Headlines News :
முகப்பு » » தெளிவத்தை ஜோசப் - ராஜலட்சுமி சிவலிங்கம்

தெளிவத்தை ஜோசப் - ராஜலட்சுமி சிவலிங்கம்


இலங்கை மலையகப் படைப்பாளிகளில் முக்கியமானவரும், தமிழ் இலக்கிய ஆய்வாளருமான தெளிவத்தை ஜோசப் (Thelivathai Joseph) பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இலங்கை மலையகப் பகுதியைச் சேர்ந்த பதுளை மாவட்டம் ஊவாக்கட்டவளை என்ற ஊரில் 1934-ல் பிறந்தவர். கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் 3 ஆண்டுகள் படித்தார். பின்னர் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார்.

* தெளிவத்தை என்ற ஊரில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தன் பெயருடன், தான் வாழ்ந்த ஊரின் பெயரையும் இணைத்துக்கொண்டார்.

* 1960-களில் தமிழ் இலக்கியத் துறையில் தடம் பதித்து, பலராலும் அறியப்படும் படைப்பாளியாக மாறினார். ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதினார். பிறகு குறுநாவல், நாவல், விமர்சனம், ஆய்வுக் கட்டுரைகள், தொலைக்காட்சி, வானொலி நாடகம், திரைப்படக் கதை எனப் பல தளங்களில் தடம் பதித்தார்.

* இலங்கை மலையகம் பற்றி அறியவேண்டும் என்றால், இவரது படைப்புகளைப் படித்தால் போதும் என்கிற அளவுக்கு அந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார நிலவரங்களை இவரது படைப்புகள் எடுத்துக் கூறின.

* ‘காலங்கள் சாவதில்லை’ என்பது இவரது முக்கியமான நாவல். அவரது ஆய்வு நூல்களான ‘20-ம் நூற்றாண்டில் ஈழத்து இதழியல் வரலாறு’, ‘மலையக சிறுகதை வரலாறு’ ஆகியவை இவரைச் சிறந்த ஆய்வாளராக அடையாளம் காட்டின.

* தனது படைப்புகள் மூலம் மலையக எல்லையைக் கடந்து இலங்கை அளவில் பேசப்படும் ஈழத்தின் முக்கியப் படைப்பாளியாகத் திகழ்கிறார். பல்வேறு பத்திரிகைகளுக்காக பல புனைப்பெயர்களில் இலக்கிய கட்டுரைகள், இலக்கிய குறிப்புகள், சிறுகதைகள், கவிதைகள், இலக்கியத் தகவல்களை அளித்துள்ளார்.

* பல பத்திரிகைகள், இலக்கிய அமைப்புகள் நடத்திய குறுநாவல், சிறுகதைப் போட்டிகளில் பரிசு வென்றுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட ஏராளமான விருதுகள், கவுரவங்களைப் பெற்றுள்ளார். ‘நாமிருக்கும் நாடே’ சிறுகதைத் தொகுப்புக்காக இலங்கை சாகித்ய விருதை வென்றுள்ளார். இவரது ‘குடைநிழல்’ புதினம் 2010-க்கான யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலக்கியப் பேரவை விருதை வென்றது. 2013- க்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதையும் பெற்றுள்ளார்.

* இலங்கை, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகள் இவரை அழைத்து கவுரவித்துள்ளன. சிறந்த இலக்கிய விமர்சகர், வழிகாட்டியாகச் செயல்பட்டுவரும் இவரிடம் பலர் தங்கள் நூல்களுக்கான முன்னுரைகளைக் கேட்டுப் பெறுகின்றனர்.

* மலையகத்தின் மூத்த எழுத்தாளராகத் திகழும் இவர் 1960 முதல் தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்காக பல்வேறு முனைப்புகளை மேற்கொண்டு வருகிறார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றிவருகிறார்.

* 1960-களில் இலக்கியப் பயணத்தை தொடங்கிய இவர், 66 சிறுகதைகள் உட்பட ஏராளமான படைப்புகளை வழங்கியுள்ளார். இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த எழுத்தாளர் என்ற பெருமையுடன் வலம் வருகிறார்.

நன்றி - தி ஹிந்து
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates