Headlines News :
முகப்பு » , , , , » ஜேம்ஸ் டெய்லர் தேயிலையை அறிமுகப்படுத்தி 150 ஆண்டுகள் - என்.சரவணன்

ஜேம்ஸ் டெய்லர் தேயிலையை அறிமுகப்படுத்தி 150 ஆண்டுகள் - என்.சரவணன்

“அறிந்தவர்களும் அறியாதவையும்” 23

ஜேம்ஸ் டெய்லர் என்கிற பெயரை இலங்கை மறக்க முடியாது. ஜேம்ஸ் டெய்லர் தேயிலையை அறிமுகப்படுத்தி 150 வருடங்கள் இந்த ஆண்டு நிறைவு பெறுகிறது. இந்த ஒன்றரை நூற்றாண்டும் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தேயிலையின் மூலம் கிடைக்கும் வருவாய் இருந்துள்ளது. இலங்கையை வளப்படுத்த, பலப்படுத்த இந்த தேயிலையே அடிப்படை ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது. உலகின் முதற் தர தேயிலையை உருவாக்கிய பெருமை அவருக்கு உரியது. அந்தத் தேயிலைக்கு 150 வயது. அதற்கு மூல காரணமாக இருந்த ஜேம்ஸ் டெய்லர் யார் என்பதை அறிவோம்.

ஆங்கிலேயர்கள் கண்டியைக் கைப்பற்றிய 10 ஆண்டுகளுக்குள் முதன் முறையாக ஜோர்ஜ் பேர்ட் (George Bird) என்பவரால் 1824 இல் கோப்பிச் செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. ஜேம்ஸ் டெய்லரால்  (James Taylor) 1867 இல் தேயிலையும் ஹென்றி விக்ஹம் (Henry Wickham) என்பவரால் 1875 இல் இறப்பரும் அறிமுகமானது.

ஜேம்ஸ் டெய்லர் 29.03.1835 ஸ்கொட்லாந்தில் பிறந்தவர்.  தனது 17வது வயதில் 1852 இல் கோப்பித் தோட்டத்தில் பணிபுரிவதற்காக சிட்னி என்கிற கப்பலில் இலங்கை வந்தடைந்தார். மூன்று வருடத்துக்கு வருடாந்தம் 100 ஸ்டேர்லிங் பவுன்கள் சம்பள ஒப்பந்தத்தின் பேரில் உதவி முகாமையாளர் பதவிக்காக அவர் வந்தார். இலங்கைக்கு வருவதற்கான போக்குவரத்துச் செலவும் அவரே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

கடல் மட்டத்திலிருந்து 4100 அடி உயரத்தில் அமைந்துள்ள லூலகொந்தர தோட்டத்தில் அவர் தனது சொந்த உடல் உழைப்பையும் பிரயோகித்துத் தான் அந்த நிலத்தை சுத்தம் செய்து கோப்பிப் பயிற்செய்கைக்காக தயார் படுத்தினார். 1857 ஆம் ஆண்டு அந்த தோட்ட உரிமையாளர் ஜோர்ஜ் இறந்துபோனார். லூலகொந்தவிலுள்ள 1100 ஏக்கர் பரப்பைக் கொண்ட அந்தத் தோட்டம் கீர் டுண்டஸ் (Keir Dundas & Co) கம்பனியின் உரிமையாளர்களான ஹரிஸ்ஸன், லீக் (Harrison and Leake) ஆகியோருக்கு விற்பனை செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் ஜேம்ஸ் டெய்லருக்கு மிகவும் நெருக்கமாகவும் ஆதரவாகவும் இருந்தார்கள். 1857இல்அவர் அந்த தோட்டத்தின் முகாமையாளராக ஆக்கப்பட்டார்.

லூலகொந்தர (Loolecondera) எஸ்டேட்டில் உள்ள ஜேம்ஸ் டெய்லரின் உருவச் சிலை

இலங்கையில் 1824 ஆம் ஆண்டே சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தேயிலை விதைகள் பேராதனையில் பரீட்சார்த்தமாக பயிரிடப்பட்டது. அதன் பின்னர் 1839இலும் சீனாவிலிருந்தும் அஸ்ஸாமிலிருந்தும் கொண்டு வரப்பட்ட விதைகளை நடச் செய்து பரீட்சித்து பார்க்கப்பட்டது. இலங்கையில் கோப்பி பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்ட போது அதற்கு மாற்றீடான வழிகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

ஜேம்ஸ் டெய்லர் தேயிலை பற்றிய கற்கைகளை மேற்கொண்டு வரும்படி வட இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். ஒரு வருடத்தில் நல்ல செய்தியோடு வந்த அவர் ஏற்கெனவே பேராதனையில் (இன்றைய பேராதனை பூந்தோட்டத்தில்) பாரிய அளவிளான பயிற்செய்கைக்குத் தயார் நிலையில் இருந்த தேயிலையை ஏற்கெனவே கோப்பிச் செய்கைக்காக தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த 19 ஏக்கர் நிலப்பரப்பில் ஜேம்ஸ் டெய்லர்  பணியாற்றிய கண்டி - லூலகொந்தர (Loolecondera) எஸ்டேட்டில் முதற் தடவையாக தன்னுடைய புதிய பாணியில் தேயிலையை பயிரிட்டார் ஜேம்ஸ் டெய்லர்.
ஜேம்ஸ் டெய்லர் நட்டதாக கருதப்படும் முதலாவது  தேயிலைச் செடி மரமாக
பிற்காலத்தில் அவர் எழுதிய குறிப்புகளில் தேயிலைப் பயிரிடுவதற்காக அவர் செய்த இடைவிடாத பரிசோதனை முயற்சிகள், சவால்கள், தோல்விகள், சரி பார்ப்பதற்காகவும் தரத்தை உறுதி செய்வதற்காகவும் அவர் மேற்கொண்ட பணிகள், பயணங்கள் அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார். தேயிலை இலையைக் தனது கைகளால் சுருட்டி, வாடிய அத்தேயிலைகளை களிமண் அடுப்பில் கரியைப் பயன்படுத்தி சுட்டார். இறுதியில் தனது முயற்சியில் பயிரிடப்பட்டு, பராமரிக்கப்பட்டு பரீட்சித்த தேயிலை மற்றவற்றை விட தரமானது என்பதை உறுதி செய்துகொண்டபின்னர் அதே வழியில் பெருப்பித்தார். ஜேம்ஸ் டெய்லர் தேயிலை பயிரிடும் கலையில் நிபுணரானார். 19 ஏக்கரில் தொடங்கிய பணி 1875இல் 100 ஏக்கராக ஆனது பின்னர் அதே லூலகொந்தர தோட்டத்தில் 136 ஏக்கருக்கு விஸ்தரிக்கப்பட்டது.

அதன் வளர்ச்சியைக் கண்ட பல பணக்காரர்கள் தேயிலைப் பயிற்செய்கை பற்றிய ஆலோசனை கேட்டு டெய்லரை அணுகினார்கள். அதன் பின்னர் வேகமாக  மலையகக் காடுகள் தேயிலை விளையும் பூமியாக மாறியது.

அஸ்ஸாமிலிருந்து கொண்டுவரும் தேயிலை விதைகளே தரமானது என்றே அதுவரை நம்பப்பட்டது. அஸ்ஸாம் தேயிலைக்கு நிகரான தேயிலையைத் தான் ஜேம்ஸ் டெய்லரும் செய்து பார்த்தார். ஆனால் உள்நாட்டில் தனது முறையில் வளர்க்கப்பட்ட செடி அதை விட தரமானது என்பதை உறுதிசெய்துகொண்டார். அஸ்ஸாமிலிருந்து இறக்குமதி செய்து முயற்சித்த ஏனைய தோட்டக்காரர்களும் ஜேம்ஸ் டெய்லரை பின்னர் ஏற்றுக் கொண்டார்கள்.

கண்டியில் முதன் முதலாக அவரது தேயிலை 1872 இல் விற்பனையானது. முதலாவது தேயிலை ஏற்றுமதியானது லண்டன் தேயிலை ஏலச் சந்தையில் 1875 ஆம் ஆண்டு விற்பனையானது. 1870 – 80 க்குள் பெருமளவு பிரித்தானிய கொம்பனிகள் தேயிலை உற்பத்திக்காக படையெடுத்தன. அவற்றில் பெரிய அளவில் முதலிட்டவர் தான் தோமஸ் லிப்டன். ஒரு பெரு முதலாளியான அவர் இலங்கை வந்து ஜேம்ஸ் டெய்லரை சந்தித்தார். அவர் ஆரம்பத்தில் தேயிலையை மொத்தமாக கொள்வனது செய்து  ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தைத் தான் மேற்கொண்டார். இன்றும் உலகெங்கும் லிப்டன் தேயிலை பிரசித்தம்.

1873 ஆம் ஆண்டு தேயிலையை உருட்டுவதற்கான ஒரு இயந்திரத்தை (rolling machine) செய்தெடுத்தார். அது தேயிலை உருவாக்கத்தின் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. அந்த வெற்றியின் விளைவாக பன்மடங்கு உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.

ஜேம்ஸ் டெய்லர் முதலாவது தேயிலையை பயிரிடப்பட்ட லூலகொந்தர எஸ்டேட்

தேயிலைச் செய்கையின் வெற்றியைத் தொடர்ந்து 1875 இல் 10,000 ஏக்கர் நிலத்துக்கு விஸ்தரிக்கப்பட்ட செய்கை 1885 இல் அது 48,000 எக்கர்களானது. இந்தப் பணிகளுக்காகத் தான் தென்னிந்தியாவில் இருந்து பெருமளவு இந்திய வம்சாவளியினர் இறக்குமதி செய்யப்பட்டார்கள். ஏற்கெனவே கோப்பிச் செய்கைக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்திய வம்சாவளியினரும் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள். 1840 களில் வருடாந்தம் 30,000 பேர் இறக்குமதி செய்யப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை, 1880களில் 100,000மாக வளர்ச்சியுற்றது. கம்பளையில் 1824இல் முதற் தடவை கோப்பித் தோட்டம் உருவாக்கப்பட்ட போது 14 இந்தியத் தமிழர்கள் தான் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.

ஜேம்ஸ் டெய்லரின் கடிதங்களிலும், குறிப்புகளிலும் தோட்டத் தொழிலாளர்களை “தொழிலாளர்கள்” என்று குறிப்பிட்டதில்லை “எனது கூலிகள்” என்றே அழைக்கிறார். அன்று பலரும் கூலிகள் என்று தால் அழைத்தார்கள். ஏன் சட்டங்கள் கூட “இந்தியன் கூலிகள்”  சட்டம் என்கிற தலைப்பில் இருப்பதையும் கண்டிருக்கிறோம். இது பற்றிய விபரங்கள் “தேயிலை அறிமுகமாகி 100 ஆண்டுகள்” (A Hundred Years of Ceylon Tea: 1867-1967 - Denys Mostyn Forrest - Chatto & Windus, 1967) என்கிற நூலில் அறியலாம்.

மலையகப் பகுதிகளில் போக்குவரத்துக்காக வீதிகளையும், ரயில் பாதைகளையும் சுரங்கப் பாதைகளையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் பெருக்கியது மக்கள் நலனுக்காக அல்ல இந்தத் தேயிலைப் பயிர்செய்கையின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காகவும், அதனை ஏற்றுமதிக்காக கொண்டு சேர்ப்பதற்காகவும் தான். உள்நாட்டு அபிவிருத்தி நோக்கம் எல்லாமே அதற்கடுத்தபட்சம் தான்.

இலங்கை வந்ததிலிருந்து இலங்கையில் வாழ்ந்த 40 ஆண்டுகளில் அவர் தனது விடுமுறைக்காக கூட தாய் நாடு செல்லவில்லை. ஒரே ஒரு முறை எடுத்த விடுமுறையைக் கூட டார்ஜீலிங்குக்கு சென்று தேயிலை விளைச்சல் பற்றிய விபரங்களை அறிந்து வந்தார்.

1891ஆம் ஆண்டு அவரது தோட்டத்துறையில் அவரது சாதனைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது. விருதுடன் கிடைத்த பணத்தை அப்படியே தோட்டத்துறை சம்மேளனத்துக்கு வழங்கினார். 

அதற்கடுத்த வருடம் வயிற்றுக்கடுப்பினால் துன்புற்று அவர் உருவாக்கிய அதே தோட்டத்தில் மரணமெய்தினார். தேயிலை அறிமுகமாகி 25 வது வருடம் இலங்கையில் தேயிலையின் தந்தை ஜேம்ஸ் டெய்லர் 02.05.1892 மரணமாகும் போது அவருக்கு வயது 57. அவர் வாழ்ந்த தோட்டத்திலிருந்து மகியாவைக்கு 24 தொழிலாளர்கள் அவரது பிரேதத்தை 18 மைல்கள் மாறி மாறி தோளில் வைத்து சுமந்துகொண்டு ஊர்வலமாக “சாமி தொரை” என்று அழுதபடி தூக்கிச் சென்றார்கள். காலை தொடங்கிய பயணம் மாலை 4 மணிக்குத் தான் மயானத்தை அடைந்தார்கள். அவர் கண்டி மகியாவை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இந்த ஆண்டு அவர் இறந்து 125 ஆண்டுகள் நிறைவடைகின்றன.



உசாத்துணைக்காக
  • The pioneers, 1825-1900 : the early British tea and coffee planters and their way of life - John Weatherstone.- London : Quiller Press, 1986.
  • A Hundred Years of Ceylon Tea: 1867-1967 - Denys Mostyn Forrest - Chatto & Windus, 1967



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates