு ஊடக வாசகர்களிடம் சென்றடைகின்றன. விஜய, உப்பாலி, சிலோன் நியுஸ்பேப்பர் மற்றும் லேக்ஹவுஸ் நிறுவனங்கள் ஆகியனவே அவை.

தமிழ் ஊடகங்கள் ஆபத்தில்

தமிழ் பத்திரிகைகளின் விற்பனையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை 2017, 2018 ஆகிய கடந்த இறுதி ஆண்டுகளில் வெளியான இலங்கையின் மத்திய வங்கியின் பொருளாதார – சமூக ஆய்வறிக்கை  (Central Bank’s Economic & Social Statistics 2017, 2018) உறுதி செய்திருக்கிறது. இந்த இரண்டும் அதற்கு முந்திய 9 ஆண்டுகால நிலவரத்தை ஆய்வு செய்திருக்கின்றன.

அதன்படி சிங்கள – ஆங்கிலப் பத்திரிகைளுக்கு நேராத கதி தமிழ் அச்சு ஊடகங்களுக்கு நேர்ந்திருப்பதை காண முடிகிறது. அட்டவணையைப் பார்க்க.

தினசரி பத்திரிகைகள் 2014 இல் 62,625 இருந்தது 2015ஆக ஆகும்போது 75,906 அதிகரித்தபோதும், 2016 இல் 60,969 ஆகக் குறைந்ந்து 2017இல் 60,249 வீழ்ச்சியடைந்திருப்பதையும் உறுதிப்படுத்துகின்றன. அதாவது 2014ஆம் ஆண்டை விட வீழ்ச்சியடைந்திருப்பதைக் காட்டுகிறது. (எண்ணிக்கைகளை ஆயிரங்களால் ‘000 பெருக்கவேண்டும்)

அதுவே வாராந்தப் பத்திரிகைகள் 2014 இல் 20,335 இருந்தது 2015ஆக ஆகும்போது 21,653 அதிகரித்தபோதும், 2016 இல் 19,324 ஆகக் குறைந்ந்து 2017இல் 60,249 ஆக சாற்றி சிறிய வளர்ச்சியை மட்டுமே காட்டுகின்றது. ஏனைய மொழி ஊடகங்களோடு ஒப்பிடுகையில் இது பாரதூரமானது. (எண்ணிக்கைகளை ஆயிரங்களால் ‘000 பெருக்கவேண்டும்)

அதன்படி சிங்கள – ஆங்கிலப் பத்திரிகைளுக்கு நேராத கதி தமிழ் அச்சு ஊடகங்களுக்கு நேர்ந்திருப்பதை காண முடிகிறது. அதனை எளிமையாக விளங்கிக்கொள்வதற்காக அந்த அட்டவணையையும் அதைக் கொண்டு நான் தயாரித்த வரைபடத்தையும் இங்கு இணைத்திருக்கிறேன்.

இந்த நிலைமைக்கான காரணத்தை பல கோணங்களில் இருந்து காணலாம் குறிகாட்டியாக, வாசிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, இலத்திரனியல் சாதனங்களின் மீதான நுகர்வின் அதிகரிப்பு, இலங்கையில் தமிழ் அரசியல் சமூக விடயங்களை அறிதலில் ஏற்பட்டிருக்கக் கூடிய சலிப்பு, வாசகர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தோல்வியடைந்திருக்கும் ஊடகப் போக்கு போன்ற இன்னோரன்ன காரணங்களை அடுக்கிக்கொண்டு செல்லலாம்.

ஆனால் அதேவேளை இத்தனையையும் மீறி புதிய பத்திரிகைகளைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளும் நடக்காமலில்லை. புதிய பிராந்திய பத்திரிகைகளின் வருகையையும் கவனத்திற்கொள்ளவேண்டியுள்ளன.  இந்தப் பத்திரிகைளின் வரவு என்பது ஏற்கெனவே இருக்கும் பத்திரிகைகளின் மீதான கொள்கை ரீதியான போட்டியல்ல. சந்தையை மையப் படுத்தியோ அரசியல் நோக்கங்களுக்காகவோ புதிதாக வெளிவரத்தொடங்கும் இப்பத்திரிகைகள் சந்தையில் வியாபார ரீதியில் நின்று பிடிக்க முடியும் என்கிற நம்பிக்கை எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.

ஏற்கெனவே வியாபார ரீதியில் பத்திரிகைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக அந்நிறுவனங்களில் ஆட்குறைப்பையும், ஊழியர்களின் மீதான வேலைப்பழு அதிகரிப்பையும், பக்க குறைப்புகளையும் செய்து தான் சமீப காலமாக சமாளித்து வருகின்றன. இந்த மாற்றங்களை செய்யும் போது தரத்தைப் பேணுவதில் பெரும் சிக்கலை எதிர்கொள்வதையும் காண முடிகிறது. சில பத்திரிகைகள் மூடிவிட்டு போய்விட்டன. சில பத்திரிகைகள் வேறு வர்த்தகர்களுக்கு விற்றுவிட்டு கிடைத்தது போதும் இத்தோடு தொலைந்தது என்று ஓடிவிட்டன.

அரச விளம்பரங்களை ஏற்கெனவே பல பத்திரிகைகள் குத்தகைக்கு எடுத்துவிட்டன. இன்னும் தனியார் விளம்பரங்களும் கூட தற்போதைய உள்நாட்டுப் பொருளாதாரச் சூழலின் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டே இருக்கின்றன. ஏற்கெனவே பல பத்திரிகைகள் தனியார் விளம்பரங்களைப் பெறுவதில் போட்டாபோட்டியை எதிர்கொண்டிருக்கின்றன.

இலங்கையில் தமிழ் ஊடகங்களின் வீழ்ச்சிக் காலம் ஆரம்பமாகிவிட்டது. வீழ்ச்சி என்பது விற்பனை, விநியோகத்தில் மாத்திரமல்ல தரத்திலும் தான். இத்தனையையும் மீறி புதுப்புதுப் பத்திரிகைகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன என்கிற செய்திகள் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன.


வேறு போட்டியாளர்களை உள்ளே நுழைய விட்டுவிடக்கூடாது என்பதற்காக தாமே அந்த இடத்தில் இன்னொரு நிறுவனத்தை நடத்துவது முதலாளித்து நாடுகளில் உள்ள கார்பரெட் மூலதனங்களின் வியாபார உத்தி மேற்கு நாடுகளில் பிரபல்யம். ஏராளமான உதாரணங்களை இதற்கு காண்பிக்கலாம். அதே போக்கை இலங்கையில் கடைப்பிடிக்கும் தமிழ் ஊடக நிறுவனங்களும் உள்ளன. இவை ஊடகத்துறைக்கும், வாசகத்தனத்துக்கும், கருத்துருவாக்கச் செயற்பாட்டுக்கும் மிகப் பெரும் ஆபத்தே.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்களின் கருப்புப்பணத்தை வெள்ளையாகுவதற்காக ஊடக நிறுவனங்களை வைத்து இயக்குகின்றன. கூடவே தமது அரசியல் தலையீட்டை செய்வதனூடாக தமது வியாபார நடவடிக்கைகளின் மீதான அரச சலுகைகளைப் பெறுவதற்கு பயன்படுத்துகின்றன.

துரதிர்ஷ்டவசமாக இப்படியான நிறுவனங்களின் ஏகபோகத்தை தகர்த்து ஊடகத் தரத்தைக் காக்கவேண்டும் என்று கிளம்பியவர்களும் கூட சற்றும் அந்த ஏகபோகத்துக்கு சவாலாக நெருங்கவும் முடியவில்லை. ஆனால் அதற்கான இடைவெளி இருக்கவே செய்கிறது. மத்திய வங்கியின் அறிக்கை வெளியிட்டுள்ள முக்கிய தரவுகளை சகல ஊடகங்களும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

இலங்கையில் தமிழ் ஊடகங்களின் தரமான இருப்புக்கு புதிய திசைவழியையும், தந்திரோபாயத்தையும் வேலைத்திட்டத்தையும் வகுக்க வேண்டியிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

கூடவே அரசியல் சக்திகளை சார்ந்து அராஜகத் தன்மையுடன் எழுச்சியடையும் ஊடகப் போக்கும் ஊடக அறத்தின் எதிர்காலத்தை எச்சரித்து நிற்கின்றன.

நன்றி - அரங்கம்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates