Headlines News :
முகப்பு » , , , , , » “மகாவம்சம்” எழுதப்பட்ட வரலாறு! - என்.சரவணன்

“மகாவம்சம்” எழுதப்பட்ட வரலாறு! - என்.சரவணன்


“மகாவம்சம்” மூல நூல் இலங்கையின் பண்டைய இதிகாசம் தொடக்கம் கி.பி 301 வரையான மாகாசேனன் மன்னரின் காலப்பகுதிவரை மகாநாம தேரரால் எழுதப்பட்டது. அது; முதல் 36 அத்தியாங்களைக் கொண்டது. 37வது அத்தியாயத்தை அவர் எழுதிக்கொண்டிருக்கும் மகாநாம தேரர் போது மரணமாகிவிட்டார். அது 50 செய்யுள்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் “அத்தியாயம் நிறைவுற்றது” என்று குறிப்பிட்ட அவர் 37வது அத்தியாயத்தில் அப்படி குறிப்பிடாததால் அவர் அந்த அத்தியாயத்தை முடிக்கவில்லை என்றும் தொடரவிருந்தார் என்றும் பல ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன.

2வது தொகுதி
2வது தொகுதி கி.பி  301 முதல் கி.பி 1815 வரையான ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரையான காலப்பகுதியைப் பதிவு செய்கிறது. அது மூன்று பாகங்களைக் கொண்டது.
  1. முதலாவது பாகம் - மன்னர் கித்சிரிமேவன் அரசரின் காலம் தொடக்கம் மகாபராக்கிரமபாகுவின் காலம் (302-1186) வரையான 884 ஆண்டுகளைப் பதிவு செய்கிறது. மொத்தம் 42 அத்தியாயங்களைக் கொண்டது அது.
  1. இரண்டாவது பாகம் – 1186-1357 வரையான விஜயபாகு மன்னர் காலத்திலிருந்து ஐந்தாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலம் வரை 171 வருட காலத்தைப் பதிவு செய்கிறது.
  1. மூன்றாவது பாகம் – 1357-1815 வரையான விஜயபாகு மன்னர் காலத்திலிருந்து ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் காலப்பகுதிவரை 441ஆண்டுகளைப் பதிவு செய்கிறது. ஆட்சி முழுமையாக அந்நியர் கைகளில் சிக்கும் வரையான காலப்பகுதி இது.

“மகாவம்சம்” எனும் போதே அது வம்சவிருத்தி பற்றிய கதை என்கிற உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதை கண்டிருப்போம். இலங்கையில் இருந்த ஆட்சிகளையும் அதை ஆட்சி செய்தவர்களையும் பற்றிய அந்த விபரங்களின் அடிப்படையிலேயே அது தொகுக்குப்பட்டு வந்திருக்கிறது. மகாவம்சத்தின் மூல நூலில் 33-36 வரையான அத்தியாயங்களில் முறையே 10 அரசர்கள், 11அரசர்கள், 12அரசர்கள், 13 அரசர்கள் என்கிற ரீதியில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அது போல ஒரே அரசருக்கு பல அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. முதலாவது மூல நூலில் 37அத்தியாயங்களில் பத்து அத்தியாயங்கள் துட்டகைமுனு பற்றியே உள்ளன. அது போல இரண்டாவது தொகுதியில் 64 அத்தியாயங்களில் 18 அத்தியாயங்கள் மகா பராக்கிரமபாகு பற்றி எழுதப்பட்டிருக்கிறது.

துட்டகைமுனுவால் ஒன்றுபட்ட சிங்களவர்களின் இறையாண்மையை நிலைநாட்டியதாக கூறப்படும் அந்த முப்பத்துநான்கு ஆண்டுகளுக்கு இடையில் ஏழு தமிழர்கள் (அவர்கள் மன்னர்கள் அல்லர்) படையுடன் வந்து இலங்கையைக் கைப்பற்றி பதினைந்து ஆண்டுகள் அரசாண்டதாகவும் அறியக்கிடைக்கிறது.

இதை எழுதிய பிக்கு பற்றிய தகவல்களை பின்னைய பல ஆய்வாளர்கள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். மேற்படி 2ஆம் தொகுதியின் முதலாவது பாகத்தை அதாவது 37ஆவது அத்தியாயத்தின் 51வது பகுதியிலிருந்து 79வது அத்தியாயம் வரை தம்பதெனிய பகுதியில் வாழ்ந்த தர்மகீர்த்தி என்கிற பௌத்த பிக்கு எழுதியதாக பேராசிரியர் வில்ஹைம் கைகர் குறிப்பிடுகிறார். முதலாவது பராக்கிரமபாகு காலத்தை ஆராய்ச்சி செய்த பேராசிரியர் சிறிமா விக்கிரமசிங்க போன்ற பல ஆய்வாளர்களும் அதனை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் பேராசிரியர் மங்கள இலங்கசிங்க போன்றோர் இதனை மறுக்கிறார்கள். 38வது அத்தியாயத்திலிருந்து 54வது அத்தியாயம் வரையான பகுதியை மகாவிகாரையைச் சேர்ந்த பிக்குகள் சேர்ந்து எழுதியதாகவும், முதலாவது பராக்கிரமபாகு காலத்தை உள்ளடக்கிய 54வது அத்தியாயத்திலிருந்து 79வது அத்தியாயம் வரையான 25 அத்தியாயங்களை பொலன்னறுவையில் வசித்த பராக்கிரமபாகு மன்னருடன் குடும்ப நட்பு கொண்டிருந்த ராஜகுரு தர்மகீர்த்தி என்கிற பிக்குவால் எழுதப்பட்டது என்றும் பேராசிரியர் மங்கள இலங்கசிங்க விபரிக்கிறார்.

79இலிருந்து 90வது அத்தியாயம் வரை அதே தம்பதெனிய தர்மகீர்த்தி தேரர் தான் எழுதியதாக பதிவுகள் இருந்தாலும் மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியை சிங்களத்துக்கு மொழிபெயர்த்த ஹிக்கடுவ சுமங்கள தேரர் உள்ளிட்ட இன்னும் சிலர் அதை மறுக்கிறார்கள். 79வரையான அத்தியாங்கள் வரை எழுதப்பட்ட வடிவத்தில் அதற்கடுத்த அத்தியாயங்களில் எழுதப்படவில்லை என்றும் மொழிநடையில் உள்ள வித்தியாசத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்த விபரங்கள் பற்றிய ஆய்வாளர்களின் முரண்பட்ட கருத்துக்கள் அத்தனையையும் இறுதியாக இந்த வருடம் வெளிவந்த மகாவம்சத்தின் 6வது தொகுதியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

91-100 வரையான அத்தியாயங்களை கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் காலத்தில் கண்டி ராஜ்ஜியத்தைச் சேர்ந்த (அக்காலகட்டத்தை செங்கடகல ராஜ்ஜியம் என்று அழைப்பார்கள்) திப்பொட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த புத்தரக்கித்த மகாநாயக்க தேரரால் எழுதப்பட்டதை மகாவம்சம் தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

101வது அத்தியாயம் ராஜாதி ராஜசிங்கன் மற்றும் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் ஆகிய மன்னர்களைப் பற்றி  29 செய்யுள்களில் எழுதப்பட்டபடி முடிக்காமல் இருக்கிறது. ஸ்ரீ சித்தார்த்த புத்தரக்கித்த மகாநாயக்க தேரர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் காலத்திலேயே மரணித்துவிட்டதால் இந்த 101வது அத்தியாயம் அவரால் எழுதப்பட்டிருக்காது என்பதை பலரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

மூன்றாவது தொகுதி

இது 1815 இல் இலங்கை முழுவதுமாக அந்நியர் வசமானது தொடக்கம் 1936 வரையான காலப்பகுதியை பதிவு செய்கிறது. இதை “மஹாவம்சோ” என்று பெயரில் யகிரல பஞ்ஞானந்தாஹிதான நாயக்க தேரோவால் 101வது அத்தியாயத்தின் 31வது செய்யுளிலிருந்து 114வது அத்தியாயம் வரையான 11 அத்தியாயங்களைக் கொண்டது. மகாவம்சத்தின் 2வது தொகுதியில் காலனித்துவ ஆக்கிரமிப்பு கால அரசியல், பொருளாதார, ஆன்மீக, மாற்றங்கள் பற்றிய விபரங்களின் போதாமையால் இந்த 3வது தொகுதியின் அறிமுகத்தில் சில மேலதிக விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.

உதாரணத்திற்கு அதில் ஒரு பந்தி
“மன்னன் ஸ்ரீ விக்கிரம சிங்கவை அரியாசனத்திலிருந்து அகற்றி அன்று ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த அரச உரித்துடைய இளவரசன் முத்துசாமிக்கு விசேட கொடுப்பனவுகளையும் சலுகைகளையும் வழங்கி யாழ்ப்பாணத்தில் குடியேற்றிவிட்டு அந்த அரியாசனத்தை பிலிமத்தலாவவுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக ஆளுனர் பிரடறிக் நோர்த்துக்கும் பிலிமத்தலாவ மகா அதிகாரத்துக்கும் இடையில் 1803 இல் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது”
என்கிறது. இந்தப் பதிவு முக்கியமானது.

நான்காவது தொகுதி

இது 1935-1956 வரையான காலப்பகுதியை பேராசிரியர் நந்ததேவ விஜேசேகர தலைமையிலான குழு இதனை முடித்தது. 115-124 வரையான அத்தியாயங்களைக் கொண்ட இந்த தொகுதிதான் முதன்முதலில் பௌத்த பிக்குகள் தவிர்ந்த வரலாற்றாசிரியர்களின் பங்களிப்போடு எழுதப்பட்டது. மேலும் இது தான் முதன் முதலில் அரசால்  அமைக்கப்பட்ட குழுவால் எழுதப்பட்டு 1986இல் வெளியிடப்பட்ட தொகுதி. இந்தத் தொகுதியிலிருந்து தான் மகாவம்சத்தை எழுதும் நிரந்தர பொறுப்பை அரசு கையேற்கிறது.

இந்த காலப்பகுதியில் அரசாண்ட அரசத் தலைவர்களின் ஆட்சித் தலைவர்களின் வரிசையின்படியே எழுதப்பட்டிருக்கிறது இந்த தொகுதி. அப்படிப்பட்ட தலைமை ஆட்சியாளர்களாக கொள்ளப்பட்ட ஆளுநர்கள், பிரதமர்கள் என்போரின் வரிசை இது தான்.

  • 1933-37 வரை ரெஜினோல்ட் ஸ்டப்ஸ் 
  • 1937-44 வரை அன்ரூ கொல்ட்கொட்
  • 1944-48 வரை மங்க் மேசன் முவர்
  • 1948-52 வரை டீ.எஸ்.சேனநாயக்க
  • 1952-54 – வரை  டட்லி சேனநாயக்க
  • 1954-56 – வரை ஜோன் கொத்தலாவல
  • 1956-1959 – வரை  எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்க
  • 1959 செப்டம்பர் -1960 மார்ச் – வரை டபிள்யு தஹாநாயக்க
  • 1960-65 – வரை சிறிமாவோ பண்டாரநாயக்க
  • 1965-1970 – வரை டட்லி சேனநாயக்க
  • 1970-1977 – வரை சிறிமாவோ பண்டாரநாயக்க
  • 1977-1978 (செப்டம்பர் 7) – ஜே.ஆர்.ஜெயவர்த்தன


இலங்கை 1948 சுதந்திரம் பெற்றபோதும் முழு இறைமை உள்ள நாடாக இருக்கவில்லை. இலங்கையின் அரசியாக எலிசபத் மகாராணியே இருந்தார். அவரின் பிரதிநிதியாக ஆளுநர் இயங்கினார். 1972ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி இலங்கை குடியரசாக பிரகடனப்படுத்தும்வரை அதுவே நீடித்தது. இராணியின் இறுதித் தூதுவராக/ஆளுநராக கடமையாற்றியவர் வில்லியம் கொப்பல்லாவ. குடியரசாக ஆனதும் அவரே நாட்டின் முதலாவது ஜனாதிபதியாக ஆனார். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசாக 08-09-1978 ஆம் ஆண்டு ஆனதும் ஜே.ஆர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆனார்.

ஜே.ஆரால் தான் முதலாவது தடவை கலாசார அமைச்சின் கீழ் 30.01-1978இல் மகாவம்சத்தை தொடர்ச்சியாக பாளி, சிங்கள மொழிகளில் ஆக்கும் பணிக்கான முதலாவது கூட்டம் அமைச்சு காரியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு தான் பேராசிரியர் நந்ததேவ விஜேசேகர அந்தக் குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். மகாநாயக்க தேரர் உள்ளிட்ட 32 பேரைக்கொண்ட தூய சிங்கள பௌத்த குழுவொன்று இந்தப் பணிக்காக தெரிவுசெய்யப்பட்டது. அவர்கள் யார் என்பது பற்றிய பட்டியல் அந்த தொகுதியின் ஆரம்பத்தில் உள்ளது. இந்தப் பணிகளை மேற்பார்வை செய்து வழிகாட்டும் பொறுப்பு அன்றைய கலாசார அலுவல்கள் அமைச்சர் ஈ.எல்.பீ.ஹுலுகல்லேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஐந்தாவது தொகுதி 

இது 1956 முதல் 1978 ஜே ஆரின் இரண்டாவது குடியரசு ஆட்சி தொடங்கும் வரையான காலப்பகுதியை உள்ளடக்கிய 125-129 வரையான 14 அத்தியாயங்களைக் கொண்டது. பேராசிரியர் பெல்லன ஸ்ரீ ஞானவிமல மகாநாயக்க தேரரரின் தலைமையிலான பண்டிதர் குழுவால் தயாரிக்கப்பட்டது இது. அரச கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் இந்தப் பணிகள் முடிந்தன.

இதற்கிடையில் “மகாவம்ச காவியத்தை” அரசுக்கு வெளியில் பல தனியார் வெளியீட்டு நிறுவனங்களும் முன்னைய தொகுதிகளை தமது ஆய்வுரைகளுடன் நேரடியாக வெளியிட்டிருக்கின்றன. பேராசிரியர் ஆனந்த குருகே மகாவம்சத்தின் முதலாவது தொகுதியை தனது சொந்த ஆய்வுடன் சேர்த்து 1986இல் ஆங்கிலத்தில் வெளியிட்டார். அந்த தொகுதி அரசு வெளியிட்ட தொகுதியை விட பிரசித்தம் பெற்றது. 1129 பக்கங்களைக் கொண்ட அந்த முதலாவது தொகுதியில் முதல் 487பக்கங்கள் மகாவம்சம் எழுதப்பட்ட வரலாறு, அதன் மொழி, உள்ளடக்க அர்த்தப்படுத்தல், வியாக்கியானங்கள் என்பன பற்றிய விமரசனபூர்வமான பதிவுகளைக் கொண்டது.


ஆறாவது தொகுதி

இது இரண்டு பாகங்களாக 2018 ஓகஸ்டில் வெளியிடப்பட்டது. அதாவது 32வருடங்களுக்குப் பின் வெளியிடப்பட்டிருக்கிறது. 1978 – 2010 வரையான காலப்பகுதியை 130-133வது அத்தியாயம் வரை பதிவு செய்கிறது. இன்னொரு விதத்தில் சொல்லப்போனால் ஆயுத வடிவம் கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் தோன்றி பின் நசுக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டது எனலாம். அதாவது வரலாற்றை பதிவு செய்யும் இலங்கை அரசின் “இனப்பிரச்சினை பற்றிய” உத்தியோகபூர்வ பார்வை/கொள்கை முடிவு என்ன என்பதை விளக்கும் ஆவணம் எனலாம்.

6வது தொகுதியின் முதலாவது பாகத்தில் 199வது பக்கத்தில் 83 யூலை கலவரம் பற்றிய விபரங்கள் தொடங்குகின்றன. அதில் உதாரணத்திற்கு ஒரு பந்தி...
“தீர்வுக்காக உருவாக்கப்பட்ட மாவட்டசபைகள் சரியாக இயங்கவில்லை. இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காக சர்வகட்சி மாநாட்டை 1983 யூலையில் நடத்த ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்தார். இந்த மாநாடு நடப்பதற்கு முதல் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த வேளையில் பிரபாகரனின் திட்டத்தின் படி இந்த நாட்டில் “கருப்பு யூலை” என்று அழைக்கப்படும் மோசமான நிகழ்வுக்கு காரணமாக ஆன பயங்கரவாதத் தாக்குதலை புலிகள் இயக்கம் நடத்தியது.”
இந்த 6வது தொகுதியில் 10ஆண்டுகள் வீதம் பதவி வகித்த ஜே.ஆர், சந்திரிகா ஆகியோர் ஆட்சி காலம் பற்றி தலா ஒவ்வொரு அத்தியாயங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. ஐந்து வருடங்கள் மட்டுமே ஆண்ட பிரேமதாச, டீ.பீவிஜேதுங்க ஆகியோரின் ஆட்சி காலம் பற்றியும் ஒரே அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதி எழுதி முடிக்கப்பட்ட 2010ஆம் ஆண்டின் போது ஐந்து வருட ஆட்சி காலத்தை முடித்த மகிந்தவுக்கும் அதே ஒரு அத்தியாயம் தான் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றில் உள்ளடக்கம் மாறுபட்ட அளவைக் கொண்டிருக்கின்றன.


புனைவுகளாலும், புரட்டுகளாலும் திரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட “இதிகாசக் காவியம்” இலங்கையின் உத்தியோகபூர்வமான வரலாற்றுப் பதிவாக அங்கீகரிக்கப்பட்டு இன்றும் எழுதப்பட்டுவருகிறது. என்றாலும் மகாவம்சத்தை விட்டால் இலங்கையின் பண்டைய வரலாற்றை அறிதல் இயலாததாகிவிடும். “இலங்கையின் வரலாறு” என்கிற பேரில் ஏனைய இனங்களுக்கு எதிராக “சிங்கள பௌத்தர்களின்” வரலாறு தொடர்ந்தும் பரப்பப்பட்டு வருகிறது. இன்றைய இலங்கையின் நாசத்தில் மகாவம்சம் பரப்பிய கருத்துருவாக்கங்களுக்கு பெரும் பங்கு உண்டு. இனப்பிரச்சினை பற்றி ஆராய்பவர்கள் தமது ஆய்வுகளுக்கு உசாத்துணையாக மகாவம்சத்தை கூடவே சமாந்திரமாக பிரயோகிக்காவிட்டால் அது ஆய்வாக அமைவதில்லை. ஆனால் அப்படி ஆய்வு செய்ய முடியாதபடி இவை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் தான் வெளியிடப்பட்டு வருகின்றன. மூல நூலின் சில தமிழாக்க பதிப்பு மாத்திரம் பரவலாகக் கிடைக்கிறது.
பிற்குறிப்பு:
இக்கட்டுரைக்கான தகவல்களில் பெரும்பகுதி 2018 ஓகஸ்டில் இல் வெளியான மகாவம்சத்தின் 6வது தொகுதியிலிருந்தும், அதற்கு முன்னர் வெளியான 5வது தொகுதியிலிருந்தும் பெறப்பட்டவை.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates