Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

தலித்துகளை அரசியல் நீக்கம் செய்வதற்கான சமகால முனைப்புகள் - என்.சரவணன்


சமீப காலமாக சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக இயங்குபவர்கள், எழுதுபவர்கள், பேசுபவர்கள், ஆதரவளிப்பவர்கள் என்போருக்கு எதிராக சாதி ஆணவம் தலைதூக்கி வருகிறது.

அதாவது தலித்தியம் குறித்து பேசுபவர்களை பேசவிடாது அவர்களை வெவ்வேறு வடிவங்களில் தாக்கி புறமொதுக்கி, பயம்கொள்ள வைத்து, அவமானப்படுத்தி, தனிமைப்படுத்தி வைக்கும் கைங்கரியங்கள் ஒப்பேற்றப்பட்டு வருகின்றன.

அறியாமையின் காரணமாக இந்த ஆணவத்தை வெளியிடுபவர்களை எம்மால் விளங்கிக்கொள்ள முடியும், ஏன் அவர்களை ஓரளவு மன்னிக்கவும் முடியும். ஆனால் சாதியாதிக்க மனநிலையுடனும், சாதி ஆணவத்துடனும் எம்மைத் தாகுபவர்களில் பலர் சமூக செயற்பாட்டுத் தளத்தில் அறியப்பட்டவர்கள் என்பது தான் வேதனையையும், ஆத்திரத்தையும் தரும் செய்தி. பலர் தாமாகவே இந்த நாட்களில் அம்பலப்பட்டு வருகிறார்கள்.

ஒன்றை இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். தலித்தியம் பற்றி கதைப்பது எங்களுக்கு வசதியானது அல்ல. எமது அடையாளங்களை நாம் வெளிப்படையாகவே அறிவித்து இயங்குவதை எவர் கௌரவமாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். கொடிய அவமானங்களை தாங்கிக் கொண்டு தான் இந்த பணியை நாங்கள் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.

எமக்காக ஆதரவளிக்க முன்வரும் ஆதிக்க சாதிய பின்னணியைக் கொண்ட பலரும் கூட தம்மையும் தலித்தாகப் பார்த்து விடுவார்களோ என்கிற அச்சத்துக்கு உள்ளாகியிருகிறார்கள். சிலர் அதனாலேயே தூர நிற்கிறார்கள். அவர்களுக்கு அவர்களின் குடும்பங்களில் இருந்து சக சாதி சமூகத்தினரிடமிருந்தும் நிர்ப்பந்தங்களும் வந்திருக்கின்றன. சிலர் நேரடியாகவே நான் உயர் சாதியாக இருந்தாலும் தலித்திய ஆதரவாளன் தான் என்று அதற்குள்ளும் தப்பி தன்னைக் காப்பாற்றிக்கொள்கிறனர். விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தமது “உயர்” சாதியை எந்த விதத்திலும் வெளிப்படுத்தாது எம்மோடு கரம்கோர்த்து பணியாற்றியுமிருக்கின்றனர்.

இவர்கள் அனைவரையும் எம்மில் இருந்து பிரித்தாளும் பணி நுட்பமாக நிறைவேற்றப்பட்டு வருவதாகத் தோன்றுகிறது.

நாங்கள் தலித் மக்கள் எதிர்கொள்ளும் புது வடிவிலான பிரச்சினைகளை ஆராய்ந்துகொண்டு அதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருக்கும் போது இவர்கள் மீண்டும் மீண்டும் “எங்கே இப்போது சாதி இருக்கிறது? தலித் என்றால் என்ன? ஏன் சாதிப் பிரசினையத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?” போன்ற பத்தாம்பசலித்தனமான கேள்விகளை திரும்பத் திரும்பக் கேட்டு எம்மை கடுபேத்திக்கொண்டிருக்கிரார்கள். அந்த கேள்விகளுக்கான பதிலை பொதுத்தளத்தில் வேறெங்கும் கிடைக்கவில்லையா என்ன. எம்மை நேரடியாக சீண்டும் நோக்கத்துடனும், எம்மை அந்த கேள்விகளுக்குள் மாத்திரம் சுழற வைத்துக்கொண்டும் இருப்பது அவர்களுக்கு வசதியானது. சாதியம் பற்றி நாங்கள் கதைப்பது சாதியத்தை ஒழிப்பதற்காகத் தான். சாதியத்தைப் பாதுகாப்பதற்காக அல்ல.

அதுமட்டுமன்றி இந்த கேள்விகள் அவர்களுக்கு “உடனடி – நேரடி பதிலாகவும்” வேண்டுமாம். இன்ஸ்டன்ட் நூடில்ஸ் போல. அப்படியும் மேலோட்டமாக விளங்கப் படுத்துவதற்கு எளிமையான விளக்கத்தை சராசரி மனிதர்களுக்கு விளங்கப்படுத்தினால் அதை சாதகமாக ஆக்கிக்கொண்டு இவ்வளவு தானா. இது தானா என்று அதற்குள் குற்றம் தேடிக் கண்டுபிடித்து இதோ இவர்களின் தலித்தியம் பற்றிய அறிவு என்று நகையாடுகின்றனர். எவ்வளவு எளிமையான வேலை இந்த சாதி ஆணவக்காரர்களுக்கு. சமீபத்தில் தோழர் முரளி அளித்த ஒரு விளக்கத்துக்கு இது தான் நேர்ந்தது. முரளியிடம் நான் கேட்டுக்கொண்டது என்னவென்றால் அவர்களின் சீண்டலுக்குள் விழுந்து விடவேண்டாம். சாதி வெறியர்களின் வம்பிழுத்தல் என்பது எமது நேரத்தையும், சக்தியையும், உழைப்பையும் பறிக்கும் நோக்கிலானது. எல்லாவற்றையும் விட நமது மனஉறுதியை (“மோரலை”) பறிக்கும் சதி உடையவை. அதற்குள் நாம் அகப்பட்டு சிக்கவேண்டாம். அவர்களுக்கு அந்த வெற்றியைக் கொடுத்து விடவேண்டாம். கடந்த சில நாட்களாக புஷ்பராணி அக்காவுக்கும் எதிராக மோசமான வசவுகள் வெளியிடப்பட்ட வண்ணம் இருக்கின்றன. அனுபவ முதிர்ச்சியுள்ள அவர் தைரியமாக எதிர்கொண்டு வருகிறார். 

சாதி ஆணவக்காரர்களுக்கு இது தமது சாதி மேதாவித்தனத்தை வெளிக்காட்டுவதற்கான வழி மட்டுமே. அவர்களுக்கு இது அவர்களின் அரசியல் / தனிப்பட்ட பழிவாங்கலை செய்வதற்கான ஒரு நுட்பமே. ஆனால் எமக்கோ இது அன்றாட வாழ்க்கை. எமது எதிர்கால சந்ததியை விடுவிப்பதற்கான அவமானம் நிறைந்த போராட்டம். இந்த அவமானங்களுக்கு நாங்கள் பழக்கப்பட்டுவிட்டோம். இந்த அவமானங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் நாங்கள் எங்களை விலை கொடுக்க எப்போதோ உறுதியெடுத்துக் கொண்டு தான் இந்த பணியில் இறங்கியிருக்கிறோம். இந்த வசவுகளுக்கும், ஏளனத்துக்கும் எங்களை பலியாக்குவதாக என்றோ நாங்கள் முடிவெடுத்துக் கொண்டு தான் இந்த பணியில் இறங்கியிருக்கிறோம். இந்த பணி எங்களுக்கு வசதியானது இல்லை தோழர்களே.

ஆதிக்க சாதியினர் பெருமிதத்துடன் தமது சாதியை அறிவித்துக்கொண்டு பணியாற்றுவதைப் போல அல்ல எங்கள் பணி. ஒடுக்கும் சாதி தன்னை அறிவித்து பணியாற்றுவதும், ஒடுக்கப்படும் சாதி தன்னை அறிவித்து பணியாற்றுவதும் மிகப் பெரிய வேறுபாடு உடையவை. துருவமயமான சிக்கல் நிறைந்தவை.

***
கடந்த சனிக்கிழமை நோர்வே தமிழ் சங்கத்தின் 37வது ஆண்டு விழாவில் இம்முறை சிறப்பு விருந்தினாராக நான் அழைக்கப்பட்டிருந்தேன். மண்டபம் நிறைந்த அந்த மேடையிலிருந்து நான் உரையாற்றி வந்ததன் பின்னர் பலர் கை குலுக்கி, தோளில் தட்டி வரவேற்றார்கள். வாழ்த்து தெரிவித்தார்கள். அவர்களில் கணிசமான நண்பர்கள் என்னிடம் கூறினார்கள் எங்கே நான் சாதியம் குறித்து மேலும் விரிவாக கதைத்து அங்கே அவமானப்பட்டு விடுவேனோ என்று பதைபதைத்துக் கொண்டிருந்தார்களாம். ஆனால் நான் கவனமாகத்தான் கதைத்தேன் என்றார்கள். எனக்கு கிடைக்கும் மேடைகளை நான் உச்சபட்சம் சமூக ஒடுக்குமுறைகளை விளங்க வைப்பதும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமே எப்போதும் பயன்படுத்தி வந்திருக்கிறேன். கூடியிருந்தவர்கள் பல வகையினரையும் கொண்ட கூட்டம். வழங்கப்பட்ட 7 நிமிடத்திற்கும் நான் கூறவேண்டியதை எழுதித்தான் சுருக்கவேண்டியிருந்தது. உரையில் சாதிய சிக்கல்களையும் மிகவும் நுட்பமாகத்தான் முன்வைக்கவேண்டியிருந்தது. ஆனால் என்னை அறிந்தவர்கள் பலர் என்னுரையிலிருந்து நான் என்னைப் பாதுகாத்துவிடவேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்ததை அறிந்த போது சற்று கலங்கித்தான் போனேன்.

தளத்திலும், புலத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரே நேரடியாக இன்று “...எம்மை அடையாளம் காட்டிவிடாதீர்கள். நாங்கள் இப்படியே ஒளிந்து வாழ்ந்து கடந்து போய்விடுகிறோம். இவர்கள் எங்களையும் எமது சந்ததியனரையும் விட மாட்டார்கள்...” என்று எம்மிடம் கேட்கும் நிலை தோன்றியிருக்கிறது. ஒடுக்கப்படுவோர் தமது உரிமைக்காக குரல் கொடுக்காதீர்கள் என்று கோரும் நிலைக்கு அவர்களைத் தள்ளியதில் இந்த சாதி ஆணவக்காரர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்படி கோரும் எம்மக்கள் பெரும்பாலும் ஓரளவு மத்திய தர வர்க்க நிலையை எட்டியவர்கள். அதேவேளை அடிமட்ட வாழ்க்கையை வாழும் பலர் இன்றும் வெவ்வேறு வடிவிலான பிரச்சினைகளை எதிர்நோக்கியபடி தான் உள்ளனர். இந்த சூழலுக்குள் தான் நாங்கள் இயங்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் எமது பணி இரட்டிப்புச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. எமது பணியானது வெறுமனே நடைமுறையில் அவர்களைத் தூக்கி நிலைநிறுத்துவது மட்டுமல்ல. சாதியாதிக்க சித்தாந்தத்தை ஒட்டுமொத்தமாக துடைத்தெறியும் பணியே முதன்மையானது. அது அனைத்து ஜனநாயக சக்திகளுடனான கைகோர்ப்பின் மூலம் தான் சாத்தியம்.

சமூகத்தில் நிலவும் அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராகவும் நாங்கள் முன்னிற்கிறோம். எதிர்த்து நிற்கின்றோம். எமக்கான தார்மீகத்தை நாம் பெற்றுக்கொண்டதும் அப்படித்தான். ஆனால் ஏனைய அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் பலர் தலித்தியம் என்று வந்தால் மாத்திரம் விலகி நிற்பது எதைக் காட்டுகிறது. அவர்கள் வேறு உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கான தார்மீக உரிமையை இழந்திருப்பது இதனால் தான். எமது அரசியல் நிகழ்ச்சிநிரலில் தலித் மக்களின் விடுதலையும் ஒன்று. ஆனால் உங்கள்  நிகழ்ச்சி நிரலில் தலித் மக்கள் அரசியல் நீக்கம் செய்யப்படுவது ஏன்.

எம்மீது நிகழ்த்தப்படும் அவதூறுகள், காயப்படுத்தல்கள், அவமானப்படுத்தல்கள் அனைத்தும் அரசியல் உரையாடல் தளத்திலிருந்து எம்மை அரசியல் நீக்கம் செய்யும் ஒரு கைங்கரியமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. எம்மைப் பொறுத்தளவில் எமக்கும் எமது முன்னோர்களுக்கும் நடைமுறையில் கிடைக்கப்பெற்ற சாதிய வடுக்களை விட இது ஒன்றும் பெரிய காயங்கள் இல்லை. நீங்கள் தோற்றுப்போய்விடுவீர்கள். எங்களுக்கு இதுவும் கடந்து போகும். எமக்கு முன் இருக்கும் பணிகள் இவை எல்லாவற்றையும் விட பாரியது.

இந்திய இராணுவம் : இலங்கை அனுபவம்! (1915 கண்டி கலகம் –30) - என்.சரவணன்


1915இல் இராணுவ அட்டூழியங்களை நிகழ்த்தியதில் மிகப் பெரிய பாத்திரம் இந்திய இராணுத்திற்கு உண்டு. இலங்கைப் பொலிசாரை விட இந்த விடயத்தில் பிரித்தானிய இராணுவம் தமக்கு உதவியாக இந்திய பஞ்சாப் இராணுவத்தையே பயன்படுத்திக்கொண்டது. இவர்கள் குரூரமான முறையில் ஈவிரக்கமின்றி கொலை செய்வதிலிருந்து, கொள்ளையடிப்பது வரை தமது அட்டகாசங்களை செய்திருந்தனர் என்பது வேவ்வேறு பதிவுகளில் காணக்கூடியதாக இருக்கிறது.

ஆளுநர் சாமர்ஸ்  (Governor Robert Chalmers) டெல்லிக்கு தகவல் அனுப்பி போர்க்கள அனுபவமுள்ள அதுவும் குறிப்பாக ஆப்கானிலும் வடமேற்கு எல்லையோர முன்னரங்கிலும் போரிட்டு அனுபவம் பெற்ற “28 வது படையினரை” அனுப்பிவைக்குமாறு கோரி அவசர கடிதம் அனுப்பிவத்த்தார். சாமர்ஸ் இது விடயத்தில் அதீதமாகவே நடந்துகொண்டார் என்று பின்னர் பலர் விமர்சித்தனர்.

“28 வது படையினர்” (28th Punjabis) எனப்படும் படையணியானது 1857 இல் ஆங்கிலேயர் ஆரம்பித்த விசேட படையணி. முதலாவது உலக யுத்த காலப்பகுதியில் இலங்கையில் நிலைகொள்ளத்தக்க வகையில் அவர்களில் ஒரு பிரிவினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். 1915 கலவரத்தை அடக்குவதற்கென்று மேலதிகமாக 200 பேரைக் கொண்ட படையினர் அழைக்கப்பட்டார்கள். இதில் ஒரு விசேடத்தன்மை உண்டு.  அது என்னவென்றால் அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் பஞ்சாபிகள். கலவரத்தை “நசுக்குவதற்கு” ஆங்கிலேயர்கள் உள்ளூர் படையைக் கூட பயன்படுத்தவில்லை. இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டார்கள். அதுவும் முஸ்லிம் பின்னணியைக் கொண்ட படையை இலங்கைக்குள் இறக்கினார்கள். முஸ்லிம் படைகளைக் கொண்டு சிங்களவர்களை அடக்கினார்கள். உள்ளூர் முஸ்லிம் சிங்கள முறுகலை மேலும் சிக்கலாக்குவதாக இது அமைந்தது.

நூற்றுக்கணக்கான சிங்களவர்களை மிலேச்சத்தனமாக கொலைசெய்யவும், சித்திரவதை செய்யவும் இவர்களை பயன்படுத்துவது இலகுவாக இருந்தது. இதனை ஒரு முஸ்லிம் - சிங்கள கலவரமாக பெருப்பித்து காட்டுவதன் மூலம் பஞ்சாப் படையினரை சிங்கள எதிர்ப்பு படையாகவே வழிநடத்தினர் என்றால் அது மிகையாகாது.

ஆர்மண்ட் டி சூசா, இராமநாதன், ஈ.டபிள்யு பெரேரா போன்றோர் எழுதிய நூல்களில் அதிகமாக இந்த பஞ்சாப் படையினர் பற்றி பேசப்படுகிறது.

கிராமங்களில் வெளித் திண்ணையில் படுத்துறங்கியவர்கள் கூட இவர்களால் சுடப்பட்டிருக்கிறார்கள், இராணுவச் சட்டத்தின் போது பாதையில் காண்பவர்கள், தெரிபவர்கள் கூட சுடப்பட்டிருக்கிறார்கள். தம்மால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சந்தேகநபர்கள் அளித்த பதிலை விளங்கிக்கொள்ளாத காரணத்திற்காகவும் சுடப்பட்டார்கள்.

கொள்ளையடிக்கப்பட்டவற்றை தேடுதல் நடத்துவதும் இவர்களின் பணிகளில் ஒன்றாக இருந்தது. ஆனால்  ஒரு கட்டத்தில் அவர்களே கொள்ளைகளிலும் ஈடுபட்ட்டதுடன், பெண்களை தொந்தரவு செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டார்கள், சில இடங்களில் ஒட்டுமொத்த கிராமத்தவர்களும் கைதுக்குள்ளாகியிருக்கிறார்கள். 

“மாசுலோ” (Martial law) என்று சாதாரண பொதுமக்களால் அறியப்பட்ட ஊரடங்குச் சட்டம் வெளியே சென்றால் கொல்லப்படுவோம் என்று பிற்காலங்களில் பேசப்படுவதற்கும் இந்த அனுபவங்களே காரணமாயின.

ஆரம்பத்தில் கண்டியில் நிகழ்ந்த சம்பவங்களின் போது மக்கள் ஒன்று கூடி சாத்வீகமான எதிர்ப்பை செய்த வேளைகளில் பஞ்சாப் படையினரால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். இதனை விட முக்கியமான சம்பவம் என்னவெனில், பலராலும் அறியப்பட்ட கண்டி காலதெனிய விகாரையின் பிரதம பஸ்நாயக்க நிலமே வல்கம்பே  (F. B. Walgampahe) பஞ்சாப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் அவரின் உடல் பிணமாக சிறையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
1915 ஜூன் 3ஆம் திகதியன்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் டவ்பிகின் (H. L. Dowbiggin) ஆயுதம் தாங்கிய பஞ்சாப் படையினரையும் அழைத்துக் கொண்டு கண்டியில் இருந்து கொழும்பை நோக்கி ரயிலில் புறப்பட்டு வந்தார். எப்போது மீரிகமைக்கும் வேயங்கோடவுக்கும் இடைப்பட்ட பகுதியில் தெருவோரோத்தில் இருந்து குழுமி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அப்பாவி கிராமவாசிகள் மீதி கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்ததில் பலர் கொல்லப்பட்டனர்.

உத்தியோகபூர்வமாக அரசாங்கம் எதனையும் இது குறித்து வெளியிடவில்லை. ஆனால் ஜூன் 5 வெளியான சிலோன் மோர்னிங் லீடர் (Ceylon Morning Leader) பத்திரிகையில் ரயிலில் டவ்பிகின்னோடு 28 பஞ்சாப் படையினர் இருந்தார்கள் என்றும் சுற்றிவர கண்மூடித்தனமாக மேகொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 35 அப்பாவி கிராமவாசிகள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாகவும், பலர் காயப்பட்டதாகவும் அந்த செய்தியில் இருந்தது. அதுமட்டுமன்றி கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதைவிட மேலதிகமாக இருக்கக்கூடுமென்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பஞ்சாப் படையினரால் கைது செய்யப்பட்ட டீ.எஸ். சேனநாயக்க (சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர்) இப்படி குறிப்பிடுகிறார். அப்போது அவருக்கு வயது 32.

“08.06.1915 அன்று கருவாத்தோட்டத்திலுள்ள எனது பங்களாவுக்குள் திடீரென்று புகுந்த பஞ்சாப் படையினர் உள்ளிட்ட இன்ஸ்பெகடர் குழு எனது வீட்டை கடுமையாக பரிசோதனை செய்தது. எதையோ தேடி வந்தவர்கள் எதுவும் கிடைக்காத நிலையில் அவர்கள் திரும்பிவிட்டனர். ஆனால் மீண்டும் 21ஆம் திகதி அதிகாலை  மீண்டும் வந்த பஞ்சாப் படையினர் என்னை கைது செய்வதாகக் கூறி அழைத்துச் சென்றனர். எந்த காரணமும் எனக்கு சொல்லவில்லை. வெலிக்கடைக்கு கொண்டு சென்றபோது அங்கே பல மதிப்புக்குரிய கனவான்கள் என்னைப் போன்றே கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டேன். குந்தியிருக்க எதுவும் இருக்கவில்லை, மோசமடைந்த உணவை தள்ளிவிட்டுச் செல்வார்கள். இரு நாட்கள் எதுவும் உண்ணவில்லை. அதன் பின்னர் வெளி உணவுகள் அனுமதிக்கப்பட்டன. ஓகஸ்ட் 5 அன்று 46 நாட்களின் பின்னர் நான் விடுவிக்கப்பட்டேன். அதுவும் 10,000 பிணையிலும் 50,000 சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டேன். முஸ்லிம் மக்களோடு எப்போதுமே நல்லுரவை பேணிவந்த என்னை அவர்களுக்கெதிரான வன்முறையை மேற்கொண்டதாக பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.”

14.06.1915 பொன்னம்பலம் இராமநாதனுக்கு டீ.எஸ்.சேனநாயக்கவின் சகோதரரான எப்.ஆர் சேனநாயக்க எழுதிய கடிதத்தில்...

“ஜூன் 1 அதிகாலை 8 மணியளவில் எனது சகோதரன் டீ.எஸ்.சேனநாயக்கவின் வீட்டுக்கு அருகில் வாழும் ஒருமுஸ்லிம் மனிதர் பதட்டத்துடன் டீ.எஸ்.சேனநாயக்கவின் வீட்டுக்கு ஓடி வந்தார். தன்னை அந்த சண்டியர் கும்பலிடமிருந்து பாதுகாக்குமாறு அவர் வேண்டினார். நானும் எனது சகோதரனும் அந்த கும்பலைத் தேடிப்போனோம். அந்த முஸ்லிம் குடும்பத்தை அழைத்து வந்து அடைக்கலம் கொடுத்தான் தம்பி டீ.எஸ்.சேனநாயக்க.”

இப்படியாக சாதாரண ஜனநாயக சிவில் சட்டத்தை தலைகீழாக புரட்டி தன்னிச்சையாக விரும்பியபடி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்டன. சகல சட்டவிரோத கொலைகளுக்கும் சட்டப்பாதுகாப்பு வழங்கியதும் இந்த இராணுவச் சட்டம் தான்.

1915இல் ஜூன் மாதம் வரவழைக்கப்பட்ட பஞ்சாப் படையினர் 1916 ஜனவரி வரை இலங்கையில் நிலைகொண்டிருந்தனர். இரண்டாம் உலக மகா யுத்த காலமென்பதால் இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு பகுதிகளுக்கு துணைப்படையாக அனுப்பட்டட்டனர்.

இந்திய இராணுவத்தின் பாத்திரம்
இந்திய இராணுவம் என்றாலே பீதியைக் கிளப்பும் வகையில் மக்கள் மத்தியில் ஒரு கருத்துநிலை இருப்பதற்கு பல வரலாற்றுக் காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

ஹென்றி பெதிரிசை கைது செய்வதிலிருந்து அவரை சுட்டு மரணதண்டனை நிறைவேற்றியவர்களும் பஞ்சாப் படையினரே. இலங்கையின் முக்கியத் தலைவர்களின் வீடுகளை வீடு வீடாக நுழைந்து பொருட்களை இழுத்துப்போட்டு தேடுதல் நடத்தியதும், அவர்களை பின்னர் கைது செய்து அடித்ததும் இவர்களே. இவை இராணுவ ஆணை என்று வெறுமனே கருதி விடமுடியாது அவர்களின் மிலேச்சதனமான அணுகுமுறைகளைப் பார்க்கும் போது; அவர்கள் அத்தகைய ஆணைக்கும் மேற்படியாகவே நடந்துகொண்டார்கள் என்பதை அனைத்து சம்பவங்களும் மெய்ப்பிக்கின்றன.
1915 நிகழ்வுகளில் போது மட்டுமல்ல, அதன் பின்னர் 1971, 1987 போன்ற காலப்பகுதிகளில் இந்திய இராணுவத்தின் அனுபவக் கொடுமைகளை இலங்கையர்கள் இன்னமும் மறக்கவில்லை.

1971இல் ஜே.வி,பி கிளர்ச்சியின் போது நாடு கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டுவிடும் என்கிற பீதியில் பல உலக நாடுகளின் உதவியைக் கோரியிருந்தார் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க. அதன்படி இந்தியா மட்டுமன்றி, பாகிஸ்தான், சீனா, அமேரிக்கா, இங்கிலாந்து, எகிப்து, யுகோஸ்லாவியா போன்ற நாடுகளில் இருந்து துரித உதவி கிடைத்தன. குறிப்பாக வான், கடல்வெளி ரோந்துச் சேவை, விமானத்தளங்கள், படைத்தளங்கள் என்பவற்றுக்கு பாதுகாப்பளித்தல் போன்றவற்றை அந் நாடுகள் செய்தன.

ஆனால் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் உதவியின் பேரில் பெருமளவு இந்தியப் படையினர் இலங்கைக்கு அனுப்பப்பட்டதுடன் அவர்களே காடுகளில் கிளர்சியாளர்களைத் தேடி வேட்டையாடும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட சிங்கள இளைஞர்களை அவர்கள் சித்திரைவதை செய்து கொன்ற விதம் குறித்து பல்வேறு சிங்கள நூல்களில் பதிவாகியுள்ளன.

அதன் பின்னர் 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 80,000 மேற்பட்ட “இந்திய அமைதி காக்கும் படையினர்”  (IPKF) இலங்கையில் நடத்திய அட்டூழியங்களைப் பற்றி சர்வதேச மன்னிப்புச் சபை விரிவான பெரிய அறிக்கையே வெளியிட்டிருந்தது. பெண்களின் மீதான பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள், படுகொலைகள், ஊர்களையும், கிராமங்களையும் சூறையாடல் என அவர்கள் தமிழர்களின் வெறுப்பையும், ஆத்திரத்தையும் சம்பாதித்துக்கொண்டார்கள். இந்த எதிர்ப்பின் விளைவு : இந்தியப்படயினரில் 1200 பேர் போராளிகளால் கொல்லப்பட்டார்கள். அதுபோல ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் அவர்களால் கொல்லப்பட்டார்கள். அதுமட்டுமன்றி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பின்னர் கொல்லப்படவும் இந்த இந்தியப்படை காரணமானது. இலங்கையில் அரசியல் திசைவழியைத் தீர்மானித்ததில் இந்தியப் படைக்கு முக்கிய பாத்திரமுண்டு.

நன்றி - தினக்குரல்

‘வெண்கட்டி‘ இதழ் விமர்சன நிகழ்வு








Add caption

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹட்டனில்‘வெண்கட்டி‘ இதழ் விமர்சன நிகழ்வு  இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் தலைவர் திரு. லெனின் மதிவானம் தலைமையில் நடைப்பெற்றது. அவர் தலைமையுரை நிகழ்த்துதையும் இந்நிகழ்வில் நூல் பற்றிய விமர்சன உரைகளை பேராசிரியர் செ. யோகராசா, சூரியகாந்தி பத்திரிகை ஆசிரியர் திரு. சிவலிங்கம் சிவகுமார், திரு. எம். எஸ் இங்கர்சால் ஆகியோர் வழங்குவதையும் மற்றும் விழாவில் பிரதம அதியாக கலந்துக் கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அவர்களுக்கு பேராசிரியர் செ. யோகராசா நினைவு சின்னத்தை வழங்கி வைப்பதையும் ,சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் நன்றியாற்றுவதையும்  மற்றும் கூட்டத்தில் கலந்துக் கொண்டோரையும் படங்களில் காணலாம். 

ஆராச்சிமார் ஆற்றிய பங்கு (1915 கண்டி கலகம் –29) - என்.சரவணன்


இலங்கைத் தீவுக்குள் தமக்கு எதிரான போக்கு அதிகரித்துவிடுமோ, தமக்கெதிரான சக்திகள் ஒன்றிணைந்து விடுவார்களோ, தமக்கெதிரான நாடுகளுடன் சேர்ந்து சதி செய்துவிடுவார்களோ என்கிற ஆங்கிலேயர்களின் பயம் மக்கள் மீதான இத்தகைய படுகொலைகளை புரியவைத்தது என்றும் கூறலாம்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இப்படி கலக்கமடைய உடனடிக் சர்வதேச காரணிகளாக இருந்தவை அன்றைய முதலாவது உலகப்போரும், தமது காலனித்துவ நாடுகளில் தொடங்கியிருந்த சுதந்திரப்போராட்டங்களும். இலங்கையில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நேரடியாக அப்படியான ஒன்றிணைவு அதுவரை இருக்கவில்லை. 1915 கலவரமும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தோன்றிய கலவரங்களும் தமக்கெதிராக திரும்பிவிடும் என்றே நினைத்தனர். அவர்களின் அறிக்கைகளில் தமக்கெதிராக திரும்பிவிட்டிருக்கிறார்கள் உடனேயே நசுக்க வேண்டும் என்றே அறிக்கையிட்டனர். இனிமேலும் அப்படி ஒரு நினைப்பே வரக்கூடாத அளவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற முடிவுக்கே வந்தார்கள். அதன் விளைவே இந்த பாரபட்சமற்ற கண்மூடித்தனமான படுகொலைகள். ஒட்டுமொத்த சந்தேகமும் சிங்களவர்கள் மீது மட்டுமே இருந்ததால் அவர்களையே இலக்கு வைத்தனர். கலவரத்தை ஒரு சாட்டாக பயன்படுத்திக்கொண்டனர். அந்த அழித்தொழிப்புக்கு முஸ்லிம்களை போடுதடியாக ஆக்கிக்கொண்டனர்.

ஆராச்சி
படுகொலைகளின் உதாரணங்களைப் பார்த்தோம். இந்த படுகொலைகளை நிறைவேற்றியவர்கள் ஆங்கிலேயர்கள் மாத்திரமல்ல. ஆராச்சிகளும் தான். ஆங்கிலேயர்கள் நிறைவேற்றிய உடனடி மரணதண்டனைகளில் பல; இவர்கள் அளித்த கதைகளின் பிரகாரம் தான் நிகழ்ந்தன. யார் இந்த ஆராச்சிமார்.

இலங்கையில் காலனித்துவ காலத்துக்கு முன்பிருந்தே ஆராச்சி எனும் பதவி இருந்து வந்தது. அவர்கள் தம்முடைய பிரதேசத்தில் அமைதியை பேணுவதுடன், வரி வசூலிப்பதையும் செய்தனர். ஒரு பொலிஸ்காரருக்குரிய கணிசமான அதிகாரங்களும் வழங்கப்பட்டு இருந்தன. எனவே கட்டைப்பஞ்சாயத்து பாணியில் அவர்கள் ஊர் விவகாரங்களில் ஈடுபட்டார்கள். அவர்களுக்கு தனியான ராஜமரியாதை ஊர்களில் இருந்தது.
போர்த்துக்கேயர் காலத்தில் அவர்களின் அந்த பதவியை அப்படியே தமது பரிபாலன சேவைக்கு பயன்படுத்திக்கொண்டனர். அதன் பின் வந்த ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் அப்படியே பேணினர். இவர்களில் பல படிநிலையையும் உருவாக்கிகொண்டனர். விதான, ஆராச்சி, கிராம ஆராச்சி, நகர ஆராச்சி, மடிகே ஆராச்சி என்றெல்லாம் இருந்தார்கள். ஆங்கிலேயர் காலத்தில் அரசாங்க அதிபர்களால் இவர்கள் நியமிக்கப்பட்டார்கள். குறிப்பாக அந்த பிரதேசத்தில் சொத்து படைத்த, அதிகாரம் செலுத்தக்கூடிய நிலச்சுவாந்திரர்களையே நியமித்தார்கள். அவர்கள் ஒருபோதும் இடம் மாற்றப்படுவதில்லை. ஆனால் அந்த பதவி அடுத்த பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஆராச்சிமாரின் கீழ் விதானைமார் செயலாற்றினார்கள். ஆங்கிலேயர்கள் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் முதலியார், முகாந்திரம் போன்ற பதவிகளை இவற்றுக்குப் பதிலாக பிரதியீடு செய்துகொண்டார்கள். 1956 வரை இந்த பதவிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த விதானைமார் 1970 ஆண்டுக்குப் பின்னர் கிராம சேவகர் என்று அழைக்கப்பட்டார்கள்.

இனி சில சம்பவங்கள்...
ஏ.டீ.புஞ்சிபண்டா அளித்த சாட்சியத்தில் இப்படி கூறுகிறார்.

ஒரு வெள்ளையர் இப்படி கத்தினார். “ஆராச்சி கூறுகிறார் தெல்னுஸ் பொருட்களை கொள்ளையிடுவதற்காக ஆட்களை திரட்டினாராம். ஜேம்ஸ் சிறையிலிருந்து வந்தவராம். அவனும்கொள்ளையில் சமபந்தமாம் பொடி சிஞ்ஞோவும் மோசமான திருடனாம். இந்த மூவரையும் சுட்டுகொல்லும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்று கூறி அங்கேயே மூவரும் கொல்லப்பட்டார்கள். அவ்வாறு கொல்லப்பட்டது கூட  கொள்ளையில் சம்பந்தப்பட்டதற்காக அல்ல ஆராச்சி கூறியதாலேயே அவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. ஆராச்சிமாருக்கு அன்றிருந்த அதிகாரம் அத்தகையது. அவர்களின் தனிப்பட்ட பலிதீர்ப்புக்கும், ஆங்கிலேய விசுவாசத்தை மிகையாக காட்டுவதற்காகவும் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தனர். ஆராச்சி போன்ற சிறு அதிகாரி நிலையிலுள்ளவர்கள் மட்டுமல்ல இப்பேர்பட்ட அதிகார துஷ்பிரயோகங்கள் அவரசர நிலை உள்ள காலங்களில்  அதிகாரத்தில் உள்ளவர்களால் நிறையவே வரலாற்றில் மீறப்பட்டிருப்பதை கண்டிருக்கிறோம்.

களுத்துறை – பேருவளையைச் சேர்ந்த எம்.கத்தோஹாமி சில்வாவின் முறைப்பாடும் தனது கணவர் அந்திரிஸ் சில்வாவின் கொலை நிகழ்த்தப்பட்ட ஈவிரக்கமற்ற முறையை வெளிப்படுத்துகிறது. ஜூன் 08 அன்று முஸ்லிம்கள் சிலர் வெள்ளையர் இருவரை அழைத்துக்கொண்டு அவரது வீட்டுக்குள் புகுந்துள்ளனர். உறங்கிக்கொண்டிருந்த தனது கணவரை எழுப்பினார்கள். அந்த முஸ்லிம் நபரின் குரலைக் கண்டுகொண்ட அந்திரிஸ் சில்வா “ஏன் முதலாளி இந்த ஜாமத்தில் அவசரமாக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டபடி சென்றார். அந்திரிஸ் சில்வாவைக் கண்டதும், அங்கிருந்தவர் “இவர் தான் அந்த ஆள்” என்று கூறி அவரைக் காட்டினார். எடுத்த எடுப்பில் அவரைச் சுட்டுக்கொன்றனர் படையினர்.

இலங்கை தேசிய சுவடிகூடத்தில் இன்னும் பார்க்கக் கூடியதாக இருக்கின்ற இந்த வழக்கு பற்றிய விபரங்கள் கம்பளை வழக்குகள் (Gampola case) என்றே இருக்கின்றன. அதில் கண்ட ஒரு ஆவணத்தில், மேற்படி சம்பவத்தில் கொல்லப்பட்ட தனது சடலத்தை நல்லடக்கம் செய்வதற்கு தருமாறு கோரிய ஒரு கோரிக்கைக்கு வழங்கப்பட்ட பதில் கடிதமும் இருக்கிறது.
பேருவளை அந்திரிஸ் சில்வாவின் சடலத்தைப் புதைக்க பேருவளை விதான ஆராச்சிக்கு இத்தால் அனுமதியளிக்கின்றேன்.
டபிள்யு.டிக்சன்
லெப்டினன்ட் .சீ.எம்.ஆர்
09.06.15
இதன்படி சம்பவம் நிகழ்ந்து ஒருவாரமாகியும் அந்த சடலம் குடும்பத்தினரிடம் வழங்கப்படாமலிருந்தது என்று தெரிகிறது. மேலும் இன்னொரு பெண்ணொருவர் கொல்லப்பட்ட சம்பவத்தையும் குறிப்பிடலாம். இரத்தினபுரி, ஹிக்கஸ்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.ஏ.அப்புஹாமி இப்படி குறிப்பிடுகிறார்.
“ஜூன் 5 அன்று பிற்பகல் 1.30 அளவில் 50 வயதான எனது மாமியார் தோட்டத்தில் பயிரிட்டிருந்த மரக்கறிகளை பறித்துக்கொண்டிருந்தார். அருகில் இருந்த இரயில் பாதை வழியாக போய்க்கொண்டிருந்த காக்கி நிற உடையணிந்த வெள்ளையின படையினர் இருவர் திடீரென்று மாமியாரை சுட்டனர். அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது. அங்கு அவர் தனியாக இருந்தார். இறந்த மாமியார் எனது மனைவியின் தாயார். எனது மனைவி சப்பிரகமுவ பிரதேச அரசாங்க அதிபரிடம் இதனை முறையிட்டார். அரசாங்க அதிபர் 50 ரூபாவை கொடுத்து விட்டு, தாயாரின் பராமரிப்பாளர் என்கிற வகையில் மேலதிகமாக 200 ரூபாவை மனைவியின் வங்கிக்கணக்குக்கு வைப்பிலிட்டார்”
இதன் மூலம் இந்த கொலை புரியப்பட்டது அரச அதிகாரியாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அது மட்டுமன்றி இதனை உத்தியோகபூர்வ கையூட்டு மூலம் இதனை மூடுவதற்கும் முயற்சிக்கப்பட்டுள்ளது.

சேர் பொன். இராமநாதன் 24.10.1917 அன்று மக்களவையில் உரையாற்றுகையில் இந்த நிலைமைகள் குறித்து விவாதித்த்தார்.

“கேகாலை  மாவட்டத்தில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், மக்களை கொன்றோளித்தமை குறித்தும், கண்டி மாவட்ட நீதிமன்றத்தில் வல்கம்பஹா வழக்கில் வெளியான உண்மைகளைக் கருத்திற் கொள்கின்ற போது எச்.எல்.டவ்ப்கின் அவர்களை தொடர்ந்தும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவியில் வைத்திருப்பது அரசாங்கத்தின் நாமத்துக்கு  உகந்ததல்ல. அதுமட்டுமல்ல மனித உயிர்களுக்கு மேலதிக அச்சுறுத்தலும் கூட என்பதை இந்த மக்களவையின் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.” என்றார்.

இன்னொரு உறுப்பினரான எச்.எம்.பெர்னாண்டோ வும் டவ்ப்கின்னின் கீழ் பொலிசாரின் நடத்தை குறித்து உரையாற்ற அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.

ஒரு கலவரக் காலத்தின் போது உடனடி மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கும் கலவரம் இல்லாத சாதாரண காலத்தின் போது பயன்படுத்துவதற்குமுள்ள வித்தியாசத்தை டவ்ப்கின் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே பின்னர் நடத்தப்பட்ட ஆணைக்குழு விசாரணைகளில் உணர்த்தப்பட்டது. டவ்ப்கின்னால் கூறப்பட்ட கருத்துக்கள் கூட ஆங்கிலேய அதிகாரிகளைத் திருப்திப்படுத்தவில்லை.

விசாரணைக்குழுவின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு டொக்டர் பெர்னாண்டோ இப்படி குறிப்பிட்டார்.

“சட்டம் கற்றது மட்டுமன்றி நீதியின்படி நடந்துகொள்வேன் என்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டவர்,  தேவைப்பட்டால் நீதிபதியிடமிருந்து ஆலோசனை  பெற்றுக்கொள்ளவும் முடியும். ஆனால் அவர் கலவரத்தின் போது அப்படி நடந்துகொள்ளவில்லை.

Reginald Edward Stubbs
எனக்கென்றால் ஏதோ மனநிலை சமநிலையற்ற ஐரோப்பிய இளைஞர் குழுவொன்றிடம் பிரித்தானிய ஆட்சியில் இதுவரை இடம்பெறாத அளவுக்கு மேலேச்சத்தனமாக நடந்துகொள்வதற்கான வாய்ப்பை இராணுவ சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டிருக்கிறது என்றே தெரிகிறது. இல்லையென்றால் சாதாராண அப்பாவி மனிதர்களை வீடுகளுக்கு வெளியில் கொண்டுவந்து அவர்களின் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் பார்த்திருக்க கொன்றிருக்க இயலுமா. மக்களை பீதியில் அல்லவா உறைய வைத்திருந்தார்கள்.”

மக்களவையில் இடம்பெற்ற இந்த விவாகாரங்கள் குறித்த விவாதத்தின் பொது இரத்தினபுரியில் சுட்டுக்கொல்லப்பட்ட கொல்லப்பட்ட சுபரத் எதனா என்கிற மேற்படி பெண் குறித்தும் காரசாரமாக  விவாதிக்கப்பட்டது. அன்றைய காலனித்துவ செயலாளரான ஸ்டப்ஸ் (Reginald Edward Stubbs) அவையில் தமது செய்கைகளை நியாயப்படுத்தினார்.

காலனித்துவ செயலாளர்:
கணம் உறுப்பினர் அவர்களே பெண்கள் கொல்லப்பட்டார்கள் என்று கூறுகிறீர்களா?

டொக்டர் பெர்னாண்டோ:
அவர்களின் உறவினர்களின் முன்னால்

ஸ்டப்ஸ் :
கணவர் என்று தான் எனக்கு கேட்டது

டொக்டர் பெர்னாண்டோ :
ஜெர்மன் முறையைவிட கொடூரகரமான முறையை பின்பற்றினார்கள்.

கணவரின் எதிரில் கொல்லப்பட்ட பெண் என்று டொக்டர் பெர்னாண்டோ குறிப்பிட்டதை ஸ்டப்ஸ் நகைச்சுவை விவாதமாக மாற்றி திசை திருப்பிக் கொண்டிருந்தார். ஆனால் அந்த நகைச்சுவை அதிக நேரம் நீடிக்கவில்லை. அங்கிருந்த இன்னொரு உறுப்பினரான திலகரத்ன இதனை இடைமறித்து பெண்கள் கொல்லப்பட்டதை கேட்கும்போது ஸ்டப்ஸ் அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

திலகரத்ன: நான் அமர்வதற்குள் சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன். டொக்டர் பெனாண்டோ அவர்களால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது காலனித்துவ செயலாளர் பெண்களுக்கு சுடவில்லை என்றார்.

ஸ்டப்ஸ்: நான் பெர்னாண்டோவிடம் கேட்டது, பெண்கள் கொல்லப்பட்டார்கள் என்று உறுதியாக கூறுகிறாரா என்பதையே.

திலகரத்ன: பெண்ணொருவர் துப்பாகியால் சுடப்பட்டார் என்பதை நான் இங்கு பதிவுசெய்திருக்கிறேன்.

ஸ்டப்ஸ்: கௌரவ உறுப்பினர் அவர்கள் பதிவுசெய்தவற்றுக்கெல்லாம் நான் ஒன்றும் செய்யமுடியாது. எந்தவொரு பெண்ணும் கொல்லப்படவில்லை.

திலகரத்ன : நான் இப்போது கூறப்போகும் பெண்ணைச் சுட்டார்கள்

ஸ்டப்ஸ்: தவறுதலாக

திலகரத்ன : வயலில்

ஸ்டப்ஸ்: தவறுதலாக

திலகரத்ன : அது பற்றி நான் அறியேன்

ஸ்டப்ஸ்: கௌரவ உறுப்பினருக்கு அது குறித்து தெரியாவிட்டால் அதுபற்றி கதைக்கக்கூடாது.

திலகரத்ன : அது தவறுதலாக நடந்ததா என்பது பற்றி எனக்குத் தெரியாது

இந்த விவாதத்தை தனக்கு சாதகமாக ஸ்டப்ஸ் திருப்பிக்கொண்டார்.

பாதையில் சென்றுகொண்டிருந்த ஒரு காரில் இருந்த ஐரோப்பியர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததிலேயே அப்பெண் கொல்லப்பட்டார் என்று ஒரு பொதுவான வதந்தி இந்த சம்பவம் பற்றி நிலவியிருந்தது. இது குறித்து எந்த நீதி விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. தற்செயல் நிகழ்ச்சி என்று மூடிவிட்டார்கள். அப்படி என்றால் எந்த அடிப்படையில் கொல்லப்பட்ட பெண்ணின் மகளுக்கு பணம் வழங்கப்பட்டது. அதனை அப்படியே மூடிவிடுவதற்கு நடந்த எத்தனிப்பு அது. ஆனால் இங்கிலாந்தில் வெளியாகும் உத்தியோகபூர்வ அரச அறிக்கையில் (Bluebook) டவ்ப்கின் வெளியிட்ட பல தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதை தெளிவுபடுத்தியது.

இந்த மிலேச்சத்தனங்களில் பங்கெடுத்த இந்திய பஞ்சாப் படையினர் பற்றி தனியாக வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்.

அடுத்த இதழில்.


உசாத்துணையாக  பயன்பட்டவை

  • EDWARD HENRY PEDRIS : "National hero who awakened a nation" - Charnika Imbulana - (Sarasavi  publications - 2015)
  • Memorandum upon recent disturbances in Ceylon - Perera, Edward Walter – (London, E. Hughes & co., 1915)
  • Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
  • “කුලය හා සිංහල අන්තවාදය”- කුසල් පෙරේරා (Ravaya 20.09.2015)
  • “Execution of 27-year-old henry pedris 100 years ago in colonial Ceylon”  - T.V. Antony Raj
  • A History of Sri Lanka - K. M. De Silva – (University of California Press - 1981)
  • The Rise of the Labor Movement in Ceylon - Kumari Jayawardena - Duke University Press, 1972
  • Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
  • “Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
  • “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam,  (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
  • “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
  • ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
  • ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)

அரங்கேறிய படுகொலைகள்! (1915 கண்டி கலகம் –28) - என்.சரவணன்


ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட நீதியற்ற படுகொலைகள் அத்தனையும் இராணுவச் சட்டத்தின் பேராலேயே அரங்கேற்றப்பட்டன. அந்தக் கொடுமைகளுக்கு இராணுவச் சட்டம் பூரண வழி விட்டது.

இதற்கு முன்னர் 1848இல் இலங்கையில் குறிப்பாக மத்திய மலைநாட்டு பகுதிகளில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்க பாரிய படுகொலைகளை ஆங்கிலேயர்கள் மேற்கொண்டிருந்தனர். இராணுவச் சட்டம் போடாமலேயே அந்த அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான ("මාතලේ කැරැල්ල") கிளர்ச்சியை அடக்கவே அந்த படுகொலைகள் நடந்தன. “மாத்தளை கிளர்ச்சி” என்றும் “1848 புரட்சி” என்றும் மிகவும் பிரபலமாக சிங்களத்தில் அழைக்கப்படுகின்றன. அந்தக் கிளர்ச்சியின் போது கிளர்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து பகிரங்க தண்டனை நிறைவேற்றினர். சுடுவது, கழுத்தை வெட்டுவது, தூக்கிலிடுவது போன்ற தண்டனைகளை மக்கள் பார்த்திருக்க நிறைவேற்றினர். பலர் நாடு கடத்தப்பட்டு ஆங்கிலேய காலனித்துவத்துக்கு உட்பட்ட மொறீசியஸ், அந்தமான் போன்ற தீவுகளில் சிறைவைக்கப்பட்டனர்.

ஆனால் இம்முறை அவ்வாறு அல்ல சம்பவத்துடன் தொடர்பில்லாத அப்பாவிகள் பலர், அதுவும் கலவரம் முடிந்ததன் பின்னர் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். 1915 கலவரத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஆனைக்குழுவின் முன்னால் அளிக்கப்பட்ட சாட்சியங்களில் குறிப்பிடத்தக்க சம்பவங்களை இராமநாதன், ஆர்மண்ட் டி சூசா போன்றோர் பதிவு செய்திருக்கிறார்கள். அதே வேளை “த சிலோன் மோர்னிங் லீடர்” (The Ceylon Morning Leader) பத்திரிகை போன்றவை விரிவாக செய்தி வெளியிட்டிருந்தன. அந்த செய்திகளை ஆதராமாகக் கொண்டு ஈ.டபிள்யு.பெரேரா எழுதிய “இலங்கையில் நிகழ்ந்த சமீபத்தேய குழப்பங்கள் பற்றிய குறிப்பாணை” (Memorandum upon Recent Disturbances in Ceylon) என்கிற நூல் பல உண்மைகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துகிறது.

உதாரணங்களுக்கு சில சம்பவங்களை சென்ற இதழில் பார்த்தோம். மேலும் சில சம்பவங்களை உதாரணத்திற்காக பாப்போம்.

கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஜே.ஏ.எஸ்.ஜேன் நோனா என்பவர் அளித்த சாட்சியத்திலிருந்து. நகரப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இருவர் கரத்தை வண்டியை தள்ளிக்கொண்டு சென்ற இருவரை துப்பாக்கிமுனையில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தனர். அதே வேளை வயதான ஜேன் நோனாவின் கணவர் வாசலிலுள்ள விளக்குகளை எற்றிகொண்டிருந்தார். அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள் அந்தப் படையினர். அந்த கரத்தையைத் தள்ளிக்கொண்டு சென்றவர்களை நோக்கி ஓடிச் சென்று அவர்களையும் நோக்கி சுட்டனர். ஒருவர் ஸ்தலத்திலேயே படுகாயமுற்று முனகிக் கொண்டிருந்தார். மற்றவர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் நிகழ்ந்தது ஜூன் 5ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு. படுகாயமுற்றவர் இறக்கும் போது மாலை 4 இருக்கும். இராணுவச் சட்டத்தின் படி காயப்பட்டவர்களை காப்பாற்றுவதும் மரணதண்டைக்குரிய குற்றமாக இருந்ததால் எவரும் அவரைக் காப்பாற்ற முன்வரவில்லை. இவர் அளித்த சாட்சியமும் ஜேன் நோனா அளித்த சாட்சியத்தை உறுதிசெய்தது. இந்த பிரதேசத்தில் ஜூன் 3 ஆம் திகதிக்குப் பின்னர் எந்த வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

கல்எலிய பிரதேசத்தைச் சேர்ந்த பொடிநோனா அளித்த சாட்சியத்தில்...

‘எனது கணவர் சைமன் அப்பு புஞ்சி கடையொன்றை நடத்தி வந்தார். ஜூன் 5 அன்று பொலிஸ் அதிகாரி ஆட்டிகலவுடன் வெள்ளையின படையினரும், பொலிசாரும் சீனி மொகமட்டுடன் கடையினுள் புகுந்தனர். சீனி மொகமட் அந்த படையினரிடம் அரிசி மூடைகளைக் காட்டி “சேர் இதோ எனது சாமான்கள்” என்றதும் பதட்டமடைந்த எனது கணவர் அவர்களிடம் “இந்த மனிதர் கூறுவது பொய். இவை கடைக்கு கொள்வனவு செய்யப்பட்டவை. இதோ நான் ரசீதுகளையும், கணக்குப் புத்தகத்தையும் காட்டுகிறேன்” என்றார். ஆனால் அதிகாரி ஆட்டிகல கோபத்துடன் “உனது கணக்குப் புத்தகத்தைப் பார்க்க நான் இங்கு வரவில்லை.” என்று கூறிக்கொண்டிருக்கும் போது உள்ளே வந்த இன்னும் சில முஸ்லிம்களும் சீனி மொகமட் கூறுவது உண்மை தான், அவை அவரின் பொருட்கள் என்றனர். இதனை விசாரித்து பார்க்கும்படி எனது கணவர் படையினரிடம் கேட்டார்.  ஆனால் அவர்கள் எதையும் கேட்கவில்லை. எனது கணவரையும் அருகில் இருந்த பீரிஸ் அப்புவையும் சுவற்றில் சாய்த்து சுட்டுகொன்றனர். அவர்கள் இருவரும் அங்கேயே இருந்துபோனார்கள்.” செர்ணலிஸ் அப்புவின் சாட்சியமும் பொடி நோனாவின் இந்த சாட்சியத்தை உறுதி செய்தன.


இந்த விடயங்களைப் பற்றி ஆர்மண்ட் டி சில்வா தனது நூலி விளக்குகையில் “தனிப்பட்ட பகையை தமது பழிவாங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர் பலர். முஸ்லிம்கள் பலர் பொய் சாட்சியமளித்து பலருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தனர். அவர்கள் கூறியவை உண்மையாக இருந்தாலும் இப்படி எந்த விசாரணையுமின்றி அந்த இடத்திலேயே சுட்டுகொல்ல முடியுமா” என்று கேள்வி எழுப்புகிறார்.

மங்கள திரிய எனும் பிரதேசம் எந்த அசம்பாவிதங்களும் இடம்பெறாத பிரதேசம். சுற்றி உள்ள பிரதேசங்களில் சில சின்ன சம்பவங்கள் அறியக் கிடைத்தாலும், அவை ஜூன் 3ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்திருந்தன. ஜூன் 5 ஆம் திகதி ஜே.கே.எலிஸ் நோனா அவரது கணவர் எ.ஏ.புஞ்சிநிலமேவுடன் மதிய உணவை உண்டுகொண்டிருந்தார். அந்த நேரத்தில் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவர் பஞ்சாப் படையினருடன் உள்ளே புகுந்தனர். அந்த முஸ்லிம் வெள்ளையரின் காதுகளில் எதையோ கூறிக்கொண்டிருந்தார். உடனேயே வெள்ளையரின் ஆணையின்படி பஞ்சாப் படையினர் அவரது கணவரை அந்த இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். எலிஸ் நோனா 7 குழந்தைகளுடன் அனாதயானார். எந்த விசாரணையும் நடக்கவில்லை.

கேகாலை மாவட்டத்தில் அம்பே பிரதேசத்தைச் சேர்ந்த எல்.பீ.பெரேரா இவாறு சாட்சியமளித்தார். “ஜூன் 4 அன்று அந்த பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்திருந்தது. ஜூன் 8  அன்று போலீசார் அங்கு வந்து 27 பேரைக் கைது செய்தனர். முஸ்லிம் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாடு ஒன்றின் பேரிலேயே அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். குறிப்பிட்ட சம்பவம் நிகழ்ந்த அன்று அந்த பிரதேசத்திலேயே இருந்திராத எனது மகன் ரொமானிசம் அந்த 27 பேரில் அடங்குவர். ஆனால் ரொமானிஸ் குறிப்பிட்ட சம்பவ தினத்தன்று அவிசாவளையில் ஒரு வழக்குக்காக சென்றிருந்தார். கைது செய்யப்பட்டவர்களும், கிராமத் தலைவரும் கூடி பார்த்துக் கொண்டிருக்க ரொமானிசை மரத்தில் கட்டி வைத்து சுட்டுக்கொன்றனர். ஏனைய அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட போது ரொமானிசை எந்த வித கேள்வி கூட கேட்டிருக்கவில்லை. ஒரு வாக்குமூலத்தையேனும் எடுக்கவில்லை.

இதில் உள்ள கொடுமை என்னவென்றால். நினைத்தபடி தண்டயளிக்கும் அதிகாரம் படையினருக்கு மட்டுமல்ல வெள்ளையின தோட்ட உரிமையாளர்கள் பலருக்கும் கூட வழங்கப்பட்டிருந்தது. குமாரி ஜெயவர்த்தன தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சி என்கிற தனது நூலில் தோட்ட உரிமையாளர்கள் தொழிலார்கள் பலரை தாம் விரும்பியபடி சுட்டுக்கொன்றதை விளக்குகிறார். ஐரோப்பியர்கள் மட்டுமே ஆயுதங்களை வைத்திருக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேவேளை பணக்காரர்களாக இருந்தாலும் இலங்கையர்கள் எனில் அவர்கள் தம்மிடம் வைத்திருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கையளிக்கவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தும் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

கேகாலை ஹிங்குரல கந்த பிரதேசத்தை சேர்ந்த அல்லிசா இப்படிக் குறிப்பிடுகிறார்.

“ஜூன் 10 அன்று நான் அறிந்த தோட்ட உரிமையாளர் ஒருவர் இன்னும் சிலருடன் வந்துகொண்டிருந்தபோது ஆற்றில் குளிப்பதற்காகச் சென்று கொண்டிருந்த எனது அப்பாவை நோக்கி சுட்டனர். முதல் குண்டு தவறியது. இரண்டாவது தடவை சுட்டதில் அவர் அந்த இடத்திலேயே விழுந்து இறந்தார். அது குறித்து எந்த விசாரணையும் நடக்கவில்லை.”

கேகாலையை சேர்ந்த உக்கு பிட்டா இப்படி கூறுகிறார்.

“எனது மகன் வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் போது அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த வெள்ளையின தோட்ட உரிமையாளர் ஒருவர் சுட்டதில் இறந்துபோனான். அது குறித்து எந்த விசாரணையும் நடக்கவில்லை”

ஹிங்குரல பிரதேசத்தை சேர்ந்த டபிள்யு.ஏ.சுத்தப்பு சாட்சியமிளிக்கையில்,

“ஜூன் 13 சீருடை அணிந்த ஒரு வெள்ளையர் தனது சகோதரர் செராஹாமியை சுடும்படி பஞ்சாப் படையினருக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டார். என்ன காரணத்துக்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து எவருக்கும் தெரியாது. அந்த பிரதேசத்தில் அனைத்தும் ஓய்ந்து பல நாட்களின் பின்னர் இது நிகழ்ந்தது.”

கேகாலை துன் கோரலையைச் சேர்ந்த அலகொட தோன ஜயசிங்க ஹாமினே தனது கணவருக்கு நேர்ந்த சோகத்தை கதறியபடி சாட்சியமிளித்தார். “ஜூன் 10 அன்று காலை 6 மணிக்கு தெஹியோவிட்டவை சேர்ந்த ஆராச்சி; பஞ்சாப் படையினருடன் வீட்டுக்குள் நுழைந்து கணவரை எழுப்பி கை, கால்களைக் கட்டி இழுத்துச் சென்றனர். பின்னர் 8 மணியளவில் திரும்பி வந்த ஆராச்சி எனது கணவர் பொடி சிங்ஞோ சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாகவும். வந்து உடலை உடனடியாகப் புதைக்கும்படி கூறினார். உடலை வீட்டுக்கு கொண்டு சென்றால் என்னையும் சுட்டுக் கொல்வதாக மிரட்டினர். நான் எனது கணவரின் உடலைக் காண சென்றபோது அங்கு வேறு இரு உடல்களையும் கண்டேன். எனது கணவரை தன்னந்தனியாக என்னால் முடிந்த அளவு குழியைத் தோண்டி புதைத்துவிட்டு வந்தேன்.” என்றார் 4 குழைந்தைகளுடன் அவரும் அனாதரவாக்கப்பட்டார். 

எல்கொட டேவிட் ஹாமி எனும் பெண் சாட்சியளிக்கையில்..

“ஜூன் 10 அன்று வெள்ளையர் சிலர் பஞ்சாப் படையினருடன் வந்து எங்கள் வீட்டைக் கொள்ளையடித்தனர். வீட்டிலிருந்த 100 ரூபா பணமும், 300 ரூபா பெறுமதியான ஆபரணங்களையும் அவர்கள் கொள்ளையடித்ததுடன் எனது கணவரை தூரத்துக்கு அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றனர். எந்த விசாரணையும் கூட நடக்கவில்லை.”

டேவிட் சிங்ஞோ அளித்த சாட்சியத்தில்..

“எனது மைத்துனருடன் வந்த வெள்ளயினரும், பஞ்சாப் படையினரும் என்னைக் கைது செய்து ஆற்றங்கரையோரத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் ஏற்கெனவே வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தனர். ஒரு வெள்ளையர் ஒரு பட்டியலை வாசித்தார். அதன்படி மூவரை அங்கேயே சுட்டுக் கொன்றுவிட்டு ஏனையோரை விடுவித்தனர். நாணும் விடுவிக்கப்பட்டு அங்கிருந்து போய்க் கொண்டிருக்கும்போது மீண்டும் என்னை மீண்டும் அழைத்து அந்த மூன்று உடல்களையும் புதைக்கும் படி கட்டளையிட்டனர். விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான சாமேல் அப்பு அவர்களை சபித்தபடி அழுதுகொண்டிருந்தார். ஒரு வெள்ளையின படையினன் அவரின் தலையில் துப்பாக்கியால் அடித்து விழுத்தினார்...” என்றார்.

தொடரும்


உசாத்துணையாக பயன்பட்டவை
  1. EDWARD HENRY PEDRIS : "National hero who awakened a nation" - Charnika Imbulana - (Sarasavi  publications - 2015)
  2. Memorandum upon recent disturbances in Ceylon - Perera, Edward Walter – (London, E. Hughes & co., 1915)
  3. Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
  4. “කුලය හා සිංහල අන්තවාදය”- කුසල් පෙරේරා (Ravaya 20.09.2015)
  5. “Execution of 27-year-old henry pedris 100 years ago in colonial Ceylon”  - T.V. Antony Raj
  6. A History of Sri Lanka - K. M. De Silva – (University of California Press - 1981)
  7. The Rise of the Labor Movement in Ceylon - Kumari Jayawardena - Duke University Press, 1972
  8. Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
  9. “Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
  10. “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam,  (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
  11. “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
  12. ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
  13. ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)



மா.பா.சி. கேட்டவை (தினக்குரல் பதிவுகள்)



மா.பா.சி. கேட்டவை (தினக்குரல் பதிவுகள்)" எனும் நூலை புதிய பண்பாட்டுத்தளம் வெளியிடுகிறது.இந் நூல் வெளியீடும் நூலாய்வும் கொழும்பு தமிழ்ச் சங்கம், சங்கரப்பிள்ளை மண்டபத்தில், 17.04.2016 மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. வேறுபட்ட பல அமைப்புகளது பரிமாணங்களை இந்நூலில் தரிசிக்க இயலுகிறது. கூட்ட உரைகளின் விவரணம், பத்திரிகைத் தமிழ், இலக்கிய ரசனைப்பாங்கு என்பவற்றின் சங்கமிப்போடு கூடிய இந்த நூலின் நடையியல் தமிழுக்குப் புதிது; 2007 - 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்டதான காலகட்டத்தின் எமது கலை - இலக்கிய - சமூக அரங்குகளின் இயங்காற்றல் - செல்நெறிப் பரிணமிப்புகளை வெளிப்படுத்தும் வடிவத்தினாலும், புதிய பாணி நடையியல் வீச்சுக் காரணமாயும் இந்த நூல் பெரும் கவனிப்புக்குரியது. இலங்கையிலுள்ள 844 ஆளுமைகளின் விவரிப்புகள் இந்நூலின் பெயர்ச்சுட்டியில் இடம்பெறுவது தனிச் சிறப்பு.
தலைமை: பேராசிரியர் சபா ஜெயராசா, வெளியீட்டுரை நீர்வை பொன்னையன் (ஆசிரியர் குழு, புதிய தளம்) நூலறிமுகம்: எம்.மதன்ராஜ் (சமூக செயற்பாட்டாளர்) நூலாய்வு: வ.செல்வராசா (உப பீடாதிபதி, ஶ்ரீ பாத கல்வியியல் கல்லூரி) கருத்துரை: ந.இரவீந்திரன் (பதிப்பாசிரியர்) வீ.தனபாலசிங்கம் ('தினக்குரல்' முன்னாள் ஆசிரியர்) ஏற்புரை: மா.பாலசிங்கம் (நூலாசிரியர்) நன்றியுரை: ஜெ.லெனின் மதிவானம்.
அனைவரும் வருக!
* 500 பக்கங்களுக்கு மேற்பட்ட இப் புத்தகத்தின் விலை 900/-

இராணுவச் சட்டம்: காலனித்துவ பயங்கரவாதம் (1915 கண்டி கலகம் –27) - என்.சரவணன்


1915இன் வரலாற்றுப் பதிவு என்பது ஒரு மதக் கலவரமாக மட்டும் குறுக்கும் பதிவுகளை நாம் எங்கெங்கும் காண முடியும். ஆனால் வெறும் ஒரு சில நாட்களுக்குள்ளேயே அடங்கிப்போன ஒரு கலவரத்தை மிகப்பெரிய வரலாற்றுப் பதிவாக ஆக்கியது அதன் பின் வந்த நாட்களில் நடந்தவை தான். கலவரத்துக்கும் அவற்றுக்கும் சம்மந்தமே இருக்கவில்லை. மிகப்பெரிய கலவரம் நடக்கும் வரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பிரிட்டிஷார், கலவரம் அடங்கியதன் பின்னர் கலவரத்தை அடக்குவதாகக் கூறிக்கொண்டு மிலேச்சத்தனமான அடக்குமுறையில் இறங்கியிருந்தனர். இராணுவச் சட்டமும், இராணுவ நீதிமன்றமும் அநாவசியமாக உருவாக்கப்பட்டு இலங்கையர்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகித்தார்கள். எழுச்சி பற்றிய கனவு கூட இலங்கையர்களுக்கு உருவாகக் கூடாதவகையில் பாடம் கற்பிக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக இருந்தது.

ஆங்கிலேயர்கள் இதனை ஒரு கலகம் அடக்கும் வழிமுறையாக பாவிக்கவில்லை என்பது வெளிப்படை. அன்றைய சூழலில் உலக நாடுகள் பலவற்றில் தோன்றியிருந்த பதட்ட நிலை ஆங்கிலேயர்களுக்கு பீதியை ஏற்படுத்தியிருந்ததுடன், முன்னெச்சரிக்கையாக தற்காப்பு நிலை எடுக்கத் தலைப்பட்டனர் என்று குமாரி ஜெயவர்த்தன தனது நூலில் தெளிவுபடுத்துகிறார். அப்போது முதலாவது உலக யுத்தம் தொடங்கி ஒரு வருடம் ஆகியிருந்தது. ரஷ்ய தொழிளார்களின் சோஷலிச புரட்சி ஆரம்பமாகியிருந்தது. அயர்லாந்து, இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளிலும் உள்நாட்டு கிளர்ச்சிகள் வெடிக்கத் தொடங்கியிருந்தன.

வெறும் சீர்திருத்த கோரிக்கைகளோடு மட்டும் மட்டுப்படுத்திக்கொண்டு மிதவாத சமரச அரசியலை மேற்கொண்டிருந்த இலங்கைத் தலைவர்கள் ஆங்கிலேயர்களுக்கு அத்தனை பெரிய தலையிடி கொடுக்கவில்லை தான். ஆனால் பௌத்த – கத்தோலிக்க முரண்பாடுகள் ஆங்கிலேய - கத்தோலிக்க -  வெள்ளையர்களுக்கு எதிரான  மனநிலையை அதிகரிக்க செய்துகொண்டிருந்தது. நேரடியான சுதந்திரம் கோரும் தேசிய இயக்கங்கள் தோற்றம் பெறாவிட்டாலும் மதுவொழிப்பு இயக்கம் போன்ற அமைப்புகள் ஆங்கிலேய எதிர்ப்பு இயக்கங்களாக வளரத் தொடங்கியிருந்தன. அதேவேளை சீர்திருத்த கோரிக்கைகள் மெதுவாக வலுக்கத் தொடங்கியிருந்தன. இவற்றை முளையிலேயே கிள்ளியெறிய 1915 கலவரத்தை ஒரு சிறந்த சந்தர்ப்பமாக ஆங்கிலேயர்கள் பயன்படுத்திக்கொண்டனர் என்றே கூறவேண்டும்.

கலவரம் முற்றிலும் அடங்கிய பின்னர் ஏறத்தாள 100 நாட்களுக்குள் நடத்தப்பட்ட ஏகாதிபத்திய பயங்கரவாதம் இதனை வெளிப்படையாக தெளிவுபடுத்துகிறது. (1915 ஜூன் 2 – ஓகஸ்ட் 30 வரை அமுலிலிருந்த இராணுவச் சட்டத்தை ஆர்மண்ட் டி சூசா “100 நாள் இராணுவச் சட்டத்தின் கீழ் இலங்கை” என்றே அழைக்கின்றார் “Hundred Days in Ceylon under Martial Law : 1915”). கூடவே கலவரத்தில் தொடர்பில்லாதவர்களை தண்டித்த விதமும், மதுவொழிப்பு இயக்கத்தை வழிநடத்திய தேசிய மிதவாதத் தலைவர்களை கைது செய்து சிறையிலடைத்த விதமும் ஆங்கிலேயர்களின் உள்நோக்கத்தை தெளிவுறுத்துகிறது.

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கும், சட்ட ஒழுங்கை மீறி அமைதியை குழப்பும் எவரையும் சுட்டுத் தள்ளுவதற்கு ஏற்கெனவே இருந்த சாதாரண சட்டமே ஆங்கிலேயர்களுக்கு அன்று போதுமானதாக இருந்தது. கலவரத்தின் போது அந்த சட்டத்தைக் கூட பயன்படுத்தாது கலவரம் முடிந்ததன் பின்னர் இராணுவச் சட்டத்தின் மூலம் எதனை சாதிக்க நினைத்தது ஆங்கிலேய அரசு.

படையினருக்கு வழங்கப்பட்ட கட்டற்ற அதிகாரம் பலரை கண்ட இடத்தில் காரணமின்றி சுட்டுத்தள்ள வழி சமைத்தது. சந்தேகத்தின் பேரில் கைது செய்வது, காரணமின்றி தடுத்து வைத்திருப்பது, அவர்களின்  விசாரணையை இழுத்தடிப்பது, பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்துவது, அதன்பிரகாரம் கடும் தீர்ப்புகளை வழங்குவது, எதிர்த்து வாதிட வாய்ப்பு மறுப்பது, முறையீடுகளை மறுப்பது, வேகமாக தண்டனைகளை நிறைவேற்றுவது என்பன தொடர்ச்சியாகவும், வேகமாகவும் நிகழ்ந்தன. இராணுவ சட்டம்! ஆதலால் எந்த நீதி விசாரணைக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கட்டளை அதிகாரியான கெப்டன் நோர்த்கோட் (L.A.NORTHCOTE, Captain) கொடூரமான கட்டளைகளை பிறப்பித்தவர்களில் முக்கியமானவர். இவரின் உத்தரவின் பேரில் தான் பெருமளவான மரண தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டன. அவர் 06.06.1915 அன்று இராணுவச் சட்டத்தின் விதிகள் குறித்து வெளியிட்ட ஆணையில் இருந்தவை இவை.

பிரதேசமொன்றை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தும்போது பிரதேச வாசிகள் அனைவரும் உரிய இடத்தில் வந்து குவிந்துவிடவேண்டும். மாலை 7 முதல் காலை 5 வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தன. மீறுவோரை கண்ட இடத்தில் சுட அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இராணுவ வாகனங்கள் இடையூறின்றி பயணிப்பதற்காக வீதிகளும், நடைபாதைகளும் வெறுச்சோடி இருக்கவேண்டும். பாதைகளில் ஒன்று கூட முடியாது. எந்த தாள, இசை வாத்தியங்களும் இசக்கப்படக் கூடாது. விசேட தேவைகளுக்கு பொலிசில் அனுமதி கோரலாம். சீருடை அணிந்தவர்களின் கட்டளைகளை எந்த கேள்வியுமின்றி பின்பற்ற வேண்டும். மீறுவோரை சுட்டுத் தள்ள முடியும். சாட்சி கூற மறுப்பவர்களுக்கும், அவர்களை பாதுகாப்பவர்களுக்கும் மரண தண்டனை. துப்பாக்கி மட்டுமல்ல காயமேற்படுத்தக் கூடிய எந்தவித ஆயுதங்களையும் கையில் வைத்திருப்பவர்களுக்கும் தண்டனை மரணம். சமயலறையில் பயன்படுத்தும் தேங்காய் துருவி வைத்திருந்தவரும் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தது.

அதேவேளை நிலைமை குறித்த கப்டன் நோர்த்கொர்ட் அவ்வப்போது வெளியிட்ட அறிக்கைகளின் பிரகாரம் இராணுவ அராஜகம் ஓங்கியிருந்த காலப்பகுதியில் நிலைமை சீராகவே இருந்தது என்பதையும் வெளிப்படுத்துகிறது. அவரது அறிக்கையிலிருந்து...

யூன் 06
யூன் 5 ஆம் திகதியே முழு நாடும் அமைதிக்கு திரும்பிவிட்டதை அறிய முடிகிறது
யூன் 12
கொழும்பில் இன்லமை அமைதியாக இருக்கிறது. அசம்பாவிதங்களுக்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.
யூன் 21
கடந்த அறிக்கை வெளியிட்டதன் பின்னர் எந்த வித அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை.
யூலை 07 
பெரும்பாலான மாவட்டங்களில் நிலைமை அமைதியாக இருக்கிறது.

அவரது உத்தியோகபூர்வ அறிக்கை இப்படி இருந்தபோதும் அவரது முடிவுகள் குதர்க்கமானதாகவே இருந்தது. ஜூன் 10 அன்று கண்டி அரசாங்க அதிபரும், விசேட ஆணையாளருமான டீ.எஸ்.வாகன் (Mr. Vaughan) படையினருக்கு சுட்டுக்கொல்லும் ஆணையை உத்தியோகபூர்வமாகவே வெளியிட்டார். அவரின் இறுக்கமான முடிவுகளுக்கு ஒரு உதாரணம்.

கண்டி மாநகர சபை உறுப்பினரும், பல காணிகளுக்கு சொந்தக்காரருமான டீ.ஏ.வீரசூரிய என்பவருக்கு பொல்காவலையில் பெரும் தோட்டம் இருந்தது. வெளியிடங்களில் இருந்து தான் தொழிலாளர்கள் அங்கு வேளை செய்ய வருவார்கள். படையினரின் அனுமதி பெற்றே வீடுகளில் இருந்து வெளியே வர முடியும். எனவே வீரசூரிய அனுமதிகோரி கடிதம் எழுதினார். அவருக்கு இப்படி பதில் வந்தது.
பொலிஸ் நிலையம்
கண்டி
19.06.1915
டீ.ஏ.வீரசூரிய
லோரன்ஸ் வில்லா
கண்டி
உங்கள் கோரிக்கைக்கு அனுமதியளிக்க முடியாது என்பதை இத்தால் அறியத்தருகிறேன்.
நடைமுறையிலுள்ள இராணுவச் சட்டத்தின் பிரகாரம், அவர்களின் இல்லங்களை விட்டு வெளியேற முடியாது. இதனை மீற முயற்சித்தால் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதுடன் நீங்களும் இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுவீர்கள்.
இங்ஙனம்
டீ.எல்.ட்ரான்செல்
பொலிஸ் மேலதிகாரி
(மத்திய மாகாணம்)

மேற்படி கடித பரிமாற்றம் நடந்தபோது கண்டியில் கலவரம் அடங்கி இரண்டு வாரம் கடந்து இருந்தது. அதுபோக பொல்காவலை எந்தவித அசம்பாவிதங்களும் இடம்பெறாத பிரதேசம். இத்தனைக்கும் ஆங்கிலேயர்களின் கடமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்தவர் வீரசூரிய.
சட்ட சபையில் சேர்.பொன் இராமநாதன் கீழ்வருமாறு குறிப்பிட்டார்.

இராணுவச் சட்டத்தை பிறப்பித்து இதற்காகத் தான் பயன்படுத்தினீர்களா
1. சிங்களவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி சாதாரண சிவில் சட்டத்துக்கு அப்பால் சென்று அவர்களை கைது செய்வது,
2. அப்படி கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களை சிவில் சட்டத்தினால் வழங்கப்படக் கூடிய தண்டனையை விட அதிகமான தண்டனையை வழங்குவது.
3. முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட நட்டங்களை ஊதிப்பெருப்பித்து சிவில் சட்டங்களுக்கு அப்பால் சென்று நட்ட ஈட்டை கொடுக்கச் செய்வது.
ராமனாதனின் இந்த வாதங்கள் மேற்தோற்றத்தில் சிங்கள சார்பு போல தோன்றினாலும் அவரது முறைப்பாடுகளினதும், கோரிக்கைகளினதும் மையப் புள்ளியாக இருந்தது அப்பாவிகளுக்கெதிரான தண்டனை, மற்றும் ஆங்கிலேயர்களின் அராஜகம் என்பவற்றை வெளிப்படுத்துவதே.

ராமனாதனின் இந்த குற்றச்சாட்டுக்களை சட்டசபையில் இருந்தவர்களோ, அதிகாரிகளோ மறுப்பு தெரிவிக்கவில்லை.

பல அப்பாவிக் குடும்பங்களின் குடும்பத் தலைவர்கள் கொல்லப்பட்டதில் அந்த குடும்பங்கள் அநாதரவான நிலைக்கு தள்ளப்பட்டன. சில சம்பவங்களை எடுத்துக்காட்டாக பார்ப்போம்.

தொம்பே பகுதியை சேர்ந்த டீ.டீ.சூட்டியா, எச் என்.எபொலோன்வியா ஆகியோர் வழங்கிய சாட்சியத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றனர். அவர்கள் இருவரும் சில பொருட்களை பெட்டியொன்றில் அடுக்கிக்கொண்டிருந்தனர். மோட்டார் வாகனத்தில் அங்கு வந்த படையினர் அவர்களை அப்படியே நிற்கச் சொல்லிவிட்டு எந்தவித விசாரணையுமின்றி துப்பாக்கியால் சுட்டனர். சூட்டியா சூட்டுக் காயங்களுடன் விழுந்துவிடவே எபொலோன்சியா ஓடித்தப்ப முயன்றார். துரத்திச் சென்ற வெள்ளையர் அவரையும் சுட்ட பின்னர், விழுந்தவர் இறந்துபோனார் என்று நம்பி வாகனத்தில் ஏறிச் சென்று விட்டனர். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு எந்த அசம்பாவிதமும் இடம்பெற்று இருக்கவில்லை. ஏன் சுட்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

ஆளுநரின் அறிக்கைகளின் படி இப்படி கொல்லப்பட்ட சிங்களவர்களின் எண்ணிக்கை 106. இராணுவ ஆணையாளரின் அறிக்கையின்படி அவ்வெண்ணிக்கை 116. ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்பதை ஆளுநர் பின்னர் ஒப்புக்கொண்டார். இராணுவத்தினரால் மட்டும் 63 பேர் கொல்லப்பட்டனர்.

திவுலபிடியவை சேர்ந்த டீ ப்ரான்சியா எனும் பெண் அந்த பிரதேசத்தில் பலரின் அன்புக்கு பாத்திரமானவர். அவரின் மகன் லியோ பெர்னாண்டோ (22 வயது) கொல்லப்பட்ட விதம் குறித்து சாட்சியம் முக்கியமானது.

அவருக்கு சொந்தமான 25 கடைகளில் 7 கடைகளை முஸ்லிம் வியாபாரிகள் நடத்தி வந்தார்கள். அந்த வாடகைக்காரகளில் மூவர் ஜூன் 1ஆம் திகதி வந்து தமது கடைகளை பாதுகாக்குமாறு கேட்டுகொண்டனர். ஜூன் 2ஆம் திகதி எதிர்பார்த்தபடி கலகக்காரர்கள் கடைகளைத் தாக்க வந்தனர். லியோ பெர்னாண்டோ தனது சகாக்களுடன் சேர்ந்து அவர்களை விரட்டினார். ஜூன் 4 ஆம் திகதி வாடகைக்காரர்களான முஸ்லிம் வர்த்தகர்கள் இருவர் வந்து சில ஆவணங்களையும், முக்கிய பொருட்களையும் பாதுகாத்து தருமாறு லியோவிடம் கொடுத்து விட்டுசென்றனர். சிங்களவர்கள் தம்மை தாக்கி இவற்றை அபகரிக்கக் கூடும் என்று நினைத்த லியோ தனக்கு பாதுகாப்புக்காக  சிலரை ஆயுதங்கள் சகிதம் வைத்துக்கொண்டார். ஜூன் 7 அன்று பஞ்சாப் படையினர் அவரின் வீட்டுக்கு வந்து சோதனையிட்டனர். அங்கிருந்த ஆயுதங்களைக் கண்ட படையினர் லியோவை கைது செய்து தாக்கியபடி நீர்கொழும்புக்கு கொண்டு சென்றனர்.

தாயார் ப்ரான்சியா வழக்கறிஞர்களின் உதவியை நாடினார். 8 ஆம் திகதி லியோவை பஞ்சாப் படையினர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும் நீதிமன்றத்தில் அவரை ஒப்படைக்கும்வரை நீர்கொழும்பில் இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டார். அதன்படி இரண்டு நாட்களாக அவர் நீர்கொழும்பிலேயே தங்கியிருந்தார். 9 ஆம் திகதி அந்த தாயாரை வீட்டுக்கு செல்லுமாறு கூறப்பட்டிருக்கிறது. அங்கே அவர் தனது வீட்டுக்கு முன்னாள் தனது மகனின் பிரேதத்தையே கண்டார். 

லியோவை அவரது வீட்டுக்கு பஞ்சாப் படையினர் சகிதம் அழைத்து வந்த நீதவான் (இராணுவ நீதிமன்ற நீதவான்) அங்குள்ள முதலியாரை அழைத்தார். கண்களும், கைகளும் கட்டப்பட்ட லியோவை அவரது வீட்டின் முன்னால் இருந்த அவரது கடைச் சுவரின் அருகில் நிற்குமாறு கட்டளையிட்டார். பின்னர் அருகில் உள்ள மக்களை அங்கு ஒன்று கூட்டுமாறு முதலியாருக்கு கட்டளையிட்டார். கூடியிருந்தவர்களை நோக்கி “இந்த சத்தத்தைதை நீங்கள் எல்லோரும் கேட்க வேண்டும். இந்த பகுதியில் இடம்பெற்ற கலவரங்களுக்கு இவன் தான் தலைவன். அவனுக்கு மோசமான இதயம். எனவே நான் அந்த இதயத்தை நோக்கி சுட உத்தரவிட்டேன் என்றார்.”

லியோ பெர்னாண்டோவின் உறவுக்கார பெண்ணொருவர் (மாமி) முதலியாரின் கால்களில் விழுந்து “நீதிமன்ற விசாரணை முடியும்வரை பொறுத்திருக்க சொல்லுங்கள் என்று கதறி மன்றாடினார். அது எதுவும் சட்டை செய்யப்படவில்லை. லியோ பெர்னாண்டோ அந்த வேளை.. 
“சத்தியமாக ஆண்டவர் மீது ஆணையாகச் சொல்லுகிறேன் நீங்கள் ஆதாரமாக என் வீட்டில் கைப்பற்றியதாகக் கூறிய அந்த பொருட்கள் என்னுடையவை அல்ல. அவை எனது முஸ்லிம் வாடகைக்காரர்களுக்கு சொந்தமானவை. என்னை நம்பி என்னிடம் பாதுகாக்குமாறு தரப்பட்டவை. என்னை கொல்வதற்கு முன் அவர்களிடம் கேட்டறிந்து நான் சொல்வது உண்மையா பொய்யா என்பதை அறியுங்கள்” என்றார்.
எதையும் செவிசாய்க்கும் நிலையில் நீதவான் இருக்கவில்லை. பஞ்சாப் படையினனின் முதல் தோட்டா லியோவின் நெஞ்சில் பாய்ந்தது. அடுத்தது நெற்றியில், அடுத்த இரண்டும் மீண்டும் நெஞ்சில் பாய்ந்தது. நான்கு தோட்டாக்களும் லியோவின் உயிரை உறிஞ்சியது. லியோவின் உடல் தரையில் மெதுவாக விழுந்து இரத்தத்தில் தோய்ந்தது.

இந்த சம்பவங்கள் குறித்து ராமனாதனின் நூலிலும், ஆர்மன்ட் டி சூசாவின் நூலிலும் விரிவாக இருக்கிறது. இப்படி குறிப்பிடத்தக்க சம்பவங்களை அடுத்த இதழில் பார்ப்போம்.

தொடரும்


உசாத்துணையாக பயன்பட்டவை
  1. EDWARD HENRY PEDRIS : "National hero who awakened a nation" - Charnika Imbulana - (Sarasavi  publications - 2015)
  2. Memorandum upon recent disturbances in Ceylon - Perera, Edward Walter – (London, E. Hughes & co., 1915)
  3. Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
  4. “කුලය හා සිංහල අන්තවාදය”- කුසල් පෙරේරා (Ravaya 20.09.2015)
  5. “Execution of 27-year-old henry pedris 100 years ago in colonial Ceylon”  - T.V. Antony Raj
  6. A History of Sri Lanka - K. M. De Silva – (University of California Press - 1981)
  7. The Rise of the Labor Movement in Ceylon - Kumari Jayawardena - Duke University Press, 1972
  8. Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
  9. “Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
  10. “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam,  (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
  11. “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
  12. ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
  13. ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)


வெண்கட்டி நூல் விமர்சன நிகழ்வு



இலங்கை கல்வி சமூகச் சம்மேளனத்தின் வெளியீடான வெண்கட்டி இதழ் விமசன நிகழ்வு எதிவரும் 09-04-2016 அன்று காலை 10.00 மணிக்கு ஹட்டன் பொஸ்கோ கல்லூரியில் நடைப்பெறும்.  சம்மேளனத்தின் தலைவர் திரு. லெனின் மதிவானம் தலைமையில் நடைப்பெறவுள்ள இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக இலங்கை ஆசிரிய சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கலந்துக் கொள்வார். நூல் பற்றிய அறிமுகவுரையை திரு. எம். எஸ். இங்கர்சால் வழங்க, கிழக்குப் பல்கலைகழக பேராசிரியர் செ. யோகராசா, சூரிய காந்தி ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமார் ஆகியோர் விமர்சனவுரைகளை வழங்க சம்மேளனத்தின் ஊவா மாகாண இணைப்பாளர் எம். மதன்ராஜ் ஏற்புரையை வழங்குவார். இலங்கை கல்விச் சமூக சம்மேளன இசைக் குழுவினர் வழங்கும் ‘மங்கியதோர் நிலவினிலே.. என்ற தலைப்பிலான இசை நிகழ்ச்சியும் நடைப்பெறும். நன்றியுரையை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் நிகழ்த்துவார்.   

''வெண்கட்டி'' ஓர் அறிமுகம் ஆ. கலையரசு (ஆசிரிய ஆலோசகர், பதுளை)


இலங்கைக் கல்விச் சமூக சம்மேளனத்தின் ஓராண்டு பூர்த்தியினை முன்னிட்டு ''வெண்கட்டி' என்னும் ஆண்டு மலரினை அவ்வமைப்பினர் வெளியிட்டனர்;. ஒரு வரலாற்று சாதனமாக ஆண்டு மலர் ஒன்றினை வெளியிட்டு வைத்தது சிலாசித்து பேசப்படவேண்டிய ஒன்றே. இத்தகைய காத்திரமான  ஆண்டு மலரினை வெளியிட அர்ப்பணித்த இலங்கைக் கல்விச் சமூக சம்மேளனத்தின் ஊவா மாகாண குழுவின் உழைப்பு அளப்பரியது. கௌரவிக்கப்படவேண்டியது.
வெண்கட்டி இதழானது தன் வாழ்நாள் சாதனைகளின் சின்னங்களை நினைவூட்டி: ஓர் அழகிய சின்னங்களை நினைவூட்டி: ஓர் அழகிய அட்டைப்படத்தினை தாங்கிவந்தது.
   அஞ்ஞான இருண்மை மிகு
   கரும்பலகையில்
   எழுதுவதால் தேய்ந்து
   கொண்டே
   ஞான ஒளி தருகிறது
          வெண்கட்டி.

   உலகம் உள்ளங்கையில்
   அப்படியெனின்
   வெண்கட்டி
   முற்றிலுமே தேய்ந்து விட்டதா?
என சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில்,  இல்லை நான் வேறுவடிவில் உங்களுடன் இருக்கிறேன் என அட்டைப்படம் எங்களை அழைத்துச் செல்கிறது.


'நாம் நேற்று கற்பித்ததை போலவே இன்றும்  கற்பிப்போமானால் எமது சிறார்களின் எதிர்காலத்தை திருடுபவர்களாகி விடுகிறோம';. என்ற ஜோன்டூயியின் கூற்றுக்கிணங்க வெண்டி எமக்கு புது வெளிச்சத்தை காட்ட வந்திருப்பது மனதிற்கு ஆறுதலை தருகிறது.

வெண்கட்டியின் வெளிச்சத்தில் உள்ளே செல்லும்போது இலங்கைக் கல்விச் சமூக சம்மேளனத்தின் தலைவர் திரு. லெனின் மதிவானம் அவர்களின் ஆசிச் செய்தி வெறுமனே வாழ்க வளர்க என சம்பிரதாயபூர்வமான ஒரு வாழ்த்துரையை வழங்கி விட்டு ஒதுங்கிக் கொள்வதாக அல்லாமல் நீண்ட பயணம் வெல்லட்டும் என மலையக மக்களின் வாழ்வியல் நீண்ட பயணத்தின் கொடுமைகளை நினைவுறுத்துவதுடன் அடையவேண்டிய தூரத்தின் எல்லையினையும் அந்த தூரத்தை அடைவதற்கான வழிகாட்டலையும் செய்வதாக அமைந்திருந்தது. மக்களின் சமூக விடுதலைக்கான ஒரேவழி முற்போக்கு மார்க்சிய கோட்பாடுகள் என வலியுறுத்தும் அவர்  அந்த முற்போக்கு மார்க்சிய கோட்பாடுகளை எமது பண்பாட்டுக்கேற்ப வளர்த்தெடுக்க தவறிவிட்டதன் குறையையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

மேலும், இது குறித்து சுய விமர்சனம் செய்யவேண்டிய தேவையஜன் அவசியத்தையும் எமது சிந்தனை செயற்பாடுகள், போராட்டங்கள் யாவும் வாழ்வதற்கான போராட்டங்களாக மட்டுமன்றி வாழ்க்கை முறையை மாற்றுவதற்காக அமையவேண்டும்' என்பதனையும் அவரது வரிகள் வலியுறுத்தி நிற்கின்றன. அந்தவகையில் எம்மக்களின் விடுதலைக்கான ஒரு புதிய பண்பாட்டினை உருவாக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாக அந்த வாழ்த்துரை அமைந்துள்ளது.

தலைவர் கூறுவது போல் ஒரு முற்போக்கு ஜனநாயக சக்திகளின்; ஒன்றிணைப்பால் இந்த கல்விச் சமூக சம்மேளனம் உருவானது என்பதன் அர்த்தத்தை இன்னும் ஆழமாக்குவதாக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர் சங்கரமணிவண்ணனின் கருத்து அமைந்துள்ளது. இதனை அவரது கூற்றுக்களினூடாகவே தருவது பொருந்தும:; 'எமது வாழ்வு சிதைந்து விடுவதற்கான   அனைத்து சாத்தியங்களும் மேலோங்கிய  நிலையில் எமது வாழ்வின் மீட்டுறுவாக்கத்திற்காக  அசுர கணத்துடன் மட்டுமல்ல அசுர வேகத்துடன்   செயற்பட வேண்டிய  தேவை எம் முன் உள்ளது'

எம்மக்களை மீட்டெடுப்பதற்கான ஓர் அவசரம் அவரது வார்த்தைகளில் வெளிப்படுகிறது. எம் மக்களில் வாழ்வியலை, முன்னேற்றத்தை சிதைக்க சில பண்டாரிப் படைகளின் அட்டகாசத்தை அறிவால் வெற்றிக் கொள்ள அழைக்கும் ஒரு குரல் வெளிப்படுகிறது.
எம் மக்கள் மீதான சமுதாய அக்கறையுடனான ஒரு பார்வையை பத்திராதிபர் திரு. எம். எஸ். இங்கர்சால் அவர்களின் உணர்வுகள் இ;வ்வாறு பிரவாகம் கொள்கின்றது. 'தன்னலமற்று இந்த நாட்டுக்காக உழைத்த மக்கள் கல்வி வளர்ச்சியில் இவ்விதம் கொண்டுள்ள கரிசனை வஞ்சிக்கப்பட்டு விட்டோம் என்ற அவலக்குரலாக இல்லாமல் தமது சமூக இருப்பை தாம் சார்ந்த சமூக பொறுப்புடன் வெளிப்படுத்த விளைவது இதழின் தனித்துவ அம்சம்.'

விழாவினையும், விழா மலரினையும் செவ்வனே முன்னின்று வழிநடத்திய ஊவாமாகாண இணைப்பாளருமான எம். மதன்ராஜ் 'தமக்கான கேந்திரங்களை இழந்துள்ள நிலையில் மீண்டுமொரு புனரமைப்புக்கான இதயம் நிறைந்த நம்பிக்கையுடன்' என தம் முயற்சிகளை முன்னெடுத்த அம்சம் பற்றிக் குறிப்பிடுகின்றார். 'சிகரங்கள் நிரம்பிய மலையகத்தில் அறிவு வேட்கைக்கு இந்நூல் விடியலை ஏற்படுத்த சற்று உறுதுணைப்புரியும்' என்ற நம்பிக்கையுடன் த மலர் குழுத் தலைவர் திரு. மனோகரன்; ஒரு நம்பிக்கை ஒளியை காட்டுகிறார். அவரது வார்த்தைகளில் குறிப்பிட்ட சிகரங்கள் என்ற சொல் வெறுமனே கல்லையும் மண்ணையும் குறிப்பதாக எனக்கு தோன்றவில்லை. இன்று கல்வித்துறையிலே பல சிகரங்கள் பல இடங்களில் நிமிர்ந்து உயர்ந்து நிற்பதையும் அந்த சிகரங்களின்; உச்சியில் பொருத்தப்பட்டுள்ள அலைவாங்கிக் கருவிகள் அம்மக்களை நோக்கி ஒரு விசேட அலைவீச்சை ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுவதாக அமைந்துள்ளது.
வெண்கட்டி ஆண்டு மலரின் ஒவ்வொரு கதவுகளையும் திறந்து உள்ளே செல்லும்போது பெரும் சொத்துக்கள் நிறைந்த பெட்டகம் ஒன்று உள்ளே மறைந்திருப்பது தெரிகிறது. இம்மலரில் மொத்தமாக இருபத்து நான்கு கட்டுரைகள், பதின்மூன்று கவிதைகள், ஆறு சிறுகதைகள், கனதியான தகவல்களை தாங்கி நிற்கின்றது. வசதி கருதி இவற்றை ஒவ்வொரு தொகுதியாக்கி பார்ப்பது இலகுவாக இருக்கும்.
இந்த மலரின் மணத்தில் புதிய ஒரு பாய்ச்சலை நூலின் சமர்ப்பணம் வழங்குகிறது. மலையக தோட்ட மக்களின் கல்விப்புரட்சியின் பொருட்டு தன்னை அர்ப்பணித்து உழைத்த பல சவால்களை எதிர்கொண்ட ஓர் ஆசிரிய பெருந்தகையான அமரர் எஸ் திருச்செந்தூரனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பதும் அவரின் ஆசிரியப் பணியின் உன்னதத்தை தாங்கி முதலாவது கட்டுரை அமைந்திருப்பதும் நல்ல சிந்தனையின் வெளிப்பாட்டினைவெளிப்படுத்துகின்றது.


இம்மலர் தாங்கி வந்துள்ள இருபத்துநான்கு கட்டுரைகளுமே தனித்தனியாக குறுக்குவெட்டுப்பார்வையின் மூலம் நோக்கவேண்டியவை. அதற்கான தருனம் இதுவல்ல என்பதால் அவற்றை பற்றிய தகவல்களை மட்டும் குறிப்பிட்டுச் செல்கிறேன். இக்கட்டுரைகளில் ஆறு கட்டுரைகள் கல்வித்துறை சார்ந்த கருத்துக்களை கொண்டவை. மலையக தமிழரின் வரலாறு சார்ந்த ஒரு கட்டுரை, மலையக மக்களின் பண்பாட்டு மாற்றுத் தளத்தின் அசைக்க முடியாத ஓர் ஆளுமை தலாத்துஓயா கே. கணேஸ் குறித்த ஓர்  ஆவணப்பதிவாக  லெனின் மதிவானம் அவர்களின் கட்டுரை அமைந்திருக்கின்றது, பெண்ணியம் சார்ந்த பெண்களின் விடுதலைகுறித்த மிக முக்கிய ஒரு கருவூலமாக கோ. மீனாட்சியம்மாளின் 'ஸ்ரீகளுக்கு சம சுதந்திரம்' எனும் கட்டுரை அமைந்திருக்கின்றது. அத்தோடு இலக்கியம் சார்ந்த அருமையான நயம்பொருந்திய ஐந்து கட்டுரைகள் பொதுவான நாட்டு நடப்புகள் அபிவிருத்தி தொடர்பாக மூன்று கட்டுரைகள், மொழி மற்றும் கலாசார தகவல்களடங்கிய நான்கு கட்டுரைகள் என காத்திரமான ஒரு கட்டுரைத் தொகுப்பு அமைந்துள்ளது.

சமூகத்தின் மானிட உணர்வுகளையும், விடுதலைக்கான வியூகங்களையும் கலைப்பூர்வமாக வெளிப்படுத்தும் படைப்புக்களில் சிறுகதைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. இம்மலரும் ஆறு சிறுகதைகளை தனக்குள்ளே கொண்டுள்ளது. அவற்றுள் மனிதநேய எழுத்தாளரான நந்தினி சேவியரின் 'மனிதம்' என்ற சிறுகதை குறித்துக் காட்ட வேண்டியதொன்றாகும். சிறுகதைகளும், மண்வாசனை எழுத்தாளர்களான தமிழ்செல்வம் மாசிலாமணியின் 'ஊற்றுக்கான் தோட்டம் ' இலங்கேஸ்வரனின் இவர் நம்ம சேர், மலையக சிறுகதைப் பரப்பில் தனக்கென ஓர் இடத்தை அழுத்தமாக பிடித்துக்கொண்ட இளம் எழுத்தாளர் சிவனுமனோகரனின் 'வகுப்பறைக் காவியங்கள்' புதிய தலைமுறை பிரவேசத்தின் அடையாளமான எட்வர்ட்டின் பௌர்ணமியில் ஓர் அமாவாசை ஆகிய சிறுகதைகள் அமைந்துள்ளன.
தமிழ் இலக்கிய கலாசாரத்தின் ஆணிவேர் கவிதைகள் கூர்மிகு சொற்களால் நறுக்நறுக்கென்று குத்தி முனையை கிள்ளும் ஆற்றல் படைத்தவை அவ்வாறான கவிதைகள் பதிமூன்று இந்த மலரின் மனத்தை Nமுலும் மெருகூட்டுகின்றன. லுணுகலை ஸ்ரீயின் ஒப்பணையில்லாக் காணி ஒரு சாணும் வேணாம் மறைந்த அதிபர் ந. 'இளங்கோவின் இனியொரு விதி செய்வோம்' ஏ. எம். ஜாதித்தின் 'சுற்றுலாக்காரனின் கவிதை' கி. குலசேகரனின் 'சாதிப்பேயை விரட்டுவோம்'. கவிஞர் அஸ்மினின் 'இங்கே கோழி இறைச்சி விற்கப்படும்' கவிஞர் அருண் வெங்கடேசின் 'நம்மை நாமே மாற்றுவோம்' துவாரகன்னின் இரண்டு மேமன்கவியின் 'கொழும்பு நகரப் புறாக்கள்' கவிஞர் நீலா பாலனின் குறும்பாக்கள் ஆசுகவி அன்புடீன் வழிப்பொருள் மேலும் இவ்வாண்டு மலரின் படைப்புக்கள் ஒவ்வொன்றையும் ஆழமான ஒரு குறுக்குப் பார்வை பார்க்க வேண்டிய ஒரு அவசியமும் உள்ளது. தமிழோவியனின் 'சத்தியம் நிச்சயம் வெல்லும்' என்றும் மொழி வரதனின் 'ஓர் அன்பு வேண்டுகோள் ' இராதா மணாளனின் 'ஊருக்கு உபதேசம் செய்யாதே' ஆகிய கவிதைகள் சுவாரஸியமான செய்திகளை எமக்கு தருகின்றன.

மொத்தத்தில் வெண்கட்டி ஒரு நல்ல வெளிச்சத்தை காட்டும். தம் பணிக்கு ஒரு நல்ல அடையாளத்தை வழங்கியிருக்கிறது. இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் அரிய முயற்சியால் வெளிவந்துள்ள இந்த ஆண்டுமலர் மலையக தொழிலாளர் வர்க்கம் சார்ந்த சகலரும் வாசிக்கவேண்டிய நூல்கள் பலவற்றுள் இதுவும் ஒன்று என்று குறிப்பிடும் அளவிற்கு ஓர் இடத்தைத் பிடித்துள்ளது.

புதிய சமூக பண்பாட்டுத் தளத்திற்கான ஒரு சேவையும், அவசியமும் உரைப்பட்டுவரும் இக்காலப்பகுதியில் அதற்கான வழி காட்டுதல்களை வெண்கட்டி செய்துள்ளது என குறிப்பிட்டுக் கூறமுடியும். மலையக கல்வி அபிவிருத்தி, உயர்கல்விதுறை அபிவிருத்தி குறித்த ஒரு சிந்தனைக்கு முனைப்பான உந்து சக்தியை தருவதாக வெண்கட்டி அமைந்துள்ளது.

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates