Headlines News :
முகப்பு » , , , , , » வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள்! - என்.சரவணன்

வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள்! - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 34

1979 இல் அவசர காலச்சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் என்பவற்றை அறிமுகப்படுத்தி தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் எந்தவொரு காரணமுமின்றி வகை தொகையின்றி சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைத்து சித்திரவதைகளுக்குட்படுத்தி துன்புறுத்திக் கொண்டிருந்தது அரசாங்கம். நான்காம் மாடி, வெலிக்கடை, பனாகொடை, போகம்பரை, நியூமகஸின் சிறைச்சாலைகளிலும் பூஸா தடுப்பு முகாமிலும் பெரும் சிறைச்சாலையை உருவாக்கி ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுக்கொண்டிருந்த காலம் அது.

பொலிஸார் மீது தாக்குதல், வங்கிக்கொள்ளை உட்பட பல குற்றச்சாட்டுகளின் பேரில் குட்டிமணி, 1981 ஏப்ரல் ஐந்தாம் திகதி படகு ஒன்றின் மூலம் தமிழ்நாடு செல்ல முயற்சிக்கும் போது, அரசாங்கப் படைகளால் கைது செய்யப்பட்டார்.அவரோடு தங்கதுரை என்பவரும், தேவன் என்பவரும் கைதுசெய்யப்பட்டார்கள். குட்டிமணி ஜெகன் ஆகியோருக்கு 04.02.1982 அன்று உயர்நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

சிறையில் இருந்த குட்டிமணியை 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் கூட்டணி சார்பாக போட்டியிடச் செய்வதற்கான நிர்ப்பந்தம் எழுந்திருந்தன. கூட்டணி அதை செய்யாவிட்டாலும் திருநாவுக்கரஸின் மரணத்தைத் தொடர்ந்து அவரது பாராளுமன்ற வெற்றிடத்துக்கு குட்டிமணியை நியமித்து ஏகமானதாக தீர்மானம் கூட கூட்டணி நிறைவேற்றியிருந்தது. வர்த்தமானிப் பத்திரிகையிலும் கூட அந்தத் தெரிவு வெளியானது. ஆனால் குட்டிமணியை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள விடவில்லை சிறைச்சாலை ஆணையாளர் பிரிய தெல்கொட. அதை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்பட்ட போது நீதிமன்றம் தமக்கு அதற்கான அதிகாரம் இல்லையென்று தள்ளுபடி செய்தது. பின்னர் குட்டிமணி இராஜினாமா செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டது.


குட்டிமணி நீதிமன்ற உரை
நீதிமன்றத்தின் மரண தண்டனை தீர்ப்புக்கு முன்னர் தனது கருத்தை தெரிவிக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. குட்டிமணி, ஜெகன் ஆகியோரின் உரை தமிழ் இளைஞர்கள்  ஏன் ஆயுதமேந்த தள்ளப்பட்டார்கள் என்பதை விளக்குகின்ற ஒரு முக்கிய உரையாக அமைந்தது.

தமிழ் மக்களின் உணர்வுகளையும், போராட்டத்திற்கான நியாயங்களையும் புரிந்துகொண்ட சிங்கள ஜனநாயக சக்திகள் இந்த உரையை சிங்களத்திற்கு மொழிபெயர்த்து பரவலாக பல தேவைகள் வெளியிட்டு வந்திருகிறார்கள்.
“நான் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. நான் ஒரு நிரபராதி. பொலிஸ் மற்றும் இராணுவத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட என்னை, அவர்கள் சித்திரவதை செய்து சில வாக்குமூலங்களில் கையெழுத்துப் பெற்று, அவை எனக்கெதிரான சான்றாக இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டு, நான் குற்றவாளியாக்கப்பட்டிருக்கிறேன்.
இந்த நீதிமன்று இன்று வழங்கியுள்ள ஆணையைப் பற்றி, நான் என்னுடைய சில அடிப்படை எண்ணங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். இன்று இந்த வழக்கிலே, இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பானது தமிழீழம் அமைக்கப்படுவதற்கான புதிய உத்வேகத்தையும் வளம்மிக்க உரத்தையும் ஊக்கத்தையும் வலுவான காரணங்களையும் வழங்கும்.
இன்னும் வேறும், தமிழ் இளைஞர்களும் இந்த நீதிமன்றின் முன் பொய்க் குற்றச்சாட்டுகளின் பெயரில் நிற்கவைக்கப்படுவார்கள். இது தொடருமானால், விதிக்கப்படும் தண்டனையானது தமிழர்களின் விடுதலைக்கான ஊக்கமாக அமையும்.
வெள்ளையர் இந்நாட்டைச் சிங்களப் பிரபுக்களிடம், தமிழ் மக்கள் தலைவிதியையும் சேர்த்து ஒப்படைத்துச் செல்கையிலேயே தமிழ் மக்கள் விடுதலையைக் கோரிவிடவில்லை. மாறாகச் சிங்களப் பிரபுக்கள் எம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக்க மாட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்தது இயல்பே. இதன் விளைவே தமிழ்த் தலைவர்கள், தம் இனம் நசிந்து விடக்கூடாது என்ற தீர்க்கதரிசனத்துடன் கூடுதல் பிரதிநிதித்துவம் போன்ற விடயங்களை அப்போது வலியுறுத்தினர். அவர்கள் சந்தேகங்கள் தவறான அடிப்படையில் ஒன்றும் எழுந்துவிடவில்லை என்பதை வலியுறுத்தும் வகையிலேயே அமைந்தது, மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்பு. அடுத்து வந்த கால் நூற்றாண்டு காலமாக, தமிழ் மக்களது உரிமைகள் மட்டுமல்லாது மரபுவழிப் பிரதேசங்களும் தமிழ் மக்கள் தலைவர்களினது கடும் எதிர்ப்புகளையும் மீறித் திட்டமிட்ட முறையில், சிங்கள அதிகார அமைப்பு முறையினால் பறிக்கப்பட்டு வந்தமை ஒன்றுமே நடக்காதவை அல்ல; இக்காலகட்டத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களும் தமிழ்த் தலைவர்களும் தமது எதிர்ப்புகளை அகிம்சை முறையில் மிக நாகரிகமாகவும் உறுதியுடனும் சத்தியாக்கிரக வழிகளிலும் காட்டினர். ஆனால் நடந்தது என்ன? நிராயுதபாணிகளான தலைவர்கள் மீது முதன் முதலில் காலிமுகத்திடலில் ஆயுதக் காடையர்கள் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பின்னர் யாழ். செயலகத்தின் முன்பாக அப்பாவி மக்கள், தலைவர்கள் அடங்கிய சத்தியாக்கிரகங்கள் மீது ஸ்ரீ லங்காவின் ஏவல் இராணுவம் தனது காட்டுமிராண்டித்தனத்தைப் பிரயோகித்தமை நாகரிக உலகு தலை நிமிர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய செய்கையல்ல. இப்படி ஒன்றா இரண்டா? கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக இத்தீவின் வாழ் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட திட்டமிட்ட காடைத்தனங்கள், வன்முறைகள் எண்ணிக்கையில் அடங்கிவிடக் கூடியவையா? தமிழ் மக்களின் ஜீவனோபாய உடமைகள் மட்டுமா அவ்வப்போது சூறையாடப்பட்டன? எத்தனை தமிழ்ப் பெண்களின் கற்புகள் அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டன? காலங்காலமாய் எங்களால் பேணிப் போற்றப்பட்டு வந்த கலைப் பொக்கிஷங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றிற்கெல்லாம் சில இலட்சம் ரூபாய்களால் ஈடுகட்டி விடலாம் என்பது எத்தகைய கேலிக்கிடம்” என்று சொன்ன தங்கதுரை, சுதந்திர இலங்கையில் தமிழ் மக்கள் சந்தித்த அடக்குமுறையை விளங்கப்படுத்தியிருந்தார்.

மேலும், “நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அரை நூற்றாண்டுப் பூர்த்தியைக் கொண்டாடிய அதேவேளையில் இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தலைவர்களை, அதே நாடாளுமன்ற உறுப்பினர்களை, அர்த்தசாமத்தில் இராணுவ வேட்டையாடிப் பிடிப்பதும் அவர்களை வீட்டுடன் வைத்தே தீயிட்டுக் கொளுத்த முயன்றமையும் உங்கள் ஜனநாயகப் பாராம்பரியத்தில் எத்தனையாவது அத்தியாயத்தில் சேர்த்துக் கொள்ளப் போகின்றீர்கள்?” என்று கேள்வியெழுப்பிய தங்கதுரை, “பிரிவினை கோருகின்றோம், நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றோம் எனச் சொல்கின்றீர்களே, நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம்? ஐரோப்பியரால் கைப்பற்றப்பட்ட எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. அதனை நாம் இணைப்பு என்ற பெயரில் யாரிடமும் தாரைவார்க்கவும் இல்லை. ஆக்கிரமிப்புகள் வேறுபட்ட அதிகார அமைப்புகளினால் கைமாறிப் பொறுப்பேற்கப்பட்டு வரும் நிலையே இன்னும் நீடிக்கின்றதே அன்றி எம்பூமியை நாமே நிர்வகிக்கும் நிலை எம்வசம் இன்னும் வரவில்லை. இந்நிலையில் நாம் கோருவது விடுதலையே அன்றி துண்டாடல் அல்ல. இதனை நாம் கோருவது நிச்சயம், குறுகிய மனப்பான்மையான ஒரு செய்கையன்று” என்று தம்முடைய விடுதலைக் கோரிக்கைக்கான நியாயத்தை முன்வைக்கிறார். 
மேலும், “இதை நாம் பெறுவதன் மூலம் நிறைவேறியது எமது இலட்சியம் மட்டுமல்ல, இதன்மூலம் சிங்கள மக்களுக்கும் பெரும் நன்மையைச் செய்தவர்களாவோம். எப்படியெனில், அதன்பின் இனப் பிரச்சினையைப் பூதாகரமாக்கி, அரசியல் பிழைப்பு நடத்தல் என்பது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாது. இதனால் சிங்கள மக்கள் மொழி தவிர்த்த ஏனைய விடயங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையைப் பூரணமாக உணரவும் தமக்கு உண்டான அரசியல், பொருளாதார சமூகத் தளைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் முன்வருவார்கள். 
எந்த ஒரு தேசிய இனமும் தனது இறைமையை நிலை நிறுத்துவதிலும் பறிக்கப்பட்டிருப்பின் அதை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதை தேசத் துரோகம் என்றோ, பயங்கரவாதம் என்றோ உலகில் எந்த ஒரு சாசனமும் கூறிவிடவில்லை.
எமது உரிமைகளை நீங்கள் ஆரம்பத்திலேயே அங்கிகரித்திருப்பின் இந்நிலை இத்தீவில் தோன்ற வாய்ப்பில்லை. அங்கீகரியாதது மட்டுமல்ல, மாறாக, கடந்த 35 ஆண்டுகளாக உங்கள் அரசியல் சோரம் போகும் நிலையை மறைப்பதற்கு, பதவி நாற்காலிகளைத் தக்க வைத்துக்கொள்வதற்கு, அவ்வப்போது அப்பாவிச் சிங்கள மக்கள் மனத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான விஷவிதையை ஊன்றி வளர்த்துள்ளீர்கள். 
ஆனால், சிங்கள மக்கள் உங்கள் நச்சு வலையில் முற்றாக விழுந்துவிடவில்லை என்பதை, உங்களால் உருவாக்கப்பெற்ற இனக் கலவரங்களின்போது, தமிழ் மக்களுக்குத் தம்மால் முடிந்த பாதுகாப்புகளை வழங்கிக் காடையர்களிடம் இருந்தும், உங்கள் ஏவல் படைகளினது கொடுமைகட்குத் தமிழினத்தை முற்றாகப் பலியிடாது அனுப்பியதன் மூலம் நிரூபித்து வைத்துள்ளனர்” என்று பெரும்பான்மை மக்களிடையே இன மைய அரசியலைத் தூண்டும் இலங்கையின் அரசியல் கலாசாரம் மீதான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
அத்துடன், “உங்களிடம் தமிழ் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள்? பொருளாதாரத்தையோ அன்றி வேலைவாய்ப்பையோ அல்ல. அவைகளை உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றும் நிறைவேற்றப் போவதுமில்லை என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். இல்லை, இவைகளை எல்லாம் நீங்கள் வழங்க முன்வந்தாலும்கூட, இத்தீவில் தமிழர் தொடர்ந்து தமிழராக வாழ்வதற்கு என்ன உத்தரவாதம் உங்களினால் வழங்க முடியும்? அது ஒன்றும் அல்லாத, மீதி எந்தச் சுபீட்சமும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அந்நியமானவையே” என்று தமிழ் மக்கள் வேண்டுவது விடுதலைதான் என்ற தன்னுடைய கருத்தையும் முன்வைத்தார்.
"நாங்கள் இனவாதிகள் அல்லர். நாம் சிங்கள மக்களின் உரிமைகளைப் பறிக்கவில்லை. நாம் நமது போராட்டத்தில் சிங்கள மக்களை அன்புடன் நினைவுகூர்கிறோம். அவர்களின் நியாயமான போராட்டங்களின்போது நாம் நமது ஆதரவைத் தெரிவிக்கிறோம். அவ்வாறே நமது விடுதலைப் போராட்டத்துக்குச் சிங்கள மக்கள் ஆதரவு தரவேண்டும். அடுத்தவரின் சுதந்திரம் தொடர்பில் அக்கறையற்ற மனிதன் தனது சுதந்திரத்தையும் குழிதோண்டிப் புதைக்கின்றான். நமக்கு ஏற்பட்ட அதே நிலை, வேறொரு நாளில் முழு இலங்கை மக்களுக்கும் ஏற்படக்கூடும். அன்றைய தினம் ஆனையிரவு வதைமுகாம் ஹம்பந்தொட்டைக்குக் கொண்டுசெல்லப் படலாம். குருநகர் வதைமுகாம், குருணாகலைக்கு எடுத்துச் செல்லப் படலாம். இன்று அவற்றில் சித்திரவதைகளை அனுபவிக்கும் தமிழ் இளைஞர்களுக்குப் பதிலாக அன்று சிங்கள இளைஞர்கள் சித்திரவதைகளை அனுபவிக்கவேண்டிவரலாம்"
நான் தமிழீழத்திலேயே தூக்கிலிடப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன். என்னுடைய முக்கிய உறுப்புகள், அவை தேவைப்படுவோர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன். என்னுடைய உடல் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்... எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும். ”
இதைத் தான் குட்டிமணி தனது கடைசி ஆசையாக தெரிவித்திருந்தார்.


புத்தரின் முன்னால் குவிக்கப்பட்ட சடலங்கள்
வெலிக்கடை சிறைச்சாலையில் அவர்கள் அடைக்கப்பட்டார்கள்.
பல மோசமான குற்றச்செயல்களுக்காக தண்டனை விதிக்கப்பட்ட பல சிங்களக் கைதிகளுடன் இந்த தமிழ் அரசியல் கைதிகளும் வைக்கப்பட்டிருந்தனர். இனமோதல்களை தவிர்ப்பதற்காக தமிழ்க் கைதிகளும் சிங்களக் கைதிகளும் வெவ்வேறு சிறைகளில் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். குட்டிமணி 34 தமிழ்க் கைதிகளுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். 

83 யூலை 24 அன்று நாடெங்கிலும் கலவரம் பரவத் தொடங்கியதும் அந்த ஆவேசம் வெலிக்கடை சிறைச்சாலையிலும் எதிரொலித்தது. 25ஆம் திகதியன்று அங்கு குற்றவாளிகளாக இருந்த சிங்கள இனவாதிகளின் இனவெறிக்கு தீனி போடும் வகையில் தமிழ்க் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கதவுகளைத் திறந்து விட்டனர். 

குட்டிமணி, தங்கத்துரை போன்றவர்கள் தங்கியிருந்த பி 3 என்னும் சிறைப்பிரிவிலேயே கொலைகள் ஆரம்பித்தன.  அந்தப் பிரிவில் மரண ஓலங்கள் கேட்டதே தவிர வேறொன்றையும் எங்களால் பார்க்க முடியவில்லை என வேறு பகுதிகளில் இருந்து தப்பிய ஈழப் போராளிகள் பின்னர் கூறினர். 

வெலிக்கடை சிறைவாசலுக்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது எச் மண்டபம். இம்மண்டபத்தில் கொல்லப்பட்ட இளைஞர்களின் உடல்களையும் அரைகுறை உயிருடன் இருந்த இளைஞர்களின் உடல்களையும் இழுத்து வந்து புத்தர் சிலையடியில் குவிப்பதை எச் மண்டபத்தின் இரண்டாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக ஜெயக்கொடி என்பவர் பார்த்து கொண்டிருந்தார். குட்டிமணியின் உடல் இழுத்து வரப்பட்டபோது அவரின் உடலில் அசைவுகள் இருந்ததென்றும், அப்போது அவர் அரை உயிருடன் இருந்ததாகவும் ஜெயக்கொடி என்கிற கைதி கூறுகிறார். சோமு என்றழைக்கப்படும் நடராஜா ஜெயக்கொடி ஈ.பீ.ஆர்.எல்.எப் இயக்கத்திலிருந்தவர். அவர் பின்னர் நேரில் கண்ட இந்த கொடுமைகளை ஒரு நூலாகவே வெளியிட்டிருந்தார்.


குட்டிமணி மட்டுமல்ல அவரது கண்கள் கூட தமிழீழத்தைப் பார்த்துவிடக்கூடாது என்பதில் வெறியாக இருந்தனர் அந்தச் சிங்களக் கைதிகள் குட்டிமணியை புத்தர் சிலையடியில் இழுத்துக் கொண்டு வந்து போடப்பட்டதன் பின்னர் கண்கள் இரண்டும் கூரிய ஆயுதம் கொண்டு தோண்டியெடுத்து கால்களில் போட்டு மிதித்து அழித்தத்தை ஏனைய சிங்களக் கைதிகள் கைதட்டி ஆரவாரித்தனர்.  இன்னொரு கைதி வெறித்தனமாக குட்டிமணியின் ஆண்குறியை வெட்டி வீசினான். ஏனைய கைதிகள் அவரின் உடலை குத்தி கிழித்தனர். சுமார் பதினைந்துக்கு மேற்பட்ட கைதிகள் குட்டிமணியின் இரத்தத்தை தமது உடலில் பூசிக் கும்மாளமடித்தனர். குவிக்கப்பட்ட உடல்கலில் உயிர்போகாமல் துடித்துக் கொண்டிருந்த உடல்களில் இரும்புக் கம்பிகளைச் செருகிக் கொன்றனர். ஏனைய தமிழ் இளைஞர்களின் தலைகள் கைகள் கால்கள் என வெட்டிப் புத்தர் சிலையடியில் குவித்தனர் என்பன போன்ற தகவல்களை ஜெயக்கொடி கூறினார். குட்டிமணியோடு சேர்த்து படுகொலை செய்யப் பட்ட 35 தமிழ்க் கைதிகளின் உடல்களை வெளியில் எடுத்துச் சென்று சிறைச் சாலை முற்றத்தில் இருந்த புத்தர் சிலைக்கு முன்னால் போட்டு விட்டு ஆனந்தக் கூத்தாடினர்.

இந்தப் படுகொலைகளில் சம்பந்தப்பட்ட முக்கியமான நபர் சேபால ஏக்கநாயக்க என்பவர். இன்றும் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு வீரனாக கொண்டாடப்படுகிறார். அது இந்தப் படுகொலைகளுக்காக அல்ல. 1982 ஆம் ஆண்டு Alitaliya என்கிற இத்தாலிய விமானத்தைக் கடத்தி பிரசித்தம் பெற்ற குற்றவாளியைப் பற்றி வீரப்பிரதாப கதைகளாக பல சிங்களக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ஆனால் சேபால நடத்திய இந்த மிருகத்தனம் பற்றி சிங்களத்தில் எந்தப் பதிவுகளையும் தேடிக் கண்டு பிடிக்கமுடியாது.

வெலிக்கடை சிறையின் பி 3 பிரிவிலும், டி 3 பிரிவிலும் இருந்த 35 பேர் 1983 ஜூலை 25ஆம் திகதி கொல்லப்பட்டனர். இந்தளவு கொடூரம் நிகழந்தும் சிறையதிகாரிகளால் அந்தக் கொலைஞர்கள் பாதுகாக்கப்பட்டதால் ஒரு நாள் கழித்து அதாவது 27ஆம் திகதி அடுத்த கட்ட கொலைகள் அரங்கேறின. அதில் காந்தியம் நிறுவனர் டாக்டர் இராஜூசந்தரம் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 53 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டனர். இறுதியில் இராணுவம் வந்து கைதிகளுடன் மோதி கண்ணீர்புகை எரிந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இல்லையென்றால் மேலும் அங்கிருந்த எஞ்சியவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்.

டக்ளஸ் தேவானந்தா உட்பட 19 தமிழ் கைதிகள் மாத்திரமே இந்தப் படுகொலைகளிலிருந்து காயங்களுடன் உயிர் தப்பினர்.


அப்படி தப்பிய எஞ்சிய தமிழ்க் 19 கைதிகள்
1. அந்தோனிப்பிள்ளை (அழகிரி)
2. மாணிக்கம் தாசன்
3. கணேசலிங்கன்
4. ஸ்ரீதரன் 
5. டக்ளஸ் தேவானந்தா
6. தம்பாபிள்ளை மகேஸ்வரன்
7. சிவசுப்பிரமணியம்
8. ஞானசேகரம் (பரந்தன் ராஜன்)
9. பாபுஜி
10. டேவிட் ஐயா
11. வண .குரு சின்னராஜா
12. கோவை மகேசன்
13. ஜெயகுலராஜா
14. மு.நித்தியானந்தன்
15. ஜெயதிலக்கராஜா
16. டொக்டர் தர்மலிங்கம்
17. வண.பிதா சிங்கராயர்
18. யோகா எனப்படும் எஸ்.யோகராஜா 
19. (பெயர் ஆயியப்படவில்லை)

கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் உடல்களை அவர்களின் உறவினர்கள் எவரும் பார்ப்பதற்கு அனுமிக்கப்படவில்லை.

இன்றுவரை இந்தப் படுகொலைகளை நடத்திய சிங்களக் கைதிகளுக்கு எதிராகவோ, அதனை செய்யத் தூண்டிய, ஒத்துழைப்பு வழங்கிய சிறைப் பாதுகாவலர்கள், அதிகாரிகளுக்கு எதிராகவோ எந்த விசாரணையும் மேற்கொண்டதில்லை இலங்கை அரசு.


வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்டவர்கள்.
ஜூலை 25 அன்று கொல்லப்பட்டவர்கள்.
1. தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல்
2. குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன்
3. ஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன்
4. தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம்
5. சிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம்
6. செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன்
7. அருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும்செல்லதுரை ஜெயரெத்தினம்
8. அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன்
9. ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம்
10. சுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப்பிள்ளை சுரேஷ்குமார்
11. சின்னதுரை அருந்தவராசா
12. தேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார்
13. மயில்வாகனம் சின்னையா
14. சித்திரவேல் சிவானந்தராஜா
15. கணபதிப்பிள்ளை மயில்வாகனம்
16. தம்பு கந்தையா
17. சின்னப்பு உதயசீலன்
18. கணேஷ் என்றும் கணேஷ்வரன் என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன்
19. கிருஷ்ணபிள்ளை நாகராஜா
20. கணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம்
21. அம்பலம் சுதாகரன்
22. இராமலிங்கம் பாலச்சந்திரன்
23. பசுபதி மகேந்திரன்
24. கண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன்
25. குலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம்
26. மோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார்
27. ராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார்
28. ராஜன் கோதண்டபிள்ளை தவராஜலிங்கம்
29. கொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார்
30. யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன்
31. அமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம்
32. அந்தோணிப்பிள்ளை உதயகுமார்
33. அழகராசா ராஜன்
34. வேலுப்பிள்ளை சந்திரகுமார்
35. சாந்தன் என்று அழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார்
ஜூலை 27 அன்று கொல்லப்பட்டவர்கள்.
1. தெய்வநாயகம் பாஸ்கரன்
2. பொன்னம்பலம் தேவகுமார்
3. பொன்னையா துரைராசா
4. குத்துக்குமார் ஸ்ரீகுமார்
5. அமிர்தநாயகம் பிலிப்குமாரகுலசிங்கம்
6. செல்லச்சாமி குமார்
7. கந்தசாமி சர்வேஸ்வரன்
8. அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை
9. சிவபாலம் நீதிராஜா
10. ஞானமுத்து நவரத்தின சிங்கம்
11. கந்தையா ராஜேந்திரம்
12. டாக்டர் ராஜசுந்தரம்
13. சோமசுந்தரம் மனோரஞ்சன்
14. ஆறுமுகம் சேயோன்
15. தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன்
16. சின்னதம்பி சிவசுப்பிரமணியம்
17. செல்லப்பா இராஜரட்னம்
18. குமாரசாமி கணேசலிங்கன்

குட்டிமணி பற்றிய காலவரிசைப்படி சில குறிப்புகள்
1969 இல் குட்டிமணி தங்கத்துரை தலைமையில் தமிழர் விடுதலை இயக்கம் (Tamil Liveration Organisation) ஆரம்பிக்கப்பட்டது. அதுவே பின்னர் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) வாக ஆனது. அதனைத் தொடர்ந்து கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்களுக்காக குட்டிமணி இலங்கைப் பொலிசாரால் தேடப்பட்டுவந்து வந்தார்.

1973 தமிழகத்துக்கு தப்பியோடியிருந்த வேளை இலங்கை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க குட்டிமணி 1974இல் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டார். அப்போது கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியிலிருந்தது.

1975 இல் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையின்படி விசாரணையின்றி தொடர்ந்தும் இலங்கைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 47 கைதிகளின் பட்டியலில் குட்டிமணியின் பெயரையும் அறிவித்திருந்தது.

1977 குட்டிமணி விடுதலை செய்யப்பட்டார்.

25.03.1981 நீர்வேலி வங்கிக் கொள்ளையின் (8 மில்லியன்) பிரதான சூத்திரதாரியாக குட்டிமணியை இலங்கை அதிகாரிகள் அறிவித்தனர்.

05.04.1981 குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் தப்பிச் படகொன்றின் மூலம் தமிழகத்துக்கு தப்பிச் செல்லும் போது கைது செய்யப்பட்டனர்.

13.08.1982 குட்டிமணி, ஜெகன் ஆகியோருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.

14.10.1982 குட்டிமணியை வட்டுக்கோட்டைத் தொகுதியின் (மரணமடைந்த திருநாவுக்கரசின் வெற்றிடத்துக்கு) பாராளுமன்ற உறுப்பினராக கட்சி நியமித்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்தார்.

16.10.1982 குட்டிமணியை சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை என சிறைச்சாலை ஆணையாளர் பிரியா தெல்கோட அறிவிப்பு

17.10.1982 குட்டிமணிக்கு பாராளுமன்ற உறுப்பினராகும் சட்ட ரீதியான தகுதி கிடையாதென அரச தரப்பில் சுட்டிக் காட்டல்

24.01.1983 பதவி வெற்றிடமடைந்து மூன்று மாதத்துக்குள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் சந்தர்ப்பம் அற்றுப் போனதால் குட்டிமணி பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிலிருந்து இராஜினாமா செய்துகொண்டார். 

04.02.1983 சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன குட்டிமணி உள்ளிட்ட சில கைதிகளுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்களித்து தனது அதிகாரத்தின் பேரில் ஆயுள் தண்டனையாக குறைத்தார்.

25.07.1983 குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ்க் கைதிகள் வெலிக்கடைச் சிறையில் சிறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஏனைய சிங்களக் கைதிகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். தான் கொல்லப்பட்டாலும் தனது கண்களை கண்களை இழந்த ஒருவருக்கு கொடுப்பதன் மூலம் எதிர்கால தமிழீழத்தைப் காண வேண்டும் என்று தனது இறுதி ஆசையாக கூறியிருந்ததால் குட்டிமணியின் கண்கள் இரண்டும் குடைந்து எடுக்கப்பட்டு கால்களில் போட்டு நசுக்கி அழித்தனர் சிங்களக் கைதிகள்.



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates