Headlines News :
முகப்பு » , , , , » சிறிமாவும் இந்திராவும் பங்கு போட்ட மலையக மக்கள் - என்.சரவணன்

சிறிமாவும் இந்திராவும் பங்கு போட்ட மலையக மக்கள் - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 18

தமிழ் மக்களுக்கெதிரான மனநிலையும், வெறுப்புணர்ச்சியும் வளர்த்தெடுக்கப்பட்ட அரசியல் போக்கில் இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சிந்தனைப் போக்கும் கூடவே வளர்ந்தெழுந்திருந்தன. சிங்கள பேரினவாத அரசானது ஆதிக்க பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களின் அபிலாஷைகளை சரிகட்ட; இந்திய வம்சாவழி மக்களை துடைத்தெறிவது, அந்நியப்படுத்துவது, தனிமைப்படுத்துவது என்கிற வழிமுறையை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி வந்தது. அதன் நீட்சியாகத் தான் சிறிமா அரசாங்கம் எப்பேர்பட்டேனும் எஞ்சியிருக்கும் மலையகத் தமிழர்களை நாடு கடத்துவது என்கிற செயல்திட்டத்தின் அடுத்த கட்டத்தை நிறைவேற்றியது.

மலையகத் தமிழர்களை களையெடுக்கும் நடவடிக்கையை மூன்று கட்டங்களாக காணலாம்
  • 1947ஆம் ஆண்டு இடம்பெற்ற குடியுரிமை பறிப்பு.
  • 1948ஆம் ஆண்டு இடம்பெற்ற வாக்குரிமை பறிப்பு.

1964ஆம் ஆண்டு சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலமும், 1974ஆம் ஆண்டு சிறிமா – இந்திரா ஒப்பந்தம் மூலமும் விருப்பத்திற்கு மாறாக; பலாத்காரமாக நாடு கடத்தியமை.

70 களில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இடையில் நல்ல உறவு வலுப்பட்டிருந்ததை அன்றைய பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகளிலிருந்து அறிந்து கொள்ள முடியும். முக்கியமாக சிறிமா பதவியேற்ற ஒரு வருடத்துக்குள்ளேயே நிகழ்ந்த ஜே.வி.பி கிளர்ச்சியை நசுக்க நேரடியாக இந்தியப் படைகளை அனுப்பி சிறிமா அரசாங்கத்துக்கு கைகொடுத்தது இந்திராவின் அரசாங்கம்.

இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தியோடு மேற்கொண்ட இரு ஒப்பந்தங்கள் 1970 ஆம் ஆண்டு ஆட்சியிலமர்ந்த சிறிமா அரசாங்கம் 1974 இல் செய்து கொண்டது. 
  1. இந்திய வம்சாவழி மக்களை இந்தியாவுக்கு நாடு கடத்துவது
  2. கச்சதீவை இலங்கைக்கு விட்டுகொடுப்பது.

"சிறிமாவோ கச்சத்தீவை வென்றார்" என்று "தினமின" அரசாங்க நாளிதழின் வெளியான தலைப்புச் செய்தி.
இந்திய வம்சாவழி மக்களின் பிரச்சினையை தமது அரசியல் விளையாட்டரங்கில் ஒரு நெடுங்காலமாக பந்தாட்டத்தைத் தான் ஆடினார்கள் இந்த இரு நாட்டுத் தலைவர்களும். எப்படி பந்தாட்டத்தின் போது ஆடப்படும் பந்துக்கு தான் தன்னைப் பற்றிய சுய உரிமையும், தன்னைக் கட்டுப்படுத்தும் உரிமை இல்லையோ அதுபோல மலையக மக்களுக்கும் தம்மைப் பற்றிய முடிவெடுக்கும் உரிமை தமக்கு இல்லாதவர்களாக இருந்தனர். அவர்களின் மீதான தீர்மானம் அவர்களுக்கு வெளியில் தீர்மானிக்கப்பட்டது. அவர்களின் அபிலாசைகளுக்கு எந்த மதிப்பும் இருக்கவில்லை. மலையகத் தலைவர்களின் கருத்துக்களை கூட செவி சாய்க்கவில்லை. மலையக மக்கள் நாயை பிடிப்பதைப் போல பெயர்ப் பட்டியல் பார்த்து தேடித்தேடி வேட்டையாடி பலாத்காரமாக அனுப்பப்பட்டனர். இது இலங்கையின் பேரினவாத சித்தாந்தத்துக்கும், பேரினவாத சக்திகளுக்கும் கிடைத்த பெரு வெற்றி என்றே கூறவேண்டும்.

இந்திய – இலங்கை உறவு
இந்தியா ஒருபுறம் சீனாவுடனும் எல்லைப் போரை சந்தித்து இருந்தது. பங்களாதேசை முன்னின்று பிரித்துக் கொடுத்ததால் பாகிஸ்தானுடனான பகையை மேலும் மோசமாக்கி இருந்தது. இந்த இரண்டு நாடுகளுடனும் இலங்கை நட்பு பாராட்டி வந்தது. இந்த நிலைமையை சரிகட்ட இலங்கைக்கு சில விட்டுக்கொடுப்புகளை செய்ய முன்வந்தது இந்தியா அதன் விளைவு தான் சிறிமா – இந்திரா ஒப்பந்தமும். கச்சத்தீவு ஒப்பந்தமும்.


1962ம் ஆண்டு நடந்த இந்திய சீனப் போரின் போது இலங்கை பிரதமர் சிறிமாவோ சீனாவைக் கண்டிப்பார் அல்லது இந்தியாவுக்கு அனுதாபம் தெரிவிப்பார் என்று இந்திய பிரதமர் நேரு எதிர்பார்த்தார் சிறிமாவோ அப்படி ஒன்றும் செய்யவில்லை. கூட இருந்த இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு அப்படி கண்டிக்க இடமளிக்கவுமில்லை. ஆனால் தமிழரசுக் கட்சியும்,  மலையகத்தில் இருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் இந்தியச் சார்பு நிலையை எடுத்ததோடு சீனாவை ஆக்கிரமிப்பாளனாகக் கண்டித்தன.

சிறிமாவோ பண்டாரநாயக்க மீண்டும் ஆட்சியிலமர்ந்த போது  அணிசேரா கொள்கையை கடைபிடிப்பதாக கூறிக்கொண்டார். வங்காள தேசத்தை உருவாக்கிய 1971ம் ஆண்டின் இந்திய - பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானின் இராணுவத்தினரை ஏற்றிச் செல்லும் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரித்து நிற்க சிறிமாவோ அனுமதித்தார். இதைவிட இதே காலத்தில் இன்னொரு நிகழ்வும் ஏற்பட்டது.

இந்திரா காந்தி அரசாங்கம் 1974 - மே 18 ந்தேதி தார்பாலைவனத்தில் பொக்ரைன் எனுமிடத்தில் அணுகுண்டு பரிசோதனையொன்றை செய்தது. அதன் மூலம் அணுகுண்டு வெடிப்பில் 6 வது நாடாக இந்தியா ஆனது. இதனால் வெளியான உலகக் கண்டனங்களை பாகிஸ்தான் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. இந்தியா மீது பொருளாதார தடைகள் மெதுவாக ஆரம்பமாகின. இதை பயன்படுத்தி இந்தியாவை தனிமை படுத்த நினைத்த பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை ஐ.நா. சபையில் கொண்டு வர முயன்றது. அப்போது ஐ.நாவின் 15 தற்காலிக உறுப்பு நாடுகளின் தலைமை பொறுப்பில் இலங்கையும் இருந்தது. இலங்கையை சரிகட்டி அத்தீர்மானத்தை முறியடித்தது இந்தியா.

இதற்கான பிரதியுபகாரமாகத் தான் இறு நாடுகளுக்கு இடையிலான நட்பும் விட்டுக்கொடுப்புகளும் நிகழ்ந்தன. கச்சத்தீவு இலங்கைக்கு 1974 யூன் 24 தேதி உடன்படிக்கை ஒன்றின் மூலம் பேசி முடிவெடுத்து. 1974 ஜீன் 28 ந்தேதி இரண்டு நாட்டு பிரதமர்களும் தங்களது நாடுகளில் ஒரே நேரத்தில் அறிவித்தார்கள். இவை எல்லாமே இரு நாடுகளும் விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ள வழி வகுத்தன.


பங்கு பிரித்தல்
1964ம் ஆண்டு செப்ரெம்பர் 25ம் திகதி அளவில் மலையக வம்சாவழியினர் 9,75,000 பேர் இலங்கையில் வாழ்ந்திருந்தனர். இவர்களில் 5,25,000 பேருக்கு பிரஜாவுரிமை வழங்க இந்தியா சம்மதித்தது. இலங்கை 3,00,000 பேருக்கு பிரஜாவுரிமை வழங்க சம்மதித்தது. மீதி 1,50,000 பேரின் பிரஜாவுரிமை பற்றி கைச்சாத்திடப்பட்ட சிறீமா - இந்திரா ஒப்பந்தத்தின் மூலம் ஆளுக்குப் பாதியாக பங்கிட்டுக் கொள்வதென தீர்மானித்துக் கொண்டனர். இதன் படி 75,000 பேர் வீதம் இரு நாடுகளும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டன.

சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் வன்மையாகக் கண்டித்தபோதும் இரு அரசாங்கங்களும் அவற்றைக் கணக்கில் எடுக்கவில்லை. இதனை ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினையாகப் பார்க்காமல், மாட்டு சந்தையில்  பேரம் பேசுவதைப் போல கணக்கு முடிவுகள் எடுக்கப்பட்டன. மக்களினுடையதோ, மக்கள் பிரதிநிதிகளினுடையதோ விருப்பங்கள் எதுவும் கேட்கப்படவில்லை. முடிவுகள் கட்டாய அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டன. மறுபக்கத்தில் இந்தியாவில் அமையப்போகும் புதுவாழ்வு பற்றி கவர்ச்சிகரமான பிரச்சாரங்கள் செய்யப்பட்டபோதும் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

அவலம்
அப்போது இலங்கையில் இருந்த இந்திய வம்சாவழி மக்களில் 75 வீதமானோர் தோட்டத் தொழிலாளர்களாக இருந்தனர். எஞ்சியோர் பல்வேறு பட்ட வேலைப்பிரிவினர்களாக நாடு முழுவதும் விரவியிருந்தனர். இப்படி நாடுகடத்தப்பட்டவர்களில் அவர்கள் எல்லோரும் தான் அடங்கினர். நகர சுத்தித் தொழிலாளர்களாக இருந்து வந்த இந்திய வம்சாவளியினரின் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினரும் இப்படி வலுக்கட்டாயமாக பிடித்து அனுப்பப்பட்டிருந்தனர். இவர்கலில் பலர் இந்திய பூர்வீகத்தையோ, தமிழ் நாட்டுத் தொடர்புகளையோ கூட அறிந்திராதவர்கள்.

இலங்கையில் பிறந்தும் பலர் எந்த குடியுரிமையும் பெறாதவர்கள். பின் தங்கிய பொருளாதார நிலை. குடியுரிமை இல்லாதவர்கள் என்பதால் வாக்குரிமையோ அரசியல் உரிமையோ கூட கிடையாதவர்கள். அவ்வப்போது நடக்கும்இனவாத தாக்குதல்களால் ஏற்பட்டிருந்த பாதுகாப்பின்மை, ஏனைய இலங்கையர்களுக்கு சமமாக கல்வி வாய்ப்பை பெறமுடியாத போக்கு, உரிய சுகாதார வசதிகளை பெறமுடியாத நிலை போன்ற காரணிகளால் விரக்தியுற்று இந்தியாவுக்கே சென்று விடலாம் என்கிற மன நிலையை வளர்த்துக் கொண்டவர்கள் திரும்பி விடலாம் என்கிற முடிவுக்கு வந்தவர்களும் இருந்தனர்.


இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னர் வந்த மூதாதயர்களுக்குத் தான் இந்தியாவைத் தெரிந்திருந்தது. இந்தியாவுக்கு அழைத்துவரும்போது இலங்கையைப் பற்றி எப்படி ஆசை வார்த்தைகளை காட்டி  அவர்களை அழைத்து வந்தார்களோ அது போல இந்தியாவில் அமையப் போகும் புதுவாழ்வு பற்றி கவர்ச்சிகரமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த புனைவுகள் எதுவும் எடுபடவில்லை. 

ஒரு வருடம் வெளியேறுவதற்கான கால அவகாசமாக கொடுக்கப்பட்டதுஅதற்கு மேல் தங்கியிருந்தவர்களை அரசாங்கம் கைது செய்து நாடுகடத்தியது. இந்த காலப்பகுதியில், நாய்களை பிடித்துச் செல்வது போல பொலீஸ் ஜீப்புக்களில் ஏற்றி, உடுத்திருந்த உடுதுணியுடன் நாடுகடத்திய சம்பவங்கள் சர்வசாதாரணமாக இடம்பெற்றிருந்தன. அந்த பயணத்தின் போது கூட பியோன் முதல் பொதி தூக்குபவர் வரை, கிளார்க் முதல் உயர் அதிகாரிகள் வரை பலர், இம் மக்களை ஏமாற்றிப் பணத்தையும், பொருட்களையும் பிடுங்கிக் கொண்டனர்.

அப்படி நாடு கடத்தப்பட்டவர்களின் பயணத்தின்போது, குடும்ப உறவுகள் துண்டிக்கப்படுவதுதான் பெரும் சோகமாக இருந்தது. பிரஜாவுரிமை முடிவுசெய்யப்பட்டபோது தந்தையுடன் சேர்த்து பிரஜாவுரிமை பெற்ற குழந்தைகள் பயணம் செய்யும் காலத்தில் 18 வயதினைக் கடந்திருந்தால் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்குப் பிரஜாவுரிமை கிடைப்பதற்கு முன்பே பெற்றோர்களுக்கு வெளியேற வேண்டிய அறிவித்தல் வந்துவிடும். இதனால் தந்தையும் பிள்ளைகளும் பிரிய நேரிட்டது. சில நேரங்களில் கணவனை மனைவி பிரியநேரிடும். ஒரே குடும்பத்தில் ஒருவர் இலங்கைப் பிரஜாவுரிமையை கொண்டிருப்பார். இன்னொருவர் இந்தியப் பிரஜாவுரிமையைப் பெற்றிருப்பார். அவர்கள் பிரிய நேரிடும். அந்தப் பிரிவின் சோகங்களை, அழுகுரல்களை 1970 – 1977 காலத்தில் மலையகத்தின் புகையிரத நிலையங்களான நாணுஓயா, ஹட்டன், நாவலப்பிட்டி, பதுளை போன்றவற்றில் தினமும் காண நேர்ந்தது.

இந்தியாவிற்கு அனுப்பப்பட்டவர்கள் ஒரே பகுதியில் குடியேற்றப்படாமல் வேறு வேறு பகுதியில் குடியேற்றப்பட்டமையினால் தம்மை நிறுவனமயப்படுத்தி, குரலெழுப்ப முடியாதவர்களாக இருந்தனர். காலநிலை வேறுபாடுகளுக்கு முகம்கொடுக்கவும் இவர்கள் சிரமப்பட்டனர்.

தொண்டமானுடன் இந்திராவும் இந்தியத் தூதுவரும்

இதில் உள்ள உள்ள இன்னோர் கவலை தந்த விடயம் என்னவென்றால் அதுவரை நாடுகடத்தலுக்கு எதிராக பேசி வந்த தமிழரசுக் கட்சி (அப்போது தமிழர் கூட்டணியாக ஆகியிருந்தது) இந்த ஒப்பந்தத்தை வரவேற்றது. இறுதியாக 1972 இல் மல்லாகம் மாநாட்டுத் தீர்மானத்திலும், அதன் பின்னர் அரசாங்கத்துக்கு முன்வைத்திருந்த கோரிக்கையிலும் கூட மலையக மக்களின் குடியுரிமைப் பிரச்சினை முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சிறிமா – இந்திரா ஒப்பந்தத்தின் மூலம் நாடற்றோர் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாக போற்றியது தமிழர் கூட்டணி. அப்போது தொண்டமானின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் கூட்டணியில் இணைந்தே இருந்தது.

சிறிமா அரசாங்கத்துக்கு எதிரான கூட்டு என்கிற வகையில் தொண்டமான் இதனை சகித்துக் கொண்டிருந்தார் என்றே கருத வேண்டியிருக்கிறது.

ஒரு இடைச்செருகல்
72ஆம் ஆண்டு யாப்பை அறிமுகப்படுத்திய வேளை அரசாங்கத்தின் ஆயுட்காலத்தை குடியரசு தினத்திலிருந்து ஐந்தாண்டுகள் என்று தமது பதவியை சிறிமா அரசாங்கம் நீடித்ததுக்கு எதிராக ஜே.ஆர் ஒரு இயக்கம் தொடங்கினார். ஜே.ஆர். அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ஆகியிருந்தார். 1974 மே 22 ஆம் திகதி குடியரசு தினத்தன்று சிறிமாவின் தொகுதியான அத்தனகல்லையில் ஒரு பெரும் சத்தியாக்கிரகத்தை நடத்த திட்டமிருந்தார் ஜே.ஆர். அதனை முறியடிப்பதற்கான வழிகளை அரசாங்கமும் திட்டமிருந்தது. அந்த சத்தியாக்கிரகத்தில் தொண்டமான் தமது தொண்டர்களுடன் பெருமளவு ஆதரவை வழங்கியிருந்தார்.

அதுமட்டுமன்றி தமிழர் கூட்டணியின் ஆதரவை ஜே ஆர்; தொண்டமானுக்கு ஊடாக பெற்றுக்கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையிலான உறவு வலுப்பட்டது. அந்த சம்பவத்திலிருந்து தான். அரச அடக்குமுறைகளையும் மீறி அந்த சத்தியாக்கிரகப் போராட்டம் திட்டமிட்டபடி நிறைவேறி இருந்தது.

கள்ளத்தோணிகளை விரட்டு
ஒவ்வொருமுறையும் இந்தியா வம்சாவளியினர் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் போது சிங்கள பேரினவாத சக்திகள் அரசுக்கு கொடுத்த அழுத்தம் மலையக மக்களுக்கு இருக்கவில்லை. பிரபல சிங்களத் தேசிய பத்திரிகையான திவய்னவில் (18.01.2010) பலர் அறிந்த எழுத்தாளரான தர்மரத்ன தென்னகோன் எழுதிய கட்டுரையில் சிறிமா – இந்திரா ஒப்பந்தத்தின் மூலம் தோட்டப்புற கள்ளத்தோணிகளுக்கு குடியுரிமையையும், வாக்குரிமையையும் வழங்கி தொண்டமானைத் திருப்திபடுத்தினர் என்கிறார். அதாவது இலங்கை 75,000 பேரை எற்றுக்கொண்டதும் தவறு என்று அந்த கட்டுரயில் வாதிடுகிறார். இப்படி கள்ளதோணிகள் விரட்டும் படி கோருகின்ற பல நூல்களும் கட்டுரைகளும் ஆயிரக்கணக்கில் காணக் கிடைக்கின்றன. அவை சிங்கள மக்கள் மத்தியில் இன்றளவிலும் வெறுப்புணர்வை வளர்த்து விட்டிருக்கிறன. வளர்த்து வருகிறன.
“இலங்கையின் பொருளாதார பிரச்சினையை தணிப்பதற்காகவே இந்திய வம்சாவழித் தொழிலாளர்களை திரும்ப பெற்றுக்கொள்ள சம்மதித்தோம்”
என்று முன்னால் இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் ஒரு பேட்டியில் நியாயம் கற்பித்திருந்தார்.  50 களில் தனது காங்கிரஸ் கட்சியின் தலைவர் நேரு கூறியதை அவருக்கு நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.

இந்தியப் பிரதமர் நேரு - இலங்கைப் பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க
இலங்கையிலுள்ள இந்திய வம்சாவழி மக்களைப் பற்றிய பிரச்சினை இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது பிரதமர் நேரு இப்படி கூறினார். (9-4-1958).
"இந்திய வம்சாவழி மக்களின் பிரச்சினை இலங்கை அரசாங்கத்தின் பிரச்னையாகும். ஏனென்றால் இந்த மக்கள் இந்தியாவின் குடிமக்கள் அல்லர். இவர்கள் இலங்கைக் குடிமக்களே. இது அவர்களின் பிரச்னை. நம்முடைய பிரச்னை அல்ல. இலங்கையிலேயே பிறந்து அங்கேயே பல ஆண்டுகளாக வாழ்ந்த மக்களை அங்கிருந்து வெளியேறி இந்தியாவுக்குச் செல்லுமாறு கூறுவது ஏற்க முடியாதது. இதை ஓர் அரசியல் பிரச்னையாகவோ, தகராறாகவோ கருதாமல் மனிதாபிமானப் பிரச்சினையாகக் கருதவேண்டும்.''

இந்தியா செய்த துரோகம்
சிறிமா – இந்திரா ஒப்பந்தம் மலையகத் தமிழர்களின் அரசியல் பலத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கை வாழ் தமிழ் மக்களின் அரசியல் பலத்தையும் பலவீனப்படுத்தியது என்றால் அது மிகையில்லை. இந்த நாடுகடத்தலினால் ஒரு தேசிய இனமாக உருவெடுத்து வந்த மக்களின் தொகையை செயற்கையாக அழித்ததன மூலம் இனவாதம் வெற்றி பெற்றது.

இந்த இழப்பு பல்வேறு வழிகளிலும் தேசிய இனத்தின் ஆதாரமாக உள்ள நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம், பொருளாதாரம் என்பவற்றைச் சிதைக்கக் காரணமாக அமைந்தது. குறிப்பாக சிங்களக் குடியேற்றங்கள் இலகுவாக அமைக்கப்படுவதையும், பெருந்தோட்ட நிலங்கள் காடாக கைவிடப்படுவதையும், சிறுதோட்டக்காரர்களுக்கு நிலங்கள் பிரித்துகொடுப்பதையும் இந்த நாடுகடத்தல் மேலும் இலகுவாக்கியது.

அந்த வகையில் இலங்கையின் பேரினவாத அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு இந்தியா துணைபோனது என்றே கூற வேண்டும்.

மலையக மக்களின் வரலாற்றில் இந்த நாடுகடத்தல் மிகப்பெரும் சோக நிகழ்வு. இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட தினம் மலையகத் தேசம் துக்க நாளாகவோ, கருநாளாகவோ அனுஷ்டிக்க முன்வரவேண்டும். இருப்பதையும் இழக்காமல் இருக்கவும் மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை புதிய தலைமுறை புரிந்து கொள்ளவும் ஒரு விழிப்புணர்வு நாளாக ஆக்கப்படவேண்டும்.

(துரோகங்கள் தொடரும்)

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates