Headlines News :
முகப்பு » » குப்பையை ஆளுமா "நல்லாட்சி"? - ஜீவா சதாசிவம்

குப்பையை ஆளுமா "நல்லாட்சி"? - ஜீவா சதாசிவம்


குப்பைமேடு சரிந்தது. அரசியல்வாதிகள் களத்துக்குச் சென்றார்கள். தொண்டு நிறுவனங்கள், தனவந்தர்கள் உட்பட பலரும் உதவிகளை வழங்கினார்கள். இதைத்தானே   நாம் தொடர்ந்து செய்து வருகின்றோம். 'மீதொட்டமுல்ல' விற்கும் அப்படித்தானா என எண்ணத் தோணுகிறது.  

மீரியபெத்த மண்சரிவு தந்த தாக்கத்தையும் சோகத்தையும் இப்போது மீதொட்டமுல்ல குப்பைமேட்டுச் சரிவு தந்திருக்கிறது. இந்த சரிவை பார்வையிட  பிரதமர், அமைச்சர்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு அதிகாரிகள், அரச – அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் என பலரும் பார்வையிட்டு அனுதாபங்களை தெரிவித்து வந்தனர். பல்வேறு உதவிகளையும் வழங்கினார்கள். தற்காலிமாகவே...

இந்த சம்பவங்களே கடந்தவார செய்திகளாகவும் இருந்தது. இது யாவரும் அறிந்ததே!. 

இங்கு விஜயம் செய்தவர்கள் பலரும் சாதாரண நிலையில்  செல்ல பிரதமர் மாத்திரம் 'கிளினிக்கல் மாஸ்க்' அணிந்து சென்றதை ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தது.

'ஒரு குறிப்பிட்ட மணித்தியாலத்திற்குள் குப்பைமேட்டுப் பகுதியைப் பார்வையிடச் செல்வதற்கு அவர் அணிந்திருந்த அந்த மாஸ்க் பற்றியதான பல்வேறு கருத்துக்கள் சமூக வளைத்தளங்களில் பல விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது'. இங்கு பல வருடங்களாக வாழ்ந்து வரும் மக்கள் 'மாஸ்க்'  இல்லாமலேயே இதனையே சுவாசித்து வந்தனர் என்பதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. ' ஏன்   இந்த சூழலுக்கு இசைவாக்கப்படுத்தப்பட்ட மக்களாகவே இவர்கள் இருந்துள்ளனரா? 

மீரியபெத்தை, சாமசரகந்தை இயற்கையாக அமைந்த மலைகள். அவற்றின் சரிவுக்கு கூட மனிதவள பயன்பாட்டுக்காக முறையற்ற விதத்தில் இயற்கை பயன்பட்டதாக இருக்கக்கூடும். எனினும் மீதொட்டமுல்ல சரிவு என்பது நாமே தலையில் மண்ணைவாரி அள்ளிப்போட்டுக் கொண்டதற்கு ஒப்பானது. இப்போது குப்பைமேடு சரிந்து உயிர்ப்பலி ஏற்பட்டதும் முன்னைய ஆட்சியா?...இன்றைய ஆட்சியா ?  இதற்கு பொறுப்பு என்ற வாத விவாதங்களையே அதிகம் காண முடிகின்றது. யார் பொறுப்பாக இருந்தாலும் உயிர் பொதுவானதே!.

எதுவாயினும் 'ஆட்சி'கள் தான் காரணம் என்கிற பொது முடிவுக்கு வருவதற்கு இந்த விவாதங்கள் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அந்தப் புள்ளியில் இருந்தே இந்த வார 'அலசல் ' இடம்பெறுகிறது.

எந்த ஆட்சியாக இருந்தாலும் ஒவ்வொரு கால ஆட்சியிலும் இந்த 'மீதொட்டமுல்ல' பிரசித்திப்பெற்ற இடமாகவே இருந்து வந்துள்ளது. இன்றும் இருந்து வருகின்றது... இதனை யாவரும் அறிவர்.  

'எனது ஆட்சிகாலத்தில் இப்பகுதிக்கு புதியதொரு அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்க திட்டம் கட்டியிருந்தேன். ஆனால், அதற்கிடையில்  தேர்தலில்  மக்கள் என்னை தோற்கடித்தவிட்டார்கள்' என்கிறார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ.  

ராஜபக்ஷக்களின் ஆட்சி காலத் திலேயே நகர அபிவிருத்தி மிகவும் தீவிரப்படுத்தப்பட்டு 'கொழும்பு' நகர் மிகவும் சுத்தப்படுத்தப்பட்டு நகர வாசிகள் நலமுடன் வாழ வழிவந்தது. அது  மாத்திரம் அல்லாமல் நகரும் அழகுபெறச் செய்தது. ஆனால், இந்த சுத்திகரிப்பு நகரை அண்டிய பகுதியில் மீதொட்டமுல்லவில் மேடாக ஆக்கப்பட்டதுதான் இன்றைய மக்கள் பலிக்கு காரணமாக இருந்து விட்டதா? என எண்ணத் தோணுகிறது.

குப்பையை 'குப்பை'யாக மாத்திரம் பார்த்து விட்டதால்  மீத்தொட்டுமுல்லையில்  சுகாதாரம் முழுமையாக  மறக்கப்பட்டு விட்டது. கடந்த தேர்தலின் போது இந்த 'குப்பை மேட்டு' விவகாரம் தேர்தல் பிரசாரங்களில் ஒரு பேசுபொருளாக இருந்தது என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.

ஆனால், இன்று இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நெல் களஞ்சியசாலையில்  தற்காலிகமாக வசிப்பதற்கு இடம்கொடுக்கப்பட்டுள்ளது. 

இவ்விடத்தில் இரு விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டும்.
மீதொட்ட முல்லையும் தற்காலிகமாக இடம்பெற்ற ஒரு சம்பவம் அல்ல. ஏனெனில் குப்பைகள் கொட்டும் இடத்தை தேடிப்போய் மக்கள் வாழ்வதில்லை. மக்கள் இருக்கும் இடத்தை நோக்கியே குப்பைகள் கொட்டப்பட்டன. இது புளுமென்டல் பகுதி மக்களை திருப்திபடுத்துவதற்காக  தற்காலிகமாக மீதொட்ட முல்லைக்கு கொண்டுச் சொல்லப்பட்டது என்பதை யாரும் மறந்து விட முடியாது. பின்னாளில் இதுவே இப்பகுதியில் நிரந்தரமாக்கப்பட்டு விட்டதை  மறுத்து விடவும்  முடியாது.   

கொஸ்கம பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தை சுட்டிக்காட்டலாம். ஏனெனில் அப்பிரதேசத்தில், இருந்த மரக்களஞ்சியசாலை தற்காலிமாக ஆயுதக்களஞ்சியசாலையாக மாற்றப்பட்டு அது மக்கள் வசிக்கும் பகுதியில் பின்நாளில் நிரந்தர சாலையாக ஆக்கப்பட்டுவிட்டது. இறுதியில் இந்த இடத்தில் இடம்பெற்ற கோர வெடிப்புச் சம்பவத்தில் அதன் அருகில் இருந்த குடியிருப்புக்களைச் சேர்ந்த மக்கள் பதற்றத்துக்கும் பாதிப்புக்குள்ளாகினர். 

இந்நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற தற்காலிக வேலைத்திட்டங்கள் குறிப்பிட்ட இடத்தில் நிரந்தரமாக்கப்படும் போதுதான் இவ்வாறான சம்பவங்களுக்கு ஏதுவாக அமைந்து விடுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கு உரிய திட்டமிடல் முறைமை இண்மையே காரணமாகவும் அமைந்த விடுகின்றது. 

தேசியத்திட்டமிடல் அமைச்சு  மக்களுக்கு எவ்வாறான திட்டமிடல் ஒன்றை செய்து வருகின்றது என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். ஆனால், இது நடக்கின்றதா? என்பதும் ஒரு கேள்விதான்.  இந்நிலையில் ஒரு சில விடயங்களை விளக்க வேண்டிய தேவையும் இங்கு இருக்கின்றது. 

கழிவகற்றல் ஒரு பொறிமுறை. உயிரினங்களில் அது இயற்கையாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனை ஒரு தனிநபராக, குடும்பமாக மேற்கொள்ளும்போது நாம் எடுத்துக் கொள்ளும் சிரத்தையை சமூகமாக கூட்டாக ஏற்றுக்கொள்கிறோமா என்பதில்தான் இந்த 'கழிவு முகாமைத்துவம்' (Waste Management) பற்றி சிந்திக்க நேர்கிறது.

முகாமைத்துவம் என்றதுமே அது கோர்ட் சூட் ஆடைகளுக்கும் நுனி நாக்கு ஆங்கிலத்துக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகப் பார்க்கப் பழகிவிட்டோம். ஆனால், இது ஒரு விஞ்ஞானம் என்பதுவும் இயற்கையாக இடம்பெறவேண்டியதென்றும் என எண்ண மறுக்கிறோம். அன்றாடம் நாம் செய்யும் அத்தனைக் கடமைகளுக்குக்குள்ளும் முகாமைத்துவம் முக்கியத்துவம் பெறுகிறது.

திட்டமிடல், ஒழுங்கமைத்தல், நெறிப்படுத்தல், கட்டுப்படுத்தல்  ஆகிய நான்கு படிமுறைகளுமே முகாமைத்துவம்.  துறைகளைப் பொருத்து வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. 

காலத்திற்கு காலம் முகாமைத்துவம் எனும் விஞ்ஞானம் பல்வேறு ஆய்வுகளையும் வளர்ச்சிகளையும் கொண்டு வருகிறது. மேலைத்தேய நாடுகளில் இந்த முகாமைத்துவ விஞ்ஞானம் ஆய்வுக்கும் பயன்பாட்டுக்கும் உள்ளாகும் அளவுக்கு தென்னாசிய நாடுகளில் இவ்வாறான நிலை இல்லை. நிதிசார் இடர் ஏற்படும்போது அதனை எதிர்கொள்ள காப்புறுதி செய்து கொள்ளும் முறைகூட ஒரு முகாமைத்துவம்தான். இதனை ஆபத்து முகாமைத்துவம் (Risk Management ) என்கின்றனர். அதுபோல இடர்கள் ஏற்படும்போது அதனைச் சமாளிப்பதற்கான முகாமைத்துவம் இடர் முகாமைத்துவம் (Disaster management) என்கின்றனர்.

நமது நாட்டில் இடர் முகாமைத்துவ அமைச்சு என்ற ஒன்றே கூட இருக்கிறது. இடர் வருவதற்கு முன்பதாக ஏதேனும் திட்டமிட்டு, ஒழுங்கமைத்து, நெறிப்படுத்தி, கட்டுப்பாடு செய்ததாக எந்த வரலாற்றுப் பதிவும் இல்லை. மாறாக இடர் நேர்ந்த பின்னர் என்ன நடந்தது? எப்படி நடந்தது?, எத்தனை இழப்பு ? எவ்வளவு நட்டஈடு என அறிக்கையிடும் அமைச்சாகவே இருந்து வருகிறது. 

இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த குப்பைமேட்டுச் சரிவைக்கூட 'கழிவு முகாமைத்துவ' சிந்தனையுடன் ஆட்சியாளர்கள் அணுகுவதாக தெரியவில்லை. கிராண்டபாஸ்- – புளுமண்டல் பகுதியில் இருந்து மீதொட்டமுல்ல போனதுபோல் மீதொட்டமுல்லையில் இருந்து கதிரயானவுக்கும் தொம்பேக்கும் பிரச்சினையை தள்ளிப்போடும் 'ஒத்திவைப்புதான்' சிந்திக்கப்படுகின்றது.

இனப்பிரச்சினையில் இருந்து குப்பைக் பிரச்சினை வரை இந்த நாட்டில் தீர்வு நோக்கிப் போகாமல் இருப்பதற்கு காரணமே இந்த 'தள்ளிப்போடும் கலாசாரம்தான்'. 

இவ்வாறான சம்பவங்களை நோக்கும் போது இலங்கை இப்போது செல்லும் திட்டமிட்டப் பாதையில் செல்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.  அது அரசியலானாலும் சரி  குப்பையானாலும் சரி.  இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்கு குப்பைகளே எஞ்சுகின்றன. வெங்காயம், கிழங்கு இதில் பிரதானம். இலக்ரொனிக் பொருட்கள் அடுத்து.

ஆக, குப்பைகளைக் கொட்டுவதற்கு முன்னர் அவை எப்படி வந்து சேர்கின்றன என்கிற ஆய்வு தேவை.

ஐ.நா சபையின் 'நிலைபேறான அபிவிருத்தி' (Sustainable Development) இலக்குகளை அடையப்போவதாக அவ்வப்போது மாநாடுகள் நடாத்தப்படுகின்றன. இயற்கையைப் பேணி பாதுகாப்பதன் ஊடாக அதாவது வருங்கால பரம்பரைக்கு இயற்கை வளங்களை மிகுதியாக்குவதுதான் இந்த நிலை பேரான அபிவிருத்தி எண்ணக்கருவின் அடிப்படை என்பதை உணரந்தார்களோ இல்லையோ நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கு ஒரு அமைச்சை உருவாக்கி விட்டார்கள். அங்கு என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

மெகா பொலிஸ் அமைச்சு என ஒரு அமைச்சு. இந்த குப்பைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அதற்கு மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களே பொறுப்பு என அறிக்கை விட்டதோடு அடங்குகிறது அந்த அமைச்சு.

ஆக, தொட்டதெற்கெல்லாம் அமைச்சு உருவாக்குவதல்ல 'ஆட்சி'. ஆட்சி என்பது முகாமைத்துவம். மக்களை, மக்களால் உருவாக்கிய ஆட்சி எவ்வாறு முகாமிக்கிறது என்பதில்தான் 'ஆட்சியின்' வெற்றி தங்கியிருக்கிறது. எனவே திட்டமிடலை, அரசும் நடைமுறைப்படுத்தலை  அமைச்சும் மேற்கொள்ள வேண்டும்.

சிங்கப்பூர் லீ குவான்யூ ஆட்சியாகட்டும், மலேசிய மாகதிர் முறை ஆட்சியாகட்டும்,  ஆராய்ந்து பார்த்தால் அடிப்படையில் அங்கு ஒரு முகாமைத்துவம் இடம்பெற்றிருக்கும்.

பிரச்சினை நமது நாட்டில் ஆட்சிகள் மாறுகின்றனவே தவிர ஆட்கள் மாறுகின்றனரே தவிர முகாமைத்துவத்தில் மாற்றமோ, முன்னேற்றமோ இல்லை. தென்னாசியாவில் பூட்டானிடம் கற்றுக்கொண்ட கொள்ள ஏராளம் உண்டு. மேலைநாடுகளிடம் எதை எதையோ கற்றுக்கொள்ளும் நாம் கழிவு முகாமைத்துவத்தைக் கற்றுக்கொள்ளாமல் இருப்பது ஏன் என தெரியவில்லை ? இனப்பிரச்சினையை தீர்க்க கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் என்று ஒரு ஆணைக்குழு இப்போது அதற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.

 மேமாதம் நாடாளுமன்றம் கூடியதும் குப்பை 'நாறும்'. நல்லாட்சியில் பெரிதாக நல்லது ஒன்றும் நடந்துவிடாது என மக்கள் நம் பத்தொடங்கிவிட்டார்கள்.

குறைந்தபட்சம் 'குப்பை'  முகாமைத்துவத்தையாவது கற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினால் 'குப்பை' யை ஆண்ட நல்ல ஆட்சியாகவாவது வீட்டுக்கு போகலாம்.
நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates