Headlines News :
முகப்பு » , , , » “மொழிப் பயங்கரவாதம்” - என்.சரவணன்

“மொழிப் பயங்கரவாதம்” - என்.சரவணன்

இக்கட்டுரை ஒக்டோபர் 30 அன்று வீரகேசரியுடன் இணைப்பாக வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்டவர்கள் “TheCatamaran” எனும் நிறுவனம். இலங்கையின் பல ஊடகவியலாளர்களை இணைத்து மும்மொழியிலும் சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணரும் இணையத்தளத்தையும் நடாத்தி வருகிறார்கள். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க எழுதப்பட்ட கட்டுரை இது. கட்டுரையில் வந்த உரையாடல் பகுதியை மட்டும் அவர்கள் மும்மொழியிலும் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார்கள். இக்கட்டுரையின் முடிவில் அதன் pdf பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது.

இது வேண்டுமென்றே நிகழவில்லை. இது திட்டமிட்டும் நிகழவில்லை. தமிழ் மொழி அமுலாக்கம் விடயத்தில் நிகழும் பாரபட்சத்தில் திட்டமிட்ட ஒரு அநீதி  ஒரு போக்காக தொடர்ச்சியாக இயங்கி வருகிறது என்பதை மறுக்க முடியாது. இனவெறுப்பும், இன மறுப்பும் மொழியை ஆயுதமாகக் கொண்டு நிகழ்த்தப்படுகிறது. அந்த போக்கு நிருவனமயப்பட்டுள்ளது. எனவே இது பிரச்சினை என்பதை அடக்குவோரும் சரி, அடக்கப்படுவோரும் சரியாக உணரவில்லை என்றே புரிந்துகொள்ள முடிகிறது.

இலங்கையில் சிங்கள பௌத்த தேசிய வாதம் என்பது நிருவனமயப்பட்டது. அந்த சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு ஒரு அரச நிறுவனம் உண்டு. சிங்கள பௌத்த தேசியவாதம் மக்கள்மயப்பட்டிருக்கிறது. அதற்கென்று ஒரு நிறுவன வடிவம் உண்டு.

இந்தப் புரிதலில் இருந்து தமிழ் மொழி அமுலாக்கத்துக்கான போராட்டதுக்கென்று ஒரு தொடர்ச்சியான வரலாறும் உண்டு என்பதையும் நாமறிவோம். இலங்கையின் இனப்பிரச்சினை கூர்மையடைந்து ஆயுத வடிவம் பெறுவதற்கும் இந்த மொழிப் பிரச்சினையின் வகிபாகம் பாரியது. அப்படி இருந்தும் இந்த நிலைமை நீடித்து வருகின்றதென்றால் இதன் பாரதூரத்தை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இன்னமும் விளங்கிக் கொள்ளவில்லை என்கிற முடிவுக்கே வர முடிகிறது. மும்மொழி அமுலாக்கம் குறித்த விடயத்தில் நிலவும் அசமத்துவமும் அது பற்றிய பிரக்ஞையின்மையும் இந்த சிக்கலை வேறொரு வடிவத்துக்கு இட்டுச் சென்றுகொண்டிருக்கிறது.

ஒரு பன்மத, பன்மொழி, பல்லின நாட்டில் மைய பொறிமுறையாகவும், வேலைத்திட்டமாகவும் இருக்கவேண்டியது இவற்றை சமத்துவமாகக் கையாலும் வழிமுறை. ஆனால் இலங்கையில் அது அலட்சியமாகவே கையாளப்படுவதை நிதமும் காண முடிகிறது.

  1. அரச நிறுவனங்களில் தமிழ் தெரிந்தவர்கள் ஊழியர்களாக இல்லை. அல்லது குறைவு. இதன் காரணமாக தமிழை மட்டுமே தெரிந்தவர்கள் படும் இன்னல்கள் குறைத்து மதிப்பிடக் கூடியது அல்ல.
  1. அரச நிறுவனங்களில் விண்ணப்பப் படிவங்கள், ஆவணங்கள் சிங்களத்தில் மட்டுமே பெரும்பாலான கந்தோர்களில் கிடைக்கின்றன. தமிழர்கள் பலர் சிங்களவர்களின் துணையுடன் தான் நிரப்புகின்றனர். சில இடங்களில் ஆங்கிலத்தில் கிடைக்கும் பட்சத்தில் அவற்றைக் கொண்டு சமாளிக்கின்றனர்.
  1. இலங்கையில் அரச நிறுவனங்களில் வழிகாட்டி ஆவணங்களும், ஏனைய அரச ஆவணங்களும் தமிழில் கிடைப்பது குறைவு.
  1. மூல ஆவணங்கள் எப்போதும் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டு பின்னர் தான் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்க்கப்படுகின்றன. மூல மொழியில் உள்ள சரளம் மொழிபெயர்ப்பில் இருப்பதில்லை என்றும் அது ஒரு அயர்ச்சியையும், சலிப்பையும் ஏற்படுத்தி பயன்பாட்டுக்கு அர்த்தமற்று போவதை பல வெளியீடுகளில் கவனிக்க முடிகிறது.
  1. இலங்கை கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் மொழி, சமயம் தவிர்ந்த அனைத்து பாட நூல்களும் சிங்களத்தில் இருந்த மொழிபெயர்க்கப்படுவது தான். ஆக தமிழ் மாணவர்கள் பயன்படுத்தும் பாடநூல்கள் தமிழில் உருவாக்கப்பட்டவை அல்ல மாறாக தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டவை. மொழிபெயர்ப்பில் இருக்கின்ற அசௌகரியங்களை சுமந்துகொண்டு தான் தமிழ் மாணவர்கள் கற்று தேர வேண்டிய கொடுமை நீண்ட காலமாகவே நிலவுகிறது. இந்த நிலைமை சிங்கள மாணவர்களுக்கு இல்லை. அதற்காக மொழிபெயர்ப்பு அனைத்தும் தவறு என்பதல்ல இதன் கருத்து. மொழிபெயர்த்து வரும் போது நிகழும் சரளம் பல இடங்களில் சிக்கலாகவே இருந்து வருகின்றன. இதைவிட கல்வித் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று தமிழ் பக்கங்களுக்கும் சிங்களப் பக்கங்களுக்கும் இடையில் உள்ள அசமத்துவத்தை காணுமாறு நான் பரிந்துரைக்கிறேன்.
  1. அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் தமது சேவையை மக்களுக்கு இலகுவாக கிடைக்கச்செய்யவென உவுவாக்கியிருக்கிற பல இணையத்தளங்கள் தமிழில் இயங்குவதில்லை. ஒரு ஆய்வுக்காக இலங்கை அரச திணைக்களங்கள், அமைச்சுகள், நிறுவனங்கள் என்பவற்றின் இணையத்தளங்களுக்குச் சென்று ஆராய்ந்திருக்கிறேன். அனைத்து இணையத்தளங்களுமே மொழி விடயத்தில் பாரபட்சத்தையே கொண்டிருக்கின்றன. தமிழ் பேசும் மக்களுக்கு நேரும் அசமத்துவத்துக்கு சிறந்த உதாரணங்களை இங்கு காண முடியும். (ஒரு ஊடகத்தில் இதனை தொடராக எழுத அனுமதியும் கூட கேட்டிருந்தேன்.)

  • இதற்கு உதாரணமாக கல்வி அமைச்சின் இணையத்தளம், பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் இணையத்தளங்கள் கூட சிங்களத்தில் இருப்பவை தமிழில் கிடைப்பதில்லை. அல்லது ஆங்கிலத்திலேயே அந்த இணையத்தளங்களைப் பேணுவதன் மூலம் தப்பி விடுகின்றனர். சில உதாரணங்கள்.
  • இலங்கை ரஜரட்ட மிஹிந்தலை பல்கலைக்கழகம் (http://www.rjt.ac.lk/)

மொழிப் பிரச்சனைகளை கையாள்வதற்காக என்றே அதற்கென்று மொழிகள் அமுலாக்க அமைச்சு உண்டு, அதற்கென்று அரச மொழிகள் திணைக்களம் உண்டு, அரச மொழிகள் ஆணைக்குழு என்று கூட ஒன்று உண்டு ஆனால் இவை அனைத்தும் வெற்றுக் கண் துடைப்பா என்கிற கேள்வி சாதாரண பிரஜைகளுக்கு ஏற்படும் அதே கேள்வி எமக்கும் உண்டு.

அரச நிறுவனங்களில் எத்தனை ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். அங்கு இன விகிதாசாரம் எவ்வளவு? மக்கள் தொடர்பு ஊழியர் /அதிகாரி மும்மொழியிலும் உள்ளனரா? 
இதுவரை வெளியான வெளியீடுகள் எத்தனை? அவை மும்மொழியிலும் வெளியாகியுள்ளனவா?

வேறெங்கேயும் செல்வதற்கு முன்னர் ஒரே ஒரு உதாரணத்திற்காக இந்த கட்டுரைக்கென எளிமையான ஒரு உதாரணத்தை எடுத்துக் கொண்டேன்/ அரச மொழிகள் ஆணைக்குழுவைத் தொடர்பு கொண்டேன். ஒரே ஒரு தேவை தான் அங்கு வெளியிடப்பட்டுள்ள நூல்கள் சிங்களத்தில் கிடைப்பன தமிழில் கிடைக்கின்றனவா. நடந்த உரையாடலை நீங்களே கவனியுங்கள்


தொலைபேசி உரையாடல்

திணைக்களத்துடன் தொடர்புகொள்ளக் கூடிய ஒரேயொரு தொலைபேசி இலக்கம் தான் உண்டு. அந்த இலக்கத்துடன் ஓகஸ்ட் 7,8,9 ஆகிய மூன்று நாட்களாக தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். 8 ஆம் திகதி இலங்கை நேரப்படி 3.50க்குத் தான் அழைப்பு கிடைத்தது. மகிழ்ச்சியுடன் கதைத்தேன் மறு முனையிலிருந்து இது “கார்ட் ரூம், அனைத்தும் மூடப்பட்டுவிட்டன நாளை தொடர்பு கொள்ளுங்கள்" என்றது அந்த பெண் காவலாளியின் குரல். சோர்வுடன் வைத்துவிட்டேன்.

பின்னர் 9ஆம் திகதி காலை ஒஸ்லோ நேரம் 8.15 இலிருந்து (இலங்கை நேரப்படி 11.45) ஒஸ்லோவிலிருந்து தொடர்புகொள்ள முயற்சித்தேன் 14வது தடவை தான் அழைப்பு கிடைத்தது அப்போது நேரம் மு.ப10.10.

மறுமுனையில் ஒரு பெண் குரல் நான் என்னைப் பத்திரிகையாளன் என்றும் எனது நிறுவனத்துக்கு தேவையான சில நூல்களை பெற வேண்டியிருக்கிறது என்றும் கூறி திணைக்களத்தின் இணையத்தளத்தில் இருந்த நூல் பட்டியலைப் பார்த்தபடி; அந்த நூல்களைப் பெற வேண்டும் என்று சிங்களத்தில் கூறினேன். "சற்று நேரம் கழித்து மீண்டும் தொலைபேசுவீர்களா" என்று சிங்களத்தில் அந்த பெண் குரல் கூறியது.

நானும் பதிலுக்கு, "தொடர்ச்சியாக மூன்று நாட்களாக தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன் நேற்று பின்னேரம் கூறினீர்கள் இன்று தொடர்புகொள்ளுமாறு கூறினீர்கள். காலையிலிருந்து தொடர்ச்சியாக முயற்சி செய்து இப்போது தான் தொடர்பு கிடைத்தது எனவே என்னால் திருப்பி வைக்க முடியாது" என்றேன்.

"சரி பொறுங்கள்" எனக் கூறி ஒரு சில நிமிடங்களின் பின்னர் சிங்களத்தில் ஒரு ஆண் குரல் ஒலித்தது. சிங்களத்தில் மட்டுமே காணப்பட்ட நூல் பட்டியலைச் சொல்லி அவற்றின் தமிழ் பதிப்பு தேவையென்றேன். மூன்றாவது நூலைக் கூறும்போதே அவர் மேலதிகமாக தேடித் பார்த்து விட்டுத் தான் பதில் கூற முடியும் என்று உளறத் தொடங்கினார்.

இப்போது நான் "எனக்கு யாராவது தமிழில் பதிலளிக்கக் கூடிய உள்ளார்களா" என்றேன்... "சற்று பொறுங்கள்" என்று கூறி இன்னொருவருக்கு மாற்றினார்.

இந்தத் தடவை தமிழில் ஒரு ஆண் குரல். மீண்டும் என்னை அறிமுகம் செய்துகொண்டு எனது தேவையை கூறினேன். அவர் சற்று கடுமையான தொணியில் எங்களிடம் பாகம் ஒன்று, இரண்டு, மூன்று இருக்கிறது உங்களுக்கு என்ன வேண்டும் என்று அவராக ஒரு நூலைப் பற்றி அடுக்கிக் கொண்டு சென்றார்.

"ஹலோ... ஹலோ.... பொறுங்கள்... எனது தேவை என்னவென்பதைக் கூட கேட்காமல் உங்கள் தெரிவுகளைக் கூறிக்கொண்டு போகிறீர்களே..." என்று ஆரம்பத்திலிருந்து நடந்ததையும் கூறி இந்த நூல்கள் கிடைக்குமா தமிழில் என்றேன். தான் பரீட்சைப் பிரிவில் இருப்பதாகவும், புதிதாகத் தான் சேர்ந்துள்ளதாகவும் தனக்கு விற்பனை பீடத்தில் இருக்கும் விபரங்கள் தெரியாது என்றார்.

"சரி! யாரால் எனக்கு பதில் கூற முடியும். பதில் கூறக் கூடிய ஒருவருடன் தொடர்பை எற்படுத்துவீர்களா" என்றேன். பொறுங்கள் எனக் கூறி இரண்டு நிமிடத்தில் தமிழில் ஒரு பெண் குரல்.

விற்பனைப் பீடத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் என்றார். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து கூறி தேவையைக் கூறினேன். விற்பனைப் பீடத்திலுள்ள சிங்கள ஊழியரால் எனக்கு பதில் தர முடியவில்லை எனவே உங்களால் பதில் தர முடியாவிட்டால் பதிலளிக்கக் கூடிய ஒருவரை தொடர்புபடுத்துமாறு மீண்டும் கேட்டேன். "உங்களுடன் கதைத்தவரின் பெயர் என்ன" என்று என்னிடம் கேட்டார். "எனக்கு எப்படி தெரியும், எந்த காரியலாயத்தில் தனது பெயரைச் சொல்லி பதிலளிக்கிறார்கள். நான் தான் எனது பெயரையும் கூறி பத்திரிகையாளர் என்று அறிமுகமும் செய்துகொண்டு தேவையைக் கூறினேன்." என்றேன்.

அவரிடம் நான் பெயரைக் கேட்டிருக்க வேண்டும் என்றார் அந்தப் பெண். "சரி நீங்கள் இவ்வளவு நேரம் கதைக்கிறீர்கள் உங்களுக்கு எனது பெயரைக் கூறினேன்... உங்கள் பெயரை நீங்கள் கூறினீர்களா? அப்படி எல்லாம் காரியாலயங்களில் பெயர்களைக் கூறுவதில்லையே இது கொமன் சென்ஸ் அல்லவா" என்றேன்.

கூடவே "இந்த விடயத்தை சிக்கலாக்க எனக்கு விருப்பமில்லை, விடயம் மிகவும் எளிமையானது நான் உங்கள் பட்டியலிலுள்ள நூல்களைக் கூறுகிறேன் அவற்றின் தமிழ் பதிப்பு உண்டா இல்லையா என்பதை மட்டும் கூறுங்கள்" என்றேன்.

"உங்களால் சிங்களத்தில் கதைக்க முடியுமா|" என்று வினவினார் அவர். "என்னால் முடியும் ஆனால் பதில் தந்த ஊழியர் தமிழில் அவை இருக்கிறதா என்பதை அறிந்து கூறத் தடுமாறுகிறார்." என்றேன்.

"சரி உங்களுக்கு தமிழில் உரையாட வேண்டுமா சிங்களத்தில் உரையாட வேண்டுமா" என்று அபத்தமாக மீண்டும் வினவினார். நானும் "சரி... என் கேள்விக்கு தமிழில் பதிளிக்கக் கூடிய ஒருவரை ஒழுங்கு செய்யுங்கள்" என்றேன். சரி என்று கூறி அவர் தொலைபேசி அழைப்பை மீண்டும் இன்னொருவருக்கு மாற்றினார்.

மீண்டும் அதே சிங்களப் பெண் காவலாளியின் குரல்.

"ஆங்... அந்த தமிழ் நூல் பற்றி கதைத்தவர் அல்லவா பொறுங்கள்" என்று கூறி இன்னொரு அழைப்புக்கு மாற்றினார் மூன்று நிமிடங்களுக்குப் பின்னர் அதே சிங்கள ஆண் குரல் விற்பனை பீடத்திலிருந்து... களைத்துப் போயிருந்தேன். மீண்டும் முதலில் இருந்தா.... ஐயோ!

சரி அவரிடம் திரும்பவும் சிங்களத்தில் அதே கேள்வி. இம்முறை நான் “திணைக்களம் வெளியிட்டதாக கூறும் பட்டியலில் உள்ள சிங்கள நூல்களைக் கூறுகிறேன் அவை தமிழில் உள்ளனவா என்பதை மட்டும் இப்போதைக்குக் கூறுங்கள் போதும்" என்றேன். சரி மாத்தையா என்றவர். நான் கேட்ட அத்தனைக்கும்...

“சின்ஹலெங் தியனவா எஹேத் தெமெலென் நே” (சிங்களத்தில் இருக்கிறது ஆனால் தமிழிலில் இல்லை) என்று நான் கேட்ட அத்தனை நூல்களுக்கும் பதிலாக வந்தது.



இவை இப்போது கையிருப்பில் உள்ள சிங்கள நூல்கள் மட்டுமே. (இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருப்பவை) ஏற்கெனவே வெளியிடப்பட்டு கையிருப்பில் தற்போது இல்லாத தமிழில் மொழிபெயர்க்கப்படாத சிங்கள நூல்கள் ஏராளம். அதனை நான் நேரில் கடந்த வருடம் அந்த விற்பனை நிலையத்துக்கு சென்று பட்டியலைப் பார்த்திருக்கிறேன்.

மேலும் அவர்கள் இனி இந்த நூல்களின் மொழிபெயர்ப்புகள் வெளிவருமா? எப்போது வெளிவரும் என்பது குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும் தெரிவித்தார்கள். ஏற்கெனவே வெளியான நூல்கள் பல வருடங்களுக்கு முன்னர் வெளியானவை என்பதும் குறிப்பிடத்தகது. அதாவது இத்தனை வருட காலமாக அவை மொழிபெயர்க்கப்படாமலேயே நீடிக்கப்பட்டு வருவதும் கவனிக்கத்தகது. பல வருட காலமாக கலைசொற்களை மொழிபெயர்த்து வெளியிடும் பணியை அரச வெளியீட்டுத் திணைக்களமே மேற்கொண்டு வந்தது. அப்படி வெளியிடப்பட்டவையும் கூட பெரும்பாலும் சிங்களத்தில் வெளியிடப்பட்ட தலைப்புகளின் அளவுக்கு தமிழில் வெளியிடப்படவில்லை என்பது எனக்கு அனுபவபூர்வமாக தெரியும்.

மொழிப் பிரக்ஞை

அறிவிப்புப் பலகை / பெயர்ப்பலகை விடயத்தில் தனியார் மேற்கொள்ளும் பாரபட்சங்களையிட்டு நம்மால் முறைப்பாடுகளையோ ஆதங்கத்தையோ ஆத்திரத்தையோ வெளிப்படுத்த முடிவதில்லை. ஆனால் அரசு அப்படியல்ல அதற்கென்று பொறுப்புண்டு. சிங்களத்தை தமிழர்கள் கற்றுக்கொண்டே ஆகவேண்டும் இல்லையெனில் எதிர்காலமில்லை என்கிற கட்டாய சட்டம் மறைமுகமாக தமிழர்களுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள அளவுக்கு சிங்களம் மொழிபேசுவோருக்கு இல்லையென்பது எவரும் மறுக்க உண்மை. இலங்கையில் தமிழ் தெரிந்த சிங்களவர்களை விட சிங்களம் தெரிந்த தமிழர்களே அதிகம் என்பது இதற்கு ஒரு நிதர்சனம்.

எனது அனுபவத்தில் 25 வருடங்களுக்கு முன்னர் எனது சிங்கள நண்பர்கள் அதிலும் இடது சாரித் தோழர்கள் பலர் என்னோடு உரையாடும் போதெல்லாம், தமிழ் தெரியாததையிட்டு வேதனைப்பட்டு, தமது ஆதங்கத்தையும் மன்னிப்பையும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அவர்களின் நேர்மையையிட்டு புலங்காகிதம் அடைந்திருக்கிறேன். சிலவேளைகளில் கண்கலங்கியுமிருக்கின்றேன். ஆனால் இந்த 25 வருடங்களின் பின்னரும் அவர்கள் அதே வசனத்தைப் பேசும் போது உடைந்து போய்விட்டேன். அவர்களால் இன்னமும் ஒரு வசனத்தைக் கூட பேச முடியவில்லை. ஒரு தமிழ் வசனத்தைக் கூட புரிந்துகொள்ளக் கூட முடியவில்லை. ஆக பிரக்ஞையின் தரம் உண்மையாகவே நோந்துகொள்பவர்களிடமும் கூட இவ்வளவு தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

எனது 18 வது வயதில் நான் பத்திரிகையாளனாக ஆன போது எனக்கு சிங்களத்தில் ஒரு வசனத்தையும் முழுமையாக சரியாக பேச வராது. சிங்கள அரிச்சுவடி மாத்திரம் கற்றுக்கொண்டிருந்தேன். இனப்பிரச்சினை குறித்து எழுத வேண்டுமென்றால், இன சகோதரத்துவதுக்காக இயங்க வேண்டுமென்றால் சக சகோதர மொழியை அறியாமல் சாத்தியமில்லை என்று உணர்ந்து சிங்களம் கற்று மொழிபெயர்க்கத் தொடங்கினேன். இரு வருடத்தில் தேர்ந்த மொழிபெயர்ப்பாளனாக ஆகி பல நிறுவனங்களின் நூல்களையும், சஞ்சிகைகளையும், கட்டுரைகளையும் கூட்டங்களையும் கூட மொழிபெயர்க்க ஆரம்பித்து விட்டேன். இன்றும் எனது ஆய்வுகளுக்கு மூல நூல்களாக சிங்கள நூல்களை சரளமாக பயன்படுத்தி வருகிறேன். எனது சொந்த நூலகத்தில் தமிழ், ஆங்கில நூல்களை விட சிங்கள நூல்களே அதிகமாக உள்ளன.

ஒரு தமிழ் பேசும் ஆய்வாளனாக (இத்தனைக்கும் சிங்களம் தெரிந்திருந்தும்) ஆய்வுத்துறை மாணவர்களும், ஊடகவியலாளர்களும் தேசிய சுவடிக் கூடத்திலும், மியூசியம் நூலகத்திலும், தேசிய நூலக சேவை சபை நூலகத்திலும் எதிர்கொள்ளும் சிக்கல்களை பல வருட காலமாக நானும் சகித்துக் கொண்டு அனுபவித்திருக்கிறேன். பல தமிழர்களுக்கு அவை எட்டாக் கனியாகவே இருந்து வருகின்றன. தமிழ் ஆய்வுத்துறை பலவீனமாகிப் போனமைக்கு இந்த அசமத்துவ இடைவெளி ஒரு முக்கிய காரணம் என்பதை நான் அறிவேன். இது குறித்து தனியாக விரிவான கட்டுரையை ஏற்கெனவே எழுதி இருக்கிறேன்.



“தமிழ் மொழியை அமுல் படுத்து” என்கிற முகநூல் பக்கத்தை 2015 செப்டம்பர் 1ஆம் திகதியன்று நான் ஆரம்பித்தேன். எமது சுலோகமாக “பதியுங்கள், பகிருங்கள், கண்டியுங்கள்” என்று தலைப்பிலிட்டோம். முதற் பதிவில் இப்படி எழுதினோம்.

“இந்த மொழி அசமத்துவத்தை அம்பலப்படுத்துவதற்காகவும், விழிப்புணர்வூட்டுவதற்காகவும், அழுத்தம் பிரயோகிப்பதற்காவும் உருவாக்கப்பட்ட குழு இது. இந்த பாரபட்சம் குறித்து எங்கெல்லாம் காண்கிறீர்களோ அவற்றை இங்கு ஒருசேர குவிப்போம். பதிவு செய்வோம். சுட்டிக்காட்டுவோம். கண்டிப்போம், சரிசெய்வோம்”

அன்றாடம் இந்த மொழிப் பிழையை நாம் கண்டு கடுப்பேறியிருந்தாலும் சகிப்புடன் கடந்துசெல்லும் சக பிரஜையாகவே இருந்து வந்தேன். 2015ஆம் ஆண்டு வசந்தகால விடுமுறைக்காக நான் இலங்கை வந்திருந்தபோது கொழும்பு கச்சேரிக்கு ஒரு தேவையின் நிமித்தம் சென்றிருந்தேன். அங்கு வாசலில் ஒரு முறைப்பாட்டு பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த தவறு என்னை திடுக்கிடச் செய்திருந்தது. அதனை இரகசியமாக கைப்பேசியால் படம் எடுத்துக் கொண்டேன். அதில் இப்படி இருந்தது


“සේවක දුක්ගැනවිලි - ஊழியர்களின் மனஅழுத்தம் – Employee grievances”

மன அழுத்தம் என்பது depresion என்கிற அர்த்தமுடையது. இதை மொழிபெயர்த்தவர் யார்? உண்மையில் தெரிந்தே தான் செய்தாரா? இதுவரை எவரும் கவனிக்கவில்லையா? இந்த முறைப்பாட்டு பேட்டியின் மீது முறைப்பாடு கொடுக்கவில்லையா? அல்லது கண்டு கொள்ளவில்லையா? அல்லது கண்டுகொண்டும் ஏன் நமகிந்த வம்பு என்று கடந்து சென்றார்களா? இதன் அர்த்தத்தையே தவறாக விளங்கிக் கொள்ளும்போது எப்படி முறைப்பாடுகள் கிடைக்கும்? இந்த கேள்விகளின் விளைவு தான் இந்த முகநூல் பக்கத்தை ஆரம்பிக்கச் செய்தது.

சகல தளங்களிலும் நிலவும் மொழி அமுலாக்கம் பற்றிய சிக்கல்களையும், பாரபட்சங்களையும் அசமத்துவங்களையும் வெளிப்படுத்தி அதற்கான தீர்வு கோருவதற்கான விழிப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் தான் ஆரம்பித்தேன். ஆனால் வேலைப்பளு காரணமாக அது பெயர்ப்பலகை / அறிவிப்புப் பலகை விவகாரத்துடன் சுருங்கி விட்டது.

ஆனாலும் கணிசமான பலனைத் தந்தது. மொழிகள் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் இந்தத் தளத்தை தாம் ஒரு முறைப்பாட்டுத் தளமாக கருதி கவனித்து வருவதாக எனக்கு அறிவித்தார்கள். ஆனால் அவர்கள் எந்தளவு அக்கறை எடுத்தார்கள் என்பது கேள்விக்குரியதே.

ஆயிரக்கணக்கானோர் எம்முடன் இணைந்துகொண்டார்கள். பலர் நாம் இடும் செய்திகளையும் படங்களையும் இன்னும் பலருக்கு பகிர்ந்து பல்லாயிரக்கணக்கானோரிடம் கொண்டுசேர்த்தார்கள். இன்னும் பலர் தாம் காணும் மொழிப் பிழைகளை எம்முடன் பகிர்ந்து கொண்டார்கள். ஒரு சிலர் தாம் அமைச்சரின் நண்பர்கள் என்றும் தாம் பகிர்ந்தால் அது சிக்கலாகிவிடும் எனவே நீங்களே உங்கள் பக்கத்தில் பகிருங்கள் என்று கோரி உட்பெட்டியில் ஆதாரங்களை தந்து உதவினார்கள். இதுவரை 200க்கும் மேற்பட்ட பதாகைகளின் படங்களைப் பகிர்ந்துள்ளோம். அந்த புகைப்படத் தொகுப்புக்கு “மொழிப் பயங்கரவாதம்” என்றே பெயரிட்டோம்.

ஆக மொத்தத்தில் இவை எண்ணிக்கை அளவில் மிகப் பெரிய அளவில் காணும் போது தான் இதன் பாரதூரத்தத்தை தொகுத்து விளங்கிக் கொள்ள முடிறது என்றார்கள்.

இலங்கையில் பல இடங்களில் மொழி பெயர்ப்பு கிடைப்பதே முதல் பிரச்சினை. அப்படி கிடைப்பதும் கூட பிழையில்லாமல் கிடைப்பது அரிது. புரிந்துகொள்ளும்படி கிடைப்பது அரிது என்பதே நிலை.

பாதை வழிகாட்டிப் பதாகைகள், ஆஸ்பத்திரிகளில் உள்ள வழிகாட்டல், பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கில்லை. இட வசதி கருதி ஒரு சில உதாரணங்களை மாத்திரம் இங்கு குறிப்பிடுகிறேன். மேலதிகமானவற்றை முகநூல் பக்கத்தில் காணலாம்.

கண்டிக்கும் அம்பாறைக்குமிடையில் போக்குவரத்தில் உள்ள அரச போக்குவரத்து பஸ் ஒன்றின் பதாகையில் நீண்டகாலமாக “குண்டி” என்றே இடம்பெற்றிருக்கிறது. எதிமலே என்கிற ஒரு பஸ் பதாகையில் “அலர்ஜி” என்று தமிழில் இடப்பட்டதன் அர்த்தமே தெரியவில்லை.

தாய்மார்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அறிவித்தலில் நாயமார்களுக்கு என்று இடப்பட்டிருக்கிறது.

நிகவெரட்டிய ஆதார வைத்திய சாலை பதாகையில் “சோமகுமாரி தென்னகோன் நினைவு” (Somakumari Thennakoon Memorial) என்பதற்கு பதிலாக “சோமகுமாரி தென்னகோன் அகால மரணம்” என்கிற பதாகை பல வருடங்களாக அங்கு இருக்கிறது.

மினிபே பிரதேச சபை காரியாலயத்தின் வரவேற்பு மேசையில் “வேசை பெருனர்களான உங்களுக்காக” என்று இருக்கிறது. “சேவை” என்று அது தொடங்கியிருக்கவேண்டும்.

வயம்ப பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியொன்றில் அழகான மங்கையர்களைக் கொண்டு காண்பிக்கப்பட்ட மும்மொழி பதாகையில் உலகில் எவராலும் வாசிக்க முடியாத எழுத்துக்களின் கோர்வை தமிழின் பெயரால் இருந்தது.

இதுவெல்லாம் கூட சகித்தாலும் இதையெல்லாம் சரிசெய்ய வேண்டிய அரச கரும மொழிகள் அமைச்சே விட்ட பிழைகளை பல தடவைகள் சுட்டிக் காட்டியிருக்கிறோம். அதில் ஒன்று


“Sri Lankan” our identity Diversity, our strength” என்பது “இலங்கையர்” எம் அடையாளம் பன்மைத்ஆவம் எம் சக்தி” என்று ஒரு பதாகையை வெளியிட்டிருந்தார்கள். பன்மைத்துவத்தையே கேலிக்குள்ளாக்கும் ஒரு அசிங்கமான காரியமல்லவா. அதுவும் சம்பந்தப்பட்ட அமைச்சே இதைச் செய்யலாமா?

கடந்த ஜூலை 18 அன்று அமைச்சர் மனோ கணேசன் வெளியிட்ட “People of Sri Lanka” என்கிற நூலை அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தனது அமைச்சின் மூலம் வெளியிட்டு தேசிய ஐக்கியத்துக்காக வெளியிட்டதாக குறிப்பிட்டார். ஆனால் அந்த நூல் ஆங்கிலத்தில் மட்டும் தான் வெளியிடப்பட்டது. ஏனைய மொழிகளில் பின்னர் வெளியிடப்படும் என்று வழமை போல தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் சிங்களத்திலும் தமிழிலும் வெளியிடுவதை நாசூக்காக, வசதியாக தப்பிச் செல்பவர்கள் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டு விட்டு கடந்து விடுவதை கவனித்திருக்கிறோம். ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சரே இப்படி செய்யலாமா. வேலியே பயிரை மேயலாமா என்கிற கேள்வியை கேட்க வேண்டியிருக்கிறது.


பல இடங்களின் பெயர்கள் திடீர் திடீரென்று தமிழ் பெயர்கள் சிங்களத்தில் உச்சரிக்கும் வகையில் மாற்றப்பட்டு புழக்கத்துக்கு விடப்படுகின்றன. உதாரணத்திற்கு ஆண்டாண்டு காலமாக கொட்டாஞ்சேனை என்றே தமிழில் அழைக்கப்பட்டு வந்தன. ஆனால் சமீப காலமாக பஸ் பதாகைகளில் “கொட்டஹென” என்று சிங்களத்தில் மாற்றப்பட்டுவிட்டன. மட்டக்குளி என்பது தமிழில் இப்போது “மட்டக்குளிய” என்பது, நீர்கொழும்பை “மீகமுவ” என்று தமிழும் காணப்படும் பதாகைகளை காண முடிகிறது. கொழும்பு புறக்கோட்டை பொதுச் சந்தையில் நான் கண்டது “Floating Market” என்பதற்கு சிங்களத்தில் கூட சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழில் “ப்லோடிங் மார்கெட்” என்று தான் ஒலி பெயர்க்கப்பட்டுள்ளது.


ஏன் இலங்கையின் ஆட்சியதிகார பீடமாகவும், சட்டமியற்றும் சபையாகவும் மக்கள் பிரதிநிதிகளின் கூடாரமாகவும் இருக்கும் பாராளுமன்றத்துக்கு செல்லும் பாதையின் வழிகாட்டும் பதாகை ஆங்கிலத்தில் “Parliament Road”  என்று இருக்கிறது அதன் சிங்கள மொழிபெயர்ப்பு கூட சரியாகத்தான் இருக்கிறது தமிழில் “பாராளுமன்றப் பாதை” என்று இடுவதில் என்ன ஆகிவிடப் போகிறது. ஆனால் “பாலிமெண்ட் வீதி” என்று தான் இருக்கிறது. இதக் கடந்து தான் தமிழ் தெரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும், ஏன்  அரசகரும மொழிகள் அமைச்சரும் கூட நிதமும் பாராளுமன்றம் செல்கிறார்கள் என்பதை இங்கு குறிப்பிட்டே ஆகா வேண்டும். இது அனைத்தையும் சிங்களமயமாக்கும் போக்கின் ஒரு வடிவமாகவே எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.  சக சிங்கள சகோதர்களுக்கு அவர்களின் சக தமிழ் சகோதர்கள் இந்த நாட்டில் எதிர்கொள்ளும் இந்த சிக்கலை விளங்கப்படுத்த வேண்டும்

இவை எல்லாம் சம்பவங்கள் அல்ல. பல்லாண்டுகளாக தொடர்ச்சியாக நிகழும் போக்கு. இதனை சரி செய்வதற்கான பொறிமுறை ஒன்றை இன்னமும் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதையிட்டு நம் அரச அமைப்புமுறை வெட்கப்படவேண்டும்.

ஒரு அமைச்சு இருந்தும், திணைக்களம் இருந்தும், அதற்கு மேல் தனியான ஆணைக்குழு இருந்தும், சமீபத்தில் நல்லிணக்க ஆணைக்குழு இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை செய்திருந்தும், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியில் இருந்தும், பல மில்லியன்கள் நிதி ஒதுக்கிட்டிருந்தும், இந்தப பிரச்சினையை தீர்ப்பதற்காக பல மில்லியன் டொலர்கள் வெளிநாட்டு நிதியுதவிகளாக கிடைத்திருந்தும் இந்த போக்கும் அசமத்துவமும் நீடிப்பதையிட்டு வெட்கப்படத்தான் வேண்டும்.


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates