Headlines News :
முகப்பு » , , , , , » ஆயிஷா றவுப் எனும் விதேச பெண் ஆளுமை - என்.சரவணன்

ஆயிஷா றவுப் எனும் விதேச பெண் ஆளுமை - என்.சரவணன்

“அறிந்தவர்களும் அறியாதவையும்” 19

இந்த பத்தியில் இலங்கைக்காக பணியாற்றிய அந்நியர்கள் பற்றியே அதிகம் பேசிக்கொண்டு வருகிறோம் அந்த வகையில் இந்தியாவை பிறந்த இடமாகவும், இலங்கையை புகுந்த இடமாகவும் ஆக்கிக்கொண்டு இலங்கையின் வளர்ச்சியில் பங்குகொண்ட ஆயிஷா பற்றியது இன்றைய பத்தி. இந்த ஆண்டு அவரின் நூற்றாண்டு கொண்டாடப்படுகிறது.

1917இல் கேரளாவில் தெல்லிச்சேரி எனும் பகுதியில் பிறந்த ஆயிஷா பீபியின் (Ayesha Beebi Mayen) தந்தை ஒரு முற்போக்காளராவார். மதப் பழமைவாதத்திற்கு அப்பாற்பட்டவராக இருந்துவந்தவர். இந்திய தேசிய காங்கிரசிலும், முஸ்லிம் லீக்கிலும் தலைமைத்துவத்தில் இருந்தவர். 6 வயதிலேயே தாயை இழந்த ஆயிஷா தந்தையின் சுதந்திர வளர்ப்பில் உயர்ந்தவர். தாயில்லாத ஆயிஷா தகப்பனின் அரசியல் செயற்பாடுகளுடன் தான் வளர்ந்து வந்தார்.  மிக அரிதாக பெண்களே பயின்று வந்த அக்காலத்தில்; மலபார் பகுதியிலேயே முதலாவதாக பட்டம் பெற்ற (சென்னைப் பல்கலைக்கழகத்தில்)  முஸ்லிம் பெண் என அறியப்படுபவர். அதன்பின்னர் அங்கேயே சிறப்பு கல்வி அதிகாரியாக நியமனம் பெற்றார்.

கோயம்புத்தூரில் வாழ்ந்து கொண்டு இலங்கையில் வர்த்தகம் செய்து வந்த வர்த்தகர்  எம்.எஸ். எம். றவூப் என்பவரைத் 1943 இல் திருமணம் செய்து 1944 இல் கொழும்பில் குடியேறினார். அன்றைய அரசாங்க சபை உறுப்பினராக இருந்த முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான சேர் ராசிக் பரீத் முஸ்லிம் சமூகத்துக்கு அயேஷாவின் கல்விப் புலமையைப் பயன்படுத்தச் செய்ய வேண்டும் என்று; இலவசக் கல்வியின் தந்தை என்று நாம் கொண்டாடும் கல்வி அமைச்சர் அன்றைய கல்வி அமைச்சர் சீ.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரவுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் அறிமுகப்படுத்தினார். அவர்களின் மூலம் மருதானை மகளிர் பாடசாலைக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

1945ஆம் ஆண்டு உலக யுத்தம் முடியும் வரை பம்பலப்பிட்டியில் இருந்த ராசிக் பரீதுக்கு சொந்தமாக இயங்கிவந்த அரை ஏக்கர் நிலத்தில் இருந்த பாடசாலை மூடப்பட்டு இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. போர் முடிந்ததும் 1946ஆம் நவம்பர் 1ஆம் திகதி ராசிக் பரீத் அந்தக் காணியில் மீண்டும் ஆயிஷாவை அதிபராகக் கொண்டு (ஆங்கில மூல) முஸ்லிம் பெண்கள் கல்லூரியை ஆரம்பித்தார்.

மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் வெகு இரு ஆசிரியைகளும், இருபது மாணவிகளுடனும் சிரமத்தின் மத்தியில் அவர் கட்டியெழுப்பிய அந்தக் கல்லூரியில் இருந்து 25 வருட சேவைக்குப் பின் அவர் 1970 ஆம் ஆண்டு ஓய்வு பெறும்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளைக் கொண்ட பிரபல பாடசாலையாக ஆக்கப்பட்டிருந்தது. இன்று அது 3500க்கும் மேற்பட்ட மாணவிகளைக் கொண்ட பிரமாண்ட பாடசாலை. பெருமளவு முஸ்லிம் பெண்கள் அப்போது கல்வி கற்று உயர்கல்வியையும் முடித்துக் கொண்டு பல உயர் பணிகளில் ஈடுபடத் தொடங்கியிருந்தார்கள். 1960ஆம் ஆண்டு பதியுதீன் முகமத் கல்வி அமைச்சரான வேளை பல தனியார் பாடசாலைகள் அரசாங்க பாடசாலைகளாக ஆக்கப்பட்டபோது இந்தக் கல்லூரியும் அரசின் கீழ் வந்தது.

முஸ்லிம் பெண்கள் கல்லூரி
கல்வி நடவடிக்கைகளை விட அரசியல் நடவடிக்கைகளுக்கே ஆயிஷா அதிக நேரம் செலவிடுகிறார் என பெற்றோரர்கள் மத்தியில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதன் காரணமாக அவரது பதவிக் காலம் முடியுமுன்பே அவர் மாநகர சபையிலிருந்து 1961இல் விலகினார். 12 வருடகால அரசியல் வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர கல்விப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். அவர் அரசியலில் தோல்வியுற்று விலகியவரல்ல, மாறாக கல்விச் சேவைக்காக அரசியல் பணியை பதவியில் இருக்கும்போதே விட்டுக்கொடுத்துவிட்டு வந்தவர்.
ஆயிஷா றவுப்
அரசியல்
பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தைச் சேர்ந்த மேரி ரத்னம் (இலங்கை உள்ளூராட்சி சபையின் முதலாவது பெண்) அயேஷாவின் அரசியல் பிரவேசத்துக்கு போதிய ஊக்குவிப்பைச் செய்தார். அதுபோல ஆயிஷாவின் கணவர் றவுப் உற்சாகம் கொடுத்து ஊக்குவித்து வந்தார்.

கொழும்பில் இயங்கி வந்த மலையாள வர்த்தகர் சங்கத்தைச் சேர்ந்த பெண்களின் சமூக செயற்பாடுகளை ஊக்குவித்து வழிகாட்டி வந்திருக்கிறார். மலையாளிகள் சங்கத்தில் ஆயிஷா வந்த காலத்திலிருந்தே ஈடுபாடு காட்டி வந்தார். 30களில் மலையாளிகளுக்கு எதிரான போக்கு தலைதூக்கியிருந்தபோது இந்த சங்கம் தொழிற்சங்கங்களாலும், இடது சாரிக் கட்சிகளாலும் ஆதரவளிக்கப்பட்டன.

1947ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆயிஷா போட்டியிட்டார். ஏ.ஈ.குணசிங்க, பீட்டர் கெனமன், டீ.பீ.ஜாயா ஆகியோருடன் போட்டியிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. அந்தத் தேர்தலில் தனது கணவரின் உறவினரான எம்.எச்.எம்.முனாஸ் (M.H.M.Munas) அவர்களும் போட்டியிட்டிருந்தார். முனாஸ் நான்காவது இடமும் (8600 வாக்குகள்) ஆயிஷா  8486 வாகுகளைப் பெற்று ஐந்தாவது இடத்துக்கும் வந்தார்கள். முஸ்லிம் வாக்குகள் அவ்வாறு சிதைக்கப்படாமலிருந்தால் ஆயிஷா பாராளுமன்றத்துக்கு அன்று தெரிவாகியிருப்பார்.

அது போல இலங்கை இந்தியர் காங்கிரஸ் (Ceylon India Congress) இல் அப்துல் அசிஸ் அவர்களோடும் பணி புரிந்த ஆரம்ப காலத்தில் இந்திய வம்சாவளியினரின் குடியியல் உரிமைக்காக குரல் கொடுத்தார் ஆயிஷா. ஆனால் அவர் எந்த கட்சியிலும் இணையவில்லை. ஆரம்பத்திலிருந்தே சுயேச்சை வேட்பாளராகவே போட்டியிட்டார். அவரை பிரதி மேயராக ஆக்குவதற்கு முழு ஆதரவையும் அன்றைய இடதுசாரிக் கட்சிகள் வழங்கின. 1954இல் அவர் இடதுசாரிக் கட்சிகளுடனான உறவிலிருந்து துண்டித்துக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.

1949இல் கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே மாநகர சபையில் ஏக காலத்தில் விவியன் குணவர்த்தன, மேரி ரத்னம் ஆகியோருடன் சேர்ந்து மூன்று பெண்கள் அங்கம் வகித்தார்கள். ஆயிஷா; உள்ளூராட்சி மன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் பெண் மட்டுமல்ல அவர். இலங்கையின் முஸ்லிம் அரசியலில் பிரவேசித்த முதல் பெண்ணும் அவர் தான். 1952ம் ஆண்டுத் தேர்தலிலும் வெற்றி பெற்று கொழும்பு மாநகரசபையின் துணை மேயரானார். 

1961 வரை மாநகர சபை அரசியலில் தீவிரமாக கடமையாற்றினார். கொழும்பு மாநகரத்துக்குள் இருந்த சேரிவாழ் மக்களுக்காக பல நலன்களை மேற்கொண்ட அவர் குறிப்பாக சிறுவர்களுக்கான விளையாட்டு திடல்களை அமைப்பது, அங்கு சுகாதார வசதிகளை மேம்படுத்துவது, கழிப்பறை வசதிகளை பெருக்குவது போன்ற விடயங்களில் அதிக கவனத்தை செய்து வந்தார்.

1956 -1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் கல்வி அமைச்சின் மத்திய ஆலோசனைக் கொமிட்டி உறுப்பினராக இருந்திருக்கிறார். முஸ்லிம் பெண் கல்வியை ஊக்குவித்த முஸ்லிம் பெண் கல்விமானாக முஸ்லிம் மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறார். அவரின் 12 வருட அரசியல் காலத்தில் அவர் பெண் கல்விக்காகவும், முஸ்லிம்கள் மத்தியில் உள்ள வரதட்சணை முறையை நீக்குவதற்கான சட்டத்தைக் கொணர்வதற்காகவும் பாடுபட்டார்.

ஓய்வு பெற்றதன் பின்னர் 1971ஆம் ஆண்டு அவர் சாம்பியா நாட்டு உயர் கல்வி நிறுவனத்தில் அரசியல் விஞ்ஞான ஆசிரியையாக கடமையாற்றச் சென்றுவிட்டார்.

1977ஆம் ஆண்டு தேர்தலில் அவருக்கு மீண்டும் அரசியலுக்குத் திரும்பும் ஆர்வம் இருந்தபோதும் அவரை வேட்பாளர் பட்டியலில் உள்ளிட ஐ,தே.க. தவறியிருந்தது. ஆனாலும் அவர் ஜாபிர் ஏ. காதர், ஆர்.பிரேமதாச, வின்சன்ட் பெரேரா போன்றோரின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்தார்.

இலங்கையின் அரசியலில் பங்குபற்றிய முதல் முஸ்லிம் பெண்; இலங்கையர் அல்லாதவர் என்பதுடன் முஸ்லிம் பெண்களின் அரசியலுக்கு வழிகாட்டிய முன்னோடி; ஒரு அந்நியர் என்பதும் கவனிக்கத்தக்கது.

அயேஷவுக்குப் பின்னர் 2000இல் பேரியல் அஷ்ரப் (கணவர் M.H.M.அஷ்ரப் ஹெலிகொப்டர் விபத்தில் பலியானதைத் தொடர்ந்து) அரசியலுக்கு வரும் வரை முஸ்லிம் சமூகத்திலிருந்து பெண்கள் அரசியலில் பரதிநிதித்துவம் வகிக்கவில்லை.

ஆயிஷாவின் கணவர் எம்.எஸ்.எம்.றவுப் 1964ஆம் ஆண்டு தனது 49வது வயதில் மாரடைப்பால் காலமானார். அதன் பின்னர் அவர் தனது இரண்டு பிள்ளைகளுடனும் ஆறு பேரக்குழந்தைகளுடனும் கொள்ளுபிட்டியில் வாழ்ந்தார். 1990ஆம் ஆண்டு தேசபந்து என்கிற உயரிய அரச விருது அரசியலிலும், கல்வியிலும் அவர் ஆற்றிய சேவைக்காக கிடைத்தது.

08.01.1992 அன்று ஆயிஷா தனது 75வது வயதில் மாரடைப்பால் கொழும்பில் காலமானார். ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்தபோதும் அவர் மதத்தோடு தன்னை பிணைத்து வைத்திருக்கவில்லை. அதன் காரணமாகவோ என்னவோ இத்தனை மாண்புக்குப் பிறகும் அவருக்கு முஸ்லிம் சமூகத்தில் உரிய இடம் கிடைக்கவில்லையோ என்று அவர் பற்றி எழுதிய பர்சானா ஹனீபா குறிப்பிடுகிறார்.



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates