Headlines News :
முகப்பு » » 'நந்தலாலா' ஜோதிகுமாருடன் ஒரு நேர்காணல்! - வ.ந.கிரிதரன்

'நந்தலாலா' ஜோதிகுமாருடன் ஒரு நேர்காணல்! - வ.ந.கிரிதரன்


'நந்தலாலா' ஆசிரியர்களிலொருவர்.இலங்கையிலிருந்து வெளிவரும் 'நந்தலாலா' , முன்பு வெளிவந்த 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாருடன் நடைபெற்ற நேர்காணல். இந்த நேர்காணல் 1997இல் ஜோதிகுமார் தொராண்டோ வந்திருந்த சமயம் எடுக்கப்பட்டது. பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் கருதிப் பதிவுகளுக்காக இங்கு பதிவு செய்கின்றோம். பேட்டி கண்டவர் வ.ந.கிரிதரன்.- 

வ.ந.கிரிதரன்:ஜோதிகுமார்! நீங்கள் ஆரம்பத்தில் 'தீர்த்தக்கரை' சஞ்சிகையினை வெளியிட்டீர்கள். தற்போது 'நந்தலாலா'வினை வெளியிடுகின்றீர்கள். ஏனிந்தப் பெயர் மாற்றம்?


ஜோதிகுமார்: தீர்த்தக்கரை நண்பர்களால் ஒன்று சேர்ந்து வெளியிடப்பட்டது. 1983 வன்செயலின் பின்னர் தீர்த்தக்கரை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பலர் பிரிந்து சிதறுண்ட நிலையில்...அவர்களனைவரையும் மீண்டும் ஒன்றிணைத்து அதே பெயரில் சஞ்சிகையினை வெளியிடுவது முடியாத காரியமாயிருந்தது. எனவே அதில் ஈடுபட்டிருந்த சில நண்பர்கள் தீர்த்தக்கரை வெளிவராத நிலையில் பிறிதொரு சஞ்சிகையினை ஆரம்பிக்கலாமென்று கூறினார்கள். அதன் விளைவாக உருவானதுதான் 'நந்தலாலா'. இரண்டினையும் ஒரே சஞ்சிகையென்று கூறமுடியாது. ஆனால் ஒரே இலக்கிய தர்மத்தினை, ஒரே போக்கினைக் கொண்டவையெனக் கூறலாம். 

வ.ந.கிரிதரன்: ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் 'நந்தலாலா'வின் பங்களிப்பு எத்தகையதாக இருக்க வேண்டுமெனக் கருதுகின்றீர்கள்? மலையக இலக்கியக் களத்தையே பின்னணியாகக் கொண்டு இயங்கவேண்டுமெனக் கருதுகின்றீர்களா?அல்லது..... 

ஜோதிகுமார்: அது சகல சமூகங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. மலையகத்தை மாத்திரம் உள்ளடக்க வேண்டுமென்ற அவசியமில்லை. மலையகம் என்ற எல்லையைத் தாண்டிவரவேண்டிய நிர்பந்தமிருக்கிறது. அதனால், மலையகமென்ற அதாவது அதனுடைய யதார்த்தப் போக்கினை, அதனுடைய குணாம்சங்களை வெளிப்படுத்தும் அதே சமயம் பல சமூகங்களிற்கிடையே புரிந்துணர்வினை தோற்றுவிக்குமொரு சஞ்சிகையாகவும் இலக்கியப் பாலமாகவும் இருக்கவேண்டுமென எண்ணுகிறோம். 

வ.ந.கிரிதரன்: உங்களுடைய எழுத்துலக அனுபவத்தைச் சிறிது கூறமுடியுமா? இதுவரை கால எழுத்துலக, இலக்கிய அனுபவங்களின் விளைவாக நீங்கள் எத்தகைய உணர்வினைக் கொண்டிருக்கின்றீர்கள்? 

ஜோதிகுமார்: பொதுவாகத் தீர்த்தக்கரை, நந்தலாலாவில் செயற்பட்டவர்கள், செயற்படுகின்றவர்கள் எல்லோருமே ஒரு புரிந்துணர்வுடன் செயற்பட்டவர்கள். செயற்படுகின்றவர்கள். உதாரணமாக எம்மிடம் பிரசுரத்திற்கென வரும் படைப்புகளை நாம் பொதுவாகத் திருத்துவதில்லை. பொதுவாக, அவற்றை எழுதியவர்களைக் கஷ்ட்டப்பட்டுக் கண்டுபிடித்து, அவற்றின் குறைநிறைகளை விவாதித்து, அப்படைப்புகளை அப்படைப்பாளிகளினூடாகவே எவ்வளவு முன்னேற்ற முடியுமோ அவ்வளவு தூரம் முன்னேற்றுவதற்கு முயல்வோம். அது ஒரு நல்ல அம்சம். இரண்டாவது , படைப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் சரியான கவனமாகவிருப்போம். வாசகர்களுக்கு அவை பிடிக்குமாவென்பது தெரியாது. ஆகவே, பல்வேறுபட்ட வாசகர்களிடமும் அவற்றை வாசிக்கக் கொடுப்போம். அது சாதாரண இளைஞர்களிலிருந்து சாதாரண ஆசிரியர் வரை எல்லாவகையானவர்களிடமும் வாசிக்கக் கொடுப்போம். அவர்கள் அபிப்பிராயம் சொல்லும்போது விமர்சனரீதியாக அபிப்பிராயம் சொல்ல மாட்டார்கள். சும்மா சொல்லுவார்கள். பிடித்திருக்கிறதா இல்லையாவென்று. அடுத்த கேள்வியென்ன கேட்போமென்றால்..அப்படைப்பு எவ்விடத்தில் தொய்வது போல் படுகிறதென்பதுதான். இதற்கு அவர்கள் ஏதாவது சொல்லக்கூடும். இவற்றிலிருந்து தான் நாம் சில விடயங்களைக் கிரகித்து, சரி இந்தப்படைப்பைப் போடலாமா, போடக்கூடாதா , எவ்வாறு திருத்தப்பட வேண்டும் போன்றவற்றைத் தீர்மானிப்போம். இப்படியானதொரு போக்கு எம்மிடையே நிலவுகின்றது. இதனால் நந்தலாவில் நல்ல படைப்புகள் வெளிவருவதாக நீங்கள் கருதினால் அதற்குரிய பாராட்டினை இந்த மாதிரி வாசகர்களுக்குத் தான் நாம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கூடாகத்தான் நாமும் படிக்கிறோம். நாங்களெல்லாம் பெரிய கலைஞர்களென்ற எண்ணமே எம் நண்பர்களிடையே இருக்கவில்லை. இதுவுமொரு நல்ல விசயமே. 

அடுத்ததென்னவென்றால் எல்லோருமே committed. உதாரணமாக தீர்த்தக்கரையோ நந்தலாலாவோ அவை வந்த காலகட்டங்களில் மலையகத்தைப் பொறுத்தவரையில் போர்ப்பிரகடனங்களாகத்தான் வெளிவந்தன. மலையகத்தைப் பொறுத்தவரையில் தொண்டமானிற்கெதிராக விமர்சனங்கள் வைக்க முடியாததொரு நிலையிருந்தது. இந்நிலையில் தொண்டமானிற்கெதிராகக் காத்திரமான விமர்சங்களை நந்தலாலா வைத்தது. மலையகம் பற்றிய வரலாறு சம்பந்தமான ஆங்கில நூலினை நடேசன் வெளியிட முயன்றபொழுது - அப்பொழுது ஆட்சியிலிருந்தது ஐ.தே.க.- பலரால் அவரிற்கு தொல்லைகள் ஏற்பட்டன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிற்கெதிரான விடயங்கள் பல இருப்பதாகக் கூறி எச்சரிக்கப் பட்டார். இந்நிலையில் நடேசன் என்னுடன் தொடர்பு கொண்டு அந்நூலினை இருபாகங்களாக வெளியிடலாமேயெனக் கருத்து வெளியிட்டார். நந்தலாலா' நண்பர்களினால் அதனை ஏற்க முடியவில்லை. அப்படிப் பாதிப்பு வந்தால் வெளியிடும் நமக்குத்தானே முதற்பாதிப்பு எனக் கூறினார்கள். இவ்விதமாகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற பண்பு அந்நண்பர்களிடமிருந்தது. இதனால் உக்கிரமான இலக்கியத்தையோ எழுத்துகளையோ தரக்கூடியதொரு களத்தை எம்மால் அமைக்கக் கூடியதாகவிருந்தது. இது எனது இலக்கிய அனுபவத்தில் நல்லதொரு விசயம். 

வ.ந.கிரிதரன்: நல்லது ஜோதிகுமார். இவ்விதமாகப் பாடுபடவேண்டுமென்ற எண்ணம் தங்களுக்கு எவ்விதமுண்டானது? 

ஜோதிகுமார்: தீர்த்தக்கரை வெளிவந்த காலகட்டம் 1980 தான். அதே காலகட்டத்தில் வெளிவந்த முக்கிய சஞ்சிகைகளாகக் 'குமரன்'...போன்றவற்றைக் கூறலாம். செ.கணேசலிங்கனின் 'குமரன்' சஞ்சிகையினைத் தான் குறிப்பிடுகின்றேன். இது இடதுசாரிப் போக்கினைக் கொண்டது. அதே சமயம் மறுபுறத்தே 'பூரணி' , 'அலை' போன்றன வெளிவந்தன. அக்காலகட்டத்தில் இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்த எழுத்தாளர்களிற்கெதிராக நிறைய விமரிசனங்கள் வெளிவந்தன. 'கலை கலைக்காக என்ற விமரிசனக் கோட்பாடு ஒரு புதிய வடிவத்தை எடுக்கத் தொடங்கியது. அது எத்தகைய வடிவமென்றால்...'மார்க்ஸியத்தை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் உங்கள் படைப்புகளில் அழகியல் போதாது' என்றார்கள். அதாவது 'கலை கலைக்காக' என்பதன் புது வடிவம் தானிது. 'மார்க்கிஸியத்தை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் உங்கள் படைப்புகளை நிராகரிக்கப் போகின்றோம்' என்பது போன்ற போக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் எமக்குக் 'குமரன்' எழுத்துகளுடன் அவ்வளவு உடன்பாடு இருக்கவில்லை. அதன் கலாபூர்வமான வெளிப்பாடு போதாது. பிரச்சாரத் தன்மையாகத் தெரிகிறதென எம்மில் பலபேர் நினைத்தார்கள். இந்நிலையில் புதியதொரு சஞ்சிகையினை வெளியிடவேண்டிய தேவையிருந்தது. அதற்காகத்தான் 'தீர்த்தக்கரை'யென்ற சஞ்சிகையினை முக்கியமாக வெளிக்கொணர்ந்தோம். பல கூறுகள் ஒன்றாக இணைந்திருக்கலாம். இது ஒரு கூறு. இன்னும் பல வேறு கூறுகள் இருந்திருக்கலாம். அதாவது 'தீர்த்தக்கரை'யின் தோற்றத்திற்கான கூறுகளைக் கூறுகின்றேன். உதாரணமாக மலையகச் சமூக உருவாக்கம், இனத்துவ அடையாளங்கள் போன்றவற்றைக் கூறலாம். 

நண்பர்கள் எல்லோருக்கும் பாரதியாருடன் கூட நெருக்கம். பாரதியைப் பெரிதும் மதிப்பவர்கள். இந்த இணைப்புகள் பற்றிய கேள்விகள், மலையக யதார்த்ததை எந்த அளவிற்கு வேலுப்பிள்ளைக்குப் பிறகு படைப்பாளிகள் முன்வைத்தார்கள் என்பன போன்ற கேள்விகளெல்லாம் எம்மிடையே எழுந்தன. இவையெல்லாம் , இக்காரணங்களெல்லாம் ஒன்றாகச் சேர்ந்ததனால் ஒரு சஞ்சிகை தேவையென்ற கருத்து உருவாயிற்று. 'கால நிர்ப்பந்தமா?' என நீங்கள் கேட்கலாம். ஆம். கால நிர்பந்தம்தான் காரணம். ஆனால், கால நிர்ப்பந்தமென்பது மலையகமென்றதொரு யதார்த்தத்திற்குள் மட்டும் எல்லைப்படுத்தப் படவில்லை. பல்வேறு கூறுகள் அதனைத் தீர்மானித்தன். நிர்ப்பந்தித்தன. 

வ.ந.கி: அண்மைய ஈழத்து மலையக இலக்கியத்தைப் பொறுத்தவரையில் ஒரு விழிப்புணர்வினைக் காண முடிகின்றது. பல எழுத்தாளர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் மலையகத்தின் பங்களிப்பைப் பல பத்திரிகைகளில் வெளிப்படுத்தி வருகின்றார்கள். மு.நித்தியானந்தனைக் குறிப்பிடலாம். 'மலையகச் சிறுகதைகள்', 'தீர்த்தக்கரைச் சிறுகதைகள்' போன்ற காத்திரமான சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. பொதுவாக, அண்மையில் ஈழத்திலிருந்து வெளிவந்த தமிழ்ப் படைப்புக்களுடன் ஒப்பிடுகையில் மேற்படி மலையகப் படைப்புக்கள் சற்று காத்திரமானவையாகத் தென்படுகின்றன. மலையகத் தமிழ் இலக்கியம் ஒருவிதமான உற்சாக நடை ப்போடுவதாகத் தெரிகின்றது. இது பற்றி என்ன நினக்கின்றீர்கள் ஜோதி? 

ஜோதிகுமார்: மலையக இலக்கியம் மாத்திரம் மற்றையவற்றுடன் ஒப்பிடும்பொழுது உற்சாகமாகவுள்ளதென்பதை ஏற்றுக் கொள்வது கஷ்ட்டம். மலையக இலக்கியத்திலும் இருவகையான போக்குகளையும் காணலாம். உற்சாகமான போக்கும் உண்டு. உற்சாகம் குன்றிய போக்கும் உண்டு. மலையகத்தில் சில போக்குகள் உள்ளன. அதாவது இன்றைய இலக்கியத் தளத்தில் நடக்கின்ற எல்லா முரண்பாடுகளையும் உள்வாங்க முடியாததொரு நிலைமை காணப்படுகிறது. இன்றைய தமிழ் இலக்கியம் எந்தெந்த நெருக்கடிகளினூடாக வந்து சேர்ந்துள்ளது? இன்று இருக்கின்ற இலக்கியத் தளத்தில் காணப்படுகின்ற முரண்களுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கிறதா? முரண்களின் தொடர்ச்சியா? இவற்றின் சாராம்சத்தை உள்வாங்க முடியாததன்மை மலையகத்தில் இருக்கிறது. அதாவது மலையகத்தின் சில இலக்கியப் போக்குகளிலுள்ளன. அதே சமயத்தில், எல்லாவற்றையும் மிகக் கவனமாக ஆராய்ந்து, அவதானித்து அதன் சாராம்சத்தைப் புரிந்து, அதன் நிலையைச் சரியாக வரையறை செய்து, அதற்கூடாக ஒரு காத்திரமான இலக்கியப் போக்கினை அடுத்தபடிக்கு முன்னெடுக்கும் தன்மையும் காணப்படுகின்றது. எனவே இரண்டு அம்சங்களுமுள்ளன. இது தவிர, மலையகம் என்று ஜீவிக்கும் நிலை, அதனுடைய இருப்பு- அதாவது அது ஒரு சமூகவியற் கேள்வி- அது எத்தகையதொரு ஜீவனை இவர்களுக்குள் செலுத்துகிறது? இவையெல்லாம் சேர்த்துத்தான் உற்சாகம், உற்சாகமின்மை இவற்றிற்கெல்லாம் தலைமை வகிக்கின்றன. உதாரணமாக, முக்கியமாக நான் கூறுவதென்னவென்றால்... ஒரு கட்டத்தில் வடக்கில் நல்ல கவிஞர்கள் தோன்றினார்கள். ஜெயபாலன் எனக்கு மிகவும் பிடித்த கவிஞன். அவருடையதொரு கவிதை வன்னியைப் பற்றியது. 'எங்கள் மண்ணும் எங்கள் முகமும்' என்ற கவிதை. அதிகமாக அதுபோன்ற கவிதைகள் தமிழில் தோன்றவில்லையென்று கூறலாம். 'பாஞ்சாலி சபதம்' மாதிரி சில நெடுங்கவிதைகளைப் பற்றிக் கதைக்கக் கூடும். ஆனால் அதுமாதிரியொரு நெடுங்கவிதை இங்கு இன்னொரு தளத்தில், இன்னொரு பரிமாணத்தில் வந்திருக்கிறது. இதனுடைய தோற்றத்தைக் கவனமாக ஆய்வு செய்தால்.. அங்கேயும் அந்த புத்தி ஜீவிகளை, நடுத்தர வர்க்கத்தவர்களை, ஒரு வரலாற்றுக் கட்டம் அப்படியே தூக்கி மக்கள் மத்தியில் வீசியுள்ளது. 'மக்கள் மத்தியில் போய்ப் படித்து வா' என்பது போல். எல்லா விழுப்பாடுகளையும் கடந்து போய், அவர்கள் எல்லாவற்றையும் தொட்டு, உணர்ந்து, கிரகித்து, உள்வாங்கி வந்து கவிதை படிக்கும் போது அது இயற்கையை நேசிக்கிறதாகவிருக்கு; வாழ்க்கையை நேசிக்கிறதாகவிருக்கு; மக்களை நேசிக்கிறதாகவிருக்கு; மக்கள் அவர்களை நேசிக்கிறதாகவிருக்கு. இப்படிப் பல பரிமாணங்கள் கொண்ட படைப்புக்களை அவர்கள் உருவாக்குகின்றார்கள். அது பாரதியாகவிருக்கட்டும், ஜெயபாலனாகவிருக்கட்டும். ஆகவே, இந்தப் போக்கு, அதாவது இத்தகைய புத்திஜீவிகளை, மத்தியதர வர்க்கத்தினரைத் தூக்கி வாழ்க்கையினுள் வீசி, அலைய வைத்து அப்படியே கொண்டு வந்து திரும்பவும் சேர்க்கின்ற போக்கு... 

வ.ந.கி: ஒருவித அக்கினிப் பிரவேசம்... 

ஜோதிகுமார்: ஆம. இந்தப் போக்கு வடகிழக்கில் இருக்கு. இன்றைக்கு இத்தகைய போக்கு தமிழகத்தில் இல்லை. ஒப்பீட்டளவில், விகிதாசாரத்தில் ஜெயபாலன் போன்றவர்களின் இத்தகைய பண்பு கூடும் பொழுது உற்சாகமான இலக்கியங்கள் வந்து சேரும். அவற்றின் தாக்கங்கள் மறைமுகமாகவிருக்கலாம். நேரடியாகவிருக்கலாம். ஓர் எழுத்தை, கலைஞனை இத்தகைய சமூகவியற்காரணிகளே உருவாக்குகின்றன. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது தற்போது மலையகத்தில் நிலவும் சூழலினை, காரணிகளினைக் கவனத்திலெடுக்க வேண்டியுள்ளது. 

வ.ந.கி: மலையக மக்களின் பிரச்சினைகள் பற்றி மறுமலர்ச்சிக் காலகட்ட எழுத்தாளர்களான அ.செ.மு, அ.ந.கந்தசாமி போன்றோர் சிறுகதை படைத்திருக்கின்றார்கள். இவ்விதம் மலையகத்தைச் சேராதவர்களின் மலையகம் பற்றிய படைப்புக்களைப் பதிவு செய்வதுண்டா? 

ஜோதிகுமார்: அவர்களுடைய படைப்புக்களை நிச்சயம் பதிவு செய்ய வேண்டும். என்ன காரணமென்றால்...? மலையக இலக்கியமென்னும்போது இவையெல்லாம் உள்ளடங்க்கிதானுள்ளது. அதுதான் மலையக இலக்கியத்தின் வளர்ச்சி. இதனை விளங்கிக் கொள்வது வரப்போகும் எழுத்தாளர்களுக்கு மிகவும் முக்கியமானது. இரண்டாவது, அவர்களது பங்களிப்பை அறிந்து கொள்ள வேண்டும். மூன்றாவது என்னவென்றால்... மலையகத்தைச் சாராத எழுத்தாளர்கள் கூட எவ்விதம் மனித நேயத்துடன் அணுகியிருக்கின்றார்கள்? அவ்விதம் அம்மனித நேயத்தை வெளிப்படுத்தும் போது எவ்வளவு தூரம் அதில் வெற்றி அடைந்திருக்கின்றார்கள்? என்ற கேள்விகளெல்லாம் எழும். அப்படியொரு கோணத்திலிருந்து பார்க்கும்போது கூடப் பதிவு செய்தலென்பது மிகவும் முக்கியமானதாகின்றது. 

வ.ந.கி: இவ்விதம் பிற பிரதேசங்களைச் சேர்ந்த படைப்பாளிகளின் மலையகம் பற்றிய படைப்புக்கள் எவ்வளவு தூரம் வெற்றிகரமாக அமைகின்றன? 

ஜோதிகுமார்: நீங்கள் என்ன கேட்கின்றீர்களென்றால்... எழுதலாமா? கூடாதா? என்பதைத்தானே? தலித்திலக்கியத்தைப் பொறுத்த வரையில் எழுதக் கூடாதென்கின்றார்கள். என்ன காரணமென்றால்.. பிரச்சினையைப் பிழையாக வெளிப்படுத்துகின்றார்கள் என்ற நோக்குத்தான். எங்களைப் பொறுத்தவரையில்... யாரும் எழுதலாம். ஏனென்றால், அது ஏகபோக சொத்தல்ல. பிழையாக எழுதினால் அதற்கான விமர்சனமும் வெளிவரும். ஆனால், விஷயம் என்னவென்றால்.. இவ்விதம் வெளியிலிருந்து வந்து எழுதும்போது, மலையக மக்கள் என்னும் சமூகத்தின் உள் விதிமுறைகளை, அதாவது அச்சமூகத்தின் வாழ்வைத் தோற்றுவிக்கும் அந்த நெளிவு சுளிவுகளை, சிலவேளை இவ்விதம் வெளியிலிருந்து வரும் எழுத்தாளர்கள் விட்டு விடுகின்றார்கள். மேலோட்டமாக அவதானிப்புக்களை எழுத முற்படுகின்றார்கள். உதாரணமாக, வெளியிலிருந்து பலர் அட்டைகளைப் பற்றி அதிகம் எழுதியிருக்கின்றார்கள். ஆனால் வேலுப்பிள்ளையைப் பொறுத்தவரையில் அட்டையைப் பற்றியும் ,குளிரைப்பற்றியும் எழுதினது மிகக் குறைவு. அதிலிருக்கின்ற சில, வாழ்க்கையைத் தோற்றுவித்திருக்கின்ற உன்னதங்களை, மனிதநேயங்களை- அதாவது அவர்களும் மனிதர்கள்தான் என்பதை- இறுக்கிக் காட்டுகின்ற பண்புகளைத்தான் வேலுப்பிள்ளையின் படைப்புக்களில் காணமுடியும். அதற்காக நாம் வெளிப்படைப்பாளிகள் மலையகத்தைப் பற்றி எழுதக் கூடாதென்று சொல்லக் கூடாது. ஏனென்றால் வேலுப்பிள்ளையும் மனிதர்தான். இரண்டுபேருக்குமுள்ள வித்தியாசம் என்னவென்றால்... வேலுப்பிள்ளை நெருங்கின அளவுக்கு மற்றவர்களால் நெருங்க முடியுவில்லை. அதற்குக் கொஞ்சக் காலம் தேவை. கூடக் Commitment தேவை. அவர்களோடு ஒட்டிப் பழகவேண்டிய , சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதொரு நிர்ப்பந்தம் தேவை. இவையெல்லாம் இருந்தால் நான் நினக்கின்றேன், அவர்களும் நல்ல இலக்கியம் செய்வார்கள். உதாரணமாக, மலையகத்திலிருந்து வந்த படித்தவர்கள் சிலர் அந்த மக்களிடமிருந்து அன்னியப்பட்டு விட்டார்கள். படித்தவர்களின் இத்தகைய அன்னியப்பட்டுப் போகின்ற தன்மையும் மலையகத்திலுண்டு. அதற்கு நிறைய சமூகவியற் காரணிகளுண்டு. ஒரு காரணம்.. நிலம் சொந்தமில்லை. இவ்விதம் அன்னியப்பட்டவர்களும் மலையகத்தைப் பற்றி எழுதும்போது குளிர், அட்டையென்று எழுதிய கதைகளுமுண்டு. ஆகவே இவ்விரண்டு வகையினருக்குமிடையில் பெரியதொரு வித்தியாசத்தைப் பார்க்கின்றேன். நாங்கள் சொல்லக் கூடுவதென்னவென்றால்.. அது எந்த மக்களாகவுமிருக்கலாம். மலையகம் மட்டுமல்ல அது வடகிழக்கு மக்களாகவுமிருக்கலாம். வடக்கு கிழக்கு மக்களைப் பற்றி எழுதும்போது கூட அப்பகுதி எழுத்தாளர்கள் எவ்வளவுதூரம் அம்மக்களுடன் உண்மையில் நெருங்குகின்றார்கள்... அம்மண்ணின் ஆழ வேரோடு எப்படி அவர்கள் ஆழமாகப்போய்ப் பின்னிப் பிணைகின்றார்கள்... இவையெல்லாம் கேள்விகள். அந்த அளவுக்கு நீங்கள் போகும் போதுதான் அனுபவங்கள் உங்கள் இதயம் பூராவும், உங்கள் சிந்தனைபூராவும், 'சித்தமும் நீயே , சிந்தனையும் நீயே' என்பது போல் ஒன்றாக ஒட்டி வருகின்றன. அப்படி ஒட்டி வருகையில்தான் எழுத்து வந்து வனப்பாக விழுகின்றது. வனப்பு என்று சொல்லும்போது.. வாழ்க்கையில் நம்பிக்கையும், மக்கள் மேல் நேயமும் இவையெல்லாம் ஒத்து வருகின்றன. அதுதான் தேவை. பிரித்துச் சொல்ல முடியாது. நீ எழுது அல்லது நீ எழுதாதே என்று சொல்லுவது தப்பு என்று நினைக்கின்றேன். 

வ.ந.கி: இலக்கியத்தில் அழகியலின் பங்களிப்பு பற்றி உங்கள் எண்ணம் என்ன? 

ஜோதிகுமார்: அழகியல் பற்றி நிறைய விவாதிக்கப்பட்டிருக்கு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அளவுகோல் வைத்திருக்கின்றார்கள். இந்த அளவுகோலிறு ஒரு சமூகவியற் பின்னணி, நிலைப்பாடு இருக்கின்றதைக் கண்டு கொள்ளலாம். அழகியல் என்பது உள்ளடக்கத்துடனும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டது. உதாரணமாக, தாஸ்தவாஸ்கியை எடுத்தால் அவர் நல்ல தேர்ச்சி மிக்க ஓர் எழுத்துக் கலைஞர். அவரது எழுத்துத் திறனில் அழகியலை எடுத்தீர்களென்றால்... எந்தவொரு குறையும் காணமுடியாது. உள்ளடக்கத்தை எடுத்தீர்களென்றால்.. கோர்க்கி சொல்லுவார்: 'புண்களை உயர்த்திக் காட்டுவதற்கு ஒருவனுக்கு உரிமையில்லை' என்று. அது அந்தரங்கமானது. அது ஒரு நிராகரிக்க வேண்டிய தன்மை அப்படியென்று அவர் சொல்லுவார். ஆகவே அழகியல் என்பது பல்வேறு தளங்களிலை இருக்கு. ஒரு தளம் எழுத்துத் திறன், இன்னொரு தளம் அதனுடைய உள்ளடக்கம். இன்னுமொரு தளம் இருக்கு. அது எத்தகையதொரு பாதிப்பை மனிதரில் ஏற்படுத்துகின்றது என்பது. சோகமா? அவலமா? கோபமா? அதனுடைய இறுதி விளைவென்ன? அப்படியென்கிற ஒரு கேள்வியையும் கணக்கிலெடுத்து அழகியல் சம்பந்தமாக நோக்க வேண்டும். 

வ.ந.கி: இலக்கியத்தில் அழகியலின் பங்களிப்பு பற்றி உங்கள் எண்ணம் என்ன? 

ஜோதிகுமார்: அழகியல் பற்றி நிறைய விவாதிக்கப்பட்டிருக்கு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அளவுகோல் வைத்திருக்கின்றார்கள். இந்த அளவுகோலிற்கு ஒரு சமூகவியற் பின்னணி, நிலைப்பாடு இருக்கின்றதைக் கண்டு கொள்ளலாம். அழகியல் என்பது உள்ளடக்கத்துடனும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டது. உதாரணமாக, தாஸ்தவாஸ்கியை எடுத்தால் அவர் நல்ல தேர்ச்சி மிக்க ஓர் எழுத்துக் கலைஞர். அவரது எழுத்துத் திறனில் அழகியலை எடுத்தீர்களென்றால்... எந்தவொரு குறையும் காணமுடியாது. உள்ளடக்கத்தை எடுத்தீர்களென்றால்.. கோர்க்கி சொல்லுவார்: 'புண்களை உயர்த்திக் காட்டுவதற்கு ஒருவனுக்கு உரிமையில்லை' என்று. அது அந்தரங்கமானது. அது ஒரு நிராகரிக்க வேண்டிய தன்மை அப்படியென்று அவர் சொல்லுவார். ஆகவே அழகியல் என்பது பல்வேறு தளங்களிலை இருக்கு. ஒரு தளம் எழுத்துத் திறன், இன்னொரு தளம் அதனுடைய உள்ளடக்கம். இன்னுமொரு தளம் இருக்கு. அது எத்தகையதொரு பாதிப்பை மனிதரில் ஏற்படுத்துகின்றது என்பது. சோகமா? அவலமா? கோபமா? அதனுடைய இறுதி விளைவென்ன? அப்படியென்கிற ஒரு கேள்வியையும் கணக்கிலெடுத்து அழகியல் சம்பந்தமாக நோக்க வேண்டும். 

வ.ந.கி: ஆக அழகியல் முக்கியமென்று கூறுகின்றீர்கள்? 

ஜோதிகுமார்: மிகவும் முக்கியம். சுலோகத்தன்மையுடன் எழுதக் கூடாது. அழகியல் தன்மையுடன் கலாபூர்வமாகவிருக்க வேண்டும். அது சரி, அதனை ஏற்றுக் கொள்கின்றேன். அப்புறம் கலாபூர்வமான வெளிப்பாடென்று புறப்பட்டால்.. இன்னும் நிறையப் பிரச்சினைகள் இருக்கு... 

வ.ந.கி: இலக்கியப் படைப்பு கலாபூர்வமாகவும் அதே சமயம் சமுதாயப் பயன்பாடு மிக்கதாகவுமிருக்கவேண்டும்? 

ஜோதிகுமார்: அப்படிச் சொல்லலாம். ஆனால், அதே சமயத்தில்... அந்த எழுத்து இசைக்கும் நாதமென்ன? அதனுடைய இராகமென்ன? அவலமா? அதன் சமூகவியற் கண்ணோட்டமென்ன? என்பன நோக்கப்பட வேண்டும். மனிதரைப் பற்றிய அதனுடைய சாராம்சம், அது இசைக்கின்ற இராகத்தின் சாராம்சம், அவல கீதமாக இருந்தால் அதனை நிராகரிக்க வேண்டும். 

வ.ந.கி: ஒரு படைப்பாளியை அவருடைய படைப்புக்களினூடு ஆராய வேண்டுமென்று ஒரு சாராரரும், அவரது வாழ்க்கைப் பின்னணியில் அவருடைய படைப்புக்களை ஆராயவேண்டுமென்று இன்னொரு சாராரும் கூறுகின்றார்களே. இது பற்றிய உங்களது கருத்தென்ன? 

ஜோதிகுமார்: ஒரு படைப்பு மாத்திரம்தான் சமூகப் பெறுமானத்தைப் பெறுகின்றது. அது மாத்திரம்தான் சமூகத்திற்காக கொடுக்கப்படுகின்றது. படைப்பாளி தன்னைக் கொண்டுவந்து நிறுத்தவில்லை என்னை விமர்சியென்று. அவரொரு அரசியல்வாதி மாதிரிப் பிரகடனம் செய்யவில்லை. தன் படைப்பை மட்டும்தான் சமூகத்தின் முன்னால் வைக்கின்றார். ஆகவே, அந்தப் படைப்பு எழுத்தில் வரும்போது எங்களுக்கொரு உரிமை இருக்கு அதனை விமரிசிக்க. ஆகவே அத்துடன் விடுவது நல்லதென நினக்கின்றேன். அது ஒரு பக்கம்... இரண்டாவது பக்கமென்னவென்றால்.. ஒரு படைப்பைப் படிக்கையில் அதிலிருக்கின்ற நேர்மையை நாம் உணர்ந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. அது உண்மையான படைப்பா? செய்யப்பட்டதொரு படைப்பா? ஓர் இயல்பானதொரு தோற்றமா? இயல்பானதொரு சிருஷ்ட்டியா? Genuine Creationஆ... இல்லையாயென்பதை உணர்ந்து கொள்ளலாம். உதாரணமாகப் பல கவிதைகள் வெளி வருகின்றன. ஆனால் பாரதியின் கவிதைகளில் அதிக ஓளியிருப்பது எல்லோருக்கும் தெரியும். அதிக உண்மையிருப்பது எல்லொருக்கும் தெரியும். அதிலிருந்து அவனுடைய வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை நாம் ஓரளவுக்கு ஊகிக்கலாம். அந்த அளவுக்கு மனித ஞானம் இன்று வளர்ந்திருக்கு. ஆகவே கட்டாயம் படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்கையைத் தேடி ஆராய வேண்டியதென்ற கட்டாயமில்லை. 

அப்படியிருக்கும் போது கூடச் சிலர் ஆராய்ச்சி செய்திருக்கின்றார்கள். தனிப்பட்ட வாழ்க்கையை - ஒவ்வொருத்தரும் தமது தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய முடியாமலிருக்கும்போது- இன்னொரு மனிதருடைய வாழ்க்கையைப் பற்றி நாம் ஆராய முடியாது. அதிலுள்ள எல்லா முரண்பாடுகளையும் நாம் அறிய முடியாது. எங்கள் கண்களுக்குத் தெரிகின்ற சில முரண்களை நாங்கள் தூக்கிக்ப் பிடித்துக் கொள்கின்றோம். ஆகவே பிறிதொரு மனிதரின் வாழ்க்கையைப் பற்றி நாங்கள் எவ்விதம் அரைகுறையாக ஆய்வு செய்து சொல்வது? அது சரியா? அது தர்மமா? இல்லை. முதலாவது இத்தகைய விமர்சனப் போக்கே தர்மமற்றது. இரண்டாவது.. சரி அப்படியே ஏற்றுக் கொண்டாலும் எவ்விதம் படைப்பாளியைப் பற்றி முழுதும் கூற முடியும்?



நன்றி: பதிவுகள்.

மீள்பிரசுரம்: பதிவுகள் - ஆகஸ்ட் 2007; இதழ் 92.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates