Headlines News :
முகப்பு » » அழிவிலிருந்து பாதுகாக்கப்படவேண்டிய பெருந்தோட்டத் தொழில்துறை - துரைசாமி நடராஜா

அழிவிலிருந்து பாதுகாக்கப்படவேண்டிய பெருந்தோட்டத் தொழில்துறை - துரைசாமி நடராஜா


பெருந்தோட்டங்களின் அழிவு நிலை நோக்கிய பயணம் தொடர்பில் பலரும் தமது விசனப்பார்வையினை செலுத்தி வருகின்றனர். பெருந்தோட்டங்கள் பாதுகாக்கப்படாவிட்டால் தொழிலாளர்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும். சமூகச் சிதைவுகளும் ஏற்படும். இதனால் பாதக விளைவுகள் பலவும் மேலோங்கும். இச்சிக்கல் நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு பெருந்தோட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுதல் வேண்டும் என்பதும் புத்திஜீவிகளின் வலியுறுத்தலாக உள்ளது.

பெருந்தோட்டங்கள் இந்த நாட்டில் முதுகெலும்பைப் போன்றன. நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் பெருந்தோட்டத்துறை கணிசமான ஒரு வகிபாகத்தினைக் கொண்டிருக்கின்றது. தேசிய வருமானத்தின் முக்கிய பங்குதாரர்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இருந்து வருகின்றமையும் தெரிந்த விடயமாகும். நாடு உயர அர்ப்பணிப்புடன் உழைக்கின்ற தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்னும் தாழ்வு நிலையிலேயே இருந்து வருவது கசப்பான ஒரு விடயமாகவே உள்ளது. இம்மக்களின் எழுச்சி கருதிய அரசில் தொழிற்சங்கவாதிகளின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தியான நிலைப்பாடுகள் தொடர்ச்சியாக இருந்து வருவதும் தெரிந்த விடயமாகும். ஆட்சியிலுள்ள அரசாங்கங்களை வலியுறுத்தி மலையக அரசியல்வாதிகள் இன்னுமின்னும் இம்மக்களுக்கு என்று அதிகமான சேவையினை வழங்கி இருக்க முடியும். எனினும் உரிய சாதக விளைவுகள் பெற்றுக் கொடுக்கப்படாதது வருந்தத்தக்க விடயமாகும் என்பது பலரின் வேதனையாக உள்ளது. இந்த வேதனையின் நியாயத்தன்மை தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

அரசியல், பொருளாதாரம், சமூகநிலை, கல்வி மட்டம் போன்று சகல நிலைகளிலும் மலையக மக்களின் பின் தங்கிய வெளிப்பாடுகளே அதிகமாக உள்ளன. இத்தகைய பின்தங்கிய நிலைமைகளை மாற்றியமைக்க அரசாங்கம் விசேட உதவிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் பல கோஷங்களும், கோரிக்கைகளும் கடந்த காலத்தில் எதிரொலித்தன. குறிப்பாக புதிய அரசியலமைப்பு குறித்த முன்னெடுப்புகள் தொடர்பில் தேசிய அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி இருந்தமை தொடர்பில் நீங்கள் நன்கறிவீர்கள். இந்த புதிய அரசிலயமைப்பில் மலைய மக்கள் பின்தங்கிய சமூகம் என கருதி அம்மக்களுக்கான விசேட சலுகைகள் யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று பலரும் பல்வேறு கருத்துக்களையும் முன்வைத்திருந்தனர். எனினும் புதிய அரசியலமைப்பின் உருவாக்கம் குறித்த நகர்வுகள் தற்போது முடங்கியுள்ள நிலையில் வாதப், பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் புதிய அரசியலமைப்பு கைகூடுமா? என்ற கேள்வி இப்போது மேலெழுந்திருக்கின்றது.

எவ்வாறெனினும் மலையக மக்களின் மேம்பாடு கருதிய விசேட உதவிகள் அரசினால் எவ்வாறேனும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.

பெருந்தோட்டத் தொழிற்றுறை என்பது எமது நாட்டின் இதயமாக விளங்குகின்றபோதும் இன்று அந்த தொழிற்றுறையானது பல்வேறு சவால்களுக்கும் இடர்பாடுகளுக்கும் நெருக்கீடுகளுக்கும் முகம் கொடுத்து வருவது தெரிந்த விடயமாகும். பெருந்தோட்ட தேயிலை விளைநிலங்கள் இன்று கணிசமாக குறைவடைந்திருக்கின்றன. பல்வேறு தேவைகளுக்காக தேயிலை விளைநிலங்களை குறிவைக்கும் கலாசாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அபிவிருத்தித் திட்டங்கள் என்னும் பெயரில் பல்லாயிரக்கணக்கான தேயிலை விளைநிலங்கள் பெருந்தோட்டங்களில் பறிபோய் இருக்கின்றன.

தேயிலை உற்பத்தி செய்யும் பரப்பு மலையகத்தில் ஒரு இலட்சத்து 12 ஆயிரம் ஹெக்டேயர் மட்டுமே காணப்படுவதாக செய்திகள் வலியுறுத்துகின்றன. தேயிலை விளைநிலங்களின் படிப்படியான சுரண்டல்கள் தோட்டத் தொழிலாளர்களிடையே பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன. வேலை நாட்கள் குறைக்கப்படுவதற்கும் இத்தகைய நடவடிக்கைகள் உந்து சக்தியாக இருந்து வருவதும் புதிய விடயமல்ல. பெருந்தோட்டக் காணிகள் சுவீகரிக்கப்படுகின்ற நிலையினை இனவாத நோக்கிலும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.தொழிலாளர்களின இருப்பினை கேள்விக்குறியாக்கும் அல்லது சமூக சிதைவினை உண்டுபண்ணும் ஒரு உள்நோக்கம் இதில் இருப்பதாகவும் சிலர் பேசிக்கொள்வதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

சிறு தேயிலை தோட்டங்களை ஊக்குவிக்க பல்வேறு உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்குகின்ற அரசாங்கம் பெருந்தோட்டங்களை மாற்றுக் கண்கொண்டே நோக்கி வருகின்றது என்கிற விமர்சனங்களும் உள்ளன. சம்பள உயர்வு, குடியிருப்பு நிலைமைகள், உற்பத்தி அதிகரிப்பு உதவிகள் என்று பலவற்றையும் நோக்குகின்றபோது அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையினை எம்மால் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. சில சமயங்களில் இலங்கையர் என்கிற பொது வரையறைக்குள் மலையக மக்கள் உள்ளடக்கப்படுவது இல்லையா? என்கிற கேள்வியும் பிறக்கின்றது. புறக்கணிப்பு நிலைமைகளும் இன்று பெருந்தோட்டங்களின் இயல்பு நிலையை பாதித்து வருகின்றன.

பெருந்தோட்டக் கம்பனிகள் தோட்டங்களை பொறுப்பேற்றபோது பல்வேறு தொழிலாளர்களின் நலன் சார்ந்த வாக்குறுதிகளையும் வழங்கி இருந்தனர். தம் வாழ்வில் ஒரு மிகப்பெரிய மாறுதல் ஏற்படப் போவதாக தொழிலாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? பட்டு வேட்டி குறித்து கனவில் இருந்த தொழிலாளர்கள் கட்டி இருந்த கோவணமும் இன்று களவாடப்பட்டிருக்கின்றது. தொழிலாளர்கள் குனிந்து நிமிரும் முன் அடுத்த அடி அவர்களை மீண்டும் குனிய வைக்கின்றது. நவீன அடிமை நிலையில் தொழிலாளர்ளின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது. உரிமைகள் மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலைமைக்கு மலையக அரசியல் மற்றும் தொழிற்சங்கவாதிகளுக்கு இடையே காணப்படும் ஒற்றுமையின்மை பிரதான காரணமாக சித்திரிக்கப்படுகின்றது. இன்று உரியவாறு பராமரிக்கப்படுவதில்லை. இலாபத்தை மட்டுமே குறியாகக் கொண்ட கம்பனிகள் தொழிலாளர்களை கசக்கிப் பிழிகின்றனர். கூட்டு ஒப்பந்தம் பல சந்தர்ப்பங்களில் மீறப்பட்டு வருகின்றது. முதலாளிமார் சம்மேளனம் சமர்ப்பிக்கின்ற புள்ளி விபரங்கள் தொடர்பில் இப்போது கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. உண்மையான புள்ளி விபரங்களை மூடி மறைத்து முதலாளிமார் சம்மேளனத்தினர் நாடகமாடுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும் தொழிற்சங்கங்கள் எந்தளவு புள்ளி விபர உறுதிப்பாட்டுடன் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்கின்றன என்பது தொடர்பிலும் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பெருந்தோட்ட தொழிற்றுறையின் அழிவிற்கு தொழிலாளர்களும் சில வேளைகளில் காரணகர்த்தாக்களாக இருப்பதாகவும் சிலர் விசனப்பட்டுக் கொள்கின்றனர். சில தொழிலாளர்களிடத்தில் தொழில் ரீதியான அர்ப்பணிப்பு மற்றும் கரிசனை என்பன காணப்படுவதில்லை. ஏனோ? தானோ? நிலையிலேயே அவர்களின் போக்கு காணப்படுகின்றது. இது எமது இருப்பாகும் என்பதனை இத்தகையோர் மறந்து செயற்படுவதனையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. உழைப்பில் சிலரின் கவனம் குறைந்து காணப்படுகின்றது. இத்தகை நிலைமைகளும் தோட்டத்துறையின் வீழ்ச்சிக்கு வலுசேர்ப்பதாக புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும். எனினும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை பொறுத்தவரையில் உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெற்றுக்கொள்வதென்பது ஒரு கனவு நிலையாகவே உள்ளது. ஊதிய அதிகரிப்பு தொடர்பில் இம்மக்கள் பல்வேறு சவால்களையும் சந்தித்து வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. கூட்டு ஒப்பந்தக் காலப் பகுதியில் தொழிலாளர்களின் போராட்டமானது தெளிவாக மெதுவாக பணிபுரியும் போராட்டம், சத்தியாக்கிரகம், பூஜை வழிபாடுகள், கொழும்புக்கு தேயிலைப் பெட்டிகள் ஏற்றிச் செல்லப்படுவதனை தடுத்து நிறுத்துதல் என்றெல்லாம் பல்வேறு வகையான முன்னெடுப்புகள் கடந்தகால கூட்டு ஒப்பந்தம் கையொப்பமிடும் காலகட்டத்தில் இடம்பெற்று வந்துள்ளன. என்னதான் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோதும் தொழிலாளர்கள் உரிய சம்பள உயர்வினை பெற்றுக் கொள்வதென்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்திருக்கின்றது. இத்தகைய ஊதிய பற்றாக்குறை நிலைமைகளும் பெருந்தோட்டங்களின் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்குவதாகவே இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பெருந்தோட்டத் தொழிற்றுறை என்பது தற்போது ஒரு முன்மாதிரியாக இல்லை. இத் தொழிற்றுறையின் சமகால போக்குகளை அவதானிக்கின்றவர்கள் இத்துறையில் ஈடுபடுவதற்கே அச்சப்படுகின்றனர். ஓதுங்கிக் கொள்கின்றனர். பெற்றோர் தொழிற்றுறையில் படுகின்ற துன்ப துயரங்களை பிள்ளை பார்க்கின்றபோது இயல்பாகவே பிள்ளைக்கு இத் தொழிற்றுறையின் மீது ஒரு வெறுப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. தொழில் நவீனத்துவப்படுத்தப்படவில்லை. பாரம்பரிய அணுகுமுறைகளே இன்னுமின்னும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது புதியவர்கள் பெருந்தோட்ட தேயிலைத் தொழிற் துறையில் ஈடுபட முன்வராதிருப்பது நியாயமானதேயாகும் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.

பெருந்தோட்டங்களில் தேயிலை விளைநிலம் குறைவடைந்து வருவதனைப் போன்றே தேயிலை செடிகளும் பல சந்தர்ப்பங்களில் அழிவுக்கு உள்ளாகின்றன. தோட்டப்புறங்களில் உள்ள பெறுமதிமிக்க மரங்கள் தறிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இத்தகைய பாரிய மரங்கள் தேயிலைச் செடிகளின் மீதில் விழுவதினால் பல தேயிலைச் செடிகள் நாசமாகின்றன. அநேகமான தோட்டங்களில் இந்நிலைமை இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இவற்றோடு காலநிலை சீர்கேடு உள்ளிட்ட பல காரணங்களினாலும் தேயிலைச் செடிகள் அழிவடைகின்றன. இவ்வாறாக தேயிலை செடிகளின் அழிவு நிலை தொடர்ச்சியாக இடம்பெறுகின்றபோதும் அதற்கு மாற்றீடாக மீள் நடுகையை மேற்கொள்வதில் கம்பனியினர் உரிய கரிசனையை வெளிப்படுத்துவதாக இல்லை. இது ஒரு முக்கிய விடயமாகும். மீள் நடுகை உரியவாறு இடம்பெறாத நிலையானது உற்பத்தி குறைவு, வேலை நாள் குறைவு போன்ற பல நிலைமைகளுக்கும் இட்டுச் செல்கின்றது. பெருந்தோட்டங்கள் திட்டமிட்டு காடாக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

பெருந்தோட்டங்களின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இருப்பை தக்கவைத்துக் கொள்ள அனைவரும் பொறுப்புடன் செயற்படுதல் வேண்டும். சுய இலாபங்களையும் அற்ப சலுகைகளையும் புறந் தள்ளிவிட்டு சமூக மேம்பாட்டுக்காக கைகோர்த்தல் வேண்டும். இல்லையேல் மலையக சமூகமும் தோட்டங்களும் தடமிழந்து போவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates