Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

அரசியல் நீக்கம் செய்யப்பட்ட அருந்ததியர்களுக்கு நீதி எங்கே? - என்.சரவணன்


(இந்த புகைப்படம் 1952 இல் எடுக்கப்பட்டது. கொட்டாஞ்சேனை ஸ்ரீ குனானந்த மாவத்தையிலுள்ள சிமெந்து தோட்டத்தில் எடுக்கப்பட்டது. அப்போது அந்த ஒழுங்கையில் 14 அருந்ததியர் குடும்பங்கள் வாழ்ந்து வந்தார்கள் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தினால் நாடு கடத்தப்பட்டதானாலும்   சாதிய தப்பி ஓடலின்  காரணமாகவும் இன்று 2 குடும்பங்கள் மட்டுமே எஞ்சிருக்கிறார்கள்.)
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மலையக இந்திய வம்சாவளி மக்கள், காலங்காலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த லயன் வாழ்க்கை முற்றுபெறத் தொடங்கியிருக்கிறது. பல ஆண்டுகாலப் போராட்டத்தின் பலன் இது.

“பசுமை பூமித்திட்டம்” நீதியான முறையில் முழுமை பெற அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னெடுக்கத் தள்ளப்பட்டுள்ளனர் மலையக மக்கள். காம்பரா வாழ்கையிலிருந்து விடுதலை பெற்று தம்மால் செழிப்பாக்கப்பட்ட நிலத்தில் 200 வருடங்களின் பின்னர் சொந்தமாக ஒரு காணித்துண்டை பெற்றுகொள்வதற்கான பயணம் பல முள் நிறைந்த பயணங்களைத் தாண்டி வந்தடைந்துள்ளது.

இந்த பிரச்சினையின் இன்னொரு வடிவத்தை அரசாங்கமும் அரசியல் சக்திகளும் அடையாளம் காண வேண்டியிருக்கிறது. அதை முன் வைப்பதே இக் கட்டுரையின் நோக்கம்.

வீடு, காணி பிரச்சினைத் தீர்வில் நகரசுத்தித் தொழிலாளர்களான அருந்ததிய மக்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்த கோரிக்கையை முழுமையாகப் புரிந்துகொள்ள முயல வேண்டும். 

இவர்கள் குறித்து அரசியல் தளத்தில் போதிய அக்கறை நிலவுவதில்லை. இவர்கள் பற்றிய கரிசனை இன்மைக்கான காரணங்கள் மிகவும் சூட்சுமம் மிக்கது.


யார் இவர்கள்
1815இல் கண்டியை கைப்பற்றியதோடு முழு இலங்கையையும் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவந்ததன பின்னர் தான், தமது வர்த்தகத்தையும் காலனித்துவத்தையும் உறுதியாக நிலைநிறுத்த தமக்கான ஏற்றுமதி உற்பத்திகளை மேற்கொள்ளத் தொடங்கியதுடன், நிர்வாகப் பிரதேசங்களையும் மீள்வரைவு செய்து அங்காங்கு நகராக்க திட்டங்களையும் மேற்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து இலங்கையில் நகரசபைகள் 1865யில் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நகரசுத்தித் தொழிலுக்காகவும் தமிழகத்திலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டார்கள். சுத்திகரிப்பு தொழிலுக்கென்றே விசேடமாக அவர்கள் அருந்ததியர்களைத் தெரிவு செய்தார்கள்.  காலப்போக்கில் அரச காரியாலயங்களுக்குமாக சுத்திகரிப்பு தொழிலுக்காக அருந்ததியர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். இலங்கையில் எங்கெல்லாம் நகரசபை, பிரதேச சபைகள் நிறுவப்பட்டனவோ எங்கெல்லாம் அரச கட்டடங்கள் நிறுவப்பட்டனவோ அங்கெல்லாம் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். ஏனைய நகரங்களிலும், மலையகத்திலும் கூட பரவலாக அவர்கள் குடியிருத்தப்பட்டார்கள்.

நகரத்தின் ஒரு ஓரத்தில் ஏதாவது ஒரு மோசமான சதுப்பு நிலத்தில் அவர்களுக்கு கொட்டில்களை அமைத்து கொடுத்தார்கள். இன்று நாம் மோசம் என்று கூறும் மலையகத்தில் உள்ள லயன் காம்பராக்கள் அளவுக்கு கூட வசதிகள் அற்ற வாழ்க்கை முறைக்குள் அவர்கள் கிடத்தப்பட்டார்கள். கொழும்பாயிருந்தாலும் சரி, யாழ்ப்பாணம், கண்டி, திருகோணமலை, காலி, அனுராதபுரம் எந்த இடங்களாக இருந்தாலும் இதே நிலை தான். அவர்கள் நாடளாவிய ரீதியில் சேரியை ஒத்த பல குடியிருப்புகளில் குடியமர்த்தப்பட்டனர். நகராக்கம் விரிவடைய விரிவடைய இவர்களின் குடியிருப்புகளின் பெறுமதியும் அதிகரிக்கப்படுகின்ற போது அந்த நிலத்தை அரசு கையகப்படுத்திக்கொண்டு அவர்களை மேலும் எடுத்த எல்லைக்கு தள்ளிக்கொண்டு போய் இருத்தியுள்ளனர். சில குடியிருப்புகள் அப்படியே நூறாண்டுகளுக்கு மேல் அதே நிலையில் இருக்கின்றன. அரசாங்கமும் அதனை மேம்படுத்தாது. அதனை மேம்படுத்த இம்மக்களுக்கு வசதியும் கிடையாது, அனுமதியும் கிடையாது. தமது காவல் தெய்வங்களான முனியாண்டி சாமியையும், சுடலைமாடன், மாடசாமி போன்ற சிறு தெய்வ வழிபாடுகளுடன் அந்த குடியிருப்புகளிலேயே அடிப்படை வசதிகள் குறைந்த வாழ்க்கையை தொடர்ந்து வருகின்றனர்.

ஒடுக்கப்பட்ட கடைக்கோடி தலித் சமூகத்தை சேர்த்தவர்கள் என்பதால் அவர்களை சாதிப் பெயர் கொண்டே பலரும் அழைத்தனர். குறைந்தபட்சம் சக இந்திய வம்சாவளி மலையக சமூகத்துடனான திருமண பந்தங்களைக் கூட வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு சாதியம் பிளவு படுத்தியிருந்தது இம்மக்களை. எனவே அகமண முறைக்குள்ளேயே வைக்கப்பட்டார்கள். தமது சமூகத்துக்குள் மாத்திரமே திருமண பந்தத்தை பேணிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். நகரசுத்தி குடியிருப்புகள் இலங்கையில் எங்கெங்கே இருக்கிறதோ அந்த குடியிருப்புகளோடு தமது தொடர்பு வலைப்பின்னலை பேணிக்கொண்டார்கள். தொடர்போ உறவு முறையோ இல்லாவிட்டாலும் கூட அந்த வலைப்பின்னலுக்குள் தமது திருமண பரிமாற்றங்களை செய்துகொண்டார்கள். இதையே பல ஆண்டுகளாகப் பேணி வருகிறார்கள். மாத்தளையிலுள்ள மணமகன் களுத்துறையில் முடிப்பார் அல்லது கொழும்பிலுள்ள ஒருவர் பதுளையில் திருமணம் முடிப்பார், அனுராதபுரத்திலுள்ளவர் புத்தளத்திலேயோ காலியிலேயே திருமணம் செய்துகொள்வார்கள். இந்த உறவுமுறை இந்த வலைப்பின்னலுக்குள் தான் அடங்கியது.

சாதியமைப்பு நிர்ப்பந்தித்த இந்த அகமண வாழ்க்கை முறை அவர்களின் குழுவாத வாழ்க்கை முறையை தக்கவைத்து வந்தது. இலங்கையில் அதிகமாக சாதிய வசைபாடலுக்கும், சாதிய அவதூற்றுக்கும் அதிகமாக ஆளாகி வரும் சமூகம் இந்த சமூகமே.

சமூக இயக்கங்கள்
மலையகத்தில் வளர்ந்த தொழிற் சங்கங்களைப் போல இவர்களுக்கான தொழிற்சங்கம் எதுவும் இருக்கவில்லை. அந்தந்த பிரதேசங்களில் தொழிற்பட்ட தொழிற்சங்கங்களில் அங்கத்துவம் பெற்றவர்களாக இருந்தார்கள். மலையகப் பகுதிகளில் இருக்கும் நகர சுத்தித் தொழிலாளர்கள் பெரும்பாலும் இ.தொ.காவில் அங்கத்துவம் வகித்தவர்கள்.

ஆனால் பல சமூக இயக்கங்களை கட்டியெழுப்பினார்கள். அருந்ததியர் மகாஜன சங்கம் எனும் அமைப்பை  1920இலேயே தொடங்கிவிட்டார்கள். அதன் பின்னர் அருந்ததியர் சங்கம், அரிஜன சங்க சம்மேளனம், , அரிஜன யூனியன், தெலுங்கு காங்கிரஸ் போன்ற இன்னும் பல அமைப்புகளை வைத்து இயங்கி வந்திருக்கிறார்கள். இந்த அமைப்புகள் நகர சுத்தி தொழிலாளர்கள் வாழ்ந்த பல குடியிருப்புகளுக்கு சென்று பணியாற்றியிருக்கிறது. ஆனால் சீர்திருத்த வலைகளுக்கப்பால் அது விரிவடையவில்லை.

இவை எதுவும் அரசியல் இயக்கமாக இது வடிவமெடுக்கவில்லை. பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட தெலுங்கு காங்கிரஸ் போன்ற அமைப்புகள் கூட இம்மக்களை விற்றுப்பிழைத்து பின் அழிந்தே போனது.

ஆக பிரதேச கட்சிகளோடு தம்மை இணைத்துக் கொண்டனர் அல்லது தேசிய கட்சிகளுக்கு ஆதரவளிப்போராகவே பெரும்பாலும் இருந்து வந்துள்ளனர். எனவே குடியிருப்பு போன்ற பெரிய பிரச்சினைகளை கோரிக்கையாக வைக்குமளவுக்கு அரசியல் பலம் கொண்டவர்களாக இருக்கவில்லை. மேல்மாகாணத்தைப் பொறுத்தளவில் தற்போது மனோ கணேசனுக்கு இவர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு காணப்படுகிறது.

மறைந்த ஜனாதிபதி பிரேமதாசவின் பால்ய காலத்து நண்பர்களாக அவரின் பிறப்பிடமான வாழைத்தோட்டப்பகுதியில் சூழ்ந்து வாழ்ந்த அருந்தியர்கள் இருந்தார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பிரேமதாசவுக்கு ஒடுக்கப்பட்ட அருந்ததியர்களை விளங்கிக்கொள்வதில் கடினமாக இருக்கவில்லை. பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்திலும் அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் அனுராதபுரம், மாத்தளை ஆகிய இடங்களில் இருந்த நகர சுத்தித் தொழிலாளர்களின் சேரிகளை வீடமைப்பு திட்டங்களின் மூலம் கல் வீடுகளைக் கட்டிகொடுத்து அவர்களுக்கு சொந்தமாக்கினார். 

ஏனைய இடங்களில் மலையகத்தில் உள்ளது போலவே இவர்களின் குடிசைகள் இவர்களுக்கு சொந்தமில்லை. நகர சுத்தி தொழிலில் இருக்கும்வரை தான் அவர்கள் அந்த குடிசைகளில் இருக்கலாம் என்கிற விதி இருந்தது. ஆனால் அவர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் பலாத்காரமாக குடியேறிய பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் தமக்கான குடியிருப்புகளை வளப்படுத்திக்கொண்டும், அவற்றுக்கான வீட்டு உறுதிகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்கள்.

ஆனால் இந்த இவர்கள் வாழ்ந்த குடிசையைப் பேணுவதற்காக தலைமுறை தலைமுறையாக அந்த தொழிலை அடுத்தடுத்த சந்ததிக்கு கைமாற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார்கள் இந்த தொழிலாளர்கள். அவர்களின் விளிம்புநிலை வாழ்க்கை உரிய கல்வி தரத்தையும் எட்டமுடியாதபடி வரையறுக்கப்பட்டிருந்தது. அப்படியும் தப்பித்தவறி போராடி கற்று தேர்ந்தவர்கள் அந்த குடியிருப்பை விட்டு வெளியேறினார்கள்.

அது அவர்களை சாதிய அடையாளத்திலிருந்து சற்று விடுவித்தது என்றும் கூறலாம். முடிந்தவர்கள் வெளியேற, முடியாதவர்கள் இன்றும் அந்த சேரி வாழ்க்கைக்குள் அகப்பட்டுப் போயிருக்கிறார்கள்.

அவர்களுக்குத் தான் இன்று குடியிருப்புக்கான தீர்வு தேவைப்படுகிறது. சாதிய வசவுகள் காரணமாக தமது அடையாளத்தை முன்னிறுத்தி ஒரு அரசியல் சக்தியாக உருவெடுக்க இயலவில்லை. குறைந்த பட்சம் இருந்த சமூக இயக்கங்களைக் கூட காலப்போக்கில் கைவிட வேண்டியேற்பட்டது. இறுதியில் பொதுவான பெயர்களைக் கொண்ட சங்கங்களை உருவாக்கி வேறு சமூகங்களையும் இணைத்து பணியாற்றியபோது தமக்கான நிகழ்ச்சி நிரலை தனித்து செயல்படுத்த முடியாத நிலைக்கு உள்ளானது தான் மிச்சம்.

நாடளாவி பரந்துபட்டு உதிரிகளாக வாழ்ந்து வருவதால் தேசிய கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழ் அரசியல் சக்திகளுக்கும் கூட இவர்கள் ஒரு வாக்கு வங்கி அல்ல. சாதிய காரணங்களால் இவர்களை இணைக்கும் வகையிலான ஒரு அரசியல் இயக்கம் கூட இல்லை. எனவே எவருக்கும் வேண்டப்படாத சமூகமாக நடத்தப்பட்டார்கள்.

மலையக மக்கள் முன்னணி 90களில் மலையகத்துக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளியினரையும் “மலையக மக்கள்” என்கிற அடையாளத்துக்குள் ஒன்றிணைக்க வேண்டும் என்கிற கொள்கையைக் கொண்டிருந்தபோதும் அக்கட்சி தமது கட்சியின் இருப்பை தக்கவைப்பதற்கான முனைப்பில் இந்த நிலைபாட்டையும் தவற விட்டது.

இந்திய பின்னணியுள்ளவர்களை “இந்திய வம்சாவளியினர்” என்று அழைப்பதா அல்லது “மலையகத்தவர்” என்று அழைப்பதா என்கிற விவாதத்தில் கூட இந்த மக்கள் பற்றி கரிசனை கொள்ளப்படுவதில்லை. 

ஆங்கிலேயர்களால் அன்று வஞ்சிக்கப்பட்டவர்கள், பின்னர் இலங்கை அரசியல் அதிகாரத்துவத்தால் வஞ்சிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு என்று எந்த அரசியல் தலைமையும் கிடையாது. நாளை இந்திய வம்சாவழித் தலைமைகளாலும் வஞ்சிக்கப்பட்டவர்களாக ஆகிவிடக்கூடாது. இலங்கையில் தமிழர்களுக்கு என்று ஒரு தேசிய கட்சி கிடையாது. அனைத்துமே பிரேதச கட்சிகளாகவே குறுகி இருக்கின்றன. தமிழ் அரசியல் சக்திகள் தமது அரசியல் கோரிக்கைகளுக்கான ஆதரவை பரஸ்பரம் குரல் கொடுக்கும் நிலை இல்லாமல் போய்விட்டது. அந்த வகையில் அருந்ததியர்கள் ஒட்டுமொத்த தமிழ் அரசியலிலிருந்தும் அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்களே.

இன்றைய இலங்கையின் சாதிய கட்டமைப்பில் இன்றிமையாத கவனிப்புகுரிய சமூகமாக அருந்ததியர்கள் காணப்படுகிறார்கள். சமூக மாற்றத்துக்கான செயற்பாட்டாளர்களோ, அரசியல் சக்திகளோ, ஆய்வாளர்களோ ஊடகங்களோ கண்டுகொள்ளாத ஆனால் கண்டுகொள்ளப்படவேண்டிய சமூகமாகவும் அருந்ததியர் சமூகம் ஆளாகியிருக்கிறது. ஒரு வளமற்ற, பலமற்ற, ஆதரவற்ற சமூகம் என்றளவில் தமக்காக தாம் மட்டுமே போராட வேண்டிய துர்ப்பாக்கிய சமூகத்தவர்கள் அவர்கள். அதற்கான திறனற்ற ஒரு சமூகமாகவும் இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. 


இவர்கள் வாழ்ந்த பல பிரதேசங்களில் முன்னர் இருந்த தமிழ் பள்ளிக்கூடங்கள் சிங்கள பள்ளிக்கூடங்களாக ஆக்கப்பட்டதால் சிங்களப் பாடசாலைகளுக்கே போக தள்ளப்பட்டார்கள். இன்றைய புதிய சந்ததி தமிழ் பேசத் தெரியாத, சிங்களம் மட்டுமே பேசத் தெரிந்த சமூகமாக ஆகியிருப்பதை பல குடியிருப்புகளில் நான் நேரடியாகவே கண்டறிந்துகொண்டேன்.  சென்ற வருடம் களுத்துறையில் நிகழ்ந்த ஒரு பாட்டியின் மரணச் செய்தி விளம்பரம் சிங்களத்தில் மட்டுமே களுத்துறை நகரத்தில் ஒட்டப்பட்டிருந்தது. இந்த நிலைக்கு இந்த சமூகம் தள்ளப்பட்டுள்ளமைக்கு இன்று எந்த தமிழ் அரசியல் சக்தியும் பொறுப்பேற்கப் போவதில்லை. வர்க்க நிலையில் அடிமட்ட வாழ்க்கையை அனுபவித்து வரும் இவர்களை கவனிக்க எந்த நாதியும் இப்போது இல்லை என்றே கூறலாம்.

குடியிருப்புகளில் இருந்து வெளியேறியவர்கள் போக இன்னும் நகரசுத்தி சேரி குடியிருப்புகளில் சிக்குண்டு இருக்கும் அந்த மக்கள் அரசியல் அனாதைகள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய அரசியல் தருணம் இது. குறிப்பாக மனோ கணேசன், அமைச்சர்கள் திகாம்பரம், வேலாயுதம், போன்றோர் இதனை அக்கறைக்குரிய விடயமாக கருத்தில் எடுக்க வேண்டும்.

இந்தியா வம்சாவளி மக்களுக்கான காணி, வீடு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் நகர சுத்தித் தொழிலாளர்களான அருந்ததியர்களும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும். இவர்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட்டதன் அரசியல் சூட்சுமத்தை இதன் நுண்ணரசியலிலிருந்தே கவனிக்கப்பட வேண்டும். இதில் வர்க்க அரசியல், பிரதேச அரசியல், இனத்துவ அரசியல் மட்டுமல்ல சாதி அரசியலும் கலந்தே இருக்கிறது...

வீடு காணி உரிமை பெற்றுக்கொண்டுக்கும் தீர்வில் இம்மக்களும் உள்ளடக்கப்பட வேண்டும்.

இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினையை மலையக எல்லைக்குள் மட்டுப்படுத்தாது இதன் நுண்ணரசியலை சற்று ஆழமாக பார்ப்பது அவசியம்.

நன்றி - தினக்குரல்

தேயிலைத் தொழிலோடு மலையக வாழ்வியலை இணைத்துப் பதிவு செய்துள்ள ஆய்வுநூல் - மல்லியப்புசந்தி திலகர்

 

ஓய்வுநிலைப் பேராசிரியரான மு.சின்னத்தம்பியின் 'தேயிலையின் செழுமையும் தொழிலாளரின் ஏழ்மையும்' எனும் ஆய்வு நூல் கடந்த ஞாயிறு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
குமரன் பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் நூலின் வெளியீட்டு விழாவை இலங்கை கோப்பியோ ஒழுங்கு செய்தருந்தது. அதன் ஸ்தாகத் தலைவர் பி.பி.தேவராஜின் நெறிப்படுத்தலில் ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை விழாவினை ஏற்பாடு செய்திருந்தார். இலங்கைக் கோப்பியோவின் தலைவர் உதேசி கௌசிக் அங்குரார்ப்பண உரையாற்றினார். இலங்கை கோப்பியா சார்பாக அதன் உறுப்பினர் ஈ.முத்துக்கிருஸ்ணன்  தலைமைதாங்கினார்.

  'பேராசிரியர் இந்த நூலுக்கு இட்டுள்ள தலைப்பு மிகவும் பொருத்தமானது. நாம் மலையகம் பக்கம் சென்றால் எங்கும் பச்சைப்பசேலென கம்பளம் விரித்தாற்போல் தேயிலை மலைகள் அழகாக காட்சித்தரும். எல்லோரும் நின்று ரசிக்கும் அழகு அது. ஆனால் அதே தேயிலைத் தோட்டத்தின் மக்கள் குடியிருப்பு பகுதிக்குப்போனால், ஏழ்மையும் வறுமையும் நிறைந்ததாக அந்தத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை அமைந்திருக்கும்.  அது ரசிக்கும்படியாக இருக்காது. மனதைப்பிழியும் சோகத்தையே தரும். இந்த இரண்டு நிலைமைகளையும் விளக்கும் நூலை எழுதியுள்ள பேராசிரியர் மு.சின்னத்தம்பி அந்த நூலுக்கு 'தேயிலையின் செழுமையும் தொழிலாளரின் ஏழ்மையும்' என தலைப்பிட்டிருப்பது மிகவும் பொருத்தமானது என தலைமையுரையில் தெரிவித்தார். இங்கே வருகை தந்திருக்கக்கூடிய அரசியல், தொழிற்சங்கத் தலைவர்கள் அந்த மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அடுத்ததாக நூலைப்பற்றி சில வார்த்தைகள் என்ற தலைப்பில் நூலாசிரியர் மு.சின்னத்தம்பி அவரது நூல் பற்றிய அறிமுத்தைத் தந்தார். 'நான் பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்டவன். அதுவும் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவன். எனவே தேயிலைத் தொழில் மற்றும் அங்கு வாழும் மக்கள் பற்றிய போதிய அனுபவமும் பரிச்சயமும் எனக்கு உண்டு. பல்கலைக்கழகத்துக்குள் சென்றதும் நான் தெரிவு செய்துகொண்ட துறை பொருளியல் துறை. அந்தத் துறையில் பல்வேறு ஆய்வக்கட்டுரைகளை எழுதவும், பல்வேறு சர்வதேச கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கவும் அழைக்கப்படும்போது நான் இந்த தேயிலை மற்றும் அங்கு வாழும் தேயிலைத் தொட்டத் தொழிலாளர்கள் பற்றியே அதிகம் பேசியுள்ளேன். அநத அனுபவங்களின் பதிவே இந்தநூல். இந்த நூலை எழுதி வெளியீடு செய்ய எனக்கு 20 ஆண்டுகாலம் எடுத்தது. ஒரு பொருளியலாளனாக தேயிலைத் தொழிலை பொருளாதாரக் கண்ணோட்டத்துடனும் அதே நேரம் மலையத்தவனாக அந்த மக்கள் மீதான் பற்றோடும், சமூக நோக்குடனும் இந்த கட்டுரைகளை எழுதியுள்ளேன்' என தெரிவித்தார்.

நூல் அறிமுகவுரையை இலங்கைத் திறந்தப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் நிகழ்த்தினார். அறிமுகவுரையாகவும் ஆய்வரையாகவும் அமைந்த அவரது உரை நூல் பற்றிய பூரணமான பார்வையை சபைக்குத் தருவதாக அமைந்தது. 'மாணவனாகவும், விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் தன் வாழ்நாளில் பாதியைக் கழித்த பேராசிரியரின் அனுபவமும் அர்ப்பணிப்பும் ஒரு அற்புதமான நூலை எமக்குத் தந்துள்ளது. அதேபோல பேராசிரியர் சோ.சந்திரசேகரத்தின் முன்னுரை இந்த நூலுக்கு மேலும் அணி சேர்த்துள்ளது. பேராசிரியர் சந்திரசேகரனும் பன்னூலாசரியர். இந்த இரண்டு பேராசிரியர்களும் மலையகத்திற்கு கிடைத்த கொடைகள். பேராசிரியர் மு.சின்னத்தம்பி பல்வேறு ஆய்வு நூல்களை வாசித்த அனுபவமுடையவர். அந்த அனுபவங்களின் ஊடாக மலையக மக்களின் வாழ்வியலை, தேயிலையின் பொருளாதாரக் கண்ணோட்டத்தோடு தந்துள்ளார். 

முதலிரண்டு அத்தியாயங்களிளும் பெருந்தோட்ட தொழில் துறை சம்பந்தமான உலகப்புகழ்பெற்ற ஆய்வாளர்களின் நூல்களில் இருந்து பல்வேறு தகவல்களைத் தந்துள்ளார். அதே நேரம் அடுத்தத் அத்தியாங்கள் படிப்படியாக சமூகப்பொருளாதார பார்வையடன் மலையத்தை அவர்களின் வாழ்வியலை நோக்குகின்றன. மயைலகம் பற்றி, பெருந்தோட்டம் பற்றி, மலையக மக்களின் வாழ்வியல் கலாசரம் பற்றி பல நூல்கள் ஆங்கிலத்தில் வெளிவந்திருந்தாலும் தமிழில் அந்தப்பணியை முழுமையாக நிறைவேற்றியிருக்கும் முதல் நூல் என்ற பெருமையை பேராசிரியர் மு.சின்னத்தம்பியின் இந்த 'தேயிலையின் செழுமையும் தொழிலாளரின் ஏழ்மையும்' எனும் நூல் பெறுகின்றது என தெரிவித்தார்.

அடுத்ததாக பேராசிரியரின் மாணவர்களான பேராதனைப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவரையாளர்கள் ஆர்.ஷோபனாதேவி மற்றும் எஸ்.விஜயசந்திரன் ஆகியோர் 'குருவந்தனம்' எனும் வாழ்த்துரையை வழங்கினார்கள். பேராசிரியர் மு.சின்னத்தம்பி மலையகத்தின் முதல் பேராசிரியர். மட்டுமல்ல அவருக்குப்பின்னால் பல்கலைக்கழக மலையக சமூகம் ஒன்றை வளர்த்தெடுக்கும் ஒரு பாரிய பணியை நிறைவேற்றி வைத்தவர். இன்று நாங்கள் பல்கலைக்கழத்திலே பேராசிரியர்களாக, விரிவுரையாளர்களாக சேவையாற்றுகிறோம் என்றால் அதற்கு வித்திட்டவர் பேராசிரியர் மு.சின்னதம்பி. எமக்கு கற்பித்து, வழிநாடாத்தி, பரிந்துரைத்து ஒரு கல்விச்சமூகம் மலையக சூழலில் உருவாக வித்திட்டவர். அவரது இந்த நூல் அவரது சேவைக்காலத்தின் அறுவடை மாத்திரமல்ல ஒரு வரலாற்றுப் பதிவாகவும் அமைகிறது' என குருவந்தன உரைகள் அமைந்திருந்தன.

அதற்கடுத்ததாக கேள்வி பதில் அரங்கம் அமைந்தது. இலங்கை கோப்பியோ ஸ்தாபகத் தலைவர் பி.பி.தேவராஜ் இதனை நெறிப்படுத்தியிருந்தார். கொழும்புத் தமிழ்ச்சங்க நூல் வெளியீட்டு விழாவில் வித்தியாசமான ஒரு அமர்வாக இருந்தபோதும் கேள்விகள் சுருக்கமாக அமையாது உரைகளாகவும் விமர்சனங்களாகவும்  அமைந்தமை சபையில் சலசலப்பை உருவாக்கியமையை அவதானிக்க முடிந்தது. இந்த நிகழ்வுக்குப்பிறகு இடம் பெற்ற பேராசிரியருக்கான கௌரவிப்பு, பேராசிரியரின் எற்புரை, நன்றியுரை போன்றவற்றை இந்த சபை சலசலப்புக்கு மத்தியிலேயே செய்து முடிக்க நேர்ந்தது. அதேநேரம் பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்த சபையில் நூலினை வெளியீடு செய்யாமையும் அதன் பிரதிகள் சபையினருக்கு கிடைக்கப் பெறாமையும் ஏமாற்றத்தைத் தந்தது.

மிகவும் காத்திரமான நூலாக அமைந்திருக்கக் கூடிய இந்த நூல் மலையகத்தின்பால் அக்கறை கொண்ட அனைவருக்கும் கிடைக்கச்செய்ய வேண்டியது விழா ஏற்பாட்டாளர்களின் கடப்பாடாக அமைகின்றது.


பெருந்தோட்ட பகுதிகளில் அறியப்படாத மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு தினம் - எஸ்.வடிவழகி


இலங்கை முழுவதும் மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு தினம் கடந்த 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. இது சம்பந்த மான நிகழ்வுகள் ராஜகிரியவில் நடைபெற்றதுடன், இது தொடர்பான பல விழிப்புணர்வு நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களி லுமுள்ள பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் நடத்தப்பட்டன.

இச்செயற்றிட்டத்தின் ஒரு கட்டமாக மின்சார பாதுகாப்பு, மின்சாரத்தை கவனமாக கையாளுதல், வீடுகள், கட்டடங்களில் பாதுகாப்பான மின்னோட்ட சூழல் அமைக்கப்படுதல், மின் விபத்துக்களை தடுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அத்துடன்; பொது இடங்களில் முக்கிய தகவல்கள் அடங்கிய சுவரொட்டிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

பொதுவாக கிராம, நகர்ப்புறங்களில் மின்சார பாவனை தொடர்பான அறிவூட்டல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறுவது மட்டுமல்லாது, மின்சாரப் பரிசோதகர்கள் கட்டடங்களுக்கு விஜயம் செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் சீராக உள்ளனவா என கண்காணிக்கின்றனர். சட்ட திட்டங்களை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றனர். வழமையாகவே மின்சார பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக உள்ள நகர, கிராமிய பிரதேசங்களின் மின்சாரப் பாவனை பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் இம்முயற்சிகள் பாராட்டப்பட வேண்டும்.

பெருந்தோட்டங்களில் கேள்விக் குறியாகவுள்ன மின்சார பாதுகாப்பு
எனினும், இந்நடவடிக்கைகள் பெருந்தோட்டப் பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது கேள்விக்குரிய விடயமாகும். மிக அண்மைக் காலப் பகுதியிலேயே பெருந்தோட்டப் பகுதிகளுக்கு மின்சாரம் கிடைத்தது. இதன் விளைவாக பெருந்தோட்டப்பகுதிகளில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது உண்மைதான்.

ஆனாலும் பெருந்தோட்டப் பகுதிக்கு மின்சாரவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட நாட்களிலிருந்தே பாரிய மின்விபத்துக்கள் ஏற்பட்டு பல சேதங்களுக்கு வழிவகுத்துள்ளன. இந்த தீவிபத்துகளால் ஒரு சில உயிர்ச் சேதங்களே ஏற்பட்டாலும் பலகோடிக்கணக்கான சொத்துக்கள் அழிந்துள்ளதுடன் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். வாழ்நாள் முழுவதும் சேகரித்த பெறுமதியான பொருட்கள், ஆபரணங்கள் கருகின. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. ஆவணங்கள் அழிந்தன. குடியிருப்புகளில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமன்றி தோட்ட நிருவாகங்களுக்கு கூட நட்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பாரிய மின் விபத்துகள் பெருந்தோட்டப் பகுதி குடியிருப்புகளில் மட்டுமே நிகழ்கின்றன. இதற்கு காரணம் பெருந்தோட்டப் பகுதிகளில் வீடுகள் தனி வீடுகளாக அன்றி தொடர் வீடுகளான லயன் அறைகளாக அமைந்துள்ளமையாகும்.

பெருந்தோட்ட மக்களின் சமூக பாதுகாப்பு உரிமை மீறப்படுகிறது.
பெருந்தோட்டங்களில் மின் இணைப்புகளை வழங்கும்போது முழுமையான பாதுகாப்புடனும் ஒழுங்கான விதிமுறைகளுடனும் இணைப்புகளை ஏற்படுத்துவதற்கு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையையும் எடுப்பதில்லை. தொடர் வீடுகள் காரணமாக மின் இணைப்புகள் ஏற்படுத்தப்படும்போது ஆபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதை தெரிந்து கொண்டும். அதிகாரிகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கின்றனர். நமது அரசியல் தலைவர்களோ இது தொடர்பாக இதுவரை எந்தவித ஆலோசனையையும் முன்வைத்துதும் கிடையாது. நாட்டில் எல்லா பிரஜைகளுக்கும் சம உரிமை உண்டு. சமூக பொது பாதுகாப்பிற்கான உரிமை உண்டு. பெருந்தோட்ட மக்கள் இந்த நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில் அவர்களுக்கும் இந்த உரிமை உண்டு. ஆயினும் இந்த உரிமை மதிக்கப்படாமையினாலேயே தொடர்ச்சியான மின் விபத்துகள் ஏற்படுகின்றன.

ஆயினும் மலையகத்தில் இதுவரை எந்த ஒரு அரசியல்வாதியும் மின் விபத்துக்கள் ஏற்பட்டு அனர்த்தங்கள் ஏற்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அது ஒரு உரிமை மீறல் என்ற அடிப்படையில் குரல் எழுப்பியது கிடையாது.

பொறுப்பற்ற மின்பாவனை பல இடங்களில் பிரதான மின்சாரக் கம்பிகளில் கொழுவிகளை மாட்டி சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெறுகிறார்கள். இதே முறையில் தமது காய்கறித் தோட்டங்களை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பெற்று வேலிகளுக்கு மின்சாரம் பாய்ச்சுகிறார்கள். இவ்வாறு மின்சாரம் பெறும்போது மின்சாரக் கம்பிகளில் பாதுகாப்பற்ற முறையில் இணைப்புகளை ஏற்படுத்தி கம்பிகள் இணைக்கப்படும் இடங்களில் மின் ஒழுக்கு ஏற்படுவதை தவிர்க்க வெறும் பொலித்தீன் பைகளை சுற்றிக் கட்டுகிறார்கள். இவை அனைத்தும் எதிர்பாராத வேளையில் பாரதூரமான ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடிய விடயங்களாகும்.

பெருந்தோட்ட வீடுகளில் இட நெருக்கடி காரணமாக பொருட்களை சேமித்து வைப்பதற்காக பயன்படுத்தப்படும் அட்டாலில் (பரன்) விரைவில் தீப்பற்றக் கூடிய விறகு, பொலித்தீன் போன்ற பொருட்களை அடைசலாக சேமித்து வைக்கிறார்கள். கவனயீனமாக இணைக்கப்படாமல் விடப்படும் மின்சாரகம்பிகளில் இருந்து ஏற்படும் மின் பொறிகள் வெயில் காலங்களில் இலகுவில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வழியாக தீ ஏற்படவும் ஒரு வீட்டிலிருந்து மற்ற வீடுகளுக்கு இலகுவாக பரவவும் காரணமாக அமைகின்றன.

பெருந்தோட்டப் பகுதிகளில் மின் கம்பி இணைப்புகளுக்கு கொங்கிறீட் தூண்கள் பயன்படுத்தப்படுவதை அனேகமாக காண முடிவதில்லை. அதற்குப் பதிலாக விரைவில் உக்கிப்போகக் கூடிய, மிகவும் குறைந்த உயரத்தினாலான மரங்களே பயன்படுத்தப்படுகின்றன. பல இடங்களில் காலப் போக் கில் இந்த மரத்தூண்கள் பழுதடைந்து சாய்ந்து கிடப்பதையும், மின்சாரகம்பிகள் தற்காலிகமாக முட்டுக் கொடுக்கப்பட்டுள்ள மரங்களில் தொங்குவதையும், ஒருவர் கைகளை மேல் நோக்கி நீட்டினால் தொட்டுவிடக் கூடிய உயரத்தில் மின்சாரக் கம்பிகள் தொங்குவதையும் காணக் கூடியதாக உள்ளன.

சிறுவர்கள் சிறு தடிகளைக் கொண்டு மின்சாரக் கம்பிகளில் தட்டக் கூடிய நிலையில் மின் கம்பிகள் குறைந்த உயரத்தில் தொங்குவதை பல இடங்களில் காணமுடிகிறது. இது மிகவும் ஆபத்தான நிலையாகும், விசேடமாக மழைகாலங்களில் மரங்களும் மின்சார கம்பிகளும் ஊறி மின் ஒழுக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்க பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. ஆயினும் இது குறித்து எவரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பெருந்தோட்டப் பகுதிகளில் மனித உயிர்கள் துச்சமாக மதிக்கப்படுவதையும்,உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவதையும் நாம் காணகிறோம்.

தோட்டங்களுக்கு தனியான மின்சாரப் பாதுகாப்பு கொள்கை அவசியம்.
இலங்கையில் 200 வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றைக் கொண்டுள்ள பெருந்தோட்ட மக்களுக்கு முதன்முறையாக காணி உரிமையும், வீட்டுஉரிமையும் கிடைப்பதற் கான நல்ல சமிக்ஞைகள் தோன்றியுள்ளன. ஏதிர்காலத்தில தனிவீடுகள் வரக்கூடும். ஆயினும் பெருந்தோட்டப் பகுதிகளில் தனி வீடு அமைப்பதற்கு இன்னும் பல்லாண்டு காலம் செல்லக் கூடும். இந்தப் பின்னணி யில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள மின் இணைப்புகளை பாதுகாப்பானதாக ஆக்குவதற்கும், பெருந்தோட்ட மக்களுக்கு பாது காப்பான மின் பாவனை குறித்த விழிப்புணர்வூட்டல் திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படுவற்கும் விசேடமான கொள்கைகளும், திட்டங்களும் அவசியமானதாகும். மலையகப் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையகப் அரசியல் பிரதிநிதிகள் இது தொடர்பாக கொள்கை வகுப்பாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஆனால், அதுவரை நாம் காத்திருக்க முடியாது. ஒவ்வொரு தோட்டத்திலுமுள்ள அமைப்புக்களும், பொதுநல விரும்பிகளும் மின்சார இணைப்புக்களை பாதுகாப்பான தாக்க தங்களாலான நடவடிக்கை எடுக்கலாம். அந்தளவுக்கு நமக்கு சமூக பொறுப்பு இருக்கிறா என்பதை அனைவரும் சிந்தித் துப்பார்க்க வேணடும்.
நன்றி - வீரகேசரி

மலையக மக்களுக்கு சட்ட ரீதியான காணி உரித்தை எவ்வாறு வழங்கலாம்? - சட்டத்தரணி இ. தம்பையா, சு. விஜயகுமார்


மலையக மக்களுக்கு காணி உரித்துடனான வீட்டு உரிமையை உறுதிப்படுத்தக் கோரி மக்களின் பங்குபற்றலுடன் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களும் பரப்புரைகளும் இடம்பெற்றன. சில மலையக பாராளுமன்ற அரசியல் தலைமைகளும் இதற்கு குரல் கொடுத்தனர். இப்பின்னணியில் மீரியபெத்த அவலம் மலையக மக்களின் ஏற்படுத்திய காணி, தனி வீட்டு உரிமைக்கான எழுச்சி கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர்கள் இருவரையுமே மலையக மக்களின் வீட்டுரிமை பற்றி தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் பேச வைத்தது. மஹிந்த மலையக மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் எண்ணம் கொண்டவரல்ல. மைத்திரிபால தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் தனி வீடுகள் காணி உறுதியுடன் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் தற்போதைய மைத்திரி- ரணில் அரசாங்கம் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுடன் இணைந்து மலையகத்தில் 7 பேர்ச் காணியில் காணி உறுதியுடன் தனி வீடுகள் அமைத்து வழங்க போவதாக குறிப்பிட்டுள்ளது.

காணி சீர்திருத்தச் சட்டத்தின் பிரிவு 3(3)ஆ பிரகாரம் தோட்ட காணிகளை காணி சீர்த்திருத்த ஆணைக்குழு கையேற்கும் போது லயன் அறைகள் மற்றும் குவார்ட்டஸ்களில் உள்ள ஒவ்வவொரு குடும்பத்திற்கும் 1/8 ஏக்கருக்கு மேற்படாத அதாவது 20 பேர்ச்சுக்கு மேற்படாத காணியை குடியிருப்புக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. 1972ஆம் ஆண்டே குறித்த அளவு காணி தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள நிலையில் 20 பேர்ச் காணி வீட்டை கட்டிக் கொள்ள மலையக மக்கள் பெற வேண்டிய சட்டரீதியான உரிமையாகும். அத்தோடு இன்று கிராமங்களில் அரசாங்க நிறுவனங்கள் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் போது 20 பேர்ச் காணியே வழங்கப்படுகிறது. எவ்வாறாயினும் முதற் கட்டமாக பண்டாவளையிலும் தலவாக்கலையிலும் 7 பேர்ச் காணிக்கான 'பசுமை பூமி' காணி உரிமை பத்திரம் (எனினும் சிங்கள மொழியிலே இது உடமை கொள்வதற்கான பத்திரம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது) என்ற ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

குறித்த ஆவணத்தில் காணி உரித்தை உறுதிப்படுத்துவதற்கான சட்டரீதியான போதாமைகளும் குறைபாடுகள் இருக்கின்றமையை மக்கள் தொழிலாளர் சங்கம் சுட்டிக்காட்டியிருந்தது. பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் அவர்கள் 'பசுமை பூமி' உரிய அதிகாரிகளினால் ஒப்பமிட்டு அரச அங்கீகாரத்துடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமையை உறுதி செய்கின்ற ஒரு பத்திரம் என்றும் காணிகளை அளந்து அதன் எல்லைகளை மதிப்பிட்டு இரண்டாவது உறுதி பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன என்றும், அதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். வழங்கப்பட்ட உறுதி பத்திரம் இருக்க இரண்டாவது உறுதி பத்திரமும் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டத்தில் இருந்து வழங்கப்பட்ட பத்திரத்தில் சட்ட ரீதியான குறைபாடுகள் இருக்கின்றமையை இலகுவில் ஊகிக்கலாம். 

இராஜாங்க அமைச்சர் வழங்கப்பட்ட காணிகள் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபனம் (SLSPC) மற்றும் ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) உள்ளபடியால் அவர்கள் ஒப்பமிட்டு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபன சட்டம் மற்றும் ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை தாபிக்கப்பட்டுள்ள அரச விவசாய கூட்டுறவுகள் சட்டம் ஆகியன வீடமைப்பிற்கு காணி வழங்குவதற்கான எந்த ஏற்பாடுகளையும் கொண்டிருக்கவில்லை. எனினும் சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி குறித்த நிறுவனங்களின் காணியே சட்ட ரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய வழங்கப்பட்டுள்ளது எனின் காணியை பிரஜைகளுக்கு வழங்க பின்பற்றப்பட்ட நடவடிக்கை முறை என்ன என்பது தொடர்பாக மக்களுக்கு கூற வேண்டிய பொறுப்பை இராஜாங்க அமைச்சர் கொண்டுள்ளார்.

இந்த விடயத்திற்கு மேலாக 'பசுமை பூமி' காணி உரிமை பத்திரம் சட்டரீதியான உரிமை பத்திரமாக இருந்தால் (ஒரு அனுமதிபத்திரமாயினும் சரி) சட்ட ரீதியான உறுதிபத்திரம் தொடர்பில் பின்வரும் குறைபாடுகள் நோக்கப்பட வேண்டியன.

1. அரச காணிகள் பிரஜைகளுக்கு வழங்கும் போது குறித்த காணிகள் எச்சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் எந்த நிறுவனத்திற்கு சொந்தமாயிருந்தன என்பதும் எச்சட்டத்தின் கீழ் எந்த அதிகாரம் பெற்ற நபரினால் அது பிரஜைகளுக்கு வழங்கப்படுகிறது என்பதும் காணி உறுதி பத்திரத்தின் முகப்பில் இடம்பெற வேண்டும் என்ற நிலையில் அவ்வாறு 'பசுமை பூமி உரிமை பத்திரத்தில்' இடம்பெறவில்லை. மாறாக தற்போதைய ஜனாதிபதியின் கொள்கை பிரகடத்தில் தோட்ட மக்களுக்கு காணியுரிமையுடன் கூடிய வீடு வழங்கப்படும் என்ற வாசகத்துடன் ஆரம்பிக்கிறது. இது சட்ட வலிது தொடர்பில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

2. பண்டாரவளையில் வழங்கப்பட்ட காணிகள் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபனத்திற்கு சொந்தமானதாகையால் அக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கையொப்பமிட்டிருப்பதால் அது சட்ட ரீதியான உறுதி என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபனத்தின் சட்டத்தின் கீழ் கூட்டுத்தாபன தலைவர் காணியை வழங்குவதற்கு அதிகாரம் கொண்டவராயின் அச்சட்டத்தின் எந்த ஏற்பாடுகளுக்கு அமைய அவர் காணி வழங்கும் அதிகாரம் கொண்டுள்ளார் என்பது உரித்தாவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். எனினும் ஆவணத்தில் அவ்வாறான எந்த குறிப்பும் இல்லை. அத்துடன் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தின் சார்பாக வழங்கப்படும் உத்தியோகபூர்வ ஆவணங்களில் இரண்டு பணிப்பாளர்கள் ஒப்பமிடாவிட்டால் அது செல்லுபடியாகாது. இங்கு தலைவர் என்ற ஒரு பணிப்பாளர் மட்டுமே ஒப்பமிட்டுள்ளார் என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.

3. பொதுவாக அரச காணிகள் பிரசைகளுக்கு வழங்கப்படும் போது அது தொடர்பாக பின்பற்ற நடவடிக்கை முறைகள் அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட வேண்டும். எனினும் 'பசுமை பூமி உரிமை பத்திரம்' வழங்கப்பட காணிகள் தொடர்பாக அவ்வாறன எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை.

4. உரிமை பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள காணி விபரிப்பு மற்றும் முன் உறுதிகள் என்பவைகள் சட்டரீதியானதாக இருப்பின் அக்காணி பற்றிய விபரங்கள் மாவட்ட காணி பதிவாளர் அலுவகத்தின் காணி பதிவேட்டில் காணப்பட வேண்டும். உரிமை பத்திரத்தை பெற்றவர்கள் அதனை அடிப்படையாக கொண்டு உரித்து பதிவு சட்டத்தின் கீழ் உரித்து ஒன்றை பெற்றுக் கொள்ள முடியும். எனினும் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட உரிமை பத்திரத்தை கொண்டு உரித்தை பெறுவதில் பல சட்ட சிக்கல்கள் எதிர்காலத்தில் எழ உள்ளன.

5. உரிமை பத்திரத்தின் இரண்டாம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள நிபந்தனைகளில் குறித்த காணித் துண்iடை தோட்டத் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு மட்டுமே கைமாற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. காணி உரித்தை பெறுபவர் அதனை விற்பதற்கு அதிகாரம் பெறாத வகையில் நிபந்தனைகள் இருப்பது நன்று. எனினும் குறித்த காணியை அதில் கட்டப்படும் வீட்டையும் வங்கியில் ஈடு வைப்பதற்கு உரிமையாளருக்கு அதிகாரம் வழங்குவதே ஏற்றுக் கொள்ளக்கூடியது. எனினும் தோட்டத் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு மாத்திரமே கைமாற்றலாம் என்று கூறியிருப்பது மலையக மக்களை மீண்டும் சட்ட ரீதியாக இன்னொரு வடிவில் தோட்டங்களுக்குள் முடக்கிவைப்பதாகவே அமையும்.

மேற்குறித்த பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடத்தில் பரந்த கலந்துரையாடல் இடம்பெற வேண்டும். அதற்கு மக்கள் சார்பு அமைப்புகளும் தனிநபர்களும் முன்வர வேண்டும். மலையக மக்களுக்கு காணி உரித்துடன் வீட்டுரிமையை உண்மையில் உறுதிப்படுத்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக தலைமைகள் உண்மையில் முயற்சிப்பார்களாயின் பழைய தலைவர்களைப் போல் குறைபாடுகளை சுட்டிக்காட்டும் போது அவற்றை உதாசினம் செய்வார்களாயின் அது மக்களை உதாசினம் செய்வதாகவே அமையும்.

பண்டாரவளையை போலல்லாது தலவாக்கலையில் வழங்கப்பட்ட காணி உரித்து பெருந்தோட்டக் கம்பனிகள் குத்தகைக்கு பெற்றக் காணிகள் என்றவகையில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பொறுப்பில் உள்ளவையாகும். அந்த காணி உரிமை பத்திரத்தில் காணி வழங்கும் அதிகாரத்தை யார் பெற்றிருக்கின்றார் என்ற கேள்வி எழுகிறது. எவ்வாறாயினும் தலவாக்கலை பிரதேசத்தில் வழங்கப்பட்ட காணி உரிமை பத்திரத்தின் உள்ளடக்கம் பண்டாரவளையில் வழங்கப்பட ஆவணத்தில் உள்ள குறைபாடுகளைக் கொண்டே இருக்கும் என்பனை ஊகிக்கலாம்.

பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் இரண்டாவது உறுதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவாதாக கூறுவதில் இருந்து வழங்கப்பட்ட உறுதியின் சட்டரீதியான அங்கீகாரம் பற்றிய பிரச்சினையை அவரே எற்றுக் கொண்டுள்ளனார். மலையக மக்களுக்கு காணி உரித்துடன் வீட்டுரிமையை முறையாக உறுதி செய்ய அரசியல் தலைமைகள் நேர்மையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக தேர்தல்களை மையப்படுத்தி 90களில் லயன் அறைகளை சொந்தமாக்குவதாக கூறி உறுதி வழங்கப்பட்டது போன்று மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் அதற்கு மக்கள் தமது எதிர்ப்பை காட்ட வேண்டும்.

மலையக மக்களுக்கு 7 பேர்ச் காணியை உரித்துடன் வழங்கப்படுவதாக இருந்தாலும் அச்செயற்பாடாது இலங்கையின் காணிச் சட்டங்களை ஆராய்ந்து சட்ட ரீதியாக காணி உரித்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். எம்மை பொறுத்தவரையில் மலையக மக்களுக்கான காணி உரித்து சட்ட ரீதியாக மூன்று அடிப்படைகளிலேயே எவ்வித சட்டரீதியான பிரச்சினையும் இன்றி உதிப்படுத்தலாம்.

1. காணிச் சீர்த்திருத்த ஆணைக்குழு காணியை பொறுப்பெற்று ஜனாதிபதியினூடாக காணி உரித்தை வழங்கலாம். பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள காணிகள் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமானவை. குத்தகை ஒப்பந்தத்தில் மாற்றங்களை செய்து பிரஜைகளுக்கு வழங்கவென காணிகளை காணி சீர்தித்த ஆணைக்குழு பெற்றுக் கொள்ளமுடியும். காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான தோட்டக் காணிகள் ஜனாதிபதியினால் உரித்து மூலம் பிரஜைகளுக்கு வழங்க முடியும். அத்தோடு இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபனம் (SLSPC) மற்றும் ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) ஆகியவற்றுக்கு சொந்தமான காணிகளையும் ஜனாதிபதி உரித்து மூலம் வழங்க முடியும். அதற்கான ஏற்பாடுகளை காணி வழங்கள் (விசேட சட்ட ஏற்பாடுகள்) சட்டம் குறிப்பிட்டுள்ளது.

2. காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிகளை பெற்றுக் வழங்கலாம்;. காணி சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் இரு அரச கூட்டுத்தாபனங்களுக்கு சொந்தமான காணிகளின் குறித்த காணிகளை காணி ஆணையாளரூடாக சட்டரீதியாக மாவட்டச் செயலகங்களுக்கு சொந்தமாக்கி அந்தந்த மாவட்டச் செயலாளர்களுடாக காணி உரித்தை வழங்க முடியும்.

3. தேசிய வீடமைப்பு அதிகார சபை சட்டத்தின் கீழ் காணியை அச்சபை பெற்று கடன் வழங்கி வீடமைக்கப்பட்ட பின்னர் உரித்தை அச் சபையே வழங்க முடியும்.

இந்த மூன்று நடைமுறைகளில் ஏற்புடைய ஒன்றை பயன்படுத்தி மலையக மக்களுக்கு காணி உரிமையை குறுகிய காலத்தில் உறுதி செய்ய முடியும். அதற்கு அரசாங்கத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை குறித்த செயற்பாடுகளுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு பணிப்புரைகளை வழங்குவதன் மூலம் இதனை செய்ய முடியும். அவ்வாறான ஏற்புடைய முறையை பின்பற்றி மலையக மக்களுக்கு காணி உரிமையை உறுதிப்படுத்த அரசாங்கமும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களும் முன்வர வேண்டும். அத்தோடு காணி உரித்தை பெற்ற மக்கள் தமக்கான காணி உரிமை சட்டரீதியாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை மனதிற் கொள்ள வேண்டும். அத்தோடு மலையகத்தின் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் ஏனைய துறைசார் தொழிலாளர்களும் வெகு மக்களும் காணியுரித்துடனான வீட்டு உரிமையை முறையாக உறுதி செய்வதற்கான போராட்டத்தை தொடர்ந்து தளர்வின்றி நடத்த வேண்டும். 

100 நாள் வேலைத்திட்டத்தால் மலையகத்தின் கல்வித்துறைக்கு நடந்தது என்ன? - மொழிவரதன்



நாட்கள் முடிவடைந்து விட்ட நிலையில் கல்வித்துறையில் மலையகத்தில் என்ன அபிவிருத்தி நடந்துள்ளதென எவரும் யோசிப்பது நியாயமே! பின்வரும் விடயங்கள் பற்றி குறிப்பாக மலையக கல்வி தொடர்பாகக் கூறப்பட்டது.

*மலையகத்திற்கான விஞ்ஞான கல்வி.
*மலையக பாடசாலைகளை தரம் உயர்த்தல்,
*விஞ்ஞானத்துறைக்கான ஆசிரியர்களை தேடல் அல்லது நியமித்தல்.

மேற்குறிப்பிட்டவைகளுள் சில நடந்தேறி உள்ளன. விஞ்ஞான கூடங்கள் தொழில் நுட்ப கூடங்கள் பல திறக்கப்பட்டன. அவையாவும் முன்னைய அரசின் (மஹிந்தோதயத்திட்டத்தின்) மறுவடிவங்களே எனின் தவறில்லை. புதிதாக புதிய அரசு ஏதாவது ஆரம்பித்ததாக குறிப்பாக மலையகத்தில் எதுவும் தெரியவில்லை. பாடசாலை தரம் உயர்த்தல் பற்றி பேசப்பட்டது. முன்னைய காலங்களிலும் பல பாடசாலைகள் தரம் உயர்த்தப்பட்டு பின்னர் ஆசிரியர்கள் இன்மையால் மூடப்பட்டன. எனவே, க.பொ.த. உயர்தரத்திற்கு கணித, விஞ்ஞான ஆசிரியர்கள் ஒரு தடையாக உள்ளனர்.
நூறு நாள் வேலைத்திட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களைத் தேடுவதற்கு வேலைத்திட்டங்கள் எதுவும் இருந்தனவா என்பது தொடர்பாக விளக்கமில்லை. எமது பிரதேசத்தில் ஆசிரியர்கள் இல்லை. வேறு பிரதேசங்களிலிருந்தே வருவிக்க வேண்டி உள்ளது. எனவே தேசிய அரசில் இதற்குப் போதிய அழுத்தம் உள்ளதாகத் தெரியவில்லை.

கல்விச் சேவைகள் அமைச்சின் சில பணிகள் மலையகத்திற்கு விஸ்தரிக்கப்பட வழி உள்ளது. அவ்வகையான துறைகளே புதிய இராஜாங்க அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளன.

மூவாயிரம் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க வேண்டுமென்று புதிய கல்வி இராஜாங்க அமைச்சு அழுத்தங்களைக் கொடுத்து வந்தது. ஆனாலும், கடந்த வாரத்தில் சுமார் 1,688 பேருக்கு மட்டும் நியமனங்கள் வழங்கப்பட்டன. எனினும், எஞ்சியுள்ளவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை. எனவே எஞ்சியுள்ளவர்களுக்கு வெகுவிரைவில் நியமனம் வழங்கப்படவேண்டும்.

கண்டி சமூக அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் பி. முத்துலிங்கம் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.வாமதேவன் போன்ற பலரினதும் சிவில் அமைப்புக்களினதும் பங்களிப்பில் மீண்டும் தூசித்தட்டி எடுக்கப்பட்டு ஐ.நாசபை பிரிவோடு முன்கொண்டு செல்லப்படும் பத்து ஆண்டுத்திட்டம் கல்விக்கும் இடமளிக்கின்றது. அது ஒரு நம்பிக்கைத் தரும் செயற்பாடாகும். அடுத்த தேர்தலின் பின்னர் மலையகக் கல்வி அபிவிருத்திக்கான ஒரு முழுமையான செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுமா?
ஆளணி வளம், பௌதீக வளம், உபகரணம் போன்ற அனைத்திற்குமான ஒரு செயற்றிட்டத்தினூடாகவே கல்வியை அபிவிருத்தி செய்யலாம். 100 நாள் திட்டம் மலையகக் கல்வித்துறையில் பாரியளவில் எதையும் செய்யவில்லை என்பதே வெகுஜனங்களின் ஆதங்கமாகும். எனினும், இதனை சாத்தியப்படுத்தும் சக்தி புதிய இராஜாங்க மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராக இருந்த வி.இராதாகிருஷ்ணன் திறமைமிக்கவரே. காலம் அவருக்கு கை கொடுக்கவேண்டும்.

சீடா செயற்றிட்டம் GTZ ஜேர்மன் தொழில்நுட்ப வேலைத்திட்டம், ஜெய்க்கா எனும் ஜப்பானின் திட்டம் போன்ற பல கல்வி அபிவிருத்தி திட்டங்கள் மலையகத்திற்குள் வராமலிருந்திருந்தால் எமது கல்வி மேலும் மோசமாவதாகவே இருந்திருக்கும். சீடா செயற்றிட்டம் ஊவா மத்தி சப்பிரகமுவ மேல் மாகாணங்களில் சில வேலைகளை செய்துள்ளன எனில் தவறில்லை. விமர்சனங்கள் சில இருந்தாலும் செயற்றிட்ட நோக்கில் தவறேதும் இருக்கவில்லை.

இது போன்ற திட்டங்களின் தேவையினை அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் உணர்ந்திருந்தமையாலேயே ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி போன்ற அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்றுள்ளன. அது மாத்திரமல்லாது, அவர் அன்று அதிகாரத்திலிருந்த ஜே.ஆர்.ஜயவர்தனவிடமிருந்த விசேடமாக மேலதிக நிதியைப் பெற்று மலையக கல்வி அபிவிருத்திக்கு அடித்தளமிட்டார் எனலாம்.

எதிர்காலத்தில் பத்தாண்டுத்திட்டங்கள் பல வேலைகளுக்கு அடிப்படையாகலாம். மலையக கல்வி அபிவிருத்திக்கான விசேட செயற்றிட்டங்களை செய்திட அரசியலாளர்கள் அரசாங்கத்திடம் அழுத்தங்களை எதிர்காலத்தில் கொடுத்தல் வேண்டும்.

நன்றி - வீரகேசரி

ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தியது தொடர்பில் இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் சத்தியாக்கிரக போராட்டத்துக்கு தயார்

ஹட்டன் கல்வி வலயத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது. சிலருக்கு தமது நியாயமற்ற இடமாற்றத்தை அங்கீகரிக்க மறுத்ததால் சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரியிடமிருந்து கடிதம் வந்துள்ளது. பலருக்கு எவ்வித அறிவித்தலும் இன்றியே சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வம்சம் ஆசிரியர்களின் அடிப்படை உரிமை மீறுவதாகவும் அவர்களை சித்திரவதைக் குள்ளாக்குவதாகவும் அமைந்துள்ளது. இது தொடர்பில் சில ஆசிரியர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனை ஆட்சேபித்து இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தினர்; மத்திய மாகாண செயலாளருக்கு தந்தி மூலம் தமது முறைப்பாட்டை அனுப்பியுள்ளனர்.
மேலும் இந்நிலை தொடருமாயின் இதுகுறித்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இதற்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான இறுதி முடிவெடுப்பதற்காக அவசர  செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை ஹட்டனில் நடைபெறவுள்ளது.

பாடசாலை மாணவி வித்யா சிவலோகநாதன் மீது நடாத்தப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலையை கண்டித்து கையெழுத்து



பாடசாலை மாணவி வித்யா சிவலோகநாதனுக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலையை கண்டிக்கிறோம்!

மே மாதம்13 ம்திகதி பாடசாலைக்குச் சென்ற புங்குடுதீவு மகாவித்தியாலத்தின்உயர்தரவகுப்பு மாணவி வித்யா சிவலோகநாதன் கடத்தப்பட்டுபின் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுமறு நாள் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார்.

ஆணாதிக்கக் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும்எமது சமூகத்தில்பெண்கள் குடும்பத்துக்குள்ளும், வெளியுலகிலும், வேலைத்தளங்களிலும், பாடசாலைகளிலும், மத நிறுவனங்களிலும், அரசின் கையிலும்நாளாந்தம் அனுபவித்து வரும் வன்முறைகளின் நீட்சியே வித்யாவிற்கு நிகழ்ந்த இக்கோரச்சம்பவம் ஆகும். பெண்கள் சுதந்திரமாகப் பயமின்றி ஆண்களுக்குச் சமமாக எங்கும்உலவி வரவும்,அவர்கள் சுயவெளிப்பாட்டுடன் பொதுவெளியில் இயங்கவும், அவர்களுக்குத் தகுந்த உத்தரவாதமற்ற நிலை தொடருவதன் சாட்சியங்களே இச்சம்பவங்கள்.

மாங்குளத்தைச் சேர்ந்த மாணவி சரண்யா கூட்டு வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு இரண்டு மாத இடைவெளிக்குள் வித்யாவிற்கு இந்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இலங்கையில் மட்டும் 2012 க்கும் 2014க்கும் இடையிலானகாலத்தில் 4393 வன்கொடுமைச் சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவை முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 20 வீதமாக அதிரித்துள்ளன.

இலங்கையில் கடந்த காலங்களிலிருந்து இன்றுவரை பொலிஸாரினாலும், இராணுவத்தினராலும், பெண்கள் பாலியல்பலாத்காரங்களிற்கும் வன்கொடுமைகளிற்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். எனினும் இத்தகையபாலியல் வன்கொடுமைகள்எமது சமூகத்தின்சக உறுப்பினர்களினாலும், உறவுகளினாலும் நடத்தப்படுவதும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவை பதிவுக்குள்ளாக்கப்படுவதோ, கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதோ மிகவும் அரிதாகவே உள்ளது என்பதுஎமது கடந்தகால அனுபவமாகும்.
பெண்களிற்கு நீதி வழங்க வேண்டிய அரசும்,அரச நிறுவனங்களும் குற்றவாளிகளைக் காப்பாற்றும் காரியத்தையே தொடர்ந்தும் செய்துவருகின்றன. இலங்கையில் இத்தகைய வன்கொடுமையாளர்களைச் சட்டத்தால் தகுந்த முறையில் தண்டிக்கப்படக்கூடிய வலுவான சட்டங்கள் அமுலில் இல்லாததும் இவ்வகையான வக்கிரங்கள் தொடர்வதற்கு முக்கிய காரணமாகும்.
இக் கொடூரச்செயலுக்கு நாம்எமது வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு கீழ்க்கண்ட கோரிக்கைகளையும் முன்வைக்கிறோம்.
வித்யாவின் சம்பவத்துடன் தொடர்பான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனையளிக்கப்பட வேண்டும்.
இலங்கையில் பெண்களிற்கெதிரான சகல வன்முறைகளையும் தண்டிக்கும் முகமாகவலுவான சட்டங்கள் இயற்றப்பபடவேண்டும்.
நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் மீள்பரிசீல ணை செய்யப்பட்டு, அவை பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து நீதி வழங்கும் முகமாக அமுல்படுத்தப்படவேண்டும்.
இதுபோல் இன்னும் விசாரிக்கப்படாமலுள்ள பாலியல் பலாத்காரம் சம்பந்தமான வழக்குகள் விசாரனைக்குட்படுத்தப்பட்டு தகுந்த நீதிவழங்கப்படவேண்டும்.
பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பெண்களிற்கெதிரான வன்முறைகளை எதிர்கொள்ளல் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கும் சகல மட்டங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வேலைத்திட்டங்களைஅமுல்படுத்தல் வேண்டும்.
பெண்களிற்கெதிரான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் முறையிடப்படும் அலுவலகங்களிலும், வழக்குகளை விசாரிக்கும் நிர்வாகத்திலும் கணிசமான பெண்களின் பிரதிநிதித்துவம் இருத்தல் வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை நடைமுறைபடுத்த இலங்கையில் இயங்கும் சகல அரசியல்சமூக ஜனநாயக மனிதவுரிமை அமைப்புகள் அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
பெண்கள் சந்திப்புத்தோழிகள் மற்றும்பெண்ணிய சமூகசெயற்பாட்டாளர்கள்.
1. கேசாயினி எட்மண்ட் (இலங்கை)
2. நளினிரட்ணராஜ்(இலங்கை)
3. ஸர்மிளாஸெயித்(இலங்கை)
4. தமயந்திகே.எஸ்(தமிழ்கவி)(இலங்கை)
5. சுவர்ணசிறிஆர்.எம்(இலங்கை)
6. மாலினிமாலா(ஜேர்மனி)
7. பிரியந்தினிஆனந்தசிவம்((இலங்கை)
8. வாணிகுமாரவேல்(பிரான்ஸ்)
9. நிலாலோகநாதன்(இலங்கை)
10. ரஹிமா பைசால்(இலங்கை)
11. அப்துல்ஹக் லறினா(இலங்கை)
12. பிரசன்னாஇராமசுவாமி(இந்தியா)
13. வினோதினிசச்சியானந்தன்
14. ஜெயராணிநோர்பேர்ட்(இங்கிலாந்து)
15. விஜி(பிரான்ஸ்)
16. புஸ்பராணி(பிரான்ஸ்)
17. தர்மினி(பிரான்ஸ்)
18. வசந்தி(பிரான்ஸ்)
19. ஷீலா(பிரான்ஸ்)
20. வனஜா(பிரான்ஸ்)
21. நிர்மலாஇராஜசிங்கம்(இங்கிலாந்து)
22. நவஜோதியோகரட்ணம்(இங்கிலாந்து)
23. மீனாள்நித்தியானந்தன்(இங்கிலாந்து)
24. சந்திராரவீந்திரன்(இங்கிலாந்து)25. ரஞ்சனா ராஜ்( இங்கிலாந்து)
26.  வானிலா மகேஸ்வரன் (பிரான்ஸ்)
27. ராஜேஸ்வரிபாலசுப்பிரமணியம்(இங்கிலாந்து)
28. ரஜிதா(இங்கிலாந்து)
29. தினேஷா(இங்கிலாந்து)
30. நிவேதா உதயன்(இங்கிலாந்து)
31. சசிநவரட்ணம்(இங்கிலாந்து)
32. பானுபாரதி(நோர்வே)
33. ஜெயசிறி ரவீந்திரன்(நோர்வே)
34. தனுஜாதுரைராஜா(சுவிற்சிலாந்து)
35. மேனகாஉமாகாந்தன்(சுவிற்சிலாந்து)
36. பத்மபிரபா((சுவிற்சிலாந்து)
37. பாமதிசோமசேகரம்(அவுஸ்ரேலியா)
38. சுமதி(கனடா)
39. நிருபா(கனடா)
40. பிரதீபாகனகாதில்லைநாதன்(கனடா)
41. காவோரி வேலழகன்(கனடா)
42. கோசல்யாசொர்ணலிங்கம்(ஜேர்மனி)
43. மல்லிகா(ஜேர்மனி)
44. மங்கையற்கரசி((ஜேர்மனி)
45. மேரி(ஜேர்மனி)
46. தேவா(ஜேர்மனி)
47. கமலா(ஜேர்மனி)
48. தர்சனா(ஜேர்மனி)49. உமா(ஜேர்மனி)
50. தமிழ்மகளிர்மன்றம்-ஸ்ருட்காட்((ஜேர்மனி)
51.ராணி நகுலேந்திரம்(இங்கிலாந்து)
52.ஓவியா நகுலேந்திரம்(இங்கிலாந்து)
53.அநாமிகா நகுலேந்திரம்(இங்கிலாந்து)
54.சிவயோகம்தியாகராசா(இங்கிலாந்து)
55.நாகேஸ்வ தவரட்ணம்(இங்கிலாந்து)
56.ஈஸ்வரி சோமசுந்தரம்(ஜேர்மனி)
57. திருமகள் வலன்ற்றைன் (ஜேர்மனி)
58. சிந்துஜா கரோல்( பிரான்ஸ் )
59. ரூபி(பிரான்ஸ்)
60.அர்ச்சுனி ஜெபா(பிரான்ஸ்)
61.அஜந்தா  சுந்தரலிங்கம்( பிரான்ஸ்)
62.மதுமிதா (பிரான்ஸ்)
63.லுணுகல சிறி(இலங்கை)
64.ஞானசக்தி சிறிதரன்(இந்தியா)
65.மாதவி சிவலீலன்(இங்கிலாந்து)
66.வரலக்சுமி ராகவன்(ஜேர்மனி)
67. கமலா வாசுகி(இலங்கை)
68.விஜிதாலோகநாதன்(ஜேர்மனி)
69.சுருதிகண்ணன்(ஜேர்மனி)
70.மகாலக்சுமிகுருசாந்தன்(இலங்கை)
71.ஸி.எஜ்.ஜெயந்தா(இலங்கை)
72.டி.லிசாந்தி(இலங்கை)
73.ஸி.எஜ்.கமிலா(இலங்கை)
74.எஸ்.ஜி.நிஷாந்தி(இலங்கை)
75.பி.அருள்சிலி(இலங்கை)
76.எல்.சுபாஷினி(இலங்கை)
77.எஜ்.லிண்டா(இலங்கை)
78. எ.டபிள்யு.எப் அக்கரைப்பற்று(இலங்கை)
79.வாணி(இலங்கை)
80.ராஜலெட்சமி(சுமி)(இலங்கை)
81.கனகா(இலங்கை)
82.குணா(இலங்கை)
83.மாலதி(இலங்கை)
84.சுமிதி(இலங்கை)
85.ராஜலட்சுமி சுப்பிரமணியம்- MWDRF(இலங்கை)
86.சுரஸ்தாஸ் சிவகலா- MWDRF(இலங்கை)
87.ராஜ்மோகன் ப்ரியா-MWDRF(இலங்கை)
88.வலுப்பிள்ளை மிதுனா-MWDRF(இலங்கை)
89.ஹம்தூன் ஜூமானா- MWDRF(இலங்கை)
90.சுமதி அமலதாஷ் -MWDRF(இலங்கை)
91.ருசீகா ரஜப்டீன் -MWDRF(இலங்கை)
92.அனீஸ் நஸிரா-MWDRF(இலங்கை)
93. யன்சிலா மஜித்-MWDRF(இலங்கை)கவிதா
94.சண்முகநாதன்(இங்கிலாந்து)
95.அதீதாசிவானந்தன்(கனடா)
96.வளர்மதி (சுவிற்சிலாந்து)
97 ஜெயந்தி பிரான்ஸ்) 98 ரதி (பிரான்ஸ்)
99.அம்பை(இந்தியா)
100.மணிதர்சா (இங்கிலாந்து)
101. பெண்ணியம்.கொம்
 102.ஊடறு
 103. றஞ்சி (சுவிற்சிலாந்து)
 104.ஆழியாள்(அவுஸ்ரேலியா)
 105.சாமீலா முஸ்டீன்(இலங்கை)
 106. புனிதா( இத்தாலி)
 107. சாந்தி(ஜேர்மனி)
 108.சர்மிதா (நோர்வே)
 109. தேனுகா (பிரான்ஸ்)
 110. யோகிசந்துரு(மலேசியா)
 111. கவின் மலர்(இந்தியா)
 112. சந்திரலேகா கிங்ஸலி(மலையகம், இலங்கை)
 113. டீ. சோபனாதேவி (மலையகம், இலங்கை)
 114. சகுந்தலா (மலையகம், இலங்கை)
 115. உமாதேவி( மலையகம் ,இலங்கை)
 116. சுதாஜனி ( மலையகம், இலங்கை)
 117.யோகிதா யோன் (மலையகம், இலங்கை)
 118. ப்ரியா( மலையகம், இலங்கை)
 119. ஸ்ரெலா (மலையகம், இலங்கை)
 120. லக்சுமி (மலையகம், இலங்கை)
 121. பிரபா (மலையகம், இலங்கை)
 122. ரோஸ்மேரி (மலையகம், இலங்கை)
 123. தவமணி எலிசபெத்( மலையகம், இலங்கை)
 124. கமலாதேவி( மலையகம், இலங்கை)
 125. கிரு ஸ்ணகுமாரி( மலையகம், இலங்கை)
 126. வசந்தி (மலையகம், இலங்கை)
 127. பாரதி( மலையகம், இலங்கை )
 128.ஜசிமா அகமட் (மலையகம், இலங்கை)
 129. யசோ (மலையகம், இலங்கை)
 130. வினோ (மலையகம், இலங்கை)
 131. கௌரி (மலையகம்,இலங்கை)
 132. மகேஸ்வரி (மலையகம், இலங்கை)
 133. கிருஸ்ணவேனி( மலையகம், இலங்கை)
 134. சசிரேகா (மலையகம், இலங்கை)
 135. புதியமாதவி( மும்பை, இந்தியா)
 136. யாழினி( யாழ்ப்பாணம்,இலங்கை)
 137. ஹேமலதா கதிர்காமநாதன்(இலங்கை)
 138.மரியதாஸ் அஜந்தமேரி(இலங்கை)
 139.நொய்லின் பிரான்சிஸ்(இலங்கை)
 140.திஷாந்தினி திருட்செல்லவம்(இலங்கை)
 141.செல்வநாதன் தர்ஷான்(இலங்கை)
 142.ஷாமினி விபுலன்(இலங்கை)
 143.தர்ஷனி சோமகிளி(இலங்கை)
 144.எம்.ரிவாத்(இலங்கை)
 145.அப்தூர் ரஹ்மான்(இலங்கை)
 146.அனுஷா அன்ரன்(இலங்கை)
 147.மரியாகொறத்தி அன்ரன்(இலங்கை)
 148.ஈஸ்வரி சிறிதன்(இலங்கை)
 150.வசந்தகௌரி  புஸ்பலிங்கம்(இலங்கை)
 151.ஆதனா புஸ்பலிங்கம்(இலங்கை)
 152.சியானா நியாஸ்(இலங்கை)
 153.கருணாநிதி(இலங்கை)
 154.வினோ வசந்தராணி(இலங்கை)
 155.மகேந்திரன் வசந்தராணி(இலங்கை)
 156.டி. ஜஸ்டின்(இலங்கை)
 157.ஜே.ஜெயபிரபா(இலங்கை)
 158.ஜே.தங்கரெத்தினம்(இலங்கை)
 159.ஸெ.ஜெகதீஸ்வரா(இலங்கை)
 160.ஜெ.நகுலன்(இலங்கை)
 161.எம்.நியாஸ்(இலங்கை)
 162.ஐ.பாதுஷா(இலங்கை)
 163.ராசபதம் கருணாநிதி(இலங்கை)
 164.தங்கவள்ளி குணரூபன்(இலங்கை)
 165.ராஜனி சந்திரவசகரம்(இலங்கை)
 166.அனுஜா பிரதீபன்(இலங்கை)
 167.ஷகீலா சயீஸ்வரன்(இலங்கை)
 168.கௌந்தினி சரவீந்திரன்(இலங்கை)
 169யோகேஸ்வரி சுரேஷ்(இலங்கை)
 170.யோகா ராமமூர்த்தி (இலங்கை)
 171. லதா ராம்(இங்கிலாந்து)
 172. விஜயலட்சுமி சேகர் (மட்டக்களப்பு, இலங்கை)
 173. நிருதாயினி சிவலிங்கம்(இலங்கை)
 174. ஜெஸீமா ஹமீட்(இலங்கை)
 175. நவரத்தினராணி சிவலிங்கம்(இங்கிலாந்து)
 176. சமீலா யூசப் அலி இலங்கை
 177.சுமித்ரா முரளிகரன்(பிரான்ஸ்)
 178.ச.விஜயலட்சுமி (இந்தியா)
 179.எஸ்தர் விஜித்நந்தகுமார்  (திருகோணமலை-இலங்கை
 180.எம்.எஸ்.தேவகௌரி(இலங்கை)
 181. தமிழ்நதி(கனடா)
 182. ஜன்தி ஜீவா(சுவிற்சிலாந்து)
 183. மங்களேஸ்வரி சங்கர் (இலங்கை)
 184.ஔவை (கனடா)
 185.அனார் இசாத் ரெஹேனா(இலங்கை)
 186.ராஸாத்தி சல்மா(இந்தியா)
 187.சல்மா ஹம்சா(இலங்கை)
 188.சுகன்யா மகாதேவா (மட்டக்களப்பு- இலங்கை)
 189. பரிமளா( பிரான்ஸ்)
 190. ஜமுனா( மலையகம்- இலங்கை)
 191.ஆரதி (சுவிஸ்)
 192. நிறமி (சுவிஸ்)
 193. கலைமகள் ஹிதாயா ரிஸ்வி,(இலங்கை)
 194. சாந்தினி வரதராஜன் (ஜேர்மனி)
 195. ஈழவாணி(இந்தியா)
 196.பாவனி தர்மகுலசிங்கம் (கனடா)
 197.ஜெயா பத்மநாதகன்(பிரான்ஸ்)
 198.தேவிகா கங்காதரன்(ஜேர்மனி)
 199.ரஜனி( மதுரை-இந்தியா)
 200.பவநீதா லோகநாதன் (இலங்கை)
 201.சுகிர்தராணி இந்தியா
 202.லக்ஷ்மி(பிரான்ஸ்)
 203.பிருந்தா (பிரான்ஸ்)
 204. பரமேஸ்வரி (பிரான்ஸ்)
 205. ரதி தேவதாசன் (பிரான்ஸ்)
206.சுலைகா பேகம்( இலங்கை)
 207.சௌந்தரி அவுஸ்திரேலியா
 208.லிவிங் ஸ்மைல் வித்யா- அரங்க கலைஞர்(இந்தியா)
 209. சந்திரவதனா செல்வகுமாரன்(ஜேர்மனி)
 210.சிவஜோதி நவரட்ணம்( பிரான்ஸ்)
 211.பன்மை அரங்க குழு(இந்தியா)
 212.சந்திரவதனா செல்வகுமாரன்(ஜேர்மனி)
 213.சிவஜோதி நவரட்ணம்( பிரான்ஸ்)
 214.நளாயினி தாமரைச்செல்வன்( சுவிஸ்சிலாந்து)
 215. பரமேசுவரி திருநாவுக்கரசு(இந்தியா)
 216. சந்திராசுந்தா
 217.கவிதா(நோர்வே)
218. ஈழவாணி(இந்தியா)
219. நித்யா செல்வி
220. மீரா தகொண்டப்பா(ஜேர்மனி)
221. ஜி.கலாமதி(ஜேர்மனி)

தோட்டத்துரை அனுமதியின்றி தோட்டப் பெண்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடியாது - பெ. முத்துலிங்கம்


நாட்டின் தொழிலாளர், விவசாய மற்றும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தம் குடும்ப வறுமை காரணமாக வீட்டுப் பணியாளர்களாக மத்தியகிழக்கு நாடுகளுக்கு 1978 முதல் செல்ல ஆரம்பித்தனர். இவ்வாறு செல்பவர்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றதுடன், சிலர் உயிரற்ற சடலங்களாக அவர்களது குடும்பங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். சிலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு சில சமயங்களில் குழந்தையுடன் வருகின்றனர்.

இக்கொடிய செய்திகளைக் கேட்டபின்னரும் மத்திய கிழக்கிற்கு வேலை தேடிச்செல்லும் பெண்களின் அளவு குறையவில்லை. இது தவிர, வெளிநாடு சென்ற பெண்களது பிள்ளைகள் பெரும் துஷ்பிரயோகங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, பெண் பிள்ளைகள் தமது குடும்ப அங்கத்தினர்களினாலும் வெளியாரினாலும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகின்றனர். அவர்களது கல்வி பாதிப்பிற்குள்ளாகின்றது. சிலரது பிள்ளைகள் பராமரிக்கப்படாது கைவிடப்படுகின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகள் பாரிய ரீதியில் அதிகரித்தமையினால் சிறுவர் உரிமைகள் தொடர்பாக செயற்படும் அமைப்புகள் இவ்விடயம் தொடர்பில் பரப்புரைகளையும் ஏற்புைரகளையும் செய்தன. இதன் விளைவாக அரசாங்கம் பல வருடங்களின் பின்னர் வெளிநாடு செல்லும் தாய்மார்கள் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மூலம் சில விதிமுறைகளை இவ்வருடம் அறிமுகப்படுத்தியது. இவ்விதிமுறைகளுக்கு இசைவாக இல்லாத தாய்மார்கள் வெளிநாடு செல்வதை தடைசெய்துள்ளது இதில் எந்தப் பெண் வெளிநாடு செல்லத் தகுதியானவர் எனும் விதைப்புரைகளைக் கொண்ட சுற்றுநிருபம் ஒன்றினை அனைத்துப் பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

ஒவ்வொரு பிரதேச செயலக அபிவிருத்தி அலுவலர்களினாலும் சிபாரிசு செய்யப்படுகின்ற மற்றும் சிபாரிசு செய்யப்படாத ஒவ்வொரு குடும்ப பின்னணி பற்றிய அறிக்கைகளையும் உள்ளடக்கி பதிவேடொன்றை பிரதேச செயலகம் பேணிவரப் பணித்தது.

இலக்கம்MFE/ RAD/10/13 என்ற சுற்ற நிருபத்தின் படி வேலைக்காக செல்லும் தாய் ஒருவர் பின்வரும் விதி முறைக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.
அவையாவன – ஐந்து வயதிற்கு கீழ் உள்ள பிள்ளைகளை கொண்டுள்ள தாய்மார் வெளிநாடு செல்ல முடியாது. ஐந்து வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளை உடைய தாய்மார், ஏற்றுக் கொள்ளக் கூடிய பராமரிப்பிற்கான பாதுகாவலரை உறுதி செய்வதன் முலம் வெளிநாடு செல்ல முடியும்.

குறிப்பிட்ட பெண் வெளிநாடு சென்று திரும்பி வரும் வரை பிள்ளைகளின் பாதுகாப்பு பொறுப்பினை ஏற்ற ஒருவர் வெளிநாடு செல்ல முடியாது. 21 வயதிற்கும் 55 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லமுடியும். குடும்ப விபரங்களை சமர்ப்பிக்காத ஒருவர் வெளிநாடு செல்ல முடியாது.

குடும்ப விபரம் கிராம உத்தியோகத்தரால் ஊர்ஜிதம் செய்யப்படவேண்டும். குறிப்பிட்ட பெண் திருமணம் முடித்தவரா இல்லையா என்பதை கிராம சேவகர் கடிதம் மூலம் உறுதிசெய்யவேண்டும்.

பெண் ஒருவர் திருமண முடித்தவரா இல்லையா என சந்தேகம் ஏற்படும் இடத்து அது தொடர்பில் சத்தியக் கடதாசி ஒன்றினை குறிப்பிட்ட பெண் சமர்ப்பிக்க வேண்டும் குறிப்பிட்ட பெண் ஒருவரின் பிள்ளைகளது வயது மற்றும் உடல் நலன் தொடர்பில் சந்தேகம் ஏற்படின் பிரதேசத்திற்கு பொறுப்பான குடும்ப சுகாதாரம் தொடர்பான அதிகாரியிடமிருந்து கடிதம் ஒன்று சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், குறிப்பிட்ட பெண் ஒருவர் வெளிநாடு சென்று குறித்த ஒப்பந்த காலம் முடிய முன்னர் இலங்கைவரின் இலங்கைக்கு வந்த நாள் முதல் ஒருவருடம் காலம் பூர்த்தியடைந்த பின்னரே மீண்டும் வெளிநாடு செல்ல முடியும்.

மேற்கூறப்பட்ட விதிமுறைகள் பிள்ளைகளைப் பாதுகாப்பனவாக அமைகின்றன. ஆனால் தோட்டப் பெண்கள் தொடர்பாக மேலதிக விதிமுறையொன்று இச்சுற்று நிருபத்தில் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட விடயங்கள் உள்ளடக்கிய சுற்று நிருபத்தில் தோட்டப் பெண்கள் தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சிவில் அந்தஸ்து பற்றி சான்றுப்படுத்தும்போது குறித்த பெண் திருமணமானவரா என்பது உறுதிப்படுத்தப்படாத சந்தர்ப்பங்களில் அரசாங்க நிருவாக அமைச்சின் செயலாளர்களின் HA/DIS/11/01/06 ஆம் இலக்க 2002//06/ 20ஆம் திகதிய கடிதத்திற்கு அமைய (இணைப்பு 3) சத்தியக்கடதாசி ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு சம்பந்தப்பட்ட கிராம அலுவலர் செயற்படல் வேண்டும். மேலும் மலையகத் தோட்டங்களில் வாழும் பெண்களின் வசிப்பு மற்றும் சிவில் அந்தஸ்து தொடர்பாக தோட்ட அத்தியட்சகரே சான்றுப்படுத்த வேண்டும். அவ்வாறு சான்றுப் படுத்துவதற்கு தோட்ட அத்தியட்சகர் இணங்காத பட்சத்தில், குறித்த பெண் செல்வதை சிபாரிசு செய்யக் கூடாது இதன்படி தோட்டத்தில் வாழும் பெண் ஒருவரின் திருமணம் பற்றியும் அவரது சிவில் அந்தஸ்து பற்றியும் தோட்டத்துரையே உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் தோட்டப்பெண் ஒருவரின் நடமாடும் சுதந்திரம் தோட்டத்துரையின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்விதப்புரை இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை உரிமை உறுப்புரிமைக்கு முரணானது. மேலும் இது மீண்டும் தோட்டத்தில் வாழும் பெண்களின் சிவில் உரிமைகளை தோட்டத்துரையிடம் ஒப்படைப்பதாக அமைகிறது. தோட்டத்தில் பணிபுரியும் மற்றும் பணிபுரியாத பெண் ஒருவரின் திருமணம் தொடர்பாக சந்தேகம் ஏற்படின் தோட்டத்துரையே சான்றிதழ் வழங்கி ஊர்ஜிதப்படுத்த வேண்டும்.

தற்போதைய நிலைமையின்படி பெரும்பாலான திருமணம் முடித்த இளம் பெண்கள் தோட்டத்தில் வேலை செய்வதில்லை, இதன்படி வேலை செய்யாத பெண் ஒருவருக்கும் தோட்டத் துரையிடமே சான்றிதழ் பெறவேண்டும், இதேவேளை, பெரும்பாலும் தோட்டத்தில் பணி புரியாதவர்களுக்கு தோட்டத்துரை சான்றிதழ் வழங்குவதில்லை நாட்டின் பிரஜை ஒருவரின் சிவில் அந்தஸ்து தொடர்பாக சான்றிதழ் வழங்கும் உரிமை கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கே உண்டு. இந்நிலையில் மலையகப் பெண்கள் தொடர்பாக மட்டும் தோட்டத்துரையிடம் சான்றிதழ் கோருவது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

மேலும் இவ்விதிப்புரையின் படி சட்டப்படி திருமணச் சான்றிதழ் கொண்டிராத பெண் ஒருவரின் வெளிநாட்டிற்கான பயணத்தை தீர்மானிக்கும் பொறுப்பு தனியார் கம்பனியின் உத்தியோகத்தரான தோட்டத்துரையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இது குறிப்பிட்ட பெண் ஒருவரின் அல்லது அவரது குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் கட்டுப்படுத்தும் செயலாக அமைகின்றது. மறுபுறம் குறிப்பிட்ட பெண் ஒருவர் தமது வாழ்வாதாரத்திற்கு தோட்ட தொழிலையே தங்கியிருக்கும் நிலையையே ஏற்படுத்தும், இது மீண்டும் தோட்ட மக்களை தோட்டத்துரையின்பால் தங்கியிருக்கும் நிலையை தோற்றுவித்துள்ளதுடன், காலனித்துவகாலம் மீண்டும் தோட்டங்களில் உருவாக்க அதாவது, மீண்டும் மலையகத்தில் கொத்தடிமை முறை உருவாக வாய்ப்பளிக்கின்றது.

எனவே, இவ்வடிப்படை மனித உரிமை மீறலுக்கு எதிராக தோட்ட சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச் சருக்கும் அமைச்சின் செயலாளாருக்கும் கடித முலம் தெரிவிக்க வேண்டும். இவ்விதப்புரையில் குறிப்பிட்டுள்ள தோட்டத்துரை பகுதியை நீக்கிவிடும் படி கோரவேண்டும் மலையக அமைச்சர்கள் இவ்விடயம் தொடர்பாக உரிய அமைச்சரை சந்தித்து இவ்விதிப்புரையில் தோட்டத்து ரையின் பகுதியை நீக்கி நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கு வழங்கியுள்ளவாறு கிராம சேவகரின் சான்றிதழ் மட்டும் பெற ஆவன மேற்கொள்ள வேண்டும்.

நன்றி - வீரகேசரி

தேயிலை, இறப்பர் விலை சரிவுகளுக்கு சர்வதேச சூழ்நிலையே காரணம் - பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்



2015இல் சர்வதேச சந்தையில் தேயிலை, இறப்பர் விலைகள் மேலும் வீழ்ச்சியடையும் சாத்தியம் காணப்படுகின்றது. உள்நாட்டு தேயிலை மற்றும் இறப்பர் விலைகளில் ஏற்பட்டுள்ள சடுதியான சரிவு காரணமாக, பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் பாரியளவு இழப்புகளை எதிர்நோக்கியுள்ளன. இந்த விலைச்சரிவுகளுக்கு சர்வதேச நாடுகளில் காணப்படும் பொருட்கள் மீதான விலைச்சரிவு காரணமாக அமைந்துள்ளதெனவும், தொடர்ந்தும் சரிவான விலைகள் காணப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாகவும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

இந்த ஆண்டின் முற்பகுதியில் உலக வங்கி வெளியிட்டிருந்த பொருட்களின் விலை தொடர்பான அறிக்கையில், 2015 ஆம் ஆண்டில் பிரதான ஒன்பது பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்படுமென அறிவித்திருந்தது. 2016 ஆம் ஆண்டு முதல் சில பொருட்களின் விலைகளில் மீட்சி ஏற்படலாம், இருந்த போதிலும், ஏற்பட்ட விலை வீழ்ச்சிகளுடன் ஒப்பிடுகையில் விலை உயர்வு என்பது குறைவானதாகவே அமைந்திருக்கும். விவசாயத்துறை தொடர்பான பொருட்கள் 2011 மற்றும் 2014 ஆகிய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் வீழ்ச்சிடைந்துள்ளதாகவும், தொடர்ந்தும் இவ்வாண்டில் சரிவடையும் எனவும் அறிவித்திருந்தது.

ஏனைய பொருட்களைப் போலவே, தேயிலை மற்றும் இறப்பர் ஆகியவற்றின் விலைகளும் சர்வதேச சந்தைகளில் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன. உலக வங்கியின் தரவுகளுக்கு அமைவாக, 2014 இல் சர்வதேச சந்தையில் தேயிலை கிலோ ஒன்றின் சராசரி விலை 2.72 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. இது 2013 மற்றும் 2012 ஆகிய வருடங்களுடன் ஒப்பிடுகையில் பெருமளவு வீழ்ச்சியாகும். குறித்த ஆண்டுகளில் விலை முறையே 2.86 அமெரிக்க டொலர்கள் மற்றும் 2.9 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்பட்ட அமைதியற்ற சூழல் போன்றவற்றால் இலங்கை தேயிலையின் விலை அதிகளவு குறைந்திருந்தது.2015 ஏப்ரல் மாதம் முதல் வாரமளவில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தேயிலை கிலோ ஒன்றின் சராசரி விலை 66 ரூபாவினால் குறைந்து பதிவாகியிருந்தது.

சர்வதேச சந்தையில் இறப்பர் விலை வீழ்ச்சி என்பது ஆச்சரியமூட்டும் .வகையில் அமைந்துள்ளது. 2012ஆம் ஆண்டில் 3.38 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட RSS 3 ரக இறப்பரின் விலை, 2014 இல் சுமார் 40 வீத சரிவை பதிவு செய்து 1. 96 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்பட்டிருந்தது. உள்நாட்டு சந்தையிலும் RSS 3 ரக இறப்பரின் விலை கிலோ கிராம் ஒன்று 295 ரூபாவிலிருந்து 2015 மார்ச் மாதமளவில் 217.5 ரூபாவாக வீழ்ச்சியடைந்திருந்தது.

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளத் தின் தலைவர் ரொஷான் ராஜதுரை கருத்து தெரிவிக்கையில், ''பொருட்களின் விலைகள் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளமை பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. நேரடியாக மட்டுமல்லாமல், மறைமுகமாகவும் இந்தப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் போன்ற இலங்கை யின் பாரிய தேயிலை கொள்வனவாளர்கள் தமது கொள்வனவு அளவுகளை குறைத்துள்ளனர்'' என்றார்.

''இந்த சூழ்நிலை மிகவும் சவாலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ரஷ்யா, மத்திய கிழக்கு மற்றும் உக்ரேன் போன்ற நாடுகள் இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் தேயிலையில் 70 சதவீதத்தை கொள்வனவு செய்கிறன. அந்நாடுகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள், நாணய மதிப்பிறக்கங்கள் மற்றும் இராணுவ மோதல்கள் காரணமாக அவை பெரும் சிக்கல் நிலைகளை எதிர்நோக்கியுள்ளன, எனவே, கொள்வனவாளர்கள் தரம் குறைந்த தேயிலை குறித்து தமது கவனத்தை செலுத்தியுள்ளனர். இதன் காரணமாக, வாராந்த தேயிலை ஏல விற்பனையிபோது பெருமளவு தேயிலை விற்பனை செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. பெருந்தோட்ட கம்பனிகள் தமது பண வருகைகளை அதிகரிப்பதற்கு கடுமையாகப் போரா வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சம்பளக் கொடுப்பனவுகள் மற்றும் இதர அர்ப்பணிப்புகளை நிறைவேற்ற வேண்டிய தேவை காணப்படுகின்றது'' என ராஜதுரை மேலும் குறிப்பிட்டார்.

தேயிலை மற்றும் இறப்பர் ஆகியவற்றின் மீது பாரியளவு இழப்புகள் காரணமாக, உற்பத்தி செலவு என்பது ஏல விற்பனையில் கிடைக்கும் விலைகளைவிட அதிகளவில் காணப்படுகின்றன. 2014 இல 19 பெருந்தோட்டக் கம்பனிகளும் மொத்தமாக 2,850 மில்லியன் ரூபாவை திரட்டிய இழப்பாக பதிவு செய்திருந்தன. கடந்த ஆண்டின் பிற்பகுதியில், தென் இந்தியாவைச் சேர்ந்த தேயிலை செய்கையாளர்கள் விலைச் சரிவு காரணமாக பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்ததாக அறிந்துகொள்ள முடிந்தது. இலங்கையுடன் ஒப்பிடுகையில் இவர்களுக்கு குறைந்தளவு சம்பளம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நலன் புரிப்தொடர்பான கம்பனிகளின் பொறுப்பும் குறைவாகவே அமைந்துள்ளன. இந்த இறப்பர் தோட்டங்கள் 80 ஆண்டுகளில் முதல் தடவையாக இழப்புகளை பதிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச சந்தைகளில் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளமை உறுதியாகப் புலப்படுவதுடன் குறிப்பாக தேயிலை மற்றும் இறப்பர் மீதான தாக்கமும் உறுதியாகியுள்ளது. இவை இலங்கையின் பெருந்தோட்டத்துறையையும் பெருமளவு பாதித்துள்ளன.

4,00,000 தேயிலை சிறு தோட்ட உரிமையாளர்கள் மற்றும் 2,00,000 இறப்பர் சிறுதோட்ட உரிமையாளர்களும் இலங்கையில் உள்ளனர். பொருட்களின் விலைகளில் சரிவு ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரசாங்கம் தேயிலை பச்சை இலை கிலோ ஒன்றுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட விலையாக கிலோ ஒன்றுக்கு 80 ரூபாவையும், இறப்பருக்கு (RSS 1) 350 ரூபாவையும் நிர்ணயித்திருந்தது.

''சிறுதோட்ட உரிமையாளர்கள் மீது அரசாங்கம் கரிசனை செலுத்தியுள்ளமையை வரவேற்றுள்ள பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம், பிராந்திய பெருந் தோட்டக் கம்பனிகளும் விநியோக தொடரில் முக்கிய இட த்தை வகிப்பதை குறிப்பிட்டுள்ளதுடன், இந்த துறையையும் முன்னேற்றுவதற்கு பங்க ளிப்பை வழங்க முன்வர வேண்டும். பெருந்தோட்டத் துறையில் ஏதேனும் இடையூறுகள் அல்லது மாற்றங்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் அது சுமார் ஒரு மில்லியன் மக்களின் வாழ் வாதாரத்தை கேள்விக் குறியாக்கிவிடும் விடயமாக அமைந்துவிடும் என்பதுடன், பெருந்தோட்டங்களின் வசிக்கும் மக்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விடும்'' என ரொஷான் ராஜதுரை எச்சரித் துள்ளார்.

நன்றி - வீரகேசரி

மாடுகளின் அரசியலும் – அரசியலில் மாடுகளும் - என்.சரவணன்

 

இம்மாதம் மே 26 அன்று இந்திரதன தேரரின் இரண்டாவது ஆண்டு நினைவு நாள். சிங்கள ராவய, ராவணா பலய உள்ளிட்ட பல அமைப்புகள் அவரின் நினைவு நாளில் கண்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருக்கிறது.
சம கால இலங்கை அரசியலில் குறிப்பாக யுத்தத்தின் பின் மாட்டை கொல்வது, மிருகபலி என்பவற்றை எதிர்ப்பது அரசியல் தளத்தில் பேசுபொருளாக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் பின்னான சிங்கள பௌத்த மீளுயிர்ப்புக்கு தேவையான காரணியாக இது ஆக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். மேலும் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இதனை முன்னெடுப்பதில் உள்ள பேரினவாத நலனை வரலாற்று ரீதியில் ஆராய வேண்டியிருக்கிறது. யார் இந்த இந்திரதன தேரர்.

இந்திரதன தேரர் 
2013 ஆம் ஆண்டு மே 24 அதாவது புத்தர் பிறந்த நாளான வெசாக் பௌர்ணமி தினத்தன்று சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மடில்லே பங்ஞாலோக தேரரிடம் தொலைபேசியில் அழைத்து இன்று தலதா மாளிகையின் முன்னால் முக்கிய நிகழ்வு ஒன்று நடக்க இருக்கிறது. பின்னேரம் ஊடகங்களில் காணலாம் என்று கூறியிருக்கிறார்.

மாடுகள் கொல்லப்படுவதை எதிர்த்து கண்டி தலதா மாளிகையின் வாசலின் முன்னால் உரையாற்றியிருக்கிறார். ஒரு பெரிய கேனில் கொண்டு வந்திருந்த பெற்றோலை தலையில் முழுவதுமாக ஊற்றி தனது கையில் இருந்த லைட்டரை பற்ற வைத்த போது திடீரென்று எழுந்த நெருப்பை பாதையில் சென்றவர்கள் கண்டு திடுக்கிட்டனர். லைட்டரை பறிக்க முற்பட்ட ஒருவரும் தீ தொற்றிகொண்டதும் விலகி ஓடினார். தீயால் எரிந்துகொண்டிருந்த நிலையில் மாடுகளைக் கொல்லவேண்டாம் என்று கத்தியபடி அந்த இடத்தில் நடக்கத் தொடங்கினார் இந்திரதன தேரர். சிலர் உடனேயே தண்ணீரைக் கொண்டு வந்து அணைக்க முற்பட்டனர். அருகிலிருந்த படையினர் வந்து அந்த தீயை சிரமத்தின் மத்தியில் அணைத்த போதும் அவரது உடல் முழுவதும் தீக்காயங்களால் அதிகமாக சிதைவுற்றிருந்தது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போதும் அவர் அங்கு இரு நாட்களில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் இறந்து போனார்.


அவர் தன்னைத் தானே தீயிட்டுகொள்வதை சுவர்ணவாகினி தொலைகாட்சியினர் படம்பிடித்துக் கொண்டிருந்தனர். இறப்பதற்கு முன் அவர் எழுதி வைத்துவிட்டு சென்ற கடிதத்தில் ஐந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தது.
1. மாடுகள் கொல்லப்படுவது தடை செய்யப்படவேண்டும்
2. பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்படவேண்டும்
3. கட்டாய மத மாற்றம் நிறுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்
4. பல்லின, பல்மத, சர்வமத கருத்தாக்க சதி ஒழிக்கப்படவேண்டும்
5. பௌத்த நாட்டுக்கு உகந்த அரசியலமைப்பு உருவாக வேண்டும்.
இவை மேற்கொள்ளப்படாத பட்சத்தில் ஒரு சக்தியாக உருவெடுத்து இவற்றை நிறைவேற்ற வேண்டும்.

இறந்த இந்திரதன தேரரின் உடலை அவர் பிறந்த ஊருக்கு அனுப்பவிடாமல் தம்ம்மிடம் கையளிக்குமாறு சிங்கள ராவய இயக்கத்தை சேர்ந்த பிக்குமார் போலீசாரோடு சண்டை செய்தனர். அந்த உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று அரசியல் செய்ய முற்பட்ட அவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை.


இதற்கு முன்னர் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கும் முகமாக வியட்நாமில் 11.06.1963இல் ஒரு பிக்கு நாடு ரோட்டில் தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை அறிந்திருப்போம். அதன் பின்னர் இந்திரதன தேரரின் தற்கொலை உலக அளவில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சார்பில் பெல்மடுல்ல பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர் அவர். ஆனால் அவர் கட்சியின் அறிவித்தலையும் மீறி தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக தற்கொலைக்கு இரு வாரங்களுக்கு முன்னர் ஜாதிக ஹெல உறுமய அவரை கட்சியிலிருந்து நீக்கியிருந்தது. மாடுகள் கொல்வதற்கு எதிராக அவர் சிங்கள ராவய இயக்கத்துடன் சேர்ந்து இயங்கி வந்ததுடன் இடையில் சிங்கள ராவய இயக்கத்தில் இணைந்து இரத்தினபுரி மாவட்டத்துக்கான அமைப்பாளராக இயங்கி வந்தார். அது ஜாதிக ஹெல உறுமயவுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருந்தது. சம்பிக்க ரணவக்க வெளியிட்ட ஊடக அறிக்கையில் அவர் கட்சியின் ஒழுங்கை மீறியதற்காக நீக்கப்பட்டார் என்று வெளியிட்டிருந்தார்.

2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முன்னேஸ்வரம் காளி கோவில் திருவிழா நிகழ்ந்த வேளை, அங்கு உயிர்கள் பலியிடப்பட்டால் தான் தற்கொலை செய்துகொள்வதாக இந்திரதன மிரட்டல் விடுத்திருந்தார்.

2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சிங்கள ராவய அமைப்பின் பிக்குமார் மாடுகளைக் கொல்வதை தடை செய்யுமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அப்போதைய ஜனாதிபதி மகிந்தவின் உறுதிமொழியைத் தொடர்ந்து அந்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

இந்திரதன தேரரின் தற்கொலையைத் தொடர்ந்து மீண்டும் பெரிய அளவில் இவ்விடயம் குறித்து பலமான விவாதங்கள் சிங்கள சூழலில் நடந்தது. புத்தர் புலால் உண்ணக்கூடாது என்று எங்கும் கூறவில்லை என்பதை எல்லாம் அந்த விவாதங்கள் சுட்டிக்காட்டின.
பௌத்த மதத்தின் தலையாய கொள்கையான பஞ்ச சீலத்தில் கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, பிறர் மனைவியை கவராமை, கள்ளுண்ணாமை என்கிற ஐந்தையும் வலியுறுத்துகிறது. பஞ்சசீலக் கொள்கையை “பன்சில்” என்றும் பௌத்தர்கள் அழைப்பது வழக்கம். பஞ்ச சீலத்தின் முதலாவது சுலோகமே “பானாதிபாதா வேரமணி சிக்கா பதங் சமாதியாமி”. அதாவது ஒருயிரையும் கொல்லாமையை வலியுறுத்துகிறது அது. 
முஸ்லிம்களுக்கு எதிராக 
இன்றைய நிலையில் மாட்டரசியலை சிங்கள பேரினவாதம் வசதியாக பயன்படுத்தி வருவது முஸ்லிம்களுக்கு எதிராகவே. அவர்களின் பரப்புரையின்படி இறைச்சிக்காக மாடுகளை அதிகம் வெட்டுபவர்கள் முஸ்லிம்களே என்கின்றனர். அடுத்ததாக ஹலால் பண்பாட்டை ஏனைய இன-மதத்தவர்களுக்கு திணிக்கின்றனர் என்கின்றனர். இப்படி முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களை அதிகம் ஊதிப் பெருப்பித்து, முஸ்லிம்கள் இறைச்சிக்காக உலகளாவிய ரீதியில் உயிர்களை வதைத்து கொல்வதாக அங்காங்கு கிடைக்கும் காணொளிகளையும், புகைப்படங்களையும் விகாரப்படுத்தி சமூக ஊடகங்கள் வழியாக பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.

இப்போதெல்லாம் ஹஜ் பெருநாள் கிட்டும்போதெல்லாம் நாட்டில் பெருமளவு மாடுகளை கொல்கிறார்கள் என்கிற பிரச்சாரம் சூடு பிடித்துவிடுகிறது. சென்ற வருடம் குர்பான் இறைச்சியை பங்கு போடுவதற்காக கொண்டு செல்லப்பட்ட பல சந்தர்ப்பங்களில் பிக்குமாரும், சிங்கள பௌத்த சண்டியர்களும் அவற்றை தடுத்து நிறுத்தி சண்டித்தனம் செய்து கைப்பற்றி பொலிசாரிடம் பிடித்துகொடுத்தனர். குர்பானுக்காக இறைச்சியை அனுப்பிய தனவந்தர்கள் இதற்கு விரிவான விளக்கமளித்து அவற்றை விடுவிக்க கடுமையாக போராட வேண்டியேற்பட்டது பற்றி பல செய்திகள் வெளியாகின. சில இடங்களில் பலாத்காரமாக மாடுகளை விடுவித்து வீரச்செயலாக காட்டினர். ஏற்கெனவே பல இறைச்சிக்கடைகளை மூடச்செய்யப்பட்டிருக்கின்றன.

இப்படி இலங்கையில் மாட்டிறைச்சிக்கு கடும் திண்டாட்டத்தை ஏற்படுத்தி அதன் விலையை அதிகம் உயர்த்தியதில் இவர்களுக்கு பெரும் பங்குண்டு. மாட்டிறைச்சி புரதச் சத்துள்ள சத்தான உணவாக கொள்ளப்படுகிறது. மந்த போசனத்தால் பாதிக்கப்படும் சிறுவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று இலங்கை. ஆனால் இன்று சாதாரண ஏழைகளுக்கு மாட்டிறைச்சி கிடைக்கவிடாதபடி இந்த பேரினவாத செயல் ஆகியிருக்கிறது. போசாக்கின்மையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் கூட பெரும்பான்மை சிங்கள பௌத்த அடிநிலை மக்களே. இவையெல்லாம் மிக சமீப காலமாக பேரெழுச்சியுற்றுவரும் இனவாதத்தின் வடிவங்கள் தான். 

ஜீவகாருண்யம்
“ஒரு ஈ எறும்புக்கும் தீங்கிழைக்கக் கூடாது” என்று பௌத்தம் போதிக்கிறது. பௌத்தம் மாட்டுக்கு மட்டும் கருணை காட்டவில்லை. சகல உயிர்களதும் நலன்கள் குறித்தும் தான் பேசியது. கடலினங்கள், கால்நடை உயிரினங்களும் அதற்குள் அடக்கம். வேடிக்கை என்னவென்றால் இந்த இரண்டுக்கும் அதாவது மீன்பிடி, கால்நடை என்பவற்றுக்கு தனித்தனியான அமைச்சு கூட “பௌத்த” இலங்கையில் இருக்கிறது என்பது தான். இலங்கையில் கால்நடை அமைச்சரும், மீன்பிடி அமைச்சரும் கூட சிங்கள பௌத்தர்கள் தான்.

கோழி, ஆடு, பன்றி போன்றவற்றிற்கு ஏன் இந்த காருண்யம் காட்டப்படுவதில்லை. அதென்ன மாட்டுக்கு மட்டும் விசேஷம். மாடு வெட்டுவதை பிரச்சினையாக்குபவர்கள் வெட்டப்பட்ட மாட்டிறைச்சி அழகாக பொதி செய்து இறக்குமதி செய்து கடைகளில் விற்பனை செய்யப்படுவதை ஒரு போதும் எதிர்த்ததில்லையே ஏன். எழுத்தாளர் காமினி வியங்கொட எழுதிய கட்டுரையொன்றில் இப்படி குறிப்பிடுகிறார். “சிங்கள பௌத்த மாட்டிறைச்சி”க்குப் பதிலாக “மேற்கத்தேய கிறிஸ்தவ மாட்டிறைச்சி”யை பிரதியீடு செய்யச் சொல்கிறார்களா? என்று அவர் வினவுகிறார்.

மாட்டைத் தாயாகவும் பால் கொடுக்கும் தெய்வமாகவும், வணங்குவதற்குரிய தெய்வமாகவும் உணர்வுபூர்வமாக பிரச்சாரம் செய்து, புனித நிலைக்கு உயர்த்தி ஐதீகமாக பரப்பி அதனை நம்பப் பண்ணி அதனை உண்ணக்கூடாது, கொல்லக்கூடாது என்பது வரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. மேலும் இலங்கையில் ஏராளமான “அசைவ” உணவு வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றுக்கு எந்த எதிர்ப்பையும் இவர்கள்  காட்டுவதில்லை.கொல்லக்கூடாது ஆனால் கொல்லப்பட்டதை விற்கலாம், புசிக்கலாம் என்கிற முரண்நகை இதிலும் தொடர்கிறது. மேலும் பெரும்பாலான பௌத்த பிக்குகள் உணவுடன் கடலுணவை சேர்த்துக்கொள்கிறார்களே. பௌத்த மதம் உள்ள சில ஆசிய நாடுகளில் அசைவ உணவு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிலுள்ள ஷிண்டோ மதத்தின் கடவுள்கள் புத்தரின் அவதாரங்களாக பார்க்கப்படுகிறது. அந்த மதத்தில் மீன் உள்ளிட்ட அசைவ உணவுகள் பல அனுமதிக்கப்பட்டவை.

அண்மைக் காலமாக சிங்கள பௌத்த பேரினவாத இயக்கங்களின் நிகழ்ச்சிநிரலில் முக்கிய அங்கமாக மாடுகளை விடுவிக்கும் செயற்திட்டமும் ஆகியிருக்கிறது. Stop killing cows என்கிற ஒரு இயக்கம் சிங்கள பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டுமென்றால் மாடுகள் கொல்லப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்கிறது.

புத்தரின் போராட்டம்
இன்றும் தம்மை சைவர்களாக (மரக்கறி உணவாளர்களாக) காட்டிக் கொள்ளும் பார்ப்பனர்கள் வேத காலத்திலிருந்தே மாடு, குதிரை உள்ளிட்ட எல்லாவற்றையும் அடித்துக் கொன்று தின்றிருப்பதை அவர்களின் ரிக் வேதம் சாட்சி கூறுகிறது. ரிக் வேதத்தில் யாகம் வளர்ப்பு என்கிற பேரில் தீயில் மாடுகளை எரித்து பங்கு போட்டு பிரித்து உண்ணும் வழக்கம் குறித்து விலாவாரியாக ரிக் வேதம் பேசுகிறது. அந்தவேளை தான் வேத மறுப்பாளனாக பார்ப்பனியத்தின் மாபெரும் எதிரியாகத் தோன்றுகிறார் புத்தர். உழவுத்தொழில் செய்யவே மாடுகள் இல்லாதபடி இரக்கமற்ற இந்தப் பார்ப்பனர்கள் வேதத்தின் பேரால் யாகம் என்ற பொய்யுரையால் எல்லா மாடுகளையும் அடித்துக் கொன்று தின்ற அட்டூழியத்தை எதிர்த்துப் புத்தர் போராடுகிறார். மாடுகளைப் பாதுகாக்க எழுந்த இயக்கமே புத்தரின் இயக்கம். புத்த மதத்தின் எழுச்சியால் ஆட்டம் கண்ட பார்ப்பனியம் தம் மதத்தைப் பாதுகாப்பதற்காக தாங்கள் மிகவும் விரும்பிச் சுவைத்து உண்டு வந்த மாட்டுக்கறி உணவைத் துறந்து சைவ உணவுககு மாறுகிறார்கள்.

மாடு உண்ணார் மேலோர், உண்போர் கீழோர் என்கிற வஞ்சகமான பரப்புரையை பார்ப்பனர் வெற்றிறெச் செய்து விட்டனர். மாட்டிறைச்சி என்பது தீண்டத்தகாதவர்களின் உணவாக மாற்றிவிட்ட பார்ப்பனியம் காலப்போக்கில் அவர்களிடமிருந்தும் அதனை பறித்து ஏறிய துணிந்து விட்டது. மாட்டிறைச்சி குறித்து இந்து மதத்தின் பெயரால் உணர்ச்சியூட்டி நச்சு கருத்தியல்களை பரப்பி வைத்திருக்கிறது.

இலங்கையில் மாட்டிறைச்சிக்கு எதிரான ஐதீகம் இந்து மதத்திலிருந்தே தொற்றிகொண்டது என்பதில் எந்தவித ஐயமும் இருக்க முடியாது.

இந்தியத் தடை
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மாதம் மாட்டிறைச்சியை தடை விதிக்கப்பட்டதை அறிந்திருப்பீர்கள். பாரதீய ஜனதா கட்சியின் இந்துத்துவ பாசிச போக்கின் ஒரு அங்கமாகவே அது கொள்ளப்பட்டது. இந்தியாவில் வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் விளிம்புநிலை மக்களின் ஊட்ட உணவாக மாட்டிறைச்சி இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலித் மக்களுக்கு மலிவாக கிடைக்கும் உணவாக காணப்படுகிறது.

மாடு சிவனின் வாகனம் என்று கூறிகொண்டு அதை கொல்லக்கூடாது என்று கூறும் இந்தியா உலகில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில இருக்கிறது. முதலாவது இடம் பிரேசில். அது மட்டுமல்ல கடந்த வாரம் ஊடகங்கள் இன்னொறரு உண்மையை வெளிப்படுத்தியிருந்தன. இந்தியாவில் அந்த பிரதான மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் முதல் 6 நிறுவனங்களில் 4 நிறுவனங்கள் இந்துக்களுக்கு சொந்தமானது. அவர்கள் தமது மாட்டிறைச்சி கம்பனிகளை முஸ்லிம் பெயர்களில் நடத்தி வரும் பித்தலாட்டங்களும் அம்பலப்படுத்தப்பட்டன.

அநகாரிக தர்மபால
உண்மையை சொல்லப்போனால் இறைச்சி உண்போரைப் நோக்கி “மாட்டிறைச்சி மட்டும்” உண்ணாதீர்கள் என்று நிர்ப்பந்திக்கும் அரசியல் அப்பட்டமான பம்மாத்து.

மாட்டிறைச்சி உண்பதை எதிர்த்து அநகாரிக தர்மபால ஒரு இயக்கமே நடத்தியிருந்தார். அது கூட ஏனைய மதங்களுக்கும், இனங்களுக்கும் எதிராகத் தான் மேற்கொள்ளப்பட்டது. “கள் குடிப்பவன்  இழிந்தவன்... மாட்டிறைச்சி உண்பவன் இழிசாதியன்” என்பது அவரது சுலோகம். மாட்டிறைச்சிக்கு எதிரான பிரசாரத்துக்காக ஒரு வண்டியை தயாரித்து “மாட்டிறைச்சியை உண்ணாதீர்” என்கிற வாசகத்தை பெரிய எழுத்தில் அதில் பொறித்து நாடு முழுதும் கொண்டு சென்றார். அவரது அந்த வாசகம் சிங்களவர்கள் மத்தியில் பிரபல்யமானது. அந்த வாசகத்தைத் தான் இன்றும் உயர்த்திக்கொண்டிருக்கிறார்கள். சென்ற வருடம் அவரது 150 வது வருட நினைவையொட்டி அந்த வாகனத்தை இன்னொரு வாகனத்தில் வைத்து நாடெங்கிலும் கண்காட்சியாக கொண்டு சென்றனர். இன்றும் அந்த வாகனம் மருதானையில் உள்ள மகாபோதி சங்க தலைமையகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அனகாரிகவின் வாழ்க்கையின் பெரும்பகுதி இந்தியாவிலேயே செலவிட்டவர். அவரது நெருங்கிய சகாக்களாக இந்துக்களும், சங்கர மடத்தவர்களும் தான் இருந்தனர். பிராமணியத்தின் பாதிப்பு அவரிடம் இருந்தது. இந்துக்கள் மாட்டை புனிதமான ஒன்றாக ஆகியிருக்கின்ற ஐதீகமும், இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பழக்கமும் அனகாரிகவையும் பாதித்திருந்தது. இலங்கையை பொறுத்தளவில் சிங்கள விவசாயிகள் மாட்டிறைச்சி உண்ணுவதில் அதிக அக்கறை காட்டாதவர்கள். ஆனால் நகர்ப்புறங்களில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் அதிகம் உண்டு. குறிப்பாக அனகாரிகவின் காலத்தில் இந்த நிலை தான் இருந்தது.

ஆங்கில கத்தோலிக்கர்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சிக்காகவும் அவர் மாட்டிறைச்சி பிரச்சினையை கையில் எடுத்தார். அதனை சிங்கள பௌத்த முலாம் தடவி சிங்கள பௌத்தர்களுக்கு பருக்கினார் என்றே கூறலாம். அவர் மாட்டிறைச்சி உண்ணுவதிலிருந்து சிங்கள பௌத்தர்களை மீட்பதற்கு அதிகம் பிரயத்தனம் செய்தார். 

1955ம் ஆண்டில் முதல் முறையாக பிரசுரிக்கப்பட்ட மார்ட்டின் விக்கிரமசிங்கவின் “உண்மை, நேர்மை” எனும் நூலில் உள்ளீர்க்கப்பட்டிருந்த குறிப்பு உசிதமென்பதனால் இங்கு குறிப்பிடுகின்றேன்.
“புனித தூதர்கள் தொடர்பாக ஏற்பட்ட எழுச்சியின் பிரதிபலிப்பினாலேயே மாட்டு ஊர்வலம் நடத்துவது நாடு பூராகவும் வேகமாகப் பரவியது. மாட்டு ஊர்வலத்தை பார்த்த அன்னியர்கள் நாடு ஒன்றுபடுகிறது, எல்லோரும் போகிறார்கள், பாருங்கள் நாம் மாத்திரம் போகாமலிருப்பதெப்படி என நினைத்து அன்னியர்களும் ஊர்வலத்தில் இணைந்து கொண்டார்கள்.”
பேரினவாத தரப்பு தமது சமூக ஊடக செல்வாக்கைப் பயன்படுத்தி உச்சபட்ச அளவில் மாட்டிறைச்சி குறித்த பிரசாரங்களை சமூக வலைத்தளங்களில் ஜனரஞ்சகமாக்கி வெகுஜன பங்குபற்றலையும் ஊக்குவித்துள்ளது. ஏலவே பரப்பப்பட்டுள்ள ஐதீகங்களையும், புனைவுகளையும் இலகுவாக அடுத்தடுத்த வாசகர் பரப்புக்கு பல்கிப்பெருப்பிக்கும் போக்கை அது வளர்த்துவிட்டுள்ளது. இவை தன்னியல்பாக நடக்கவில்லை. மிகவும் திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டுவரும் ஆயுதங்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

தமிழரை சிறை செய்து மாடுகளை விடுவிக்கும் அரசியலை நாம் விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. மாடுகளை பாதுகாக்க 500 பௌத்த பிக்குகள் தற்கொலைக்கு தயாராக இருப்பதாக சிங்கள ராவய அமைப்பு இரண்டு வருடங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது. மாடுகளுக்காக தீ குளிக்க 500 பிக்குகள் தயாராக இருந்த இந்த தேசத்தில் மனிதர்களுக்காக ஒரு மாடு கூட இல்லாமல் போனது “ஆசியாவின் அதிசயம்” என்பதைத் தவிர வேறென்ன. இலங்கையில் இதுவரை நிகழ்ந்த எந்த பிரச்சினைக்காகவும் பிக்கு ஒருவர் தற்கொலை செய்துகொண்டது கிடையாது. சிங்கள பௌத்தமயமாக்களின் ஒரு அங்கமாகவே இந்த போக்கை கவனிக்க வேண்டியிருக்கிறது. 

மாட்டை வைத்து செய்யும் இந்தப் பேரினவாத அரசியல் நூற்றாண்டாக தொடர்ந்து வருவதுடன். இன,மத ஐக்கியத்தை மேலும் விரிசலுக்கு உள்ளாக்கும் ஒன்றாக மாறி எழுசியுற்றுவருவதை அலட்சியப்படுத்த முடியாது.

நன்றி - தினக்குரல் 17.05.2013
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates