Headlines News :
முகப்பு » , , , , , » 1915: கண்டி கலவரம்: (முடிவுரை) நூற்றாண்டு பாடம்! - என்.சரவணன்

1915: கண்டி கலவரம்: (முடிவுரை) நூற்றாண்டு பாடம்! - என்.சரவணன்


“1915 – கண்டி கலவரம்” என்கிற நூல் வெளிவந்திருக்கிறது. நூற்றாண்டுக்கு முன்னர் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நிகழ்ந்த கண்டி கலவரம் பற்றி 2015இல் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு அந்த நூல். அக்கலவரம் பற்றி 400 பக்கங்களில் பல உண்மைகளை முதல் தடவையாக தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக நூற்றுக்கணக்கான ஆதாரங்களை நூலாசிரியர் என்.சரவணன் வெளியிட்டுள்ளார்.
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வேர்கள் எங்கெங்கிருந்து உருவானது, அதன் நீட்சி, வளர்ச்சி, என்பன பற்றியும் அது எப்படி 1915ஆண்டு கலவரத்துக்கு வித்திட்டது என்பது பற்றியும் பின்னர் அதனை நசுக்கும் சாட்டில் ஆங்கிலேயர்களால் பிறப்பிக்கப்பட்ட இராணுவ சட்டம் கலவரத்தை விட மோசமான அழிவுகளை எப்படி உருவாக்கியது என்பது குறித்தும் அலசப்பட்டுள்ளது. தேசியவாதம் எப்படி சிங்கள பௌத்த தேசியவாதமாக பரிமாணம் பெற்று அது பேரினவாதமாக பரிணாமம் அடைந்தது பற்றி அழகாக விளக்கப்பட்ட இந்த நூலில் ஏராளமான தகவல்கள் அடங்கியுள்ளன. அடுத்த மட்ட ஆய்வுக்கு நிறைய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்றே கூறலாம். அந்த நூலில் வெளிவந்த இறுதி அத்தியாயம் இது.

19ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதிய சுதேசிய குட்டிமுதலாளித்துவ வர்க்கம் அதுவரை உள்நாட்டில் காலனித்துவ சீர்த்திருத்தமே போதும் சுதந்திரம் தேவையற்றது என்று எண்ணிக்கொண்டிருந்தது. தமது வர்க்க நலன்களை சமரசத்துடன் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் பேணிக்கொள்ள முடியும் என்று நம்பியிருந்தார்கள். அந்த நம்பிக்கையை எல்லாம் தவிடுபொடியாக்கியது 1915 கலவர நிகழ்வுகள்.

முதலாம் உலக யுத்தத்தில் பிரித்தானியா எதிர்கொண்ட பீதி என்பது தமது ஏகாதிபத்திய இருப்புக்கே ஆபத்து நெருங்கிவிட்டதை உணர்ந்தது. அந்த சர்வதேச கெடுபிடிக்கு முன்னால் இலங்கையில் இருந்த தமக்கு சாதகமான சுதேசிய குட்டிமுதலாளித்துவ வர்க்கம் எம்மாத்திரம். ஆக அன்றைய உலக யுத்த கால உடனடி நிலைமைகளின் கீழ் இத்தகைய வர்க்கப் பிரிவினரை விட்டுகொடுக்கவும், விலைகொடுக்கவும் தயாராகவே இருந்தது என்றே கூற வேண்டும்.

இதனை உள்ளூர் சுதேசிய அரசியல் சக்திகள் முன்னெச்சரிக்கையாக விளங்கிக் கொள்ளவில்லை. விளங்கிக்கொள்ள விருப்பமும் இருக்கவில்லை.
1915 கலவரமும் அதன் பின் விளைவுகளும் உள்ளூர் அரசியல் தலைவர்களின் அரசியல் அசட்டைத்தனத்துக்கு கிடைத்த பெருத்த அடி. இந்த படித்த மேற்தட்டு பூர்ஷுவா வர்க்கம் இன, மத, அரசியல், சாதி பேதமின்றி ஆங்கிலேயர்களின் இராணுவச் சட்ட நடவடிக்கைகளையும், அதன் தண்டனைகளையும் எதிர்த்து நின்றதுடன் பரஸ்பரம் ஆதரவையும், உதவிகளையும் செய்து உணர்வுபூர்வமாக கைகோர்த்துக்கொண்டார்கள். இந்த கலவரம் அனைவரையும் இலங்கையர்களாக ஒன்றிணைவதன் அவசியத்தை உண்டுபண்ணியது.

முதற் தடவையாக இனத்தலைமைகள் ஐக்கியப்பட்டன. இலங்கையின் அரசியல் எதிர்காலத்துக்காக ஒன்றுபட்ட தேசிய அரசியல் இயக்கத்தின் தேவையை வலுவாக உணர்த்தியது.

அதன் விளைவாகவே இலங்கை தேசிய காங்கிரசின் தலைமைப் பொறுப்பிலிருந்த சேர் பொன் அருணாச்சலம் தலைமையிலான குழு இங்கிலாந்துக்கு சென்று காலனித்துவ செயலாளரைச் சந்தித்து அரசியல் சீர்திருத்த யோசனைகளை முன்வைத்தனர். அதன் விளைவாகவே மனிங் அரசியல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதுவே படிப்படியாக அடுத்தடுத்த சீர்த்திருத்தங்களையும் நோக்கி நகர்த்தியது. சுதேசிகளின் பேரம் பேசும் ஆற்றலை வளர்த்தெடுத்தது. ஈற்றில் காலனித்துவத்திலிருந்து இலங்கையின் விடுதலையை இலகுபடுத்தியது.

முஸ்லிம் - சிங்கள முறுகல்
இன்றுவரை இந்தக் கலவரத்தைக் காட்டி சிங்களவர்களும், இலங்கைக்கும் முஸ்லிம்கள் அச்சுறுத்தலான இனம் என்கிற புனைவை பரப்பிவரும் சிங்களப் பேரினவாதத் தரப்பினர் 1915 நிலைமைகளைப் பற்றி பிழையான ஐதீகங்களையே நிறுவி வந்துள்ளனர். நிறுவி வருகின்றனர்.
முஸ்லிம் சமூகத்தினர் இன்று முஸ்லிம்களாக ஒரே அடையாளத்தின் கீழ் இருப்பதைப் போல அன்று இருக்கவில்லை என்பதையும், முஸ்லிம்களுக்குள்ளேயே அன்று இருந்த வேறுபாடான பிரிவினர் பற்றியும், அவர்களின் தனித்துவமான தன்மைகள் பற்றியும், பின்புலத்தைப் பற்றியும் உரிய வகையில் சிங்கள தேசியவாதிகள் சிங்கள சமூகத்துக்கு எடுத்துச் சொல்வதில்லை. அப்படி சொல்லாமல் இருப்பது அவர்களின் இன்றைய இனவாத போக்குக்கும், இருப்புக்கும் சாதகமானது.

கண்துடைப்பு விசாரணை
ஒரு நீதியான முழு விசாரணை கோரிய இலங்கை மக்களுக்கு அந்த விசாரணை மறுக்கப்பட்டு வெறும் கேகாலை சம்பவங்களை விசாரிக்கும் ஆணைக்குழுவாக குறுக்கப்பட்டது. அதுவும் நீதியற்ற நீதி விசாரணையாக நடந்து 6 பேர் மட்டும் தண்டிக்கப்பட்டார்கள். அந்த தண்டனை கூட வெறும் பதவி விலத்தல்களாக மட்டுமே சுருங்கியது. இந்தக் கேலிக்கூத்து வெறும் கண்துடைப்பு என்பதை உலகமே அறிந்தது. வெறும் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டவர்களையெல்லாம் முறையான விசாரணையே இன்றி தான்தோன்றிதனமாக வீதிகளில் பகிரங்கமாக சுட்டுத் தள்ளியவர்கள் அவர்கள். ஆனால் அவர்களின் மீது நீதித்துறை விசாரணை செய்து மென்மையான தண்டனையை அளித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியளித்து விட்டதாக கைகளைக் கழுவிக் கொண்டது ஆங்கில அரசு.

இராணுவச் சட்டம் ஏற்படுத்திய அகோரம்; சிங்கள – முஸ்லிம் உறவில் ஏற்பட்ட விரிசலைப் பற்றிய ஆராய்வுகளின் முக்கியத்துவத்தை பின்னுக்குத் தள்ளியது என்றே கூறவேண்டும். ஏனென்றால் கலவரப் பாதிப்புகளை விட மோசமான பாதிப்புகளாக இருந்தது இராணுவச் சட்டத்தின் கீழ் நிகழ்ந்த அரச அட்டூழியங்கள் தான். இராணுவச் சட்டம் கொடுத்த பீதியோடு ஒப்பிடும் போது கலவரம் கொடுத்த பீதி சொற்பமே என்று கூறவேண்டும்.

ஆக இறுதியில் இராணுவ சட்டத்தின் கீழ் நிகழ்ந்த கொடுமைகளை விசாரிப்பதில் செலுத்தப்பட்ட கவனம்  இந்த கலவரத்துக்கு அடிப்படை காரணமாக இருந்த இனத்துவ முறுகளுக்கான காரணிகளை முறையாக ஆராயப்படவுமில்லை. அதற்கான தீர்வு தேடப்படவுமில்லை. அதுவே ஈற்றில் அடுத்தடுத்து வளர்த்தெடுக்கப்பட்ட இனக்குரோதத்துக்கு வழிவிட்டது.

100 ஆண்டுகளுக்கும் மேலாக இனவெறுப்புணர்ச்சிக்கு அடித்தளமிட்டு, அப்படியே பேணி பாதுகாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்டு தலைமுறை தலைமுறைக்கும் கடத்தப்பட்டு இன்று ஆபத்துமிக்க  சிங்கள – முஸ்லிம் கெடுபிடி நிலைமையை எஞ்சச் செய்திருக்கிறது.

அதுமட்டுமன்றி சிங்கள பௌத்த பெரும்போக்குவாதம் கடந்து போன அந்த நூற்றாண்டுக்குள் தன்னை சரி செய்வதற்குப் பதிலாக அடுத்தடுத்த கலவரத்துக்கும் தன்னை தயார் படுத்திக் கொண்டது. அதற்கான ஒரு அரசையும் தனக்கு நிறுவிக்கொண்டது. சிங்கள – பௌத்தம் நிறுவனமயப்பட்டு, மக்கள் மயப்பட்டு தான்தோன்றித்தனமாக சிங்கள- பௌத்தர் அல்லாத ஏனைய சகல இனங்களின் மீதும் பாய்ந்துகொண்டே இருக்கிறது. சிங்கள பௌத்த தேசியவாத சித்தாந்தம், படிப்படியாக பல்வேறு பரிமாணங்களில் பரிணாமமடைந்து இனவாதமாகவும், பேரினவாதமாகவும் ஈற்றில் பாசிசமாகவும் வடிவம் எடுத்துவிட்டதன் நீட்சியை இந்த வழித்தடத்திலிருந்தே ஆராய வேண்டும்.

இந்த சிக்கலை சித்தாந்த ரீதியில் கண்டடைந்தால் மாத்திரமே அதற்கான தீர்வை நோக்கியும் நகர முடியும். மாறாக நபர்களாக, அமைப்புகளாக, கட்சிகளாக, அரசாங்கங்களாக சுருக்கி விட்டால் அதனைத் தாண்டி உறுதியான தீர்வை கண்டடைய முடியாது.

அப்படி நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தை பாதுகாக்க மறைமுகமாக ஒரு அரசு இருப்பதால் அரச இயந்திரம் சகல மட்டத்திலும் அந்த சிந்தாந்தத்தை பாதுகாத்து, வளர்த்தெடுத்து வருகிறது. இன்றைய கல்வி முறை, நீதி - நிர்வாகத்துறை, ஆட்சித்துறை உள்ளிட்ட அத்தனையிலும் இதன் வகிபாகத்தையும், வியாபகத்தையும் நாம் நேரடியாக காண முடியும்.

ஒரு பல்லின, பன்மத, பன்மொழி தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு தடையாக இருப்பது இந்த நிறுவனமயப்பட்ட சித்தாந்தமே.

கலவரங்களாலேயே கறை படிந்த அரசியல் வரலாற்றை கடந்து வந்த நம் தேசம் இனியும் தாங்குமா? நூற்றாண்டு அனுபவம் சொல்லித்தந்த பாடம் அது.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates