Headlines News :
முகப்பு » , » V.S வேலு என்பவரை தெரியுமா? - S.இரவிந்திரன்

V.S வேலு என்பவரை தெரியுமா? - S.இரவிந்திரன்


மல்லிகை மலர் தூவி வாழ்த்த நினைத்திருந்தேன்... எள்ளு பொரி தூவி இறைக்க நாள் வந்ததுவோ...? அல்லி விழி மூடி, அமுத இதழ் மூடி, வெள்ளை துகில் மூடி, மேனியிலே மலர் மூடி , சொல்லாது நீ போகும் நாள் வந்ததுவோ...! என கதறி 1986.07.19 தனது மூத்த மகள் மணிமேகலை அகால மரணமடைந்த பொழுது சிந்தாமணியில் இவர் எழுதிய கண்ணீர் அஞ்சலி தான் இது. ] அவர்... மலையக கவிஞர் ”குறிஞ்சி தென்னவன்” கவிஞர் குறிஞ்சி தென்னவனின் இயற்பெயர், V.S வேலு இவர் சுப்பையா, முருகம்மா தம்பதியினருக்கு நோர்வூட் தெம்மதுரை தோட்டத்தில் 1934.03.12 ஆந்திகதி பிறந்தார். பின் இவரின் பெற்றோர் நுவரெலியாவுக்கு அண்மையிலுள்ள லபுக்கலை தோட்டம் மேற்பிரிவுக்கு குடிபெயர்ந்தனர். லபுக்கலை தோட்ட பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்விகற்றார். வறுமை நோயின் தாக்கத்தால் தொடர்ந்தும் கல்விகற்க முடியாமல் தனது 11 ஆவது வயதில் தோட்டதில் தொழிலாளியாக பெயர் பதிந்துக்கொண்டார்.

வாசிப்பின் மீது அதீத காதல் கொண்டபடியால் தனது பள்ளிபாடம் நின்று போனாலும் எப்படியாவது தமிழகத்து சஞ்சிகைகளையும்,ஈழத்து சஞ்சிகைகளையும்,கிடைக்கின்ற நூல்களையும் புராணங்களையும் வாசித்து தனது தமிழாற்றலை வளர்த்துக்கொண்டிருக்கிறார். பின்னர் தனது 18 ஆவது வயதில் தனது கன்னி கவிதைகளை எழுத தொடங்கினார். தனது கவிதாஆற்றலை பரீட்சித்துப்பார்த்தார் என்றே சொல்லலாம்.பின் 1960க்குப்பின் தான் தன்னை ஒரு கவிஞனாக அடையாளப்படுத்த தொடங்கினார் என்பதே பொருத்தமாகவிருக்கும். இவர் தோட்டதொழிலாளியாக இருந்தப்படியால் சக தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளகூடியவராக இருந்தார். ஏறக்குறைய 4500 க்கும் மேற்பட்ட கவிதைகள் 1000க்கும் மேற்பட்ட குரும்பாக்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.

பத்திரிக்கைகள், சஞ்சிகைகள் என்பவற்றில் வெளிவந்த இவரது கவிதைகளில் பெருபாலும் தான் வாழ்ந்த சூழல்களையும் தொழிலாள சோகங்களையும் பதிந்திருக்கிறார். ஆயிரக்கணக்கான கவிதைகளை இவர் எழுதியிருந்தப்போதும் சிலகவிதைகளே நூலுருவம் பெற்றிருக்கின்றன. 1987ல் குறிஞ்சி தென்னவன் கவிதைகள் என்ற நூல் வெளிவந்தது. பின்பு அதே நூல் அவர் எழுதிய சில குறுப்பாக்களையும் இணைத்துக்கொண்டு மீண்டும் வெளிவந்தது. 2007ம் ஆண்டில் சாரல் நாடான் அவர்கள் தொகுப்பில் ”குறிஞ்சி தென்னவன் கவிதைகள்” அவரது இன்னும் சில கவிதைகளை தாங்கி வெளிவந்தது. இவரது கவித்துவத்துக்கு மலையகத்தில் அங்கீகாரம் இல்லாமல் இருக்கவில்லை. எனவே இவர் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். அதில் குறிப்பாக 1996 ஆம் ஆண்டு இந்துகலாசார அமைச்சினால் கிடைத்த ”கலாபூஷணம்” விருதைக்குறிப்பிடலாம். அதற்கு அடுத்த ஆண்டே 1997ல் புற்று நோயின்காரணமாக நுவரெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 1998.01.19 ஆந்திகதி சிகிற்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

சரஸ்வதியின் அருள் இருந்தளவுக்கு லஷ்மியின் அருள் கிட்டவிலை என்றே கூறவேண்டும். கடைசிவரை வறுமைநோயை அவரால் எதிர்த்து போராட முடியவில்லை. இடது சாரி கொள்கையில் பிடிப்பு கொண்ட கவிஞரால் எவரிடமும் கையேந்த மனம் வரவில்லை. எனவே அவரது கவிதைகளால் அவரைவிட வேறுசிலரே பயனடைந்தனர். இவரை தனது நண்பர் என கொண்டாடும் சிலர் கவிஞரின் மரணத்தில் கூட கலந்துக்கொள்ளவில்லை என்பது தான் வேதனை. கவிஞரின் மனைவி லச்சுமி,மகன் கார்திகை பாலன்,மகள் மார் தாமரைச்செல்வி,ஞானபிரியா ஆகியோர் இன்னமும் வாழ்க்கை போராட்டத்திலிருந்து மீள முடியவில்லை.

இவரின் மகன் கார்த்திகை பாலன் நுவரெலியாவில் ஒரு புத்தகக்கடையில் ஊழியராக தொழில் புரிகிறார். 1996 ஆம் ஆண்டு எனது தாயார் மரணித்தப்பொழுது தனது உடம்பில் நோயின் வேதனை வாட்டிய போதும் அதனை வெளிக்காட்டாது காரியங்கள் முடியும் வரை என்னுடன் ஆறுதலாக இருந்தார். இளவல் இரவிந்திரன் என்னும் தலைப்பில் அவர் எனது தாயாருக்காக எழுதி தந்த இரங்கற்பா துரதிர்ஷ்டவசமாக எங்கோ தொலைந்து போனது மிகவும் வேதனையாகும். காலத்தால் மறக்க கூடாத கவிஞர் குறிஞ்சி தென்னவனின் ஆயிரக்கணக்கான கவிதைகள் இன்னும் அச்சிவாகனத்தில் ஏறாமல் இருக்கின்றன. எவராவது அதற்க்காக உதவ முன்வருவார்களாயின் மலையக இலக்கிய சமூகத்துக்கும் கவிஞருக்கும் ஆற்றும் மிகப்பெரிய சேவையாகும்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates