Headlines News :
முகப்பு » » வன்னியில் இருந்து வெளியேற்றத் திட்டமிடப்பட்ட மலையக மக்கள் - மல்லியப்பு சந்தி திலகர்

வன்னியில் இருந்து வெளியேற்றத் திட்டமிடப்பட்ட மலையக மக்கள் - மல்லியப்பு சந்தி திலகர்

(தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 12) 

அத்தியாயம் 11 ல் வடமாகாண மலையக மக்கள் ஒன்றியத்தினர் அண்மைய காலங்களில் மேற்கொண்ட முயற்சிகள் குறித்துப் பேசியிருந்தோம். சமகாலத்தில் வன்னியில் வாழும் மலையக மக்கள் தொடர்பில் பல்வேறு கருத்துப்பரிமாற்றஙகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. முகநூலில் பல வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன் (அருண் அம்பலவானர்) பகிர்ந்திருந்த ஒருமுகநூல் பதிவு ஆச்சர்யமானதாகத்தான் இருந்தது. அந்த தகவல் தரும் விடயங்கள் தொடர்புடைய நண்பர்கள் உறவினர்களைச் சென்று சேரவேண்டும் எனும் கோரிக்கையையும் நட்சத்திரன் செவ்விந்தியன் விடுத்திருந்தார். அவர் பகிர்ந்திருந்த தகவல் இதுதான்.

'ரவீந்திரன் எனும் இயற்பெயரைக் கொண்ட தோழர் பெஞ்சமின் மலையகம் தலவாக்கலையைப் பிறப்பிடமாகக் கொண்டவராகும். 'கந்தன் கருணை' இல்லத்தில் 1987.03.30 தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப் போராளிகளில் தோழர் பெஞ்சமினும் அடக்கம்.

தோழர் பெஞ்சமின் 1983 ல் இந்தியாவில் பயிற்சி பெற்றவர். இவரது தந்தை ஒரு கைராசியான வைத்தியர். அதேபோல இவரும். பயிற்சி முகாமில் இவர் ஒரு வைத்தியசாலையை இலவசமாக நடாத்திவந்தார். இவரின் கைராசி அறிந்த மக்கள் பல மைல் தொலைவிலிருந்து தினமும் வருகை தந்தார்கள். இதற்கெல்லாம் மேலாக அன்பாகப்பழகும் நல் இதயம் படைத்தவர். இவர் மலையகத்தில் பிறந்திருந்தாலும் மானிப்பாய் சுற்றுவட்டாரமும் இவரை நன்கு அறியும்'.

இந்தப் பதிவினை வாசித்த செல்லமுத்து கிருஷ்ணமூர்த்தி எனும் பதிவர் இவ்வாறு எழுதுகிறார்:

'பெஞ்சமினுடன் நானும் நெருங்கிப்பழகியுள்ளேன். யாழ்ப்பாணத்தில் குண்டு வீச்சு மோசமாக இருந்த காலத்தில் யாழ் மக்களுக்காக அம்புலன்ஸ் உருவாக்கி சேவையில் ஈடுபட்டார். இவரைப் புலிகள் பிடித்து வைத்திருந்த போது மானிப்பாயில் இருந்து மூன்று மினிபஸ்களில் மக்கள் இவரைப்பார்க்க வந்தனர். இது கிட்டுவிற்கே ஆச்சரியமாக இருந்தது'. (கிட்டு புலிகளின் தளபதியாகவிருந்தவர்).

இந்த தகவல்கள் ஊடாக ஊகிக்க முடியுமான பல விடயங்கள் உள்ளது. எனினும் தன்னார்வ  வைத்தியராக கடமையாற்றிய மக்களால் நேசிக்கப்ப்பட்ட பெஞ்சமின் எனும் ரவீந்திரன் 'கந்தன் கருணை' இல்லப்படுகொலையில் காவு கொல்லப்பட்டுள்ளார் என்பதுதான் உறுதிப்படுத்தப்ட்ட தகவலாக உள்ளது.

 இவ்வாறு கொல்லப்பட்டது மட்டுமல்ல 90களில் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது போன்று மலையக மக்களும் வெளியேறறப்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வெளியேற்ற அறிவிப்பு தொடர்பில் சமூக ஆய்வாளர் ஏ.ஆர்.நந்தகமார் தனது முகநூல் பதிற்குறியொன்றில் இவ்வாறு பதிலளிக்கின்றார்:

'வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய பின்னர் 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கில் வாழும் மலையக மக்களை வெளியேற்ற துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதை தாங்கள் அறிவீர்களா?அதனைத தடுப்பதற்காக பாரதிபுரத்தில் தோழர் தங்கராசா என்பவர் கரிகாலனையும், மணியம் மாஸ்டர் தமிழேந்தி, பொட்டு அம்மானையும் சந்தித்து தடுத்து நிறுத்தயதையும் நீர் அறிவீரா? பின்னர் பாலகுமாரன் தலைமையடன் கதைத்து தலைமையுடன் கதைத்து இதனைத தடுத்து நிறுத்தயதை அறிவீரா? முடியுமானால் மேற்கூறிய கிராமங்களுக்கு சென்று நான் பெயர் குறிப்பிடடோரை சந்தித்து தெரிந்துகொள்ளுங்கள்'

பாலகுமாரன் போன்ற ஈரோஸ் இயக்கத்தில் இருந்து புலிகளுடன் இணைந்த தரப்பினர் இதனைச் செய்யவிடாது தடுத்திருக்கின்றனர். ஈரோஸ் இயக்கம் மலையகம் சார்ந்தும் செயற்பட்ட இயக்கம் என்ற வகையில் அவர்கள் மலையக மக்கள் பற்றி அறிந்திருந்தனர். ஈரோஸ் இயக்கம் அரசியல் செயற்பாட்டில் இருந்த காலத்தில் 13 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தனர். அதில் தேசியப்பட்டியல் ஆசனம் ஒன்றை ராகலையைச் சேர்ந்த ராமலிங்கம் எனும் ஆசிரியருக்கு வழங்கியிருந்தது. 1992 ஆம் ஆண்டு இவரது தலைமையில் நோர்வூட் சந்தியில் ஈரோஸ் மேதினக் கூட்டம் நடைபெற்றிருந்தது. கலைஞர் லத்தீஸ் வீரமணியும் கலந்து கொண்டிருந்தார்.

வன்னியில் இருந்து மலையக தமிழ் மக்கள் வெளியேற்றப்படல் வேண்டும் என தீர்மானித்திருந்தால் மலையக மக்கள் வடக்கிலே பரவலாக வாழ்ந்திருக்கத்தானே வேண்டும். அவ்வாறு வாழ்ந்தவர்களின் இன்றைய பரம்பல் பற்றி கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனம் செய்த ஆய்வு ஒன்றில் பின்வரும் அளவில் மலையகத் தமிழர்கள் வடக்கிலே வாழ்கின்றனர் என அறியமுடிகின்றது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப்பிரிவுக்கு 26 கிராம சேவகர் பிரிவுகளில் 15 கிராம சேவகர் பிரிவுகளில் 50 சதவீதத்துக்கு அதிகமானோர் மலையகத் தமிழர்களாக உள்ளனர். ஆணைவிழுந்தான் (75%); அக்கரையான்குளம் (60%)கோணாவில் (75%) பொன்னகர் (70); பாரதிபுரம் (80%); மலையாளபுரம் (95%); விவேகானந்தநகர் (50%); கிருஷ்ணபுரம் (85%); அம்பாள் குளம் (75%) செல்வநகர் (80%)> அம்பாள் நகர் (65%); மருதநகர் (50%); பன்னங்கண்டி (55%); ஒட்டுப்புலம் (85%); புதுமுறிப்பு (60%) கண்டாவள பிரதேச செயலநகப்பிரிவுக்கு உட்டபட்ட தருமபுரம் மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவை பிரிவுகளில் 80%க்கும் அதிகமான அளவில் மலையக தமிழர் வாழ்கின்றனர். பூநகரி பிரதேச செயலகப்பிரிவின் கீழ் ஜெயபுரம் வடக்கு மற்றும் தெற்கு கிராம சேவகர் பிரிவுகளில் (90%) சதவீதமானவர்கள் மலையகத் தமிழர்காளகவே உள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு; ஒட்டுசுட்டான்; முல்லைத்தீவு போன்ற பிரதேச செயலகப்பிரிவுகளிலும் பெருமளவில் மலையகத் தமிழர்களே வாழ்கின்றனர். வினவில் (95%); வல்லிபுரம் (95% ); தேவிபுரம் (55%); குறவயல் (99%) சுதந்திரபுரம் (74% ); இரணைமடு (67%); வள்ளுவர்புரம் (100%) மாணிக்கபுரம் (100%) இளங்கோபுரம் (92%) பாரதிபுரம் (89%); மன்னங்கண்டல் (51%) முத்தையன்கட்டு (63%) தியாகநகர் (83%) என பெரும்பாலான கிராமங்கள் முழுமையாக மலையகத் தமிழ் மக்களையே கொண்டுள்ளது. உத்தேச உள்ளுராட்சி தேர்தல் முறை வட்டார முறையில் இடம்பெறும்போது    பரவலாக உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களாக மலையகத் தமிழர்கள் தெரிவுசெய்யப்படும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் மலையகத் தமிழர்கள் வன்னியில் அரசியல்மயப்படுவது அவசியம். உத்தேச அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்காக மக்கள் கருத்தறியும் குழுவினரிடம் வன்னிவாழ் மலையகத் தமிழர்கள் தனியான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டததக்கது.

மேலே குறிப்பிட்ட கிராமங்களின் பெயர்களைப் பாரக்கும்போது அவை பாரம்பரிய வட மாகாண கிராமப் பெயர்களில் இருந்து வேறுபட்டு 'உருவாக்கம்'பெற்ற புரங்களாக இருப்பதை அவதானிக்கலாம். மேலே குறிப்பிடப்படாத இன்னும் பல கிராமங்களில் 10% முதல் 50 % வரையான வேறுபட்ட வீதங்களில் மலையகத் தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.

கிளிநொச்சி வட்டக்கச்சி கிராமத்திலும்  விசுவமடு பிரமந்தலாறு எனும் கிராமத்திலும்  வாழ்ந்த அனுபவம் எனக்கு பல அனுபவங்களைத தந்திருக்கின்றது. 1979 ல் மடகொம்பரை தமிழ் வித்தியாலயம்> 1980-1983 வட்டகொடை சிங்கள வித்தியாலயம்> 1983 வன்செயல்களோடு சில மாதங்கள் வட்டகொடை தமிழ் வித்தியாலயம் என மாறி 1983 இறுதியில் போய்ச்சேர்ந்தது கிளிநொச்சி – வட்டக்கச்சி. சகோதரிகளுடன் சேர்த்து என்னையும் கிளிநொச்சி – கரடிபோக்கு சென்.திரேசா பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். சிங்களப்பள்ளியில் மூன்றுவருடம் கற்றவன் திடீரென தமிழ்ப்பள்ளி அதுவும் கிளிநொச்சியில். தமிழ் பேசினாலும் தேவாரம் எல்லாம் தெரியாது. 'புத்தம் சரணம் கச்சாமிதான்'. அதேபோல வகுப்பறையின் 'டெக்னிக்கல் டேர்ம்ஸ்' எல்லாம் தெரியாது. உதாரணம் 'இரேஸர்' என இன்றும் ஆங்கிலத்தில் பரலாக சொல்லப்படும் வழக்கம் மலையகத்தில் இருக்கிறது. இதற்கு சிங்களத்தில் 'மக்கனே' என்று பெயர். இந்த இரண்டை மட்டுமே தெரிந்த எனக்கு அங்கே கிளிநொச்சி யில் அழைக்கபட்ட 'அழிரப்பர்' புதியதாக இருந்தது. இப்படி பல சிக்கல்கள்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிங்களத்தில் பேசிவிட்டு பெரும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறேன். 'இங்க ஒரு சிங்களவன் வந்து நிற்கிறான்' என வகுப்பறையில் கடைசி நாற்காலியில் தான் இடம் கிடைத்தது. சிங்களப்பள்ளியில் முதல் வரிசையிலும முதலாம் ஆளாகவும் வந்தவனுக்கு தமிழ் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் கடைசி வரிசை கவலையைத் தந்தது. காலையிலேயே அழுதுகொண்டு பள்ளிக்குப்போன அந்த நாட்கள் இன்றும் கவலை தருவன. அப்போதெல்லாம் என்னுடன் நேசமாக இருந்த ஒரே நண்பன் 'நேசகுமார்'. அவனுக்கு நான் பேசுவது புரிந்திருந்தது. என்னைப்போல் அவனும் கண்டி தெல்தெனிய பகுதியில் இருந்து வன்செயலில் அடிபட்டு வந்திருந்தான். அவன் தமிழ் பள்ளியில் இருந்து வந்ததனால் 'டெக்னிக்கல் ரேம்ஸ்' பிரச்சினை இருக்கவில்லை. ஆண்டிறுதிப் பரீட்சையின் பின்னர் இறுதிவரிசையில் இருந்த நான் முதல் வரிசையை எட்டிப்பிடித்தேன். இப்போது 'அழிரப்பர்' மட்டுமல்ல'ரூலர்' -'அடிகோடுவ'> விலிருந்து' அடிமட்டமும்' கூட எனக்கு இலகுவாக வந்துவிட்டது.  'அப்புவனோய்' 'அப்புவனோய்' என அழைக்கப்பட்ட விதானையார் பாத்திரத்தில் நாடகமே நடித்திருந்தேன். இன்றும் நான் தேடிக்கொண்டிருக்கும் நண்பன் 'நேசகுமார்' எங்கிருக்கிறான் எனத் தெரியவில்லை.

இந்த நாட்களில் இரணைமடு உடைப்பெடுத்து பன்னங்கண்டி பாலம் உடைந்த ஓர் நாளில் பள்ளிக்குப் போன நாங்கள் திரும்பி வீட்டுக்கு வர வீதியில்லாமல் தவித்திருந்தோம். ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து  கட்டுமரம் ஒன்று கட்டி வீதியின் அந்தப்பக்கத்தில் இருந்து இந்தப்பக்கத்திற்கு பயணிகளை மாற்றினார்கள். இந்த கட்டுமரத்திற்கு பின்னால் இருந்தது ஒரு சுவாரஷ்யம். அப்போது அம்மா> அப்பா யாழ்ப்பாணத்தில் தொழில் செய்ய நாங்கள் வட்டக்கச்சி மாமா வீட்டில் இருந்தே பாடசாலைக்கு போனோம். கட்டுமரம் கட்டி வெள்ளோட்டம் விட்டபோது எங்கள் மாமாவும் இணைந்திருக்கிறார். இடையில் கட்டுமரம் கவிழ்ந்து எல்லோரும் நீந்தி கரையேறிவிட மாமா அடித்துச்செல்லப்பட்டு விட்டார். அப்போது அவரது சட்டையில் முள்ளுக்கம்பி ஒன்று சிக்க அந்த முள்ளுக்கம்பி சுற்றப்பட்டிருந்த கம்பத்தை இறுகப்பிடித்து அவர் உயிர் தப்பியிருந்தார். அடுத்த கட்டுமரம் தயாராகும்வரை அவர் அந்த ஒற்றைமரத்தில் குந்தியிருந்ததை பின்னாளில் எல்லோரும் கிண்டல் செய்வோம். அவர் பெயர் மாணிக்கம். இப்போது உயிரோடு இல்லை.

1990 ல் சாதாரண தரம் எழுதிவிட்டு மீண்டும் வன்னிக்குப் போனேன். இப்போது தங்கியிருந்தது விஸ்வமடுவில். அங்குள்ள ஒழுங்கைகளில் சைக்கிள் ஓட்டித் திரிவது வழக்கம். புதுக்குடியிருப்பு மைதானத்தில் அன்னை பூபதி நினைவுக் கூட்டத்திற்கு சென்றதும் ஞாபகம். தாமரை இலையில் சோறு சாப்பிட்டதும் ஞாபகம். கண்டாவளை அல்லது முரசுமோட்டையில் உயர்தரம் படிக்கலாம் என்பதுதான் என் திட்டம். இந்திய ராணுவம் வெளியேறி ஈபிஆர்எல்எப் ஆட்;சி செய்தகாலம். புலிகளுக்குஈபி (ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி) என்றாலே போதும். போட்டுத் தள்ளிவிடுவார்கள். நான் புதியவனாக ஊருக்குள் சுற்றித் திருந்தேன்.

ஒருநாள் ஒழுங்கை வழியாக சைக்கிள் ஓடிச்சென்று கொண்டிருக்கையில் ஒரு முச்சந்தியில் மூன்று சைக்கிள்கள் வந்து என்னை மறித்து நின்றன. என்னால் எங்கும் போகமுடியவில்லை. சைக்கிள் மறித்தது மட்டுமில்லை. கையில் ஆயுதம் தாங்கியவர்கள் என்னை விசாரித்தார்கள். தமிழில் விசாரித்ததால் இராணுவம் இல்லை என்றும் 'நீ ஈப்பியா' எனக் கேட்டதில் இருந்தும் இவர்கள் யார் என்றும் ஊகித்துக்கொண்டேன். விபரம் சொன்னேன். 'நான் மலையகம். நுவரெலியா.  மாமா வீட்ட வந்து நிற்கிறன்' 'ஏன் இங்க சுற்றித்திரிகிறாய்?' 'காணிக்குப் போறன். இங்கதான் ஏஎல் படிக்கப்போறன்'. 'ம் ..போகலாம்;' உச்சி வெயிலில் வெட்டவெளி விசாரணை முடிந்தது. நான் காணிக்குப்போனேன். மாமாவுக்கு விபரம் சொன்னேன். 'அப்படியா..?' என சிரித்தார் மாமா. மாலை வீடு வந்தார். 'திலகர்' வெளிக்கிடுங்கோ ஒரு பயணம் போவம். நானும் வெளிக்கிட்டுவிட்டேன். சைக்கிள் பாரில் என்னை இருத்தி மாமா உலக்குகிறார். நானும் சப்போர்ட் உலக்குகிறேன். சைக்கிள் மிதிப்பதை அங்கே இப்படித்தான் சொல்வார்கள். இருவரும் உலக்க சைக்கிள் வேகமாக போய்க்கொண்டிருந்தது. நான் நண்பகல் விசாரணை பற்றி இன்னும் விரிவாக மாமாவிடம் பேசிக்கொண்டுவந்தேன். அவர் ஒன்றும் பேசவில்லை. மாமாவின் உலக்குதலில் ஒரு இலக்கு தெரிந்தது. ஏரியா பெரியவரிடம் அழைத்துப்போய் க்ளியர் பண்ணப்போறார் என நான் ஊகித்துக்கொண்டேன். சைக்கிள் நேரடியாக வந்து 'பரந்தன்' ரயில் நிலையத்தில் நின்றது. இப்போது மாமா பேசினார். 'அவர்கள் விசாரணையை முடிக்கவில்லை. இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறார்கள். நீ இங்கு இருப்பது உனக்கு நல்லதல்ல. ஊர் போய் சேர். அங்கேயே படி. நீ குடும்பத்துக்கு ஒரே ஆண்பிள்ளை. உன்னை இழக்க நாங்கள் விரும்பவில்லை' பரந்தனில் இருந்து வட்டகொடைக்கு டிக்கட்;. பொல்கஹவைலையில் இடம்மாறல். வட்டகொடை வந்தாயிற்று.

அன்று வந்தவன்தான் இன்னும் வன்னிக்குப்  போகவில்லை. 2013 ல் யாழ் இலக்கிய சந்திப்புக்கு போனபோது கிளிநொச்சியைக் கடந்துபோனேன். சேன்.திரேசா பள்ளியைப்பார்த்துக்கொண்டே... இந்த அனுபவங்களை அப்படியே 'ஜீவநதி; '(150) மலையக சிறப்பிழலில்  எழுதினேன். 'யாழ்ப்பாணத்தில் மடகொம்பரை' என்பது தலைப்பு. அந்தக் கட்டுரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பாண்டிச்சேரி பிரேஞ்சு நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட 'காலம் உனக்கொரு பாட்டெழுதும்' (Time will write a song for u ) நூலில் சேர்க்கப்பட்டது. மலையகத் தமிழன் ஒருவன் இலங்கை சிங்கள சமூகத்திற்கும் - இலங்கைத் தமிழ் சமூகத்திற்கும் இடையே எவ்வாறு அல்லாடுகிறான் என்பதை உணர்த்தும் ஒரு அனுபவப்பதிவு (Memoir) அந்த கட்டுரை. அன்று மாமா தீர்க்கதரிசனத்தோடு என்னை ரயிலில் ஏற்றிவிட்டதால் இன்று காலம் எனக்கொரு பாட்டெழுதியிருக்கிறது. இல்லாவிட்டால் ரவீந்திரன் எனும் இயற்பெயர் கொண்ட 'பெஞ்சமின்' போல 'திலகராஜா' எனும் இயற்பெயர் கொண்ட 'ஏதோ' ஒரு பெயருடன் என்பெயரையும் அந்தப் பட்டியலில் நண்பர் நட்சத்திரன் செவ்விந்தியன் சேர்த்து பகிர்ந்திருப்பார்...

(உருகும்)

நன்றி - சூரியகாந்தி
Share this post :

+ comments + 1 comments

தோழர் பெஞ்சமின் எனது உற்ற நண்பன், எனது முகநூலில் இருந்தே <<'ரவீந்திரன் எனும் இயற்பெயரைக் கொண்ட தோழர் பெஞ்சமின் மலையகம் தலவாக்கலையைப் பிறப்பிடமாகக் கொண்டவராகும். 'கந்தன் கருணை' இல்லத்தில் 1987.03.30 தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப் போராளிகளில் தோழர் பெஞ்சமினும் அடக்கம்.>> தோழர் பெஞ்சமினின் முகவுரை பிறந்திருக்குமென நினைக்கின்றேன்.

தோழர் பெஞ்சமின் என்பது ஒரு குறியீடு மாத்திரமே, ஆனால் ஈழ விடுதலைக்கு பல்கலைக் கழகப் படிப்புத் தொட்டவர்கள் முதற்கொண்டு அரச சேவையில் இருந்தவர்களும் மலையகத்தில் இருந்து வந்து அர்ப்பணிப்பைச் செய்திருந்தார்கள், இதில் பலர் விடுதலைப் புலிகளால் இல்லாதொழிக்கப்பட்டார்கள் என்பதே உண்மை. எத்தனையோ பெற்றோருக்கு தனது மகன்களின் மரணத்தை இம்மியும் அறியாது, என்னவானார் என்பது இன்று வரை தெரியாமலிருப்பதே கொடுமையிலும் கொடுமையாகும்.

ரவீந்திரன் போல திலகராஜாவும் பட்டியலில் இருப்பாரென குறிப்பிட்டதில் எனக்குத் தைத்தது என்னவெனில் திலகராஜாவைக் காப்பாற்ற ஒரு மாமா இருந்தார், விடுதலைப் புலிகளால் இல்லாதொழிக்கப்பட்ட ஏனைய மலையகத் தோழர்களுக்கு மாமாக்கள் இல்லாததாலேயே முகவுரை அழிக்கப்பட்டார்கள் என்பதே உண்மையாகும்.

தோழமையுடன் ஜனன்.
https://www.facebook.com/JananayaganJanan

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates