Headlines News :
முகப்பு » , , » கருக்கலைப்பு: என் உடல்! என் தெரிவு! என் உரிமை!- என்.சரவணன்

கருக்கலைப்பு: என் உடல்! என் தெரிவு! என் உரிமை!- என்.சரவணன்


“பெண்களுக்கு கர்ப்பப்பை இருப்பதால்தான், தாய்மை என்பதை வலியுறுத்தி, அவர்களை ஏமாற்ற, ஆண்களால் முடிகிறது. எனவே, பெண்களே உங்களின் கர்ப்பப்பைகளை தூக்கி எறியுங்கள்” என்று எச்சரித்தார் தந்தை பெரியார்.

கருக்கலைப்புக்கு அனுமதியளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த உத்தேச சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அங்கீகரித்திருக்கிறது. இனி நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறவேண்டியது தான் மிச்சம். கடந்த ஆட்சி காலங்களில் இதற்கான சட்டத்தைக் கொணர்வதற்கான முயற்சிகளை இழுத்தடித்து இறுதியில் பாராளுமன்றத்துக்கு கூட அதைக் கொண்டுவர விடவில்லை. அதே பாணியில் இம்முறையும் இதற்கான சட்டமூலம் இழுத்தடிக்கப்பட்டுவருகிறது.

இம்முறை இத்தகைய இழுத்தடிப்பு எதுவுமின்றி உடனடியாக சட்டமூலத்தை நிறைவேற்றவேண்டும் என்று பல பெண்ணுரிமை இயக்கங்கள் குரல் கொடுத்துவருவதுடன், ஏனைய ஜனாக சக்திகளின் ஆதரவையும் கோரியிருக்கிறது.

பாதுகாப்பான கருக்கலைப்புக்கான தடைகளை இலங்கை நீக்க வேண்டும் என்று ஐ.நா சபையின் பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாரபட்சங்களையும் இல்லாது செய்தவற்கான சமவாயம் (CEDAW) மார்ச் மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கோரியிருந்தது.

அதேவேளை இதுவும் முழுமையான அனுமதியல்ல. பாலியல் வன்முறையால் தரிக்கும் கர்ப்பம் மற்றும் மரபணு பிறழ்வுக்குள்ளான கருக்களை கலைப்பதற்கும் (அந்தத் தாயின் விருப்பத்தின் பேரில்) மாத்திரமே சட்ட ரீதியாக அனுமதியளிக்கும் வகையில் இச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த இரு காரணங்களைக் கூட இலங்கையின் மதத் தலைமைகளை எதிர்க்கத் தொடங்கியுள்ளன.

தற்செயலாக/திட்டமிடப்படாத நிலையில் கர்ப்பம் தரித்துவிடுதல் என்பது உலகில் சாதாரணமாக நிகழும் போக்கும். அடுத்தது தவறான பாலுறவின் காரணமாக, பாலியல் வல்லுறவின் காரணமாக, சிறுவர் துஷ்பிரயோங்கங்களின் காரணமாகவும் கருவுருதல் நிகழ்ந்துவிடுகிறது. அப்படியான சந்தர்ப்பங்களில் சட்டம் அதனை கலைக்க அனுமதி மறுப்பதால் மிக மோசமான விளைவுகளை சம்பந்தப்பட்ட பெண்களும், இந்த சமூகமும் எதிர்கொண்டு வந்திருக்கிறது.

கத்தோலிக்க பேராயர் சம்மேளனம் ஒக்ஸ்ட் 26 அன்று தாம் இதனை வன்மையாக எதிர்ப்பதாக அறிக்கைவெளியிட்டிருந்தது. கரு உருவானதிலிருந்து மனித உயிர் ஆரம்பித்துவிடுகிறதென்று கத்தோலிக்க சபை நம்புவதால் எவருக்கும் உயிரைப் பறிக்கும் உரிமை எவருக்கும் கிடையாதென்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அஸ்கிரி விகாரையின் தரப்பிலிருந்து வேதாகம தம்மானந்த ஹிமி வெளியிட்டிருந்த கருத்தில் தமது தரப்பிலும் கருக்கலைப்பு சட்டத்துக்கு எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

தற்போது கத்தோலிக்க, பௌத்த, இஸ்லாமிய மதத் தலைமைகளே இந்த விடயத்தில் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. கடந்த காலங்களைப் போல அரசு இந்த சக்திகளுக்கு அடிபணியாமல் கருக்கலைப்பு அனுமதிக்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டு வரவேண்டும். மக்கள் பிரதிநிதிகள் இதனை பொறுப்புடன் ஆதரிக்க வேண்டும். மதத் தலைவர்களுக்கு இதனை எதிர்க்க தமது மத நம்பிக்கைகள் பயன்படுமேயொழிய தமது பெண்களின் உடல், உள ரீதியிலான துன்பத்துக்கு தீர்வு சொல்ல முடியாது.

கருக்கலைப்பை சட்டமாக்கும் யோசனையானது கருவுற்ற பெண்களை இழுத்துப்பிடித்து கருவைக் கலைப்பதற்கான லைசன்ஸ் அல்ல. கருவைச் சுமக்கும் பெண் தனது அல்லது குழந்தையின் நலன் கருதி எடுக்க தனக்கு இருக்கும் உரிமை பற்றியதே பற்றியதே அது.


கருவைக் கலைப்பதற்காகவே நாடு முழுவதும் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையங்கள் இது வரை இயங்கி வந்துள்ளன. அது போல தொழில்முறை சாராதோரும் கூட இந்த கருக்கலைப்பில் ஈடுபடுவதால் பல பெண்கள் பாதிக்கப்பட்டும் இருக்கிறார்கள். இது சட்டவிரோதமாக்கப்பட்டிருப்பதால் சமூக அளவிலும் இதனை ஒரு குற்றச்செயலாகவே பார்க்கப்பட்டு வந்திருகிறது.

இலங்கையில் வருடாந்தம் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கர்ப்பம் தரிக்கும் போது நாளாந்தம் ஏறத்தாள 658க்கும் மேற்பட்ட கருக்கலைப்பு இடம்பெறுவதாக அறியப்படுகிறது. அதாவது வருடாந்தம் கிட்டத்தட்ட 2,50,170 "சட்டவிரோத" கருக்கலைப்புகள் மேற்கொள்ளட்டுவருகின்றன. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின் படி கருக்கலைப்பு செய்து கொள்வோரில் ஏறத்தாள 24,000 பேர் குறைந்த வயதுடைய சிறுமிகள் என்றும் தெரிவித்துள்ளது. இவர்களில் அதிகமானோர் குருநாகல், தம்புள்ள போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் என்றும் அறியப்படுகிறது. பெண்களும் பணிபுரியத் தொடங்கிய பின்னர் அவர்களின் பெண் பிள்ளைகள் பாதுகாவலர்களால், அல்லது குடும்ப உறுப்பினர்களால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகின்ற போக்கு பற்றி நிறையவே பதிவாகியுள்ளது. குறிப்பாக தகப்பனால் அல்லது சகோதரர்களால் பாலியல் துஷ்பிரயகத்துக்கு உள்ளாகிவரும் பல செய்திகளை நாளாந்தம் நாம் கடந்து வருகிறோம். அப்படியான சந்தர்ப்பங்களில் கருக்கலைப்புத் தடை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு என்ன நன்மையை செய்துவிட முடியும். அப்பெண்ணுக்கு இரட்டிப்பு கொடுமையையே கருக்கலைப்பு தடை எற்படுத்த முடியும்.

குடும்ப சுகாதார செயலகத்தினால் 2012 வெளியிடப்பட்ட அறிக்கையின்படி இலங்கையில் மரணமுறும் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கையில் 13% வீதமானோர் பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் மரணமுறுபவர்கள் என்று தெரிவித்திருந்தது.

தாயொருவர் கர்ப்பம் தரித்து 20வது வாரத்தில் தான் சிசுவின் மரபணு பிறழ்வு பற்றி வைத்தியர்களினால் இனம் காண முடியும். பிறப்பு குறைபாடுடைய பிரசவத்தினால் தாய்மார்கள் பல்வேறு துன்பங்களை வாழ் நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டியேற்படுகிறது.

இந்த சட்டமானது பெண்களின் ஆரோக்கியத்தையும், சுகாதாரத்தையும் பலப்படுத்துமே ஒழிய அது அவர்களை பாதிக்காது. இலங்கையில் கருக்கலைப்புக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும், மோசமான முறைகளாலும் கர்ப்பமுறுவதை நிரந்தரமாக பாதிக்கச் செய்த சம்பவங்களும், பயன்படுத்தப்பட்ட கருவிகளால் வேறு நோய்களுக்கு ஆளாகிய சம்வங்களும் கூட இதற்கு முன்னர் பதிவாக்கியிருக்கின்றன. உள்ளே ஏற்பட்ட காயங்களால் புற்றுநோய்க்கான எச்சரிக்கையும் கூட செய்யப்பட்டிருக்கின்றன.

பாலியல் தவறுகளையும், துஷ்பிரயோகங்களையும், பாலியல் தொழிலையும் இது ஊக்குவிக்கும் என்கிற ஒரு வாதமும் இந்த சட்டத்துக்கு எதிரான வாதமாக முன்வைக்கப்படுகிறது. ஏதோ இந்த தடை இருப்பதால் தான் இவை அனைத்தும் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படுகிறதா என்ன?


கிராமப் புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு வந்து தங்கி தொழில் புரியும் பல பெண்கள் காதலின் பேரால் ஏமாற்றப்பட்டு கர்ப்பம்தரித்து அதனை களவாக கருக்ககலைப்பு செய்வதற்காக பிழையான சக்திகளிடம் போய் சிக்கி சீரழிந்த கதைகளை நாம் எத்தனையோ அறிந்திருக்கிறோம். பிழையான வழிகளில் கருக்கலைப்பு செய்துகொள்ளப்பட்டவேளை பெண்ணும் இறந்துபோன சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன.

வசதிபடைத்தவர்கள் இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீள பல வாய்ப்பு வசதிகளை அளித்திருக்கிற இந்த சமூகத்தால் வசதியற்ற ஏழைப் பெண்களுக்கு கவலையையும், கண்ணீரையும், அவலத்தையும் தான் வழங்கியிருக்கிறது. இந்த புதிய சட்டம் இப்படி பிரச்சினைகளுக்கு உள்ளாகும் அபலைப் பெண்களுக்கு ஒரு புறமாவது ஆறுதலைத் தரும். கருக்கலைப்பு செய்ய முடியாமல் போன பெண்களுக்கு சமூகத்தால் ஆறுதல் கிட்டியதில்லை. பெரும் பிரச்சினையே சமூகத்தால் எதிர்கொள்ளும் பிரச்சினையே. உலகிலேயே தற்கொலைக்கு பேர் போன இலங்கையில் பெண்களின் தற்கொலைக்கு இதுவும் ஒரு காரணியாக இருந்து வருகிறது என்பதை சில அறிக்கைகளும் இதற்கு முன்னர் சுட்டிக் காட்டியிருக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே சமூக, மத, பண்பாட்டு, ஐதீகங்களும் ஆணாதிக்க அரசியல் காரணிகளும் இந்த விடயத்தில் தீர்மானகரமான தலையீட்டைச் செய்துவந்தன. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அது பற்றிய தீர்மானத்தை எடுக்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்து. தனது உடலின் மீதான முடிவுகள் தனக்கு வெளியில் தீர்மானிக்கப்படும் கொடூரமே நடைமுறையில் இருந்து வந்தது. கர்ப்பமடைதல், அதனை சுமத்தல், கர்ப்பகாலத்தில் பராமரித்தல், தாய்சேய் நலன்களை ஆரோக்கியமாகப் பேணுதல், கடும் வேதனையுடன் பிரசவித்து ஒப்படைத்தல் என்பதை தாயின் கடமையாகவும், பொறுப்பாகவுமே கொள்ளப்பட்டு வருகிறது.

தென்னாசியாவில் அபாகானிஸ்தானுக்கு அடுத்ததாக மோசமான ரயரைகளைக் கொண்டிருப்பது இலங்கை தான். பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவு போன்ற நாடுகள் கூட இலங்கையை விட இந்த விடயத்தில் நெகிழ்ச்சியான போக்கு கடைபிடிக்கப்படுகிறது. பூட்டானில் பெண்ணை காப்பதற்காக அல்லது பாலியல் வல்லுறவு போன்ற பின்னணியின் காரணமாக கருக்கலைப்பை அனுமதிக்கிறது. இந்தியாவில் சமூக பொருளாதார காரணிகளுக்காகக் கூட கருக்கலைப்பு செய்து கொள்ள முடியும். ஆனால் இலங்கை இந்த விடயத்தில் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை.

பெண்களின் துன்பம் போக்க இந்த சட்டம் கொண்டுவரப்படவே வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தை வைதீக சக்திகள் கட்டுப்படுத்துவதை அனுமதிக்கமுடியாது. நமது சனத்தொகையில் அதிகமானவர்கள் பெண்களாக இருந்தும் பெண்களின் முக்கிய பிரச்சினைகளில் பெண்களுக்கு பாதகமான முடிவுகள் எடுக்கப்படுவது துரதிஸ்டமே.

சந்திரிகா ஆட்சிகாலத்திலும் ஜீ.எல்.பீரிஸ் நீதியமைச்சராக இருந்த வேளை பெண்கள் அமைப்புகளின் நிப்பந்தத்தின் காரணமாக கருக்கலைப்பை சட்டபூர்வமாக்குவதற்கான கலந்துரையாடல்களும் பின்னர் அதற்கான மசோதாவும் உருவாக்கப்பட்டு வந்தது. ஆனால் மதத் தலைவர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக அது இறுதியில் கிடப்பில் போடப்பட்டது.

பெண்களை கர்ப்பக் காவிகளாக இயற்கை விதித்திருந்தாலும் பெண்களை கலாசாராக காவிகளாகவும் ஆக்கியிருப்பது இந்த ஆணாதிக்க சமூகமே. கர்ப்பத்தையும் ஏற்படுத்தி தப்பி விடும் ஆணாதிக்க சமூகம் அக்கர்ப்பத்தை சுமந்து பெற்றே தீரவேண்டும் என்பதையும் பண்பாட்டின் பேராலும், ஐதீகங்களின் வழியாலும் பெண்களை நிப்பந்தித்திருக்கிறது இந்த சமூக அமைப்பு. கருக்கலைப்பு குறித்த இருவேறு நிலைப்பாடுகள் உலகம் முழுவதும் நீண்ட காலம் நிலவி வருவது தான்.

உலக அளவில் கருக்கலைப்புக்கு ஆதரவாக போராடும் பெண்களின் பிரசித்தமான சுலோகம் ‘என் உடல்! என் உரிமை” ('My body, My choice, My rights') என்பது. இலங்கையிலும் பெண்கள் அமைப்புகள் பல அந்த கோஷத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

கருக்கலைப்பு என்பது ஒரு கலாசார விடயமாக அணுகப்படுவது போல “சிசுக்கொலை” என்கிற பாணியில் உணர்ச்சிபூர்வமான (Sentiment) விவகாரமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது நடைமுறை (Practical) விவகாரம். எதிர்கொள்பவர்கள் பெண்கள். இதுவரை காலம் பெரும்பான்மை ஆண்களால் ஆக்கப்பட்ட சட்டங்களே பெண்களின் சுய விருப்பையும், சுயப் பிரச்சினையும் தீர்மானித்தன.

மாற்றமடைந்துவரும் புதிய யுகத்தில் இதனை ஜனநாயக் ரீதியிலும், மனிதாபிமான அடிப்படையிலும், நடைமுறை யதார்த்ததிலிருந்துமே இந்த பிரச்சினை அணுகப்படவேண்டும். அந்த வகையில் பெண்களுக்கான நீதியையும், பாதுகாப்பையும் ஓரளவாவது உள்ளடக்கியிருக்கிற இந்த சட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை நாம் அனைவரும் கொடுக்கவேண்டும்.

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates