Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

மக்கள் வழங்கிய ஆணையை கொண்டு மலையகத்தில் விட்ட கோட்டையை ஊவாவில் பிடிப்பார்களா ? - பழனி விஜயகுமார்


நாடு முழுவதும் மிகவும் சுர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுக்கு வந்துள்ளது. அபிவிருத்தியை காட்டி மக்களை வென்றுவிடலாம் என்று நினைத்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கையுடன் கூடிய வெற்றியை ஊவா மாகாண மக்கள் அளித்துள்ளனர் என்பதே உண்மை. ஊவா மாகாண சபைத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி அதிலும் வென்று தனது பதவி காலத்தை மீண்டும் ஒருமுறை நீடித்துக் கொள்ளலாம் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்பார்ப்பு தேர்தல் முடுவுகள் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எச்சரிக்கை வெற்றி
ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் 9 ஆசனங்களையும் மொனராகலை மாவட்டத்தில் 8 ஆசனங்களையும் இரண்டு போனஸ் ஆசனங்களையும் வென்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மொத்தம் 19 ஆசனங்களை வென்று ஊவா மாகாணத்தில் ஆட்சி அமைக்கத் தகுதி பெற்றுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் அரசாங்கத்திற்கு இம்முறை பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்தமுறை 25 ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைத்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இம்முறை 19 ஆசனங்களை மட்டுமே வென்று 6 ஆசனங்களை இழந்த நிலையில் ஆட்சி அமைக்கத் தகுதி பெற்றுள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட 2009 யுத்த வெற்றியை கோஷ ஆயுதமாக பயன்படுத்தி இனி தேர்தலில் வெற்றிபெற முடியாது என்று தெளிவான செய்தியை ஊவா மக்கள் இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் இனவாதம், ஊழல், மோசடி, தன்னிச்சையான ஆட்சி போன்றவற்றின் மூலம்  ஊழல் நிரம்பிய அபிவிருத்தி, உழைப்பாளிகளின் வயிற்றில் அடித்தல், கடன்மேல் கடன்பட்டு குடும்ப ஆட்சியை உலகமயமாக்க நினைத்தல் போன்றவை இனி நடக்காத காரியம்; என்பதை ஊவா மக்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

ஆக மொத்தத்தில் அரசாங்கத்திற்கு ஊவா மாகாண மக்கள் வழங்கியுள்ளது எச்சரிக்கையுடன் கூடிய வெற்றியே தவிர ஆடம்பர வெற்றி கிடையாது என்பதை அரசாங்கம் நன்கு உணர வேண்டும்.
எதிர்கட்சிகளின் எழுச்சி இம்முறை ஊவா மாகாண சபைத் தேர்தலில் எதிர்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் அரசாங்கத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்கள் என்பதில் ஐயமில்லை. அரசாங்கத்தின் பலத்தை குறைக்க ஜனநாயகக் கட்சியும் பங்கு வகித்தியுள்ளமை மறுக்க முடியாது. பதுளையில் 8 ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் வென்றதன் மூலம் ஊவாவில் ஆளும் - எதிர் கட்சிகள் சமநிலை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம் வாக்குகள் அடிப்படையில் நோக்கினால் ஆளும் தரப்பைவிட ஐதேக-ஜேவிபி இணைந்த எதிர்தரப்பு 9777 வாக்குகளைப் பெற்று பதுளையை வெற்றிபெற்றுள்ளது என்று சொல்லலாம்.

கடந்தமுறை தேர்தலில் 129,144  வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களை மாத்திரம் வென்ற ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை 274,773 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களை வென்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு இம்முறை 6 ஆசனங்கள் அதிகம் கிடைத்துள்ளன. கடந்த 2009 தேர்தலில் 14,639 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை வென்ற மக்கள் விடுதலை முன்னணி இம்முறை 36,580 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களை வென்றுள்ளது.

ஊவா தேர்தலில் புதிதாக களமிறங்கிய சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி 6076 வாக்குகளை பெற்றுள்ள போதும் ஆசனம் எதனையும் வெல்லவில்லை.

ஊவா தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்கட்சிகளின் பிரதான பிரச்சார கோஷங்களாக ஊவாவில் வறுமை அதிகரிப்பு, முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷவின் செயற்திறனின்மை, ஊவாவில் குடும்ப ஆட்சி, ஊவாவில் பார்காரர்கள் அரசியலில், ஊவா வறட்சி, அபிவிருத்தியில் ஊவா புறக்கணிப்பு, நாட்டில் ஊழல் ஆட்சி மாற்றம் அராஜக ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பல இருந்த நிலையில் ஊவா மாகாண மக்கள் அதனை ஏற்று வாக்களித்துள்ளதை ஜனநாயகத்திற்கு வலுசேர்த்துள்ளது.
பிளவுபட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான இரு தலைவர்களான ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் ஒன்றுசேர்ந்தமை மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை மாற்றத்திற்கு பின்பு அக்கட்சியின் எழுச்சி , சரத் பொன்சேகா தரப்பினரின் அரசாங்க எதிர் பிரச்சாரம் போன்றவை எதிர்கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க ஏதுவான காரணிகளாக அமைந்தன. ஆக எதிர்வரும் தேர்தல்களிலும் எதிர்கட்சிகளின் எழுச்சி மேலெழும் என்பதில் ஐயமில்லை.

தமிழர்களின் வாக்குகளால் வெற்றிக் கொடி நாட்டிய அரசாங்கம்
ஊவா மாகாண சபைத் தேர்தலில் இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்ற பிரதான கூட்டுத் தரப்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன காரணம் என்று சொன்னால் அதனை மறுப்பதற்கு இல்லை. பதுளை மாவட்டத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் பசறை, பண்டாரவளை, ஹப்புத்தளை போன்ற தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றது. பதுளை மாவட்டத்தில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்;ட தமிழ் வேட்பாளர்களான செந்தில் தொண்டமான் (இதொக), வடிவேல் சுரேஷ் (ஐமசுமு), ஆறுமுகம் கணேசமூர்த்தி (இதொக) ஆகியோர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றதுடன் ஆறுமுகம் சிவலிங்கம் (இதொக), அரவிந்தகுமார் (மமமு), ராஜமாணிக்கம் (தொதேச) போன்றோர் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று அரசாங்கத்தின் வெற்றிக்கு வித்திட்டனர். இதன்மூலம் 2009 ஊவா தேர்தலில் இரண்டாக இருந்த தமிழர் பிரதிநிதித்துவம் இம்முறை தேர்தல் முடிவுகள் மூலம் நான்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. நான்கு பிரதிநிதித்துவத்தை ஐந்தாக மாற்றிக் கொள்ள அதிக வாய்ப்புக்கள் உள்ளதை சொல்லியாக வேண்டும். ஆக ஜனநாயக விரோத தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதும் தமிழ் மக்கள் தமிழர்கள் என்ற உணர்வில் ஒன்றிணைந்து வாக்களித்துள்ளனர். இதன்மூலம் தமிழ் பிரதிநிதிகள் மற்றும் அவர்கள் சார்ந்த கட்சி, தொழிற்சங்கங்களை ஊவா தமிழர்கள் வலுவடையச் செய்துள்ளனர். மக்களின் இந்த உபகாரத்திற்கு ஊவா மாகாணத் தமிழ் பிரதிநிதிகள் எவ்வாறு பிரதிஉபகாரம் செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

பேரம் பேசும் சக்தியை பயன்படுத்துமா தமிழ் தலைமைகள்
இலங்கை தேர்தல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் உள்ளுராட்சி, மாகாண சபை, பாராளுமன்றம் என அனைத்து தேர்தல்களிலும் சிறுபான்மை இனமாகிய தமிழ், முஸ்லிம் மக்கள் பிரதான பெரிய கட்சிகளின் ஆட்டையை தீர்மானிக்கக் கூடிய சக்திகளாக இருந்து வந்துள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது. அண்மையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி அமைப்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்தது. அதேபோன்று 1994ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் ஆட்சி அமைக்க மறைந்த அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன் இருந்துள்ளார். இப்படி இன்னும் பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படியானதொரு சந்தர்ப்பம் அண்மையில் நடைபெற்ற மத்திய மாகாண சபைத் தேர்தலில் வந்தது. மத்திய மாகாண சபைத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு கண்டி (01), மாத்தளை (01) மற்றும் நுவரெலியா (06)  மாவட்டங்களில் 8 ஆசனங்கள் கிடைத்தன. தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு நுவரெலியாவில் 3 ஆசனங்கள் கிடைத்தன. மலையக மக்கள் முன்னணிக்கு ஒரு ஆசனம் கிடைத்தது. ஆக மூன்று கட்சிகளும் மத்திய மாகாணத்தில் 12 ஆசனங்களை வென்றன. ஆனால் இவர்களால் மத்திய மாகாணத்தில் திட்டமிட்டு பறிக்கப்பட்ட தமிழ் கல்வி அமைச்சை மீளப் பெற முடியவில்லை. இதனால் நன்மை ஏற்பட்டுள்ளதென அரசியல் நோக்கத்திற்காக பலர் கூறுகின்ற போதும் முக்கியமான பல அதிகாரங்களை, தேவைகளை இழக்க நேரிட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். 
இந்த சாபக்கேடு இன்று மலையக மக்களின் இரண்டாவது பெரும்பான்மை நிலமான பதுளையிலும் குடிகொண்டு விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஊவா தேர்தலில் பதுளை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதிகள் நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அது ஐந்தாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஊவாவில் தமிழர்களின் வாக்கு ஆளும் அரசாங்கத்தின் வீழ்ச்சியை பெருமளவு குறைத்துள்ளது. எனவே வரவாற்றில் உள்ளது போன்று ஊவாவிலும் இம்முறை மலையக மக்கள் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளனர்.

வரலாற்றில் இந்த தீர்மானிக்கும் சக்தியை வைத்துக் கொண்டு மறைந்த தலைவர்கள் ஒருசில வெற்றிகளையே பெற்றுள்ளதுடன் தோல்விகள் அல்லது பயன்படுத்தாமை அதிகமாகும். எனவே இதனை கருத்தில் எடுத்து மத்திய மாகாணத்தில் விட்ட தமிழ் கல்வி அமைச்சு எனும் கோட்டையை ஊவாவில் பற்றிப்பிடிக்க மலையக தலைமைகள் முன்வர வேண்டும். கட்சி, தொழிற்சங்க பாகுபாடின்றி மலையக அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து ஊவாவில் தமிழ் கல்வி அமைச்சைப் பெற வேண்டும். பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் இது ஒரு சாதாரண காரியம் இல்லாவிடினும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் சாதிக்க முடியும். ஊவாவில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை அவர்களது தலைவர்கள் சரியான வகையில் பயன்படுத்துவார்களா என பரீட்சித்துப் பார்ப்பதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். வெற்றிக்களிப்பில் துவண்டுவிடாது எழுச்சி கொண்டு ஊவாவிற்கு தமிழ் கல்வி அமைச்சைப் பெற்று மலையகத்தை கல்வியில் முன்னேற்றுவதன் மூலம் சமூகத்தில் மலையக மக்களின் அந்தஸ்த்தை மேலும் வலுவடையச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இந்த கட்டுரை மூலம் விடுத்து வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தோல்வி கண்டவர்களுக்கு உட்சாகத்தை ஊட்டி முடிக்கிறேன்.

ஊவா தேர்தல் முடிவு உணர்த்துவதென்ன? - திருமலை நவம்



ஊவா மாகாணசபை தேர்தல் முடிவுகள் பற்றி பல்வேறு அபிப்பிராயங்களும் விமர்சனங்களும் கருத்துக்களும் கூறப்படும் நிலையில் இத்தேர்தல் முடிவுகள் அடுத்த வருடம் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டியம் கூறும் தேர்தலாக கருதமுடியுமா என்பது தான் இப்போதைய கேள்வியாக இருக்கின்றது.

ஆளும் அரசாங்கமாகிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் நாங்கள் அமோக வெற்றி பெற்று எமது ஆட்சியின் ஸ்திரத்தன்மையை நிரூபித்துள்ளோம் என்று கூறுகி றார்கள். அதுமட்டுமன்றி எட்டு மாகாணங்க ளைக் கைப்பற்றி 58 வீத மக்கள் ஆதரவை நிரூபித்துள்ளதாக ஆளும் அரசாங்கத்தரப்பி னர் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேவேளை, ஊவா மாகாண சபைத்தேர்தலில் இரண்டாம் நிலை பெற்றிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி 17 வீதத்தால் சரிந்து விட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு 11.3 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஆளும் அரசாங்கத்தின் அஸ்தமனம் ஆரம்பித்தமைக்கு அறிகுறி இது என ஐக்கிய தேசியக் கட்சியினர் பெருமிதமாகப் பேசிக் கொள்கிறார்கள்.

இவ்விருபக்க கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்டதா அல்லது உண்மை நிலைகளைப் பிரதிபலிக்கின்றனவா என்பது பற்றியெல்லாம் விமர்சன முறையில் ஆராய்வது காலத்துக்கு பொருத்த மற்றது என தவிர்த்துக் கொண்டு எதிர்கால த்தில் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் பொதுத்தேர்தல் மற்றும் தேர்தல்களுக்கு ஊவா மாகாண சபைத் தேர்தல் என்ன முன்னுரையை எழுதி வைக்கப் போகிறது என்பது பற்றி ஆராய்வது பொருத்தமானதாக இருக்கும்.

இலங்கையிலுள்ள ஒன்பது மாகாண சபைகளிலும் மலையக மக்கள், சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபட்ட சமூக இணைப்புக்களைக் கொண்ட ஒரு மாகாணசபையாகக் கருதப்படுவது ஊவா மாகாண சபையாகும்.
பதுளை மாவட்டம், மொனரா கலை மாவட்டம் என்ற இரு மாவட்டங்களையும் பதுளை ஹாலி – எல, வியலுவ, பரணகம, வெலிமடை, அப்புத்தளை, மகியங்கனை, பண்டாரவளை, பசறை, மொனராகலை, பிபிலை, வெல்லவாயா என்ற 12 தேர்தல் தொகுதிகளைக் கொண்டது ஊவா மாகாண சபை.
பல்லின மக்கள் வாழும் பதுளை மாவட்ட த்தில் கணிசமான தொகையினராக மலைய கத் தமிழர்களும் முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகின்றார்கள். இதேபோன்று மொனரா கலை மாவட்டத்தை எடுத்து நோக்குவோமா யின் கணிசமான சிங்கள மக்களும் மலைய கத் தமிழர்களும் சிறியளவு முஸ்லிம் மக்க ளும் வாழ்ந்து வரும் மாவட்டமாகக் கருதப்படுகிறது.

மொத்தத்தில் பார்க்கப்போனால் மலையக மக்களும் சிங்கள மக்களும் கணிசமாகவும் முஸ்லிம் மக்கள் மூன்றாம் நிலைபெற்றுக் காணப்படும் ஒரு மாகாண சபையாக ஊவா மாகாணசபை காணப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஊவா மாகாண சபைத்தேர்தலில் 32 ஆசனங்களை யும் 2 போனஸ் ஆசனங்களையும் உள்ள டக்கிய 34 ஆசனங்களில் ஐக்கிய மக்கள் சு.முன்னணி 19 ஆசனங்களையும் ஐக்கியதேசியக் கட்சி 13 ஆசனங்களையும் ஜே.வி.பி. 02 ஆசனங்களையும் பெற்றிருக்கின்றன. இதனை அட்டவணையில் காட்ட முடியும்.

மேற்படி, புள்ளி விபரங்களும் அது பற்றிய ஆய்வும் சாதாரணமாக எல்லோராலும் அறியப்பட்ட விடயந்தான். ஆனால், இப்புள்ளி விபர சமிக்ஞையினூடாக அது எதிர் கால தேர்தல்கள் பற்றி என்ன சூட்சுமமான கருத்தை சொல்லமுனைகிறது என்பது பற்றியே கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இத்தேர்தல் முடிவுகளின்படி மத்திய அரசா ங்கத்தின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகி க்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிட்ட போதும் ஒரு ஆசனத்தையும் பெற முடியவில்லை அதேபோன்றே முன்னாள் இராணுவத்தளபதியான சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சிக்கும் எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடி பிடித்துப் பார்க்கப்படும் தேர்தலாக ஊவா மாகாண சபை தேர்தல் நோக்கப்பட்ட நிலையில் ஆளும் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியென்ற இருகட்சிகளின் பல நிலையை பரிசோதித்துப்பார்க்கும் கள ஆய்வாக இத்தேர்தல் பாரக்கப்படுகிறது.

அரசியல் ஆய்வாளர்கள், அவதானிகள் ஆகியோரின் கருத்துப் படி பார்க்கின்ற போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு பாரிய பின்னடைவான நிலையொன்று உருவாகி வருகின்றது என்ற கருத்தும் அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி தன்னை சுதாகரித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது. இவ்வாறான கருத்துக்கள் வெளிவந்த தேர்தல் முடிவு கள் அளிக்கப்ட்ட வாக்கு வீதங்கள் கடந்த கால ஒப்பீடுகள் அடிப்படையில் கூறப்படுபவையாகவே இருக் கின்றது என்று கூறலாம். கடந்த 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஊவா மாகாணசபைத் தேர்தலில் 8.8.2009 72.39 வீத வாக்குகளைப் பெற்று 25 ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி இம்முறை தேர்தலில் 51.25 வீத வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் ஆறு ஆசனங்களை இழந்திருப்பதுடன் 21.14 வீத வாக்குகளை இழந்துள்ளது என்று சுட்டிக் காட்டப்படுகிறது. மறுபுறம் கடந்த தேர்தலில் 22.32 வீத வாக்குகள் மட்டுமே பெற்று 7 ஆசனங்கள மாத்திரம் பெற்றிருந்த ஐக்கிய தேசிய கட்சி இம்முறை 40.24 வீத வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களைக் கைப்பற்றியிருப்பது மகத்தான முன்னேற்றமெனவும் புகழப்படுகிறது.

இத்துடன் இன்னுமொரு விடயத்தையும் அவதானிக்க வேண்டும். 2009 ஆம் ஆண்டு தேர்தலில் 2.53 வீத வாக்குக்களைப்பெற்று ஒரு ஆசனத்தை மாத்திரம் பெற்றிருந்த ஜே.வி. பியினர் இம்முறை 5.36 வீத வாக்குகளைப் பெற்று இரு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளமை இன்னுமொரு வகையான இடைமுறிவு மாற்றமாகக் கருதப்படுகிறது. 2009 ஆம் 2014 ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல் முடிவுகள் புள்ளிவிபர ஒப்பீட்டு முறையில் சிறிது நோக்குவோம்.

ஒப்பீட்டு ரீதியில் இப்புள்ளி விபரங்கள் இரு பிரதான கட்சிகளுடைய மாற்றங்களைச்சுட்டிக் காட்டுவதாக இருந்தாலும் இந்த மாற்றங்களும் புள்ளி விபரத் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் பற்றி ஆருடம் கூற முடியுமா என்பதும் விமர்சனத்துக்குரிய ஒரு விடயந்தான்.

பல்தேசிய சமூகம் வாழுகின்ற இலங்கை யில் 25 மாவட்டங்களிலும் 9 மாகாண சபைகளிலும் வாழுகின்ற மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், அபிலாஷைகள் தேசிய பற்று ஆளும் எதிர்க்கட்சிகள் மீது உள்ள அபிமானங்கள் யதார்த்த நிலைகள் போன்ற இன்னோரன்ன காரணிகள் அவர்களின் வாக்களிப்பை அல்லது ஆளும் அரசாங்கத் தெரிவை தீர்மானிக்கின்றன என்பதேயுண்மை.

இலங்கை அரசியல் வரலாற்றில் ஆறு ஜனாதிபதித் தேர்தலையும் 14 பாராளுமன்ற தேர்தல்களையும் பல உள்ளூராட்சித் தேர்தல்களையும் மாகாண சபைத்தேர்தல்களையும் கண்டிருக்கின்ற இலங்கை மக்களின் வாக்களிப்பு நிலைகள் எல்லாக் காலத்திலும் எல்லாத் தேர்தல்களிலும் ஒரே மாதிரியாக இருக்கவில்லையென்பதே பொதுவான உண்மையாகும். வளர்ச்சி கண்ட நாடுகளைப் போல் மக்களின் விருப்பங்களும் தீர்மானங்க ளும் மாறிமாறி நடந்திருக்கின்றன என்பதை தேர்தல் நிகழ்வுகள் எமக்கு தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

உதாரணமாக 1982 ஆம் 1988ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிப்பீடம் ஏறவைத்த மக்கள் 1994ஆம் 1999ஆம் ஆண்டுகளில் தமது முடிவுகளை மாற்றிக்கொண்டார்கள். 2005ஆம் 2010ஆம் ஆண்டுகளில் நிலைமை வேறுஒருவகைப்பட்டதாக இருந்தது. அதாவது 1994ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து 2005வரை சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொ.ஐ.முன்னணியின் பெயரிலான ஆட்சி 2005 ஆண்டு காலப் பகுதியில் இருந்து ஐக்கிய மக்கள் சு. கூட்டணியென மருவிக் கொண்டது.

தாய்க்கட்சியொன்றாக இருந்தாலும் காலத்துக்கு காலம் ஏற்பட்ட மாற்றங்கள் கூட்டணி சேர்க்கையில் பொதுசன ஐக்கிய முன்னணி ஐ.ம.சு.கூட்டணியாக மருவிக்கொண்டது.

தனி மனித ஆளுமைகள் தனிமனித வழிபாடுகள் இந்த மாற்றங்களுக்கான காரணங்களாக இருக்கலாம். எப்படியிருந்த போதிலும் மாற்றங்கள் என்பது இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத அத்தியாயங்களாக இருந்திருக்கின்றன என்பதை நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் எமக்கு எடுத்துரைக்கின்றன.

இப்புள்ளி விபரங்களின் படி கடந்த ஆறு ஜனாதிபதி தேர்தல்களின் முடிவுகளும் வெவ்வேறுப்பட்ட முடிவுகளைத் தந்திருக்கின்றன என்பது பொதுவான உண்மையாக இருந்தபோதிலும் 1994 ஆம் ஆண்டுமுதல் கடந்த 20 வருடகாலமாக ஒரேகட்சியின் ஆட்சியேஇருந்து வந்துள்ளது. ஆனால், அவற்றின் கூட்டுத்தன்மைகள் மாறி மாறி இருந்தபோதிலும் அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியென்னும் தாய்நிலைக்கட்சியின் ஆட்சியே தொடர்ந்து இருந்துள்ளது.

இத்தகையதொரு தொடர் நிலை ஆட்சி நிலவி வந்து கொண்டிருக்கின்ற நிலையில் 7 ஆவது ஜனாதிபதித் தேர்தல் இலங்கை அரசியல் போக்கில் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய சாத்திய அசாத்திய நிலையினை ஊவா மாகாண சபைத்தேர்தல் கோடிட்டு காட்டுகின்றதா இல்லை ஆளும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஸ்திர நிலையை படம்போட்டுக் காட்டுகிறதா? என்பது பற்றி அரசியல் ஆய்வாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றார்கள். இலங்கையின் அரசியல் அனுபவங்களைப் பார்க்கின்ற போது 1960 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை நீடித்த ஆட்சியை நடத்தி வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மீது ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தார்கள். 1970 ஆம் இலங்கை மக்கள். இதேபோன்று 1970 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மீது மாற்றமொன்று கொண்டு வரப்பட்டது. 1977 ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டுவரை அசைக்கமுடியாது என ஆட்சி செலுத்திய ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடித்து பொதுசன ஐக்கிய முன்னணி ஆட்சிப்பீடம் ஏறிக்கொண்டது. இவ்வாறு மாற்றமென்பது பொதுவானதாகவே இருந்துள்ளது.

இன்றைய இலங்கையின் அரசியல் போக் கைப் பொறுத்தவரை மாற்றத்தை வேண்டி நிற்கும் காரணிகளும் இருக்கின்றன. மாற்ற த்தை அனுமதிக்க மாட்டோமென்று கூறக்கூடிய காரணிகளும் இருக்கத்தான் செய்கின்றன இதில் எது பெரும்பான்மை பலம் கொண்டதாக இருக்கப் போகின்றதோ அதுவே 7 ஆவது ஜனாதிபதி தேர்தலை தீர்மானிக்கப்போகின்றது என்பதே யதார்த்தம்.

ஆட்சிமாற்றமொன்றை வேண்டி நிற்பதற் கான காரணிகளாக கருதப்படும் விடயங்க ளைச் சுருக்கமாகப் பார்ப்பின் அடிப்படை யான பொருளாதார பிரச்சினைகளாக சுட்டிக்காட்டப்படும் வாழ்க்கை செலவு அதிகரிப்பு பணவீக்கம் வருமான மட்ட வீழச்சி வேலையில்லா பிரச்சினை பொருளாதார வளர்ச்சி யின் பிரதேச சமமின்மை ஒருபக்க அரசியல் செல்வாக்குகள் குடும்பநிலை ஆதிக்கம் என்ற பலகாரணிகள் எடுத்துக்கூறப்படுகின் றன. மறுபுறம் சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரை அரசியல் தீர்வு சமூக நெருக்கடிகள் இன ஒடுக்குமுறைகளின் கெடுதி கள் என்ற இன்னோரன்ன காரணங்கள் நிரலி ட்டுக் காட்டப்படுகின்றன. இதேவேளை, சர்வதேச நெருக்கு நிலையென்ற வகையில் மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்காமை இலங்கை அரசாங்கத்தின் அண்மைக்கால வெளிநாட்டுக்கொள்கையின் சாய்வு நிலை கள் போன்றன ஆளும் அரசாங்கத்தின் மீது சர்வதேச ரீதியான பின் கணிப்பைக் கொண்டதாகவே காணப்படுகின்றது.

பொருளாதார மற்றும் இனச்சிக்கல் வெளிநாட்டு நம்பிக்கையீனங்கள் ஒரு அரசியல் மாற்றத்தை இலங்கையில் வேண்டி நிற்கின்றது என நிரல்படுத்திக் கூறப்பட்டாலும் ஆளும் அரசாங்கம் தொட ர்ந்து ஆட்சிப்பீடத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகின்ற தேசிய வாதமும் சர்வ தேச ஆதரவும் இன்றைய இலங்கையரசாங் கத்துக்கு இருக்கத்தான் செய்கின்றது.

சிங்கள தேசியம் ஆளும் அரசாங்கத்தின் மீது அளவற்ற பற்றுக்கோடு கொண்டவர் களாகவே காணப்படுகின்றார்கள். யுத்த வெற்றி, பௌத்த மேலாதிக்கம், சிங்கள அடி ப்படைவாதம் தொடர்ந்தும் இந்நாட்டில் காப்பாற்றப்பட வேண்டுமாயின் ஆளும் அரசாங்கத்தின் தொடர் ஆட்சிதக்க வைக் கப்பட வேண்டுமென்ற அதீத தீவிர வாதம் கொண்ட ஒருநிலையும் இலங்கையில் காணப்படத்தான் செய்கின்றது.

இதேபோன்றே சர்வதேச ரீதியாக சீனா, ரஷ்யா பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஜப் பான், மலேசியா போன்ற நாடுகளின் மறை முகமான ஆதரவு இருந்து கொண்டிருக்கும் நிலையில் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்ற சக்திகளாக வெல்லப்போகின்றன அல்லது ஆட்சி மாற்றத்தை விரும்பாத காரணிகளா வெல்லப் போகின்றன என்பது பற்றி ஆரு டம் கூறுவது கடினம்.
நன்றி - வீரகேசரி 

மலையகம் 2030இல் எவ்வாறிருக்கும்? - கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ்


  • இலங்கையில் தற்போது மாத்தளை, கண்டி, பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தேயிலைச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது.
  • 2030ஆண்டளவில் மத்திய மலைநாட்டின் பெரும்பகுதி மத்திய சுற்றாடல் பாதுகாப்புப் பகுதியாக வரையறுக்கப்பட்டு இயற்கை வளமிக்க பகுதிகளாக மாற்றப்படவிருக்கின்றன.
  • அதேவேளை, தேயிலைப் பயிர்ச்செய்கை மத்திய மலைநாட்டைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளான காலி,மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களுக்குள் மட்டுப்படுத்தப்படவிருகின்றன. 

"மலையகம் என்பது எங்களது உயிர் மூச்சு'' என்கின்றோம். நூற்றாண்டுகளுக்கு மேலாக வளர்த்தெடுக்கப்பட்ட தனித்து வமான மலையக பண்பாடுகளின் இரு ப்பிடமே தேயிலை, இறப்பர் தோட்டங்கள்தான் என்று பெருமை பாராட்டுகின் றோம். மலையகத்தின் பண்புசார் பற்றிய கணிசமான பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இருப்பினும் மூன்று நான்கு தலைமுறையினராக மலையகத்தில் வாழ்ந்து அதற்கே உரிய தனித்துவமான பண்பாடுகளை அடுத்து வரும் சந்ததியின ரும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஏராளமானோர் பங்களிப்பு செய்து வருகின்றனர்.

இருப்பினும், அடுத்து வரும் 20 ஆண்டு களில் மலையகத்தில் மேற்கொள்ளப்பட விருக்கும் மாற்றங்கள் இத்தகைய முயற்சிகளுக்கு எவ்வாறு துணை போகும் என்பது பற்றிய சில குறிப்புகளை வழங்குவது இக்கட்டுரையின் பிரதான இலக்காகும்.

ஒரு புறம் கம்பனிகளுக்கு சொந்தமான தேயிலை பெருந்தோட்டங்களின் உற்பத்தி கணிசமாக வீழ்ச்சியடைந்து செல்கின்றன. கம்பனிகள் இலங்கையின் மொத்த தேயி லை உற்பத்தியில் 30 வீதத்திற்கும் குறைவா கவே உற்பத்தி செய்கின்றன. மறுபுறம், கம் பனி தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் வெகுவாக சரிந்து விட்டது. 1990களில் பெருந்தோட்ட ங்களில் சுமார் 500,000 பேர் வரையில் பதிவு செய்து கொண்ட நிரந்தர தொழில்புரிபவர்களாக காணப்பட்டோரின் எண்ணி க்கை 40 வீதமாக வீழ்ச்சியடைந்து தற்போது 230,000பேராகக் காணப்படுகின்றனர். கணிசமான இளைஞர்கள் தோட்டங்களை விட்டு வேறு வேலைக்கு புறப்பட்டு விட்ட னர். தோட்டங்கள் ஆரம்பித்து 180 வருடங்களாகியும் பெரும்பாலான தொழிலாளர்கள் அதே லயன் குடியிருப்புக்களிலேயே இரு க்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் யாவரும் நினைப்பது போல பெருந்தோட்டங்களில் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான முயற்சியும் தொழிலாள ர்களின் சமூக நலன்களை உறுதிப்படுத்துவதற்கான திட்டங்களும், லயன் குடியிருப்பு களை மாற்றி மனிதர்கள் வாழக்கூடிய சாதாரண வீடுகளில் தொழிலாளர்கள் வசிப்பதற்கான தேசிய திட்டடங்கள் வரையப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் நடந்தேறியிருப்பதோ மற்று மொரு அபிவிருத்தி திட்டமாகும். இலங்கை அரசாங்கம் பல்வேறு துறைசார்ந்த அபிவிருத்தி வல்லுனர்களைக் கொண்டு 2010ஆம் ஆண்டில் 30வருட தேசிய அபிவிருத்தி திட்டம் ஒன்றினை தயாரித்துள்ளது. இத்திட்டத்தின் தலைப்பு National Physical Planning Policy And Plan 2010 –2030ஆகும். இத்திட்டத் தின் மூலம் 2030ஆம் ஆண்டளவில் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியம் என்ற நிலைக்கு கொண்டு வருவதே இலக்காகும். நாட்டில்லுள்ள இயற்கை வளங்கள், கடல்வழிப் போக்குவரத்து, இலங்கையின் அமைவிடம் போன்றவற்றின் பின்னணியில் மக்களில் அதிகமானவர்களை அறிவுமிக்க தொழிற்படையினராக மாற்று வதன் மூலம் இவ்விலக்கினை அடையலாம் என்பது இத்திட்டத்தின் எதிர்பார்ப்பாகும். இதற்கான நிதியினை வருடாந்த வரவு – செலவுத் திட்டத்தினூடாக ஒதுக்கப்படும் நிதியில் இருந்து செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இத்திட்டத்தில் சுமார் 20 நகரங்களும், 13 மீன்பிடித் துறைமுகங்களும், புதிய விமான நிலையங்கள், மீன் உற்பத்தி நிலையங்கள், அதிக வேக பாதைகள், Metro Regions, பாதுகாப்பான வலயங்கள், சூழல் பாதுகாப்பு வலயங்கள் என்று 15க்கு மேற்பட்ட திட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் மலையக பிரதேசம் இயற்கை சூழலை தக்க வைத்துக்கொள்ளும் பகுதி யாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என எடு த்துரைக்கப்பட்டுள்ளது.

தெற்கே சிங்கராஜவனம், கிழக்கே வெலிமடை மேட்டு நிலம், வடக்கே நக்கிள்ஸ் உட்பட்ட பிரதேசங்கள் இயற்கை அனர்த் தங்களால் பாதிக்கும் பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டு அதன் இயற்கைத் தன்மையை எவ்வாறு பாதுகாக்க லாம் என்று காத்திரமான ஆலோசனைக ளும் வழங்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்டவாறு இயற்கை சூழலை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று வரையறை செய்யப்பட்ட பகுதியிலேயே பெருமள விலான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்கின்றனர். அவர்கள் அங்குள்ள தேயிலை, இறப்பர் தொழில்களில் பெற்றுக் கொள்ளும் நாளாந்த வருமானத்தையே நம்பியுள்ளனர். (குறைந்தபட்சம் நாளொன்றுக்கு ரூபா 450/).
இந்த தேசிய திட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 300 மீற்றர் (சுமார் 1000அடி) மேற்பட்ட மலைப்பாங்கான பிரதேசங்கள் (sensitive area), தூய்மையான பிரதேசங்கள் என்று வரையறை செய்யப்பட்டுள்ளன. இதைவிட 1500 மீற்றர், சுமார் 4500 அடிக ளுக்கு மேற்பட்ட மலைநாட்டு பிரதேசத் தில் காடுகள் வளர்த்தல் மூலமாக இலங்கையில் பிரதான நீரேந்து வடிகால்களை பாதுகாப்பதே இத்திட்டத்தின் பிரதான இலக்காகும்.

இப்பிரதேசங்களில் கால்நடை வளர்க்கக்கூடிய இடங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், சுற்றுலாப் பயணிகளின் தங்குமிடங்களும் எந்தெந்த இடங்களில் இருக்க வேண்டும் என்றும் அடையாளப்ப டுத்தப்பட்டுள்ளன. இத்திட்டம் முழுமையாக நிறைவுறும் 2030ஆம் ஆண்டில் மலையகப் பகுதிகள் இயற்கை மரங்களைக் கொண்டு காடுகளாக காணப்பட வேண்டும். பொருத்தமான புற்றரைகள் காணப்படும் இடங்களில் பால் பண்ணை அபிவிருத்தி வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த இயற்கை வனப்பினை பார்வையிடவும் அதனை உல்லாசமாக பார்த்து இரசிப்பதற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உலாவி வரும் பிரதேசமாகக் காணப்பட வேண்டும். மேலும் பொருத்தமான இடங்களில் நீர் மின்சாரத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு நாட்டிற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பிரதேசமாகவும் காணப்பட வேண்டும் என் பது இத்தேசிய திட்டத்தின் எதிர்பார்ப்பா கும்.

இத்திட்டத்தில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள இன்னுமொரு முக்கியமான விடயம் உற்பத்தித்திறனற்ற தேயிலைச் செடிகளை அகற்றி இலாபம் தரக்கூடிய தேயிலைச் செடிகளில் இருந்து மட்டும் பய னைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ப தும் இத் திட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.

உண்மையில் மலையகத்தில் குறிப்பாக, பெருந்தோட்டக் கம்பனிகளிடம் காணப்ப டும் தேயிலைக் காணிகளில் (120,000 ஹெக்டெயர்) 65 வீதமான தேயிலைச் செடிகள் மிகப்பழமையான செடிகளாகும். இவற்றில் அதிகமானவை பிரித்தானியர்களால் முதன் முதல் நடப்பட்ட தேயிலைச் செடிகளாகும். இச் செடிகளுக்கு இப்போது 125 வருடங்களுக்கு மேற்பட்ட வயதாகும். இச் செடிகள் இத்திட்டத்தின் கீழ் பறித்தெடுக்கப்படலாம்.

இரண்டாவதாக, இங்குள்ள வயது முதிர்ந்த தேயிலை செடிகளை பிடுங்கி எடுத்ததன் பின்பு அதன் உற்பத்தியை நம்பி வாழ்ந்திருக்கும் தொழிலாளர்களும் அவ்விடங்களில் இருப்பது அர்த்தமற்ற விடயமாகும். பயனற்ற தேயிலையை பிடுங்கும் போது, தனது வாழ்வையும் வனப்பையும் அர்ப்பணித்த அந்தத் தொழிலாளர்களும் வேருடன் பிடுங்கி எறியப்படுவார்கள்.
தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான வேறு காரணங்களும் உடந்தையாகக் காணப்படும். அவற்றில் ஒன்று அவர்கள் வாழ்ந்த வீடுகள் மற்றுமொரு விடயம் குறைந்த வருமானம். ஏற்றுக் கொள்ளத்தக்கதான குடியிருப்பும் இல்லை. வருமானமும் இல்லை. தொழில் செய்யும் தேவையும் இல்லை என்ற நிலைவரத்தில் 'மலையகம்' நமது மண்வாசனை 'மலையக பண்பாடு' போன்ற எல்லா விருப்புகளுக் கும் சோதனை மிகுந்த காலமாக மாற்றமடையலாம்.

மேலே குறிப்பிட்டது போல உருவாக்கப்பட்ட தேசிய பௌதிக திட்டத்தில் மலையக மக்களின் வாழ்விடத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் நிலவுகின்றது. இத்தேசிய திட்டம் தீர்க்கமாக அங்கீகரிக்கப்பட்டு செயற்படுத்தப்படும் திட்டமாகும். இந்நிலையில் சுமார் 900,000 பேராக மலையக தேயிலை, இறப்பர் தோட்டங்களில் அதன் தொழில்களில் தங்கியிருப்பவர்களின் மேம்பாட்டிற்கு என்னென்ன யோசனைகளை முன்வைக்கலாம் என்பதையும் யாவரும் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். இவற்றில் பின்வருவனவற்றை முன்வைக்கப்படும் யோசனைகளில் ஒன்றாகக் கொள்ள முடியும்.

1.தேசிய திட்டத்தின்படி மலையகப் பகுதிகளில் உருவாக்கப்படும் உயர் விளைவு தரக்கூடிய தேயிலைக் காணிகளில் எவ்வாறு தொழில்புரிவது.

2.அங்கு உருவாக்கப்படக்கூடிய பால் பண்ணை அபிவிருத்தி, காடு வளர்ப்பு, உல்லாசப் பயணத்துறை போன்றவற்றில் நாம் எவ்வாறு பங்காளர்களாவது.

3.தோட்டங்கள் தவிர்ந்த நகரங்களில், கிராமங்களில் வளர்ந்துள்ள தொழில்களில் தங்களை எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்வது.

4.இருக்கின்ற அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி பொருத்தமான நிலைத்து நின்றிருக்கக் கூடிய பொருளாதார ஈடுபாட்டுடன் சொந்தமான குடியிருப்புகளை எவ் வாறு பெற்றுக் கொள்வது.

5. படித்த இளைஞர்கள் வெளியிடங்களில் வேலைக்கு செல்வதற்கு தகுதியான வகையில் மேலும் தொழிற்பயிற்சி நிலைய ங்களை அமைத்து அதில் பெருமளவு தொழிலாளர்களது பிள்ளைகளுக்கு தொழிற் பயிற்சி அளிப்பது.

இவை தவிர, மேலும் பல நல்ல ஆலோ சனைகளை முன்வைக்கும் முகமாக பொரு த்தமான கருத்திட்டங்கள் இடம் பெறுவது அவசியமாகும். இவ்வாறான செயற்பாடுகளூடாக சமூகத்தில் ஓர் ஆரோக்கியமான வளர்ச்சி ஏற்படுவதை எதிர்பார்க்கலாம்.

நன்றி - வீரகேசரி

அமைதியை விரும்பும் நாங்கள் மறைந்து வாழ்கிறோம். - வட்டரக்க தேரர் (நேர்காணல் - என் சரவணன்)

வட்டரக்க விஜித தேரோ சமீபகாலமாக அரசியல் அரங்கில் சர்ச்சைக்குளுக்கு இலக்கான முக்கிய பௌத்தத்துறவி. பொதுபல சேனாவை எதிர்த்து பகிரங்கமாக போராடும் ஒரேயொரு பிக்கு எனலாம். அதனால் உயிர் அச்சுறுத்தல்களுக்கும், சரீர தாக்குதல்களுக்கும் இலக்கானவர். அவரை கடத்திசென்று ஆணுறுப்பை சிதைத்து வீதியில் வீசி எறிந்தார்கள். தலைமறைவாக இருக்கும் இடத்திலிருந்து தொலைபேசி மூலம் பெறப்பட்ட நேர்காணல் இது. (28.09.2014 இன்றைய தினக்குரல் வெளியானது)
நேர்காணல் - என் சரவணன்


ஆரம்ப கால “தேசிய ஐக்கிய முன்னணி”யினூடான அரசியல் பிரவேசம் குறித்து

இனத்துவ கட்சி என்றல்லாமல் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களையும் இணைத்த ஒரு கட்சியை ஆரம்பிப்போம் என்கிற ஆலோசனையை நான் மறந்த அஷ்ரப் அவர்களுக்கு அப்போது முன் வைத்தேன். அதன் படி நாங்கள் இணைந்து தேசிய ஐக்கிய முன்னணியை 1995இல் ஆரம்பித்தோம். அஷ்ரப் அவர்கள் அப்போது முஸ்லிம் காங்கிரசின் தலைவராக இருந்தபடியால் என்னை தலைவராக நியமித்தார்கள். அதன் தலைவராக எனது பெயரை தேர்தல் ஆணைக்குழுவிலும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த கட்சியை அவரது துணைவி இறுதியில் சிதைக்க காரணமாகி விட்டார்.

ஆனால் அந்த சமயத்தில் நீங்கள் ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவர் என்று கங்கொடவில சோம ஹிமி மேடைகளில் பகிரங்கமாக குற்றம் சாட்டினாரே.

அவர் அப்படி பேசிய காணொளிகளை ஞானசார தேரரும் பல இடங்களில் எனக்கு எதிராக உபயோகித்தார். இன்று ஞானசார தேரர் போல 90 களில் சோம தேரரும் இயங்கியிருந்தார். ஏனைய வழிபாட்டு தெய்வங்களை இகழ்ந்ததுடன், மதங்களை நோக்கி அவர் கடுமையாக எதிர்த்து பிரசாரம் செய்தார்.  அஷ்ரப்போடு சோம ஹிமி நடத்திய தொலைகாட்சி விவாதம் கூட பிரசித்தி பெற்றது. அப்படிபட்ட ஒரு சூழலில் தான் தேசிய ஐக்கிய முன்னணியை கட்டினோம். உண்மையில் சோம ஹிமி எனது விடயத்தை திரிபுபடுத்தியிருந்தார் அப்போது. அவர் “தேசிய ஐக்கிய முன்னணி” என்பதற்குப் பதிலாக. “முஸ்லிம் ஐக்கிய முன்னணி” என்றும், அப்படிப்பட்ட ஒரு முஸ்லிம் கட்சிக்கு எப்படி ஒரு பௌத்த துறவி தலைவர் ஆக முடியும் என்று திரிபுபடுத்தி பிரசாரம் செய்தார். மிகவும் சந்தர்ப்பவாத முனைப்பு அது.

தேசிய ஐக்கிய முன்னணிக்கு என்ன நடந்தது.

அஷ்ரப் அவர்களின்  மறைவோடு அந்த கட்சி மறைந்து போனது. ஆனால் அவர்  உயிருடன் இருக்கும் போதே அவரது கட்சியில் இருந்த சிலரது சுயநலன் காரணமாக ஒவ்வொருவர் கைகளுக்கு மாறி அவர் காலத்திலேயே அது சிதைவடையத் தொடங்கியிருந்தது. அவரின் மறைவுக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவ பிரச்சினை எழுந்தபோது முஸ்லிம் காங்கிரஸ் ஹக்கீம் கைக்கும், தே.ஐ.மு அஷ்ரப் அவர்களின் துணைவி பேரியல் அஷ்ரப் அவர்களின் கைக்கும் சென்றது. இன்றும் ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியாக அது தேர்தல் திணைக்களத்தில் உள்ளது. அசாத் சாலி அவர்கள் அந்த கட்சியின் தலைவராக தன்னை வெளிக்காட்டி வந்தபோதும். சட்ட ரீதியில் தேர்தல் திணைக்களத்தால் வேறெவரது கைகளுக்கும் வழங்கியதாக தெரியவில்லை.

பேரியல் அஷ்ரப் அவர்கள் தே.ஐ.மு சார்பில் பாராளுமன்றத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்தும் எறியப்பட்டார் பின்னர் அக்கட்சி இல்லாமலே போனது.
அஷ்ரப் அவர்களின் மறைவோடு நான் கட்சியிலிருந்து முழுமையாக வெளியேறினேன்.

அதன் பின்னர் உங்கள் அரசியல் செயல்பாடுகள்.

மஹியங்கன பிரதேசத்தை சூழ பல்வேறுபட்ட பொதுப்பிரச்சினைகள் எழுந்தன. குறிப்பாக விவசாயிகளின் பிரச்சினை. கூடவே 80களில் மகாவலி திட்டத்தினால் குடிபெயர்க்கப்பட்டவர்கள் பின்னைய காலங்களில் எதிர்நோக்கிய பல்வேறு சிக்கல்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தலை தூக்கியதால் எனது சேவைகளை அவர்களுக்காக தொடர்ந்து செய்தேன். இவற்றை மேற்கொள்ள அரசியல் அதிகாரம் தேவைப்பட்டது எனவே 2000 ஆண்டில் பிரதேச சபை தேர்தலில் சுயேட்சை குழுவொன்றை போட்டியிடச் செய்தேன். அதில் 102 வாக்குகளால் தோல்வியுற்றேன். அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு பிரதேச சபை தேர்தலில் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்காக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிடும் படி அழைப்பு வந்தது.

அந்த தேர்தலில் 3வது அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவாகி இன்று வரை பிரதிநிதித்துவம் செய்துவருகிறேன். ஆனால் எனக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக பல கூட்டங்களுக்கு கலந்துகொள்ள முடியாமல் போனதால் பதவியை இழக்கும் சந்தர்ப்பம் சில தடவைகள் நிகழ இருந்தது. அந்த கூட்டங்களுக்கு போவதற்காக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டபோதும்; அதையும் மீறி பொது பல சேனாவை சேர்ந்தவர்கள் அங்கு வந்து தாக்க முற்பட்டதை ஊடகங்களில் கண்டிருப்பீர்கள். இன்று இந்த பயங்கரவாதிகள் பகிரங்கமாக திரிகிறார்கள். அமைதியை விரும்பும் நாங்கள் மறைந்து வாழ்கிறோம்.

பொலிஸ் பாதுகாப்பில் உங்களுக்கு திருப்தி இல்லையா

பொலிசாரின் பாதுகாப்பில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. பல சந்தர்ப்பங்களில் அவர்கள் தீயவர்கள் பக்கமே நின்றார்கள். அது தெளிவானது.
உதாரணத்திற்கு 2013 ஓகஸ்ட் 19 அன்று கண்டியில் வைத்து பொது பல சேனாவை சேர்ந்த 30 பேர் எனது வாகனத்தை தாக்கி எனது கழுத்தைக் காயப்படுத்தினார்கள். கொழும்பு ஆஸ்பத்திரியில் எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களில் நான் அடையாளம் கண்ட சிலரது புகைப்படங்களைக் கூட  போலிசுக்கு வழங்கினேன். போலீசார் அதில் எவரையும் விசாரணை செய்யவோ கைது செய்யவோ இல்லை.

அதன் பின்னர் ஒரு நாள் ஓகஸ்ட் 31 அன்று வறக்காபொல ரஜமகா விகாரையில் இரவை கழித்தேன். அப்போது அங்காங்கு ஒளிந்து மறைந்து வாழ்த்த நாட்கள். அன்றிரவு ஒரு வேனில் வந்த கூட்டமொன்று சுற்றிவளைத்து என்னை கடத்திக் கொண்டு போக முற்பட்டபோது அவர்களிடமிருந்து தப்பி காட்டுக்குள், இருட்டில் பல தூரம் நடந்து அத்தனகல்ல சென்று பின்னர் ருவன்வெல்ல வந்து காலையில் பஸ்ஸில் ஏறி இறுதியில் மொனராகலையில் உள்ள எனக்கு தெரிந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியாரிடம் அடைக்கலம் புகுந்தேன். அன்று அந்த தேவாலயத்தில் எனது உடல் சகதியைக் கழுவி, நீராடியபின் அந்த பாதிரியாரின் பாதுகாப்பில் என்னை அவரது வாகனத்தில் கொழும்புக்கு அழைத்துச் சென்றார். இதனை நான் பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்யாமல் பொலிஸ் மா அதிபரிடமே முறையீடு செய்தேன். இந்த சம்பவத்தில் சம்பத்தப்பட்ட ஒருவரை அடையாளம் காட்டியிருந்தேன். அவர் வறக்காபொல Food cityயில் பணியாற்றும் போதுபலசேனாவின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் பிரபாத் தான் பிரதானமானவர் என்று நான் கூறியிருந்தேன்.இது வரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

அது போல இந்த வருடம் கொள்ளுபிட்டி தேவாலயமொன்றில் 2014 மே தினமன்று எனது உரையை ஆற்றிவிட்டு திரும்பும் வழியில் என்னை பின்தொடர்ந்த 302-2129 இலக்கமிடப்பட்ட கார் ஒன்று எங்களை போகுமிடமெல்லாம் தொடர்ந்து வந்தது. அப்போது என்னோடு  காவலுக்காக பொலிசாரும் என்னோடு இருந்தார்கள். எனது நிலைமையை ஜனாதிபதிக்கு விளக்கியதனால் எனக்கு கிடைக்கப்பெற்ற பொலிஸ் பாதுகாப்பு அது. அந்த பொலிசாரையும் சேர்த்துக்கொண்டு தான் நான் அதே தினம் தெமட்டகொட போலீசில் புகார் செய்தோம். இன்றுவரை அது குறித்த எந்த விசாரணையும் இல்லை. இது போல பல சம்பவங்களை கூறலாம்.

ஜனாதிபதி உங்களுக்கு அளித்த பொலிஸ் பாதுகாப்புக்கு என்ன நடந்தது.
கடந்த ஏப்ரல் 18ம் திகதி பத்தேகம சமித்த தேரோவுடன் சென்று நிலைமையை விளக்கி பாதுகாப்பு கேட்டோம். ஜனாதிபதி தனக்கு இத்தனை நடந்ததும் தெரியாது என்றும் உடனேயே எனக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கும் படியும் ஏற்பாடு செய்தார். ஆனால் இரண்டே மாதங்களில், அதாவது ஜூன் 7ஆம் திகதியன்று காலை போலீசார் ஒன்றுமே கூறாமல் ஆயத்தமாகிக்கொண்டு விடைபெற்றார்கள். சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி காமினி நவரட்ன அவர்களிடம் இது குறித்து வினவியபோது, மன்னியுங்கள் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு அது என்று கூறினார். மேலும் ஞானசார பல இடங்களில் ‘சிங்கள பெளத்தர்களுக்காக போராடும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை, ஆனால் ‘மொஹமட் வட்டாரக விஜித’வுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார். திரைமறைவில் அவர்கள் எனது பாதுகாப்பை நீக்க அழுத்தம் பிரயோகித்திருக்கலாம்.

அப்படியென்றால் பானந்துரையில் உங்களுக்கு நடந்த விபரீதம் அதற்குப் பின்னர் தான் நடந்ததா..?

ஆம், ஜூன் 19 அன்று அது நடந்தது. அடுத்த நாள் காலை பிரதேச சபை கூட்டத்திற்கு செல்வதற்காக தயாராக இருந்தேன். இரவு 10 மணிக்கு எனக்கு கொண்டுவந்து கொடுத்த கொக்கோகோலாவும் அப்பமும் கொண்டுவந்து தந்தார்கள். அதன் பின்னர் எனக்கு அடுத்த நான் மாலை 4 மணிக்குத்தான் பெரிய ஆஸ்பத்திரியில்  வைத்து உணர்வு வந்தது. அதன்போது தான் என் நிலை புரிந்தது. முதல் நாள் இரவு சமீர என்பவரின் வீட்டில் தான் இரவு இருந்தேன் என்பதையும் பொலிசாரிடம் கூறினேன்.

சமீர என்பவர் உங்களுக்கு நம்பகமானவரா?
அவர் எனது உறவினர். ஆனால் அவரது வீட்டுக்கு பின்புறம் அமைந்துள்ள விகாரைக்கு ஞானசார தேரர் உள்ளிட்டவர்கள் வந்து செல்வார்கள் என்றும் அந்த விகாரையை சேர்ந்தவர்கள் BBS செயற்பாட்டாளர்கள். எனவே சமீரவுக்கும் தொடர்புகள் இருந்திருக்கின்றன என்று தற்போது தெரியவந்திருக்கிறது.

இதனை செய்தவர் யார் என்று கூறமுடியுமா..?
அன்று இரவு என்ன நடந்தது என்று எதுவும் எனக்கு தெரியாது. எங்கே கொண்டு சென்றார்கள், என்ன செய்தார்கள், எப்படி காயப்படுத்தினார்கள், எப்படி என்னை கண்டெடுத்தார்கள். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றது எதுவுமே எனக்கு தெரியாது.

அப்படியென்றால் இதனை செய்தவர்கள் BBS இனர் என்கிற குற்றச்சாட்டு...?
என்னை தொடர்ச்சியாக பல முறை தாக்கியும், அச்சுறுத்தியும் வந்தவர்கள் அவர்கள் தான். அவர்களைத்தான் நான் குற்றம்சாட்ட முடியும். எனக்கு வேறெந்த எதிரியும் இல்லை. நிப்பொன் ஓட்டலில் வைத்து ஞானசார என்னை பார்த்து “உன்னை துண்டுதுண்டாக்கி ஆற்றில் வீசிவிடுவேன்” என்று எச்சரிக்கை செய்த சம்பவம் உலகமறிந்தது.

உங்களை நீங்களே காயப்படுத்திகொண்டதாக பொலிசார் கூறினார்களே.
இலங்கையில் நீதி எப்படி செயல்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமல்லவா. அளுத்கம சம்பவத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான இளைஞர்கள்; வெட்டுக்காயங்களுக்கு இலக்காகியே பலியானார்கள் என்று நீதிமன்ற வைத்தியாதிகாரியின் அறிக்கை கூறியது. பின்னர் இப்போது உண்மை நிரூபணமாகியுள்ளது. அளுத்கம சம்பவத்துக்கு காரணமான ஞானசார குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவு; கண்துடைப்புக்காக ஒரு நாள் விசாரணை செய்து விட்டுவிட்டது. அத்தோடு முடிந்தது விசாரணை. நிப்பொன் ஓட்டலில் மேற்கொண்ட அடாவடித்தனம், உயிர் அச்சுறுத்தல் குறித்து ஆதாரங்களுடன் முறையீடு செய்தும் எந்தவித வழக்கும் தொடுக்கப்படவில்லை.

என்னைப் பொறுத்தளவில் அரசாங்கம் அவர்களை தங்களது தேவைக்கு பயன்படுத்திக்கொள்கிறது. எனவே அவர்களை சகல இடங்களிலும் பாதுகாக்கிறது. எதை செய்வதற்கும் அனுமதியளித்திருக்கிறது. இது எதிர்கால இன,மத ஐக்கியத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் பெரும் சவால்.

எனது சம்பவத்திலும் கூட; அன்று சமுர்த்தி அதிகாரி தன்னை தானே மரத்தில் கட்டிக்கொண்டதைப் போல எனது கதையையும் முடித்துவிட நடந்த சூழ்ச்சி இது. நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு என்பதால் சில விடயங்களை தற்போதைக்கு வெளிப்படுத்த என்னால் முடியாது.

ஆனால் நீங்கள் தான் அப்படி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறுகிறார்களே.

ஆஸ்பத்திரியில் எனக்கு ஒருபுறம் எனக்கு சிறுநீர் கழிப்பதற்க்காக குழாய் பொருத்தியிருந்தார்கள், மேலும் செலைன் கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது, அதைவிட கட்டுக்கள் போடப்பட்டிருந்தன. உடல் ரீதியிலும், உலா ரீதியிலும் சோர்ர்வுற்றிருந்தேன். அப்படியிருக்க அன்று குற்றப்புலனாய்வினர் சமீரவின் குழந்தை, தாயார், மற்றும் பலரையும் ஏற்றிக்கொண்டுவந்தார்கள். அவர்கள் எனது உறவினர். அவர்கள் என்னை சுற்றி அழுது கதறினார்கள். சமீரவை சிறைசெய்திருக்கிறார்கள், குழந்தைகள் உணவருந்தவில்லை, மாமாவுக்கு பிரஷர் ஏறிவிட்டது, நாங்கள் சாகப்போகிறோம், மகனை விடுதலை செய்ய ஏதாவது செய்யுங்கள் என்றும் குற்றப்புலனாய்வினர் ஒருபுறம் இருக்கையில் கதறினார்கள். இப்படி இரு நாட்களாக என்னை வற்புறுத்தினார்கள். இறுதியின் நான்; சமீர இதற்கு பொறுப்பில்லை, எனது உறவினர் அவர், அவரில் எனக்கு நம்பிக்கை உள்ளது, அவரை விடுவியுங்கள் தேவைப்பட்டால் என் மீது வழக்கு தொடுங்கள் என்று பொலிசாரிடம் கூறினேன். இதனை சந்தர்ப்பமாக பாவித்து போலீசார் எனக்கு எதிராக முழுமையாக இறங்கினார்கள். ஆனால் நீதிமன்றத்தில் சகல உண்மையையும் வெளியிட்டேன்.

நீங்கள் அரசாங்கத்தின் அரசியல் பிரதிநிதியாக இருந்தும் அரசாங்கம்; அரசாங்கத்துக்கு வெளியில் உள்ள தரப்பை சார்ந்திருகிறார்களா...

நான் பிரதேச சபை உறுப்பினராக இருந்ததற்கென்ன; பேரளவில் ஆளும்கட்சியை சேர்ந்தவனாக இருக்கிறேன். அரசாங்கத்தின் தூதுவனாகவோ அவர்களின் அரசியலை பிரதிநித்துவபடுத்தவோ இல்லை. என்னை விட BBS அரசாங்கத்துக்கு அவசியப்படுபவர்களாக உள்ளார்கள். அதனால் தான் என் தரப்பில் நியாயங்கள் இருந்தும் BBS க்கு எதிராக எந்த சட்ட பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கத்தின் இந்த போக்கு குறித்து எனது எதிர்ப்பையும் வெளிக்காட்டி வந்திருக்கிறேன்.

இந்த BBS பயங்கரவாத உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஒரு வருடகாலமாக சிங்கள பௌத்த; அதிலும் பிக்கு ஒருவர்  நாடெங்கும் ஓடியும் ஒளிந்தும் இருக்க தள்ளப்பட்டிருக்கிறேன்.

உங்களுக்கு ப்ரஹ்ம தண்டயளித்து சங்க சபையிலிருந்து நீக்கி விட்டதாக ஞானசார கூறுகிறாரே.

நான் சியம் நிகாயவை சேர்ந்தவன். 21 பேரைக்கொண்ட சங்க சபையொன்று உள்ளது. ஏதாவது குற்றம் சுமத்தப்பட்ட பிக்குமார்களை விசாரிப்பதும், தீர்ப்பு வழங்குவதும் அங்கு தான். ஒருவரை நீக்குவதும் அங்கு தான். புத்தரின் போதனைகளின் படி இது மிகவும் ஜனநாயக ரீதியில் இது மேற்கொள்ளப்படும். ஆனால் ப்ரஹ்ம தண்டனை என்றெல்லாம் இப்போது அளிக்கப்படுவதில்லை.
ஞானசார ஜூன் 21 அன்று மஹியங்கனையில் ஒரு கூட்டத்தை கூட்டினார். அங்கு சில பிக்குமார் BBS உடன் இணைந்துகொண்டார்கள். இந்த பிக்குமார் மஹியங்கனையில் உள்ள ஒரு நலன்புரி சங்கமொன்றில் உறுப்பினர்கள். ஆக, இலங்கையிலுள்ள பல ஆயிரகணக்கான நலன்புரி சங்கங்களில் இதுவும் ஒன்று. பதுளை மாவட்ட BBS தலைவர் தான் அதன் தலைவர். இவர்கள் கூடி கையெழுத்திட்டது தான் எனக்கு எதிரான ப்ரஹ்ம தண்டனை. இது ஒரு கேலிக்கூத்து இல்லையா. இவர்கள் யார். இவர்களுக்கு யார் இந்த அதிகாரம் வழங்கியது. சங்க சபையில் வழங்கப்படும் பிரஹ்ம தண்டனை கூட இரண்டு அதிகபட்சம் மாதங்கள் தான். இதில் அப்படி எதுவும் சொல்லப்படவில்லை. என்னை அசிங்கப்படுத்துவது தான் இதன் ஒரே நோக்கம்.

BBS இன் அரசியல் போக்கு குறித்து
வரலாற்றில் இதற்கு முன்னரும் இனவாத இயக்கங்கள் தோன்றி மறைத்திருக்கின்றன. ஆனால் BBS போன்ற அரசாங்கத்தின் அதிக ஆதரவுள்ள அதி பயங்கர அமைப்பு இருந்ததில்லை. நாம் 30 வருட யுத்தத்தின் விளைவை கடந்து வந்திருக்கிறோம் அப்படிப்பட்ட நிலையில் தற்போது அழுத்கமையில் பேரவலம் நிகழ்ந்தது. அங்கு ஒரு வருடமாகவே பெட்ரோல் ஊற்றப்பட்டு வந்தது. ஒரு தீப்பொறி ஒன்று மட்டும் தான் தேவைப்பட்டது. ஞானசார அந்த தீப்பொறியை வைத்தார்.  பொலிசாரும், படையினரும் பார்த்துக்கொண்டிருக்க அது நிகழ்ந்தது. இன்று முஸ்லிம்களுக்கு; நாளை கத்தோலிக்கர்களுக்கு எதிராகவும் தயார்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்கள் புண்படும் வகையில் சகலதும் நிகழ்கின்றன. அன்று ஆப்கானிஸ்தானில் பாமியன் சிலைகள் தகர்க்கப்பட்டபோது முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம் அமைப்புகளும் எம்மோடு கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டார்கள். ஆனால் இவர்கள் இன்று பல சிங்கள பௌத்தர்கள் மத்தியில் மோசமான வெறுப்புணர்ச்சியை வளர்த்துவிட்டுள்ளார்கள்.

இலங்கையில் முஸ்லிம் பயங்கவாதம் என்கிற ஒன்று இல்லை. ஆனால் மத்திய கிழக்கிலுள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு ஞானசார அழைப்பு விடுக்கிறார். உங்கள் இனத்தை நாங்கள் அழிக்கிறோம், வாருங்கள் அவர்களை விடுதலை செய்யுங்கள் என்று ஞானசார அழைக்கிறார்.

ஞானசார தேரோவின் சமகால அரசியல் பாத்திரம் குறித்து...

நிச்சயமாக நீண்டகால அரசியல் உள்நோக்கத்தோடு இயங்குகிறார்கள். ஆனால் பல பொய்கள் கூறி மக்களை வழிநடத்துகிறார்கள். நிப்பொன் ஓட்டலில் வைத்து அவரது ஐபேட் ஆல் என்னை தாக்க முற்பட்டார். எனது காவியுடையை இழுத்தார். முகத்தை நோக்கி அடிக்க அடிக்க பாய்ந்தார். அப்போது சாராய வாசனை அவரிடமிருந்து வந்தது. மேடைகளில் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுக்களின் பின்னால் அவரது குடிபோதையும் இருக்குமென்று நம்புகிறேன். ஒரு சாதாரண மனிதன் பேசத் தயங்கும் வார்த்தைகளைக் கூட காவியுடை அணிந்து பேசுகிறார். கௌதம புத்தர் கூறுவார் “புஷ்ப பாணி” என்று. அதாவது பௌத்த துறவிகள் பூவைப் போன்ற மென்மையாக பேசவேண்டும். அதுபோல ஞானசார தேரர் போன்றோர் பேசுவதை “கூத்த பாணி” என்பார். அதாவது “கக்கூஸ் வாய்” என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு லட்சம் பேரை பிக்குவாக மாற்றுவதாக கூறினார். சாசனத்துக்கு தகுதியற்ற 40 பேரின் காவியுடைகளை கழற்றியாதாக கூறினார். எதுவும் நடக்கவில்லை. அதனை செய்ய இவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ‘அரசியல் என்பது குப்பை,... சாக்கடை அதற்குள் ஒருபோதும் வரப்போவதில்லை’ என்றார். ஆனால் 28ஆம் திகதி நடத்தப்போகும் மாநாட்டில் “ஜனாதிபதி வேட்பாளரை விதைப்போம்” என்கிறார். பல அரசியல் முன்மொழிவுகளை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறார். அது இந்த நாட்டிலுள்ள அனைத்து சிறுபான்மை இனங்களதும் உரிமைகளைப் பறிக்கின்ற, அவர்களை அரசியல் நீக்கம் செய்கின்ற ஒரு திட்டமாகத்தான் நிச்சயமாக இருக்கும். அதனை பார்க்காமலே என்னால் நிராகரிக்கமுடியும். எதிர்கால ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற பாத்திரத்தை இவர்களால் வகிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.

நாட்டில் இன்று மக்கள் முகம் கொடுக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து எதுவும் கதைப்பதில்லை.

அவர்கள் மாநாட்டுக்காக 7000 பிக்குமாரை எதிர்பார்க்கிறார்கள். அவ்வளவு பேர் வரமாட்டார்கள் என்பது என் கணிப்பு. கணிசமானோர் இருந்தாலும் காவி நிறத்தை மேற் தோற்றத்தில் பார்த்ததும் பெருமளவு தோன்றும். எவ்வளவு பேர் வந்தாலும் இது சரியான ஒரு போக்கு அல்ல. மகாநாயக்கர்களே கூறினாலும் கூட இதனை நான் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன். மக்களை நாசம் செய்யும் ஔ பயணம் இது. இது நரகத்துக்கு இட்டுச்செல்லும் பாதையை இவர்கள் திறக்கிறார்கள். எப்படி நாசம் செய்வோம் என்பதையும் அழுத்கமையில் ஒத்திகை பார்த்தார்கள்.

தமிழ், முஸ்லிம்கள் இன்று இலங்கை என்கிற தமது நாடு தமக்கு இல்லாமல் போகிறது என்கிற எதிர்கால அச்சத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள். எனக்கு தெரியும் சில முஸ்லிம் இனத்தவர்கள் தமது கலாசார ஆடைகளை அச்சம் கருதி தவிர்க்க தொடங்கியிருகிறார்கள். அடையாளத்தை மறைத்து வாழ கற்றுக்கொள்ள தள்ளப்பட்டுள்ளார்கள். பதுளையில் BBS கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டபோது “கடைகளுக்கும், டியுசன்களுக்கும் பெண் பிள்ளைகளை பர்தா அணிந்து செல்ல விடவேண்டாம். வீடுகளிலேயே இருங்கள் என்று அங்குள்ள பள்ளிவாசலில் மௌலவி அறிவித்தார். மிகவும் அவலகரமான நிலை இது.

மஹியங்கனையில் சிங்கள முஸ்லிம் உறவு நன்றாக இருந்தது. சேர்ந்து உழைப்பில் ஈடுபட்டார்கள். ஆனால் அங்கு இவர்கள் இனவாத தீயை மூட்டிவிட்டு வந்தார்கள். இன்று ஆளை ஆள் சந்தேகம் கொண்டு பார்க்கிறார்கள்.

சிங்கள பௌத்த ராஜ்யத்தை உருவாக்குவோம் என்றே மாநாட்டு விளம்பரங்களில் உள்ளது..!!?

ஜனாதிபதி, ஆளும்கட்சி பிரமுகர்கள், பொலிஸ் அதிகாரிகள், பிக்குமார் என்போர் முஸ்லிம்களின் இப்தார் நிகழ்வுகளை நடத்துவதும், அவற்றில் கலந்துகொள்கின்ற செய்திகளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டிருப்போம். அவை வெறும் கண்துடைப்பு. இதில் எந்த உண்மையோ பயனோ கிடையாது.. வெறும் நடிப்பு. இன்று முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளவேண்டியவை எவ்வளவோ இருக்கிறது.

சகல உயிரினங்களையும் காக்க வேண்டும் என்கிற பௌத்த போதனையை பிக்குமார் ஏற்றுக்கொள்ளும்போது; தமிழ், முஸ்லிம் இனங்களதும் ஒத்துழைப்பின்றி அதனை சாத்தியப்படுத்துவது எவ்வாறு. அதற்க்கு மாறாக சிங்கள பௌத்த மக்களின் தலைகளில் விஷமேற்றி, ஏனைய இனங்கள் மீது வெறுப்புணர்ச்சியையும், எதிர்ப்புணர்வையும் தூண்டி வருகிறார்கள். ஞானசார சமீபத்தில் கூட “தலைக்கு மேலால் பறந்து போய்விடுங்கள் பரவாயில்லை. எங்கள் தலைகளில் வந்து கூடு கட்ட முயல வேண்டாம்” என்று எச்சரித்திருந்தார்.

மகாத்மா காந்தி சொன்னார் ... “இனவாதமென்பது நாட்டையும் மக்களையும் அழிப்பதோடு நில்லாது அதற்கு தூபமிட்ட சக்திகளும் சேர்ந்து தான் அழிந்து போவார்கள்.” என்று. 



விறாத்துவின் வருகை: முஸ்லிம்களின் கழுத்துக்கு வந்துள்ள கத்தி - என்.சரவணன்


இறுதியில் பல்வேறு சலசலப்புகளுக்குப் பின் விறாத்து இலங்கை வந்து சேர்ந்தாகிவிட்டது. விறாத்துவின் வருகை சாதாராணமான ஒன்றல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கையில் முனைப்பு பெற்றிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத நடவடிக்கைகளுக்கு தத்துவார்த்த பலத்தை கொடுத்ததும் விறாத்து தான். BBS க்கு முன்னுதாரண தலைவராக விளங்குவதும் விறாத்து தான்.

மியான்மாரை சேர்ந்த 969 என்கிற அமைப்பின் ஸ்தாபகரும் அதன் தலைவருமான அஸின் விறாத்து என்கிற பௌத்த துறவி இன்று உலகம் முழுவதும் பிரபலமான பௌத்த பயங்கரவாதி. சென்ற வருடம் TIME சஞ்சிகை தனது பிதான அட்டைப்படக் கட்டுரையாக  “பௌத்த பயங்கரவாதத்தின் முகம்” «The Face of Buddhist Terror» என்கிற கட்டுரையை வெளியிட்டது. அந்தக் கட்டுரையில் விறாத்து ஒரு பௌத்த பின்லாடன் என்று வர்ணித்திருந்தது. அந்த சஞ்சிகையின் 400 பிரதிகளை இலங்கை சுங்கத்திணைக்களம் தடை செய்தது. 30 ஜூன் ஆங்கில ஊடகங்கள் பல வெளியிட்ட செய்தியின்படி பொதுபல சேனாவின் வேண்டுகோளுக்கமைய அது தடைசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

டைம்ஸ் கட்டுரையைத் தொடர்ந்து பர்மிய ஜனாதிபதி தைய்ன் சைன் (Thein Sein) விறாத்துவுக்கு பூரண பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்திருந்தார். 969 இயக்கத்தை பாதுகாப்பதற்கூடாக பௌத்த மத நலன்களை தாம் பாதுகாப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கொன்றொழிப்பதற்கு காரணமான இந்த 969 இயக்கத்துக்கும் பொதுபல சேனாவுக்கும் உள்ள ஒற்றுமைகள் வெறும் தற்செயலல்ல. அவற்றின் இலக்கு, அரசியல் முழக்கம், அமைப்பு வடிவம், கொள்கைபரப்பு முறைகள், வன்முறை வடிவங்கள் என அனைத்தும் சிறிதும் மாற்றமில்லாத ஒற்றுமை உண்டு.

‘969’ முஸ்லிம் அழித்தொழிப்பு

கடந்த ஜூன் 15 ஆம் திகதி அழுத்கமையில் பொது பல சேனா பின்னணியில் நடத்திமுடிக்கப்பட்ட இன வன்முறை ஒரு ஒத்திகை தான் என்று கூறியிருந்தோம். பொது பல சேனா பயங்கரவாத நடவடிக்கைக்காக விசேடமாக உருவாக்கிய முன்னணி அமைப்பு கூட “மகாசென் 969” என்கிற பெயரெ சூட்டப்பட்டிருந்தது. இங்கு குறிப்பிடத்தக்கது. 

கடந்த வருடம் மார்ச் 20 அன்று மியான்மாரில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான ஒரு நகைக்கடையில் பௌத்த மதத்தை சேர்ந்த ஒருவருடன் வாய்த்தகராறு நடக்கிறது. வாய்த்தகராறில் ஈடுபட்டவருக்கு ஆதரவாக பௌத்த மதத்தை சேர்த்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள். சில மணித்தியாலங்களில் அந்த கடை அடித்து சேதமாக்கி அழிக்கப்படுகிறது. இதன் விளைவாக ஒரு பௌத்த பிக்கு எரிக்கப்பட்டுவிடுகிறார்.

இதை சாட்டாக வைத்து முஸ்லிம்கள் மீது மோசமான இன அழித்தொழிப்பு நடந்தேறியது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தேடித்தேடி கொல்லப்பட்டார்கள். அவர்களின் சொத்துக்கள் உடைமைகள் சூறையாடப்பட்டன. பெண்கள் பாலியல்வல்லுவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பல்லாயிரகணக்கானோர் உடமைகளை இழந்து இடம்பெயர்ந்தார்கள். இராணுவம் ஊரடங்கு சட்டம் பிறப்பித்தது. அந்த ஊரடங்கு சட்டம் தம்மை பாதுகாக்கும் என்று நம்பினார்கள் முஸ்லிம்கள். ஆனால் அவர்களை தமது பகுதிக்குள் முடங்கச் செய்து முஸ்லிம்களை வேட்டையாட காடையர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இனப்படுகொலையும், சொத்துக்கள் அழித்தொழிப்பும் சுலபமாக நடந்தேறின. இராணுவமும், போலிசும் தமது மறைமுக ஆதரவை வழங்கின. இதனை நிகழ்த்த மியன்மார் அரசு பூரண அனுசரணையை வழங்கியது.
"..உங்கள் இனத்தையும் மதத்தையும் காத்துக்கொள்ளுங்கள். 786 என்று பதித்தவற்றை வாங்காதீர்கள். அவை "ஹலால்". முஸ்லிம்களுடன் திருமண, வியாபார, நட்பு எந்தவித உறவையும் வைத்துக்கொள்ளாதீர். மியன்மார் ஒரு முஸ்லிம் நாடாவதை தடுப்பது எல்லோரதும் பொறுப்பு,.."
இதனை தலைமையேற்று நடத்தியது யார் என்று நினைக்கிறீர்கள். “969 இயக்கம்”. மேற்படி சம்பவம் நடப்பதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் மியன்மார் அரசு முஸ்லிம்களை திட்டமிட்டு இனச்சுத்திகரிப்பு செய்வதற்காக ஒரு நடவடிக்கை எடுத்தது. அங்கிருக்கும் வங்காள முஸ்லிம்களை (பங்களாதேஷ் பிரச்சினையின் போது இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் இவர்கள்) நாடுகடத்துவது அந்த திட்டங்களில் ஒன்று. இதனை ஆதரித்து ஆயிரகணக்கான பௌத்த பிக்க்குளைத் திரட்டி “969 இயக்கம்” பாரிய பேரணியொன்றை நடத்தியது. அந்த கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பௌத்தர்களின் நிலம் பறிபோகிறது, முஸ்லிம்களுடன் கலப்புமணம் புரிந்து பௌத்தர்களின் தூய்மை கெடுகிறது. முஸ்லிம்கள் பல்கிப் பெறுகிறார்கள். இஸ்லாமிய கடைகளில் பொருட்கள் வாங்குவதை புறக்கணியுங்கள். தேசத்தின் உடனடி பிரச்சினை மதத்தையும், இனத்தையும் காப்பதே என பிரச்சாரம் செய்தார்கள். துண்டுபிரசுரம் கொடுத்தார்கள்.

விறாத்துவின் பௌத்த உபதேச கூட்டங்கள் கவர்ச்சிகரமானது என்று சென்றவருடம் ஜூன் மாதம் தோமஸ் புல்லர் (THOMAS FULLER) என்பவர் எழுதிய கட்டுயோன்று NYtimes வெளியானது.
“...ஒரு பிரசித்திபெற்ற பாடகருக்காக கூடும் ரசிகர்களைப்போல அவரை சுற்றி அணி திரள்கிறார்கள். தான் ஒரு தீவிரவாத பௌத்தன் என்பதை சொல்லிக்கொள்ள தயக்கமில்லை என்றும் பௌத்தர்கள் பலவீனப்பட்டால் இந்த தேசம் முஸ்லிம்களின் தேசமாகிவிடுவதை தடுக்க முடியாது...”
என்று அவரது பேட்டியில் வெளியிட்டிருந்தார்.

விறாத்துவின் உபதேசங்கள் அடங்கிய டிவிடிக்கள் நாடுமுழுதும் வேகமாக விற்றுத்தீர்க்கின்றன.

“969 இயக்கம்” இயக்கம் துணிச்சலாக முஸ்லிம் இனச்சுத்திகரிப்பை மதத்தின் பேரால் நிறைவேற்றி வருகிறது. அங்குள்ள பௌத்தர்கள் பலர் அவர்கள் செய்வது சரி என்று நம்புகிறார்கள். அரச அனுசரணையுடன் அந்த இயக்கம் இன்று நாட்டுக்குள் மாத்திரமல்ல சர்வதேச அளவில் பௌத்த வலைப்பின்னலை பலமாக ஏற்படுத்தி வருகிறது.

இப்போது மேற்படி நிகழ்வுகளை அப்படியே இலங்கைக்கு பொருத்தி கண்முன் கொணருங்கள் அப்படியே அச்சில் வார்த்தாற்போல மியான்மார் சம்பவமும் சமீப கால இலங்கை நிகழ்வுகளும் அதன் தொடர்ச்சியான அளுத்கம சம்பவமும் அப்படியே பொருந்தும்.

“969” என்பது பௌத்த அடிப்படை மூலங்களைக் குறிக்கும் எண்கள் அவை பௌத்தம், தர்மம், சங்கம். எனவே இந்த “969” என்கிற நாமத்தை முதன்மைபடுத்த பௌத்தர்களுக்கு அறைகூவல் விடுக்கின்ற சுலோகங்களை உலக பௌத்தர்களுக்கு விரிவாக்குகிறது இந்த இயக்கம்.

இதன் நீட்சி தான் இன்றைய பொதுபல சேனாவின் துணிச்சல்மிக்க நிகழ்ச்சிநிரல்.

“969 இயக்கம்” பொதுபல சேனா சந்திப்பு


இந்த வருடம் மார்ச் மாதம் 4ஆம் திகதி பொதுபல சேனாவின் தலைவர் ஞானசார தேரர் மியன்மார் சென்று “969 இயக்கம்” இயக்கத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது ஒன்றும் தற்செயல் நிகழ்வல்ல.  969 இயக்கத்தின் தலைவர் அஸின் விராத்து ஞானசாரவுக்கு பிறந்த நாள் பரிசொன்றையும் வழங்கினார். பொதுபல சேனாவின் இணையத்தளத்தில் “969 இயக்கத்தின் வலைப்பின்னலுடன் பொதுபல சேனா இணைக்கப்பட்டது” என்கிற செய்தி ஞானசார ஆவணமொன்றில் கைச்சாத்திடும் புகைப்படமொன்றுடன் கடந்த மே மாதம் வெளியிட்டிருந்தது. ஞானசாரவை அங்கு அழைத்துச் சென்றவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. மியன்மாரில் நடத்தப்பட்ட BIMSTEC மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவரின் குழுவில் ஞானசாரவையும் உள்ளடக்கியிருந்ததாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்பம் குறித்த மாநாடொன்றில் ஞானசார உட்பட பொதுபல சேனா தலைவர்களையும் அழைத்துச் சென்றது எதற்கு என்கிற கேள்வி எழுகிறது.




இந்த சந்திப்பின் பின் நாடு திரும்பிய ஞானசார தனது வேலைத்திட்டங்களை தீவிரப்படுத்துகின்றார். 969 இயக்கத்தின் செயற்பாடுகளின் வெற்றி பொதுபல சேனாவுக்கு முன்னுதாரணமாக ஆகிறது. முன்னைய நிகழ்ச்சிநிரல் புதிய பரிமாணம் பெறுகிறது. பல பினாமி பெயர்களில் முன்னணி அமைப்புக்களும், ஊடகங்களும் ஆரம்பிக்கப்படுகின்றன. 

“மகாசென் 969”

விறாத்துவின் வழியில் “மகாசென் 969” (*) (மகாசேனன்) என்கிற அமைப்பு ஆரம்பிக்கப்படுகிறது. இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு சிவசேனா போல பொதுபல சேனாவுக்கு “மகாசென் 969”. ஆனால் பொதுபல சேனா இப்படியான பெயர்களை நிரந்தரமாக வைத்திருப்பதில்லை என்று அதன் வளர்ச்சியை அவதானிக்கும் போது தெரிகிறது.

இந்த 969 இயக்கமே 15ஆம் திகதி அழுத்கமவில் கட்டவிழ்த்த காடைத்தனத்தை ஒழுங்கமைத்தது என்று தெரியவருகிறது. 17ஆம் திகதி இன்னொரு நடவடிக்கைக்கும் தயாராகும் வகையில் அது ஒரு துண்டுபிரசுரத்தை வெளியிட்டிருந்தது.  அந்த துண்டுபிரசுரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ரணில் அன்றைய தினம் பாராளுமன்றத்தில் வைத்து; குறித்த துண்டுப்பிரசுரத்தை வாசித்து கட்டியதுடன், “...போலீசார் இதற்கு அனுமதியளித்திருப்பதாக அறியக்கிடைத்துள்ளது. எனவே இதனை நான் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். தயவு செய்து இதனை உரிய முறையில் தடுத்து நிறுத்துங்கள். இந்த நிலை தொடர்ந்தால் இந்த நாட்டுக்கு பெரும் சேதமுண்டாகும். பௌத்தர்கள்களாகிய நாமும் தலைகுனிய நேரிட்டுள்ளது...” என்று எச்சரிக்கை செய்தார். அதனைத் தொடர்ந்து மாவனெல்லையில் நடத்தப்படவிருந்த பேரணி பொலிசாரால் தடை செய்யப்பட்டது. 

மகாசென் 969 துண்டுபிரசுரத்தில்

“15ஆம் திகதி பிற்பகல் முஸ்லிம் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான பிக்குகள் உள்ளிட்ட பௌத்தர்கள் இன்னமும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பௌத்த விகாரைகளுக்கும் சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன.
தேசப்பற்றுள்ளவர்களே பௌத்த சீருடைகளுக்கு கை வைக்குமளவுக்கு எதிரிகள் விளைந்துள்ளார்கள். கௌரவம், பயம், வெட்கம் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. இது சிறு விடயமல்ல நாளை நம்மெல்லோரையும் பாதிக்கப்போகும் விடயம்.
இது நம் சிங்கள நாடு
நாம் பிறந்து... இறக்கும் நாடு...
இதற்கு எதிராக மாவனல்லை நகரத்தில் நடத்தப்படும் விசேட சத்தியாகிரகம் நடக்கவிருக்கிறது.
தேசத்தின் இக்கட்டான காலப்பகுதியில் உங்களனைவரையும் அழைக்கிறோம்.”

-“மகாசென் 969”-

இந்த “மகாசென் 969” என்கிற பெயரில் வெளியிடப்படுபவை வன்முறைக்கான ரகசிய அழைப்பாக கருதப்படுகிறது. இந்த வகை அழைப்பே 15ஆம் திகதியும் அழுத்கமவில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் சமீபத்தில் “மகாசென் 969” பெயரில் எந்தவித செயற்பாடுகளும் அறியக்கிடைக்கவில்லை. 

விறாத்துவுக்கு விசா வேண்டாம்


கடந்த 25ஆம் திகதி ஞானசார தேரோ ஊடகங்களிடம் யாரும் எதிர்பார்க்க முடியாத முக்கிய வெளிநாட்டு பிரமுகர்கள் எல்லாம் வரவிருக்கிறார்கள். என்று ஒரு நமட்டு சிரிப்புடன் தெரிவித்தபோது அந்த பிரமுகர்கள் யார் என்று அறிய அதிக ஆவல் இருந்தது. விறாத்து தான் மாநாட்டுக்கு தலைமை தாங்க வருகிறார் என்கிற செய்தி கடந்த 26 அன்று கசிந்ததும் மீண்டும் ஞானசாரவிடம் அது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பின.






"...வெளிநாடுகளிலிருந்து பலருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். எதிர்ப்பு தெரிவித்திருக்கும் முஸ்லிம் கவுன்சிலுக்கு என்ன சொறிச்சலா... இது சிங்கள பௌத்தர்களின் நாடு. எங்களுக்கு தேவையான பௌத்தர்களை இந்த நாட்டுக்குள் கொணர எங்களுக்கு முடியும். யார் இவர்கள்... மாநாடு முடிந்ததும் ஒரு கை பார்த்துக் கொள்வோம்..."

என்று ஞானசார தேரர் எச்சரிக்கும் ஒலிப்பதிவும் இணையத்தளமொன்றில் வெளியானது. அதே தினம் பல அமைப்புகள் கையெழுத்திட்டு விறாத்துவுக்கு விசா வழங்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தது.

முஸ்லிம் எதிர்ப்பின் மூலம் மனிதப் பேரழிவை நடத்திய இவர் போன்றோர் இலங்கைக்கு வருவது இன ஒற்றுமைக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கும் என்றும், விறாத்துவின் இனவாத பேச்சு நாட்டில் மேலும் பிளவுகளை உருவாக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்படிருந்தது.

இலங்கை ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மத உரிமைகள் சங்கம், கொழும்பு மாவட்ட மஸ்ஜித் பேரவை, வணபிதா சக்திவேல் – புனித மரியாள் தேவாலயம் உள்ளிட்ட அமைப்புக்கள் இதில் கையெழுத்திட்டிருந்தன. இக்கடிதம், ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், குடியகல்வு குடிவரவு திணைக்களம் ஆகியனவற்றுக்கு அவரசமாக அனுப்பப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் குறைந்த பட்சம் அரச தரப்பில் இருந்து எந்த பதிலும் தரப்படவில்லை.

வெளிநாட்டில் வாழும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் மீள நாட்டில் வந்து சுதந்திரமாக கருத்துகூறுவது தடை செய்யப்பட்ட நாட்டில்; அவர்களை நாட்டின் இன ஒற்றுமையை சீர்குலைத்தவர்கள் என்கிற குற்றசாட்டின் பேரின் நாடு கடத்தப்படும் நாட்டில்; பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கொல்வதற்கு காரணமான ஒருவரை, அதுவும் உலகம் முழுதும் பௌத்த பயங்கரவாதி என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒருவரை அனுமதித்ததானது இன்னொரு பாரிய இன அழிப்புக்கான அரசின் ஆசீர்வாதத்தையே காட்டுகிறது. அழுத்கமையில் முஸ்லிம்கள் மீதான பௌத்த பயங்கரவாத அவலம் நடந்து மூன்று மாதங்களே ஆன நிலையில் பாரிய ஒரு தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருதையே இவை உணர்த்துகிறது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த மாநாடு

பொதுபல சேனாவின் இந்த மாநாடு “மகா சங்க பேராளர் மாநாடு” என்று அழைக்கப்படுகிறது. மாநாட்டுக்கு 7000 பிக்குமார் வருவது உறுதியாகியிருக்கிறது என்று ஞானசார அறிவித்தார். அவர்களின் நூற்றுகணக்கான ஆதரவு இணையத்தளங்களிலும், பினாமி ஊடகங்களிலும் பாரிய சுவரொட்டி, துண்டுபிரசுர பிரசாரங்கள் செய்யப்பட்டுவந்தன. சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியையும், வெறுப்புணர்ச்சியையும் கக்கும் வகையில் நாளுக்கு நாள் புதிய புதிய முழக்கங்கள் வெளியிடப்பட்டுவந்தன.

(முஸ்லிம் வெறுப்புமிக்க விறாத்துவின் ஒரு பேட்டி - ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்ப்புடன்)

வரலாற்றில் இந்தளவு பிக்குமாரை எந்தவொரு சக்திகளாலும் செய்யமுடியவில்லை. முதன்முதலில் அந்த வரலாற்று ஒன்று கூடலை செய்கிறோம் என்றார். அரசாங்கத்தின் ஆதரவு, பௌத்த பெருமுதலாளிகளின் ஆதரவு, பௌத்த சமய மற்றும் சமூக நிறுவனங்களின் ஆதரவு என திரட்டியதும், தம்மோடு இணையாவிட்டால் தனிமைப்பட்டுபோவீர்கள் என்கிற மறைமுக மிரட்டலினால்; ஏற்கெனவே பின்வாங்கிய பௌத்த சக்திகளும் இதில் ஒன்றிணைந்துள்ளனர். மூன்று நிகாயக்களின் மகா நாயக்கர்களும் இதில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

மாநாட்டு பரப்புரைக்கான தனித் தனி விளம்பரங்களிலிருந்து

  • “சிங்களத்தின் எதிர்காலத்தை காண வாருங்கள்...”
  • “சிங்கள பௌத்த ராஜ்யத்தை அமைப்பதற்கான வேலைத்திட்டத்துடன் நாங்கள் 28 அன்று வெளியிறங்குவோம்.”
  • “சிங்களவர்களின் ‘முடி’ யாருக்கு” 28 வாருங்கள்
  • “பௌத்த கொள்கையுடனான தேசியத் தலைவர் ஒருவரை கண்டடைவதில் இதுவரை சிரமமிருந்திருக்கலாம் பொது பல சேனாவிடம் தேசியத் தலைவர் இருக்கிறார் என்பதையும் அது யார் என்பதையும் 28 தெரிந்து கொள்ளலாம்”
  • “...14 வயதிலேயே தீட்சை பெற்று அனைத்தையும் துறந்து அனைத்து கஷ்டங்களையும் எங்களுக்காக எதிர்கொண்ட ஞானசாரரே உங்களுக்கு தேசத்தின் நமஸ்காரம்..”
  • “...பௌத்த துறவிகளே 28 முக்கியமான நாள். நீங்கள் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும். நாம் எமாளிகலானது போதும். அப்படியென்றால் இந்த உடலுக்கு உயிரூட்ட இணையுங்கள்..”
  • “...அடிப்படைவாதத்தை தோற்கடித்து நாட்டை கட்டியெழுப்ப வலி சொல்லும் வரலாற்றுப் பொறுப்பை நிறைவேற்ற மகா சங்க மாநாடு...”
  • நாட்டுக்கும், இனத்துக்கும் உரிய தலைவரின் அவசியத்தை நாடு வேண்டிநிற்கிறது. அது யார் என்பதை 28 தெரியப்படுத்துவோம்...”
  • “...சிங்கள பௌத்தர்களே நாடு, இனம் புத்தமதம் என்பவற்றுக்காக எழுந்துநிற்க வேண்டிய காலமிது. இது சிங்கள நாடு. அதை நாளைய தலைமுறைக்கும் அப்படியே ஒப்படைக்க வேண்டும்...”
  • சிங்கள பௌத்தர்களின் ஒரே எதிர்பார்ப்பு நீங்கள் தான் ஞாசார தேரரே...

விறாத்துவின் இந்த விஜயமும், ஆலோசனைகளும், ஆதரவும் இந்த நாட்டின் பௌத்த தீவிரவாத அமைப்புக்களை இன்னும் பலமடங்கு உற்சாகம்கொள்ளச்செய்யும் ஒன்றாக நிச்சயம் இருக்கும். மாறாக இன நல்லுறவை ஏற்படுத்த ஒரு சிறு துளியும் உதவாது என்பது மட்டும் நிச்சயம்.

இந்த மாநாடு ஏனைய இனங்களின் அழிவுக்கான பாதை வகுக்கும் மாநாடா அல்லது மகிந்தவையோ கோத்தபாயவையோ அடுத்ததாக ஜனாதிபதியாவதற்கான தயாரிப்பா அல்லது இலங்கைக்கான விறாத்துவாக ஞானசாரவை முடிசூட்டி அறிவிக்கும் நாளா அல்லது அவை அனைத்துமா... என்பதே இப்போது எழுந்துள்ள வினா.

பி.கு.

* மகாசேனன் (கி.பி. 334 - 362)

: ஏறத்தாழ பௌத்த அந்தஸ்தை நிலைநிறுத்த தமிழர்களு தமிழர்களுக்கே எதிராக போராடியதாக துட்டகைமுனுவுக்கு நிகராக மகாவம்சத்தில் போற்றப்படும் மன்னன். அக்காலத்தில் இருந்த சைவ கோயில்கள் பலவற்றை இடித்து விகாரைகளைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது. அப்படிப்பட்ட கோவில்களில் ஒன்று திருக்கோணேஸ்வரம். சங்கமித்தவின் பிரதான சீடனான மகாசேனன் ஆட்சியிலிருந்த போது சங்கமித்தையின் இரண்டாவது விஜயம் நிகழ்ந்தது. அப்போது சங்கமித்தவின் வழிகாட்டுதலுக்கிணங்க இலங்கையில் தேரவாத பௌத்தத்தை நிறுவுவதற்காக மகாயான பௌத்தத்தை அழிக்க பல நடவடிக்கைகள் எடுத்தார், இலங்கை இன்று தேரவாத பௌத்தத்தை கடைபிடிக்கும் ஒரு நாடு என்கிற வகையில் மகாசேனனை ஒருபுறம் வெறுத்தாலும் பௌத்தத்தை நிலைநிறுத்துவதற்காக செய்த அழித்தொழிப்பு நடவடிக்கைகள் இன்றைய பௌத்த பேரினவாதிகளுக்கு சிறந்த முன்னுதாரண புருஷன். ஆகவே இன்றும் பலர் கடவுளாகவே வணங்குகின்றனர்.

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates