Headlines News :
முகப்பு » » வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வீடமைப்பு கடன் பெற்றுக்கொடுக்கப்படுமா? – மைக்கல் ஜோக்கிம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வீடமைப்பு கடன் பெற்றுக்கொடுக்கப்படுமா? – மைக்கல் ஜோக்கிம்


பெருந்தோட்ட மக்களின் காணி மற்றும் வீட்டுரிமைக்கான எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுவதற்கான சூழல் உருவாகி வருவதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. தற்போது பெருந்தோட்ட மக்கள் சார்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சு ஆகியன கிடைத்துள்ளன. அத்துடன் தோட்டக்கம்பனிகளும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் வீடமைப்புக்கு காணி வழங்குவதற்கு ஆதரவான மனப்பாங்கினை கொண்டிருக்கின்றனர். இந்த சூழலை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது மக்களினதும் பதவியிலுள்ளவர்களினதும் பொறுப்பாகும்.

முதலில் ஏற்கனவே வீடுகளை கட்டிக்கொண்டுள்ளவர்களுக்கு காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். பெருந்தோட்டப் பகுதிகளில் வீடமைப்புத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நீண்ட காலம் எடுக்கும். அதேவேளை அதற்கான நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக் கொள்வதற்கு அதிக காலம் எடுக்கும். இந்தப் பின்னணியில் தமது சொந்த செலவில் வீடுகளை கட்டிக்கொள்ளும் வசதியுள்ளவர்களுக்கு காணி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதும் அவசியமானதாகும்.

இந்த விடயத்தில் பாதிப்புக்குள்ளான ஒரு பகுதியினர் தொடர்பாக இதுவரை சமூகத்தின் கவனம் செலுத்தப்படவில்லை. இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றவர்களாவர்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் வழங்கப்படும் பல சலுகைகள் பெருந்தோட்டங்களில் இருந்து வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு கிடைப்பதில்லை. வேலைவாய்ப்பு பெற்றவர்கள் திரும்பி வந்த பின்னர் அவர்களுக்கு வீடமைப்புக்கடனை பெறும் உரிமை உள்ளது. கிராம மற்றும் நகரப்பகுதிகளில் இருந்து வெளிநாடு சென்று திரும்பிய பலர் பணியகத்தால் வழங்கப்படும் கடனை பெற்று தாம் வெளிநாட்டில் உழைத்த பணத்தையும் பயன்படுத்தி தமக்கான சொந்த வீடுகளை அமைத்துக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு வீடமைப்புக்கடன் பெறுவதற்காக முக்கிய தகுதியான காணி உரிமை உண்டு.

ஆனால், பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்று திரும்பி வருபவர்களுக்கு காணி உரிமை இல்லாத காரணத்தால் வீடமைப்புக்கடனை பெற முடிவதில்லை. பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து தமக்கு வீடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கனவோடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று திரும்பிய பலரின் சொந்த வீடு கட்டிக்கொள்ளும் கனவை நனவாக்க முடியவில்லை. தமது வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான விடயத்திற்கு முதலீடு செய்ய முடியாததால் அவர்கள் உழைத்த பணம் அநேகமான சந்தர்ப்பங்களில் பயனற்ற பொருட்களில் முதலீடு செய்யப்பட்டு வீணாக்கப்படுகிறது.

பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து தொழில் வாய்ப்புப் பெற்று வெளிநாடு சென்று திரும்பியவர்களுக்கு வீடமைப்புக் கடன் வழங்கப்படாமை தொடர்பான பிரச்சினையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தேசிய ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் பிரிடோ நிறுவனத்தால் முன்வைக்கப்பட்ட போதெல்லாம் பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து வெளிநாடு சென்றவர்களுக்கு காணி உரிமை இல்லாததால் அவர்களுக்கு வீட்டுக்கடனை கொடுப்பதில் தமக்கு சிக்கல் இருப்பதாக அமைச்சினாலும் பணியக உத்தியோகத்தர்களினாலும் சுட்டிக்காட்டப்பட்டது. காணி உரிமையை உறுதிப்படுத்துபவர்களுக்கு மட்டுமே வீட்டுக்கடன் வழங்கப்பட முடியும் என்ற கொள்கை இருப்பதால் தம்மால் எதுவும் செய்ய முடியாது என அதிகாரிகள் கையை விரிக்கின்றனர்.

எனினும், பெருந்தோட்டங்களிலிருந்து வீட்டுக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு குறிப்பிட்ட தோட்ட கம்பனி தமக்கு காணி வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று உறுதி அளிக்கும் (No objection) கடிதம் வழங்குமானால் தாம் கடன் வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஆனால் அநேகமான தோட்ட கம்பனிகள் இவ்வாறான கடிதத்தை கூட கொடுக்க முன்வருவதில்லை என்றும் கூறும் அதிகாரிகள், அதனால் தம்மால் கடன் வழங்க முடியாதிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

வெளிநாடு சென்று உழைப்பவர்கள் நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை கொண்டு வரும் முக்கியமான பங்களிப்பை செய்வதாலேயே அவர்களுக்கு பணியகம் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்குகிறது. எனவே பெருந்தோட்டப்பகுதியில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்பவர்களும் மற்றைய துறையைச் சேர்ந்தவர்களை போலவே வீட்டுக்கடன் உட்பட மற்றைய சலுகைகளை பெறும் சம உரிமை உண்டு என்பதை அவர்கள் உணரும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

காணி உரிமை மறுக்கப்பட்டிருப்பதால் பணியகம் வழங்கும் வீடமைப்புக்கடன் போன்ற மற்றைய உரிமைகளும் சலுகைகளும் அவர்களுக்கு மறுக்கப்பட்டிருப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

எனவே, மலையகத் தலைவர்கள் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு மற்றும் தோட்டக் கம்பனிகளுடன் பேசி வெளிநாடுகளில் தொழில் புரிந்துவிட்டு நாடு திரும்பி வருபவர்களுக்கு காணி பெற்றுக் கொடுப்பதற்கான கொள்கை ரீதியிலான இணக்கத்தை பெற்றுக் கொள்வது மலையகத் தலைவர்களின் பொறுப்பாகும். இதன் மூலம் பல நூற்றுக்கணக்கானவர்கள் இந்த நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தமக்கான வீடுகளை தாமே சுயமாக அமைத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

எனவே, புதிய அரசு மக்களின் வீடு காணிக்கான உரிமை தொடர்பாக சாதக மான முறையில் செயல்பட்டுள்ளது என் பதை மக்கள் முன் உறுதிப்படுத்த உதவும்.

நன்றி  வீரகேசரி 15.02.2015

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates