Headlines News :
முகப்பு » » அனர்த்த காலத்தில் புறக்கணிக்கப்படும் பெருந்தோட்டப்பகுதி - சிவலிங்கம் சிவகுமாரன்

அனர்த்த காலத்தில் புறக்கணிக்கப்படும் பெருந்தோட்டப்பகுதி - சிவலிங்கம் சிவகுமாரன்


2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் இடம்பெற்ற மண் சரிவு அனர்த்தம் இலங்கையையே திரும்பிப்பார்க்க வைத்தது. பெருந்தோட்டப்பகுதிகளிலும் இயற்கை அனர்த்தம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவமாக அது பதிவானது.

இலங்கையின் பல பாகங்கள் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு வந்தாலும் நிரந்தரமாக இயற்கை அனர்த்த அச்சுறுத்தல்கள் கொண்ட அபாய வலயங்களாக பெருந்தோட்டப்பகுதிகள் இன்னும் விளங்கி வருகின்றன. இதில் நூற்றுக்கு நூறு வீதம் பாதிப்பை எதிர்நோக்கும் மக்களாக தோட்டத்தொழிலாளர்களே விளங்குகின்றனர். காரணம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட குடியிருப்புகளில் தொடர்ந்தும் இவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இரண்டாவது விடயம் அக்காலத்தில் இயற்கை அனர்த்தம் தொடர்பான எந்தப் பாதுகாப்பு வழிமுறைகளும் இல்லாது மண்சரிவு அபாயம் உள்ள இடங்களில் அமைக்கப்பட்ட இவர்களது குடியிருப்புகள். பலத்த மழை , காற்றினால் நூறு வருடங்கள் பழைமையான இவர்களது குடியிருப்புகள் சேதமுறும் அதே வேளை அபாயகரமான மண் சரிவு பிரதேசங்களிலும் தமது உயிரை பணயம் வைத்து இன்று வரை இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மீரியபெத்த அனர்த்தம் இடம்பெற்றபிறகே பெருந்தோட்டங்களையும் தாண்டி நகர்ப்புறங்களிலும் பாதுகாப்பற்ற குடியிருப்புகள் கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றனவா என அரசாங்கம் கவனத்தை திருப்பியது. கடைத்தொகுதிகளோ அல்லது குடியிருப்புகளோ அமைப்பதற்கு முன்னர் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்ற நியதி கட்டாயமாக்கப்பட்டது. இதே நிறுவனத்தினால் மீரியபெத்த பிரதேசம் அனர்த்த வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன் அங்கிருந்தவர்கள் வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு வேறோர் இடத்தில் குடியிருப்புகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன. ஆனால், இங்கு எழும் கேள்வி என்னவெனில், மீரியபெத்த போன்றே மண்சரிவு அபாய வலயங்களில் வாழ்ந்து வரும் மலையகத்தின் ஏனைய பகுதிகள் குறித்து ஏன் எவரும் அக்கறை கொள்ளவில்லை என்பதாகும்.

அரசியல் பிரமுகர்கள் பேசுகிறார்களா?

அனர்த்தங்கள் இடம்பெற்றவுடன் அவ்விடத்துக்குச் சென்று பார்வையிடுவதுடன் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை சந்தித்து உலர் நிவாரணப்பொருட்களை வழங்கி அதை படங்களாக எடுத்து பத்திரிகைகளில் போட்டு விடுவதுடன் சிலர் தமது பணிகள் முடிந்து விடுகின்றன என்று நினைக்கின்றனர். இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் குடியிருப்புகளை அமைத்துக்கொடுப்பதை உறுதி செய்தல் , அனர்த்தம் இடம்பெற்ற இடத்தில் வாழ்ந்து வரும் ஏனையோரை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கைளை எடுத்தல், குறித்த பிரதேசத்தில் வேறு எங்கேயாவது அனர்த்தம் இடம்பெறக்கூடிய சாத்தியங்கள் உள்ள இடங்களை இனங்காணுதல் போன்ற விடயங்களை இவர்கள் சீர்தூக்கிப்பார்ப்பதில்லை. அதாவது இம்மக்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து எவரும் அக்கறை கொள்வதில்லை. ஏனெனில் பாதுகாப்பு வலயங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டால் மாற்றிடத்தைப்பெற்றுக்கொள்வதில் இழுபறிநிலைகள் உருவாகும் என்பதால் அது குறித்து கதைப்பதற்கு இவர்கள் விரும்புவதில்லை. அரசாங்கத்திடம் இம்மக்கள் எதிர்கொள்ளும் இயற்கை அனர்த்த விவகாரங்கள் குறித்து எவரும் பேசுவதில்லை. இதற்கு சிறந்த உதாரணம் கொஸ்லாந்தை சம்பவம்.

அனர்த்தம் இடம்பெற்ற பிறகு அக்கறை

கொஸ்லாந்தை மீரியபெத்த சம்பவத்துக்குப்பிறகு அங்கு படையெடுத்த அத்தனை அரசியல் பிரமுகர்களும் ஒரு மாதத்தில் அனைத்தையும் மறந்து விட்டனர். இதன் காரணமாக அங்கிருந்து வெளியேறியவர்கள் மாற்று குடியிருப்புகள் அமைத்துக்கொடுக்கும் வரை சுமார் இரண்டு வருட காலம் வரை முகாம்களிலேயே தங்கியிருந்தனர்.

அவர்களுக்கான குடியிருப்புக்களை அமைத்துக்கொடுப்பதிலும் பாதுகாப்பான காணியை பெற்றுக்கொடுப்பதிலும் ஏற்பட்ட இழுபறி நிலைகளே அதற்குக்காரணம். பல உயிர்களைக் காவு கொண்ட அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பலர் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து மனஉளைச்சலுக்குள்ளாகி முகாம்களிலேயே முடங்கிக்கிடந்ததை அப்பிரதேசத்தில் உள்ளவர்களைத் தவிர வேறு எவரும் அறிய சாத்தியமிருக்கவில்லை.

விசேட வேலைத்திட்டம்

இது இவ்வாறிருக்கையில் கடந்த மூன்று மாதங்களாக மலையகப்பகுதிகளில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள் இப்பகுதி வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றாகப் பாதித்திருந்தது. பெருந்தோட்டப் பகுதி வாழ் மக்கள் பணிக்கு செல்ல முடியாத நிலைமைகள் ஏற்பட்டதோடு அவர்களின் குடியிருப்புகளும் மண் சரிவு பாதிப்புக்குள்ளாகின. இந்நிலையில் அனர்த்த காலத்தில் இம்மக்களை பாதுகாக்கவென மலையக மக்களுக்கென விசேட வேலைத்திட்டம் ஒன்றை பிரதமர் ஜனாதிபதியூடாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த வாரம் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் முன்வைத்திருந்தார். பருவகால மாற்றத்தின் போது அனர்த்தங்கள் ஏற்படுவதும் பாதிப்புகள் குறித்து அறிக்கைகளைப்பெற்று நடவடிக்கை எடுப்பதும் ஒரு தற்காலிக நடவடிக்கைகளாகவே பார்க்கப்படுகின்றன.

மழை விட்டதும் அனைவருக்கும் எல்லாம் மறந்து போய்விடும். ஆனால் நாம் பாதிப்புக்கு முகங்கொடுத்தவர்களின் எதிர்காலத்தை கவனத்திற்கொள்ள வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களே இன்று மலையகத்துக்கு அவசியமாகவுள்ளன.

ஆய்வுகள் அவசியம்

சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேயர்களால் தொழிலாளர்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட குடியிருப்புகளில் பல அனர்த்த வலயங்களிலேயே அமைந்திருக்கின்றன. அந்த காலகட்டத்தில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் போன்ற அமைப்பு இருக்கவில்லை. மேலும் தொழிலாளர்களைப்பொறுத்தவரை அவர்களிடமிருந்து உழைப்பை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. ஆகவே, மனிதாபிமானம் என்ற ஒன்று அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை. அதனால் தான் 10X10 அடி என்ற அறையாக லயன் குடியிருப்புக்களை அவர்கள் தொழிலாளர்களுக்கு அமைத்துக்கொடுத்தனர். ஆனால், இன்று அப்படியல்ல தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் காரியாலயங்கள் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கின்றன. இவர்களுக்கு உரிய கோரிக்கைகளை விடுப்பதன் மூலம் மாவட்டத்தில் குறிப்பாக பெருந்தோட்டப்பகுதிகளில் அனர்த்த வலயங்கள் குறித்து அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

பிரதேச செயலகங்கள் ஊடாக

இது குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கேசரி வார வெளியீட்டுக்குக் கருத்துத்தெரிவிக்கையில் குறித்த ஒரு பிரதேசத்தில் அனர்த்த வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்கள் குறித்த தகவல்களை. எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் எங்கு அனர்த்தம் இடம்பெறப்போகின்றது என்பது குறித்து எமக்கு ஆரம்பத்தில் கூற முடியாது. தொடர்ச்சியான மழை காரணமாக ஒரு சில இடங்களில் நில வெடிப்புகள் மண் சரிவுகள் ஏற்பட்டால் அவ்விடத்திற்கு நாம் சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அவ்விடம் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதா இல்லையா என்பது குறித்த அறிக்கைகளை வழங்குவோம். மற்றும் படி பெருந்தோட்டப்பகுதிகளில் அதிகம் மண் சரிவு அபாயங்கள் இடம்பெறுகின்றன. சில நேரங்களில் பிரதேச செயலகங்களில் உள்ள அனர்த்த நிவாரணப்பிரிவினர் அவ்விடங்களுக்குச்சென்று தகவல்களை சேகரித்து எமக்குத் தருவர். ஆனால் பெருந்தோட்டப்பகுதிகளில் அனர்த்த வலயங்களைத் தேடி அறிவது கடினம் எனினும் பிரதேச செயலகங்கள் ஊடாக எமக்கு அவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அது குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும் என்றார்.

செய்வார்களா?

இன்று மாவட்ட அபிவிருத்தி சபை கூட்டங்கள் இடம்பெறுகின்றன. இதில் மாவட்டத்தைப்பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள்,எம்.பிக்கள் ,மாகாண அமைச்சர்கள் ,உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். அரசாங்க அதிபரும் பிரதான இடத்தை வகிக்கிறார். ஆகவே பிரதிநிதிகள் இவ் அனர்த்தம் தொடர்பான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் படி பிரதேச செயலகங்களுக்கு ஏன் அறிவுறுத்த முடியாது? மட்டுமன்றி பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள அனர்த்தம் இடம்பெறும் பகுதிகள் பற்றிய தகவல்களை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடாகப் பெற்று அதன் அறிக்கைகளை நேரடியாகவே ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வரலாமே? தற்போது மலையகத்தின் சகல விதமான அபிவிருத்திக்கும் மலையக அதிகார சபை ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் பிரதிநிதிகள் வெற்றி பெற்றுள்ளனர். ஆகவே இந்த அனர்த்த முகாமைத்துவ செயற் திட்டத்தையும் குறித்த மலையக அதிகார சபையின் ஊடாகவே கொண்டு வருவதற்கு முயற்சித்தால் நேரடி பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளனவே அவை குறித்து பிரதிநிதிகள் செயற்படுவார்களா?

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates