Headlines News :
முகப்பு » » ஐயகோ! மலையகத் தமிழ் மக்களே - ச. ஜேசுநேசன்

ஐயகோ! மலையகத் தமிழ் மக்களே - ச. ஜேசுநேசன்


இலங்கையில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இரண்டு பிரதேசங்களில் அண்மையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடந்தன. ஒன்று வட மாகாணம், இதில் ஐந்து மாவட்டங்கள். ஐந்திலும் தமிழரே பெரும்பான்மையினர். மற்றையது மத்திய மாகாணம். இதில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் வாழ்ந்தாலும் நுவரெலியா மாவட்டம் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. வடக்கு, கிழக்குக்கு வெளியே தமிழர்களைப் பெரும் பான்மையாகக் கொண்ட ஒரே மாவட்டம் நுவரெலியாதான்.

வடக்கு மாகாணத்தில் தமிழரே 95% வெற்றி பெற்றிருக்கின்றார்கள். அது இயல்பு. நுவரெலியா மாவட்டத்திலும் மொத்த மாவட்ட உறுப்பினர் 16 பேரில் 11 தமிழர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்., அதாவது 69% தமிழ் உறுப்பினர்கள். ( 2010 பொதுத் தேர்தலின் போது மாவட்டத்தின் மொத்த பா.ம. உறுப்பினர்கள் 7 பேரில் 5 பேர் தமிழர். அத்துடன் தேசியப் பட்டியலில் இருந்தும் ஒரு தமிழர். அவரும் நுவரெலியா காரர்தான் ). மேலே குறிப்பிட்ட 11 புதிய மா.ச. உறுப்பினர்களில் 10 பேர் ஆளும் ஐ.ம.சு.கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். ஆதாவது ஆளுங்கட்சியினர். ஒருவர் ஐ.தே.க. காரர்.

சுருக்கமாகச் சொல்வதாயின், வட மாகாணத்தில் எதிர்க் கட்சி (த.தே.கூ) தமிழர்களே மிகப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருக்கிறார்கள். நுவரெலியா மாவட்டத்திலோ வெற்றி பெற்ற 11 தமிழர்களில் 10 பேர் ஆளும் ஐ.ம.சு.கூ-வினர். என்னே நேரெதிர் மாற்றம் !.

இத்தனைக்கும் வட பகுதித் தமிழருக்குத்தான் பிரச்சினை. மலையகத் தமிழ் மக்களுக்குப் பிரச்சினை இல்லை. அவர்கள் இராஜபோக வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதல்ல. அவர்களின் அரசியல், மொழி, கல்வி, பண்பாட்டு, அசையாச் சொத்து, நிர்வாக, பொருளாதார உரிமைகளும் நிலைமைகளும் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் உரிமைகளோடும் நிலைமைகளோடும் ஒப்பிடும் போது படுபாதாளத்தில் இருக்கின்றது. அவை பற்றி அந்த மக்களுக்கு கவலையில்லை, அவர்களின் தலைமைகளுக்கும் அக்கறை இல்லை. சுதந்திர இலங்கையில், இலங்கை வம்சாவளித் தமிழர் உரிமை மறுக்கப்பட்ட மக்களாவர். இந்திய வம்சாவளியினரான மலையக தமிழ் மக்களோ உரிமை பறிக்கப்பட்ட மக்களாவர்.

வடபுலத்தில் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றிருப்பதால் அவர்கள் அரசுடன் போராடி, பேரம் பேசி தமிழுருக்கான உரிமைகளையும் சலுகைகளையும் அபிவிருத்தியையும் பெற்றுக் கொள்வார்கள் என்பது திண்ணம். அவர்கள் அவ்வாறு செய்யாது விட்டால், அரசுடன் சேர்ந்து ஆட்டமாடி, காட்டிக் கொடுத்து, கொள்ளையடித்து அராஜகம் நடாத்திக் கொண்டிருந்த ட்ரக்லெஸ் (trackless) குழுவுக்கு நடந்த கதிதான் அவர்களுக்கும் நடக்கும்.

ஆனால், நுவரெலியா மாவட்டத்திலோ அப்படியல்ல. வெற்றி பெற்றிருப்பது ஐ.ம.சு.கூ. என்ற ஆளுங்கட்சியே. எனவே, வெற்றி பெற்ற அத்தனை தமிழ் உறுப்பினர்களும் சிந்தனைக்காரர் காலால் இட்ட கட்டளையை தலையால் செய்ய மட்டுமே முடியும். எதிர்த்துப் பேச முடியாது. கௌரவ பா.ம. உறுப்பினர்களான தொண்டமான், சிவலிங்கம், திகாம்பரம், இராஜதுரை, இராதாகிருஷ்ணன், ஶ்ரீரங்கா ஆகியோர் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த 10 ஆளுங்கட்சிசார் நுவரெலியா மாவட்ட எம்பிசி மார்களும் (மாகாணசபை உறுப்பினர்கள்) இதையே செய்வார்கள். ஏனென்றால் அவர்கள் தன்மானம், தன்னம்பிக்கை, தனித்துவம், தமிழ்மொழி, தமிழினம் அத்தனையும் விற்றுவிட்டு அந்தப் பணத்துக்கு வெற்றிலை வாங்கி சப்பிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியான சப்பல்களைத்தான் அவர்களால் செய்ய முடியும்.

அவர்களின் மத்திய மாகாண சபையின் புதிய முதலமைச்சராக வருபவர் யாரென்று அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் தொண்டமான், திகாம்பரம், ரங்கா ஆகியோருக்கப் போன்று மலையக அரசியல் இவர்களுக்குப் புதிது. புதிதாக முதலமைச்சராக வருபவர், அவர்தான் 1977 ல் புசலாவை பகுதி டெல்டா, சோகமை, சங்குவாரி தோட்ட லயங்களை எரித்து தோட்ட மக்களை நடுத்தெருவுக்கு விரட்டிய தலைவனின் புத்திரன். எனவே, இனி இந்த 10 பேரினதும் மற்றும் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் தெரிவான இரண்டு அரசாங்க கட்சி தமிழ் உறுப்பினர்களினதும் ஏகோபித்த ஆதரவுடன்,

1. தோட்டங்கள் துண்டாடப்படும்,
2. சிங்களவருக்கு அந்த தோட்டக் காணிகள் பிரித்துக் கொடுக்கப்படும்,
3. இந்த புதிய மாகாணசபைத் தமிழ் உறுப்பினர்கள் போட்டி போட்டிக்கொண்டு தோட்டங்கள் தோறும் சந்திக்கு சந்தி, மூலைக்கு மூலை மதுக்கடைகளை ஆரம்பிப்பார்கள்,
4. போதைப் பொருள் வியாபாரத்தில் அனுபவமிக்க மலையக அரசியல் தலைவர்மார், ஏற்கனவே பெருங்’குடி’ மக்களாக இருக்கும் மலையக மக்களை, போதைப்பொருள் பாவித்தலிலும் சம்பியன்களாக ஆக்குவார்கள்.
5. டெம்பரரி செட்டுக்கு (தற்காலிக கொட்டகை) கொஞ்சம் தகரம் கொடுப்பார்கள், கோயிலுக்கு மணி கொடுப்பார்கள், களிப்புடன் ஆடிப்பாடி மகிழ வாத்தியக் கருவிகள் வாங்கிக் கொடுப்பார்கள், கொஞ்சம் கிறிக்கட் மட்டைகளும் பந்துகளும் வழங்குவார்கள்.
6. இடைக்கிடையே தமிழ் நாட்டுக்குப் பறந்து தமது சின்ன வீடுகளையும் கவனித்து வருவார்கள்.

அப்பாடா, இத்துடன் மலையக மக்களின் பிர்ச்சினைகள் எல்லாவற்றையும் தீர்த்துவிட்டோமென்று நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். இவர்களுக்கு முன்பிருந்தவர்களும் இப்படியானவற்றைத்தான் செய்து கொண்டிருந்தார்கள். இனி அடுத்த தேர்தலில் நிற்பார்கள். ‘பார்’கள் கைகொடுக்கும். வெல்வார்கள். 
ஐயகோ! மலையகத் தமிழ் மக்களே உங்களுக்கு எப்போது அறிவு (உணர்ச்சி) வரும் !!.

 ச. ஜேசுநேசன் அவர்களின் முகநூலிலிருந்து நன்றியுடன் மீள்பதிவு
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates