Headlines News :
முகப்பு » , » தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் பிளவா? - மலையகத்தான்

தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் பிளவா? - மலையகத்தான்


தேர்தல் நெருங்கும் காலங்களில் தேசிய அரசியலிலும், மலையக அரசியலிலும் காட்சி மாற்றங்கள் கட்சித் தாவல்கள் என்பன மிகவும் சாதாரணமாக நடைபெறுகின்ற ஒரு சூழலில் இலங்கையின் அரசியல் களம் உள்ளது. மாகாண சபைத் தேர்தல் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் இருக்கின்ற இந்த நேரத்தில் மலையக அரசியல் கடந்த சில வாரங்களாக சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையும் தமிழ் முற்போக்குக்கூட்டணிக்குள் பிளவா என்ற கேள்வியைக்கேட்கத்தூண்டுகிறது.

கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல்கள் ஒரு சில கருத்து முரண்பாடுகள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

இந்த முரண்பாடுகள் அல்லது கசப்புகளுக்கு பிரதான காரணமாக அனைவரும் தற்போது கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் பக்கம் கை நீட்டியுள்ளனர். கடந்த சில மாதங்களாக அவரின் செயற்பாடுகள் அப்படி அமைந்து விட்டனவாக அனைவரும் தெரிவிக்கின்றனர். சரி அவர் அப்படி என்னதான் செய்து விட்டார்?

இ.தொ.காவின் உதவியைக் கோரல் 

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மலையக கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய ஊவா மாகாண கல்வி அமைச்சர்கள் தங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு முன்வர வேண்டும், அதற்கு ஆறுமுகன் தொண்டமான் அனுமதி வழங்க வேண்டும் என்று நிகழ்வொன்றில் பேசியிருந்தார். அது குறித்த செய்திகளும் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன.

இந்தச் செய்தி வெளிவந்த ஒரு சில நாட்களிலேயே ஆறுமுகன் தொண்டமான் தான் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அதற்குப் பதில் அளிக்கும் வகையில் இந்த இரண்டு மாகாண சபை அமைச்சர்களும் ஏன் இதுவரை இணைந்து செயற்பட வில்லை என கேள்வி எழுப்பியதுடன், அவர்களை இணைந்து செயற்படுவதற்கும் பணிப்புரைவிடுத்தார். அதுவும் பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்திருந்தது.

இந்தச் செயற்பாடுகள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் மத்தியில் ஒரு வித சலசலப்பை ஏற்படுத்தியமை என்னவோ உண்மை தான். ஆரம்ப காலத்திலிருந்து மலையக அரசியலானது எதிர்ப்பு அரசியல் செய்தே பழக்கப்பட்டு வந்ததால் இணக்க அரசியல் செய்வது எப்படி என்ற கேள்வி எழுந்ததே இதற்குக்காரணம். கல்வி இராஜாங்க அமைச்சர் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை செய்தால் என்ன? ஏனிவர் இ.தொ.காவின் உதவியைக் கேட்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

எனினும் மத்திய அரசாங்கத்திலிருந்து தனது அமைச்சுக்கு ஒதுக்கப்படும் கோடிக்காணக்கான நிதியை ஏனைய சமூகங்கள் அரசியல் பேதம் மறந்து ஒன்றிணைந்து பெற்றுக்கொள்ளும் அதே வேளை, தான் பிரதிநிதித்துவப்படுத்தும் நுவரெலியா மாவட்டம் மட்டும் இதில் பின் நிற்கின்றதே என்ற ஆதங்கத்திலும் நுவரெலியாவிற்கு அடுத்து அதிக பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகள் உள்ள ஊவா மாகாணமும் தன்னை பயன்படுத்திக்கொள்வதில்லை என்ற அர்த்தத்திலும் கல்வி இராஜாங்க அமைச்சர் அவ்வாறு கூறியிருந்தார்.

குறித்த இரு பிரதேசங்களிலும் என்ன காரணங்களுக்காக தன்னை எவரும் இவ்விடயத்தில் அணுகவில்லை என்பதை அமைச்சர் இராதாகிருஷ்ணன் நன்கறிவார். ஆகையால் தான் தனது பேச்சில் அவர் இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து ஊவா மற்றும் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு சார்பில் மாகாண அமைச்சர்களான ராமேஷ்வரன் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோருடனான சந்திப்பு ஒன்றும் ஏற்பாடாகி இருந்தது.

இதுவும் தமிழ் முற்போக்குக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களான அமைச்சர்கள் திகாம்பரம் மற்றும் மனோ கணேசன் உட்பட ஆதரவாளர்களிடையேயும் புகைச்சலை ஏற்படுத்தியது.வே.இராதாகிருஷ்ணன் இ.தொ.கா பக்கம் இணைவதற்கே பேச்சு நடத்தப்படுகின்றது என்றும் கதைகள் பரவலாயின. ஒரு கட்டத்தில் மலையக கல்வி அபிவிருத்திக்கே இந்தச் சந்திப்பு என காரணம் கூறப்பட்டதால் மௌனம் காக்கப்பட்டது.

ஆனால் அடுத்தடுத்து இடம்பெற்ற நிகழ்வுகள் மேலும் பல விமர்சனங்களை எழுப்பியது.

பாராட்டு விழாவில் மாயமான தலைவர்கள்

கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனுக்கு இலண்டன் பல்கலைக்கழகத்தினால் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டமைக்கு மலையக மக்கள் முன்னணி பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கட்சி பேதம் இன்றி அனைவரும் அழைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் கலந்து கொண்டார்.அவருடன் இ.தொ.கா வின் இன்னும் சில உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.இதன் காரணமாக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அமைச்சர் பழனி திகாம்பரம் இடையில் திரும்பிச் சென்றதுடன் தனது கட்சியின் எந்த ஒரு உறுப்பினரும் கலந்து கொள்ளக் கூடாது என அறிவுறுத்தல் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் காரணமாக நிகழ்ச்சி மேடைக்கு அருகில் வந்த மாகாண சபை உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் உட்பட அந்தக் கட்சியின் அங்கத்தினர்களும் திரும்பி சென்றுள்ளனர்.கூட்டணியின் தலைவர் மனோகணேசனும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.அவர் சார்பாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கலந்து கொண்டார்.இவருடன் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் கோடீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.இதே வேளை மலையக மக்கள் முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அரவிந்தகுமாரும் கலந்து கொள்ளவில்லை.மேற்குறித்த சம்பவங்களுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் கட்சிக்குள் உட்கட்சி பூசல் இருப்பதை இவை வெளிப்படையாக்கின. இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராமும் கலந்து கொள்ளவில்லை என்பது முக்கிய விடயம். கட்சியில் தனக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டமை தொடர்பாக அறிவிக்கப்படவில்லை என்றும் அதனால் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் சார்பாக கூறப்பட்டது.

வீடமைப்பு திட்ட நிகழ்வை புறக்கணித்த தலைவர்கள்

முன்னைய நிகழ்வு கட்சி ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டது என்றாலும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட மலையக வீடமைப்புத்திட்ட நிகழ்விலும் இந்த புறக்கணிப்புகள் இடம்பெற்றுள்ளன. 12.08.2018 அன்று நடைபெற்ற பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட 404 வீடுகள் திறப்பு விழாவில் கூட்டணியின் தலைவர் மனோகணேசன்,பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் கலந்து கொள்ளவில்லை இதற்கும் பல காரணங்கள் கூறப்பட்டாலும் கூட்டணிக்குள் பூசல்கள் இருப்பதை உணர்த்துவதாகவே உள்ளது. மலையகப்பகுதிகளில் எந்த தேசிய நிகழ்வுகள் இடம்பெற்றாலும் அதில் தமிழ் முற்போக்குக்கூட்டணிக்குள் அங்கம் வகிக்கும் மூன்று அமைப்பின் தலைவர்களும் கூடவே அக்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வதை வழக்காகக்கொண்டிருந்தனர். ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாகி விட்டது போன்றுள்ளது. இந்தக் குழப்பங்கள் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை பாதிக்கும் என கூட்டணியின் ஆதரவாளர்கள் கருத்துத்தெரிவிக்கின்றனர். கூட்டணியில் இருக்கின்ற கட்சிகள் தனி வழியில் செல்வார்களா? அல்லது மீண்டும் ஒரு புதிய கூட்டணி உருவாகுமா?அது தேர்தல் கூட்டணியாக மட்டுமே இருக்குமா?இப்படி பல கேள்விகள் மக்கள் முன் எழுந்திருக்கின்றது.

தேர்தலை மையப்படுத்திய கூட்டணியா?
தமிழ் முற்போக்கு கூட்டணியும் தனியாக தேர்தலை மையப்படுத்தி அமைக்கப்பட்ட கூட்டணியாகவே செயற்படுவதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.அதற்கு பல காரணங்களும் இருக்கின்றன. இதுவரை காலமும் கூட்டணியின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு காத்திரமான செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை.மாதாந்த கூட்டமோ கூட்டணியின் எதிர்கால செயற்பாடுகள் அல்லது முன்னெடுப்புகள் தொடர்பாக தலைவர்கள் இணைந்து கலந்துரையாடியதாக எந்தவிதமான தகவல்களும் இல்லை.கூட்டணியாக செயற்பட்ட ஒரு சம்பவம் கலைஞரின் மறைவுக்கு அனைவரும் சென்று வந்தது மாத்திரமே தவிர வேறு எதனையும் காண முடியவில்லை.பிரதமருடன் அல்லது ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் இடம்பெற்றால் தனியே தலைவர் மனோகணேசன் மாத்திரம் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கருத்து தெரிவிக்கின்றார் என்ற விமர்சனங்களும் இருக்கின்றன.அப்படியானால் மற்ற பிரதி தலைவர்கள் கூட்டணியின் ஏனைய உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்படுவதில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாகக் கூட இதுவரையில் எந்தவிதமான கருத்தும் கூட்டணி சார்பாக விடுக்கப்படவில்லை.தனியே அந்தந்தக்கட்சிகள் மட்டும் தமது கருத்துகளை தெரிவித்து வருகின்றன. கடந்த ஜனாதிபதி தேர்தலிலிருந்து வெற்றிக்கூட்டணியாக வலம் வந்துக கொண்டிருக்கும் தமிழ் முற்போக்குக்கூட்டணிக்குள்ளே நிலவும் பூசல்கள் தீர்க்கப்படல் வேண்டும் என்பதே அதன் ஆதரவாளர்களின் கருத்தாக இருக்கின்றது. இவர்கள் பிளவு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டமாகப் போய் விடும் என்பதே உண்மை.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates