Headlines News :
முகப்பு » , , , , » பிணைக்காக பிடிக்கப்பட்ட பெண்கள்! (1915 கண்டி கலகம் –50) - என்.சரவணன்

பிணைக்காக பிடிக்கப்பட்ட பெண்கள்! (1915 கண்டி கலகம் –50) - என்.சரவணன்


பின்வரிசையில் நிற்போர் :
பண்டாரநாயக்க (எப்.ஆர்.சேனநாயக்கவின் மைத்துனர்), டீ.எஸ்.சேனநாயக்க, எப்.ஆர்.சேனநாயக்க, டீ.சீ.சேனநாயக்க.
அமர்ந்திருப்போர் :
மேரி சேனநாயக்க (எப்.ஆர்.சேனநாயக்கவின் சகோதரி), டொன் ஸ்பட்டர் சேனநாயக்க, திருமதி ஸ்பட்டர் சேனநாயக்க.

லவரம் நிகழ்ந்து முடிந்து அமைதிக்குத் திரும்பிய பின்னர் தொடர்ச்சியாக பேணப்பட்ட இராணுவச் சட்டக் காலப்பகுதியில் நிகழ்ந்த அராஜகங்களில் இன்னொன்று பெண்கள் மீதான துஷ்பிரயோகங்களும், அவமரியாதைகளும். அவை குறித்து முறைப்பாடுகளும் ஆங்காங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓரளவு விபரம் தெரிந்த பெண்களாலேயே இந்த முறைப்பாடுகள் பீதியின் மத்தியில் பதிவு செய்யப்பட்டன. அவர்கள் நிரபராதிகளாக இருந்த போதும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நித்திரையில் இருந்தவர்கள் உடுத்திய இரவு உடையில் இழுத்துச் செல்லப்பட்டார்கள். பொதுச் சிறைகளில் வேறு குற்றவாளிகளுடன் அடைக்கப்பட்டார்கள். சரீர ரீதியில் இம்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள். அதிகாரிகளால் தேடிப்பிடிக்க முடியாத சந்தேக நபர்களுக்குப் பதிலாக அவர்களின் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இந்த நிலைக்கு உள்ளானார்கள். இவை குறித்த சத்திய  கடதாசிகளும் காலனித்துவ காரியதரிசி பொனார் லோவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பிணைக்காக பெண்கள்
இப்படி பண்டாரகம தொன் ஹெலேனா தேவரப்பெரும கன்னங்கர அனுப்பிய சத்தியக் கடதாசியில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

1915 ஜூன் மாதம் ஒரு சனிக்கிழமை நாளில் பஞ்சாப் படையினர் இருவருடன் போலீசார் இருவரும் ஒரு ஆங்கிலேயருடன் ஹொரண பொலிஸ் விசாரணையதிகாரி அதிகாலை நான்கு மணிக்கு இவரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்கள். ஹெலேனாவின் கணவரைத் தேடி வந்த போது கணவர் வீட்டில் இருக்கவில்லை. உடனேயே அவரது 16 வயது மகனுடன் அவரை வரச் சொல்லி ஆணையிட்டனர். ஹெலேனா இரவுநேரம் உடுக்கும் மெல்லிய இரவுடையில் இருந்ததால் உடையை மாற்றிக்கொண்டு ஒழுங்காக வருவதாக கெஞ்சியிருக்கிறார். ஆனால் அந்தப் படையினர் தம்முடன் உடனடியாக வராவிட்டால் மகனுடன் சேர்த்து அவரையும் சுட்டுகொல்வதாக மிரட்டியுள்ளனர். உடனடியாக தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அந்த வாகனத்தில் ஏற்கெனவே இரு பெண்களும் ஒரு ஆணும் இருந்திருக்கிறார். இவர்களை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று அடைத்தனர். அந்த சனிக்கிழமை இரவு வரை உணவு கூட கொடுக்காமல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு பாய் கூட இருக்கவில்லை. சோர்வில் அவர்கள் வெறும் நிலத்திலேயே சுருண்டு கிடந்தனர்.

ஹெலேனவின் கணவர் பொலிசில் சுயமாக வந்தடைந்தார். அதன் பின்னர் தான் ஹெலேனா விடுவிக்கப்பட்டார். ஹெலேனா கைது செயப்பப்படுவதற்கு முன்னரோ, அதற்குப் பின்னரோ கூட அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருக்கவில்லை.

டீ.எச்.விஜெகோன் என்பவரின் மனைவி ஹாமர் விஜேகோன் என்பவருக்கும் இதே போன்று நிகழ்ந்தது.  பண்டாரகம தோன லோரா பொன்சேகா என்று அந்த சத்தியக் கடதாசியில் கையெழுத்திட்டிருந்தார்.  அதே நாள் அதே அதிகாரிகள் அதிகாலை தனது வீட்டுக்கு வந்து தன்னை எழுப்பி வீட்டை சோதித்துவிட்டு தம்முடன் வரும்படி ஆணையிட்டனர். ஒழுங்கான மேலாடையை அணிந்துகொண்டு வரும்வரை சற்று பொறுக்கும்படி வேண்டினார் அவர். உடனடியாக தம்முடன் இப்படியே வராவிட்டால் சுட்டுக்கொன்றுவிடுவதாக எச்சரிக்கவே அவரும் அப்படியே சென்றுள்ளார். அவருக்கு 7 பிள்ளைகள். பால் குடிக்கும் ஒரு பேரப்பிள்ளையும் பராமரித்துவந்துள்ளார். அந்தக் கைக்குழந்தையை அருகில் இருந்த இன்னொருவரிடம் ஒப்படைத்துவிட்டு போகவேண்டிய நிலை ஏற்பட்டது. பெருமழை பெய்துகொண்டிருந்த நிலையில் அவரை தூரத்தில் இருந்த வாகனத்துக்கு இழுத்துச் சென்றனர். அந்த வாகனத்தில் ஏற்கெனவே ஆண்கள் இருவரும் பெண்கள் இருவருமாக நான்கு பேர் இருந்ததை அவர் கண்டார். பாணத்துறை பொலிசுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் உணவோ, நீரோ இன்றி இரவு உடையிலேயே அன்றைய நாள் முழுவதும் அவர்களின் கணவர்மார் வந்து சரணடையும் வரை சிறைப்படுத்தி வைத்திருந்தனர்.

எந்தக் குற்றமும் இழைக்காத, நிரபராதிகளான இந்தப் பெண்களை இரவு உடையில் அவர்களை இழுத்துச் சென்று சிறையிடும் குரூர, ஈனத்தனமான மனநிலையை நினைக்கவே அருவருக்கிறது என்று ஆர்மண்ட் டீ சூசா தனது நூலில் சாடுகிறார். இந்த சகலவித முறைப்பாடுகளையும் விசாரணை செய்வதனை நிராகரித்தார் பொனார் லோ. தமக்கு நேர்ந்தது குறித்து வழக்கு தொடர்ந்தவர்கள் சிலர் பொலிஸ் அதிகாரிகளால் மிரட்டப்பட்டு மீளப் பெறப்பட்ட சம்பவங்கள் குறித்தும், அத்தகைய முறைப்பாடுகள் தவறாக செய்யப்பட்டுவிட்டதாக கூறி வாபஸ் செய்தவர்களை நீதிமன்றம் “பொய்க்குற்றச்சாட்டு” சுமத்தி கடூழிய தண்டனை வழங்கிய சம்பவங்கள் குறித்தும் விளக்கமாக ஆர்மண்ட் டீ சூசா தனது நூலில் விளக்கியுள்ளார்.
ஹர்ரி க்ரீசி Harry Creasy
இலங்கை சட்ட சபையில் ஐரோப்பிய பிரதிநிதியாக இருந்த ஹர்ரி க்ரீசி (Harry Creasy) 1915 ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி சட்டசபையில் ஆற்றிய உரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“கௌரவ உறுப்பினர்களே பெருமளவு மக்கள் இந்த நாட்டின் சிறைச்சாலைகளுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். எந்தவித குற்றச்சாட்டுக்களும் இல்லாத நிலையில் பலருக்கு தண்டனை அளித்து விடலாம் என்று  இந்த நாட்டின் அதிகாரிகள் நினைக்கிறார்கள். இப்படி அடைக்கப்பட்டவர்களில் பல கனவான்களும், பல காலமாக நான் அறிந்த மனிதர்களும், அரசாங்கத்துக்கும் கூட சார்பான பலரும் சிறை அனுபவிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இவர்களில் பலர் இந்த கலவரத்தைத தடுப்பதற்காக அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் என்பதை நான் தனிப்பட்ட ரீதியில் அறிவேன்.”
கிரீசி கூறுவதைப் போல பெரும்பாலானோர் அரசாங்கத்துடன் நெருக்கமாக இருந்த வசதிபடைத்த, மக்கள் சேவைகளிலும், தேச நலனிலும் ஈடுபாடுகொண்டவர்கள்.

சேனநாயக்க சகோதரர்கள்
சிறைப்பிடிக்கப்பட்டவர்களில் எப்.ஆர்.சேனநாயக்க, டீ.எஸ்.சேனநாயக்க, டீ.சீ. சேனநாயக்க இளம் சகோதர்கள் மூவரும் உள்ளடங்குவர். படித்த “உயர் குழாமைச்” சேர்ந்த இவர்கள் மதுவொழிப்பு இயக்கத்தின் முக்கிய பாத்திரங்கள். மக்களால் போற்றப்பட்ட இவர்கள் எந்த குற்றச்சாட்டுக்க்களும் இன்றி இரு மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிப்பட்டார்கள்.
அப்துல் ரஹ்மாn WM Abdul Rahman
எப்.ஆர்.சேனநாயக்க  கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழத்தில் பட்டம்பெற்றவர். ஒரு வழக்கறிஞர். கொழும்பு நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர். பெருமளவு தோட்டங்களுக்கு சொந்தக்காரர். கலவரம் நிகழ்ந்தபோது போலிஸ் தலைமையகத்துக்குச் சென்று தன்னால் எப்படி ஒத்துழைப்பு வழங்கமுடியும் என்று வினவியவர். ஒத்தாசைகளை வழங்கியவர். நகர மேயருடன் பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்று பார்வையிட்டு, குழுமிய மக்கள் கூட்டத்தை களைத்தத்துடன் நிலைமையை விளக்கி அமைதி காக்க பணியாற்றியவர். மேலும் திரும்பி வரும் வழியில் பெருமளவு முஸ்லிம் மக்கள் பயத்தில் காடுகளில் போய் மறைந்திருப்பத்தை அறிந்து அங்கு சென்று அவர்களை பாதுகாப்பாக உரிய இடங்களுக்கு அனுப்பியதுடன், எவருக்கும் பயமின்றி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலருக்கு சொந்த வீட்டிலேயே அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தவர். முஸ்லிம் சட்டசபை உறுப்பினரான அப்துல் ரஹ்மான் தனது மகளுக்கு என்ன நேர்ந்தது என்று தேடித்திரிந்த வேளை எப்.ஆர்.சேனநாயக்கவின் ஒத்துழைப்பை நாடியதுடன் நள்ளிரவில் அப்துல் ரஹ்மானுக்கு அவரது மகள் பத்திரமாக இருக்கும் செய்தியை அறிவித்தவர்.
எப்.ஆர்.சேனநாயக்க

அப்படிப்பட்ட அவரின் வீட்டுக்குள் புகுந்த படையினர் பல தஸ்தாவேஜூக்களை எடுத்துச் சென்று பின்னர் ஜூன் 21ஆம் திகதி கைது சென்று ஓகஸ்ட் 05 வரை அவரை சிறையில் அடைத்து வைத்திருந்தனர். எப்பேற்பட்டாவது தன்னை குற்றவாளியாக்கும் முயற்சியில் சாட்சிகளைத் தேடுவதற்காக அதிக பிரயத்தனம் எடுக்கின்றனர் என்று சிறையில் இருந்த போது சக கைதிகளிடம் கூறியிருக்கிறார். விடுதலையானதன் பின்னர் முன்னரை விட அதிகமாக தனது அரசியல் மற்றும் சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அவர். அவரைப் போலவே அவரது சகோதரர்கள் உட்பட கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த பலர் பின்னர் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் விடுவிப்பட்டனர். இவர்களில் சிலருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் கடுமையானவை. அவர்களின் மீது கடுமையான தீர்ப்பை வழங்குவதற்கு இராணுவ நீதிமன்றத்துக்கு சிறு ஆதாரம் கூட போதுமானவை. ஆனால் அப்பேற்பட்ட சிறு ஆதாரத்தைக் கூட அவர்களால் நிரூபிக்க முடியாத நிலையில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.

இந்தக் கைதுகள் குறித்து ஆளுநரைத் தவிர வேரெவராலும் காரணம் கூறப்படவில்லை. ஆளுநர் குடியேற்ற காரியதரிசிக்கு அனுப்பிய கடிதத்தில் இப்படி குறிப்படப்பட்டிருந்தது.

“29 வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்கள் (ஈ.டபிள்யு.பேரேரா வால் குடியேற்ற காரியதரிசிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இருந்து) பாதுகாப்பு காரணங்களாலேயே சிறைவைக்கப்பட்டனர். இவர்களுக்கு ரயில் ஊழியர்களை தூண்டிவிடுவதற்கான அவசியம் பல சந்தர்ப்பங்களில் வாய்ப்புகள் இருந்திருக்கின்றன.”

மறுபுறத்தில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கும் ரயில் ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் இடையில் எந்தவித சம்பந்தமும் இருக்கவில்லை.
கலவரத்தை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தந்தவர்கள் எப்படி “பாதுகாப்புக்கு இடைஞலானார்கள்”. “பாதுகாப்பு காரணங்களாலேயே” என்று ஆளுனரால் குறிப்பிடப்பட்டதானது எத்தனை பெரிய புரட்டுமிக்க காரணம் என்பதை பின்னர் வரலாறு மெய்ப்பித்தது.

ஏறத்தாழ 100 நாள் இராணுவ சட்ட கால கட்டத்தில் சிங்களவர்கள் பழி வாங்கப்பட்டவிதம் குறித்து ஆச்சரியமான தகவல்களே கிடைக்கின்றன. சிங்கள ஆவணங்கள் கட்டுரைகள், ஆய்வுகள், நூல்கள் என்பனதான் சிங்களவர்கல் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், முஸ்லிம்களே இத்தனைக்கும் காரணம் என்கிற புனைவையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் உண்மையில் அவற்றுக்கு வெளியில் தேடப்பட்ட பல ஆவணங்களில் இருந்து உண்மையில் சிங்களவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டமையை மறுக்க முடியாதபடி வரலாற்றுத் தகவல் மெய்ப்பித்திருகின்றன. முஸ்லிம் தரப்பு எதிர்கொண்ட பாதிப்புகளையும், சிங்கள சமூகம் எதிர்கொண்ட பாதிப்பு குறித்தும், அரசியல், பொருளாதார, சமூக, கலாசார காரணிகளைக் கொண்டு அளவீடு செய்ய வேண்டியிருக்கிறது. இதில் சற்று பிசகினாலும் இனத்துவ முரண்பாட்டு அரசியல் போக்கை விளக்குவதில் தவறு செய்தவர்கள் பட்டியலில் இணைந்துவிடுவோம். எனவே இது கரணம் தப்பினால் மரணம் நிலையையே உணர வேண்டியிருக்கிறது.

இலங்கையின் முதலாவது இனக்கலவரமாக கொள்ளப்படுவதால் வரலாற்று நூல்களில் இந்த நிகழ்வு பலமுறை சிறிதாக பதிவு செய்யப்பட்டதும் தவறவிடப்பட்ட தகவல்களையும், தரவுகளையும், போக்குகளையும், காரணிகளையும், காரணங்களையும் விளக்குவதே இந்த தொடரின் பணி.

தொடரும்..

நன்றி - தினக்குரல்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates